அத்தியாயம் 104: புதுமனை புகுதல்!

மறுநாள் காலை நவீன் ஆஃபீஸிலிருந்து அனுப்பப்பட்ட  வீடு பார்த்துத் தரும் ஏஜேன்ட்டிடமிருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்த நவீன் தனக்கு எந்த மாதிரி வீடு வேண்டும் என்பதையும் அவர்களின் பட்ஜெட்டையும் சொன்னான்.  ஏஜென்ட் அவர்களின் எதிர்ப்பார்ப்பு படியே வீடுகள் உள்ளதாக கூறி ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி அங்கு வரும் படி சொன்னான்.
காலையிலேயே எழுந்து தயாராகி இருந்தனர் நவீனும் மிருதுளாவும் சக்தியும். அவர்கள் எதிர்பார்த்த கால் வத்ததும் உடனே மூவரும் கிளம்பிச் சென்றனர். காலை உணவாக வெறும் ப்ரெட்டை சாப்பிட்டு விட்டு சென்றனர்.

வீட்டு ஏஜென்ட் இரண்டு மூன்று வீடுகளை கூட்டிச் சென்று காண்பித்தார். ஆனால் அவற்றில் எல்லாம் ஏதோ ஒரு குறையிருந்தது. அப்போது நவீன் அவரிடம் தனக்கு வீடு மெட்ரோ ஸ்டேஷன் அருகே இருக்கவேண்டும் என்று சொல்ல உடனே அவர்

“இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா….அப்பவே அது மாதிரி காண்பித்திருப்பேனே…சரி வாங்க …ஒரு அம்சமான வீடு நீங்க கேட்கிறா மாதிரி மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பத்தடி தூரத்துல இருக்கு. வந்து பாருங்க பிடிச்சிருந்தா ப்ரொசீட் பண்ணலாம்”

என்று கூறி அவர் சொன்னது போலவே மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பத்தடி தூரத்தில் இருந்த ஒரு அழகான அப்பார்ட்மெண்ட்ஸுக்கு அழைத்துச் சென்று அதில் ஒரு வீட்டைக் காண்பித்தார். அந்த வீட்டிற்குள் சென்றதுமே மிருதுளாவிற்கும் சக்திக்கும் மிகவும் பிடித்துப் போனது. நல்ல வெளிச்சம் ப்ளஸ் நல்ல வடிவமான வீடாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனதால் நவீன் மற்ற விவரங்களை எல்லாம் பேசி முடித்து பதினைந்தாம் தேதி முதல் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக அக்ரிமென்ட் எல்லாம் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் கொடுத்து முடிவு செய்து அந்த ஆஃபீஸிலிருந்து வெளியே வந்ததும் சக்தி

“அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா…அதைவிட ரொம்ப தாகமா இருக்குப்பா..”

“சக்திமா இங்க வெளியில எங்கயுமே சாப்பிடவோ, தண்ணி குடிக்கவோ கூடாதும்மா…கொஞ்சம் வெயிட் பண்ணு நாம ஒரு டாக்ஸிப் பிடித்து ரூமுக்கு போயிடுவோம். அங்கே போய் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். சரியா”

“நவீ எனக்கே ரொம்ப தாகமா இருக்கு அவ சின்னப் பொண்ணுப்பா….தொண்டை வரண்டு போயிடுத்து. காலையில ஏழு மணிக்கு ப்ரெட் சாப்பிட்டு கிளம்பியது ….இப்போ மணி ரெண்டாச்சு… இதுவரைக்கும் ஒரு பொட்டு தண்ணிக் கூட நாக்குல படலை. ம்…வெளியில பப்ளிக்ல தானே தண்ணிக் குடிக்கக் கூடாது …ம்…..அதோ நம்ம அண்ணாச்சி ஹோட்டல் இருக்கே அதுக்குள்ளப் போய் தண்ணிக் குடிச்சிட்டு அப்படியே சாப்பாடு பார்சல் வாங்கிட்டு போவோமா?”

“ம்….சரி அவாளும் அளௌ பண்ண மாட்டான்னு நினைக்கிறேன்…சரி வாங்கோ போய் கேட்டுப் பார்ப்போம்”

என்று மூவரும் ஹோட்டல் சரவணபவனுக்குள் சென்றனர். உள்ளே அனைத்து சேர்களும் டேபில்களின் மேல் கமுத்தி வைக்கப் பட்டிருந்தது. நவீன் குடும்பத்துடன் உள்ளே சென்றதும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் நவீனிடம்

“சார் நோ சர்வீஸ். ஓன்லி ஆஃப்டர் செவென் ஓ க்ளாக்”

“நாங்க தமிழ் தான்ப்பா…எங்களுக்குத் தெரியும்ப்பா….பார்சல் வாங்க வந்திருக்கோம்.”

“அப்படியா சார். சாரி தெரியாம வந்திருக்கீங்கன்னு நினைச்சுத் தான் அப்படி சொன்னேன்…”

“இட்ஸ் ஓகேப்பா…சரி மூணு மீல்ஸ் பேக் பண்ணிக் குடுங்க”

“ஓகே சார். மூணு மீல்ஸ் பார்சல்…..ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் இதோ தந்திடறேன்”

“சரிப்பா….ஆங்…ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா!!”

“என்ன சார்?”

“எங்க பொண்ணுக்கு ரொம்ப தாகமா இருக்குதாம். காலையிலிருந்து தண்ணியே குடிக்காம வெய்யில்ல சுத்திக்கிட்டிருக்கோம். எங்க கிட்ட தண்ணி பாட்டிலிருக்கு ….வெளியில குடிக்க முடியாது ….ஸோ இங்க கடைக்குள்ள கொஞ்சம் தண்ணி மட்டும் குடிச்சுக்கலாமா ப்ளீஸ்”

“ஐய்யோ சார்…அதெல்லாம் கூடாது சார் …அப்புறம் எங்க லைசென்ஸ் போயிடும். இல்ல சார் மன்னிச்சுக்கோங்க. அது மட்டும் முடியாது சார். இருங்க உங்க பார்சல் வேணும்ன்னா சீக்கிரமா தரச் சொல்லறேன். டேய் மூணு சாப்பாடு பார்ஸல் சீக்கிரம் ரெடி பண்ணு. ஆனா இந்த தண்ணிக் குடிக்கறதெல்லாம் பண்ணக் கூடாது சார்.  ரொம்ப சாரி சார்”

“இட்ஸ் ஓகே. சக்தி ஜஸ்ட் வெயிட் ஃபார் ஃப்யூ மினிட்ஸ்..நாம ஹோட்டலுக்குப் போயிடலாம்”

“இந்தாங்க சார் உங்க பார்சல்”

“ஓகே. தாங்ஸ்ங்க நாங்க வர்றோம்”

“ரொம்ப சாரி அன்ட் ரொம்ப நன்றி சார்”

“பரவாயில்லை.”

என்று கூறிவிட்டு ஹோட்டலுக்கு வெளியே வந்து ஒரு டாக்ஸியில் ஏறி ரூமிற்குச் சென்றனர். ரூமிற்குள் சென்றதும் முகம் கை கால் கழுவி விட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர். நன்றாக சாப்பிட்டனர். மிருதுளா மட்டும் சரியாக சாப்பிடவில்லை அதை கவனித்த நவீன் அவளிடம்

“ஏன் மிருது நீ சரியாவே சாப்பிடலை?”

“எனக்கு வெய்யில்ல நடந்ததால நல்லா தலை வலிக்கறது நவீ. அதுதான் சாப்பிட முடியலை. வாந்தி வர்றா மாதிரி இருக்கு.”

“சரி சரி எழுந்து போய் கை அலம்பிட்டு நீ போய் படுத்துக்கோ”

“ம்…ஓகே… “

என்று கூறி விட்டு பாத்ரூமிற்கு சென்றவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். உடனே நவீனும் சக்தியுமாக சென்று பாத்ரூம் கதவைத் தட்டினர். சற்று நேரம் கழித்து கதவைத் திறந்தாள் மிருதுளா. அவள் மிகவும் சோர்ந்துப் போயிருந்தாள்.  நேராக பெட்ரூமிற்குச் சென்று படுத்துக் கொண்டாள். நவீனும் சக்தியும் சாப்பிட்டு விட்டு அவர்களும் வெய்யிலில் அலைந்ததில் ட்ரெயின் அவுட்டாகியிருந்ததால் பேசாமல் படுத்துறங்கினர். மாலை ஒரு ஆறு மணிக்கு எழுந்தான் நவீன். எழுந்ததும் மிருதுளாவைப் பார்த்தான். அவள் மெல்ல முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் நெற்றியைத் தொட்டுப் பார்த்த நவீன் உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை ஒரு கிளாஸ் தண்ணீருடன் எடுத்து வந்து மிருதுளாவை எழுப்பி

“மிருது மிருது….எழுந்து இந்த மாத்திரையை போட்டுக்கோ…உன் உடம் அனலாக் கொதிக்கறது. ப்ளீஸ் எழுந்துருமா”

“ஆங்….நவீ….எனக்கு ரொம்ப முடியலை நவீ”

“சரி இந்தா இந்த மாத்திரையைப் போட்டுண்டு தூங்கிக்கோ”

என்று நவீன் மாத்திரையை கொடுத்ததும் மிருதுளா அதை விழுங்கியதும் மீண்டும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள். நவீன் காஃபி போட்டுக் குடிப்பதற்காக கிட்சனுக்கு செல்லும் வழியில் சக்தியிடமும் காஃபி வேண்டுமா என்று கேட்பதற்காக அவளின் ரூம் கதவைத் தட்டினான். பதில் வராததால் உள்ளே சென்றுப் பார்த்தான். சக்தியும் முனகிக்கொண்டிருந்தாள். அவளுக்கும் நன்றாக ஜூரம் இருந்தது. அவளையும் எழுப்பி மாத்திரைக் கொடுத்து உறங்க வைத்து விட்டு வெளியே வந்து ஒரு கப் காபி போட்டுக் கொண்டு ஹாலில் அமர்ந்து குடித்துக் கொண்டே தன் மனதிற்குள்

“என்ன இது ரெண்டு பேருக்குமே நல்லா ஜூரம் அடிக்குதே…பேசாம ஹாஸ்பிடல் கூட்டிண்டு போக வேண்டியது தான்….நைட்டு ஏதாவது ரொம்ப ஆச்சுன்னா அப்புறம் என்கிட்ட காருக் கூட கிடையாது எப்படி இவா ரெண்டு பேரையும் கூட்டிண்டுப் போறது!!! அதுனால இப்பவே ரிசெப்ஷனில் சொல்லி ஒரு கார் புக் பண்ணித் தரச் சொல்லுவோம்…..”

என்று எண்ணிக் கொண்டே ரிசெப்ஷனுக்கு கால் செய்தான்

“ஹலோ ஆம் காலிங்க ஃப்ரம் ரூம் 2023.‌.ப்ளீஸ் அரேஞ்ச் எ டாக்ஸி ஃபார் அஸ் டூ கோ டூ ஹாஸ்பிடல்…அன்ட் பை தி வே….விச் ஈஸ் தி பெஸ்ட் ஹாஸ்பிடல் நியர் பை…”

“வாட் ஹாப்பென்ட் சார்?”

“மை வைஃப் அன்ட் டாட்டர் போத் ஆர் ஹாவிங் ஃபீவர்.”

“ஓ!! ஆம் சோ சாரி அபௌட் தட் சார். ஓகே சார் வில் அரேஞ்ச் அன்ட் கிவ் யூ எ கால் சார்”

“ப்ளீஸ் மேக் இட் ஃபாஸ்ட். தாங்ஸ்”

என்று பேசி முடித்ததும் மிருதுளாவையும் சக்தியையும் எழுப்பி ஹாலில் அமரச் சொல்லிக் கொண்டேயிருக்கையில் கார் வந்து விட்டது என்று ரிசெப்ஷனிலிருந்து கால் வந்தது. உடனே இருவரையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு லிஃப்ட்டில் ஏறி கீழேச் சென்றான். அப்போது இருவரும் அவனின் இரு தோள்களில் சாய்ந்துக் கொண்டனர். அவர்களை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டு காரில் ஏற்றி ஆஸ்பிட்டல் சென்றான் நவீன். அங்கே சென்றபோது மணி ஆறரை. நவீன் இருவரையும் ஒரு சோஃபாவில் அமரச் செய்துவிட்டு ஹாஸ்பிடல் ரிசெப்ஷனுக்குச் சென்று முதலில் இருவர் பெயர்களையும் ரெஜிஸ்டர் செய்தான். அப்போது அங்கிருந்த ஆஸ்பிட்டல் ஊழியர் நவீனிடம்

“இப்போது அனைவரும் இஃப்தாருக்கு சென்றுள்ளனர். ஒரு அரைமணி நேரமாகும் வெயிட் பண்ணுங்கள்”

என்று சொல்லி நவீனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பேரிச்சம்பழம், காபி, பிஸ்கெட் எல்லாம் வழங்கப் பட்டது. அதில் நவீன் மட்டும் எடுத்து சாப்பிட்டான். மிருதுளாவும் பேருக்கு ஒரே ஒரு பேரிச்சம்பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள் ஆனால் சாப்பிடவில்லை. சக்தி தனக்கு எதுவும் வேண்டாமென சொல்லி நவீன் மீது சாய்ந்துக் கொண்டாள்.

சரியாக அந்த ஆஸ்பிட்டல் ஊழியர் சொன்னதுப் போலவே அரைமணி நேரத்தில் டாக்டர் ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே டாக்டர் இருவரையும் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே நவீனிடம்

“நீங்க இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கீங்களா?”

“ஆமாம் டாக்டர். இப்போ தான் ரீலொக்கேட் ஆகியிருக்கோம்”

“எங்கேந்து வந்திருக்கீங்க? இந்தியாவா?”

“எஸ் டாக்டர் இந்தியா தான்”

“இந்தியாவுல எங்கே?”

“மைசூர் டாக்டர்”

“ஆம் ஃப்ரம் இரான். ஆனா நான் இந்தியா போயிருக்கேன். டில்லி, பெங்களூர் பார்த்திருக்கேன்”

“ஓ!! தட்ஸ் க்ரேட்…டாக்டர் ஹவ் இஸ் மை வைஃப் அன்ட் டாட்டர்?”

“இவர்கள் இருவருக்குமே லைட்டாக வைரல் ஃபீவர் வந்திருக்கு. இட் வில் டேக் ஃபைவ் டேஸ் டூ கெட் க்யூர். நான் சில மெடிசின்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணறேன் அதை மூன்று வேளையிலும் சாப்பிட்டதுக்கு அப்புறமா குடுங்க. தே வில் பி ஆல் ரைட் இன் ஃபைவ் டேஸ்”

“தாங்ஸ் டாக்டர்”

“டேக் கேர் ஆஃப் தெம். மே பீ திஸ் ஹீட் மே நாட் சூட்டெட் தெம். தே வில் கெட் யூஸ்டு இன் ஃப்யூ டேஸ். ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”

“தாங்ஸ் அன்ட் யூ டூ டாக்டர். பை.”

என்று இருவரையும் மீண்டும் அணைத்தப்படி டாக்ஸிப் பிடித்து ரூமிற்கு அழைத்துச் சென்று அவர்களை படுக்க வைத்தான். பின் டின்னர் ஆர்டர் செய்துவிட்டு தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலில் வந்தமர்ந்தான். சாப்பாடு வந்ததும் மிருதுளாவையும், சக்தியையும் எழுப்பி சாப்பிட வைத்து அவர்களுக்கு மாத்திரையைக் கொடுத்தான். இருவரும் கொஞ்சமாக சாப்பிட்டு பின் மாத்திரையைப் போட்டுக் கொண்டு போய் படுத்துறங்கினர். ஐந்து நாட்கள் இப்படியே இருந்தனர். நவீனும் அவனது ஆஃபீஸ் ஜாய்னிங் டேட்டை தள்ளிப் போட்டான்.

பதினைந்தாம் தேதி வந்தது. சக்திக்கு உடம்பு முழுவதுமாக சரியானது. அவர்கள் புது வீட்டிற்கு பால் காய்ச்சும் நாள் விடிந்ததும் கொஞ்சம் தேவலாமென்று இருந்த மிருதுளா ….தான் ஊரிலிருந்து தன்னுடனே எடுத்து வந்த ஒரு பாத்திரம், காமாட்சி விளக்கு, சிறிய எண்ணெய் பாட்டில், சாமி படங்கள் ஆகியவைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போற வழியிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பாட்டில் பாலும், ஒரு பாக்கெட் சர்க்கரை, இருபத்தைந்து பேப்பர் கப்புகள் கொண்ட ஒரு பேக்கும், ஒரு ஹல்தீராம்ஸ் சோன்பப்டி டப்பா, ஒரு இன்டெக்ஷன் அடுப்பு என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்ததும் …. அதனருகே இருந்த தமிழ் கடையைப் பார்த்தாள்…உடனே அந்த கடையினுள் சென்றாள்….அங்கே பூவைப் பார்த்ததும் அதையும் வாங்கிக் கொண்டு அவர்களின் புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே அனைத்தையும் வைத்து, சாமி படங்களுக்கு பூ மாலையிட்டு, விளக்கில் எண்ணெய் ஊற்றி, இன்டெக்ஷன் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ரெடியாக வைத்துவிட்டு நல்ல நேரத்துக்காக காத்திருந்தனர். நல்ல நேரம் வந்ததும் விளக்கேற்றி, பால் காய்ச்சி மூவருமாக சாமியிடம் நன்றாக வேண்டிக்கொண்டு பின் காய்ச்சினப் பாலை மூன்று கப்பில் ஊற்றி குடித்தனர்.

பின் வீட்டை நன்றாக மீண்டும் சுற்றிப் பார்த்தனர். ஊரிலிருந்து பொருட்கள் வந்ததும் எது எது எங்கெங்கே வைக்கலாமென்று மிருதுளாவும் சக்தியுமாக டிஸ்கஸ் செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே தரையில் அமர்ந்திருந்தான் நவீன். அதை கவனித்த மிருதுளா அவனிடம்

“என்ன நவீ எங்களையே அப்படிப் பார்த்துண்டிருக்கேங்கள்?”

“இல்ல போன நாலு நாளா நீங்க ரெண்டு பேரும் இருந்த இருப்பையும் இன்னைக்கு நீங்க பேசிண்டிருக்கறதையும் கம்பேர் பண்ணிப் பார்த்துண்டிருக்கேன்…..அப்பப்பா ரெண்டு பேரும் இப்படி பேசிண்டிருக்கலைன்னா என்னமோ மாதிரி இருக்கு…..ப்ளீஸ் இனிமேல் உடம்புக்கு முடியாம படுத்திடாதீங்கோ”

“என்னப்பா வேணும்னே நாங்க உடம்புக்கு வரவழைச்சுப் படுத்துண்டா மாதிரி சொல்லறேங்கள். நாங்க என்ன பண்ணுவோம்!!! வந்துடுத்து…சரி அதோட த்ருஷ்டி எல்லாம் கழிஞ்சுதுன்னு வச்சுக்க வேண்டியது தான்”

“ம்…அதுவும் சரி தான். சரி என்னைக்கு இந்த வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணலாம்.?”

“இன்னைக்கு நைட்டு மட்டும் இங்கே தங்கிட்டு…அப்புறம் நம்ம பொருளெல்லாம் வந்ததுக்கப்புறமா இரண்டு, மூன்று நாளா வந்து எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு வருவோம் என்ன சொல்லறேங்கள்?”

“ம்…எனக்கு ஓகே! சக்தி மா உனக்கு?”

“எனக்கும் ஓகே தான்….சரிமா அது என்ன இன்னிக்கு நைட்டு மட்டும் இங்கே இருக்கணும்னு சொல்லற? ஏன் நாம நம்ம திங்ஸ் எல்லாம் வந்ததுக்கப்புறமா வந்தா போதாதா?”

“இல்ல சக்தி. நாளையோட வைகாசி முடியறது அதுனால இன்னைக்கு இங்கே தங்கிட்டா நாம வைகாசியில ஷிஃப்ட் ஆனா மாதிரி அர்த்தம். ஸோ இதுக்கப்புறமா எப்போ வேணும்னாலும் நாம ஷிஃப்ட் பண்ணிக்கலாம். புரியறதா?”

“ம்…புரியறதுமா! ஆனா இதெல்லாம் வெளிநாட்டுக் காரா பார்க்கறதில்லையே!!! ஆனாலும் அவா எல்லாரும் நல்லா தானே இருக்கா?”

“அவாளும் பார்ப்பாளா இருக்கும் நமக்கு எப்படித் தெரியும்? நாம ஒரு விஷயத்தை வச்சுப் பார்க்கறோம்…அவா எதை வச்சுப் பார்ப்பாளோ!!! யார்கிட்டேயாவது விசாரிச்சா தெரிஞ்சுடப் போறது…”

“சரி ரெண்டு பேருமா இந்த ஆராய்ச்சியை அப்புறமா நிதானமா பண்ணிக்கோங்கோ….இப்ப வரேங்களா போய் டின்னர் சாப்டுட்டு வருவோம்”

“ம்…ஓகேப்பா…பட் திஸ் டைம் லெட் அஸ் கோ டூ அ நார்த் இந்தியன் ரெஸ்டாரன்ட் பா…நாலு நாளா வெறும் இட்டிலி, ரசம் சாதம்ன்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுத்துப்பா”

“ம்….அதுதான் நம்மளை நாலு நாள்ல குணமாக்கித்து சக்தி …அதை மறந்திடாதே”

“அப்படின்னா டாக்டர் தந்த மாத்திரை நம்மளை குணமாக்கலைன்னு சொல்லறையாமா?”

“ரெண்டும் தான்”

“அப்போ ரெண்டு பேருக்கும் எல்லாம் கரெக்ட்டான ஃபுட் ஆர்டர் செஞ்சு, அதை கட்டிலிலேயே கொண்டு வந்துக் குடுத்து, உங்களை சாப்பிட வச்சு, உங்களுக்கு கரெக்ட்டா மாத்திரைக் குடுத்த என்னால இல்லன்னு சொல்லறேங்கள் இல்ல”

“அய்யோ நவீ….அப்படி எப்படி நாங்க சொல்லுவோம்!! நீங்க இல்லைன்னா நாங்க இல்லை நவீ.”

“ஆமாம்மா அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம்….நம்மளை இங்கே இந்த நேரத்துல கூட்டிண்டு வந்தது…வெய்யிலில் அலைய விட்டது….அதுனால நமக்கு உடம்பு சரியில்லாம போனது, டாக்டர்ட்ட கூட்டிண்டு போனது…நம்மளை நல்லபடியா கவனிச்சுண்டதுன்னு எல்லாமே அப்பா தான்….ஓகே வாப்பா!!”

“இதுக்கு நீ சும்மா இருந்திருக்கலாம் சக்தி”

“சாரிப்பா …இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்ப்பா”

“ம்..ம்…ஓகே ஓகே!!! சரி வாங்கோ வாங்கோ”

என்று வெளியே சென்று இரவு உணவு உண்டு வந்ததும் அவர்களின் புது வீட்டில் படுத்துறங்கினர். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு டாக்ஸியில் ஹோட்டலுக்குச் சென்று ஃப்ரெஷ் ஆனார்கள். மிருதுளாவுக்கும் சக்திக்கும் குணமானதால் நவீன் அன்று முதல் வேலையில் சேர்ந்தான். மிருதுளாவும் சக்தியுமாக பக்கத்திலிருந்த சுப்பர் மார்க்கெட்டுக்குள் சென்று காய்கறிகள், சில மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வந்து …மிருதுளா சமைத்தாள்….சக்தி அவளுக்கு காய்களை அறிந்துக் கொடுத்து உதவினாள். சமையல் வேலைகள் முடிந்ததும் ரூம் க்ளீனிங்கிற்கு ஆட்களை வரச்சொல்லி ஃபோனில் ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சொன்னாள் மிருதுளா. ஏனெனில் அவர்கள் இருவரும் உடம்பு சரியில்லாமல் இருந்த நான்கு நாட்களும் நவீன் க்ளீங்கிற்கு ஆட்களை வரச் சொல்லவில்லை. ஆட்கள் வந்தனர்…ரூமை முழுவதுமாக சுத்தம் செய்தனர், பெட்ஷீட், பில்லோ கவர் என அனைத்தையும் மாற்றினர், பாத்ரூம் டாய்லெட் க்ளீன் செய்தனர். எல்லாம் முடிந்து அவர்கள் செல்லும் முன் மிருதுளா அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள். பின் நவீனுக்கு கால் செய்து மத்திய சாப்பாட்டிற்கு ரூமுக்கு வருமாறு சொன்னாள். அதற்கு நவீன்

“எப்படியும் ஆர்டர் பண்ணணும் மிருது… ஸோ…நீங்க உங்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கோ. நான் எனக்கு வேண்டியதை ஆர்டர் செஞ்சு சாப்ட்டுக்கறேன்”

“இல்ல நவீ நீங்க வாங்கோ. நான் சமைச்சிருக்கேன். நாம மூணு பேருமா உட்கார்ந்து சாப்பிடுவோம்”

“என்னது சமைச்சியா? எப்படி? பொருள் ஒண்ணுமே நாம வாங்கலையே அப்புறம் எப்படி?”

“நீங்க வந்து சாப்டுட்டு போயிடுங்கோ. என்ன ரோட க்ராஸ் பண்ணணும் அவ்வளவு தானே நவீ”

“ஓகே…நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்.”

என்று சொன்னதுப் போலவே ரூமுக்கு வந்தான் நவீன். உள்ளே நுழைந்ததும்

“ஆஹா ஆஹா!!! என்ன ஒரு ரசம் வாசம்….சூப்பர் மிருது….ஆமாம் என்ன இன்னைக்கு ரூமே பளிச்சுன்னு இருக்குறா மாதிரி தோணறதே!!!”

“ம்…ஆமாம் நவீ ..பளிச்சுன்னு தான் இருக்கு. ஏன்னா நான் ஹவுஸ் கீப்பிங்குக்கு கால் செஞ்சு வரச் சொல்லி க்ளீன் பண்ணிருக்கேன். சரி சரி வாங்கோ சாப்பிடலாம்”

என்று பத்து பதினைந்து நாட்களாக ஹோட்டல் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அன்று தான் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டனர். சாப்பிட்டுக் கொண்டே நவீன் மிருதுளாவிடம் சமைப்பதற்கான பொருட்கள் எங்கிருந்து வந்தது என விசாரிக்க சக்தி நடந்ததைக் கூறி முடிக்கவும் அவர்கள் சாப்பிட்டு எழுந்திரிக்கவும் சரியாக இருந்தது. கடைசியில் மிருதுளா

“இங்க நம்ம ஊர் ஐட்டம்ஸ் எல்லாமே கிடைக்கறது நவீ.”

“சூப்பர் சாப்பாடு மிருது. தாங்ஸ்.”

“என்னத்துக்கு இப்போ தாங்ஸ்….சரி நம்ம பொருட்கள் எல்லாம் நாளைக்கு வந்திடும் இல்லையா?”

“எஸ் எஸ்…வந்திடும் அதை அவா நேரா நம்ம புது வீட்டுல கொண்டு இறக்கித் தந்திடுவா. நான் நாளைக்கு லீவு போட்டிருக்கேன்… அவா பத்து மணிக்கு டெலிவர் பண்ணிடுவோம்னு சொல்லிருக்கா ….ஸோ…. நாம காலையிலேயே அங்கே போயிடணும். சரி நான் ஆஃபீஸுக்கு போயிட்டு சாயந்தரமா வரேன் பை மிருது பை சக்தி.”

“பை நவீ”

“பைப்பா”

மறுநாள் காலையில் எழுந்து புறப்பட்டு அவர்கள் பார்த்து பால் காய்ச்சின வீட்டுக்குச் சென்றனர். பத்து மணிக்கு பொருட்கள் வீட்டிற்கு வந்தது. அதை வீட்டிற்குள் வைத்து அனைத்தையும் அன்பேக் செய்து விட்டுச் சென்றனர் பேக்ர்ஸ் அன்ட் மூவர்ஸ். அவர்கள் சென்றதும் ஒவ்வொன்றாக எங்கெங்கு வைக்க வேண்டுமென ப்ளான் செய்திருந்தார்களோ அந்தந்த இடங்களில் அனைத்துப் பொருட்களையும் மூவருமாக அடுக்கி வைத்தனர். இரண்டு நாட்கள் எடுக்கும் என நினைத்திருந்தாள் மிருதுளா…ஆனால் ஒரே நாளில் எல்லா வேலைகளும் முடிந்தன. உடனே மிருதுளா நவீனிடம்…

“நவீ நாம இன்னைக்கே ஹோட்டல காலி செய்து பெட்டிகளை எல்லாம் எடுத்துண்டு இங்கேயே வந்திடலாமே”

“மிருது நாம நாளைக்கு போய் மளிகை சாமான்கள் அன்ட் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வந்து அதையும் அது அது இடத்துல வச்சுட்டு நாளை மறுநாள்லேந்து இங்க இருப்போமே….ஏன்னா நாளை மறு நாள் வீக்கெண்ட் ஸோ நான் லீவு போட வேண்டாம் அதுதான் சொன்னேன்”

“ஓகே நவீ அப்படியே செய்திடுவோம்”

என்று முடிவெடுத்து அதுபடியே மூவரும் அவர்கள் புது வீட்டில் செட்டில் ஆனார்கள். ஃபோன், டிவி கனெக்ஷன் வந்தது. நவீன் மெட்ரோவில் வேலைக்குச் சென்று…மத்தியம் ட்ரைவிங் லைசென்ஸுக்கா ட்ரைவிங் க்ளாஸ் இரண்டு மணிநேரம் போய்….பின் மீண்டும் ஆஃபீஸுக்கு வந்து வேலையைப் பார்த்துவிட்டு மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குச் சென்றான். அவர்கள் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டிலேயே இந்தியர்கள் மற்றும் மற்ற நாட்டுக் காரர்களும் நண்பர்களாகக் கிடைத்தனர். ஒரே மாதத்தில் நவீனுக்கு லைசென்ஸ் கிடைத்தது. அதை சொன்னதும் நண்பர்களும் ஆஃபீஸ் காரர்களும் ஆச்சயமானார்கள்…. ஏனெனில் அங்கு அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்திடாதாம். அதை நவீன் மிருதுளாவிடம் சொன்னதும் அவள்

“நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நவீ”

என்றாள். அதைக் கேட்டதும் நவீன்

“ஆமாம் மிருது. யூ ஆர் ரைட்”

“சரி அதெல்லாம் இருக்கட்டும் எப்போ கார் வாங்கப் போறேங்கள் நவீ?”

“வர்ற வீக்கென்ட் போய் புக் பண்ணிட வேண்டியது தான்”

அவர்கள் பேசிக்கொண்டது போலவே பெரிய செவன் சீட்டர் எஸ்.யூ.வி ஒன்றை புக் செய்துவிட்டு வந்தனர். அதுவரை வெய்யிலில் அலைந்தவர்கள் இனி வெய்யிலில் செல்ல வேண்டிய அவசியமின்றியானாது….கார் வந்தது…வசதியானது.

சக்திக்கு ஸ்கூல் திறந்தது. அவள் பள்ளியில் உலகிலுள்ள அனைத்து நாட்டைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர். சக்திக்கு ஆரம்பத்தில் அனைவரோடும் மிங்கிள் ஆவதற்கு சற்று தயக்கமிருந்தாலும் இரண்டே மாதங்களில் நண்பர் பட்டாளம் பெருகியது. அவளும் நன்றாக புதுப் பள்ளியில் செட்டில் ஆனாள். இப்படியே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அப்போது கவினின் மகன் உபநயனம் நடைப்பெறயிருந்த நாள் வந்தது. கஜேஸ்வின் இவர்கள் இந்தியாவில் இருந்தப் போது விவரம் தெறிந்துக் கொள்வதற்காக அழைத்தது தான் அதன் பின் எந்த வித அழைப்புமில்லை, ஃபோன் காலும் இல்லை, வழக்கம் போல பத்திரிகையும் இல்லை. ஆனால் அன்று மாலை மிருதுளா நவீனை கன்வின்ஸ் செய்து இருவருமாக இந்தியாவிலிருக்கும் கவினுக்கு அவன் குவைத் நம்பரில் கால் செய்தனர்….

“ஹலோ யார் பேசறது?”

“ஹலோ நான் நவீன் பேசறேன்”

“நான் பிஸியா இருக்கேன் அப்புறமா கால் பண்ணறேன்”

என்று முகத்தில் அறைந்தார் போல ஃபோனை வைத்தான் கவின். அதை கேட்டதும் மிருதுளா நவீனிடம்…

“ஆம் சாரி நவீன்…..இந்த சினிமா சீரியல்ல எல்லாம் வர்றா மாதிரி நாம நல்லதே செஞ்சா நமக்கு கெட்டது செஞ்சவா கூட திருந்திடுவான்னு தான் நான் இவ்வளவு நாளா எல்லாத்தையும் பொறுத்துண்டு இருந்தேன்….அதுனால தான்…அவா நம்மளை மதிக்காட்டாலும்… பத்திரிகை அனுப்பாட்டாலும் ….எப்பவுமே விசேஷங்களை அட்டென்ட் பண்ண உங்களையும் கன்வின்ஸ் பண்ணி அழைச்சுண்டு போயிருக்கேன்…இப்பவும் நாமளா ஃபோன் பண்ணி விஷ் பண்ணினா அவா திருந்துவான்னு நினைச்சேன்….நம்மளைப் புரிஞ்சுப்பான்னு நினைச்சேன்….அதுவுமில்லாம உங்களுக்குத் தெரியாம…..கவினோட ஃபேஸ் புக்குல அந்த குழந்தையோட உபநயனம் பத்திரிகையை போட்டிருந்தான்….அதைப் பார்த்து அந்த அட்ரெஸுக்கு நான் ஆன்லைன்ல கிஃப்ட் அனுப்பியிருக்கேன்…..ஆனா இப்படி மூஞ்சில அடிச்சா மாதிரி  பண்ணுவான்னு சத்தியமா நான் நினைக்கலை நவீ…”

“நான் எதிர்பார்த்தது தான் மிருது …ஸோ….எனக்கிது ஷாக்காவே இல்ல…அவாகிட்டேந்து வேற எதை எதிர்ப்பார்க்கறது? உனக்காக உன் திருப்திக்காக பண்ணினேன் அவ்வளவு தான்….நீ சொன்னதெல்லாம் சினிமா சீரியல்கள்லே வேணும்னா நடக்கலாம் ஆனா ரியல் லைஃப்ல அது மாதிரி எல்லாம் நடக்கறது ரொம்ப ரேர் மிருது. நீ கிஃப்ட் அனுப்பினது….உன் எண்ணம் எல்லாமே சரி தான்….மனுஷான்னா இப்படி தான் இருக்கணும்….இதுல எந்த வித தப்புமில்ல ஆனா யாருக்கு? யார்கிட்ட? அது முக்கியமில்லையா? என்னையே இரண்டு லட்சம் தரலைன்னதும் தூக்கிப் போட்ட கூட்டம் அது மிருது. அவாளைப் பொறுத்த வரை பணம் தான் எல்லாம். அது தான் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்….”

“அதை செஞ்சதும் சொன்னதும் உங்க அப்பா அம்மா தானே நவீ….அவா காலமும் கம்மி தான் ….அவாளுக்கு அப்புறம் வாழப்போறது நாம எல்லாரும் தானே….”

“நீ சொல்லறது எல்லாமே லாஜிக்கலி வெரி கரெக்ட் ஆனா அங்கே அதெல்லாம் எடுப்படாதுன்னு நமக்கு தெரிஞ்சதுமே நான் மனசாலையும் உறவாலையும் அவாளை விட்டு விலகி பல வருஷமாகிடுத்து….நீ தான் அந்த ரியாலிட்டிய ஏத்துக்க மறுக்குற மிருது….நல்லா யோசிச்சுப் பாரு மிருது…உன்னையோ …இல்ல…. நம்மை அங்க யாராவது மதிக்கறாளா? நாம எப்படி இருக்கோம்னோ…இல்ல நம்ம சக்தி எப்படியிருக்கா என்னப் பண்ணறானோ என்னைக்காவது யாராவது கேட்டிருக்காளா? இவாலெல்லாம் திருந்துவான்னு நீயும் நம்பற பாரு….”

“நம்பிக்கை தானே வாழ்க்கை நவீ…பார்ப்போம் அதுதான் அப்புறமா கால் பண்ணறேன்னு சொல்லிருக்கானே!!!!”

“ஆமாம் ….ஆமாம்…சொல்லிக்க வேண்டியது தான்….ஃபோன் பக்கத்திலேயே இரு….கால் வந்திட கிந்திட போறது”

தொடரும்…….

Leave a comment