அடுப்படிக்குள் சென்ற மிருதுளாவை பார்த்து பர்வதம் 

நான் இட்டிலிக்கு மாவு அரைக்க போரேன் அதனால நீ தான் டிஃபன் பண்ணனும் சரியா

ஓகே அம்மா என்ன பண்ணட்டும்?”

எதையாவது பண்ணு. உனக்கு மாவு ஆட்ட தெரிஞ்சிருந்தா உன்ன செய்ய சொல்லிட்டு நான் டிஃபன் பண்ணிருப்பேன்… உனக்கு தான் தெரியாதுன்னுட்டயே…நேத்தே… பின்ன நீ தான் பண்ணனும்

கிரைண்டர்ல அரிசியை போடனும் தானே அத நான் போடறேனே…எப்போ எடுக்கனும்னு சொல்லுங்கோ எடுக்கறேன்

ஏன் வேற டிஃபன் ஏதும் உனக்கு பண்ண தெரியாதோ??”

இல்லை மா நான் ரெண்டும் பண்ணறேனே. நீங்க மாவு அரைக்க மட்டும் சொல்லித்தாங்கோ

உனக்கு கிளாஸ் எடுக்க எல்லாம் இப்போ எனக்கு டைம் இல்லை. நீ போய் டிஃபனையாவது பண்ணறியா?”

ஓ அதுக்கு தான் இந்த காய் எல்லாம் கட் பண்ணிண்டே உங்கள்ட்ட கேட்டுண்டும் இருக்கேன்

என்னத்துக்கு இப்போ காரட், பீன்ஸ், தக்காளி, பட்டாணி எல்லாம் எடுத்திருக்காய்? என்னவாக்கும் பண்ண போறாய்? தேங்கா வேற துருவி வச்சிருக்க!!! இதெல்லாம் செய்துண்டே தானா என்னாண்ட பேசின!!!

ஆமாம் மா ரவா, சேமியா போட்டு கிச்சடியும் தேங்காய் சட்னியும் பண்ணிண்டிருக்கேன்

அச்சசோ உப்புமா பண்ணறியா!!! அப்பாக்கு பிடிக்கவே பிடிக்காதே!!!

இல்லை இது உப்புமா இல்லை நல்லா இருக்கும். நான் செய்து தரேன் சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ

இன்னிக்கு எல்லாரும் பட்டினியா? உப்புமாக்கு என்னத்துக்கு பாசிபருப்பு வேக வச்சிருக்காய்?”

அம்மா நான் தான் சொன்னேனோல்யோ இது உப்புமாவுக்கு ஒரு படி மேலே உள்ள டிஷ் நல்லா இருக்கும். எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கோ. இந்த காய்கள் அன்ட் வேக வைத்த பாசிப்பருப்பு எல்லாத்தையும் போட்டுதான் இத பண்ணுவா. இன்னும் பத்தே நிமிஷத்துல ரெடி ஆகிடும்.

என்று பர்வதம் என்ன பேச்சுக்குடுத்தாலும் மிருதுளா தனது காரியத்தில் கண்ணாக இருந்து வேலைகளை எல்லாம் செய்து முடித்து அடுப்பு மற்றும் அடுப்பு மேடையை சுத்தம் செய்து, கிச்சடியையும் தேங்காய் சட்னியையும் ஹாலில் கொண்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். ஈஸ்வரன் உள்ரூமிலிருந்து …

பர்வதம் என்ன பண்ணிருக்காய் வாசம் தூக்கறதே

அப்பா இன்னைக்கு டிஃபன் நான் பண்ணிருக்கேன்” 

வேகமாக சொன்னாள் மிருதுளா ஏனெனில் காலை காபி போற்றுதல்களை மாமியாருக்கு விட்டுக்கொத்தாகிவிட்டது😉 ஆகையால் டிஃபனை தான் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து அவ்வாறு முந்திக்கொண்டாள்😁. பொறுக்குமா பர்வதத்துக்கு

ஏதோ கிச்சடியாம் அதுதான் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் டிஃபன்…சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ” 

என்று நக்கலாக சொன்னாள்.

அனைவரும் டிஃபன் சாப்பிட அமர்ந்ததும் சட்டி மூடியிருந்த தட்டை எடுத்தாள் மிருதுளா. சட்டியில் இருந்த கிச்சடியைப்பார்த்து …

என்னத்துக்கு இவ்வளவு பண்ணிருக்க? இந்த தெருவுக்கே டிஃபன் நம்ம ஆத்துலதானா? அதுவும் உப்புமா!!!

எடுத்துக்கொடுத்ததும் ஈஸ்வரன் கப்பென்று பிடித்துக்கொண்டு…

என்னது உப்புமாவா!!!! எனக்கு பிடிக்காதே!!!

அப்பா இது உப்புமா இல்ல கிச்சடினு சொல்லுவா. இதை சட்னியோட சாப்பிட்டா நல்லாருக்கும். ப்ளீஸ் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கோ.

விடுவாளா நம்ம மா…மாமியார்…

ரவை சேமியா போட்டுட்டு பெயரை மட்டும் மாத்திட்டா உப்புமா இல்லைனு ஆயிடுமா

இட்டிலி தோசைக்கு மாவும் இல்லை இருப்பதை வைத்து ஏதோ தன்னால் முடிஞ்சதை செய்த மிருதுளாவை தொணதொணப்பு செய்ததுமில்லாமல் நக்கல் நையாண்டி செய்து சாப்பிட வந்தவர்களையும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள் பர்வதம். இதை புரிந்துக்கொண்ட மிருதுளா தட்டில் சுட சுட ஆவி பறக்கும் கிச்சடியைப்போட்டு சட்னியை ஊற்றி தனது மாமனார் ஈஸ்வரனிடம் கொடுத்து 

இந்தாங்கோ பா சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ

என்று தட்டை நீட்ட அவரும் அதிலிருந்து வந்த வாசத்தினால் தட்டை கையில் வாங்கிக்கொண்டு…

இதுல நெய் ஊத்திருக்கயா மிருதுளா? வாசம் சூப்பர்.. இரு சூடா இருக்கு சாப்பிட்டு சொல்லறேன்..நீங்க எல்லாம் ஏன்டா என் வாயை பார்த்துண்டு நிக்கறேங்கள் தட்டெடுத்து போட்டு சாப்பிடுங்கோடா

இன்னொரு தட்டில் போட்டு நவீனிடம் கொடுத்தாள் பின் பர்வதத்தைப்பார்த்து

அம்மா உங்களுக்கும் இப்போவே தரட்டுமா?”

எனக்கும் உப்புமா பிடிக்காது. என்ன செய்ய அது தானே செய்திருக்க….இப்போ வேண்டாம் நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்.

கவினும்ப்ரவீனும் சாப்பிட்டுட்டு 

வாவ் மன்னி இது சூப்பரா இருக்கு. சட்னி இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோளேன்.

என்றதும் சந்தோஷத்தில் குடு குடு வென ஓடி போய் பரிமாறினாள் மிருதுளா. ஈஸ்வரன் ரசித்து உண்டு கொண்டிருந்தார். 

மிருதுளா எனக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடி போடுமா நல்லாருக்குஎன்றார் 

உங்களுக்கு உப்புமா பிடிக்காதே அப்பறம் என்ன இன்னொரு தடவை கேக்கறேங்கள்?” என பர்வதம் சொன்னதும் 

சரி மா மிருதுளா எனக்கு போதும்.என்றவருக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடியை தட்டில் போட்டு

அப்பா இன்னைக்கு ஒரு நாள் இந்த  கிச்சடி என்கிற உப்புமாவை சாப்பிடுங்கோ பரவாயில்லை, ஒன்னும் ஆகிடாது

என்னதான் அனைவரும் சூப்பர் என்று பாராட்டினாலும் தன்னவன் பாராட்டுக்காக ஏங்கியது மிருதுளாவின் உள்ளம். அதை எண்ணிக்கொண்டே அவனை பார்க்க முனையும் போது சட்டென்று பவின் 

மன்னி எனக்கும் இன்னும் கொஞ்சம் கிச்சடி அன்ட் சட்னி போடுங்கோஎன்றதும் அவனுக்கு பரிமாற சென்றாள் அப்பொழுது நவீன்

மிருது திஸ் கிச்சடி ஈஸ் சிம்ப்ளி சூப்பர்ப். ரொம்ப நல்லா பண்ணிருக்க. நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது மாதிரி உப்புமா செய்தா தினமுமே சாப்பிடலாம் என்னப்பா சொல்லுற!!!” 

இதை கேட்டதும் மிருதுளாவுக்கு மனதில் சந்தோஷம் இருந்தாலும் அச்சசோ மாமியார் முன்னாடி இப்படி சொல்லிட்டாரே தன்னவன் என்ற மைன்ட் வாய்ஸில்

அச்சச்சோ இவர் டேஸ்ட்டா இருக்ககுங்கறதோட நிப்பாட்டிருக்கக்கூடாதா. அடுத்த வரி அம்மாவை சங்கடப்பட வைத்திருக்குமே” 

என எண்ணி 

ஆமாம் ஆமாம் என்னைக்காவது செய்தால் தான் ஆஹா ஹோ ஹோனுட்டு எல்லாரும் சாப்பிடுவா நீங்க சொல்லறா மாதிரி தினந்தோறும் செஞ்சா அலுத்துப்போகும்

அனைவரும் சாப்பிட்டு எழுந்த பின் 

அம்மா வரேளா நாம சாப்பிடலாம்?”

சரி எனக்கும் தட்டுல போட்டு குடு. என்னமோ உன் புருஷனும், மாமனாரும், மச்சினன்களும் பாராட்டரா மாதிரி அப்படி என்ன இருக்குனு பார்க்கட்டும்” 

மிருதுளாவுக்கு மனதில் சரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு தன் மாமியாருக்கு பரிமாறி பின் தானும் தட்டில் போட்டுக்கொண்டு இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். 

அம்மா நிறைய பண்ணிருக்கேன்னு சொன்னேளே இப்போ பாருங்கோ எல்லாம் காலி ஆயிடுத்து. நான் பண்ணும்போது பத்தாதோனு நினைச்சுட்டேன். ஆனா கரெக்ட்டா இருக்கு.” 

சரி…சரி…சட்டுபுட்டுன்னு சாப்பிட்டுட்டு ரெண்டு பேருமா கிளம்புங்கோ. ராசாமணி பெரியப்பா ஆத்துல இன்னைக்கு உங்களை விருந்துக்கு கூப்பிட்டிருக்கா. போயிட்டு வாங்கோ.

சரி..மா

சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவிட்டு விருந்துக்கு கிளம்ப மாடிக்கு சென்றாள் மிருதுளா.  அப்பொழுது அவளை கீழேயிருந்து கூப்பிட்டாள் பர்வதம். உடனே கீழே வந்தாள் மிருதுளா. வந்தவளிடம் தனக்கு தலைவலிப்பதாகவும் ஒரு காபி போட்டு தந்துவிட்டு கிளம்பும்படி சொன்னாள். மிருதுவும் அவ்வாறே செய்துவிட்டு மீண்டும் மாடிக்கு சென்று டிரெஸ் பண்ணிக்கொண்டு வந்தாள். 

நவீனும் ரெடி ஆகி கீழே வந்து 

என்ன மிருது கிளம்பலாமா?”

ஓ நான் ரெடி கிளம்பலாம். அம்மா அப்பா நாங்க பெரியப்பா ஆத்துக்கு போயிட்டு வரோம்

உங்க கூட பவினும் வரானாம். கூட்டிண்டு போங்கோஎன்றாள் பர்வதம்

நாங்க எங்க கல்யாண விருந்துக்கு போறோம் என்னத்துக்கு பவின் எங்ககூடஎன்றான் நவீன் 

பர்வதம் எதிர் பார்த்தது போலவே கேள்வி வர…

ஏன் அவனையும் உங்களோட கூட்டிண்டு போனால்தான் என்ன? ஏன் ஆத்துக்காரி வந்தததும் தம்பி எல்லாம் வெளியே கூட்டிண்டு போக கூடாதூனுட்டாளோ! இல்ல எங்களை தொந்தரவா நினைக்கறாளா?” என்றாள்

என்ன பேசற நான் என்ன சொல்லறேன் நீ என்னத்த பேசற !!! கொஞ்சமாவது பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுஎன்று நவீன் சொன்னதும் மிருதுளா குறுக்கிட்டு

ஏன் இதுக்கெல்லாம் இப்படி பேசறேங்கள் நவீன். பவினும் நம்ம கூட வரட்டுமே. அதனால என்ன இப்போ? பவின் நீ ரெடியா” 

ஓ எஸ் அம்மா என்ட்ட எழுந்ததும் சொல்லிட்டா பெரியப்பா ஆத்துக்கு உங்க ரெண்டு பேரு கூட போயிட்டு வரச்சொல்லி. அதனால நான் அப்பவே ரெடி” 

மிருதுளாவுக்கும் பவின் அவர்களுடன் வருவதில் இஷ்டம் இல்லை. அவள் மனதிற்குள்

புதுசா கல்யாணமானவர்கள் தனியாக வெளியே போயிட்டு வரட்டும்னு இல்லாம கூட ஒரு ஸ்பை வேற. ஏன் இவனை அவா தம்பி ஆத்துக்கு போனப்போ எங்க கூட அனுப்பலை!!! ஏன் பெரியப்பா ஆத்துக்கு மட்டும் கூட எஸ்கார்ட் அனுப்பறா?” 

என போராட்டம் இருந்தாலும் அவள் மனம் படக் படக் என அடித்துக்கொள்ள ஆரம்பித்தது ஏனென்றால் மறுபடியும் வெளியே செல்லும்போது ஒரு சண்டை வந்தால் அந்த டென்ஷனோட தான் போயிட்டு வர வேண்டி இருக்கும் அதுவுமில்லாமல் இன்னும் மூணு நாள்ல குஜராத் போய் விடுவார்கள் அங்க போனா இருவர் மட்டும் தனியாக தானே இருக்க போகிறார்கள் என்பதால் நவீனைப்பார்த்து …

ஓகே இப்போ நாம மூணு பேரும் சேர்ந்து கிளம்பலாமா!

நவீன், மிருதுளா, பவின் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் ஏறி ராசாமணி வீட்டுக்கு போய் சேரட்டும். அதுவரை நமது வேலைகளை எல்லாம் நாமும் முடித்துவிட்டு விவரங்களை தெரிந்துக்கொள்ள மீண்டும் வருவோம்.

தொடரும்…..

பஸ்ஸில் இருந்து இறங்கி நவீனும் மிருதுளாவும் வீட்டிற்கு மெல்ல பேசிக்கொண்டே நடந்தனர். மிருதுளாக்கு  அந்த வீட்டிற்குள் செல்வது என்றாலே ஏதோ ஒரு யுத்த களத்தில் வெறியோடு தன்னைத்தாக்க எதிரி காத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு நினைப்பு அவளை மெல்ல மெல்ல அடி எடுத்து நடக்கச் செய்தது. இதை அவள் நவீனிடம் பகிர்ந்து கொண்டால் அவன் தவறாக எண்ணி விடுவானோ என்ற பயம். மாமியாரிடமேஏன் இப்படி என்னை எதிரியாக பார்க்கிறீர்கள்என்று கேட்டால் அதை வைத்தே மற்றுமொரு சண்டையை உருவாக்கிவிடுவாளே என்ற அச்சம். நவீனாவது தனது மனைவியின் சங்கடமான நிலைமையை புரிந்துக்கொண்டு அவளுக்கு ஒரு கம்ஃபர்டான சூழலை தனது வீட்டில் உருவாக்கியிருக்க வேண்டும். அவன் வீட்டார் சுபாவம் அதுவாகவே இருந்தாலும், தான் இருபத்தி இரண்டு வருடம் வாழ்ந்த வாழ்க்கை அப்படியே விட்டு விட்டு நவீனையும் அவனது குடும்பத்தினரையும் நம்பி வந்தவளுக்கு அவர்கள் கொடுக்கும் இந்த பதற்றமான வாழ்க்கை துளியும் சரியானது அல்ல ஆனால் இதை மனம் விட்டு நவீனிடம் மிருதுளா பேசாததும் ஒரு காரணம். இது அரேஞ்ச்டு கல்யாணத்தின்  ஒரு குறைபாடாக தான் இருந்துள்ளது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்.

 மனதில் குழப்பத்துடனே நவீன் பேசுவதைக் கூட காதில் வாங்காமல் நடந்து கொண்டிருந்தவளை பார்த்து நவீன் …

ஹேய் மிருது என்ன நீ ஏதோ யோசிச்சிண்டே இப்படி ரொம்ப ஸ்லோவா நடக்கறாய்!!! இன்னைக்கு மாமா ஆத்துக்கு போறவரைக்கும் நல்லா இருந்த அங்கேந்து கிளம்பி வந்ததிலருந்து ஏதோ தீவிரமான யோசனையிலேயே இருக்கியே!! என்ன? எங்க பாட்டி கதையை எல்லாம் கேட்டு பயந்துட்டயோ…அவா எல்லாம் அந்த காலத்து மனுஷா அப்படி இருந்திருக்கா என்ன பண்ண…அதை எல்லாம் மனசுலே போட்டு குழப்பிக்காதே..என்ன சரியா!!

ம்….சரிஎன்ற பதில் ஒரு சிறு புன்னகையுடன்…

வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்ததும் யாருமே யாரையுமே பார்க்காதது போலவே பாவனை செய்ய மிருதுளாவிற்கு ஒரு இறுக்கமான சூழலை உருவாக்கியது. நவீன் வந்ததும் சர்ரென்று நேராக மாடிக்கு ஆடையை மாற்ற சென்றான். மிருதுளாவிற்கு வீட்டின் பெரியவர்களிடம் ஏதும் விவரம் கூறாமல் அப்படி நேராக மாடிக்கு செல்ல சற்று சங்கடமாக இருந்தது. எனவே ஹாலில் போய் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் அனைவரும் அங்கிருந்து எழுந்து நாலாபக்கமும் சென்றுவிட்டனர். மிருதுளாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் ஏன் இப்படி அவள் வந்தததும் அனைவரும் ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டனர் என்று மனதில் குழப்பம் ஆனாலும் அவர்கள் அப்படி நடந்துக்கொண்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கக்கூடாது என்று முடிவு செய்து அடுப்படியில் இருந்த தனது மாமியாரிடம்   பேச்சை ஆரம்பிக்க முயர்ச்சித்தாள். 

அம்மா நாங்க பாங்க் போய் நகையை லாக்கரில் வைத்துவிட்டு அப்படியே மாமா ஆத்துக்கும் போயிட்டு….

என்று அவள் முடிப்பதற்குள் பர்வதம் குறிக்கிட்டு தனது கடைக்குட்டி மகனிடம்…

டேய் பவின் போய் அப்பா கவின், ப்ரவீன் எல்லாரையும் சாப்பிட அழைச்சுண்டு வா

என மிருதுளா சொல்வதை காதில் வாங்கதவள் போல பேச மிருதுளாவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் 

அம்மா நான் உங்ககிட்ட தான் சொல்லிண்டிருக்கேன்என்றாள்

அதற்கும் பர்வதத்திடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. அப்படி ஒருத்தி அங்கு நின்று கொண்டு பேசுகிறாள் என்பதையே எவரும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தார்கள். மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு விருட்டென்று மாடிப் படிகளில் ஏற துவங்கினாள். எதிரே நவீன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான். மிருதுளா வேகமாக படியில் ஏறுவதைப்பார்த்த நவீன்..

மிருது மெதுவா மெதுவா விழுந்திட போற…நீ ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம இருக்க? போ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நான் கீழே போய் முகம் கை கால் எல்லாம் அலம்பி கொஞ்சம்  ரிப்ஃப்ரெஷ் ஆகிக்கறேன். ஓகே.

அதற்கு பதில் ஏதும் கூறாமல் மேலே ஏறிச்சென்றாள் மிருதுளா. அதைப்பார்த்த நவீன் தனது தோள்பட்டையை உயர்த்தி புரியாதது போல கீழே சென்றான். ஒன்றாக அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் மிருதுளா சென்றதும் எப்படி நடந்துக்கொண்டனரோ அதே போலவே நவீன் ஹாலில் நுழைந்ததும் நடந்துக்கொண்டனர். ஆனால் நவீன் அதை துளியும் கண்டுக்கொள்ளாமல் டிவியை ஆன் செய்து செய்திகள் பார்க்கலானான். அதைப்பார்த்த பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ கண்ணைக்காட்ட உடனே..

ஏண்டா ….புருஷனும் பொண்டாட்டியுமா வெளியே போயிட்டு வந்திருக்கேங்களே அத பத்தி ஏதாவது வீட்டுப்பெரியவானுட்டு இருக்கோமே எங்களாண்ட உங்களுக்கு சொல்லனும்னு தோனித்தோ!!! ஏதோ வநத சர்ரெனு மாடிக்கு போயிட்ட அப்போ இங்க நாங்களெல்லாம் என்னத்துக்கு இருக்கோமாம்? “

அப்பா டிரஸை மாத்திட்டு கொஞ்சம் ரிப்ஃப்ரெஷ் ஆயிட்டு சொல்லலாம்னு இருந்தேன் அது தப்பா ஆனா மிருது சொல்லிருப்பாளே

ஆமாம் சொன்னா சொன்னா சொரக்காய்க்கு உப்பில்லைனுஎன்று முனுமுனுத்தாள் பர்வதம்

என்ன என்ன சொன்ன இப்போ. எதுவானாலும் சத்தமா சொல்லு அப்போதான் பதில் கிடைக்கும்என நவீன் பர்வதத்தைப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்கும் போது மிருதுளா உள்ளே நுழைய அனைவரும் மீண்டும் கப்சிப் ஆனார்கள். அதைப்பார்த்த மிருதுளா …

ஏன் எல்லாரும் ஸடன்னா பேசறதை நிப்பாட்டிட்டேங்கள். என்னாலயா? நான் வேனும்னா மாடிக்கே போயிடட்டுமா?”

ஹே மிருது உன்னால எல்லாம் இல்லை. நீ உள்ளே வந்து உட்காருஎன்று நவீன் கூற மிருதுளாவும் ஹாலில் ஒரு புறம் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தாள். பர்வதம் சட்டென்று எழுந்து அனைவரையும் இரவு உணவருந்த வருமாறு அழைத்தாள். அனைவரும் அவரவர் தட்டுகளை அலம்பி எடுத்துக்கொண்டு சென்று வரிசையாக அமர்ந்தார்கள். மிருதுளா அனைவருக்கும் பரிமாறினாள். அனைவரும் எழுந்த பின் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பின் தனது மாமியாருடன் சாப்பிடக்காத்திருந்தாள். பர்வதம் அவள் பாட்டுக்கு தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். மிருதுளாவிற்கு தட்டு இருக்கவில்லை உடனே வெளியே தேய்க்க போட்டிருந்த தட்டில் ஒன்றை எடுத்து தேய்த்து எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். சாதம் மிக குறைவாக இருந்தது. குழம்பு பொறியல் பாத்திரங்கள் எல்லாம் காலியாக இருந்தது. மிருதுளா மோர் தயிர் சாப்பிடமாட்டாள் என்பது பர்வதத்திற்கு நன்றாக தெரிந்திருந்தும் மோர் பாத்திரத்தை எடுத்து மிருதுளா முன் வைத்தாள். மிருதுளாவிற்கு நல்லவேளை அவ்வளவாக பசியில்லை என்பதால் மோரைத்தவிர ஏதாவது மீதமுள்ளதா என்று பார்த்தாள். ரசம் கொஞ்சம் மிஞ்சியிருந்தது அதை ஊற்றி கடகடவென சாப்பிட்டு பாத்திரங்களை எல்லாம் கழுவி கமுத்தி வைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தாள். யாரும் ஒன்றும் பேசவில்லை ஈஸ்வரன், கவின், ப்ரவீன் மற்றும் பவின் உள் ரூமில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வதம் மறுநாள் அரைப்பதற்கு அரிசி உளுந்து ஊறவைத்துக் கொண்டிருந்தாள்.  அதைப்பார்த்த மிருதுளா மாமியார் என்ன செய்கிறார் என போய் பார்த்து அப்படியே பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்து பர்வதம் அருகே சென்று…

என்ன மா பண்ணறேங்கள். எல்லா வேலைகளும் ஆயாச்சுனு நினைச்சு தான் போய் உட்கார்ந்தேன்

உனக்கு இட்டிலி தோசைக்கு மாவுக்கு அரிசி உளுந்து ஊறவெக்க அது ஊறினதும் அரைக்க தெரியுமா?” 

இல்லை அம்மா. எனக்கு தெரியாது. என் அம்மா செய்றத பார்த்திருக்கேன் ஆனா நான் செய்ததில்லை.என்று தனக்கு தெரியாததை தெரிந்தது போல பொய் ஏதும் கூறாமல் அப்பாவியாக உண்மையைச்சொல்ல…. அதை புரிந்துக்கொண்டு ..அதற்கென்ன போக போக தெரிந்துக்கொள்வாய் என பெரிய மனுஷிப்போல நடந்துக்கொள்ளாமல் இதுதான் சான்ஸ் என்று பர்வதம் என்ற பகடை உருள ஆரம்பித்தது…

என்னத்த வளர்த்திருக்கா உங்க அம்மா!!! ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டாமோ!!! நீ தனியா நவீனோட குஜராத் போய் என்னத்த வடிச்சுக்கொட்டப்போறயோ!!! இங்கேயே இருந்திருந்தா நானாவது சொல்லிக்குடுத்திருப்பேன் அதுக்கும் மாட்டேன்னு அடம்பிடிச்சு அவனோட இன்னும் அஞ்சு நாள்ல கிளம்ப வேற போற. பெரியவா சொன்னா அதுபடி கேட்டு நடக்க உங்க அம்மா சொல்லித்தறலையா? இதெல்லாம் விட்டுட்டு வேற என்னத்தான் சொல்லிக்குடுத்திருக்காளோ?”

இனி இதற்கு மேலிருந்தால் அது விபரீதம் என்று எண்ணி அங்கிருந்து எப்படியாவது நழுவிட நினைத்து… என்ன சொல்லி நழுவுவது என்று நெளிந்த வண்ணம் மிருதுளா நின்றிருக்க… நவீன் ஹாலில் இருந்து தண்ணீர் கேட்க ….இதுதான் சமயம் என..

அம்மா நவீன் தண்ணீர் கேட்கிறார் நான் போய் குடுத்துட்டு வரேன்” 

அது என்ன ஆத்துக்காரரை பெயர் சொல்லி கூப்பிடற பழக்கம் !அது  அப்பாக்கு சுத்தமா பிடிக்கலை இனி எங்க முன்னாடி அப்படி கூப்பிடாதே…போ தண்ணீ குடு

இந்தாங்கோ தண்ணீ” 

தாங்க்ஸ் மிருது

என்னத்துக்கு எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள்

நான் மாடிக்கு போறேன். உனக்கு வேலை எல்லாம் ஆயாச்சா?”

ஆ ஆயாச்சு

அப்போ நீயும் வா போகலாம். இப்போ இவாளும் எல்லாரும் படுத்துக்க பாயைப்போடுவா. கம் லெட்ஸ் கோ

என்று நவீன் சொன்னதும் அவளுக்கு அதற்கு முன்னாடி நாள் அவளிடம் யாரும் பேசாமல் அவரவர் படுக்கையை தயார் செய்து படுத்துக்கொண்டது, ஒருத்தி நின்றுக்கொண்டிருக்கிறாளே என்பதைக்கூட பொருட்படுத்தாமல் நடந்துக்கொண்டது எல்லாம் ஞாபகம் வர இன்றும் அதேபோல் நடந்தால் என்ற எண்ணம் அவளை நவீனுடன் மாடிக்கு ஏற வைத்தது. 

ஆனாலும் அவளது இந்த சங்கடங்களை நவீனிடம் பகிர்ந்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவது நாள் விடிந்தது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். மீண்டும் டக்…டக்…டக்… என கதவு தட்டும் சத்தம். மிருதுளா எழுந்து கடிகாரத்தைப்பார்த்தாள் மணி ஐந்து தான் ஆகியிருந்தது. நவீனை எழுப்ப அவன் பக்கம் திரும்பினாள் ஆனால் அவன் ஆழந்து உறங்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து எழுப்ப மனசு வரவில்லை. தானே எழுந்து கதவைத்திறந்து பார்த்தாள், இம்முறை இருட்டில் நின்று கதவைத்தட்டியது பக்கத்துவீட்டுக் குட்டிப்பையன் கார்த்திக் இல்லை, காலேஜ் செல்லும் நவீன் வீட்டுக் கடைக்குட்டி பவின். 

ஹாய் பவின் குட் மார்னிங். என்ன காலங்காத்தால கதவ தட்டற?”

மன்னி டைம் அஞ்சு ஆச்சு. உங்களை கீழே வரச்சொன்னா அம்மா” 

ஏய்தவள் கீழே இருக்க அம்பை நோவானேன் என நினைத்து

சரி சரி வரேன்னு போய் சொல்லு

சிறிது நேரம் கழித்து மாற்றுத்துணிகளுடன்  கீழே சென்று குளித்துவிட்டு துணிகளை காயப்போட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்து தனது அம்மாவிடம் கேட்பது போலவே …

அம்மா காபி” 

வேனும்னா போட்டுக்குடி. உனக்கு காபி போடவாவது தெரியுமா? அதையாவது சொல்லிக்கொடுத்திருக்காளா ஒங்க அம்ம்மாஎன்று காலையிலேயே  பர்வதப்பாதம் ஆரம்பமானது…

பர்வதப்பாதத்தை காதில் வாங்காதது போலவே மிருதுளா தானே காபிப்போட்டுக்கொண்டு  ஹாலுக்கு சென்று அமர்ந்துக்கொண்டாள். அப்பொழுது நவீன் உள்ளே வர உடனே தனது காபியை அவனுக்கு குடுத்துவிட்டு தனக்கு காபி போட மீண்டும் அடுப்படிக்குள் சென்று காபி போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் ஹாலில் இருந்து 

இன்னைக்கு காபி சூப்பரா இருக்கே என்ன விஷேசம்? காபி பொடி மாத்திட்டயா என்ன…இனி இதே ப்ராண்ட் காபி  பொடி வாங்கு.என்று பர்வதத்திடம் சொல்ல…எறிந்துக்கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போலானது. அப்பொழுதும் மிருதுளா தான் போட்ட காபி என்று நவீனிடம் சொல்லவில்லை. சொன்னால் வரக்கூடிய விளைவுகளை நன்கு மூன்றே நாளில் கற்றுக்கொண்டு விட்டாள். ஆகையால் அமைதியாக தனக்கு தானே போட்ட காபியோடு வந்து நவீன் அருகே அமர்ந்து அருந்தலானாள். இங்கு நடந்தது ஏதும் தெரியாத ஈஸ்வரன் …நவீன் சொல்வதைக்கேட்டுவிட்டு

ஏய் பர்வதம் காபி பொடி மாத்திட்டயா சொல்லவே இல்ல…ஆனா எனக்கு எப்பவுமே தர காபி தானே இன்னைக்கு காலையிலும் தந்த!!! ஒரு வித்யாசமும் தெரியலையே. சரி போய் எனக்கு புது காபிப் பொடி போட்டு நவீனுக்கு கொடுத்த மாதிரியே ஒரு காபி போட்டுண்டு வா” 

பர்வதத்திற்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது…

காலை ல ஒரு காபி தான். ரெண்டாவது காபி ..புது பழக்கமா இருக்கு?? இது என்ன காபி கடையா? காபி போட்டுண்டே இருக்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல டிஃபன் சாப்பிடனும் இப்போ என்னத்துக்கு காபி கீபி எல்லாம் அது பசியை முறிச்சுடும். போங்கோ உங்க நியூஸ்ஸை ரேடியோவில் கேளுங்கோ

இதை பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த மிருதுளாவிற்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென ஒரு சிரிப்பு சிரித்தாள். அதைப் பார்த்த நவீன் 

என்ன மிருதுளா காபி குடிக்கும் போது இப்படி ஒரு சிரிப்பு

அது …அது… எதையோ நினைத்தேன் சிரிப்பு வந்துடுத்து… மனசுக்குள்ள சிரிக்கறதா அல்லவா நினைச்சேன். சாரி

என்னத்துக்கு சிரிச்சதுக்கெல்லாம் சாரி கேட்கிற?”

இவர்களின் உறையாடலைக் கேட்ட பர்வதம் மிருதுளாவை முறைத்துக்கொண்டே அடுப்படிக்குள் போய் ..

ஏய் மிருதுளா எத்தர நேரமா ஒரு கிலாஸ் காபி குடிப்ப? இங்க வா

என்றழைக்க….பர்வதத்தின் அடுத்த களம் என்னவாக இருக்கும் அதை எப்படி சமாளிப்பது என்ற எண்ணங்கள் மிருதுளா மனதில் தாறுமாறாக ஓட…

என்ன மா சொல்லுங்கோஎன தன்னை தயார் படுத்திக்கொண்டு எதுவானாலும் எதிர்க்கொள்ள அடுப்படிக்குள் சென்றாள்.

வெகுளிப் பெண்ணாக வந்தும் வீட்டின் பெரியவர்களின் செயல்களால் வந்தவளும் தனது குணத்தை அங்கிருப்பவர்களுக்கு தகுந்தார் போல் மெல்ல மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.  இதுவே மிருதுளா எடுத்து வைத்த முதல் அடி. மிருதுளா மாறுவது தவறா இல்லை பர்வதம் மாறாதது தவறா.!!!! 

தொடரும்…..

நவீனும் மிருதுளாவும் ஒருவழியாக வெளியே சென்றனர். முதலில் இருவரும் ஜோடியாக வெளிய செல்வதால் பிள்ளையாரை தரிசித்து பின்பு செல்லலாமா என மிருதுளா நவீனை கேட்டாள். இருவரும் உச்சிப்பிள்ளையாரை தரிசித்த பின்  பிச்சுமணி மாமா வேலை பார்க்கும் பாங்கிற்கு சென்றனர். பாங்க் வாசலில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பிச்சுமணி இவர்கள் வருவதை பார்த்ததும் ..

வாங்கோ வாங்கோ நவீன் அன்ட் மிருதுளா. வெல்கம். என்ன லாக்கர் விஷயம் தானே. வாங்கோ உள்ளே போகலாம்

ஆமாம் மாமா அதற்கே தான் வந்திருக்கோம். அப்படியே உங்க ஆத்துக்கும் ஒரு எட்டு போயி மாமிக்கும் ஒரு ஹாய் சொல்லலாம்னு …மாமி ஆத்துல இருக்காளோனோ!!!!

ஓ தாராளமா போயிட்டு வாங்கோ. அம்பிகா ஆத்துல தான் இருக்கா. ஐ வில் ஜாயின் யூ ஃபார் லஞ்ச். இங்கே ஒரு ஸிக்னேச்சர் போடு. ஜாயின்ட் அக்கௌன்ட் தானே !!!

ஆமாம் மாமா ஜாயின்ட் தான் …இனி எல்லாமே ஜாயின்ட் தான்

தட்ஸ் குட் ரா. ஐ லைக் தி வே யூ செட். சரி அப்போ மிருதுளா நீயும் இங்க ஒரு சைன் பண்ணுமா

சரி மாமா

ஓகே தென் ஆல் ஃபார்மாலிடீஸ்  ஓவர். லெட் மி ஷோ யுவர் லாக்கர். இந்தாமா இது உங்களோட லாக்கர் கீ. பத்திரமா வச்சுக்கோ. எஸ் ஹியர் வி ஆர். இதுதான் உங்க லாக்கர். மிருதுளா அந்த சாவியை தா. இப்படி என்னிடமுள்ள சாவியையும் உங்கள்ட்ட இருக்குற சாவியையும் ஒன்னா போட்டாதான் திறக்க முடியும். ஸோ நீங்க ஒவ்வொரு தடவ வரும்போதும் சாவியை மறக்காம எடுத்துண்டு வரனும். ஓகே. சரி இனி என்னென்ன வைக்கனுமோ வச்சுட்டு மறக்காம லாக் பண்ணிட்டு வாங்கோ

அப்போ உங்க கீ மாமா. அத எடுத்துண்டு போரேளே

ஹா !ஹா! ஹா! லாக் பண்ண உன்னிடம் இருக்கும் கீ மட்டும் போதும் மிருதுளா.

ஓ !!! ஓகே மாமா

சரி முடிச்சுட்டு ஆத்துக்கு போங்கோ நான் ஒரு க்ளைன்ட்ட மீட் பண்ண வெளியே போயிட்டு அப்படியே ஆத்துக்கு வந்துடரேன். ஐ வில் கோ இன் மை ஆஃபிஸ் கார். நீங்க என்னோட ஸ்கூட்டர் எடுத்துண்டு போங்கோ” 

என்று கூறி அவரது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நவீனும் மிருதுளாவும் நகைகள், வெள்ளி பாத்திரங்கள் என அனைத்தையும் லாக்கரில் வைத்துவிட்டு நவீன் மாமாவின் பஜாஜ் ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப்பார்த்த அம்பிகா உள்ளேயிருந்து ஓடி வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றாள். 

வாடா நவீன். வாம்மா மிருதுளா. உள்ள வாங்கோ. எப்படி உன் மாமா ஸ்கூட்டர் உங்ககிட்ட !!!

வந்துன்டே இருக்கோம் மாமி. ரொம்ப யோசிக்காதீங்கோ. நாங்க அவர பாங்க்ல லாக்கர் விஷயமா  பார்த்துட்டுதான் வரோம். அவர்தான் ஸ்கூட்டரை எடுத்துண்டு போகச்சொன்னார் மாமி.

ஓ !!! அப்படியா!!! அதுதானே காலைல அவர் ஸ்கூட்டர்ல தானே பாங்க் போனார் என்னடா இவா அதுல வராலேன்னுட்டு கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன் அவ்வளவு தான். அச்சோ விட்டா  நான் பேசிண்டே இருப்பேன். கொழந்தகள் மொதோ மொதோ தம்பதிகளா ஆத்துக்கு வந்துருக்கேங்கள் ஏதாவது குடிக்க தரண்டாமோ அத விட்டுட்டு ஸ்கூட்டர் புராணம் பாடறேன் பாரேன்…இந்தா எடுத்துக்கோமா லெமென் ஜூஸ். இந்தாடா உனக்கும் ” 

தாங்க்ஸ் மாமி

என்னதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லர மா? கையிலேயே வச்சிண்டு இருக்கேங்கள் குடிங்கோ ரெண்டு பேரும்

என்ன மிருதுளா கல்யாண வாழ்க்கை எப்படி ஆரம்பிச்சிருக்கு?”

மிருதுளா மனதிற்குள் காலை வீட்டில் நடந்த வாக்குவாதம் சட்டென்று வந்து போனாலும் மலர்ந்த முகத்துடன் பதிலளித்தாள்.

ஓ! நன்னா ஆரம்பிச்சிருக்கு மாமி.

அப்படியா!!! அப்படி போடு

ஏன் மாமி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா

நீ ஏதும் தப்பா சொல்லலமா. நல்ல மாட்டுப்பொண்ணா சொல்லற. பார்ப்போம் போக போக தெரியும். டேய் நவீன் உனக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்ல பொண்ணா கிடச்சிருக்கா நம்ம மிருது. நீ தான் அவள நல்லா பார்த்துக்கணும் டா.

டன் மாமி. மாமி பேச்சுக்கு நோ அப்பீல் அட் ஆல்.

போடா உனக்கு எப்பவும் விளையாட்டு தான். மிருதுளா …நவீன் அவனோட செவென்த் ஸ்டான்டர்டை இங்கே இருந்து தான் படிச்சான். எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். என் மாமியார் பயங்கரி அவா என் மேல சுட சுட பாலை உத்தினதிலிருந்து எல்லாமே அவனுக்கு தெரியும் எல்லாத்தையும் அவன் நேரிலே பார்த்திருக்கான். அவா பொண்ணு தான் இப்போ உன் மாமியார் அதனாலதான் அவன்ட்ட உன்ன பத்திரமா பார்த்துக்க சொன்னேன். நான் பட்டதே போரும்மா. எனக்கு ஒரு மாமியார் இல்லை நாலு பேர்…என்ன யோசிக்கறாய் என் நாத்தனார்களையும் சேர்த்து தான் சொல்லரேன்…அதிலும் உன் மாமியார் என்னையும் என் புருஷனையும் மனதளவில் பிரிச்சுட்டானுதான் சொல்லுவேன் …ஏதோ கல்யாணம் பண்ணின்டதால கூட இருக்கார் அவ்வளவுதான்..சரி சரி என் கஷ்டம் என்னோடயே போகட்டும். சாப்பிடலாமா எல்லாத்தையும் எடுத்து வைக்கட்டுமா?”

இல்ல மாமி மாமா வந்துடட்டும் எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்

சாப்பிட வரேன்னு சொன்னாரா?”

ஆமாம் மாமி சொனார். அதோ அவரே வந்துட்டார்

சரி அப்போ இலையை போட்டு வைக்கறேன் நீங்க ரெண்டு பேரும் கை கால் அலம்பிட்டு வாங்கோ

சரி மாமி

என்று உள்ளே சென்று கை கால்களை அலம்பி விட்டு விருந்து சாப்பிட வந்து அமர்ந்தான் நவீன். பிச்சுமணியும் அமர்ந்திருந்தார். மிருதுளாவிற்கும் நவீன் பக்கத்தில் இலைப் போட்டிருந்தாள் அம்பிகா ஆனால் மிருதுளா தான் மாமிக்கு பரிமாறுவதில் உதவி செய்துவிட்டு பின் மாமியுடன் சேர்ந்து சாப்பிடுவதாக கூறினாள் அதற்கு அம்பிகா…

ஏய் மிருது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போய் நவீன் கிட்ட உட்காரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். அடுத்த தடவை வரும்போது நீயே பரிமாறு நான் உன்ன தடுக்க மாட்டேன் இப்போ அங்க போய் உட்கார்ந்துண்டு சமத்தா சாப்பிடு போ.

மிருதுளா சென்று நவீன் பக்கத்தில் அமர்ந்து மூவருமாக உணவருந்திய பின் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு மாமிக்கு பரிமாறினாள். நவீனும் பிச்சுமணியும் ஹாலில் அமர்ந்து கிரிக்கெட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டே அம்பிகா மிருதுளாவோடு பேசினாள். 

உன் மாமியார் என்னையும் உங்க மாமாவையும் கல்யாணமான புதுசுல இப்படி தனியா எங்கயுமே விடமாட்டா எப்பப்பார்த்தாலும் தம்பி தம்பி னுட்டு கூடவே தான் வருவாள். அப்போ அவா எல்லாருமே இங்க தானே இருந்தா. உனக்கு உங்க மாமனார் எப்படி இருந்தார் ன்னுட்டு எல்லாம் தெரியுமோல்யோ…அந்த சமயத்துல இங்க தான் இருந்தா நாங்க தான் பார்த்துண்டோம். அவளுக்கு கல்யாணமாகி நாலு புள்ளகள பெத்துட்டா ஆனாலும் என்ன என் புருஷன் கூட பேச விட மாட்டா அப்படியே எங்க ரூமுக்குள்ள பேச ஆரம்பிச்சாலும் கழுகுக்கு மூக்கு வெசர்க்கறா மாதிரி எங்கிருந்தாலும் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் உள்ள வந்து தம்பியை கூட்டிண்டு போயிடுவள்…இதனாலயே எனக்கும் உங்க மாமாக்கும் இடையில ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இன்னே வரைக்கும் இல்லாம போச்சு” 

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கரன்ட் கட் ஆனது அப்போ அம்பிகா பேசியதை கேட்ட பிச்சுமணி 

என்ன மிருதுளா கிட்டையும் உன் கதா காலட்சேபத்த ஆரம்பிச்சுட்டயா? உனக்கு என் அக்கா, அம்மா பத்தி குத்தம் சொல்லாட்டி நாள் முழுமையாகாதோ? மிருதுளா அவ கெடக்காமா நீ வா வந்து ஹால்ல உட்காரு  நான் விசிறி எடுத்துண்டு வரேன்

பார்த்தயாமா அவாள விட்டுக்கொடுக்காமா பேசறதை!!!! ஆனா பொண்டாட்டி னா மனுஷனுக்கு எவ்வளவு எலக்காரம் …பார்த்தயா ….இது தான் மாமியாரின் எஃபெக்ட். சரி இதுக்கு மேலே ஏதாவது சொன்னா அடி கூட கிடைக்கும். நீ போய் ஹால்ல உட்காரு நான் வரேன்

மிருதுளாவிற்கு என்ன சொல்வது எப்படி ரியாக்ட் செய்வது என்று ஒன்றும் புரியாமல் சென்று சேரில் அமர்ந்தாள். அம்பிகா சாப்பிட்டப்பின் வந்து ஹாலில் அமர்ந்தாள்..

நீங்க ரெண்டு பேரும் வேணும்னா அந்த ரூம்ல போய் செத்த நேரம் படுத்துக்கோங்கோடா

நோ மாமி நோ வே நாங்க கிளம்பறோம். நீங்க சாப்பிட்டுட்டு வரத்துக்காக வேயிட் பண்ணினோம். டைம் மூனு ஆச்சு.

ஏன்டா இருந்து சாயந்தரம் காபி குடிச்சுட்டு வெயில் தாழ கிளம்புங்கோ

இல்ல மாமா வி ஹாவ் டு கோ நவ். இப்ப கிளம்பினா தான் பஸ் பிடிச்சு ஆத்துக்கு ஒரு ஆறு மணிக்காவது போய் சேர முடியும். நாங்க கிளம்பறோம். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி விருந்து மாமி

என்னத்துக்கு தாங்ஸ் எல்லாம் போடா. இருங்கோ இதோ வரேன்

ஏன்னா இப்படி வந்து என்னோட சேர்ந்து இந்த புடவை வேஷ்டி யை கொழந்தைகளுக்கு குடுங்கோ

நீயே குடு டி. என்னத்துக்கு!!! சேர்ந்து தான் குடுக்கனுமாக்கும். அடி போடி..

மாமா போய் மாமி கூட சேர்ந்து நில்லுங்கோ நாங்க நமஸ்காரம் பண்ணனும்

ஏன்டா நீ வேற. சரி சரி உங்களுக்காக

நவீனும், மிருதுளாவும் மாமா மாமி கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து புடவை வேஷ்டியையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்தனர். நடந்து வருகையில் மிருதுளா நவீனைப்பார்த்து

ஏன் நவீன் உங்க மாமி சொன்னதெல்லாம் நிஜமா? உங்க பாட்டி அப்படியெல்லாம் செய்தாளா?”

ஆமாம் மிருது உண்மை தான் என் அம்மாவோட அம்மா கொஞ்சம் ரூட் அன்ட் பேராசைப் பிடிச்சவா. பிச்சுமணி மாமாவுக்கு மொதல்ல ஒரு இடத்துல பொண்ணு பார்த்து ஓகே பண்ணினா.  மாமாவும் அந்த பொண்ணை மனதார விரும்பி பழகிண்டிருந்தார் ஆனா அம்பிகா மாமி சம்மந்தம் வந்ததும் முன்னாடி பேசின சம்மந்தத்தை வேண்டாம்னுட்டா

ஏன் அப்படி செய்தா மாமாவுக்கு தான் அந்த பொண்ண பிடிச்சிருந்துதே!!

எல்லாம் பணத்தாசை னு தான் சொல்லனும். அம்பிகா மாமி அந்த மொதோ பார்த்த குடும்பத்தை விட வசதி ஆனவா அதனால அப்படியே பல்டி அடிச்சுட்டா. அதுக்கப்பறம் என்னென்னவோ நடந்தது. கடைசில அம்பிகா மாமியையும் நிம்மதியா வாழ விடலை என் பாட்டி. அப்போ நான் நினைச்சுக்குவேன் மொதோ எங்க மாமாவுக்கு பார்த்த பொண்ணு இந்த பாட்டிக்கிட்டயிருந்து  தப்பிச்சாடானு…என்ன பண்ண எல்லாம் அவா அவா  ஃபேட்

ஏன் நவீன் உங்க அம்மா செய்தது பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறேங்களே.

இதோ பஸ் வந்துடுத்து சீக்கிரம் வா. ஏறு இந்த பஸ் தான்

இருவரும் பஸ்ஸில் எறி அமர்ந்தார்கள். மிருதுளா மனதில் பல கேள்விகள் உதித்தது. 

அம்பிகா மாமி பேசியது சரியா? முதல் மதலில் அவா ஆத்துக்கு போயிருக்கோம் இப்படி அவா மாமியார் பத்தியும் என் மாமியார் பத்தியும் குத்தம் சொன்னது சரியா? பாவம் எவ்வளோ நாள் தான் மனதிலே பூட்டி வைத்திருக்க முடியும் அதுதான் கொட்டித் தீர்த்துட்டாளோ!!! நவீன் அவா பாட்டியை பத்தி கேட்டபோது அவ்வளவு டீட்டேய்லா சொன்னவர் ஏன் அவா அம்மாவ பத்தி கேட்ட போது சரியா பதில் சொல்லலை? ஏன் மழுப்பினார்? கல்யாணத்துக்கு முன்னாடியே என்னையும் நவீனையும் ஆறு மாசம் பிரிச்சு வைக்க திட்டம் போட்டவாளாச்சே!!! காலைல கூட ஒன்னுமில்லாத விஷயத்துக்கு அவ்வளவு பெரிய சண்டையை போட்டாளே!!! இதெல்லாம் வச்சுப்பார்த்தா அம்பிகா மாமி சொன்னதெல்லாம் சரின்னு தான் எனக்கு படரது. பார்ப்போம். அம்மா தாயே நீ தாம்மா துணை” 

என்று பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஒரு போராட்டமே நடத்திக்கொண்டிருக்கையிலே  சட்டென்று தன் முகத்தை உரசிக்கொண்டு ஒரு கை ஜன்னல் பக்கம் நீண்டது. சட்டென்று நெட்டினாள் மிருதுளா.  உடனே நவீன்

ஹேய் மிருது அது தான் நான் படிச்ச ஸ்கூல். ஏய் என்ன ஆச்சு எங்க இருக்க? ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போல?”

அதெல்லாம் ஒன்றுமில்லை நவீன். ஓ!! உங்க ஸ்கூலுக்கு நாங்க நிறய காம்படீஷன்ஸ்க்கு வந்துருக்கோம். நான் பேச்சுப்போட்டிக்கு வந்திருக்கேன்.

ஓ!! ஈஸ் இட்!!! அப்போ நாம அப்பவே மீட் பண்ணிருப்போமோ!!! பாரேன்!!! காட் டிசைட்ஸ் வென் வீ ஹாவ் டூ மீட் னு…இல்ல

எஸ் நவீன் எவரிதிங் ஹாப்பென்ஸ் ஆஸ் பெர் காட்ஸ் விஷ் அன்ட் ஐ பிலீவ் இட் ஈஸ் ஆல்வேஸ் ஃபார் அவர் குட் ஓன்லி. லெட்ஸ் ப்ரே டு காட் அன்ட் ஹோப் ஆல் ஈஸ் வெல்

ஹய் என்ன மிருது ஏன் சீரியஸா ஆகிட்ட? ஆல் இஸ் வெல் அன்ட் இட் வில் பி வெல் ஆல்வேஸ். நான் இருக்கேன். ஓகே

ஓகே” 

என்று புன்னகையித்தாள் மிருதுளா. 

பிச்சுமணி வீட்டு விருந்து மிருதுளாவின் மனதில் போராட்டத்தை உண்டாக்கியது. அவளுள் பல கேள்விகளை உதிக்கச்செய்தது.  வினாக்களுக்கு விடை கிடைக்குமா மிருதுளாவிற்கு? அதன் பதில்கள் அனுபவமாக கிடைக்குமா இல்லை பதிலாக மட்டும் இருக்குமா என்பதை பற்றி நாம் வரும் வெள்ளிக்கிழமை மேலும் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

 காலை ஆறு மணி ஆனது. நவீன் மிருதுளா ரூமின் கதவு டக் டக் டக் டக் என பலமாக தட்டும் சத்தம் கேட்டு மிருதுளா கடிகாரத்தை பார்த்தாள் மணி ஆறு காட்டவும் பதறியடித்து எழுந்து கதைவைத்திறந்தாள் யாரையும் காணவில்லையே என எண்ணிக்கொண்டே திரும்பலானாள் அப்பொழுது பார்த்தாள் பக்கத்துவீட்டு சிறுவன் கார்த்திக் நின்று கொண்டிருந்ததை. 

ஏய் குட்டி பையா நீ தான் கதவ தட்டினியா?”

ஆமாம் அக்கா. பர்வதம் மாமிதான் மணி ஆறாச்சு நீங்க இன்னும் எழுந்திரிக்கல னு என்னை கதவ தட்டி எழுப்பிவிடச் சொன்னாங்க. அக்கா நானே எழுந்துருச்சிட்டேன் நீங்க இன்னுமா தூங்கரீங்க..நவீன் அண்ணா எங்கஎன்று உள்ளே செல்ல முயன்ற சிறுவனை தடுத்து தாங்கள் கீழே வருவதாக பர்வதம் மாமியிடம் சொல்லும்படி சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவை விடிந்ததும் சிறுவனின் மூலம் அவமானப்படுத்த துவங்கினாள் பர்வதம். கீழே வந்து பல் துலக்கியவுடன் குளிக்கச் சென்றாள் மிருதுளா. அது அவளது வழக்கம். குளித்து முடிந்ததும் ஹாலுக்கு வந்தாள். அவளருகே காபிவை வைத்துவிட்டு…

இந்தா காபி. உனக்கு இதுதான் காலை அஞ்சு மணியோ?” என முனுமுனுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள். 

மிருதுளாவிற்கு என்ன சொல்வது… என்ன செய்வதென்று தெரியாமல் காபியை குடித்துவிட்டு அந்த டம்பளரையும் மற்ற அங்கு கிடந்த பாத்திரங்களையும் தேய்த்து வைத்து அடுப்படிக்குள் சென்று ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்க அதற்கு பர்வதம்

இவ்வளவு லேட்டா வந்து கேட்டா. எல்லாம் ஆயாச்சுஎன்று கூறி வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அங்கு இருந்த தனது மச்சினர்களை பார்த்துஹாய் குட் மார்னிங்என்றாள் அவர்களும்குட்மார்னிங்என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கலானார்கள்.

மாமனார் உள் ரூமிலிருந்து வரவும் மிருதுளா எழுந்துகுட்மார்னிங்என்று சொல்ல அவரும் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு ரேடியோவை ஆன் செய்து செய்திகளைக் கேட்கலானார். அவரகள் யாருமே ஒருத்தி அங்கு செய்வதறியாது நிற்கிறாளே தானாக பேச்சுக்குடுக்க முன்வருகிறாளே என்று துளியும் புரியாதது போலவே பாவனை செய்து கொண்டிருந்தார்களா இல்லை அவர்கள் குடும்பமே அப்படி தானா என்ற சந்தேகம் மிருதுளாவின் மனதில் எழுந்தது. 

மிருதுளாவிற்கு ஏதோ ஒரு அன்னிய வீட்டினுள் யாருமே இல்லாமல் தனித்து நிற்பது போல் இருந்தது. நவீன் எப்போது எழுந்து வருவார் என மனதில் நினைத்துக்கொண்டே மாடிப்படியை பார்த்தாள் நவீன் கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்துஅப்பாடஎன பெருமூச்சு விட்டாள். அவன் ஃப்ரெஷ் அப் ஆகி வந்ததும் மிருதுளாவைப் பார்த்து 

ஹே மிருது அதுக்குள்ள குளிச்சிட்டயா. குட் குட்என கூறிக்கொண்டே பர்வதம் கையிலிருந்து காபியை வாங்கிக்கொண்டான். நவீனுடனும் அவர்கள் அவ்வளவாக யாருமே பேசவில்லை. அதனால் அவர்களின் சுபாவமே அதுதான் என மனதில் நினைத்துக்கொண்டாள் மிருதுளா. 

நான் மன்டே டூ ஃப்ரைடே உன்ன மாதிரிதான் எழுந்ததும் குளித்துவிட்டு தான் வருவேன் ஆனால் சாட்டர்டே சன்டே மத்தியான சாப்பாட்டுக்கு முன்னாடிதான் குளிப்பேன். சரி நீ சீக்கிரம் ரெடி ஆகு நாம வெளில போகனும்என்றதும் மிருதுளாவின் மனம் அப்பாட இந்த இறுக்கமான இடத்திலிருந்து சற்று நேரம் ரிலீஃப் கிடைக்கப்போகிறதே என சந்தோஷத்தில் துள்ளியது. அதில் மண்ணைப்போட்டு அணைத்தது போல பர்வதம் குறுக்கிட்டு

இனைக்கு எதுக்கு வெளில போகனும் அதுவும் வெயில்ல ஒன்னும் வேண்டாம்” 

ஏதோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே போயிட்டு வரட்டும் சந்தோஷமா இருக்கட்டும் என்றில்லாமல் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைத்தாள் பர்வதம். ஆனால் நவீன் உடனே

இங்க இருந்துண்டு என்ன பண்ணப்போறோம். இட் வில் பி போரிங் ஃபார் அஸ். கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரோம். உனக்கு ஏதாவது வாங்கிண்டு வரனுமா?”

எனக்கென்ன வேனும்!!என்று அலுத்துக்கொண்டாள் பர்வதம். ஆமாம் அவளுக்கு வேண்டியது கடையில் கிடைக்காது ஏனெனில் அவளுக்கு வேண்டியது மிருதுளாவின் நிம்மதி, சந்தோஷம் என்பது இதுவரை படித்ததை வைத்து நமக்குத்தானே தெரியும். என்ன மக்களே நான் சொல்வது உண்மை தானே??

சரி எங்க கல்யாணத்துக்கு பக்ஷணம் தந்தாலே அதெல்லாம் நம்ம தெரு ஆட்களுக்கெல்லாம் கொடுத்தயா? நேத்து என் நண்பன் ஆத்துக்கு போனேனே அவா அம்மா சொன்னா கல்யாண பக்ஷணமே வரலயேனுட்டு

இவாளுக்கெல்லாம் கொடுக்க எங்கப்போறது!! உன் மாமனார் ஆத்துல அவளவா கொடுத்தா?” இதை கேட்டதும் ஈஸ்வரன் பர்வதத்தைப்பார்த்து …

ஏண்டி இப்படி சொல்லற…உள்ள அவா கொடுத்தனுப்பிய பக்ஷணம் எல்லாம் அட்டப்பெட்டியோட அப்படியே இருக்கே. உன் ஆத்துக்காராளுக்கெல்லாம் கொடுத்தது போக எவ்வளோ மீதி இருக்கு !!!என்றதும் பர்வதம் அவரை ஒரு முறை முறைத்தாள். மனிதர் கப்சிப் ஆனார். 

ஆமாம் மிருது ஆத்துலேருந்து நிறைய பக்ஷணம் எல்லாம் அவ தம்பி வேனு நம்ம வேனுல ஏத்தும்போது நான் கேட்டேன் என்னது இவ்வளவு டப்பா ஏத்தறேங்கள் னு அப்போ அவன் சொன்னான் எல்லாம் சீர் பக்ஷணங்கள் னுட்டு

ஆமாம் ஆமாம் அவன் அக்கா சூட்கேஸை எல்லாம் பக்ஷணம் டப்பா னுட்டு சொல்லிருக்க போறான்என்று நக்கலாக சொன்னாள் பர்வதம் 

மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் காலை முதல் தன்னை வம்புக்கு இழுப்பது போலவே பேசும் தனது மாமியாரிடம் ஒன்றுமே பதில் அளிக்காமல் விலகிச்சென்றாள். ஆம் மிருதுளா நினைப்பதும் சரிதான் பதிலுக்கு பதில் பேசி வந்ததும் சண்டை போடுறா என்கிற பேரை அவளுக்கு பட்டமளிக்க வோஇல்லை சண்டைக்கு இழுத்து அவர்கள் மன நிம்மதியை குலைக்க வா!!!… என்னவோ ஏதோ ஆனால் மிருதுளாவை முனுமுனுத்துக்கொண்டே சீண்டிக்கொண்டு இருந்தாள் பர்வதம். இப்படியும் சில மனிதர்கள். 

அனைவரும் காலை உணவு அருந்த அமர்ந்தனர். மிருதுளா தயங்கி நின்றிருந்தாள் அப்போது நவீன் மிருதுளாவையும் அமரும்படி சொல்ல பர்வதத்திற்கு கோபம் வந்து..

ஏன் இவ்வளவு நாள் மிருதுளா கூடதான் சாப்பிட்டயோ!!! அவள் பக்கத்தில் இல்லாமல் சாப்பாடு இறங்காதோஎன்று கேட்க

அதுக்கில்ல அவள யாருமே கூப்பிடலை அதுதான் நான் கூப்பிட்டேன் ஏன் இதுல என்ன இருக்கு? இதுக்கு ஏன் இப்படி சொல்லற?” என நவீன் திருப்பி கேட்டதும் சுதாரித்துக்கொண்டாள் பர்வதம் 

அவளும் நானும் அப்பறமா சாப்பிட்டுக்கறோம் முதல்ல நீங்கெல்லாம் சாப்பிட்டு எழுந்திரிங்கோஎன்றாள்

ஓகே மிருது நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ ஆனா சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகிடு

சரிஎன்று புன்னகையித்தால் மிருதுளா. 

நவீன் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்சென்றான். அனைவரும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள் மிருதுளா. பின் மாமியாருடன் சாப்பிட தட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். இட்டிலி என்று ஒன்றை சுட்டு வைத்திருந்தாள் பர்வதம் அதை மிருதுளா சாப்பிட்டதும் அவளின் அம்மா நினைப்பு வந்தது அவளுக்கு. அவள் அம்மா சுடும் இட்டிலி பஞ்சுப்போல இருக்கும். ஏதோ ஒரு நாள் கொஞ்சம் ஹார்டான இட்டிலி சுட்டதற்கு வேனுவும் மிருதுளாவும் அவர்கள் அம்மாவை கல்லிட்டிலி அம்பு என கிண்டலடித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதைவிட பல மடங்கு கனமான இட்டிலியை அன்று நவீன் வீட்டில் தான் முதல் முறையாக பார்க்கிறாள். அதையும் ஒன்றும் சொல்லாமல் ஐந்தைந்து உண்டு எழுந்த தனது மாமனார், கணவர், மச்சினன்களை பாவம் என்று மனதில் எண்ணிக்கொண்டே ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழலானாள் அப்போது பார்த்து பர்வத்திற்கு எங்கிருந்தோ பாசம் மடைத்திறந்து தாவும் நதியலைப்போல 

என்ன இது ஒரு இட்டில எழுந்திரிக்கறாய் உட்காருஎன இன்னும் இரண்டு தட்டில் கேட்காமல் போட திரு திருவென முழித்துக்கொண்டு சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்து தட்டைக்கழுவி வைத்து விட்டு தான் டிரஸ் மாற்ற போவதாக சொல்லிவிட்டு மாடிக்குப் போனாள். அங்கே நவீன் ரெடியாகி அமர்ந்திருந்தான். மிருதுளாவை பார்த்ததும் அவளிடம்..

ஹே மிருது நீ உன் நகைகளை எல்லாம் ஒரு பேக்கில் போட்டு எடுத்துக்கோ நம்ம பிச்சுமணி மாமா பாங்கில் லாக்கருக்கு சொல்லிருக்கேன் அங்க போய் வச்சுடலாம். இந்த ஏரியா அவ்வளவு ஸேஃப் இல்ல மோரோவர் அப்பாவும் வயசானவர் அதுனால தான் சொல்லறேன். நீ என்ன சொல்லற” 

ஓகே வச்சுடலாம் எனக்கு வேண்டியதை மட்டும் வச்சுக்கறேன் மத்ததை எல்லாம் பாங்க் லாக்கர்ல வச்சுடலாம்” 

என பேசிக்கொண்டு கையில் பேக்குடன் கீழே இறங்கி வந்தவர்களை பார்த்து பர்வதம்

என்ன அது பேக்?”

இது எனக்கு இப்போதைக்கு தேவையில்லாத நகைகள் அம்மா. இத ஊருக்கும் எடுத்துண்டு போகவேண்டாமாம் நவீன் சொல்றார். அவர் பிச்சுமணி மாமா பாங்க் லாக்கர்ல வைக்கலாம் னு சொன்னார் அதுதான் எடுத்துண்டு போறோம்” 

காலை முதல் சண்டைக்காக காத்திருந்த பர்வதம் இதையே பிரச்சினை ஆக்க முடிவெடுத்து ஆரம்பித்தாள்

இதோ பாருமா இது மாதிரி உன் எண்ணங்களை எல்லாம் நவீன் சொன்னான் என்று அவன் மேல போட்டுட்டு ஒன்னுமே தெரியாததுபோல நின்னுட்டா நாங்க நம்பிடுவோமா. எல்லாத்தையும் மேலே அவனுக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ என்னவோ அவனே சொன்னா மாதிரியும் உனக்கு ஒன்னும் தெரியாதது போலவும் சொல்லற!!

அவளுக்கு ஒன்னும் தெரியாதுதான் நான் அவளுக்கே இப்போ தான் சொன்னேன்

அப்படிப்போடு ஒரு நாள்லயே இவளோ மாறிட்ட பேஷ். சரி அப்படியே வச்சுப்போம்…

வச்சுக்க எல்லாம் வேண்டாம் அதுதான் உண்மை

சரிடா அப்படியே இருக்கட்டும். நீ சொன்ன சரி நாங்க ரெண்டு பேரு ஆத்துல இருக்கோமே எங்களாண்ட இது மாதிரி வைக்கலாம் னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள் னுட்டு ஒரு வார்த்த கேட்டயாடா?”

அது மிருதுளாவோட நகை அத லாக்கர்ல வைக்கறதுக்கு உங்கள்ட்ட ஏன் கேட்கனும்? மிருதுளாட்ட தான் கேட்கனும் அதுதான் கேட்டேன். அவளும் சரினுட்டா. இதுல இப்போ உனக்கென்ன ப்ராப்ளம்?”

என்ன ப்ராப்ளமாமே நன்னாருக்குடா நன்னாருக்கு நீ பேசறது ரொம்ப நன்னாருக்கு. எல்லாத்துக்கும் இவதான் இவளேதான் காரணம். பெரியவானுட்டு ஒரு மரியாத இல்லை அவாள்ட்ட சொல்லிட்டு எதாருந்தாலும் செய்வோம்னு இல்ல எல்லாம் அவ இஷ்டம் இல்லையா!!!

அத தான் மிருது இப்போ சொன்னாளே பின்ன என்ன. நாங்க சொல்லாம போயிட்டு வந்தா நீ சொல்லறா மாதிரி கூட வச்சுக்கலாம் ஆனா அவ தான் இப்போ கீழே வந்ததும் சொன்னாலே

எப்போ சொன்னா? எப்போடா சொன்னா? நானா கேட்டதுக்கப்பறம் தானே சொன்னா? என்னமோ தானா ஓடி வந்து சொன்னா மாதிரி சொல்லற

அய்யோ எப்ப சொன்னா என்ன? சொன்னாளா இல்லையா?

என பர்வதத்திற்கும் நவீனுக்கும் பேச்சு முற்றி விடுவதற்குள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி மிருதுளா 

சாரி மா அவர் உங்கள்ட்ட சொல்லிருக்கனும் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள மன்னிச்சுடுங்கோ” 

ஏய் மிருதுளா நாம மன்னிப்பு கேட்குற அளவுக்கு ஒரு தப்புமே பண்ணல தென் வை ஆர் யூ ஆஸ்க்கிங் சாரி?” என்றான் நவீன்

மிருதுளா தடாலென்று சாரி கேட்டதும் அதை எதிர்பார்க்காத பர்வதம் 

சரி சரி ஏதோ இந்த தடவ மன்னிச்சுடரேன் இத தொடராமா பார்த்துக்கோங்கோ.என கூறி உள் ரூமிற்குள் சென்றாள். 

இப்படியாக வெளியே கிளம்பியவர்களிடம் சண்டையிட்டு மன நிம்மதியை குலைத்து விட்டு மன திருப்தியுடன் உள்ளே சென்றாள் பர்வதம். அவள் காலை முதல் மிருதுளா ஏதாவது தன்னை எதிர்த்து பேசுவாள் என்று பலவற்றை முயற்சித்து  நடக்காததால் சற்று வருத்தமாகவும் இருந்தாள். பர்வதத்திற்கு என்னதான் ஒரு பிரச்சினையை கிளப்பின திருப்தி இருந்தாலும் அவள் எதிர்பார்த்தது மிருதுளாவை சீண்டினால் அவள் திருப்பி பேசுவாள் அதை வைத்து ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கலாம் என்று ஆனால் மிருதுளாவின் மௌனம் அவளை ஏமாற்றமடையச் செய்து புஸ்ஸுவானமாக்கியது.  

இப்படி வம்புக்கென்றே திட்டம் தீட்டும் பர்வதத்துடன் மீதமிருக்கும் ஒரு வாரம் காந்தி நகர் செல்லும் வரை என்னவெல்லாம் நம்ம மிருதுளா எதிர்கொள்ள வேண்டிருக்கப்போகிறதோ? பொறுமையை இழக்க நேரிடுமா? அதைப்பற்றி வரும் செவ்வாய் தெரிந்துகொள்ளலாம். இப்போ நம்ம நவீனும் மிருதுளாவும்  நிம்மதியாக வெளியே சென்று வரட்டும். 

தொடரும்…..

 

 

 

திருமணம் முடிந்த மறுநாள் அனைவரும் மண்டபத்தைக் காலி செய்ய வேண்டியிருந்ததால் கிளம்பிக்கொண்டிருந்தனர். அன்று காலை ஒன்பது மணிக்கு டைரெக்ட்டாக சாப்பாடு பரிமாறப்பட்டது. கட்டு சாத கூடைகள், அங்குமணி சீர்கள், சீர் பக்ஷ்ணங்கள் என திருமண காண்ட்ராக்ட் காரர்கள் அனைத்தையும் பக்காவாக பேக் செய்து மண்டப மேடை அருகே வைத்து அம்புஜத்திடம்…

மாமி எல்லாம் ரெடி நீங்க ஆர்டர் கொடுத்த அனைத்தும் தயார். ஒரு தடவ சரி பார்த்துக்கோங்கோ. 7 சுத்து முறுக்கு , முத்துச்சரம், அதிரசம், மைசூர்பாக், லட்டு எல்லாத்துலயும் 101 மாப்பிள்ளை ஆத்துக்கும் 51 உங்க ஆத்துக்கும் னு தனித்தனியா பேக் பண்ணிருக்கோம். மஞ்சள் நிற டப்பாக்கள் எல்லாம் மாப்பிள்ளை ஆத்துக்கு பச்சை நிற டப்பா எல்லாம் பொன்னாத்துக்கு. அங்குமணி சீர் பேக் அந்த ரெண்டு பெரிய பிளாஸ்டிக் ஃபாக்ஸ் ல இருக்கு. கட்டு சாதக்கூடை  இதோ இந்த அஞ்சு ஆரஞ்சு பக்கெட்டில் இருக்கே இது மாப்பிள்ளை ஆத்துக்கு அதே மாதிரி அஞ்சு பச்சை பக்கெட்டில் இருக்கறது உங்களுக்கு. அதுல பொடி தடவிய இட்டிலி, புளியோதரை, தயிர் சாதம், ஊறுகாய் னு அஞ்சு ஐட்டம் பேக் செய்திருக்கோம். எல்லாம் ஓகே வா மாமி?” 

ரொம்ப சந்தோஷம் எல்லாம் சூப்பரா நடத்திக்கொடுத்தேள். தாங்க்ஸ்

பின் அம்புஜம் பர்வதத்தை அழைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சாமான்களையும் காண்பித்து எடுத்து வேனில் வைக்க சொல்லலாமா என்று கேட்க பர்வதம் சரி என்று தலை அசைக்க அனைத்தும் நவீன் வீட்டார் வேனில் ஏற்றப்பட்டது. பாக்கி டப்பாக்கள் பெண்வீட்டார் வேனில் ஏற்றினார்கள்.

 இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தது. 

கட்டு சாத கூடை என்பது மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திலிருந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அன்று மத்திய உணவை சமைத்து உண்ண வேண்டிய கஷ்ட்டத்தை குறைப்பதற்காக ஏற்படுத்துப்பட்டது. அங்குமணி சீர் என்பது புது மண தம்பதியினர் புது வாழ்க்கை ஆரம்பிக்க ஒரு மாதத்திற்கு வேண்டிய அனைத்து மளிகை சாமான்களும் பெண்ணின் பெற்றோர் வழங்குவது. 

ராமானுஜம் பணம் செட்டில்மென்ட் செய்துக்கொண்டிருந்தார். வேனு அனைத்து சீர் பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைத்ததை எல்லாம் எடுத்து  அட்டைப்பெட்டிகளில் மறுபடியும் அடுக்கி அதை நவீன் வீட்டார் வேனில் வைத்தான். அதோடு தனது அக்காவின் 4 சூட்கேஸ்களையும் ஏற்றி வைத்தான். பின் அவர்களின் சூட்கேஸ்களை அவர்கள் வண்டியில் வைத்தான். இப்படி ஒவ்வொரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நவீனும் மிருதுளாவும் மண்டபத்தின் நடுவில் சொந்த பந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அனைத்தும் பேக் செய்து அவரவர் வண்டியில் ஏற்றப்பட்ட பின் எல்லாரையும் ஒன்றாக அமரச் செய்து அனைவருக்கும் திருஷ்டி பூசணிக்காய் சுற்றினார்கள் மண்டபத்துக்காரர்கள். 

எல்லாம் சுபமாக நிறைவேறியது என்ற திருப்தியில் அவரவர் வண்டியில் ஏறி மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். அங்கு அம்பிகா உள்ளிருந்து ஆரத்தி தட்டு எடுத்து வந்து புது தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள். நவீனும் மிருதுளாவும் உள்ளே சென்றனர். பின் அனைவருமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மிருதுளாவின் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் நவீனிடமும் நவீன் வீட்டாரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மிருதுளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சமத்தா பொறுமையா இருக்கனும் என அம்புஜம் கூற மிருதுளா கண்களில் கண்ணீர் பெருக அதை டக்கென்று துடைத்துக்கொண்டாள். 

அனைவரும் சென்றபின் மிருதுளாவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒன்றுமே புரியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து பர்வதம் 

என்ன சும்மா நின்னுண்டிருக்க போய் டிரஸை மாத்திட்டு வா” 

என்று சொல்ல உடனே மேலே மாடிக்குச்சென்று பட்டுப்புடவையை கழற்றிவிட்டு ஒரு சல்வாரை போட்டுக்கொண்டு கீழே வந்தவளைப் பார்த்து பர்வதம் ..

இது என்ன இப்படி வந்திருக்க இந்த மாதிரி எல்லாம் டிரஸ் போட்டுண்டா அப்பாவுக்கு பிடிக்காது சத்தம் போடுவார். போ ..போய் ..ஒரு புடவையை கட்டிண்டு வா.என கூற

மிருதுளாவும் மறுபடியும் போய் புடைவையை கட்டிக்கொண்டு கழற்றி போட்ட பட்டுப்புடவையையும் சல்வாரையும் மடித்துக்கொண்டிருக்கையிலே கீழிருந்து பர்வதம் சத்தமாக அக்கம் பக்கத்தினருக்கு கேட்கும்படி

ஏய் மிருதுளா என்ன இவ்வளவு நேரமா மாடில பண்ணர? ஒரு புடவை மாற்ற தானே போன அதுக்கு இவ்வளவு நேரமா. சீக்கிரம் கீழே வாஎன்றாள்

மிருதுளாவும் கீழே இறங்கி வந்தாள். இதை அனைத்தையும் பார்த்த வண்ணம் இருந்தனர் ஈஸ்வரன் நவீன் மற்றும் அவன் தம்பிகள். ஒருவர் கூட ஏன் அவ்வாறு பர்வதம் கத்தி கூப்பிட்டாள் என அவளை கேட்கவில்லை. அனைவரும் மத்திய உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்பொழுது பர்வத்தின் அக்கா ரமணி மிருதுளாவிடம்…

மிருது நீயும் நவீனோடயே உட்கார்ந்துக்கோ நாங்க பார்த்துக்கறோம்என்று சொல்ல அதை கேட்டுக்கொண்டே உடைமாற்ற சென்ற பர்வதம் வந்து.

பரவாயில்லை மிருதுளா பரிமாறுவாள் நீங்க எல்லாரும் உட்காருங்கோஎன்றதும் அம்பிகா குறிக்கிட்டு

அக்கா அவ இப்பதான் நம்ம ஆத்துக்கு வந்திருக்கா பரவாயில்லை அவள் நவீனுடன் சாப்பிட உட்காரட்டும் நான் பரிமாறரேன். நீங்களும் வேனும்னா உட்காருங்கோஎன்று கூறுவதோடு நிற்காமல் மிருதுளாவை பிடித்து அமர வைத்தாள். அனைவரும் கட்டு சாத கூடையில் வந்ததை பலே பேஷ் என்று சாப்பிட்டனர். அனைவரும் மிருதுளாவிடம் அவள் பெற்றோர் சூப்பராக திருமணம் செய்து வைத்தார்கள் என்றும் கட்டு சாத கூடை ஐட்டம்ஸ் வரை எல்லாமுமே நன்றாக ருசிகரமாக இருந்தது எனவும் பாராட்டினர். இதை பிடிக்காத பர்வதம் அம்பிகாவிடம் …

கட்டு சாத கூடை சாப்பாடு பத்தாதோ!! இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம் உங்க அப்பா அம்மா மிருதுளாஎன்றாள் 

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். உடனே ஈஸ்வரன்

என்ன பேசர நீ. இவ்வளோ சாப்பாடு கொடுத்தனுப்பிருக்கா. பத்தாதூங்கறாய். உனக்கு கண்ணுல ஏதாவது கோளாறாஎன்றதும் அனைவரும் அதுதானே என்று கூறி சிரித்தார்கள். பர்வதத்திற்கு கோவம்  தலைக்கேறியது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.

உணவு உண்ட பின் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். நவீன் மிருதுளாவை மாடிக்கு வரும்படி அழைக்க அதைப்பார்த்த பர்வதம் மிருதுளாவிடம் …

சாயந்தரம் நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போய் மாலை சாத்தனும் அதனால நீ இங்கயே இப்படி படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுஎன்றதும் அவளருகே மிருதுளா படுத்ததும் நன்றாக அசந்து தூங்கிப்போனாள். 

மிருதுளாவிற்கு அப்பொழுதுதான் கண் மூடியதுபோல இருந்தது ஆனால் மணி நாலரை ஆனது அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். எழுந்ததும் பர்வதம் ..

சீக்கிரம் ஆகட்டும் இப்படியா தூங்குவ!!

சாரி மா இரண்டு நாளா சரியா தூங்கலையா அதுதான் கொஞ்சம் அசந்துட்டேன்என்றாள் மிருதுளா

சரி சரி போய் பட்டுப்புடவை கட்டிண்டு வா. ” 

அனைவரும் கோவிலுக்கு சென்றனர். நவீன் மிருதுளா பெயர்களுக்கு அர்ச்சனை செய்தனர் பின் பர்வதம் மிருதுளாவிற்கு கோவிலைச் சுற்றி காண்பிப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றாள். ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். அப்போது பர்வதம் ஏதோ நவகிரகத்தை வலம் வந்துக்கொண்டிருந்த ஒரு மாமியை காட்டி…

மிருதுளா அந்த மாமிக்கு மூணு பொண்ணுகள்

. அவாளுக்கு நவீனை அவா ரெண்டாவது பொன்னுக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டா தெரியுமா அதுவும் இல்லாம அவா ஆத்த பொன்னுகள் எல்லாரும் சிலிம்மா வெள்ள வெளேர்னு இருப்பா. ஹும் …என்ன பண்ண நவீன் என்னடான்னா உன்ன தான் கட்டிப்பேனுட்டான். சரி வாஎன்று அலுத்துக்கொண்டாள். 

இதைக்கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது ஆனால் தன் தாயின் அறிவுரை அவள் காதில் ஒலித்தது. ஆகையால் அமைதியாக ஒன்றும் கூறாமல் பர்வததின் பின் சென்றாள்.  நவீனின் சொந்தக்காரர்கள் அனைவரும் அங்கிருந்தே விடைபெற நவீன் குடும்பத்தினர் மட்டும் கோவிலில் இருந்து வீடு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் மீண்டும் உடைகளை மாற்றினர். மிருதுளாவும் பட்டுப்புடவையை மாற்றி ஒரு சாதாரணப் புடவையை கட்டிக்கொண்டு வேகமாக கீழே வந்தாள். 

அவள் வந்ததும் பர்வதம் நவீனை அவன் நண்பன் அழைத்ததாக கூறி அவனை சென்று பார்த்துவரச்சொன்னாள்.  நவீன் மிருதுளாவையும் கூட்டிச்சென்று வருவதாக கூற…

அவ என்னத்துக்கு இங்க கொஞ்சம் அவளுக்கு வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வாஎன நவீனை வெளிய அனுப்பியதும் மிருதுளாவைப்பார்த்து

இன்னைக்கு நைட்டுக்கு சாதம் வச்சுட்டேன் நீ ஒரு ரசம் பண்ணி அப்படியே உருளைக்கிழங்கு பொரியல் பண்ணி வை இதோ நான் வரேன்என்று கூறி வாசலுக்குச் சென்று அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களுடன் அரட்டையில் மூழ்கினாள். 

முதல் நாளே சமையல் கட்டில் எங்கே எது இருக்கிறது என்று கூட தெரியாது உள்ளே நுழைந்தாள் மிருதுளா. மெதுவாக ஒவ்வொரு டப்பாவாக திறந்து திறந்து பார்த்து எதுஎது எங்கெங்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொண்டபின் சமையலில் இறங்கினாள். மாமியார் வைத்துவிட்டுப்போன குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து மேடையின் ஓரமாக வைத்துவிட்டு ரசம் செய்ய ஆரம்பித்தாள். ரசத்துக்கு வேண்டியதை எல்லாம் போட்டு சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு உருளைக்கிழங்கை நறுக்க தொடங்கினாள் அப்பொழுது கவின் வந்து 

மன்னி எனக்கு உருளை ரொம்ப ரோஸ்ட் ஆனா பிடிக்காது ஸோ பார்த்துப்பண்ணுங்கோஎன்றான்

அவன் பின்னாடியே ஈஸ்வரன் வந்துநீ நல்லா உருளை ரோஸ்ட் பண்ணுமா எனக்கு அது தான் பிடிக்கும்என்றார். 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கேட்கவும் மிருதுளாவிற்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது ஆனாலும் அவள் இரண்டும் செய்தாள். ரசம், உருளை பொரியல், உருளை ரோஸ்ட், அப்பளம் என அனைத்தையும் ஒரே சட்டி உபயோகித்து அறைமணி நேரத்தில் செய்து மேடையின் மூலையில் மூடி வைத்துவிட்டு அடுப்படியை சமைத்தது போலவே தெரியாதவாறு சுத்தம் செய்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து ஈஸ்வரன் டீவியில் பார்த்துக்கொண்டிருந்த நியூஸை பார்க்கலானாள். ஒரு மணிநேரம் கழித்து நவீன் வீட்டினுள்என்ன இன்னைக்கு நம்ம ஆத்துல ரசம் வாசம் வாசல் வரைக்கும் வீசறது. என்ன அப்படி செபெஷல் ரசம் பண்ணிருக்கா அம்மாஎன்று கூறிக்கொண்டே நுழைந்தான்.  பின்னாடியே கேட்டுக்கொண்டே வந்த பர்வதம்.எனக்கு ஒன்னும் அப்படி வாசம் வரலையேஎன சொல்லிக்கொண்டே நுழைந்தாள். 

மாலை உணவை மிருதுளாதான் செய்தாள் என ஈஸ்வரன் நவீனிடம் சொல்ல பர்வதம் ஈஸ்வரனை முறைத்தாள்.  அனைவரும் இரவு உணவருந்த அமர்ந்தனர். உணவு மிக அருமையாக இருந்ததை அனைவரும் பாராட்டினர் ஆனால் கவின் 

இந்த உருளையை இன்னும் கொஞ்சம் கூட சாஃப்ட்டா செய்திருக்கலாம்என்றான்

ரசத்துல உப்பு ஜாஸ்தியா இருக்கு எல்லாரும் எப்படி சாப்படரேங்கள்என்றாள் பர்வதம்

உடனே பதற்றம் ஆனா மிருதுளா ..

அச்சச்சோ சாரி மா.என்றதும் நவீன் குறுக்கிட்டு

நோ நோ இட் ஈஸ் சூப்பர். அம்மா உனக்கு மட்டும் எப்படிமா உப்பு ஜாஸ்தியா இருக்கும்?” என்றதும் மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது.

அனைவரும் சாப்பிட்ட பின்னர் அனைத்துப்பாத்திரங்களையும் தேய்த்து வைத்தாள் மிருதுளா‌. அனைவரும் பாயை விரித்து படுக்கலானார்கள் வேலைகளை முடித்ததும் மாடிக்கு செல்லலாமா இல்லை பர்வதம் ஏதாவது சொல்லி கூப்பிடுவாளா என்ற எண்ணத்தில் தயங்கி ஹாலில் நின்றிருந்தாள். நவீனாவது அவளை கூப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவன் பாட்டுக்கு மாடிக்கு சென்றுவிட்டான். கீழே இவர்களும் அவரவர்கள் உறங்க ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தனர். மிருதுளா எனும் ஒரு பெண் அங்கு இருந்ததையே கண்டுக்கொள்ளாதது போல அனைவரும் நடந்துக்கொண்டார்கள். சிறிது நேரம் நின்றுப்பார்த்த மிருதுளா மெல்ல அங்கிருந்து நகர்ந்து மாடிக்கு போக முதல் படியில் காலை வைத்ததும் பர்வதம் அழைத்தாள்…மிருதுளா மனதிற்குள்

இவ்வளவு நேரம் அங்க தான் இருந்தேன் அப்பெல்லாம் ஏதோ நான் இருப்பதே கண்ணுக்கு தெரியாதது போல இருந்துட்டு கரெட்டா கூபிடறா ஹும்…என்று நினைத்துக்கொண்டேவந்துட்டேன் மாஎன பர்வதம் முன் நின்றாள் 

நாளைக்கு நவீன் பெரியப்பா ராசாமணி ஆத்துக்கு விருந்துக்கு போகனும் அதனால நல்ல பட்டுப்புடவையா கட்டிண்டு போ சரியா.

சரி மாஎன்றாள் மிருதுளா

சரி சரி போய் தூங்கு காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கனும் இல்லாட்டி அப்பாவுக்கு பிடிக்காது அப்பறம் சத்தம் போடுவார் சொல்லிட்டேன்என கூறி போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டாள்.

அப்பாட என பெருமூச்சு விட்டுக்கொண்டே மாடிக்கு வேகமாக சென்றாள் மிருதுளா. 

ஒரு நாளில் இவ்வளவு பதற்றம் அடைந்த நம்ம மிருதுளா இனி ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போகிறாள் என்பதை வரும் வாரங்களில் தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்…..

இருபத்தி எட்டாம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் ராமானுஜம் எழுந்து அனைவரையும் எழுப்பினார். அம்புஜம், வேனு, மிருதுளா, ஈஸ்வரன், பர்வதம், நவீன் எழுந்தார்கள். மடமடவென குளித்து அனைவரும் தயார் ஆனார்கள். அன்று அதிகாலை பெண்வீட்டாருக்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் திருமணத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நவீன் வீட்டார் வாத்தியார்கள் வந்ததும் விரதத்தில் மும்முரமானார்கள். ஃபோட்டோ கிராஃபர்கள் கேமராவுடன் அங்கும் இங்குமாக க்ளிக் செய்ய தொடங்கினர். 

 விரதம் முடிவதற்குள் அனைத்து சொந்த பந்தங்களும் எழுந்து குளித்து பெண்கள் பட்டுப்புடவை உடுத்தி நகைகள் எல்லாம் அணிந்து தலைநிறைய பூ வைத்து கொண்டார்கள். ஆண்கள் அனைவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்து சபையில் முன் வரிசையில் அமர்ந்தார்கள். இளவட்டங்கள் புத்தாடை உடுத்தி அந்த கூட்டத்தில் அங்கும் இங்குமாக நண்பர்களுடன் நடந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பொடிசுகள் அனைவரையும் அழகாக டிரஸ் பண்ணி மண்டபத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே விளையாட அவர்கள் அன்னையர் சொல்ல அங்கும் இங்குமாக ஓடி ஆடி டேய் சதீஷ் என்ன புடி பார்ப்போம்..ஏய் ஆஷா நீ என்ன கண்டுபிடி என குட்டீஸ் லூட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். 

நாதஸ்வரமும், தவிலும், மிருதங்கமும் இன்னிசையை தந்தன.

வயதானவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அந்த காலத்துல ஆத்துலேயே தான் கல்யாணம் பண்ணினா என்று கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு அனைத்து சம்பிரதாயங்களையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

நவீன் வீட்டார் விரதம் முடிந்ததும் காசி யாத்திரைக்கு தயாராகினர். காசி யாத்திரைக்கு வேண்டிய குடை, கைவிசிறிகொஞ்சம் பருப்பு, அரிசி முடிந்த சிறு மூட்டை என அனைத்துப்பொருட்களும் மாப்பிள்ளை ரூமில் வைக்கப்பட்டிருந்தது. நவீனின் மாமா நவீனுக்கு பஞ்சகஜம் கட்டி, மாலையிட்டு அத்தை வசுந்தரா நவீனின் கண்களுக்கு மையிட்டாள். நவீனுடன் அனைவரும் மண்டப வாசலுக்கு வந்தனர். 

காசி யாத்திரை என்றால் என்ன? ஏன் இதை இவர்கள் திருமணங்களில் வைக்கிறார்கள் ? அப்பொழுது சொல்லும் மந்திரங்களின் பொருள் என்னமாப்பிள்ளை தனக்கு திருமண வாழ்வில் இஷ்டமில்லை என்றும் காசிக்கு சென்று வேத பாடங்களை கற்று சன்யாசம் ஏற்க போவதாகவும் முடிவெடுத்து அவர் செல்லும்போது மணமகளின் தந்தை அவரைத் தடுத்து திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்களை அவருக்கு எடுத்துறைப்பதோடு மட்டுமல்லாமல் தனது பெண்ணை அவருக்கே மணமுடித்து தருவதாகவும் வாக்களித்து தனது மகனை மாப்பிள்ளைக்கு குடைப்பிடிக்கச் சொல்லி இருவருமாக மணமகனை திருப்பி மண்டபத்திற்குள் அழைத்து வருவதே இந்த காசி யாத்திரை சடங்கின் விளக்கமாகும். 

இவ்வாறு அவர்கள் திரும்பியதும் மணமகளை கீழே வரச்சொல்லி  இருவர் கழுத்திலும் மூன்று மாலைகள் போட்டு மூன்று முறை மாற்றிக்கொள்ள சொல்வார்கள். இதை சற்று விளையாட்டாக மணமகன் மணமகள் இருவரின் தாய்மாமன்களும் அவர்களை தூக்கிக்கொள்ள மாலைகளை மாற்றிக்கொள்ள சொல்வார்கள் ஆனால் இருவரையும் உயர்த்தித் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். சிறிது நேரம் விளையாடிய பின்னர் பெண்ணின் தந்தை கூறியது போலவே இருவர் கைகளிலும் கல்யாண மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அவர்களும் மாலையை மாற்றிக்கொண்டு தனது மகளின் கரங்களை பிடித்து மணமகனின் கரங்களில் கொடுத்து இனி என் மகளுக்கு எல்லாமும் நீங்கள்தான் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுவார். இதுவே கண்ணிகாதானம் ஆகும்.

மணமகன் மணமகள் கரங்களைப் பிடித்தவாறே இருவரையும் அலங்காரம் செய்த ஊஞ்சலில் அமரச்செய்து ஊஞ்சல் பாடல்களை பெண்கள் அனைவரும் பாட, சுமங்கலிகள் அவர்களுக்கு பச்சப்பொடி சுற்ற பாலும் பழமும் மணமக்கள் கைகளில் கொடுத்து பின் மாங்கல்ய தாரணத்திற்கு மண்டபத்திற்குள் அழைத்துச்சென்றனர். 

இந்த ஊஞ்சல் வழக்கத்தில் உள்ள சூட்சுமம் என்னவென்றால்…திருமண வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடுவது போல பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும் அதை இருவருமாக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இன்று கரங்கள் இணைந்து இருப்பது போலவே இருந்து சரிசெய்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். 

அனைவரும் ஊஞ்சல் முடிந்து மண்டபத்திற்குள் வந்தனர். இருவீட்டாரும் அழைப்பு விடுத்திருந்த அனைத்து சொந்தங்களும் நண்பர்களும் வந்திருந்து மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து வழிந்தனர். இரண்டு வீடுகளிலும் இது முதல் கல்யாணம் ஆகையால் அன்று விடுமுறை இல்லாத போதும் அழைத்த அனைவரும்  வந்திருந்தனர். கல்யாண மேடையில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இருந்தனர். இருவீட்டாரின் சில முக்கிய பெரியவர்களும் இருந்தனர்.

வேதங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க நவீன் மிருதுளாவிடம் கல்யாண கூரை புடவையைக்கொடுத்து கட்டிவரச்சொல்ல மிருதுளாவும் உள்ளே புடவை மாற்ற சென்றாள். அப்பொழுது மேடையில் மாப்பிள்ளைக்கு ராமானுஜமும் அம்புஜமும் பாத பூஜை செய்தனர். 

மிருதுளாவுடன் அனைத்து நவீன் வீட்டார் மாமிகளும் உள்ளே சென்று ஒன்பது கஜப்புடவையை கட்டிவிட்டு (அது சரியாகவும் கட்டவில்லை) மேடைக்கு அழைத்துவந்தனர். பின் ராமானுஜம் மடியில் அமர்ந்தாள் மிருதுளா. பர்வதத்தின் தம்பி சும்மா இல்லாமல்அப்பா பாவம் கொஞ்சம் பார்த்து உட்காருமா மிருதுளாஎன்று கூறி கெக்க புக்கே என சிரிக்க பெண் வீட்டார்களுக்கும் மிருதுளாவிற்கும் துளியும் பிடிக்கவில்லை. அவருக்கு யாரும் அந்த நேரத்தில் பதில் குடுக்கவும் போகவில்லை. 

எல்லோரும் மாங்கல்ய தாரணத்திற்காக காத்திருந்தனர். மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க நவீன் மிருதுளா கழுத்தில் தாலியின் இரண்டு முடிச்சுப் போட மூன்றாவது முடிச்சை அவனின் பெரியப்பா மகள் நாத்தனார் முடிச்சுப்போட மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்து மணமக்கள் மேல் பூக்களையும் அட்சதையும்‌ போட்டு வாழ்த்த நமது நவீன் மிருதுளா திருமணம் இனிதே நடந்தது. அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் கண்கள் களங்கியது. இருவீட்டாரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆத்துக்கு மாட்டுப்பொன் வந்தாச்சா? உங்க ஆத்துக்கு மாப்பிள்ளை வந்தாச்சா என மகிழ்ச்சியாக விசாரித்துக்கொண்டனர். அனைவருக்கும் ஜூஸ் பரிமாறப்பட்டது. நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ஜூஸ் கொடுககப்பட்டது. 

மாங்கல்ய தாரணம் ஆனதும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மற்ற சடங்குகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது அப்பொழுது மேடையில் நவீன், மிருதுளா மட்டுமே இருந்தனர். அனைத்து சொந்தங்களும் மேடைவிட்டு கீழே இறங்கினர். நவீன் மற்றும்  மிருதுளாவின் பெற்றோர்கள் வந்த அனைவரையும் வரவேற்ப்பதில் மும்முரமானார்கள்.  திருமணத்திற்கு வந்திருந்த பெண்வீட்டார் வலதுபுறமும் மாப்பிள்ளை வீட்டார் இடதுபுறமும் என இரு வரிசையில் பலர் பரிசுப்பொருட்களுடனும், பணத்துடனும் மொய் செய்வதற்காக பொறுமையாக நின்று அவர்களுக்கு கொடுத்து வாழ்த்தி கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்க்காக கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றனர். 

காலைமுதல் ஒன்றுமே சாப்பிடாமல் வெரும் பாலும் பழமும் ஜூஸும் மட்டுமே அருந்திய நவீனுக்கும் மிருதுளாவிக்கும்

தனியாக ஒரு டேபிளில் இரண்டு கோலமிட்டு அதன் மேல் இரண்டு வாழை இலை போட்டு அதில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சொந்தங்கள் நண்பர்கள் அவர்களை சுற்றிக்கொண்டு இருவரையும் கலாயித்துக் கொண்டிருந்தனர். இருவரையும் ஒருவரொக்கொருவர் ஊட்டிவிடும் படி அனைவரும் சொல்ல நவீன் முதலில் மிருதுளாவிற்கு லட்டு ஊட்டிவிட்டான் பின் மிருதுளா நவீனுக்கு ஜாங்கிரி ஊட்டிவிட அனைவரும் கைத்தட்டினார்கள். மத்திய கல்யாண சாப்பாடு ஆன பின் மண்டபம் சற்று காலியானது ஆம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர் மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். 

நவீனும், மிருதுளாவும் அவரவர் ரூமுக்குள் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டனர். கிருஹப்ரவேசம் என பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் அறைக்கும் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டார் அறைக்கும் சென்று மீண்டும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பின் வெற்றிலைப்பாக்கு, பூ, பழம், ரவிக்கைத்துணி என சுமங்கலிகளுக்கு இருவீட்டிலும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் முடிந்ததும் அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அப்பொழுது அம்புஜம் ரூம் கதவு தட்டப்பட்டது.யாரதுஎன கேட்டுக்கொண்டே கதவை திறந்தாள். வெளியே பர்வதம் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து 

வாங்கோ மாமி. உள்ள வாங்கோஎன்றழைக்க அதற்கு பர்வதம் சத்தமாக 

பருப்பு தேங்காய் ரெண்டிருக்கனும் ஆனா ஒன்னு தான் எங்க ரூமுக்கு வந்திருக்குஎன்று கேட்க

இல்லையே மேடையிலிருந்த எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்கச்சொன்னேன். அவாளும் வச்சானுட்டு சொன்னாலே. இருங்கோ பார்க்கறேன்” 

என அம்புஜம் மேடைக்குச்சென்று பார்த்தாள் அங்கு மேடையின் ஓரமாக ஒரு செட் பருப்பு தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து பர்வதம் கையில் கொடுத்து…

சாரி மாமி அவா மேடை ஓரமா வச்சிருக்கா. கவணிக்கலை போல. இதாங்கோஎன்று கூறி கொடுத்தாள் 

அதை பர்வதம் வாங்கிக்கொண்டாள். இதை காரணமாக வைத்து வம்பிழுக்கப்பார்த்து வடிவேலு மாதிரி வடபோச்சே என்ற ரியாக்ஷனுடன் அங்கிருந்து சென்றாள்.

மாலை நாலு  மணி ஆனதும் அனைவருக்கும் காபி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. மிருதுளா நலங்குக்கு ரெடியானாள். ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து  மிருதுளா நவீன் ரூமிற்கு சென்று நலங்கிற்கு அழைத்தாள் அப்பொழுது நவீனின் சித்திகள்

 “ஒரு பாட்டு பாடினா தான் எங்க நவீன் வருவான்என்று சொல்ல எந்த வித தயக்கமுமின்றி மிருதுளாவும் பாட்டு பாடினாள்.சூப்பரா பாடர மிருதுஎன்றனர்.

நெருங்கிய சொந்தகளும் நண்பர்களும் ஒன்றாக மண்டபத்தின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் இருவீட்டாரின் பெண்கள் வட்டமாக அமர்ந்தனர். ஆண்கள் அனைவரும் அவர்களைச்சுற்றி நாற்காலியில் அமர்ந்தார்கள். நடுவிலே எதிர் எதிராக நவீனும் மிருதுளாவும் இரண்டு அணிகளோடு அமர்ந்திருந்தனர். அழகிய பாட்டுடன் நலங்கு ஆரம்பமானது. அப்பளம் உடைத்தல், தேங்காய் உருட்டுதல், அரிசி தறேன் பருப்பு தருவியா என்று கேலிச் செய்தல், அந்தாக்ஷரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு என்று ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக நடந்தேறியது நம்ம மிருதுளா நவீன் நலங்கு. இருவரையும் ஒன்றாக அமரச்செய்து ஆரத்தி எடுத்தனர். 

அந்த காலத்தில் பெரும்பாலும் அரேஞ்ஜ் மேரேஜாக தான் இருந்தது. அத்தகைய கல்யாணத்தில் மணமகனும் மணமகளும் அவ்வளவாக ஒருவருக்கொருவர் பரிட்சயமாகாதவர்கள் என்பதால் இப்படி நலங்கு என சில விளையாட்டுகளை வைத்து அவர்களுக்குள் (ஆங்கிலத்தில் இதை – the ceremony where the bride and groom break the ice and get along என்பார்கள்)  நெருக்கத்தையும், ஒற்றுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஏற்படுத்தினார்கள் நமது முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு இது ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்றால் தவறில்லை என நினைக்கிறேன். 

அனைவரும் இரவு சாப்பாடு முடிந்ததும் நவீனையும், மிருதுளாவையும் சாந்தி முஹூர்த்த ரூமிற்குள் அனுப்பி விட்டு வெளியே கும்மிப்பாட்டு பாடி கும்மியடித்து எல்லோரும் அவரவர் ரூமில் உறங்கச் சென்றனர். சீட்டுக்கச்சேரி கும்பல் மீண்டும் சீட்டாட துவங்கியது. அம்புஜம் காலை முதல் அங்கும் இங்குமாக ஓடியாடியதில் களைத்திருந்தாலும் மிருதுளாவின் பெட்டியை அடுக்கி அவளது புடவைகள் நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தனியாக மற்றொரு பெட்டியில் அடுக்கி மறுநாள் மண்டபத்தை காலி செய்ய வேண்டுமே என அவர்கள் ரூமில் ராமானுஜம், வேனு எல்லாரும் அவிழ்த்துப்போட்ட துணிகளை மடித்து அவரவர் சூட்கேசில் போட்டு மறுநாள் போட்டுக்கொள்ள வேண்டி டிரெஸ்ஸை மட்டும் நால்வருக்கும் எடுத்து வைத்து விட்டு எல்லாவற்றையும் பேக் செய்து அவள் உறங்கும் போது மணி இரண்டரை ஆனது. அங்கே பர்வதமும் இதே போல அவர்கள் ரூமிலிருந்த துணிகளை எல்லாம் அவரவர் சூட்கேசில் போட்டு பேக் செய்தாள்.

இவ்வாறு பலர் தடுக்க எண்ணியும் அவைகளை எல்லாம் சாம்பலாக்கி நவீனுடன் மிருதுளாவை கைகோர்க்க வைத்த அம்புஜம் நம்பும் அந்த அம்பாளின் அடுத்த விளையாட்டு தான் என்னஎதார்த்தமான, சூது வாது தெரியாத வெகுளிபெண்ணான நம்ம மிருதுளா துளியும் உண்மை இல்லாத, சூது வாது நிறைந்த குடும்பத்தில் அதுவும் ஆகாத மருமகளாக நுழைந்திருக்கிறாள். என்னவெல்லாம் அவளுக்கு காத்திருக்கிறதோ? நவீன் அவளுக்கு பக்கத்துணையாக இருப்பானாஇப்படி இருக்கும் மிருதுளா மாறுவாளா? என்பதைப் பற்றி வரும் நாட்களில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

எனது அழைப்பை ஏற்று மிருதுளா நவீன் திருமணத்திற்கு வருகைதந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரும்….

இருபத்தி ஏழாம் தேதி காலை சீதா கல்யாண வைபோகமே ராம கல்யாண வைபோகமே என்ற பாடலை வ்ரதம் மேற்கொண்ட கல்யாண பெண்ணான நமது மிருதுளாவிற்கு ஆரத்தி எடுத்துக்கொண்டே பாடினர் பரிமளமும், மேகலாவும். பின் மிருதுளாவின் உறவுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக காலை டிபன் அருந்தினார்கள். 

வ்ரதம் என்பது திருமணத்தின் முன்தினம்  மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஏற்றுக்கொண்டு  கைகளில் மஞ்சள் தடவிய கயிறு கட்டி பிரம்மச்சரியத்தை அன்றுடன் முடித்து கிரஹஸ்த்தர்களாக மாறுவதே இந்த சடங்கின் அர்த்தம். இந்த சடங்கு முடிந்தால் மணப்பெண் மணமகன் இருவரும் வீட்டை விட்டு திருமணம் முடியும் வரை வெளியே செல்லக்கூடாது ஆகையால்தான் பெரும்பாலும் வ்ரதம் மண்டபத்தில் திருமணத்திற்கு முன்தினம் செய்வது வழக்கத்தில் உள்ளது. சில நேரம் மாப்பிள்ளை திருமணத்தினத்தன்று விடியற்காலையிலும் மேற்க்கொள்வர்.

இருபத்தி ஏழாம் தேதி காலை உணவு ஆன பின் சிலர் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். ஒரு கூட்டம் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். ஒரு சிலர் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டும் பழங்கதைகளை அசைப்போட்டுக்கொண்டும் வட்டமாக அமர்ந்திருந்தனர். மிருதுளாவும் அம்புஜமும் அவர்கள் அறையில் கொண்டுவந்த பெட்டிகள் நகைகள் எல்லாவற்றையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். வேனுவும் ராமானுஜமும் சீர் ஜாமான்களை ராமனுஜம் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்துக்கொடுக்க அவற்றை அழகாக வரிசையாக அடுக்கி வைத்தான் வேனு. 

அம்புஜத்திடம் அவள் தங்கையின் கணவனின் ஒன்னு விட்ட மாமா ..

ஏம்மா அம்புஜம் இப்பத்தான் கேள்விப்பட்டேன் கல்யாண புள்ளான்டான் அவா ஆத்த மூத்தப்புள்ளையாமே!!

ஆமாம் மாமா ஏன் அதுக்கென்ன இப்போ?”

நம்ம மிருதுளாவும் நம்ம ஆத்த மூத்தப்பொன்னு

ஆமாம். சரி

இல்லை மூத்த புள்ளைக்கு மூத்த பொன்னை கல்யாணம் பண்ணப்டாதுனு சொல்லுவா அதுதான் நீ எப்படி ஒத்துண்ட ?”

ஓ அப்படியா எனக்கு அதெல்லாம் தெரியாது மாமா அதுவும் இல்லாம இதை இது வரைக்கும் யாருமே சொல்லலையே!!! இனி ஒன்னும் செய்ய முடியாதே. எல்லாம் அந்த பகவதி பார்த்துப்பள். அவ மேல பாரத்த போட்டுதான் இவ்வளவு ஏற்பாடுகளும் பண்ணிருக்கோம் அதனால எல்லாம் அவள் செயல். சரி மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாம் வர நேரமாச்சு நான் போய் சாப்பாடு எல்லாம் ரெடி ஆயாச்சானு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.

என்று கூறி அங்கிருந்து நேராக மண்டப டைனிங் ஹாலுக்குச்சென்று எல்லாம் தயாராக உள்ளதா என்று விசாரிப்புடன் ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் திருமண கான்ட்ராக்ட் தலைவர்  மாப்பிள்ளைவீட்டார் வந்ததும் சம்பந்தி கையில் கொடுக்க வேண்டிய தெரட்டிப்பாலை ஒரு அழகான டப்பாவிலிட்டு அம்புஜத்திடம் கொடுத்து …

மாமி ஏற்பாடெல்லாம் நன்னாருக்கா. உங்களுக்கு திருப்தியாருக்கா.

இதுவரைக்கும் எல்லாம் நன்னா இருக்கு. மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்ததும் அவாள எல்லாரையும் நன்னா கவனிச்சுக்கோங்கோ. எந்த குற்றமும் குறையும் அவா சொல்லிடப்டாது அது உங்க கையில் தான் இருக்கு“.

கவலைய விடுங்கோ மாமி. ஒரு குறையுமில்லாம பேஷா நடத்திக்கொடுத்திடுவோம் சரி நான் பந்திக்கு எல்லாத்தையும் ரெடி பண்யுடறேன்

டைனிங் ஹால் கீழே உள்ளது. திருமண மண்டபம் டைனிங் ஹாலுக்கு மேலே உள்ளது. அம்புஜம் கீழே எல்லாம் ரெடி என்று திருப்தி ஆனபின் மேலே சென்று மிருதுளாவை புடவை மாற்றி தயாராக சொல்லி தானும் தயார் ஆனாள். 

வேனு வேகமாக மேலே வந்து 

அம்மா அம்மா அவா எல்லாரும் வந்தாச்சு. சீக்கிரம் கதவ தொறந்து வா மா. அப்பா உன்னை கூட்டிண்டு வரச்சொன்னா

என்றதும் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் அம்புஜம். மிருதுளாவை ரூமிலேயே இருக்கச்சொல்லிவிட்டு பெண்வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க கீழே சென்றனர். மாப்பிள்ளை வீட்டு வேன்களும், கார்களும் சர் சர்ரென வந்து நின்றது. அனைவரும் இறங்கி மண்டப வாசலுக்கு சென்றதும் அம்புஜத்தின் மன்னியும், ராமானுஜத்தின் சித்தியுமாக மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தனர். அம்புஜம் தன் கையில் வைத்திருந்த தெரட்டிப்பால் டப்பாவை பர்வதத்திடம் கொடுத்து வரவேற்றாள். வேனு மாப்பிள்ளைக்கு மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு பன்னீர் தெளித்து உள்ளே அழைத்தான். ராமானுஜம் ஈஸ்வரனுடன் கைக்குலுக்கி வாங்கோ என்று அனைவரையும் வரவேற்றார்கள். அனைவரும் வந்ததும் மேலே சென்று அவரவர் ரூமுகளில் பெட்டிகளை வைத்துவிட்டு மிருதுளாவைப்பார்க்காத நவீன் வீட்டார் அவளை காண சென்றனர். மிருதுளா ரூம் கதைவை தள்ளிக்கொண்டே உள்ளே சென்றனர் பர்வதத்தின் டில்லி தங்கைகள் லட்சுமியும், லலிதாவும். மிருதுளாவைப்பார்த்ததும் லட்சுமி..

ஹேய் இவ நம்ம பர்வதம் சொன்னா மாதிரி குண்டெல்லாம் இல்லையே அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கா

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாத மனிதர்கள். இத்தகைக்கு நன்றாக படித்து வேலைக்கு செல்லும் பெண்மணிகளாம். ஒரு பெண்ணை முதன்முதலில் பார்க்கும் போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு மக்குகள் இல்லை..பர்வதம் ஏத்திவிட்டதை அப்படியே கக்கிவிட்டு சங்கடப்படுத்த வந்தவர்கள் போலவே பேசினர். அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருப்பதை மறந்து போனார்கள் அடுத்தவர் பெற்று வளர்த்த பெண்ணை பழிக்கும் ஜோரில். பர்வத்துடன் கூட பிறந்தவர்களாயிற்றே.

சீர் சாமான்கள் அடுக்கிவைத்திருந்த ரூமில் அழகான அலங்கார விளக்குள் ஆன் செய்யப்பட்டிருந்தது. அதில் வேனுவின் கைவனம் ஜொலித்தது. மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வாய் பிளந்த வண்ணம் அனைத்தையும் அவரவர் கண்களாலேயே ஸ்கேன் செய்தனர். ஈஸ்வரனின் அக்காக்கள் சொர்னமும் வரலட்சுமியும் பேசிக்கொண்டனர்….

பர்வதத்திற்கு வந்த சம்பத்திகள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழகா பண்ணிருக்கா..இந்த பர்வதம் வம்பேதும் செய்யாமல் இருந்தால் நல்லாருக்கும்

அதச் சொல்லு சொர்னம் அக்கா. அவளால சும்மா இருக்க முடியாதே ஏதாவது செய்வள். எனக்கு அந்த மிருதுளா பொன்ன நெனைச்சா பாவம்னு தோனறது. நாம அந்த பொன்னுக்காக வேண்டிப்போம். வேறென்ன செய்யறது.

நவீன் வீட்டார் அனைவரும் அவரவர் ரூமில் செட்டில் ஆனதும் ராமானுஜமும் அம்புஜமும் வேனுவும் சென்று அவர்கள் அனைவரையும் மதிய உணவு சாப்பிட அழைப்பு விடுத்தப் போது பர்வதம் அவர்கள் அறைக்குள் வரும்படி சொல்ல இவர்கள் உள்ளே “நாழி ஆகறது சாப்பிட கூட்டிண்டு போக வந்தோம்”  என்று கூறிக்கொண்டே சென்றனர். அப்போது ஒரு நவரத்தின ப்ரேஸ்லெட் ஒன்றை எடுத்து பர்வதம் அவர்களிடம் காண்பித்து…

இது உங்க பொன்னு மிருதுளாவிற்காக என் புள்ள கவின் குவைத்திலிருந்து வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ

அம்புஜம் பார்த்துவிட்டு 

ரொம்ப அழகா இருக்கு மாமி. ஆமாம் எங்க யாரையுமே காணம் நீங்க மட்டும் இருக்கேங்கள்என்று கேட்க அதற்கு பர்வதம்

எல்லாரும் பக்கத்து ரூம்ல இருக்கா. சரி வாங்கோ இத காட்டத்தான் கூப்பிட்டேன். அவாளையும் அழைச்சுண்டு வரேன். நீங்க முன்னாடி போங்கோ

எல்லாருமாக அமர்ந்து முதல் பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பாடு சூப்பர் என்று ரசித்து ருசித்து சாப்பிட்டனர். அடுத்த பந்தியில் மீதமிருந்த நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் உணவருந்த அமர்ந்தனர். அம்புஜம் பங்கஜத்தை அழைத்து மிருதுளாவையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னாள். இது சாப்பிட்டு கை கழுவுவதற்கு எழுந்த நவீன் காதில் விழ அவன் மெதுவாக கை கழுவச்சென்றான். பின் அங்கிருந்தவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருப்பது போல மிருதுளா வரவுக்காக காத்திருந்தான். மிருதுளாவும் பங்கஜமும் வந்தார்கள். உடனே நவீன் ஹாய் மிருதுளா என்றான் அவளும் ஹாய் என்றாள். பங்கஜம் கிண்டலாக…

சரி சரி நாளையிலிருந்து பேசத்தான் போரேள் அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சுக்கோங்கோ ரெண்டு பேரும்

உடனே நவீன்..

ஒரு ஹாய் தானே சொல்லிண்டோம். நீங்க சொல்வதும் சரிதான். நாங்க நாளையிலிருந்தே பேசிக்கறோம். ஓகே வா.என்றதும் பங்கஜம் மீண்டும்

நாளையிலேர்ந்து நீங்களாச்சு உங்க ஆத்துக்காரியாச்சு. அதெல்லாம் சரி நான் ஒன்னு கேள்ளிப்பட்டேன் அதப்பத்தி உங்கள்ளட்ட கேக்களாமா?”

ஓ எஸ் தாராளமா. அப்படி என்ன கேள்விப்பட்டேங்கள் சொல்லுங்கோ நானும் தெரிஞ்சுக்கறேன்

என்ன எங்க மிருதுவ கூட்டிண்டு போகமாட்டேன்னு சொன்னேங்களாமே!! உங்களோட வாழரத்துக்கு தானே கல்யாணம் பண்ணி வைக்கறோம் இங்கேயே விட்டுட்டுப் போறத்துக்கா எங்க அக்காவும் அத்திம்பேரும் இத்தர கஷ்ட்டப்பட்டு உங்களுக்கு மிருதுளாவ கல்யாணம் பண்ணி வைக்கறா?!”

அவளுக்கு தான் ஏதோ பரீட்சை இருக்குனுட்டு ஒரு கன்ஃப்யூஷன் ஆச்சு. நான் அப்படி ஒன்னுமே சொல்லலையே

ஸோ அவள உங்ககூட கூட்டிண்டு போறதுல உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லையா

அஃப்கோர்ஸ் எஸ் எனக்கு நோ இஷூஸ் அட் ஆல். நான் வீடு கூட பார்த்தாச்சு. டிகெட் மட்டும் தான் எடுக்கனும்

ஏன் இன்னும் டிக்கெட் எடுக்கலை?”

இதோ எடுக்க என் பெரியம்மா பையனிட்ட சொல்லிருக்கேன் நாளைக்கு எடுத்துண்டு வருவான்

அப்போ இப்ப வரைக்கும் கூட்டிண்டு போற ஐடியாவே இல்லை ம்ம்ம்ம்… நாளைக்கு டிக்கெட் வந்தாதான் நான் நம்புவேன்

ஓகே ஓகே அப்படியே ஆகட்டும்.

என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் நவீனை அவன் அத்தை மகன் வந்து பர்வதம் அழைத்துவரச்சொன்னதாக  அழைத்தான். பங்கஜமும்…

சாரி உங்கள ரொம்ப நேரம் பிடிச்சுண்டுட்டேன். சரி நீங்க போய் உங்க வேலைகளைப்பாருங்கோ நானும் போய் சாப்பிடட்டும் ஆல்ரெடி மணி இரண்டரை ஆயிடுத்து.

ஓகே பை ஃபார் நௌ

அனைவரும் மத்திய உணவு அருந்திய பின் ஓய்வெடுத்தனர். மிருதுளாவும் அம்புஜமும் சற்று நேரம் படுத்துக்கொண்டனர். சற்று கண் அசந்ததும் …டக் டக் டக் என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள் அம்புஜம். அவர்கள் ரூம் வாசலில் மிருதுளாவிற்கு மேக்அப் போட இருவர் வந்திருந்தனர். 

 அப்பொழுதுதான் டைமைப்பார்த்தாள் அம்புஜம் மணி மூன்றரை ஆகியிருந்தது. மிருதுளாவை எழுப்பி குளித்துவிட்டு வரச்சொல்லி மேக்அப் போட வந்தவர்களை ரூமிற்குள் அமரவைத்துவிட்டு அவர்களுக்கு காபி கொடுக்க சொல்லி மிருதுளா மாலை கட்ட வேண்டிய புடவை நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்து மிருதுளாவை தயார் படுத்தச் சொல்லிவிட்டு தான் தயாராகிக்கொண்டிருக்கையில் நவீனின் அம்பிகா மாமி ஒரு பட்டுப்புடவையை எடுத்து வந்து அம்புஜத்திடம்…

மாமி இந்தாங்கோ நிச்சயதார்த்தப்புடவை பர்வதம் அக்கா உங்களாண்ட கொடுக்கச் சொன்னா

இத ஏன் இப்ப தறேங்கள். சபேல நிச்சயதார்த்தம் சமையத்துல தானே தரனும்

அதெல்லாம் எனக்கு தெரியாது மாமி கொடுக்கச்சொன்னா குடுத்துட்டேன் நான் வரேன் மாமி“.

சரி நான் சம்பந்தி மாமிகிட்டேயே கேட்டுக்கறேன். அதை அப்படியே மிருதுளாட்ட கொடுத்திடுங்கோ. மிருது அத மாமிகிட்டேருந்து வாங்கிக்கோமா.

என்றாள். மிருதுளாவிற்கு மேக்அப் போட்டுக்கொண்டிருந்ததினால் அம்புஜத்தின் தங்கை கோமளம் அந்தப்புடவையை அம்பிகாவிடமிருந்து வாங்கி ஷெல்ஃபில் வைத்தாள். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் ஜானவாசம் எனும் மாப்பிள்ளை அழைப்பிற்கு  தயாராகி அனைவருக்கும் மாலை டிபன் காபி எல்லாம் சரியாக பரிமாரப்பட்டதா என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

ஜானவாஸத்திற்கு அனைவரும் அருகே உள்ள கோவிலுக்கு செல்ல விறுவிறுப்பாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பர்வதம் மெல்ல பூனைப்போல மிருதுளா அறைக்குச்சென்று…

என்ற மிருதுளா மேக்அப் நடக்கறதா..டைமுக்கு ரெடி ஆயிடுவியோனோ!

ஆயிடுவேன் மா. ஜஸ்ட் புடவைதான் கட்டனும். நீங்கள் எல்லாரும் கோவில் போயிட்டு வரத்துக்குள்ள ரெடி ஆகிடுவேன்!

சரி அம்பிகா ஒரு புடவை குடுத்தாளா.

ஆமாம் மாமி நிச்சயதார்த்தப் புடவைனுட்டுத் தந்துட்டுப்போனாஎன்றாள் கோமளம்.

ஓ நீங்களும் இங்க தான் இருக்கேளா நான் கவணிக்கலை. எப்படி இருக்கேங்கள்? சரி எனக்கு நாழி ஆகறது அந்தப் புடவையை கொஞ்சம் தாங்கோ நான் நிச்சயத்தப்போ சபேல வைக்கனும்

அதத்தான் அம்புஜமும் அம்பிகா மாமிகிட்ட சொன்னா ஆனா நீங்கதான் குடுத்துட்டு வரச்சொன்னதா இல்லையா சொன்னா

ஆமாம் ஏதோ ஒரு எண்ணத்துல சொல்லிட்டேன் சரி தாங்கோ நான் போய் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணனும்

இந்தாங்கோ மாமி அந்த புடவைஎன்று கோமளம் குடுத்ததும் ரூமைவிட்டு வெளியேறினாள் பர்வதம். அவளைப்பார்த்த அவளது அக்கா …

என்ன பர்வதம் உன் மாட்டுப்பொன் ரூமிலேருந்து கையில ஏதோ புடவ டப்பா மாதிரி எடுத்துண்டு போறாய்

அது ஒன்னுமில்லை ரமணி. சரி நம்ம ஆளுகள் எல்லாரும் கோவிலுக்கு போக ரெடி ஆகிட்டாளான்னு ஒன்னுப் பார்த்துட்டு வாயேன்” 

என ரமணியை அனுப்பிவைத்துவிட்டு அந்த புடவையை அவள் ரூமிலுள்ள பீரோவில் வைத்துப்பூட்டினாள் பர்வதம்.

அவள் புடவையை அவசரமாக வாங்கிக்கொண்டுப்போனது கோமளத்திற்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் எப்படியும் நிச்சயதார்த்தம் சமயத்தில் சபையில் வைத்து தரத்தானே போகிறார்கள் என்று விட்டுவிட்டாள் அதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. 

 மண்டபத்தில் மிருதுளாவும் அவளுக்கு துணையாக கோமளமும்  மட்டும் இருந்தனர். மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலில் இருந்தனர். அங்கிருந்துதான் மாப்பிள்ளை அழைப்பு எனப்படும் ஜானவாசம் தொடங்கவுள்ளது. 

கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு அன்று நிச்சயதார்த்த்திற்கு நவீன் எடுத்து வந்த கோட் சூட்டை, மாலை அனைத்தயும் தாம்பாளத்தில் வைத்து ராமானுஜமும் அம்புஜமும் கொடுத்தனர் அதை வாங்கிக்கொண்டு கோவிலில் ஒரு மறைவான இடத்தில் சென்று மாற்றிக்கொண்டு வருவதர்க்குள் அனைத்து சொந்த பந்தங்களும் வட்டமாக ஒரு பாதி பெண்வீட்டாரும் மறு பாதி மாப்பிள்ளை வீட்டார் என அமர்ந்திருந்தனர். அங்கே நவீனையும் அமரவைத்தனர். 

வேனுவும் ஜம்முனு ஒரு கோட் சூட் போட்டுக்கொண்டு தனது அக்காவிற்கு கணவராக போகும் நவீனுக்கு மாலை போட்டு பூச்செண்டை கையில் கொடுத்து தங்க சேயின் ஒன்றை போட்டுவிட்டான். வேனு சேயின் போட்டதும் பர்வதம் தனது இரண்டாவது மகனாகிய கவினைப்பார்த்து கண் அசைத்தாள்.

 என்னென்ன விளங்க வில்லை அல்லவா. வாருங்கள் அன்று காலை நவீன் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என்பதை உங்கள் முன் தோன்றவிருக்கும் சுழல்களின் நடுவில் பார்த்துவிட்டு மறுபடியும் கோவிலுக்கு வருவோம். அன்று காலை நவீன் வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் அப்பொழுது குவைத் கவின் அனைவர் முன்னும் நவீனுக்கு சேயின் போட்டு விட்ட சிறுது நேரத்தில் பர்வதம் நவீனிடம் சென்று..

நவீன் அந்த செயினை கழற்றிக்கொடுத்துவிடுஎன்றாள் அதற்கு நவீன் ஏன் என்று கேட்க 

உனக்கு மண்டபத்தில் அவர்கள் செயின் போடுவார்கள் அதனால் இதை என்னிடம் கழற்றித் தந்துவிடு”  என்றதும் நவீனுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் அந்த பேச்சை அதற்கு மேல் வளரவிட விருப்பமில்லாமல் கழற்றிக்கொடுத்துவிட்டான். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கவினும் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதுதான் பர்வதத்தின் கண்ணசைவுக்கு பின் இருந்த ஃபிளாஷ் பேக். சரி சரி சுழல் நின்னுப்போய் நாம அனைவரும் மீண்டும் கோவில் வந்துவிட்டோம். அனைவரும் வேனு செயின் போட்டதுக்கு கைத்தட்டினார்கள். பின் மாப்பிள்ளையான நவீனை பூவெல்லாம் வைத்து அலங்கரித்த ஜானவாச காரில் ஏறி அமரச்சொன்னார்கள் கூடவே சித்தப்பா, மாமா, அத்தை ஆகியவர்களின் குழந்தைகளையும் காரில் ஏற்றி நவீனுடன் அமர்த்தினர். காரின் வலதுபுறம் பெண்வீட்டாரும், இடதுபுறம் மாப்பிள்ளை வீட்டாரும் என ஜானவாச கார் மெல்ல மெல்ல வானவேடிக்கைகளுடன் நாதஸ்வரம் இசைக்க மேள தாளங்களுடன் நகர்ந்து மண்டப வாசல் வந்தடைந்தது. உடனே ராமானுஜம் நண்பரான சீனிவாசன் உள்ளேச் சென்று மிருதுளாவை வெளியே அழைத்து வந்தார். அவர் பெண்ணின் திருமணத்தின் போது அவ்வாறு செய்ததால் இங்கேயும் அதையே செய்தார். 

ஜானவாச காரில் மிருதுளாவையும் ஏறி அமரச்சொன்னார் யாருமே அதை வித்தியாசமாக பார்க்கவில்லை ஆனால் பர்வதமும் அவள் தங்கைகளும் மூஞ்சியை சுளித்துக்கொண்டு இது என்ன கூத்து என்று அவர்களுக்குள் ஆனால் அம்புஜம் கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் அம்புஜம் அதைக்கண்டுக்கொள்ளாதது போல அவள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அழகைப்பார்த்து மெய் மறந்து நின்றிருந்தவளை ..

மாமி போதும் ரசிச்சது வாங்கோ இரண்டுபேருக்கும் ஆரத்தி எடுக்கனும்என்று வாத்தியார் கூற சுயநினைவுக்கு வந்தாள் அம்புஜம். பின் நவீனையும் மிருதுளாவையும் காரிலிருந்து கீழே இறங்கச்சொனார். அப்பொழுது நவீன் முதலில் இறங்கி பின் மிருதுளா இறங்க கஷ்ட்டப்படும்போது மிருதுளாவின் தோழிகள் 

நவீன் ப்ளீஸ் ஹெல்ப் மிருதுஎன்று சொன்னதும் நவீன் திரும்பி கையை நீட்ட அதற்கு அவன் சித்தி லலிதா சட்டென்று நவீன் கையை தட்டிவிட்டு

தாலி கட்டறதுக்கு  முன்னாடி எல்லாம் தொடப்டாது” (இதே சித்திக்காரியின் மகள்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைகளோட அடிக்கப்போற லூட்டிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின் நாம பார்க்கத்தானே போறோம். அதுவரை பொறுத்திருங்கள்) என்றதும் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆக உடனே மிருதுளா தானாக பிடித்து இறங்கினாள். 

இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அனைவருமாக அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டப மேடையில் அமர்ந்தனர். நிச்சயதார்த்தம் துவங்கியது. 

நவீனுக்கு டிரஸ் கோவிலில் பெண்வீட்டாரால் கொடுக்கப்பட்டது.(என்னதான் நவீன் டில்லியிலிருந்து தானே எடுத்து வந்திருந்தாலும் அதற்கான பணத்தை பர்வதமும் ஈஸ்வரனும் வாங்கிக்கொண்டமையால் அது ராமானுஜமும் அம்புஜமும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்தததாக தான் நாமும் கருதுவோம். அதுதான் நியாயமும்.) அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் பட்டுப்புடவை மணப்பெண்ணிற்கு நிச்சயதார்த்தத்தன்று ஆசிர்வாதம் செய்து கொடுக்கவேண்டும். அதுதான் சம்பிரதாயம். இங்கு என்ன நடக்கிறது என்பதைப்பார்ப்போம் வாருங்கள். 

நிச்சயதார்த்தப்பத்திரிகை வாசிக்கப்பட்டு அனைவராலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தப்புடவையை மாற்றிக்கொண்டு வருமாறு மிருதுளாவிடம் வாத்தியார் கூற அவள் புடவை எங்கே கட்டிக்கொண்டு வருவதற்கு என்று முழிக்க உடனே பர்வதம் …

சாயந்தரம் கொடுத்தேனே அதுதான் போய் கட்டிண்டு வாஎன்று சபையில் தில்லாக சொல்ல அதிர்ந்துப் போனாள் மிருதுளா. 

அம்புஜமும், பங்கஜமும், கோமளமும், மேகலாவும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு ரூமிர்க்குள் புடவை மாற்ற செல்ல முயன்ற போது…. சில சம்பிரதாயங்களை செய்வதற்காக வாத்தியார் அம்புஜத்தை மேடையிலேயே இருக்கும்படியும் சொல்ல மற்றவர்கள் மிருதுளாவுடன் சென்றனர். 

ரூமுக்குள் சென்றதும் பங்கஜம் மிருதுளாவைப் பார்த்து…

சரி மிருது உங்க மாமியார் குடுத்தப்புடவையை எடு சீக்கிரம் மாத்திக்கட்டனும். இன்னும் பத்து நிமிஷத்துல வாத்தியார் கூப்பிட ஆரம்பிச்சுடுவார்அதற்கு கோமளம்

எங்கேருந்து வரும் புடவை. திருட்டுத்தனமா வந்து குடுத்தப்புடவையை திருப்பி வாங்கிண்டு போனப்பவே எனக்கு  அந்த மாமி மேலே சந்தேகம் வந்தது.

என்ன சொல்றே கோமளம். எங்களுக்கு ஒன்னுமே புரியலைஎன்றாள் பங்கஜம். மிருதுளா அன்று மாலை ஜானவாசத்திற்கு முன் நடந்தவற்றை எல்லாம் கூறிமுடிக்க….பங்கஜம்…

அடகடவுளே. ஏன் அந்த மாமி அப்படி பண்ணினா?” உடனே மேகலா

இத நாம சொன்ன அந்த மாமி உடனே தான் அம்பிகாட்ட குடுத்தனுப்பிச்சத மட்டும்  சொல்லுவா திருப்பி வாங்கிண்டு போனது கோமளத்திற்கும் மிருதுளாவிற்கும் மட்டும் தான் தெரியும் ஸோ அத ஒத்துக்கமாட்டா”  கோமளம் குறுக்கிட்டு

அதனால அந்த மாமிக்கு என்ன லாபம்?”

வேறென்ன சண்ட வரனும்முனு தான் பண்ணிருக்கானு நேக்கு படரதுஎன்றாள் மேகலா.

கோமளம் ….இப்போ என்ன பண்ணறது பாவம் நம்ம மிருது முழிச்சிண்டு நின்னுண்டிருக்கா

ரூமுக்கு வெளியிலிருந்து வேனு கதவைத்தட்டிக்கொண்டே வாத்தியார் மேடைக்கு அழைப்பதாக கூப்பிட்டான். 

இதோ வந்துட்டோம்என்றாள் கோமளம்.

சரி மிருது உன்ட்ட வேற புடவை இருக்குமில்லையா அதில் ஒன்றை எடு மாத்திண்டு போவோம்என்றாள் கோமளம் அதற்கு கோபத்துடன் பங்கஜம்…

எடுத்துக்குடுக்காதது அவா தப்பு மிருது இப்ப அவளோட புடவையையே மாத்திக்கட்டிண்டு போனா அவா எடுத்துக்குடுத்ததா ஆகிடுமே” 

ஐயோ சித்தி வேனு வேற கூப்பிட்டுண்டே இருக்கான் இப்போ என்ன தான் பண்ண.. சீக்கிரம் சொல்லு பங்கு சித்தி

பங்கஜம் மிருதுளாவின் ஒட்டியானத்தை மட்டும் கழட்டிவிட்டுட்டு 

இப்போ இப்படியே இதே புடவையிலேயே மேடைக்கு போவோம் வா. அவா எடுத்துதரலைங்கறது எல்லாருக்கும் தெரியட்டும்என்று ரூமின் கதவைத்திறந்து மிருதுளாவை மேடைக்கு கூட்டிச்சென்றாள். கோமளமும், மேகலாவும் ரூமைப்பூட்டிவிட்டு பின்னாலே சென்றனர். மேடை ஏறும்போது பர்வதம் சும்மா இல்லாமல் ..

அதே புடவைல வந்திருக்க என்று மிருதுளாவிடம் எல்லார் முன்னாடியும் கேட்க” 

பிரச்சனை பண்ணுவதற்காகவே கேட்கிறாள் பர்வதம் என்பதை அறிந்துக்கொண்ட பங்கஜம் டைமில்ல மாமி அதுதான் என்று சம்மாளிக்க…

எடுத்துக்குடுத்ததை கட்டிக்காம வந்திருக்கா பாருஎன்று பர்வதம் வேண்டுமென்றே எல்லோர் காதிலும் படும்படி முனுமுனுத்தாள். அதை கேட்ட அம்புஜம் சும்மா இல்லாமல் பங்கஜத்திடம்….

ஏன்டி பங்கு ஏன் மாமி தந்த புடவையை மிருதுளாவுக்கு மாத்தாமா அழைச்சுண்டு வந்திருக்கேள்என கேட்க உடனே பங்கஜம் 

அம்பு செத்த சும்மா இருக்கயா. இதுக்குப்பின்னாடி பர்வதத்தோட பெரிய சூழ்ச்சியே இருக்கு. இப்போ எதுவும் விளக்க முடியாது ஸோ பேசாம இரு.என்ற சிரித்துக்கொண்டே சொன்னாள்.

நிலைமையை சுதாரித்துக்கொண்டு சட்டென்று பேச்சை மாற்றி நிச்சயதார்தத்தை எந்த வித பிரச்சினைகளுமில்லாமல் நடத்தி முடித்தனர். பின் ரிசப்ஷென் தொடங்கியது. எல்லோருமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் கோமளம் அம்புஜத்திடம் அன்று மாலை நடந்த பர்வதலீலையை கூறிமுடித்ததும் அம்புஜம் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வர அவளை ரூமுக்குள் அழைத்துச்சென்றாள். அங்கு அம்புஜத்தைப்பார்த்து

என்னத்துக்கு அழுத. அதுதான் பங்கஜம் சம்மாளிச்சிட்டாளோனோ. உனக்கு தெரியனமேனுட்டு தான் சொன்னேன்

அதுக்கில்லடி கோமளம் இப்பவே இந்த மாமி இப்படி எல்லாம் பண்ணறாளே. இவ மிருதுவ படுத்துவாளோடி. அத நெனச்சுத்தான் அழுதேன்

மாமி அம்புஜம் மாமிஎன்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் வாத்தியார். 

உடனே கண்களை வேகமாக துடைத்துக்கொண்டாள் அம்புஜம்.

காலை செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி விவரித்துவிட்டு சென்றார். அனைவரும் இரவு மாப்பிள்ளை அழைப்பு விருந்து சாப்பிட்டு அவரவர் அறைகளுக்குள் சென்று படுத்தார்கள். வழக்கம் போல ஒரு பெரிய கூட்டம் வட்டமாக அமர்ந்து சீட்டு கச்சேரியில் ஆழ்ந்தது. 

அனைவரும் உறங்கினாலும் அம்புஜத்திற்கு கவலை விட்டப்பாடாக இல்லை…கண்களை இறுக்க மூடினாலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்து அவளுக்கே தெரியாமல் கண் அசந்தாள்.

இருபத்தி ஏழாம் தேதி நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வந்திருந்து பார்த்த வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

தொடரும்…..

பரிமளமும் பங்கஜமும் சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு பதினோரு மணி வாக்கில் டெலிபோன் மணி அடித்தது. மிருதுளா அம்புஜத்தைப் பார்தாள் …

அம்மா சித்திகள் சொன்னா மாதிரி அவா தானோ ?” என்றாள் மிருதுளா.

ஃபோனை எடுத்தா தானே தெரியும் மிருது. அட்டென்ட் பண்ணேன் அம்மா இந்த உளுந்த கிரைண்டரலேருந்து வழிச்சுட்டு வந்துடறேன். போ மா

மிருதுளா நினைத்தது சரிதான். அங்கிருந்து ஈஸ்வரன்ஹலோஎன்றதும் மிருதுளா…

ஹலோ அப்பா நான் மிருதுளா பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”

நாங்க நல்லா இருக்கோம். சரி நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா? என்ன முடிவு எடுத்திருக்க? அத கேட்க தான் ஃபோன் பண்ணினேன்

என்று நவீன் ஏதும் சொல்லாதது போலவே விசாரித்தார் அதற்கு நம்ம மிருது…

ஆமாம் ..பா …யோசிச்சேன் ….நான் அவர் கூடவே கிளம்பிடலாம்னு இருக்கேன்

ஓ அப்படியா!! நான் ஏன் இன்ஸிஸ்ட் பண்ணினேனா …நவீனும் ஆடிட்டிங்க்கு படிச்சிண்டிருக்கான் அவனுக்கும் மே மாசம்  பரீட்சை வருதாம். ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. அதுவும் இல்லாம நீ அவன் கூட கிளம்பினாய் னா பின்ன ரெண்டு பேருமே பரீட்சையை சரியா எழுத மாட்டேங்களே. கஷ்ட்டப்பட்டு படிக்கறேங்களோனோ அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ நான் சொன்னதையும் மனசுல வச்சுண்டு ஒரு நல்ல முடிவா சொல்லு நான் அடுத்த வாரம் அகேய்ன் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கறேன். இப்போ ஃபோனை வச்சிடறேன்.

என்று கால்ஐ துண்டித்தார். திருமணத்திற்கு பின் மருமகள் தன் மகனுடன் செல்வது ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் நல்ல முடிவு இல்லை என்பது அவர் பேசிய விதத்திலே நமக்கு புரிகின்றது. ஆனால் மிருதுளாவும் அம்புஜமும் புரிந்துக்கொண்டார்களா? வாருங்கள் மேலும் படித்துத் தெரிந்துக்கொள்வோம்.

மிருதுளாவிற்கு அவள் சித்தி சொன்னதுப்போல ஏதோ சரி இல்லை என்பது புரிய ஆரம்பித்தது. அவள் நவீன் முந்தின நாள் பேசியதையும் சற்றுமுன் ஈஸ்வரன் பேசியதையும் மனதிற்குள் அசைப்போட்டுப் பார்த்தாள். 

நவீன் அவரது பரீட்சை பற்றி ஒன்றுமே கூறவில்லையே. ஏன்? எனது விருப்பத்தை தானே கேட்க ஃபோனில் அழைத்ததாக சொன்னார். அவர் அப்பா முதலில் எனது பரீட்சையை காரணமாக சொன்னார் ஆனால் இப்போது

நவீனின் பரீட்சையை காரணமாக சொல்றார்!!!! எதுக்கும் அவரிடமே கேட்டுத்தெரிந்துக் கொண்டால் இதற்கு தீர்வு கிடைக்கலாம்…அதுதான் சரி

என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி பின் நவீனுக்கு ஃபோன் செய்தாள்.

ஹலோ நான் மிருதுளா பேசறேன்

ஹாய் மிருதுளா எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!! ” 

உங்களுக்கும் மே மன்த் எக்ஸாம் இருக்கா?”

ஆமாம் ஏன் கேக்கறே?”

அதனாலதான் என்னை இங்கேயே விட்டுட்டு போகனும்னு யோசிக்கறேங்களா?”

என்ன சொல்லுற!!! எனக்கு எக்ஸாம்னா உன்னை ஏன் அங்க விட்டுட்டு வருவேன். உனக்கு எக்ஸாம் எழுதனுமேனு தான் சொன்னேன்

ஓ சரி சரி அப்போ என்ன கூட்டிண்டு போறது கன்ஃபார்ம் தானே?”

ஆமாம் இட்ஸ் கன்ஃபார்ம். சரி எனக்கு லஞ் டைம் ஆச்சு. ஐ ஹாவ் டு கெட் பேக் டு வர்க். பை மிருது. வில் கால் யூ டுமாரோ.

ஓகே பை. ஹாவ் அ நைஸ் டே

என்று பேசி முடித்தாள். 

இன்னார் சொன்னதினால் கேட்கிறேன், ஏன் அப்படி சொன்னீர்கள் என்றெல்லாம் நேரடியாக கேட்டு பேசினால் பிரச்சனை தீரும்.  இவர்களுக்குள் முன் பின் அவ்வளவாக அறிமுகமும் இல்லை பழக்கமும் இல்லை. இருவருமே மனம் விட்டு பேசவுமில்லை. மனதிற்குள் அச்சம், வெட்கம், ஃபோனில் தான் பேச முடியும் திருமணத்திற்கு முன் நேரில் பேச வாய்ப்பேயில்லை, அதனால் ஏதாவது சொன்னால் அதை தவறாக புரிந்துகொண்டு விடுவாரோ என்ற எண்ணம் இருவர் மனதிலும் இருந்ததனால் இருவரையும் சரிவர பேச அனுமதிக்கவில்லை. 

இந்த இரண்டு மாதத்திற்குள் அவர்களுக்குள்  இவ்வளவு குழப்பத்தை உருவாக்கும் ஈஸ்வரனும் பர்வதமும் அவர்களை நாலு மாதம் பிரித்துவைக்க பார்ப்பது நல்லது செய்யத்தான் என்று நம்பமுடிகிறதா வாசகர்களே?

அன்று மாலை ராமானுஜத்துடன் அவரது அலுவலகத்தில் வேறு டிப்பார்ட்மென்டில் பணிப்புரியும் ஜெயேந்திரன் என்பவர் ராமானுஜம் வீட்டிற்கு

வந்தார். ராமானுஜம் அவசரமாக இரவு நேர ஷிஃப்ட்டுக்கு செல்ல தயார் ஆகிக்கொண்டிருந்தார். ஜெயேந்திரன் வருவதைப்பார்த்து ….

வாங்கோ வாங்கோ ஜெயேந்திரன்

எங்கயோ கிளம்பறேள் போல தெரியறது. தப்பான நேரத்துல வந்துட்டேனோ?”

கடமை அழைக்கறது வேறு ஒன்னுமில்லை. இன்னைக்கு நைட் ஷிஃப்ட் அதுவும் இல்லாம கொஞ்சம் சீக்கிரமே கிளம்பனும் அதுதான். சொல்லுங்கோ

யாருன்னா என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வந்தாள்…

நமஸ்காரம் மாமி. நான் ஜெயேந்திரன்

ஓ தெரியுமே. எப்படி இருக்கேங்கள்? ஆத்துல மாமி அப்பறம் உங்க பொன்னுகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

எல்லாரும் நல்லா இருக்கா. நான் இப்போ வந்தது ஒரு முக்கியமான விஷயம் பேச

என்னது சொல்லுங்கோஎன்றாள் 

அம்புஜம்.

ராமானுஜம் வந்தவரிடம் என்ன ஏதுனு கேட்காமல் தனது பணியைப் பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தார். அலுவலக வேலை என்று வந்தால் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காத இப்படியும் ஒரு மனிதர் மிருதுளாவைப்பெற்றவர். 

மாமாக்கு நாழி ஆகறதோ?”

உடனே அம்புஜம் 

இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோ. அவர் அப்படித்தான் பத்து மணிக்கு ஒரு எடத்துக்கு போகனும்னா எட்டு மணிலேருந்தே பரக்கம் பாய்வார். அது அவருடை சுபாவம். நீங்க ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னேளே அது என்னனு சொல்லுங்கோ

இல்ல உங்க பொன்னுக்கு பார்த்திருக்கேளே ஒரு குடும்பம்.

ஆமாம் ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஃபேமிலி. அவாளுக்கு என்ன

ஆமாம் அவாளே தான்.  அவாள பத்தி விசாரிச்சேளோ?”

ஏன் இப்போ வந்து இப்படி கேக்கறேங்கள்?”

அவா இப்ப இருக்கிற வீட்டுக்கு முன்னாடி எங்க ஆத்துப்பக்கத்தில தான் வாடகைக்கு குடி இருந்தா. அந்த மாமா மொடாக்குடிகாரர்

அப்படியா!!! பார்த்தா அப்படி தெரியலையே

இப்போ கொஞ்ச வருஷமா எல்லாத்தையும் விட்டுருக்கார். அந்த பர்வதம் மாமி இருக்காளே அவ எமகாதகியாக்கும். அவ இருக்கற ஆத்துக்கு உங்க பொன்னை கொடுக்க போறேங்கள்னு இன்னைக்கு காலைல தான் கேள்விப்பட்டேன் அதுதான் என் ஷிஃப்ட் முடிஞ்சதும் நேரா இங்க வந்தேன். எனக்கும் மூனு பொன்கள் இருகாளோனோ அதுதான் மனசு கேட்கலை ஓடி வந்துட்டேன் உங்களாண்ட சொல்ல. இந்த சம்மந்தம் வேண்டாமே அந்த மாமி உங்க பொன்ன நிம்மதியா வாழ விடமாட்டா.

அம்புஜத்திற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 

அந்த மாமாவும் மாமியும் துளி கூட பொறுப்பில்லாதவா. சுயநலவாதிகள்

அவா புள்ள நவீன் எப்படி? மாமாஎன்று கேட்டாள் அம்புஜம்

தங்கமான புள்ள மாமி. புள்ள நல்ல புள்ள தான் அவனை ஒரு குற்றமும்  சொல்ல முடியாது.

அப்பாடா பின்ன என்ன மாமா. புள்ள கூடதான் வாழ்க்கை பூரா இருக்கப்போறா அவர் நல்லவரா இருந்தா போராதா. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தேங்கள்னா ஏதாவது யோசிச்சிருக்கலாம். ஆனா இத இப்போ வந்து சொல்லறேளே. நிச்சயமாயாச்சு. புடவை, தாலி, மண்டபம் எல்லாம் ஆயாச்சே” 

ஆனா உங்க பொன்னு அந்த குடும்பத்துக்குள்ள போனுமோல்யோ. அவா கூடவும் தானே வாழ்ந்தாகனும்.  எனக்கு இன்னைக்கு தானே தெரிய வந்துது மாமி.  அதுதான் உடனே ஓடி வந்தேன். அதனால என்ன இன்னும்  கல்யாணமாகலையே. அவா எப்படிப்பட்டவா னா…..

உடனே ராமானுஜம் குறிக்கிட்டு ஏதோ சொல்ல வருபவரை தடுத்து தனக்கு வேலைக்கு நேரமாச்சு என்றும் …கூட வருகிறாயா என்று கேட்டதும் ஜெயேந்திரன் வேறு வழியில்லாமல் அவருடன் புறப்பட்டுச் சென்றார். எத்தனை பொறுப்பான தந்தை என்பது புரிகிறதா. அவரைப் பொறுத்தவரை சம்பாத்தியம் தான் முக்கியம். ஜெயேந்திரனை சொல்லவிடாமல் தடுத்து அவருடன் கூட்டிச்சென்றதனால் அம்புஜத்திற்கு கோபம் வந்தது. தங்களது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் யாரோ ஒருவர் அக்கரையுடன் சொல்ல வந்தவரையும் முழுவதுமாக சொல்லவும் விடாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்ட ராமனுஜம் மேல் நமக்கே கோபம் வரும்போது பெற்றவள் அம்புஜத்துக்கு வராதா என்ன மக்களே. அவளுக்கு அடிவயிறு கலங்கியது. ஏதோ பூமி சுற்றுவது நின்றது போல் இருந்தது. உடனே ஓடினாள் பூஜை அறைக்கு. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அம்பாளுக்கு சூடியிருந்த பூக்களில் இருந்து மல்லிகையையும் கனகாம்பரத்தையும் எடுத்து இரு பேப்பரில் பொதிந்து மனதில் 

ஆண்டவா இந்த நேரத்தில் எங்களுக்கு இப்படி ஒரு மனக்குழப்பமா. பொறுப்பில்லாத புருஷனை வைத்துக்கொண்டு நான் படும் அவஸ்தையை நீயும் தானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்!! எங்களுக்கு விவரங்களை விசாரித்துச்சொல்ல யாரும் இல்லை நீயா சொல்ல அனுப்பியவரையும் எங்காத்துக்காரர் சொல்ல விடாமல் செய்துட்டார். அதுவும் உன் திருவிளையாடலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன் தாயே. ஆனாலும் தாயல்லவா என் மனதிலிருக்கும் அச்சம் நீங்க … இதோ இந்த பூக்களில் கனகாம்பரம் வந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் தொடரட்டும் நல்லபடியாக உன் மகள் என் பெண் மிருது வாழ்வாள் என்றும் மல்லிகைப்பூ வந்தால் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்றும் உன் உத்திரவாக ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பேன் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் நீயே துணை அம்மா

என்று மனதார வேண்டிக்கொண்டு குலுக்கிப் போட்டு வேனுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்கச்சொன்னாள். வேனுவும் எடுத்துக்கொடுத்துவிட்டு….

இது என்ன மா? என்ன பண்ணறாய்என்று வினவ

எடுத்துக்கொடுத்ததுக்கு தாங்கஸ் டா கண்ணா. நீ போய் உன் வேலையைப்பார்” 

என்று சொல்லி அவன் சென்றபின் கண்களில் கண்ணீர் பெருக மனதில் அம்மனை நினைத்துக்கொண்டு திறந்துப்பார்த்தாள். அவளது கண்ணீரை ஆனந்த கண்ணீராக கனகாம்பரத்தைக்கொடுத்து மாற்றினாள் அந்த சமயபுரத்தாள். அதன் பின் மனதில் எந்த அச்சமுமின்றி கல்யாண வேலைகளில் இறங்கினாள் அம்புஜம். 

மறுநாள் விடிந்ததும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நேராக பக்கத்திலிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்று இருவரும் அந்த அகிலாண்டேஸ்வரியை, ஆயிரம்கண்ணுடையாளை தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொண்டு அம்பாள் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்த பின் பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் அம்புஜம் 

ஹலோ மாமி நான் அம்புஜம் பேசரேன்

ம்..ம்… சொல்லுங்கோ என்ன விஷயம்?”

என்று விருப்பமில்லாதவள் போலவே கேட்டாள் பர்வதம்.

இன்னைக்கு சாயந்திரம் ரிசப்ஷன் புடவை மற்றும் எங்க சொந்தகாராளுக்கெல்லாம் டிரஸ் எடுக்க போரோம் அப்படியே பின் தாலி முடியற நாத்தனாருக்கும் பட்டுப்புடவை எடுக்கலாம்னு இருக்கோம். ஒரு இரண்டாயிரத்துல எடுக்கலாமா என்ன ஏதுனு கேட்க தான் கூப்பிட்டேன் மாமி

இதை கேட்டதும் பர்வதம் 

என்னத்துக்கு அவ்வளவு காஸ்ட்லியான புடவை அவ என்ன உங்க பொன்னோட சொந்த நாத்தனாரா? இல்லையே …அதனால ஒரு ஐநூறு ரூபாய்க்கு எடுத்தா போரும். அந்த பணத்தை சம்மந்தி சீர்க்கு சேத்துப்போட்டு எடுங்கோ என்ன கரெக்டா?”

இதை கேட்ட அம்புஜத்திற்கு ச்சே என்ன இப்படி இருக்கானு தோன்றியது.

சரி மாமி அப்படியே செய்துடறோம். பை

என்று ஃபோனை வைத்துவிட்டு டவுனுக்கு கிளம்பினார்கள். பர்வதம் அப்படி சொன்னாலும் அம்புஜம் நல்ல புடவையாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு எடுத்தாள். மிருதுளாவிற்கு இன்னும் கொஞ்சம் நகையும் வாங்கிக்கொண்டு அனைத்து பர்சேஸிங்கும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தபின் ராமானுஜம் கணக்குப் போட்டுப்பார்த்தார் பின் அவர் அனைவரையும் அழைத்து…..

நகை கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுத்து…இப்பவே இவ்வளவையும் போட்டா எப்படி இனி நிறைய சீர் செய்யனுமே என்று கூற

உடனே மிருதுளா 

எவ்வளவு அதிகமாகறது

ஆறு பவுன்

சரி அப்பா அப்போ இந்த வளையலை திருப்பிக்கொடுத்திடலாம். அது கரெக்டா ஆறு பவுன் இருக்கு

ஏய் மிருது நீ அது ஆசைப்பட்டு எடுத்ததுடி அதை ஏன் திருப்பிக்கொடுக்கனும்

வேனு….

இதெல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம் அன்ட் பணம். பேசாம இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகுமோ அதை அப்படியே அக்கா பேருல ஒரு ஃப்டி ல போட்டா அவளுக்காவது பின்னாடி யூஸ் ஆகும்.

டேய் போடா நடக்கறகார்யத்த பேசுவோமாஎன்றாள் அம்புஜம்

விடு மா எனக்கு அந்த வளையல் வேண்டாம் இதுவே போரும்

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாட்களே உள்ளது நவீன் வருவதற்கு ஏழே நாட்கள் உள்ள நிலையில் ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் இன்னும் உருத்திக்கொண்டிருந்த விஷயம் தெளிவாகாததால் பிப்ரவரி பத்தாம் தேதி ஃபோன் செய்தனர்…மிருதுளா அட்டென்ட் செய்தாள்…

ஹலோ நான் மிருது பேசறேன்.

ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன். என்ன முடிவெடுத்திருக்காய் நவீனுடன் ஊருக்கு போவதைப்பற்றி?”

என்று பழைய பல்லவியை பாடினார். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் செல்லப்போவதாக கூறியதும் ஆத்திரத்தில் ஈஸ்வரன்….

என்ன இது கிளி மாதிரி சொன்னதையே சொல்லிண்டிருக்க. பெரியவா சொல்லறதை கேட்டு நடக்க உன் அம்மா சொல்லி‌க்குடுக்கலையா. எத்தனை வாட்டி நான் சொன்னேன் போக வேண்டாம் னு மறுபடியும் மறுபடியும் நீ போவேனு அல்ச்சாட்டியம் பண்ணராய். அதுவும் நவீன்ட்டயே சொல்லிருக்காய்  என்ன திமிரு உனக்கு. நாங்க யாரு அப்போ. ஏன் எங்க பேச்செல்லாம் கேட்கமாட்டியோ. ஆனாலும் ஒரு பொன்னுக்கு  இவ்வளவு அழுத்தம் கூடாது.

என்று குரலை ஒசத்தி மிரட்டுவது போல பேச மிருதுளா பயந்து போய் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடின. அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது ஏண்டி அழறாய் என்ன ஆச்சுமா? யாருமா ஃபோன்ல…ஏய் ஃபோனை என்கிட்ட தா

என்று வாங்கி ஹலோ என்றதும் ஈஸ்வரன் வழக்கம் போல் காலைத்துண்டித்தார். பின் மிருதுவிடம் விவரங்கள் கேட்டதும் அம்புஜமும் கலங்கினாள் ஆனால் அதைக்காட்டிக்கொள்ளாமல் இதுக்கெல்லாம் அழறதா என்ன மா நீ. அவா போகக்கூடாதுனு சொன்னா நீ உன் புருஷனோடு தானே போவேனு சொன்ன இதுல எந்த தப்பும் இல்லை. என்னத்துக்கு பின்ன இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணறோம். நீ நல்லா இருப்பமா… கண்ண தொடச்சுண்டு போய் நாளைக்கு சுமங்கலி பிராத்தனைக்கு வாங்கிண்டு வந்ததை எல்லாம் அடுக்குவோம் வா என்று மிருதுளாவை தேத்தினாள் அம்புஜம். அவள் மனதில் அந்த அம்மனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு தான் இதை கூறினாள்.

இவர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது பெண் வீட்டார் திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுப்பெண்ணை சாமியான சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து மறுவீடு அனுப்புவதும் அதேபோல மாப்பிள்ளைவீட்டில் திருமணத்திற்கு பின் சுமங்கலி பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை சாமியான அவர்கள் வீட்டு சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து வரவேற்பதும்  தான் வழக்கம். அதே போல மிருதுளா வீட்டில் சிறப்பாக சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அன்று மாலை பர்வதம் ஃபோன் செய்தாள். 

ஹலோ நான் பர்வதம் பேசரேன்

மிருதுளா தான் ஃபோனை எடுத்தாள் குரலைக்கேட்டதும் உடனே ஃபோனை தன் அம்மாவிடம் கொடுத்தாள்..

மாமி சொல்லுங்கோ நான் அம்புஜம் தான் பேசரேன்

சுமங்கலிப் பிரார்த்தனை எல்லாம் ஆச்சா

எல்லாம் நல்லப்படியா நடந்தது மாமி. எங்காத்து சுமங்கலிகளின் ஆசிர்வாதங்களோட எங்க மிருது உங்க ஆத்துக்கு வர தயார் ஆகிட்டா. மாப்ள ஊர்ல இருந்து வந்தாச்சா?”

நேத்து நைட் வந்தான். நாளைக்கு எங்காத்த சுமங்கலிப் பிரார்த்தனை அதுக்கும் மறுநாள் சமாராதனை அதனால நீங்க மிருதுளாவ அழைச்சுண்டு சமாராதனைக்கு வந்திடுங்கோ அத சொல்லத்தான் கூப்பிட்டேன்

ஆனா மாமி“… என்று அம்புஜம் ஏதோ கூற வருவதற்குள் 

சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வச்சுடரேன் நாள மறுநாள் வந்திடுங்கோ. பை

என்று ஃபோனை வைத்தாள்.

சமாராதனை நாளன்று அம்புஜமும் மிருதுளாவும் டூ வீலரில் நவீன் வீட்டுக்கு சென்றனர். நவீனும் பர்வதமும் வாங்கோ என்று வரவேர்த்தனர் அவர்கள் வீட்டில் பர்வதம், ஈஸ்வரன்நவீன்ப்ரவீன், பவின் மற்றும் பர்வதத்தின் அக்கா ரமணி அவர் மகன் ராஜூ ஆகியோர் இருந்தனர். 

உள்ளே சென்றதும் பர்வதம் ரொம்ப அக்கரை உள்ளவள் போல நவீன் ஏதோ மிருதுட்ட பேசனும்னு சொன்னயே போ மாடில போய் பேசிட்டு வா என்று சொல்லி வைத்தது போல இருந்தது அவர்களின் பரிமாற்றம். உடனே நவீன் மிருதுளாவை அழைத்துக்கொண்டு புதிதாக அவர்களுக்கென்று கட்டியிருந்த

அறைக்கு மாடியில் சென்றான். அம்புஜம் மிருதுளா வையே பார்த்துக்கொண்டிருந்தாள் அப்போது பர்வதம்…

மாமி நீங்களும் மாமாவும் சேர்ந்து போய் இவர் அண்ணா ராசாமணிக்கும், என் அக்கா ரமணிக்கும், தம்பி பிச்சுமணிக்கும் நேர்ல போய் பத்திரிகை வச்சு அழைச்சுடுங்கோ. அப்பறம் அவாளுக்குள்ள பேச ஏதாவது இருக்குமோள்யோ அதுதான் அனுப்பி வைத்தேன் பாவம் ரெண்டும் தயங்கறதுகள். பேசிட்டு தான் வரட்டுமே. நீங்க சொல்லுங்கோ மாமி நாங்க உங்க பொன்ன நவீன் கூட எக்ஸாம் எழுதிட்டு போனாபோரும்னு தானே சொன்னோம் ஏனா நாமளும் அந்த வயச கடந்து வந்தவா தானே நமக்கு தெரியாதா எப்படி ரெண்டு பேரும் படிப்பானுட்டு

என்று கூறி ஒரு சிரிப்பு வேற இதைக்கேட்டதும் அம்புஜத்திற்குஐயோ மறுபடியும் மொதல இருந்தாஎன்னும் வடிவேலு டயலாக் மனதிற்குள் ஒலித்தது.

அதே நேரம் மாடி ரூமில் நவீன் மிருதுளாவிடம். 

நீ எக்ஸாம் எழுதிட்டு தான் வரமுடியுமாமே.

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே உங்க கூட தான் வருவேனு அப்பறம் ஏன் மறுபடியும் மறுபடியும கேக்கறேங்கள். ஏன் வீடு பார்க்கலையா?”

வீடெல்லாம் பார்த்தாச்சு டிக்கெட் இன்னும் போடலை அதுக்கு முன்னாடி உன்னிடம் கேட்டுடலாம்னு தான்

ஓ அப்போ என்ன கூட்டிண்டு போற ஐடியாவே இல்லையா அதுதான் டிக்கெட் கூட புக் பண்ணலையா?”

அது பண்ண எவ்வளவு நேரமாக போறது. ஸோ யூ ஆர் கம்மிங் வித் மீ ரைட்டா

ஓ மை காட் நான் எத்தனை தடவ சொல்லறது. எஸ் எஸ் எஸ் போதுமா

ஏய் ஓகே ஓகே இதோ இது தான் நான் ரிசப்ஷனுக்கு எடுத்திருக்கும் கோட் சூட். நல்லாருக்கா

சூப்பரா இருக்கு அன்ட் என்னோட சாரியும் ஏகதேசம் இதே கலர் தான் வாட் எ கோயின்ஸிடன்ஸ்

கொடுத்த டைம் முடிந்துவிட்டது போல கரெக்டா பவினை அனுப்பி அவர்களை கீழே வரச்சொன்னாள் பர்வதம். அவர்களும் வந்தனர். பின் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். 

இரு வீட்டாரும் மும்மரமாக பத்திரிகைகளை அனைவருக்கும் டிஸ்ட்ரிப்யூட் செய்யத்தார்கள். வெளியூர்காரர்களுக்கு முன்னதாகவே போஸ்ட்டில் அனுப்பிவைத்துவிட்டனர். பர்வதம் சொன்னது போலவே ராமனுஜமும் அம்புஜமும் ரமணி, பிச்சுமணி வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு ராசாமணி வீட்டிற்கு சென்றனர். அங்கே ஈஸ்வரனின் அக்கா சொர்னம் அம்புஜத்திடம் 

என்ன உங்க பொன்னுக்கு நிறைய நகையும், வெள்ளியும், பாத்திங்களும் எல்லாம் செய்யறேளாமே ஈஸ்வரன் சொன்னான்

ஏதோ அந்த கடவுள் ஆசிர்வாதத்தால எங்களால செய்ய முடிஞ்சதை செய்யறோம் மாமி

அதெல்லாம் சரிதாம்மா ஆனா எல்லாத்தையும் ஒன்னா கல்யாணத்துக்கே செய்து காட்டினேங்கள்னா அவ்வளவுதான் அந்த பர்வதம் பெரிய பேராசைப்பிடிச்சவள் எப்போவும் அதையே எதிர்ப்பார்ப்பள் சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்கோங்கோ

அப்போதும் தனது சம்மந்தியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அம்புஜம்

மாமி எங்களுக்கு இருக்கறது ஒரு பொன்னு அவளுக்கு செய்யாம வேற யாருக்கு. அதெல்லாம் நல்ல படியா செய்ய அந்த அம்பாள் துணையிருப்பா

அப்பறம் உங்க விருப்பம். உங்களப் பார்த்தா நல்ல மனுஷாளா தெரியறது …அந்த பர்வததத்திடம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கோ. ஏதோ  சொல்லனும்னு தோனித்து சொல்லிட்டேன். ஆனா அவ தான் அப்படி நவீன் தங்கமானவன். உங்க பொன்ன பத்திரமா இருக்கச் சொல்லுங்கோ

சரி மாமி நாங்க போயிட்டு வரோம்

என்று கூறி அங்கிருந்து விடைப்பெற்றனர் ராமானுஜமும் அம்புஜமும். பஸ்ஸில் வீட்டிற்கு வரும்பொழுது மனதிற்குள் யோசித்துக்கொண்டே வந்தாள் அம்புஜம்..

ஏன் எல்லாரும் அந்த பர்வதத்தை கண்டு பயப்படரா? சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் அவள்ட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்றாலே ஏன்? இதை மிருதுட்ட சொன்னா பாவம் அது பயந்துடும். சொல்ல வேண்டாம். அம்மா நீ உன் மகளுக்கு கொடுத்த வாழ்க்கை அவளை எல்லா இக்கட்டுகளிலும் நீதான் காப்பாத்தனும் தாயேஎன்று வேண்டிக்கொண்டாள்.

கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன் அதாவது இருபத்தி ஆறாம் தேதி மாலை மிருதுளா குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். 

இருபத்தி ஏழாம் தேதி காலை முதல் கல்யாண சம்பிரதாயங்கள் நடக்கவிருப்பதால் அவற்றையும் மேலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் நேராக மண்டபத்திற்கு வந்து தெரிந்துக்கொள்ளும்படி பணிவுன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வரும் செவ்வாய் அன்று கல்யாண மண்டபத்தில் சந்திப்போம்.

தொடரும்….

நிச்சயதார்த்தம் முடிந்து நண்பர்களையும் சொந்தங்களையும் அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு ராமானுஜம் குடும்பத்தினர் வீடு வந்து சேரும்போது இரவு பதினோரு மணியானது. அனைவரும் அசதியாக இருந்தார்கள். அம்புஜம் கவலையாகவும் இருந்தாள். இதை கவனித்த வேனு 

என்ன மா சந்தோஷப்படாமல் கவலையா இருக்க?”

அது ஒன்னுமில்லடா கொஞ்சம் அசதி இனி இருக்கற வேலைகள் எல்லாம் நினைச்சா மலப்பா இருக்குடா. அதத்தான் யோசிண்டு வரேன்

அனைவரும் உறங்கினார்கள். அம்புஜம் நன்றாக தூங்கும் மிருதுளாவையே சற்று நேரம் பார்த்து …

கள்ளம் கபடமில்லாத வெகுளியான என் பொன்னை நீ தாம்மா  காப்பாத்தனும் தாயே” 

என்று வேண்டிக்கொண்டு பின் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் விடிந்தது. கல்யாண தேதி குறிப்பதற்கு நல்ல நாள் பார்க்கப்பட்டது. ஐப்பசி மாதத்தின் இரண்டாம்  வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருந்தார் ஜோதிடர். 

இந்த கல்யாண ஏற்பாடுகள் நடப்பது மொபைல் ஃபோன்கள் இல்லாத காலக்கட்டமாகும். சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள். அப்பொழுது வீட்டில் லாண்ட் லைன் ஃபோன் வைத்திருப்பதே ஆடம்பரமாக கருதப்பட்ட காலம்.

நவீன் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் பவின் மற்றும்  ஈஸ்வரன் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர். ரெயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நவீனின் மனது அவள் வருவாளா என்று ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் அழகான சுடிதார் அணிந்து மிருதுளா தனது பெற்றோர்களுடன்  நடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அருகே வந்ததும்

 “வாங்கோ வாங்கோஎன்று நவீனும் ஈஸ்வரனும் சொன்னார்கள்.

பின் அனைவருமாக உரையாடினார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக பேச தயங்கினர். ரெயில் கிளம்ப ஐந்தே நிமிடங்கள் இருந்தது. ரெயிலில் நவீன் ஏறியப்பின் தனது இருக்கையில் அமர்ந்தான். ரெயில் கிளம்ப தயாரானதை சப்தம் எழுப்பி அறிவித்தது. நவீன் தனது கைகளை அசைத்து பை பை மிருது என்று முதல்முறை அவளிடம் சொன்னான். மிருதுளாவும் பை என்றாள். இதுதான் அவர்கள் நிச்சயதார்த்திற்கு பின் பேசியவை. ரெயில் புறப்பட்டு சென்றதும் ஈஸ்வரன், பவின், ராமானுஜம், அம்புஜம் மற்றும் மிருதுளா அவரவர் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.

ஐப்பசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்தது ராமானுஜமும் அம்புஜமும் ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர். மாப்பிள்ளைப் பெண்ணின் ஜாதகப்படி மாசி மாதம் திருமணத்திற்கு உகந்தது என்று அந்த மாதத்தில் மூன்று தேதிகளைக் குறித்துக்கொடுத்ததை எடுத்துக்கொண்டு பர்வதம் வீட்டிற்கு சென்று அவர்களிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு எந்த தேதி சரிவரும் என்று கேட்டு சொல்ல சொன்னார்கள். 

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….பின் பர்வதம் …

கல்யாணமானதும் நவீன் பத்து நாளில் குஜராத் போயிடுவான். கல்யாணம் முடிந்ததுக்கப்பறம் தான் ஃபேமிலி குவார்ட்ஸ் தருவா. அவன் போய் தான் வீடு பார்க்கனும் அதனால மிருதுளா இங்க தான் இருக்கனும் ஒரு ரெண்டு மாசத்தில வீடு அலாட் ஆகிடும் அப்பறம் லீவு போட்டு வந்து அழைச்சிண்டு போவான். ஸோ நாளு மாசம் இங்கயே இருக்கட்டும் என்ன சொல்லறேங்கள்?”

இப்பொழுது ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அம்புஜம்…

என்ன மாமி கல்யாணம் ஆன உடனே நாளு மாசம் மிருதுளா மாப்பிள்ளையை பிரிஞ்சு இருக்கனுமான்னு யோசனையா இருக்கு!

ஏன் நாங்களெல்லாம் இல்லை என்ன?”

அதுவும் சரிதான் ஆனாலும்……. மிருதுவோட எக்ஸாம் வேற மே மாசம் வரது. அதுதான் அவ எப்படியும் போயிட்டு ரெண்டு மாசத்தில திரும்பி வரத்தான் வேணும்….

உடனே ஈஸ்வரன் குறுக்கிட்டு…

என்னத்துக்கு அலஞ்சுண்டு கல்யாணம் முடிந்ததும் உங்க பொன்னு இங்கயே இருந்து எக்ஸாம் எல்லாம் முடிசிட்டு அப்பறம் ஜூன் ஆர் ஜூலைல போனா போரும். அதுக்குள்ள நவீனுக்கும் வீடு அலாட் ஆயிடும். இது தான் சரி அப்படியே இருக்கட்டும். நீங்களும் மிருது கிட்ட எடுத்து சொல்லிடுங்கோ

அம்புஜத்திற்கு தற்மசங்கடமான நிலையானது. மனதிற்குள் ஒரு நெருடல்…அவள் மறுப்பு தெரிவிக்க முயல்வதற்குள் ராமானுஜம் குறுக்கிட்டு..

சரி மாமா அப்படியே ஆகட்டும். நாங்க கிளம்பறோம். நாழி ஆயிடுத்து.

என்று கூறி விடைப்பெற்றனர்.

வீடு வந்ததும் அம்புஜம் ராமானுஜத்தைப்பார்த்து ….

ஏன் அவா சொன்னதுக்கு சரினு சொன்னேங்கள்? எனக்கென்னவோ இது சரியா படலை

ஆமாம் அவா ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டா மிருதுளாவ அனுப்பக்கூடாதுனு …அது அவா பேசர விதத்திலருந்தே நன்னா புரிஞ்சுது அதனால ஆர்க்யூ செய்து ஒரு யூஸும் இல்லை

நீங்க சொல்லறதும் சரிதான். நம்ம பொன்னுக்கு நல்ல வரன் தானே பார்த்திருக்கோம்? நாம ஏதும் விசாரிக்கலை…எல்லாம் பகவதி துணை

மிருதுளாவுடன் ஜோதிடர் குறித்துக் குடுத்த தேதிகளை டிஸ்கஸ் செய்து பிப்பிரவரி இருப்பத்தி எட்டாம் தேதியை தேர்ந்தெடுத்தனர். அதை நவீன் வீட்டாரிடமும் தெரிவித்தனர். அவர்களும் சம்மதித்தனர்.

அடுத்து கல்யாண மண்டபம் புக் செய்யும் வேலையில் இறங்கினர் மிருதுளாவின் பெற்றோர்.  அவர்கள் ஒரு மண்டபம் செலக்ட் செய்து அதை நவீன் வீட்டாரிடம் தெரிவித்தப்போது அவர்கள் அதில் திருப்தி இல்லாததுபோல….பர்வதம் …

நல்லாதான் இருக்கு ….எங்காத்து மனுஷா நிறைய பேர் வருவா அதனால இன்னும் கொஞ்சம் பெரிய மண்டபமா இருந்தா சௌகர்யமா இருக்கும்என்றிழுக்க ….

ஓகே மாமி இன்னொரு மண்டபம் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணறோம்என்றார் ராமானுஜம்.

ராமானுஜம் அம்புஜம் தம்பதியினர் நவீன் பெற்றொரை அந்த ஊரிலேயே உள்ள இரண்டாவது பெரிய மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இதை ஓகே பண்ணலாமா என்று கேட்டனர். ஈஸ்வரன் சூப்பரா இருக்கு என்றார் ஆனால் பர்வதம்ரெண்டே ரெண்டு ஏசி ரூம் தானா”  என்று கூறவும்….ராமானுஜம் சட்டென்று…

மாமி இதுவே என் சக்திக்கு மீறினது இதுக்கு மேலே எங்களால முடியாது முடிவா என்ன சொல்லறேங்கள்?”

சரி சரி நாங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். பரவாயில்லை இதையே புக் பண்ணுங்கோ” 

 என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் பிடிக்கவில்லை. மண்டபத்தின் மேலாலரைப்பார்த்து முன்பணம் கட்டி பதிவு செய்தார்கள். சமையல், சீர் பட்சணங்கள், பூ, மாலை, நலங்கு என அனைத்தையும் மண்டபகாரர்களிடமே கான்ட்ராக்ட் போட்டார் ராமானுஜம். இல்லாவிட்டால்  ஒவ்வொன்றுக்கும் குற்றப்பத்திரிகையை பர்வதம் வாசித்து விடுவாரோ என்ற அச்சம் போல பாவம். மணடபத்தை விட்டு வெளியே வந்ததும் பர்வதம்…

எப்போ முகூர்த்த புடவை எடுக்க போறேங்கள். எங்களாண்ட ஒரு வார்த்தை சொன்னா நாங்களும் வருவோம். தாலி

 எங்க செய்ய சொல்லப்போறேள்?” அம்புஜம் பதிலளித்தாள்‌..

மாமி மண்டபம் பார்க்கவே உங்களைக்கூட்டிண்டு வந்திருக்கோம் பின்ன புடவை தாலி எடுக்கும் போது சொல்லாமல் இருப்போமா? தாலி எங்களுக்கு தெரிந்த ஆசாரியிடம் செய்ய சொல்லாம்னு இருக்கோம். ஒரு தாலி நீங்க தானே செய்யனும் அதையும் அவரே செய்து தருவார் ஒரு தாலிக்கு உண்டான பைசா மட்டும் நீங்க தந்தா போரும்.

இல்லை இல்லை அது சரிவராது எங்களுக்கு தெரிந்த நகைக்கடை ஒன்று இருக்கு அங்கத்தான் ஆர்டர் கொடுக்கனும்என்றாள் பர்வதம் அதற்கு அம்புஜம்..

சரி அதுவும் உங்கள் விருப்ப்படியே ஆகட்டும். நாளை மறுநாள் சுபமுகூர்த்த நாளா இருக்கு நீங்களும் இதே பஸ்டாப்பிற்கு வந்திடுங்கோ நாங்களும் வந்துடறோம் நாம எல்லாரும் சேர்ந்தே போய் புடவை தாலி எல்லாம் எடுத்துண்டு வரலாம்

சரி எங்களுக்கு பஸ் வந்துடுத்து நாங்க கிளம்பறோம். போயிட்டு வரோம்.” 

என்று கூறி ஈஸ்வரனும் பர்வதமும் இடத்தைக் காலி செய்ததும் அம்புஜம் ராமானுஜத்திடம் …

ஏன்னா இவா நாம என்ன சொன்னாலும் அதுல ஏதாவது குறைச்சொல்லிண்டே இருக்காளே இவாள திருப்திப் பட வைக்கறத்துக்கு நாம ரொம்ப சிறமப்படப்போறோம்னு நினைக்கறேன்.. எல்லாத்துக்கும் பகவதி துணை

முகூர்த்த புடவை எடுக்கவும் தாலி ஆர்டர் குடுக்கவும் நவீன் மற்றும் மிருதுளாவின் பெற்றோருடன் மிருதுளாவும் சென்றாள்.. தாலி டிசைனிலும் பிரிச்சனை எழுப்பினாள் பர்வதம் அதையும் விட்டுக்கொடுத்தனர் மிருதுளாவின் பெற்றோர். அவர்கள் முறைப்படி பெண்வீட்டார் ஒரு தாலியும் மாப்பிள்ளைவீட்டார் ஒரு தாலியும் செய்வது வழக்கம் ஆனால் இங்கே தாலி ஆர்டர் கொடுத்ததும் பில் கட்டவேண்டிய நேரத்தில் ஈஸ்வரனும், பர்வதமும் பக்கத்துக்கடையில் ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றனர். மொத்த பணத்தையும் ராமானுஜமே கட்டவேண்டியிருந்தது. உள்ளே கோபம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புடவை எடுக்க சென்றனர். புடவைக்கடையும் பர்வதம் சாய்ஸ் தான் கையோங்கியது பட்டில் ஒன்பது கஜம் கல்யாண  முகூர்த்தப் புடவை காட்டச்சொல்ல பல ரகங்களில் பல வண்ணங்களில் விரித்துக்காட்டப்பட்டது. அதில் மிருதுளாவிற்கு ஆரஞ்சு நிறத்தில் பச்சைப்பார்டர் போட்டப்புடவை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். அதே கலரில் தான் நடிகை மீனா அவ்வைசண்முகி படத்தில் ருக்கு ருக்கு பாடலில் கட்டிக்கொண்டு வருவார்.  ராமானுஜமும் எடுத்துக்கொள்ளச்சொன்னார். விடுவாளா பர்வதம் !!!!….இடையில புகுந்து 

இந்த கலர்ல எல்லாம் கட்டிக்கக்கூடாது வெரும் மெரூன் இல்லாட்டி அரக்கு கலர்ல தான் எடுக்கனும்

 என்றதும் மிருதுளா….

அம்மா எனக்கு இந்தக்கலர் தான் பிடிச்சிருக்கு என் அப்பா தானே காசு கொடுத்து எடுத்துத்தரா அப்போ நம்ம இஷ்ட்டத்துக்கு தானே எடுக்கனும்…ப்லீஸ் மா இதையே எடுக்கலாமா” 

என்று அம்புஜம் காதில் கூறினாள். இதை கவனித்த பர்வதம்…

என்ன அங்க உங்க பொன்னு என்னமோ முனுமுனுன்னு சொல்லறா?” 

அது ஒன்னும் இல்லை மாமி. நீ கட்டிண்டா அரக்கு கலரும் அழகாதான் இருக்கும்னு சொல்லிண்டிருக்கேன்என்று அம்புஜம் கூறி சமாளிக்க…மிருதுளா அம்மா…என்று அம்புஜம் கையை இருக்கப்பிடித்தாள் உடனே அம்புஜம் …மகள் கைகளை தட்டிக்கொடுத்து பரவாயில்லை விடு என்று மெல்லச்சொன்னாள். 

ஆக அன்று எல்லாமே பர்வதத்தின் சாய்ஸ் படி தான் நடந்தது. ராமானுஜம் குடும்பத்தினர் பணம் கட்ட மட்டும் வந்தது போல் ஆக்கினாள் பர்வதம். 

அனைவரும் மத்திய உணவருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். அனைவரும் மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள் அம்புஜம் வெளியே உணவு உட்கொள்ளாமாட்டாள் அதனால் ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். மிருதுளா பொரோட்டா ஆர்டர் செய்ய உடனே பர்வதம் அதெல்லாம் என்னத்துக்கு பேசாம மீல்ஸே ஆர்டர் பண்ணு என்று சொல்ல மிருதுளா அம்புஜத்தைப்பார்க்க அவளும் அவர்கள் சொல்படியே  கேள் என்று கூற வேற வழியின்றி மீல்ஸே ஆர்டர் செய்தாள். அதன் பில்லும் ராமானுஜமே கட்டினார். பின் அனைவரும் பஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்த சமயத்தில் ஈஸ்வரன் மிருதுளாவிடம் ….

மிருதுளா உனக்கு மே மாசம் எக்ஸாமாமே?” 

ஆமாம் அப்பா

அதனால நீ நவீன் கூட போக வேண்டாம் அவனே உன்ன கூப்பிட்டாலும் போகாதே. ஏன் வீனா அலைஞ்சுண்டு ஒன்னா பரீட்சை எல்லாம் நல்லப்படியா முடிச்சுட்டே கிளம்பு என்ன சரியா?” 

அதப்பத்தி இன்னும் நாங்க அவகிட்ட எதுவும் டிஸ்கஸ் பண்ணலை பண்ணிட்டு சொல்லறோமேஎன்றாள் அம்புஜம்

சரி நான் அடுத்தவாரம் ஃபோன் போட்டுகேட்டுக்கறேன் அதுக்குள்ள டிசைட் பண்ணுங்கோ. இன்னொரு விஷயம் நவீனுக்கு கோட் சூட், சர்ட், டை, ஷூ எல்லாம் அவன் அங்கேந்தே எடுத்துக்கறானாம் அதனால அவனுக்கு பணம் அனுப்பனும் ஸோ ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்திடுங்கோ” 

அப்படியா சரி நான் நாளைக்கு இல்லாட்டி அடுத்த திங்கள் கிழமை வந்து தந்துடறேன்என்றார் ராமானுஜம் அதற்கு ஈஸ்வரன்…

இல்லை இல்லை நவீனுக்கு நாளைக்கே நான் அனுப்பனும் அதனால இப்பவே கொடுத்திடுங்கோ

இப்பவா!!! இங்கேயே வா!!! இது பஸ்டாப்!! மாமா நீங்க வயசானவா வேற. நாங்க இன்னைக்கு சாயந்தரம் ஆத்துக்கு வந்து தந்திடறோமே” 

என்று ராமானுஜம் சொன்னதுக்கு பர்வதம் உடனே…

இல்லை …பரவாயில்லை இங்கேயே தாங்கோ நாங்க பத்திரமா எடுத்துண்டு போயிடுவோம். நீங்க ஏன் இதுக்காக ரெண்டு தடவை அலையனும் பாவம்.

என்று அடாவடியாக கூற வேற வழியில்லாமல் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து ஈஸ்வரன் கையில் கொடுத்தார் ராமானுஜம். உடனே ஈஸ்வரன் அதை எண்ணிப்பார்த்து பின்…

இந்தாங்கோ எங்க வகை தாளிக்கு உண்டான பணம் என்று ரூபாய் இரண்டாயிரத்தை ராமானுஜம் கொடுத்த பணத்திலிருந்தே எடுத்துக்கொடுத்தார்

அவர்கள் பஸ் வந்தது அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர் நவீனின் பெற்றோர். 

 ராமானுஜம் அம்புஜத்திடம்….

என்ன இவா என்கிட்ட இருந்தே காச வாங்கி எனக்கே அவா தாளி காசுனுட்டு தந்துட்டுப்போறா!!!! அதுவும் இல்லாம நவீன் தான் சம்பாதிக்கிறானே அவனுக்கு டிரஸ் எடுக்க ஏன்  இவா பணம் அனுப்பனும்!!!! ஒரே குழப்பமா இருக்கே

ஆமாம் அவாள்ட்ட எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு இப்போ என்னாண்ட கேட்டா நான் என்ன சொல்லறது. இதை எல்லாம் அவாக்கிட்ட கேட்டிருக்கனும்

ஆமாம் நீ உன் வாயில என்ன கொழுக்கட்டையவா வச்சுண்டிருந்த நீ கேட்டிருக்க வேண்டியது தானே

என்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பிக்க…பஸ்ஸும் வந்தது அதில் ஏறி அமர்ந்தனர்.  மிருதுளாவுக்கு சங்கடமாக இருந்தது. தனது அப்பா கூறுவதும் சரிதானே என்று அவளுக்கும் தோன்றியது. ஈஸ்வரன் பர்வதம் அன்று காலையிலிருந்து அவர்களை எல்லாக்கடையிலும் பாடாய் படுத்தியது எல்லாம் அசைப்போட்டுப்பார்த்தாள் பின் வீடு சென்றதும் ….

அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ரொம்ப பயமா இருக்குஎன்றாள். உடனே அம்புஜம்…

இதெல்லாம் ஒன்னுமில்லை மா. இதுக்கெல்லாமா பயப்படறது அசடு. நீ எப்போதும் பொறுப்பா நடந்துக்கனும், பொறுமையை எப்போதும் விட்டுடாதே. இதை ஞாபகத்துல வச்சுண்டா போரும் மிருது. அவா சொல்லரா மாதிரி கல்யாணத்துக்கப்பறம் உன் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டே மாப்பிள்ளையோட குஜராத்துக்கு கிளம்பு என்ன சரியா

சரிமா. அப்படியே செய்யரேன்

அம்புஜத்தின் முதல் தங்கையான பரிமளம் கல்யாணம் விசாரிக்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போது நடந்தவற்றை எல்லாம் அம்புஜம் அவளுடன் ஷேர் செய்துக்கொண்டாள். பரிமளம் மிருதுளாவைக்கூப்பிட்டாள்.

மிருதுளா வந்தாள்…

என்ன சித்தி?”

ஏன்டி நீ படிச்சவ தானே உங்க அப்பா காசு போடறார் உனக்கு பிடிச்ச புடவையையே எடுத்திருக்க வேண்டியது தானே ஏன் எடுக்கலை?”

இதையேத்தான் நான் அம்மா கிட்ட சொன்னேன். அம்மா தான் பரவாயில்லைனா. நீ அம்மாட்ட கேளு.

உங்க அம்மா ஒரு இ.வா ஆனா நீ ஸ்டபேர்ன்னா இருந்திருக்கனும். அதுவும் இல்லாம ஏதோ எம்.காம் எக்ஸாமுக்காக நாளு மாசம் கழிச்சு போன்னு உன் மாமியாரும் அம்மாவும் சொன்னா உடனே தலையை ஆட்டுவியா? இதோ பருமா படிப்பும் இம்ப்பார்ட்டன்ட் தான் நான் இல்லனு சொல்லலை ஆனா  எக்ஸாம் எப்ப வேனும்னாலும் எழுதிக்கலாம் வாழ்க்கை அப்படி இல்லை ஆரம்பத்திலேயே கோட்ட விட்டுட்டனா பின்ன அவ்வளவுதான் என்ன புரியரதா?”

இப்போ நான் என்னப்பண்ணும் சித்தி?”

அடுத்தத்தடவை இந்த பேச்சு வந்துதுனா நீ நவீன் கூட போவேன் எக்ஸாம் அப்பறம் எழுதிக்குவேன்னு சொல்லு அதுதான் உன் வாழ்க்கைக்கு சேஃப். உங்க மாமியார் என்னத்துக்கு உன்ன நாளு மாசம் பிடிச்சுவச்சுக்க பார்க்கரானு நினைக்கற…. கல்யாணமான முதல் வருடம் ஒருவரை ஒருவர் நன்னா புரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான காலம் இந்த நேரத்துல உன்னை நவீனுடன் அனுப்பாமல் வீட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் உன் புக்காத்து மனுஷாலோட எண்ணம் எனக்கு சரியாப்படலை“. உடனே அம்புஜம் …

ஏன்டி பரி அவா ஆத்த பொன்னுகளே இல்லை அதனால கூட சொல்லிருக்கலாமோள்யோ!

அட போ அம்பு நீ சொன்னதெல்லாம் வச்சுப்பார்த்தா எனக்கென்னவோ இதுல ஏதோ அந்த பர்வதத்திற்கு உள்நோக்கம் இருக்குனு தோனறது

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது பங்கஜமும் அம்புஜம் வீட்டிற்கு விஜயித்தாள். அவளும் விஷயங்களை சொல்லக்கேட்டதும் பரிமளம் சொல்வதுதான் சரி என்றாள். அப்பொழுது ஃபோன் அடித்தது. அம்புஜம் எடுத்தாள் …

ஹலோ நான் அம்புஜம் பேசறேன்

ஹலோ. நல்லாருக்கேளா நான் நவீன் பேசறேன். அங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

ஓ மாப்ள நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் நீங்க நல்லாருக்கேளா? நாங்க நேத்துதான் தாளிக்கு ஆர்டர் கொடுதுட்டு வந்திருக்கோம்.

நான் நன்னா இருக்கேன். ஹோ! ஈஸ் இட்!. குட். மிருதுட்ட பேசலாமா

ஓ தாராளமா. சாரி… இதோ குடுக்கறேன்” 

என்று மிருதுளாவிடம் ரிசீவரை கொடுத்துவிட்டு அனைவரும் உள் ரூமிர்க்குள் சென்று பேசத்தொடங்கினார்கள். அனைவரும் சென்றபின் மிருதுளா…

ஹலோ

ஹாய். எப்படி இருக்க?”

நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கேங்கள்?”

நன்னாருக்கேன் நான் பிப்பிரவரி பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்திடுவேன். இருபது நாள் தான் லீவு ஸோ மார்ச் ஏழு அங்கிருந்து கிளம்பனும். புடவை தாளி எல்லாம் எடுத்தாச்சாமே!

 “ஆமாம் நேத்து தான் எடுத்துண்டு வந்தோம்

எங்க அம்மா சொன்னா ஏதோ உனக்கு மே மாசம்  எம்.காம் எக்ஸாம் இருக்காமே அதனால நீ அத முடிச்சிட்டு தான் என் கூட வருவயாமே அப்படியா?”

இல்லை நான் அப்படி எதுவுமே சொல்லலை. நான் கல்யாணம் முடிஞ்சதும் உங்க கூடவே வந்துடறேன்

ஈஸ் இட்!! அப்போ எக்ஸாம்?”

பரவாயில்லை நான் அதை டிசம்பரில் எழுதிக்கறேன்” 

ஓகே நான் அப்போ வீடுப்பார்க்கட்டுமா?”

எஸ் தாராளமா பாருங்கோ

ஓகே தென் டேக் கேர் பை மிருது.

ஓகே பை பை

நவீனுடன் ஓப்பனாக பேசியது ஏதோ பெரிய விஷயம் சாதித்ததுப்போல இருந்தது மிருதுளாவிற்கு. அவள் தன் சித்திகளிடம் தான் திருமணம் முடிந்ததும் நவீனுடன் போவதாக கூறி மகிழ்ந்தாள். அதற்கு பரிமளம்…

நீ இன்னைக்கு நவீனிடம் சொன்னதுக்கு உன் மாமியார் ஆர் மாமனாரிடமிருந்து நாளை ரியாக்ஷன் வந்தால் தென் அவா ஏதோ காரணமா தான் உன்னை அனுப்பாமலிருக்க பார்க்கரானு கன்ஃபார்ம் ஆகிடும்

அப்போ அவா நாளைக்கு எங்கள்ட்ட மறுப்படியும் இதப்பத்திப்பேசுவாளா?” என்றாள் அப்பாவி மிருதுளா.

நிச்சயமா பேசுவா பாறேன்என்றால் பங்கஜம்.  

பரிமளத்திற்கும் , பங்கஜத்திற்கும் கூறப்புடவையை காண்பித்தாள் அம்புஜம். பரிமளம்… அம்புஜத்திடம் ஏமாறாமல் இருங்கோ என்று எச்சரித்து பின் பங்கஜத்துடன் சேர்ந்து அவள் வீட்டுக்கு இருவரும் சென்றனர். 

அடுத்தநாள் பரிமளமும் பங்கஜமும் சொன்னது போல  ஈஸ்வரன் பர்வதம் ஃபோன் செய்தார்களா? இல்லையா? மேலும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

ராமானுஜமும் அம்புஜமும் வீடு திரும்பியதும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு மருதுளாவையும் வேனுவையும் அழைத்து அனைவருமாக நடந்தவற்றை அவர்களுக்குள் உரையாடி பின் நிச்சயதார்த்த தேதியையும் கூறி அன்றே நிச்சயம் பண்ணிடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர். அதை மாப்பிள்ளை வீட்டாரிடமும் ஃபோனில் தெரிவித்தனர். ராமானுஜமும் அம்புஜமும் தங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும்  நிச்சயதார்த்திற்கு  அழைத்தனர். மற்றவர்களை திருமணத்திற்கு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களே இருப்பதால் விறுவிறுப்பாக வேலைகளில் இருங்கினர். அம்புஜம் பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு  நடந்த அனைத்து விவரங்களையும் கூறி நன்றியையும் தெரிவித்தாள். அதற்கு பங்கஜம்

என்னத்துக்கு இப்போ தாங்ஸ் எல்லாம் சொல்லர அம்பு…ஏதோ என்னால முடிஞ்சது. நீ என் தோழி மேனகாக்கு தான் தாங்ஸ் சொல்லனும் ஏன்னா அவ மூல்யமா தானே இந்த வரன் வந்தது. சரி உனக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இன்னும் நாலு நாள் தானே இருக்கு. போய் ஆகவேண்டியதை பாரு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஒரு ஃபோன் போடு போறும். பை த பை மாமியார் ஆக போர என் அக்கா அம்பு… பை… “

சரி பங்கு பை”

ராமானுஜத்தின் நண்பர்கள் விஷயத்தைக் கேள்வி பட்டதும் அவர்கள் அனைவரும் (ஒரு நாலு பேர். ராமானுஜத்திற்கு அதிக நண்பர்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் நாலு பேரும் உண்மையான நட்புடன் இருந்தனர்)  ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ராஜேஷ் பூ மற்றும் மாலைகள், சதாசிவம் பழங்கள், ஸ்வீட்கள், வெங்கட் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் சென்று வர வேன், வெற்றிமாறன் அன்று வேண்டிய காலை, மத்திய உணவு மற்றும் காபிடி  என ஒவ்வொரு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலானார்கள்.

அம்புஜம் தனது மகளுக்கு மேக்அப் போட அவர்கள் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஒரு அழகு நிலைத்தில் சொல்லி வைத்தாள். 

இப்படி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாம் மடமடவென நடந்தது மருதுளா வீட்டில். நமது மாப்பிள்ளை நவீன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை…. மிருதுளா என்ன ஆனாள்? தொடரைப் படிக்கும் வாசகர்களாகிய நாம்

தெரிந்துகொள்ள நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ஆகையால் வாருங்கள் போய் ஒரு எட்டு ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு வருவோம். 

ஈஸ்வரன் அவர் உறவினர்கள் அனைவருக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். அனைவருக்கும் தெரிவித்தப்பின் பர்வதம் கூறளானாள்

காலைல புடவ எடுக்க வெய்யிலில் போயிட்டுவந்ததால ஒரே தலைவலி. சரி ஏன்னா உங்க தங்கை அக்காக்கள் எல்லாரும் எப்ப வராளாம்? பேசாம நிச்சயதார்த்தத்தனைக்கு உங்க அக்காவையே சமைக்க சொல்லிடுங்கோ அப்பறம் நம்ம ஆம் ரொம்ப சின்னது அதனால உங்க அண்ணா ராசாமணி ஆத்துல வச்சுண்டுடலாம் அவராண்ட சொல்லிடுங்கோ. நம்ம பிச்சுமணியையும் என் அக்கா ரமணியையும் அவா ஆத்துக்கே போய் நிச்சயத்துக்கு அழைச்சுட்டு வரலாம். பூ மாலை பழங்கள் எல்லாம் பிச்சுமணி பார்த்துப்பான்.”

பர்வதம் பேசுவதிலிருந்து ஒன்றை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது அது என்னவென்றால் அவள் வீட்டுச் சொந்தங்களை மட்டும் மதிப்பவள் கணவர் வீட்டு சொந்தங்களை நன்றாக தனது கணவர் மூலமே வேலை வாங்கும் சிறந்த ரிங் மாஸ்டர். அடுத்தவர்களிடம் தங்களுக்காக இதை செய்ய மடியுமா என்றெல்லாம் கேட்க தயக்கேமே இல்லாதஅடுத்தவர்களை ஏதோ அவளுக்கு செய்ய கடமை பட்டவர்கள் போல ஒரு நினைப்பு வேற… என்ன மக்களே இதில் உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடு இருக்கிறதா?

ஈஸ்வரன் குடும்பத்தில் அவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு அண்ணன் ராசாமணி, இரண்டு அக்காக்கள் சொர்ணம், வரலட்சுமி, இரண்டு தங்கைகள் வசுந்தரா, சுபத்திரை. சொர்ணம் அனைவருக்கும் அக்கா ஆவார். இவருக்கு பர்வதத்தை அறவே பிடிக்காது. வரலட்சுமியையும் வசுந்தராவையும்  சமையலுக்கு வரச்சொல்லிருக்காள் பர்வதம். அவர்களும் தங்களது சகோதரனுக்காக மட்டுமே சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் பணத்தை விட மனிதர்களை பெரிதும் மதிப்பவர்கள். தங்களது சகோதரன் ஈஸ்வரன் எதுக்கோ வாக்கப்பட்டு முருங்கை மரம் ஏறி ஆக வேண்டியிருப்பதை புரிந்து அவருக்காக அவர் மேல்லுள்ள பாசத்தினால் செய்ய முன்வந்தனர். 

பர்வதம் வேண்டுமென்றே ஒரு சாதாரணமான ஒரு அழுது வடியும் நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவையை மிருதுளாவுக்காக  எடுத்தாள். அது பட்டுப்புடவை கூட இல்லை. ஆனாலும் அவளை கேள்விகேட்க யாரும் இல்லை அப்படியே கேட்டாலும் பிரயோஜனம் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்ததே. அவளை யாருமே திருத்த முயற்சிக்காமல் அவள் அப்படி தான் என்று விலகிச்சென்ற உறவினர்களே அதிகம்.

நிச்சயதார்த்தம் நாள் வந்தது பர்வதம் வீட்டார் அனைவரும் பர்வதம், ஈஸ்வரன், நவீன், ப்ரவீன் மற்றும் பவின் ராசாமணி வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்துவிட்டனர். வரலட்சுமியும் வசுந்தராவும் அன்று காலை முதல் சமயற்க்கட்டிலேயே இருக்கவேண்டியதாயிற்று.

அனைவரும் சேர்ந்து நிச்சயதார்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து சாஸ்த்திரிகளின் வரவுக்காகவும், பெண் வீட்டார் வரவுக்காகவும் காத்திருந்தனர்.

அன்று மாலை ராகுகாலத்திற்கு முன் ஒரு நாலு மணிக்கு சாஸ்த்திரிகள், தாய் மாமா பிச்சுமணி, பெரியம்மா ரமணி அவரவர் குடும்பத்துடன் ராசாமணி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

வாருங்கள் நம்ம மிருதுளா வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பி விட்டார்களா என்று தெரிந்துக்கொள்ளலாம்.

நிச்சயத்தன்று காலை அம்புஜம் வேனுவை கூப்பிட்டு மிருதுளாவோடு கோவிலுக்கு சென்று வரும்படி கூறி மிருதுளாவையும் நன்றாக கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நன்றாக எண்ணை தேய்த்து குளித்து ஆத்திப்பின்னலிட்டு அழகான புடவை உடுத்தி கோவிலுக்கு புறப்பட்டு அறையிலிருந்து வெளியே வந்ததும் அவள் சொந்தங்கள் அனைவரும் அவளைப்பார்த்து

 “மிருது உனக்கு கல்யாணகல வந்துடுத்து.”

லட்சணமா இருக்கா நம்ம மிருது. நவீன் குடுத்துவச்சவர்” 

என்றனர்

அம்புஜத்துடன் கூடப்பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் பாரிமளம், கோமளம், பங்கஜம். ஒரு அண்ணன் மணியன். 

ராமானுஜத்திற்கு ஒரே தம்பி ராமநாதன் அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இவர் மனைவி மேகலா. 

அக்காவும் தம்பியும் கோவில் சென்று வந்ததும் சற்றுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்து மத்திய உணவு உண்ட பின் ஒரு இரண்டு மணிக்கு அழகு நிலைத்தில் மிருதுளாவை கொண்டு விட்டான் வேனு. மிருதுளா அன்று தான் முதன்மதலில் மேக்அப் போட போகிறாள். 

அவளுக்கு மேக்அப் போட்டு பட்டுப்புடவை கட்டி அவள் வெளியே வந்ததும் வேனு அவளைப்பார்த்து கோபப்பட்டான். காலைல சிம்ப்ளா அழகா இருந்த மிருதுக்கா இந்த மேக்அப் உனக்கு சூட் ஆகலை…. எனக்குப்பிடிக்கலை

என்றதும் மிருதுவின் முகம் வாடியது. மேலும் வேனு  வீட்டிற்கு சென்று அனைத்தயும் கலைச்சுட்டு காலைல இருந்த மாதிரி இரு அக்கா என்றதும் அவளுக்கு அழுகை வந்தது. இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் வேன் அனைவரையும் ஏற்றிக்கொண்டு இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது. வேனு தனது தாயை அழைத்து வீட்டைத்திறக்க சொன்னான். அம்புஜம் வேனிலிருந்து இறங்கினாள்…

என்னடா வேனு இப்ப என்னத்துக்கு ஆம தொறக்கனும்? எல்லாரும் காத்துண்டிருக்கா நாழி ஆகறது”

என்று கூறிக்கொண்டே வீட்டை திறந்தாள். உடனே மிருதுளா அழுதுகொண்டே குளியலறைக்குள் சென்றால்…அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது இப்போ ஏன் பாத்ரூமுக்குள்ள போனாய்? என்னாட வேனு என்ன ஆச்சு”

அக்கா நீ உன் மேக்அப் எல்லாத்தையும் கலச்சுட்டு வா அக்கா”

அடேய் என்னடா அக்காளும் தம்பியுமா விளையாடரேங்களா. அடியே மிருது இப்ப வெளில வரல அப்பறம் …” என்று அம்புஜம் கூறிக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது…

டேய் வேனு இந்த மேக்அப் அழிய மாட்டேங்கறது டா. நான் என்ன செய்ய ?”

என்னது ?? ஏன்டி இப்படி பண்ணறாய்? சீக்கிரம் மொகத்த தொடச்சுண்டு வா. இதுக்கு மேல ஒன்னும் பண்ணிடாதே…நீ நல்லா தாம்மா இருக்க. வாம்மா நாழி ஆகறதோனோ எல்லாரும் காத்துண்டிருக்கா வாசல்ல”

பங்கஜமும், ராமநாதனின் மனைவி மேகலாவும் உள்ளே சென்றார்கள் …

என்ன வண்டி கிளம்பப்போறது. அத்திம்பேர் அங்க சத்தம் போடரார் இங்க அம்மாவும் புள்ளையும் பொன்னும் கூடிண்டு என்ன பண்ணறேங்கள்?”

ஏய் மிருது ஏன் ஒரு மாதிரி இருக்க?”

அவ தம்பிக்கு அவளோட மேக்அப் பிடிக்கலையாம் அதனால கலச்சுக்கப்போறேன்னு ஒரே அல்ச்சாட்டியம் பண்ணரதுகள் ரெண்டுமா. நான் என்னத்த பண்ண!”

டேய் வேனு உங்க அக்கா இதுவரைக்கும் மேக்அப் போட்டு நீ பார்க்காததால உனக்கு அப்படி தோனரது அவ்வளவுதான். அவள் அழகா தான் இருக்கா. தம்பி சொன்னானாம்..அக்கா மேக்அப்ப அழிக்கறாளாம்…நல்ல தம்பி ..நல்ல அக்கா…”

வாசலில் இருந்து ராமானுஜம்….

 “மணி மூன்றை ஆச்சு. இப்போ கிளம்பினாதான் ராகு காலத்துக்கு முன்னாடி அங்க எத்த முடியும். என்ன பண்ணரேங்கள் எல்லாருமா?!!”

நாலரை டூ ஆறு ராகு காலம் என்பதால் நாலு மணிக்கெல்லாம் ராசாமணி வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்ததிற்கு வேண்டியவற்றை அடுக்கி தயாராகி ஆறு மணிக்கு நிச்சயதார்த்ததை முடித்துக்கொண்டு இரவு உணவு உண்டு வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். 

ராமானுஜம் உறக்க சொன்னதும் அனைவரும் வீட்டைச் பூட்டிக்கொண்டு வேனில் ஏறினார்கள். சரியாக நாலு பத்துக்கு ராசாமணி வீட்டை சென்றடைந்தார்கள். ராசாமணி வீட்டிற்கு எதிர் விடு இவர்களுக்காக சுத்தம் செய்யது வைத்திருந்தனர். மிருதுளா வீட்டார் அனைவரும் அந்த வீட்டினுள் சென்று பழங்கள், பூக்கள், மாலைகள் அனைத்தையும் தாம்பாளத்தில் அழகாக அடுக்கி வைத்தனர். சக்கரையை ஒரு தாம்பாளத்தில் பரப்பி அதன் மேல் ஜெம்ஸ் மிட்டாயால் தனது அக்கா பெயரையும் வரப்போர அத்திம்பேர் பெயரையும் அழகாக பதித்தான் வேனு. 

இதற்கிடையில் அனைவருக்கும் காபி பறிமாறப்பட்டது. எல்லாம் தயார் ஆகவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருந்தது. மிருதுளா வீட்டார் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்த சீர்களுடன் ராசாமணி வீட்டிற்குள் சென்றனர். 

நிச்சயதார்த்தம் துவங்கியது. நவீனுக்கு கூட பிறந்த தங்கைகள் யாரும் இல்லாததால் அவன் அத்தைப்பெண் மிருதுளாவின் நாத்தநாராக இருந்து சம்பிரதாயங்களை செய்தார். 

நிச்சயம் ஆனதும் ராமானுஜம் வேனுவிடம் ஒரு அழகிய மோதிரத்தைக்கொடுத்து மாப்பிள்ளைக்கு போட்டுவிட சொன்னார். வேனுவும் நவீனுக்கு மோதிரம் போட அனைவரும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் அனைவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்தை பெற்றனர் நவீனும் மிருதுளாவும்.  வாழை இலை போட்டு இரவு உணவை ஈஸ்வரன் வீட்டார் பறிமாற பெண் வீட்டார் அனைவரும் உண்டு பின் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது மிருதுளாவும் அனைவருடனும் வேனில் ஏற முயன்ற போது பங்கஜம் அவளை நவீனிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நவீனிடம் பங்கஜம் கூறியதை மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தாள். பங்கஜமும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு…

என்ன இந்த பொன்னு இப்படி இருக்கா?”

ஆனாலும் இவ்வளவு வெகுளியா இருக்கப்படாது மிருது. நீ நிறைய கத்துக்கணும்…”

அம்புஜம் பர்வத்திடம் சென்று…

பர்வதம் மாமி நிச்சயத்தை அமர்க்களப்படுத்திட்டேள். ரொம்ப நல்லா நடந்தது. இனி எங்க மிருது உங்க பொன்னு.” என்றதும் பர்வதம் சட்டென்று…

அது கல்யாணத்துக்கு அப்பறம் தானே. இப்போ நிச்சயம் தானே முடிஞ்சிருக்கு. எல்லாரும் கிளம்பரா போல …உங்கள தேடப்போரா பாருங்கோ” 

என்றாள். இதைக்கேட்டதும் அம்புஜத்துக்குள் ஒரு கவலை பற்றியது. அந்த யோசனையிலேயே அவள் வேனில் ஏறி அமர்ந்தாள். அப்போது மேகலா 

என்ன மன்னி ஒரு மாதிரி இருக்கேள்? என்ன ஆச்சு?”

அதெல்லாம் ஒன்னுமில்லை காலையிலேருந்து ஒரே டென்ஷன் எல்லாம் நல்லப்படியா நடக்கணும்னு அதுதான் கொஞ்சம் அசத்தறது. வேறொன்னுமில்லை.”

அனைவரிடமும் மிருதுளாவின் குடும்பத்தினரும் ராமானுஜத்தின் நண்பர்களும் விடைப்பெற்றுக்கொண்டனர். வேனும் புறப்பட்டு சென்றது.

நம்ம மிருதுளா நவீன் நிச்சயதார்த்த்திற்கு வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

அடுத்து நிச்சயதார்த்ததிற்கு பின் கல்யாணத்திற்கு முன் வரை நடக்கவிருப்பதை வரும் செவ்வாய் அன்று வந்து தெறிந்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்……

நவீன் வீட்டார் அனைவரும் பெண் பார்க்கும் படலம் முடிந்தபின் வேனில் பர்வதம் வீட்டிற்கு திரும்பும்போது பெண் வீட்டாரையும் அவர்களின் விருந்தோம்பலையும் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.

 நவீன் பெரியம்மா 

நவீன் உனக்கு நல்ல பொன்னா அமைஞ்சிருக்காப்பா. ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு”

நவீனின் பெரியப்பா சுரேஷ் கிருஷ்ணா..

ஈஸ்வரா ஆத்துக்கு மாட்டுப்பொன் வரப்போரா… இனி உனக்கு ருசியா சாப்பாடு கிடைக்கப்போறது …என்ன சரியா…ஓகே பர்வதம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

பர்வதம் தனக்குள் முனுமுனுத்தாள்

ஆமாம் விளையாடராராம் …வேற வேலை இல்லை. அவர் தான் அப்படி சொல்லரார்னா இவரும் கேட்டுண்டு கெக்க புக்க னு சிறிச்சுண்டு இருக்கறத பாரு..என்னத்த சொல்ல” 

நவீன் பெரியப்பா …

என்ன பர்வதம் ஏதோ முனுமுனுன்னு சொல்லற!!! சத்தமாதான் சொல்லேன் எல்லாரும் கேட்ப்போமோனோ”

உடனே அக்காளை காக்க வந்தார் தம்பி பிச்சுமணி.

அத்திம்பேர் எல்லாருக்கும் கேட்கனும்னா அக்கா சத்தமாவே சொல்லிருப்பாளே….நீங்க புரிஞ்சுக்காத மாதிரி இப்படி கேட்க்கலாமா !!!”

என்னடா நவீன் இங்க தானே இருக்க?”

என்று பிச்சுமணி கேட்டதும் அனைவரும் நவீனை நகையாடி சிரிப்பு மழையில் நனைந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பிச்சுமணியின் மனைவியை என்றுமே பர்வதம் மதித்ததில்லை. அதைப்பற்றி பிச்சுமணியும் அக்காவை எதிர்த்து கேட்டதும் இல்லை. அதனால் அவர் மனைவி அம்பிகா மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். அன்று பெண் பார்ப்பதற்கு கூட பர்வதம் கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அனைவரும் வந்ததும் அம்பிகா ஓடி வந்து விவரங்களை கேட்டாள் அதற்கு பர்வதம் 

ம்ம்ம்… எல்லாம் சொல்லறோம் இப்ப தானே வந்துருக்கோம்”

அம்பிகா உடனே தான் பார்த்து வளர்ந்த நவீனிடம் கேட்டாள்

என்ன நவீன் பொன்னு ஓகே வா? டும் டும் டும் கல்யாணமா?”

ஆமாம் மாமி எனக்கு பொன்ன பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன் இனி நீங்க எல்லாருமா நிச்சயதார்த்ததுக்கு ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்கோ. நான் இந்த மாசம் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு ரிட்டேர்ன் ஆகனும்.. 

அதுக்குள்ள நடந்ததுனா நல்லாருக்கும்.‌..இல்லைனா தென் பிப்பிரவரி மாதம் தான் லீவ் கிடைக்கும்”

நவீன் பெரியப்பா ….

என்ன இவன் இப்படி சொல்றான். இன்னைக்கு பண்ணடு தேதி ஆகறது, இவன் இருப்பத்தைந்து கிளம்பறான் இடைல 13 நாட்கள் தானே இருக்கு!”

நான் என்ன பண்ண பெரியப்பா…என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.”

என்று கூறி உடை மாற்ற சென்றான் நவீன்.

உடனே நவீனின் மாமாவும் பெரியம்மாவும் காலண்டரில் நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர். பின் பிச்சுமணி தன் அக்காவைப்பார்த்து …

என்ன அக்கா நாங்க எல்லாரும் இன்னும் 13 நாள் தான் இருக்குனுட்டு நல்ல நாளெல்லாம் பார்க்கறோம் நீ என்ன ஏதோ யோசிச்சிண்டு இருக்க?”

உடனே பெரியப்பா சுரேஷ் மீண்டும் …

அது வேறோன்னும்மில்லடா பிச்சு மாமியாராக போராளோனோ அந்த கெத்து வந்துடுத்து போல. என்ன பர்வதம் கரெக்ட்டா சொன்னேனா….ஹா..ஹா..ஹா”

அத்திம்பேர் ப்ளீஸ் பீ சீரியஸ்…இப்போ அக்காவை கிண்டல் பண்ணறதுதான் முக்கியமா?”

ஓகே டா ….பர்வதம் காவலா. இனி உன் அக்காளை ஒன்னும் சொல்ல மாட்டேன்..போருமா?”

பர்வதம் அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் வர வாரம் பத்தொன்பதாம் தேதி சுப முகூர்த்த நாள்ன்னு காலண்டரில் போட்டிருக்கு நவீன் கிளம்பற தேதிக்குள்ள இந்த நாள் மாத்தரம் தான் சுப முகூர்த்த நாள். அன்னைக்கே நிச்சயம் பண்ணிண்டுடலாமா? என்ன சொல்லறேங்கள்?”

பர்வதம் உடனே…” நவீனிடம் கேட்டுக்கோங்கோ” என்று கூறி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

இதை கேட்டுக்கொண்டே வந்த நவீன் 

அது ஒன்னுமில்லை மாமா…. அம்மா வேண்டாம் என்று சொன்ன பொன்னை நான் ஓகே சொன்னதால் தான் இந்த ரியாக்ஷன்…அவள் நிறம் கம்மியாம் ஆள் தடியாம் …நீங்க எல்லாரும் பார்த்தேங்களே ….பெரியம்மா சொல்லுங்கோ.”

பொன்னு அத்தர நிறம் கம்மி எல்லாம் இல்லையே!! ஆளும் அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா…ஏன்டி பர்வதம் உன் கண்ணுல ஏதாவது பிரச்சினையா?”

என்று பர்வதத்தின் அக்கா ரமணி கூற அனைவரும் சிரித்தனர்.

நவீனுக்குதான் பிடிக்கனும் அவன் தான் அவளோட வாழப்போறவன். அவனுக்கு பிடிச்சிருக்கு ஸோ இதுல இனி நாம பெரியவாளா லட்சணமா கொழந்தகள ஆசிர்வாதம் பண்ணுவோம்”

 இரவு உணவு உண்டு அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். பர்வத்திற்கு அன்று உறக்கம் வரவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென யோசித்தாள்… மனதில் திட்டம் ஒன்று உதிக்க நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் பர்வதம் தனது வீட்டு தெருவில் மிருதுளாவின் அப்பா வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் பண்ணிப்புரியும் ரமணன் என்பவர் வீட்டிற்கு சென்று வந்தாள். 

அன்று மிருதுளாவின் தந்தை ராமானுஜத்தை அலுவலகத்தில் போய் சந்தித்தார் ரமணன். 

என்ன ராமானுஜம் மாமா பொன்னுக்கு கல்யாணமாமே! சொல்லவேயில்லை”

உனக்கு எப்படி தெரியும் நேத்துதான் பொன்ன பார்த்துட்டுப்போயிருக்கா அதுக்குள்ள உனக்கு ….”

ரொம்ப யோசிக்காதீங்கோ …நான் உங்களுக்கு சம்மந்தி ஆக போர ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஆத்து பக்கத்துல தான் இருக்கேன். மாமி என்னாண்ட ஒரு விஷயம் சொல்லி உங்கள்ட்ட சொல்ல சொன்னா”

என்னவாம்?” என்றார் ராமானுஜம்.

(அப்பொழுதும் தன் பெண் வாழ போகும் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவராயிற்றே அவர்களைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றில்லை ராமானுஜத்திற்கு. அவ்வளவு பொறுப்பானவர்.)

அது ஒன்னும்மில்லை மாமா நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு ஒரு ப்ரேஸ்ளெட்டும், மோதிரமும் போடனுமாம் அத சொல்ல மறந்துட்டாளாம் அது தான் என்னாண்ட சொல்லி அனுப்பினா…நானும் சொல்லிட்டேன் வரேன் மாமா”

இதை கேட்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது ராமானுஜத்திற்கு. உடனே ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டு வீட்டிற்குச் சென்று…

ஏய் அம்புஜம் அடியே அம்புஜம்.”

என்ன …னா  என்ன ஆச்சு ஏன் இவ்வளோ கோவமா இருக்கேங்கள்?”

என்ன நினைச்சுண்டிருக்கா அவா? நேத்தே தெளிவா பேசிடலாம்முனு சொன்னதுக்கு எங்களுக்கு ஒன்னும் வேண்டாம் அது இதுனு சபைல சொல்லிட்டு இப்போ அதுவும் அந்த ரமணனை தூது ஆனுப்பி மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம், ப்ரேஸ்ளெட் போடனும்முனு சொல்லி அனுப்பிருக்கா!!!! அவனெல்லாம் யாரு அவன் வந்து என்கிட்ட என்ன நக்கலா சொல்லறான் தெறியுமா? அப்படியே வேணும்னாலும் ஏன் அவாளுக்கு ஃபோன் போட்டு சொல்ல முடியாதோ? எனக்கு இந்த இடம் சரிவரும்முனு தோனலை” 

அச்சசோ அவசரப்படாதீங்கோ இத அவா தான் சொல்லி அனுப்பிருக்காளானு நமக்குத்தெரியாது இல்லையா? அதனால பேசாம இருப்போம்… அப்போ… அவாளே ஃபோன் போட்டு கேப்பாளோனோ… அவா கேட்கச்சொல்லிருந்தா! ” 

என்னமோ போ… சரி சாப்பாட்ட போடு வந்தது தான் வந்தேன் அத முடிச்சுட்டுப்போறேன்”

மறுநாள் காலையிலும் ரமணன் சென்று ராமானுஜத்தை சந்தித்து …

ஹலோ மாமா எப்படி இருக்கேங்கள்?”

இது வரைக்கும் நல்லாதான் இருந்தேன். இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்க?”

அது ஒன்னுமில்லை மாமா”

அப்படினா என்ன சும்மா பார்க்கறதுக்காக இத்தர தூரம் வந்தியாகும்?”

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் போங்கோ”

அய்யோ ராமா!!! விஷயத்தை சொல்லரயா நேக்கு நிறய வேல இருக்கு”

பர்வதம் மாமி உங்களாண்ட சொல்ல சொன்னதை சொல்ல தான் வந்தேன்”

என்னவாம் அந்த மாமிக்கு?”

அவாளுக்கு வரலட்சுமி விரதம் உண்டாம்  அதனால வெள்ளில ஒரு சொம்பும் அம்மன் முகமும் தந்திடுங்கோனு சொல்ல சொன்னா சொல்லிட்டேன்”

நீ யாரு அந்த மாமியோட புறாவா தூது அனுப்பிண்டே இருக்கா”

அவா சொல்ல சொன்னா சொல்லிட்டேன் இதெல்லாம் நீங்களே அவாள்ட்ட பேசிருந்தா அவா ஏன் என்ட்ட இப்படி சொல்லி அனுப்பப்போறா மாமா…சரி நான் வரேன்” 

என்று ரமணன் கூறியதும் ராமானுஜம் ஆத்திரம் அடைந்து அன்று லீவ் போட்டு வீட்டிற்கு சென்று …

அம்புஜம் நான்தான் அப்பவே சொன்னேனோ இல்யா இந்த இடம் நமக்கு ஒத்து வராது…சும்மா ஒவ்வொரு நாளும் அந்த ரமணனை அனுப்பி அது வேணும் இது வேணுமுனு கேட்கறது நல்லாவா இருக்கு? அவா பண்ணறது சரியில்லை இப்பவே ஃபோன போட்டு இந்த சம்மந்தத்தில் நம்மளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடபோரேன்”

ஏன் இன்னிக்கு என்ன கேட்டு அனுப்பிருந்தா?”

அவா வரலட்சுமி விரதத்திற்கு வெள்ளில முகமும் சொம்பும் வேணுமாம்…அந்த ரமணன் சொல்லறான் இதலெல்லாம் க்ளியரா பேசிருக்கனும்முனு ….ஏன் நான் பேசலையா அவாள்ட்ட நேரடியா கேட்கலையா சொல்லு”

என்னது வரலட்சுமி விரதமா!! கேரளா காராளுக்கு கிடையாதே பின்ன ஏன் கேட்டா? சரி இனி இத இப்படியே தொடர விட கூடாது நான் கெளம்பறேன். நம்ம ரெண்டு பேரும் இப்பவே அவா ஆத்துக்குப்போய் நேரடியா விஷயத்த சொல்லி என்ன ஏதுனு கேட்டுண்டு வரலாம் வாங்கோ”

இருவரும் புறப்பட்டு நவீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீனும் பர்வதமும் மட்டும் இருந்தனர். மாடியிலிருந்து அம்புஜமும், ராமானுஜமும் வருவதை கண்ட பர்வதம் ….நவீனை அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போகுமாறு வற்ப்புறுத்தினாள். ஆனால் நவீன் போகவில்லை. அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர் உடனே பர்வதம்…

வாங்கோ வாங்கோ என்ன திடிர்னு வந்திருக்கேங்கள் ” என்றதும் 

ராமானுஜம் சட்டென்று கோபத்தில்

நீங்களும் திடிர் திடிர்னு தானே ஒவ்வொன்னா கேட்டு அனுப்பறேங்கள்”

நவீன் எட்டிப்பார்த்தான் பின் எழுந்து சென்று..

வாங்கோ வாங்கோ உள்ள வாங்கோ”

நீங்களும் ஆத்துல தான் இருக்கேளா ரொம்ப நல்லதா போச்சு. “

என்ன சொல்லறேங்கள் எனக்கு ஒன்னும் புரியலை” 

உடனே அம்புஜம் 

இல்லை விஷயம் என்னனா…”

என்னத்துக்கு அவாள மாதிரியே இழுக்கறாய்? நான் நேரடியாவே கேட்கறேன் …..நீங்க என் பொன்னைப்பார்க்க வந்தப்போவே உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லச்சொன்னேனா இல்லையா அப்போ ஏதோ எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேங்கள் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாம் ஒகே ஆனால்  என் கூட வேல பார்க்குர ரமணன் கிட்ட மோதிரம்ப்ரேஸ்ளெட், வெள்ளில முகம், சொம்பு அது இதுனு ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னா கேட்டு அனுபறேங்களே இது நல்லா இருக்கா சொல்லுங்கோ சபேல வேண்டாம்னு சொல்லிட்டு தனியா இப்படி அதுவும் மூனாம் மனுஷாள விட்டு கேட்க சொல்லலாமா? எனக்கு மனசு கேட்கலை அதுதான் நாங்க ரெண்டு பேரும் நேரா பேசி க்ளியர் பண்ணிக்கலாம்னு வந்திருக்கோம்!”

ராமானுஜம் ஆவேசத்தில் பேசி முடித்ததும் அம்புஜம்

தப்பா எடுத்துக்காதீங்கோ அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார் ஆனாலும் உண்மை தானே மத்தவாள விட்டு கேட்க சொன்னதுக்கு பதில் நீங்களே ஒரு ஃபோன் போட்டு கேட்டுருக்கலாம்”

நடந்தது அனைத்தும் அப்பொழுது தான் நவீனுக்கு தெறிய வந்தது…அவன் யோசித்துக்கொண்டே …

ஆமாம்… ரமணன் மாமாட்ட இதெல்லாம் எங்காத்தேந்து யாரு கேட்க சொன்னாலாம்?”

பர்வதம் மாமி தான் கேட்க சொன்னதா சொன்னான்” என்றார் ராமானுஜம்

அதை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது பர்வதத்திற்கு ஆனாலும் சுதாரித்துக்கொண்டு

நானா ? நான் எந்த ரமணன் குமணன் கிட்ட எல்லாம் எதுவும் கேட்க சொல்லலையே” என்று முழு பூசணிக்காயை மறைக்கப்பார்தாள்.

ராமானுஜம் விடுவதாக இல்லை …” ஓ அப்படியா விஷயம் ஒகே மாமி ரமணனுக்கு என் பொன்னுக்கு நிச்சயம் ஆக போறத பத்தி நாங்க யாரும் சொல்லலை அது பாய்ண்ட் நம்பர் ஒன் இன்னும் பத்து நிமிஷத்துல ரமணனே வீட்டுக்கு வந்திடுவான் அவன் உங்க தெருவில் தான் இருக்கானாமே கூப்பிட்டு உங்க முன்னாடியே ஏன் அப்படி பொய் சொன்னான்ங்கறதையும் கேட்டு தெரிஞ்சுண்டே போறோம்”

பர்வதம் ரமணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் தனது தாய் குணத்தை தெரிந்ததனாலும்…இந்த பிரச்சினை பெரிசாகாமலிருக்க….நவீன் 

ஓகே நீங்க ஸ்டேரைட் ஃபார் வேர்ட் ஆ இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  நடந்ததெல்லாம் விடுங்கோ தப்பு எங்க யாரு பண்ணிருக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்கோ இதெல்லாமே எனக்கு தெரியாமல் நடந்திருக்கு ஆனாலும் மண்ணிப்பு கேட்டுக்கறேன். இனி இது மாதிரி நடக்காது. எதுவா இருந்தாலும் நீங்கள் என்னிடம் டைரக்ட்டா பேசிடுங்கோ அதுதான் எல்லாருக்கும் நல்லதுனு நான் நினைக்கறேன். அன்ட் நிச்சயதார்த்தம் 19த் வச்சுக்கலாமானு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கோ. ஏன்னா நான் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு திரும்பனும் என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் அன்னைக்கு காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.  இத விட்டா அப்பறம் பிப்ரவரியில் தான் லீவு கிடைக்கும். இன்னைக்கு சாயங்காலம் ஃபோன் போட்டு சொல்லலாம் என்று இருந்தோம் நீங்களே நேரா வந்ததனால சொல்லிட்டேன்”

ஐயோ மாப்பள மண்ணிப்பு எல்லாம் நாங்க எதிர் பார்க்கலை இனி இப்படி நடக்காம இருந்தா போரும். எதுவா இருந்தாலும் டைரெக்ட்டா எங்கள்ட்டயே கேளுங்கோ ப்ளீஸ். அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க மிருது குஜராத்துக்கு வரனுமா ” என்றாள் அம்புஜம்

அப்படியே ஃபாலோ பண்ணுவோம் அன்ட் எஸ் நாங்க குஜராத் தான் போகனும்”

மழ வரா மாதிரி இருக்கு நாங்க கிளம்பரோம். வரோம் மாமி. ஈஸ்வரன் மாமா வ விசாரிச்சதா சொல்லுங்கோ. வரோம் மாப்பள” என்றார் ராமானுஜம்.

அவர்கள் சென்றதும் நவீன் பர்வதத்தைப் பார்த்து 

ஏன் இப்படியெல்லாம் செய்யராய்? இனி இப்படி ஏதாவது பண்ணினயோ வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும்”  என்றதும் ஒன்றுமே நடக்காததுபோல….

நிச்சயதார்த்தத்திற்கு பொன்னுக்கு புடவை எடுக்கனும் மற்ற செலவெல்லாம் இருக்கு “

என்று கூறி பணம் வாங்கிக்கொண்டாள். 

ஈஸ்வரன் ஒரு பொறுப்பான  தந்தையாக என்றுமே இருந்ததில்லை. அவர் பொறுப்புடன் இருந்திருந்தால் நவீன் விருப்பப்பட்ட மருத்துவப்படிப்பு முடித்து ஒரு மருத்துவராக இருந்திருப்பான். அவரின் பொறுப்பின்மை மற்றும் கெட்ட பழக்கங்களால்  வேலையை இழந்தார். ஒரு காலத்தில் பெரிய குடிமகன், புகை அணையாத புகைவண்டி, வெற்றிலை பாக்கே தன்னை பார்த்து சற்று ஓய்வு கொடுக்க கெஞ்சும் அளவுக்கு வெளுத்துக்கட்டும் வெற்றிலை பிரியர். பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு அவர்களை தேடும் பெற்றோர்கள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் ஏழாவது படிக்கும் நவீனுக்கு தன்னை விட நான்கு மடங்கு எடையுள்ள தன் தந்தையை தேடி அலைந்து கண்டு பிடித்து அவரை சுமந்து  வீட்டில் கொண்டு சேர்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களை மீட்டெடுக்க போராடும் பெற்றவர்களைப்பற்றி நாம் அறிந்ததே ஆனால் இங்கோ அது தலைகீழாக இருந்தது. தனது தந்தையை தீய பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க பல வழிகளில் பலர் உதவியோடு போராடி வெற்றிக்கண்டான் நவீன்.

பர்வதம் பொறுப்பில்லாத, பேராசைக்கும் பொறாமைக்கும் சொந்தக்காரி ஆவாள். இப்படிப்பட்ட பெற்றவர்களையும், கூட பிறந்த தம்பிகளையும் காப்பாத்த வேண்டி பல சொந்தங்கள், நண்பர்கள் என எல்லார் வீட்டு வாசலிலும் பணத்திற்க்காக தனது தாயால் நிற்க வைக்கப்பட்டான் நவீன் தனது பண்ணி ரெண்டு வயதிலிருந்து. நல்ல தாய் என்றால் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து ஏன் பத்து வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்த்தாவது கௌரவமாக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருப்பாள். ஆனால் பர்வதம் நவீனை ஒரு ஏடிஎம் போலவே வளர்த்து வந்தாள். 

பெற்றோர்கள் பாலூட்டி சீராட்டி தோள்மீது தூங்க வைத்து வளரவேண்டிய குழந்தை தன் பெற்றோர்களை தோள்மீது சுமக்க ஆரம்பித்தது. ஊனமுற்ற பெற்றோர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் பொறுப்பற்ற சுயநலமான பெற்றோர்கள் என்றால் வாழ்க்கை நரகமே. ஆனாலும் அசரவில்லை நம் நாயகன் நவீன். 

பணத்திற்காக அடுத்தவர்களிடம் போய் நின்றால் என்னென்ன அவமானங்கள் நேரும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்ததனால் தான் ப்ளஸ்டூ முடித்ததும் ஆர்மியில் சேர்ந்துவிட்டான். அவனது முதல் தம்பி கவினுக்கு வேலை கிடைத்து அவன் குவைத்தில் பணிமாற்றம் ஆன பிறகு தான் நவீன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளான். இப்பொழுது புரிகிறதா நம்ம பர்வதத்திற்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை என்று. இந்த சம்மந்தம் என்றில்லை அவளுக்கு நவீன் திருமணம் செய்துக்கொள்வதிலேயே இஷ்டம் இல்லை. 

தொடரும்…..

மேனகா சென்றதும் பர்வதம் அந்த ஃபோட்டோவைப்பார்த்தாள். பின் தனது சகோதரனான பிச்சுமணிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி வரச்சொன்னாள். அவரும் அக்கா சொல்மிக்க மந்திரம் இல்லை என்றிருக்கும் தம்பியாச்சே உடனே பர்வதம் வீட்டில் விஜயம் செய்தார். அவர் நாஷ்னலைஸ்டு வங்கியில் மேனேஜராக இருக்கிறார். 

என்ன பர்வதம் அக்கா கல்யாணம் கதவ தட்டியாச்சோ? பொன்னு யாரு? அப்பா என்ன பண்ணரார்? விவரத்தை சொல்லு”

எல்லா விவரமும் இதோ இதுல இருக்கு. இந்தா இதப்படிச்சுண்டு இரு நான் உனக்கு காபி போட்டுண்டு வரேன்.”

சரி நம்ம நவீனான்ட சொன்னயோ? என்ன சொல்லறான் அவன்?”

சொன்னேன் அடுத்த வாரம் இங்க வரானாம் தீபாவளி வரதோனோ அதுக்காக …அப்படியே பொன்ன பார்த்துட்டு சொல்லரேன்னு சொல்லறான்”

அவன் சொல்லறதும் சரி தான். அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டானா பின்ன நமக்கும் வேல மிச்சம் பாரு”

அவன் பார்க்கறத்துக்கு முன்னாடி நாம ஒரு எட்டு போய் பார்த்து என்ன ஏதுங்கற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டு வருவோமா? பொன்னு ஃபோட்டல நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி தெரியரது…கொஞ்சம் ஆளும் தடியா இருப்பாளோனு தோனரது …அதுதான் போய் நாம பார்கலாமானு கேட்டேன். வர ஞாயிற்றுக்கிழமை போகலாமா?”

சரி அதுவும் சரிதான் நான் அம்பிகாவையும் கூட்டிண்டு வந்துடரேன். நாம சேர்ந்தே போகலாம்”

ஓக்..கே …ஆனா நீயும் நானும் மட்டும் அவா ஆத்துக்கு போனா போரும் உன் ஆத்துக்காரி அம்பிகா இங்கயே எங்க ஆத்துலேயே இருக்கட்டும்”

சரி க்கா உன் இஷ்ட்டம். அப்போ நான் கிளம்பறேன். ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் வரேன்”

பர்வதம் கணவர் ஈஸ்வரன்  பெண்வீட்டாருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது பெண்ணின் தாய் பரபரப்பானாள் எத்தனை பேர் வருவார்களோ? மிருதுளாவிடம் விவரத்தை சொல்லி  தயார் ஆக

சென்னாள். மிருதுளாவும் தாய் சொல்லை தட்டாமல் அவர் கூறியபடியே செய்தாள். அம்புஜம் மாலை சிற்றுண்டி செய்தாள். காபி போட இரண்டு பால் பாக்கெட் வைத்திருந்தாள். பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி

வரச்சொல்லிருந்தாள் ஆனால் அன்று பங்கஜத்தால் வரமுடியாத சூழ்நிலையானது. அம்புஜமும், ராமானுஜமும் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த பந்தகளிடம் என யாரிடமும் கூறவில்லை. அவர்கள் பார்த்து சம்மதித்தால் பின் அனைவரிடமும் கூறிக்கொள்ளலாம் என்றிருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர் அம்மா பர்வதம், தாய்மாமா பிச்சுமணி மற்றும் அவரின் இரண்டாவது தம்பி ப்ரவீன் ஆகிய மூவர் மிருதுளாவைப்பார்க்க வந்தனர். பர்வதம் மிருதுளாவை ஏற எறங்க பார்த்துக்கொண்டிருந்தாள்….பிச்சுமணி பேச்சுக்கொடுத்தார்… மிருதுளாவும் அவர்களுடன் சகஜமாக பேசினாள். 

அம்புஜம் காபிப்போட பாலை காய்ச்சும்போது இரண்டு பாக்கெட் பாலும்  திரிந்து போனது. பதற்றமானாள் உடனே ராமானுஜத்தை உள்ளே அழைத்து விஷயத்தை கூறினாள். அதற்கு அவர் ஒன்று போய் வேர பால் பாக்கெட் உடனடியாக வாங்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லையேல் வேறெதாவது யோசனை சொல்லிருக்க வேண்டும் ஆனால் அவரோ… தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் ஹாலில் அமர்ந்துக்கொண்டார். பொறுப்பில்லாத மனுஷனிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று தன் தலையில் அடிந்துக்கொண்டு வேனுவை அழைத்து பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி பின் அவர்களுக்கு காபி போட்டுக்கொடுத்தாள். அவர்கள் வந்த விவரத்தை எல்லாம் கலெக்ட் செய்ததும் வருகிறோம் என்று கூறி விடைப்பெற்றனர். ஹாலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த ராமானுஜம் அவர்களைப்பற்றி ஒரு விவரமும் கேட்டு தெறிந்துக்கொள்ளாதது அம்புஜத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ப்பார்த்து சென்ற விவரங்கள் எதுவும் மாப்பிள்ளை நவீனுக்கு சொல்லவில்லை. நவீன் தான் செய்யும் வீக்லீ காளில் தான் விவரங்கள் தெறிந்துக்கொண்டான்.

நவீன் இந்திய ராணுவத்தில் தனது பதினேழு வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது புது தில்லியில் போஸ்ட்டிங் போடப்பட்டு அங்கு வசித்து வருகிறார். 

பர்வத்திற்கு கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா ரமணி, தம்பி பிச்சுமணி இருவரும் பர்வதம் இருக்கும் ஊரான திருச்சியிலேயே வசித்து வருகின்றனர்.  தங்கைகள் லட்சுமி, லலிதா இருவரும் திருமணம் முடித்து தில்லியில் வாழ்ந்து வருகின்றனர். 

பர்வதம், ஈஸ்வரன் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். ஈஸ்வரன் அவர் செய்து வந்த பணியிலிருந்து வீ.ஆர்.ஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளியில் செட்டில் ஆகிவிட்டார், பர்வதம் இல்லத்தரசி என்று தான் மேனகா மூலமாக மிருதுளா குடும்பம் தெரிந்துக்கொண்டது. மூத்தவன் பெயர் நவீன் நமது கதையின் நாயகன், இரண்டாவது கவின், மூன்றாவது மகன் ப்ரவீன், கடைக்குட்டியின் பெயர் பவின். நவீனின் ஜாதகமே நமக்கு தான் தெரியுமே மற்றவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். கவின் குவைத்தில் பணிபுரிந்து வருகிறான். ப்ரவீன் மற்றும் பவின் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்றனர். 

நவீன் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள் அப்போது பர்வதம் நவீனிடம்

பொன்னு தடியா இருக்கா. நிறம் வேற கம்மி எனக்கென்னவோ இந்த சம்பந்தம் வேண்டாம்னு தோனறது. நான் அவாளுக்கு ஃபோனை போட்டு சொல்லிடவா?

இல்ல அவசரப்படாதே…மாமா தானே உன்னோட வந்தார் நான் அவர்ட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லறேன். 

என்றான் நவீன். அடுத்த நாளே தனது பிச்சுமணி மாமாவை காண அவர் வீட்டுக்குச்சென்றான். இருவரும் அவரவர் பணியைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர் பின் நேராக விஷயத்திற்கு. வந்தான் நவீன். 

மாமா நீங்களும் அம்மாவோட பொன்னுப் பார்க்க போனேளே பொன்னு எப்படி என்ன ப்ரோஸீட் பண்ணலாமா …ஏன் கேட்கறேன்னா நான் மொதோ மொதோ பார்க்கப்போர பொன்னு இவள் அதனால ரிஜக்ட் பண்ண வேண்டாம்னு தோனறது அதுவும் அவளுக்கும் என்னை பிடித்திருந்தால். வாட் டூ யூ ஸே

என்ன பொருத்தவரைக்கும் நல்ல குடும்பமா படரா. பொன்னும் நல்லா இருக்கா அன்ட் நல்லா பழகரா பேசரா. ஸோ ஐ திங்க் யூ கேன் ப்ரோஸீட் அன்ட் ஐ ஃபீல் யூ ஷுடுன்ட் மிஸ் ஹெர். 

ரொம்ப தாங்ஸ் மாமா. அம்மா ஏதேதோ சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா.. ஆனா இப்போ ஐ ஆம் கிளியர். எனக்கும் இரண்டு வாரம் தான் லீவ் அதனால இந்த சன்டேவே பொன்ன பார்க்கலாம்முன்னு இருக்கேன். இத அப்பா அம்மாட்டயும் சொல்லி அவாள்ட்டயும் சொல்ல சொல்லிடறேன். நான் கிளம்பறேன்.

ஆல் தி பெஸ்ட் ரா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். லெட் அஸ் மீட் ஆன் சன்டே. பத்திரமா ஆத்துக்கு போ.

ஓகே மாமா அன்ட் மாமி பைய்.

வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணைப்போய் ஒரு முறைப்பார்த்துவிட்டு வந்திடலாம் அப்புறம் டிசைட் பண்ணலாம் என்று கூறி வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவிக்க  சொனான் நவீன். பர்வதத்திற்கு துளியும் இஷ்ட்டமில்லை காரணம் ஏனென்று அவளுக்கு மட்டுமே தெரியும். அறை மனதோடு அம்புஜத்துக்கு ஃபோன் போட்டு தங்களின் மகன் வரவைத்தெரிவித்து அப்படியே பெண் பார்க்க ஒரு பத்துப்பேர் வருவதாகவும் தெரிவித்தாள். 

அம்புஜம் ஃபோனை வைத்ததும் நேராக கடவுளிடம் சென்று தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை வீட்டிலிள்ள ராமானுஜத்திடமும் வேனுவிடமும் மற்றும்  இருவரும் தனது தங்கை பங்கஜத்திடமும், ராமானுஜத்தின் தம்பி ராமநாதனிடமும் கூறி அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ராமானுஜத்தின் நண்பர் ஒருவர் விஷேஷங்களுக்கு சமையல் செய்பவர். அவரை அன்று மாலை டிபன் செய்ய வரவழைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டார் மாலை 3:30 மணிக்கு மிருதுளாவைப் பார்க்க அவள் இல்லம் வந்தனர். அனைவரையும் ராமானுஜமும் அம்புஜமும் வரவேற்று வீட்டு ஹாலில் அவர்களை அமர வைத்தனர். பின் நவீன் வீட்டார் மிருதுளா வீட்டாருடன் ஒருவருக்கொருவர் விசாரித்து யார் என்ன உறவு என்பதை எல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நவீன் தன் நண்பனிடம் என்னட இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க ஆனா பொன்ன காட்ட மாட்டேங்கறாங்க என்று முனுமுனுக்க அதை கேட்ட மாமா பிச்சுமணி…

சரி நாழி ஆரது…இப்பவே மணி நாலாச்சு…நாலரைக்கு ராகுகாலம் தொடங்கரத்துக்கு முன்னாடி பொன்னப்பார்த்து பேச வேண்டியது எல்லாம் பேசிடலாமே அப்பறம் சாவகாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அம்புஜம் மாமி பொன்ன வரச் சொல்லுங்கோ.

பங்கு நீ போய் மிருதுவ அழைச்சிண்டு வா. 

மிருதுளா வந்தாள். அனைவரையும் நமஸ்க்கரித்து சகஜமாக எல்லோருடனும் பேச ஆரம்பித்தாள். நவீனுக்கு அவளைப்பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது ஆனால் அவனுக்கு ஏதோ அவளிடம் சொல்ல

வேண்டியிருந்ததால் தனியாக பேச அனுமதிக்கேட்டான். 

அம்புஜமும், ராமானுஜமும் சரி என்று சொல்ல மிருதுளா எழுந்து நவீனை அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே அறைக்கு அழைத்துச்சென்றாள். அந்த அறையின் வாசலில் பங்கஜத்தின் கணவரும், ராமநாதனும்

நின்றுக்கொண்டு கவனித்துக்கொண்டே இருந்தனர். முதலில் நவீன் பேசலானான்..

ஹாய்! என் பேரு நான் என்ன வேலை பார்க்கறேன் என்ற விவரமெல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். என்ன உனக்கு பிடிச்சிருக்காங்கறது எனக்கு தெரிஞ்சிக்கனும். அதுக்கு முன்னாடி என்னைப்பற்றிய உனக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லறேன் அப்புறம் நீ என்னை பிடிச்சிருக்கானு சொல்லு போரும். ஓகே.

ஓகே சொல்லுங்கோ 

எனது இந்த தலைமுடி டிரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டது. இத சொல்லி உன் விருப்பத்த தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசனும்முனு வந்தேன். நான் சொல்ல நினைத்தது இதுதான். இனி உனக்கு என்னிடம் சொல்லவோ இல்ல கேட்க்கவோ ஏதாவது இருந்தா கேட்கலாம். யோசித்து பதில் சொன்னாப்போரும். 

என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு பிடிச்சதனாலதான் என்னைப்பற்றிய விஷயத்தை ஷேர் பண்ணரேன். எனக்கு உன் விருப்பம் தெறிஞ்சுக்கனும். 

எனக்கும் இப்படி வெளிப்படையா இருக்கிற உங்களைப் பிடிச்சிருக்கு.

சரி எல்லாரும் வெளியே வேயிட் பண்ணரா வா போகலாம்.

மிருதுளாவின் சித்திகளும் சித்தப்பாக்களும் அவளை சுற்றிக்கொண்டு என்ன ஆச்சு என்ன சொன்னார்என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். அவளும் உடனே ஹாலுக்குச் சென்றாள்.

மணி நாலரை ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சட்டுபுட்டுனு அடுத்தது என்னு சொல்லுங்கோ என்றார் நவீனின் பெரியப்பா.

பர்வதம் மெதுவாக தாங்கள் கலந்தாலோசித்து முடிவை சொல்லி அனுப்பறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று நவீன் 

எதுக்கு இழுத்தடிச்சுண்டு எனக்கு மிருதுளாவ பிடிச்சிருக்கு அவளக்கு என்ன பிடிச்சிருக்கானு கேளுங்கோ 

அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தது. மிருதுளாவும்

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.

என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் பர்வதத்தைத்தவிர.

ராமானுஜம்  அவர் தரப்பை கிளியர் செய்துக்கொள்ள …

எல்லாம் சரி… எனக்கு ஒரு பொன்னுதான். எங்களாள முடிஞ்சதை நிச்சயமாக நாங்க செய்வோம். ஒரு நாற்ப்பத்தஞ்சு பவுன் நகைவெள்ளி ஜாமான்கள், வீட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள் அன்ட் கல்யாணத்தை ஜோரா பண்ணறோம். என்ன சொல்லறேங்கள். உங்களோட எதிர்ப்பார்பையும் சொல்லிட்டேங்கள்னா இப்பவே டிசைட் பண்ணிடலாம் அப்பறம் நாள பின்ன அது சரியில்ல இது இல்லனு எல்லாம் வரப்படாதோனோ அதுதான் …தப்பா எடுத்துக்காதீங்கோ என்னால முடிஞ்சத நான் சொல்லனோமோ அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.  இனி நீங்கதான் சொல்லணும்.

இதை கேட்டதும் நவீன் சட்டென்று எழுந்து எனக்கு உங்க பொன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனால் இந்த நகை பாத்திரம் ஒன்னும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ். 

என்றதும் பர்வதத்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது. அவளுக்கு மிருதுளாவை நவீனுக்கு கட்டிவைக்கவே விருப்பமில்லை இதில் நவீன் வேறு வரதட்சணை ஏதும் வேண்டாமென்று சொன்னதில் அவள் அதிர்ந்து போனாள். 

ராமானுஜம் விடாமல்….

என்னால் முடிந்ததை நான் சபையில் சொல்லிவிட்டேன் அதை என் பொன்னுக்கு நிச்சயம் செய்வேன். நீங்கள் வேண்டாமென்பது உங்கள் விருப்பம். அதை சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. சரி எல்லாரும் சாப்பட வாங்கோ 

என்று கூறி இலைப்போட்டு மாலை சிற்றுண்டி பறிமாறப்பட்டது. அனைவரும் உணவருந்தியப்பின் நவீன் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு தெறிவிப்பதாக கூறி விடைப்பெற்றனர். 

அம்புஜம் மிருதுளாவை முத்தமிட்டாள் பின் நேராக பூஜை அறைக்குச்சென்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். வீடே சந்தோஷ வெள்ளத்திலிருந்தது.

தொடரும்…..

RTA வில் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தேன். அதில் நான் எட்டாம் தேதி பதிவு செய்திருந்த ரோட் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும். அந்த டெஸ்ட்டை மார்ச் 13 ஆம் தேதி எடுக்கும் படியும் இருந்தது. அதைப் பார்த்ததும் “அச்சச்சோ அதுக்கு இன்னும் அஞ்சு நாளு இருக்கே! அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டேன்னா!!!என்று எண்ணி அதற்கு முன்னதாக ஏதாவது டேட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறிக்கொண்டே வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன். விவரத்தை கூறி ஏன் எனது பரீட்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று முதலில் கேட்டேன். அதற்கு அந்த பக்கமிருந்த பெண்மணி ஏதோ RTA வில் சிஸ்டம் இஷுஸ் என்று கூற…சரி என்னவோ இருக்கட்டும், எனக்கு 13 ஆம் தேதிக்கு முன்னாடி ஏதாவது ஸ்லாட் கிடைக்குமா என்று கேட்க அனைத்து ஸ்லாட்டுகளும் ஃபுல் என்றும் வேண்டுமெனில் அதற்கு அடுத்த ஸ்லாட்டான பதினாறாம் தேதி பதிவு செய்துக் கொள்லாம் என்று கூறினாள். அதை கேட்டதும் வேக வேகமாக “இல்லை இல்லை பதிமூன்றாம் தேதியை இருக்கட்டும். பரவாயில்லை. தாங்க்ஸ்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு கணவரை பார்த்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர். “பரவாயில்லை அதெல்லாம் ஒண்ணும் மறக்க மாட்ட. சைக்கிள், சுவிம்மிங், கார் இதெல்லாம் ஒரு தடவ காத்துண்டா எப்போதும் மறக்காது. ஸோ ஜஸ்ட் சில்” என்று கூறி சென்றார். வேற என்ன பண்ணுவது? பதிமூன்றாம் தேதிக்கு காத்திருந்தேன்.

மார்ச் பதிமூன்றாம் தேதி வந்தது. இம்முறை பரீட்சை காலை எட்டு மணிக்கு பதிவாகி இருந்தது. இந்த தடவை வேறு ஒரு முக்கியமான கால் இருப்பதால் என் கணவர் வரவில்லை. என் மகன் தான் அவரின் காரில் அழைத்துச் சென்றார். நான் ஏழரை மணிக்கெல்லாம் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் சென்று அமர்ந்தேன். மணி எட்டு ஆனது. மகனிடமிருந்து ஒரு மெஸேஜ் வந்தது. டெஸ்ட் ஸ்டார்ட்டட்டா? என்று. அதற்கு நான் இன்னும் இல்லை காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தேன். உடனே “நோ டென்ஷன். கம் அவுட் வித் லைசென்ஸ். ஆல் தி பெஸ்ட்” என்று மீண்டும் ஒரு மெஸேஜ் அனுப்பினார். நானும் “தாங்க்ஸ். வில் டூ மை பெஸ்ட்” என்று டைப் செய்து அனுப்பியதும் என் பெயரை அழைத்தார் அரபு நாட்டு பெண் ஆய்வாளர். உடனே எழுந்து “எஸ்” என்று கூறினேன். அன்று போலவே இன்னும் இருவர் பெயர்களை அழைத்தார். ஆனால் மூவரில் இருவர் மட்டுமே இருந்தோம். அந்த ஆய்வாளர் மூன்றாவது நபருக்காக காத்திருக்காது எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங்கிற்குள் சென்றார்.

அங்கே போனதும் என்னுடன் வந்திருந்த பெண்மணியை முதலில் காரை ஓட்ட சொன்னார். என்னை இரண்டாவதாக ஓட்டச் சொன்னார். அதை கேட்டதும் அப்பாடா! என்று எனக்கு இருந்தது. அந்த பெண் முதலில் காரில் ஏறியதும் சில மணி துளிகள் ஆய்வாளர் அவரிடம் மிகவும் சகஜமாக பேச்சுக் கொடுத்தார். பிறகு காரை வெளியே எடுக்க சொன்னார். அந்த பெண்ணும் நிதானமாக காரை வெளியே எடுத்து ஓட்டத் துவங்கினாள். அவரை உள் சாலைகளில் எல்லாம் ஒரு பத்து நிமிடங்கள் ஓட்ட வைத்துவிட்டு காரை ஓரமாக நிப்பாட்ட சொன்னார். பின் நெக்ஸ்ட் என்று கூறியதும். அந்த பெண் பின்னால் வந்து அமர நான் முன்னால் டிரைவர் சீட்டில் அமர்ந்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கையில் ஆய்வாளர் என்னிடம் நான் அணிந்திருந்த டிரஸ் நன்றாக இருப்பதாகவும் அதை எங்கு வாங்கினேன் என்றும் கேட்டார். நானும் இந்தியாவில் வாங்கினேன் என்று பதில் கூற, அவரோ வாவ். இட்ஸ் வெரி நைஸ் டாப்ஸ் என்று கூறி வண்டியை எடுக்க சொன்னார். அவருடனான அந்த சில மணித் துளி உரையாடல் என் பதற்றத்தை குறைத்தது. அதற்காக தான் அவர் பேச்சுக் கொடுத்தாரோ என்னவோ!!

அதன் பின் வண்டியை எடுத்தேன். உள் சாலைகளில் சற்று நேரம் இடது வலது என்று திருப்பி திருப்பி ஓட்ட வைத்தவர் நேராக பிரதான சாலையில் சென்று இணையும் படி கூறினார். நானும் வகுப்பில் கற்றுக் கொண்டது போலவே ஓட்டினேன். அறுபது ஸ்பீடில் ஓட்டிக் கொண்டிருந்த என்னிடம் சட்டென ரைட் லேனுக்கு மாறும் படி கூறினார் ஆய்வாளர். நானும் மாறினேன். பின் ரைட் கட் எடுத்து பிரதான சாலையில் இருந்து உள் வழி சாலைக்கு போக சொன்னார். போனேன். பத்து நிமிடங்கள் ஓட்டி முடித்ததும் கடைசியில் “டேக் ரைட் ப்ளீஸ்” என்றார், பார்த்தால் எங்கிருந்து புறப்பட்டோமோ அதே இன்ஸ்டிடியூட் வாசலில் வந்து விட்டோம். காரை எடுத்த இடத்தில் கொண்டு போய் நிப்பாட்டும்படி சொன்னார். நானும் நிப்பாட்டினேன்‌.

வண்டியை நிப்பாட்டியதும் அவர் எங்கள் இருவரையும் பார்த்து
“நீங்கள் இருவரும் நன்றாக ஓட்டினீர்கள். தவறுகள் எதுவும் இழைக்காததால் இருவருமே பாஸ். முதல் தளத்திற்கு சென்று உங்கள் லைசென்ஸை பெற்றுக் கொள்ளுங்கள்”

என்று கூறினார். அதைக் கேட்டதும்
நாங்கள் இருவருமே மகிழ்ச்சியில் அந்த ஆய்வாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். பின் அங்கிருந்து நேராக என் மகன் அமர்ந்திருந்த வரவேற்பு அறைக்கு சென்று

“ஆதி! அம்மா பாஸ் ஆயிட்டேன்”

என்று கூறி கட்டிக்கொண்டேன் அவரும்

“வாழ்த்துக்கள் மா”

என்று என்னை தட்டிக் கொடுத்தார். பின் இருவரும் முதல் தளத்திற்கு சென்று கட்ட வேண்டிய பணத்தை செலுத்தியதும் “நியூ டிரைவர்” என்ற ஸ்டிக்கரை என் கையில் தந்து, ஒரு டோக்கனையும் தந்து அமர்ந்திருக்கும் படி கூறினர். நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது என் கணவருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பி நான் பாஸ் ஆனதை தெரிவித்தேன். சற்று நேரமானதும் எனது டோக்கன் நம்பர் பளிச்சிட்டது. உடனே சென்று எனது அடையாள அட்டையை கொடுத்தேன். சில நொடிகளில் என் கையில் பிரிண்ட்டரில் இருந்து சுட சுட லைசென்ஸை தந்தனர். அதை பெற்றுக் கொண்டு அதில் எனது பெயர் மற்றும் லைசென்ஸ் எக்ஸ்பிரேஷன் தேதி போன்றவற்றை சரி பார்த்து நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன். என் மகனிடம் லைசென்ஸை கொடுத்தேன். அவரோ அதை ஃபோட்டோ எடுத்து அவர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.

இருவருமாக இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியே வந்தோம். என் மகன் அவரின் காரில் “நியூ டிரைவர்” ஸ்டிக்கரை ஒட்டினார். பிறகு என்னை அவரின் காரை ஓட்ட சொன்னார்.

“ஆ!!! அப்பாவோட வரும் போது ஓட்டரேனே”

என்றேன்.

“அதுதான் லைசென்ஸ் குடுத்துட்டா இல்ல. அப்புறம் என்ன? சும்மா ஓட்டுமா”

என்று கூறி அவர் டிரைவர் சீட் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். எனக்கோ தயக்கம்! ஏனெனில் எங்கள் வீடு இருபது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது மேலும் துபாய் ஷேக் சாயத் ரோடு வழியாக தான் எங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அந்த ரோட்டில் ஸ்பீடு லிமிட் நூற்றி இருபது. இவை எல்லாத்தையும் மனதில் அசைப்போட்டுக் கொண்டே காருக்கு வெளியே நின்றிருந்த என்னிடம் காரின் கதவை திறந்த என் மகன்,

“அம்மா உன்னால ஓட்ட முடியும்ன்னு தானே லைசென்ஸ் குடுத்திருக்கா. அப்புறம் என்னமா. வா மா ஓட்டு பயப்படாதே!”

என்றார். அவரின் வார்த்தைகள் ஒரு தெம்பு கொடுத்தது உடனே சரி என்று டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

அன்று வரை அதே ஷேக் சாயத் ரோட்டில் கணவர் அல்லது மகன் காரை ஓட்ட நான் அமர்ந்து சென்றது தான் அதிகம். அந்த ரோட்டில் நான் கார் ஓட்டுவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நடந்துக் கொண்டிருந்தது. காலையில் நாங்கள் நேராக பரீட்சைக்கு சென்றதால் பிரேக்பாஸ்ட் அருந்தவில்லை. எனவே நேராக என் மகனுக்கு மிகவும் பிடித்த பிக்கானேர் வாலா ரெஸ்டாரன்ட்டுக்கு ஓட்டிச் சென்றேன். அதை பார்த்த மகன்

“அம்மா எங்க போற?”

என்று கேட்க.

“ம்…உனக்கு ட்ரீட் தர தான். வா… வா”

என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கும் எனக்கும் பிடித்த உணவை ஆர்டர் செய்தோம். அப்போது அலுவலக காலில் இருந்த என் கணவர் அது முடிந்ததும் எங்களது மெஸேஜை பார்த்து என்னை கைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு பிடித்த உணவையும் பார்சல் செய்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு நேராக வீட்டுக்கு ஓட்டிச் சென்று எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன். பின் என் மகனிடம்

“எப்படி ஓட்டினேன்”

என்று கேட்டேன். அவரோ

“சூப்பரா ஓட்டின”

என்று கூறியதும் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

இதற்கு முன் பல பரீட்சைகள் எழுதியுள்ளேன். பல போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் வராத பதற்றம் ஏன் இந்த கார் டிரைவிங் பரீட்சைகளில் வந்தது? என்று யோசித்தேன். அதன் விளைவாக ஒன்றை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால்
ஒரு விஷயத்தை நாம் செய்ய முற்படும்போது பலர் பலவிதமான அபிப்பிராயங்களை கூறுவர் ஆனால் அதை கேட்டுக் கொண்டு அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது இல்லை அதில் எவ்வளவு நமக்கு வேண்டியது உள்ளது என்பதை மட்டும் பிரித்தறிந்துக் கொண்டோமே என்றால் வாழ்க்கை சிறக்கும். அதை விடுத்து கேட்டது அனைத்தையும் மனதில் ஏத்திக் கொண்டோமே என்றால் குழப்பம் தான் நீடிக்கும்.

கார் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப் போகிறேன் என்று சொன்னதுமே பலர் என்னிடம் அது மிகவும் கஷ்டம், அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்து விடாது. பணமும் நேரமும் தான் விரயம் ஆகும், போன்ற அபிப்பிராயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அது அவர்கள் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் அல்லது அவர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கலாம் இல்லையா! அவற்றை பிரித்து பார்க்காது அவை அனைத்தையும் மனதிற்குள் பதிய வைத்ததால் பயம் என்னும் வேதாளம் என் மேல் தொற்றிக் கொண்டது. அதனால் பதற்றம் ஏற்பட்டது. பதற்றம் ஆனதால் பல முறை தோல்வியுற்றேன்‌. ஆனால் விடா முயற்சியால் வெற்றியும் கண்டேன்.

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை, முயற்சி திருவினையாக்கும் ஆகிய அனைத்து வாக்கியங்களும் என் விஷயத்தில் நிரூபணமானது.

எனக்கு இருந்த பயத்திற்கு இன்னுமொரு முக்கிய காரணம் நான் அந்த வகுப்புகளுக்கும் பரீட்சைகளுக்குமாக செலவழித்த பணம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது வீணாகிவிடக் கூடாதே என்ற எண்ணம் பயத்தை கொடுத்தது. பயம் பதற்றத்தை கொடுத்தது. பதற்றம் பல முறை தோல்வியுறச் செய்தது. இறுதியில் உழைத்த காசு என்றும் வீணாவதில்லை என்ற உண்மையை மீண்டும் புரிய வைத்தது.

காரணமின்றி காரியமில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மார்ச் மாதம் வரை நான் மேற்கொண்ட டிரைவிங் வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்! வாழ்க்கை நமக்கு பலவிதத்தில் பலவகையான பாடங்களை பல ரூபங்களில் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அவற்றை கற்றுக் கொண்டு அதற்கேற்றார் போல் வாழ்வதும் சரி இல்லை அதற்கு மாறாக அவற்றை கற்க மறுத்து வாழ்க்கையில் வீழ்வதும் சரி அவரவர் விருப்பம்.

எனது இந்த ஓட்டுனர் உரிமம் கட்டுரையை படித்து என்னுடன் எனது வகுப்புகளிலும் பரீட்சைகளிலும் பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் பயணம் தொடரும். உங்கள் அனைவரின் பயணங்களும் இனிதாக அமைந்திட எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

❤️முற்றும்❤️

பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி வந்தது. அன்று மகனுக்கு கல்லூரியில் வகுப்பு இருந்ததால் அவரால் வர முடியவில்லை. கணவர் அவர் காரில் அழைத்துச் சென்றார். மதியம் 1 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பரீட்சை 2 மணிக்கு தான். அதுவரை என்ன செய்வது என்று யோசித்தோம். கணவர் அவரின் லேப்டாப்பை திறந்து வேலையில் மூழ்கினார். நானும் சற்று என் வேலையை பார்க்கலாமென்று நினைத்து எனது லேப்டாப்பை திறந்தேன். ஆனால் மனம் முழுவதும் ரோட் டெஸ்ட்டில் மூழ்கி இருந்தது. என்னை கவனித்த என் கணவர். நீ இப்போ வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம அமைதியா உட்காரு போதும் என்றார். வேலையில் நாட்டம் இல்லாதிருந்த நானும் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமரலாம் என்று நினைத்து கண்களை மூடினேன். அப்ப பார்த்து நான் டிரைவிங் வகுப்புகளில் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வரிசைக் கட்டிக்கொண்டு நான்… நீ என்று போட்டிப் போட்டுக்கொண்டு கண்முன் வர சட்டென கண்களை விழித்துக் கொண்டேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் நேரம் ஒன்றரை என்று காட்டியது உடனே கணவரிடம் சொல்லிக்கொண்டு (போருக்கு போகும் கணவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு செல்வது போல்😉) பெண்களுக்கான காத்திருப்பு அறைக்குள் சென்று அமர்ந்தேன்.

பக்கத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் பேச்சுக் கொடுக்க நானும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடனான அந்த பேச்சு என்னை சற்று நேரம் பரீட்சை பற்றிய எண்ணத்தில் இருந்து விடுவிக்க ஏதுவாக இருந்தது. அப்போது கருப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்த அரபு நாட்டை சேர்ந்த அழகான பெண்மணி ஒருவர் கண்களில் கூலர்ஸுடன் உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் முதலில் “பார்வதி” என்று என் பெயரை அழைக்க நான் “எஸ்” என்று எழுந்து அவர் அருகே சென்றதும், அவர் இன்னும் இரண்டு பெண்களின் பெயர்களை அழைக்க அவர்களும் எழுந்து வந்ததும். எங்கள் மூவரையும் அவர் பின்னால் வரச் சொன்னார். நாங்களும் அவர் பின்னால் சென்றோம்.

RTA ரோட் டெஸ்ட்டுக்கான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. அங்கே சென்றதும் அவர் எங்கள் பக்கம் திரும்பி “பார்வதி நீங்கள் தான் முதலில் காரை ஓட்ட வேண்டும் அடுத்தது நீங்கள் அதுக்கு அடுத்தது நீங்கள்” என்று எங்களிடம் கூறி ஒரு வண்டியை காட்டி ஏறச் சொன்னார்.

முதலில் நானா!! என்ற எண்ணம் மனதில் தோன்றியதுமே வேதாளம் வந்து என்னை தொற்றிக் கொண்டது. காருக்குள் ஏறி அமர்ந்தேன். அப்போது அந்த அரபு நாட்டு பெண் ஆய்வாளர் எனது அடையாள அட்டையை கேட்க. நான் எனது கைப்பையில் இருந்து அதை எடுத்துக் அவரிடம் கொடுக்கும் போது எனது கை நடுங்கியது. அதை பார்த்த அந்த பெண்மணி

“டோண்ட் பி டென்ஸ்டு. டிரைவ் சேஃப். நீங்கள் தயார் என்றால் வண்டியை எடுக்கலாம்”

என்றார். நானும் வண்டியை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்ததும். அவர் என்னிடம்

“வெரி குட். நவ் டேக் இட் அவுட்” என்றார்.

நானும் மெல்ல வண்டியை ரிவர்ஸில் எடுத்தேன். அவசரம் ப்ளஸ் டென்ஷனில் சற்று முன்னதாகவே இடது பக்கமாக வண்டியை திருப்ப முயன்றதால் பக்கத்தில் இருக்கும் காரின் மீது இடிக்க போய்விட்டேன். உடனே அவர் என்னை சற்று நேரம் நிறுத்த சொன்னார் (அப்போதே எனக்கு எனது ரிசல்ட் தெரிந்து விட்டது). பின் என்னைப் பார்த்து “என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டார். நான் “சாரி” என்று கூறி மீண்டும் பார்க்கிங் உள்ளேயே சென்று பின் வெளியே எடுத்தேன். இம்முறை சரியாக எடுத்தேன். ஓட்டிச் சென்றேன். ஆனால் ஏழு நிமிடத்தில் காரை நிறுத்த சொன்னார். நானும் ரோட்டின் சாலிட் லைனை தாண்டி ஓரமாக வண்டியை நிப்பாட்டினேன். அவர் உடனே நெக்ஸ்ட் என்று கூறினார். நானும் எனது சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு காரில் இருந்து இறங்கி பின்னால் சென்று அமர்ந்துக் கொண்டேன். எனக்கு அடுத்ததாக வரிசையில் இருந்த பெண்மணி காரை அங்கிருந்து ஓட்ட ஆரம்பித்தார்.

பின்னால் அமர்ந்ததும் எனது கணவருக்கு கைப்பேசியில் மெஸேஜ் டைப் செய்ய ஆரம்பித்தேன். கை விரல்கள் அனைத்தும் நடு நடுங்கியது. நடுக்கத்துடனேயே “நான் நிச்சயம் இந்த ரோட் டெஸ்ட்டில் ஃபெயில் ஆகிவிடுவேன்” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். அவரோ “பரவாயில்லை. பி கூல். அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம்” என்றொரு பதிலை அனுப்பினார். ஆனாலும் எனக்குள் இருந்த பதற்றம் அடங்கவில்லை. எப்படி?!! எடுத்ததும் அப்படி ஒரு தவற்றை செய்தேன் என்று என் மனம் என்னை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

வண்டியில் இருந்த மூவரின் பரீட்சையும் முடிந்தது. மூன்றாவதாக காரை ஓட்டிய பெண்மணி மீண்டும் காரை இன்ஸ்டிடியூட்டிற்குள் ஓட்டி வந்து பார்க் செய்தார். அப்போது அவர் கோணலாக வண்டியை நிப்பாட்ட அதற்கு ஆய்வாளர் சரியாக நிப்பாட்டும் படி உத்தரவிட அந்த பெண் சற்று பதற்றமானாள். பின் இரண்டு முறை முயற்சித்த பின் சரியாக பார்க் செய்தாள். மூவரும் ஆய்வாளரை பார்த்தோம். அவர் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகளை பட்டியலிட்டு மூவருமே ஃபெயில் என்றும், பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து, நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு, பின் மீண்டும் முயற்சிக்கும் படி கூறிவிட்டு சென்றார். நான் வழக்கம் போல வெளியே காத்திருந்த கணவரிடம் கூற அவரோ வழக்கம் போல் அடுத்த முறை பார்த்துக் கொள் என்று கூற.
மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அடுத்த RTA ரோட் டெஸ்ட்டுக்கு டேட் எப்போது கிடைக்கும் என்று கேட்டேன். அவரோ மார்ச் 8 ஆம் தேதி இருப்பதாக கூற உடனே RTA ரோட் டெஸ்ட்டுக்கு மார்ச் 8 ஆம் தேதி பதிவு செய்தேன். அதற்கு முன் 6 மற்றும் 7 ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்தேன்.

ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்களும் சிறப்பாக நடந்தேறியது.
நம்பிக்கை கூடியது.
RTA ரோட் டெஸ்ட்டில் என்னென்ன செய்ய சொல்வார்களோ அத்தனையையும் செய்து காட்ட சொல்லி பயிற்சி அளித்தார் எனது பயிற்றுவிப்பாளர்.

அதாவது காரை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள், உள் சாலைகளில் வேகம் நாற்பதுக்கு மேல் இருக்கக் கூடாது. பிரதான சாலைகளில் 60 அல்லது 80 என
ரோட் சைனில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தை கடைபிடிக்க வேண்டும். அதற்கு மேலும் போகக்கூடாது அதைவிட கம்மியான வேகத்திலும் போகக் கூடாது. லேன் சேஞ்ச் ‌எப்படி எப்போது செய்ய வேண்டும், அது செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை. வலது, இடது புறம் காரை திருப்புவது. சிக்னலில் எப்படி எப்போது நிறுத்த வேண்டும். சிக்னல் பச்சை ஆனதும் எப்போது புறப்பட வேண்டும். உள் வழி சாலையில் இருந்து பிரதான சாலைகளில் இணையும் போது செய்ய வேண்டியவை. U டர்ன் எப்படி செய்வது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது நுழைய வேண்டும், எந்த கோட்டிற்குள் எப்போது செல்வது. அதற்கான சிக்னல் எதை எப்போது கொடுப்பது போன்ற அனைத்தையும் பயிற்சி செய்து முடித்ததும். எனது பயிற்றுவிப்பாளர் என்னிடம்

“RTA ரோட் டெஸ்ட்டுக்கு என்று பதிவு செய்திருக்கிறீர்கள்”

என்று கேட்க நானோ

“நாளை. எட்டாம் தேதிக்கு தான் பதிவு செய்திருக்கிறேன்”

என்று கூற. அதை கேட்ட அவர்

“அப்படியா!! இருக்காதே!! உங்களுக்கு RTA வில் இருந்து ஏதாவது மெஸேஜ் வந்ததா?”

“ஆமாம். நேற்று மாலை வந்தது. எட்டாம் தேதி பரீட்சை இருக்கிறது என்று ஒரு ரிமைன்டர் மெஸேஜ் வந்தது.”

என்றேன். அவர் என்னை எதற்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளும் படி கூற

“ஏன் என்ன ஆயிற்று? பரீட்சை நடக்காதா?”

என்று பதற்றத்தில் நான் கேட்டேன். அதற்கு அவர், RTA புது ரூல் ஒன்றை அமல் படுத்தி இருப்பதாகவும். முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெறாவிட்டால் இரண்டாவது முறை பயிற்சி வகுப்பு எடுத்த நாற்பத்தி எட்டு மணிநேரத்திற்கு பிறகு தான் ரோட் டெஸ்ட் எடுக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் நான் மறுநாள் அதாவது எட்டாம் தேதி பரீட்சையை எடுக்க முடியாது. ஏனெனில் எனது பயிற்சி வகுப்பு முடிந்து நாற்பத்தி எட்டு மணிநேரம் முழுமை அடைந்திருக்காது. என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த என்னிடம் தான் விடைப்பெற்றுக் கொள்வதாகவும் கஸ்டமர் கேருக்கு கால் செய்து பார்க்கும் படியும் கூறியவரிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். அவரும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என்னை எனது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்றார். அப்போது எனது கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அதில் அந்த இன்ஸ்டிடியூட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. கார் டிரைவிங் வகுப்பின் போது கைபேசியை சைலண்ட்டில் போடுவது வழக்கம். அதனால் ரிங் கேட்கவில்லை. உடனே அந்த எண்ணை அழைத்தேன். எவரும் எடுக்கவில்லை. சரி வீட்டுக்கு போன பிறகு மீண்டும் முயற்சிப்போம் என்றும், அதுவே நான் அந்த இன்ஸ்டிடியூட்டில் எடுக்கும் கடைசி பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் ஆண்டவா என்றும் எண்ணிக் கொண்டே லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டு நின்றிருந்த என் முன் லிஃப்ட்டின் கதவு திறந்தது.

வீட்டிற்கு சென்றேன். கணவரிடம் விவரத்தை விவரித்தேன். மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்து பார்க்கலாமென்று கைப்பேசியை எடுத்தேன். அப்போது RTA வில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதை திறந்து பார்த்தேன்.


🚗பயணம் தொடரும்….🚗

ராமானுஜம் அம்புஜம் தம்பதியருக்கு மிருதுளா, வேனு என்று இரு பிள்ளைகள். மிருதுளா பி.காம் முடிச்சுட்டு எம்.காம் முதலாம் ஆண்டு கரஸ்ல படித்துக்கொண்டே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அமைதியான பெற்றோர் சொல்படி வாழ்ந்து வரும் ஒரு வெகுளிப்பெண்.  வேனு ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் பொறுப்பான பிள்ளை.

ராமானுஜம் பப்ளிக் செக்ட்டர் இன்டஸ்ட்ரீயில் பணிப்புரிகிறார். அவர்  குடும்பம் அளவானதாகவும் வளமானதாகவும், அமைதியானதாகவும் எதற்காகவும் யாரிடமும் செல்லாமல் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

“நம்ம மிருதுளாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பார்ப்போமா” என்று கூறிக்கொண்டே அம்புஜம் வீட்டினுள்ளே நுழைந்தாள் அவளின் தங்கை பங்கஜம்.

அப்படியா புள்ள எந்த ஊரு என்ன பண்ணரான்? வா வா பங்கு இந்தா தண்ணியை குடி வெயில் என்னமா சுட்டெறிக்கறது!!!! சரி …அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி அண்ணா இப்படி யாரெல்லாம் இருக்கா? எல்லா விவரமும் சொல்லு. பார்ப்போம் அமைஞ்துன்னா…. இது புரட்டாசி இல்லையா? வர தை இல்லாட்டி மாசியில கல்யாணத்த பண்ணிடவேண்டியது தான்.

அம்பு அக்கா கொஞ்சம் நிதானமா இரு. வரன் வந்துருக்குன்னு சொன்னேன் அவ்வளவு தான் நீ டேட் பிக்ஸ் பண்ணர வரைக்கும் போயிட்டயே…

என்னடி பங்கு நீ வளவளன்னு பேசர விஷயத்தை முதல்ல சொல்லு.

அம்பு இந்தா இது மாப்பிள்ளை புள்ளான்டானோட ஜாதகம் உன் கேள்வி அத்தனைக்கும் இதுல பதில் இருக்கு. என்னோட சினேகிதி மேனகா மூல்யமா வந்தது.

அம்புஜம் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின் பிரித்து படித்தாள். 

ஏன்டி பங்கு மாப்பிள்ளை பட்டாளத்துள இருக்கறதா போட்டுருக்கா அதுவும் டில்லில அவ்வளவு தூரம் நம்ம மிருதுவ கொடுக்கனுமாடி? கொழந்தைக்கு ஏதாவதுன்னா நாம போறத்துக்கே மூனு நாள் ஆயிடுமே!!! அதுவும் ….கூட பொறந்தவா மூனு பேரு இருக்கா…மாப்ள புள்ளான்டான் மூத்த புள்ள வேற …பெரிய குடும்பமா இருக்குமோடி? குடும்பம் எப்படியாம்? ஏதாவது தெரியுமா நோக்கு?

குடுபம் நல்ல குடும்பம்னு தான் சொன்னா. ஆமா அவா அவா பொன்னுகள அமேரிக்காவுக்கே அனுப்பரா நீ இதோ இருக்கர டில்லிக்கு அனுப்ப யோசிக்கர!!!! கூட பொறந்தவா மூனும் தம்பிகள் தான். ஸோ மிருதுவுக்கு.. உனக்கு இருந்தா மாதிரி நாத்தனார் தொல்லைகள் இல்லை சந்தோஷமா? புள்ளான்டான் பதினேழு

வயசுளயே பட்டாளத்துல சேர்ந்துட்டன் அப்பறம் குடும்பத்தையும் பார்த்துண்டு தன்னோட சொந்த முயற்சில தான் பி.ஏ, எம்.ஏ, பி.ஜி டிப்பளமா இப்போ ஆடிட்டிங்  படிச்சிண்டிருக்கான். வேலையும் பார்த்துண்டு, குடும்பத்தையும் பார்த்துண்டு, படிச்சுண்டும் இருக்கான்னா நல்ல பொறுப்பான புள்ளனு எனக்கு படரது. என்ன நான் சொல்றது. அம்பு என்ன யோசனை??

 இல்ல பங்கு புள்ள மூத்தவனா இருக்கானேனு யோசிக்கறேன்….மூத்தது கோழன்னு சொல்லிகேட்டுருக்கோமே …கேட்கறது என்ன நானும் நீயும் மூத்ததுகளை கட்டிண்டு படறோமே ….எதுக்காவது வாய தொறப்பாரா !!! எல்லா வீரமும் ஜம்பமும் என்னாண்ட தான் காட்ட தெரியும் வெளில கப்சிப்…. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அதுவும் இல்லாம பட்டாளத்துல இருக்கான் ஏதாவது அப்படி இப்பிடினு கெட்ட பழக்கங்கள் இருந்துதுனா !!! ஜாதகத்தில டிடோட்டலர்னு தான் எழுதிருக்கு……

 என்ன அம்பு நம்ம காலம் வேற  இப்போ இருக்கற கொழந்தைகள் எல்லாம் கண்ணும் கருத்துமா சமத்துகளா இருக்கா நம்மள மாதிரி பொன்னுகளும் இல்ல நம்ம ஆத்துகாரர்கள் மாதிரி புள்ளகளும் இல்ல.

ராமானுஜம் தனது டி.வி.ஸ் 50 ஐ நிருத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 வா வா பங்கு. என்ன அக்காளும் தங்கையுமா யாரு தலையை உருட்டிண்டு இருக்கேங்கள்?

எல்லாம் உங்களோடதும் உங்க ஷட்டகரோடதும் தான். அதுக்கு என்ன இப்போ? இந்தாங்கோ தண்ணீ குடிங்கோ.

அத்திம்பேர் உங்க பணபெட்டியை தொறக்க நேரம் வந்தாச்சு.

ஏன் அக்காளும் தங்கையுமா கொள்ளையடிக்க திட்டம் போட்டாச்சோ!!

நாங்க ஏன் கொள்ளையடிக்கனும் அத்திம்பேர். அதுக்கு தான் நம்ம மிருது  இருக்காளே.

என்னடி அம்புஜம் உன் தங்கை ஏன் இப்படி உளரிக்கொட்டரா.

பங்கஜம் கூறிய விவரங்களை எல்லாம் ராமானுஜமிடம் அம்புஜம் கூறினாள். ராமானுஜம் சட்டென்று கல்யாணம் என்றால் பணத்திற்கு என்ன செய்வது

என்றும்… கையிருப்பு போதுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்து மகன் கல்லூரி செலவு வரும் என்றெல்லாம் கணக்கில் மூழ்கியவரை

என்ன அத்திம்பேர் இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சுட்டேள் போல தெரியரது. என்ன சரியா?

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே  உங்க அக்காவை விட புத்திசாலிதான்.

போங்கோ அத்திம்பேர்…இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? பின்ன விஷயத்தை கேட்டதும் உங்க முகமே காட்டிக்கொடுக்கறதே. சரி சரி என் வேலை முடிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் மிருதுவோட பேசி நல்ல முடிவா சொல்லுங்கோ. என் புள்ளகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிண்டு நான் எங்காத்துக்கு போரேன். வரட்டுமா அம்பு. போயிட்டு வரேன் அத்திம்பேர்.

பங்கஜம் கிளம்பி சென்ற பின்

ஏன்னா இந்த வரன் நல்லபடியா முடிஞ்சுதுனா நம்ம மிருது இன்னொருத்தா ஆத்து பொன்னாயிடுவா இல்லன்னா!! நம்மள விட்டுட்டு அவா ஆத்துக்கே போயிடுவா இல்லன்னா!!!

இல்ல நம்ம ஆத்துளயே இருந்துட சொல்லலாமா? அடி போடி அசடு நானே இந்த வரன் அமஞ்சுதுனா பணம் போருமான்னு யோசிச்சிண்டிருக்கேன்.

சரின்னா மொதல்ல பொன்ன பார்க்கட்டும் பின்ன மத்தது எல்லாம் யோசிக்கலாம் பேசிக்கலாம் என்ன நான் சொல்லறது சரிதானே!!!

சரிதான் நம்ம பங்குகிட்ட அவாள பொன் பார்க்க வரச்சொல்லுவோம் பின்ன பிடிச்சிருந்தா அப்பறம் என்ன பண்ணரதுனு பார்ப்போம்.

அம்புஜமும் ராமானுஜமும் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் நுழைந்தாள் மிருதுளா.  உடனே அம்புஜம்

நம்ம மிருது வரா இப்போ அவள்ட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் அவா பொன் பார்க்க வரேன்னு சொல்லட்டும் அப்பறம் சொல்லிக்களாம்.

வாமா மிருது உன் சிநேகிதிகளோட ஏதோ இன்டர்வியூ அட்டன்ட் பண்ண போனயே என்ன ஆச்சு..

மொதல்ல முகம், கை, கால் அலம்பிட்டு வரேன்மா இன்னுட்டு எல்லாத்தையும் விவரமா சொல்லரேன் எனக்கு ரொம்ப பசிக்கறது சாப்பாடு எடுத்து வைமா ஒரு நிமிஷத்துல வந்துடரேன்.

மிருது ஆச்சா வாயேன்டி சாதம் ஆரிடப்போறது. மொகம் கழுவ இத்தர நேரமா மிருதுளா….

வந்துட்டேன்மா ஏன் இப்படி கத்திண்டிருக்க? நீங்களாம் சாப்டாச்சா? என்ன சாம்பாரும் உருளை ஃபரையுமா? உன் புள்ளைக்கு பிடிச்சதா?

சாப்பட உட்கார்ந்துண்டு என்ன கேள்வி? என்னமோ சாம்பார காயோட ஊத்திண்டு சாப்படராமாதிரி தான் பேச்சு ….ஆனா சாம்பார தண்ணி மாதிரி காய எல்லாம் வடிகட்டி குடிச்சா எப்டிறீ உடம்புல சத்து இருக்கும்?

சரி இன்னைக்கு அட்டென்ட் பண்ணின இன்டெர்வியூ என்ன ஆச்சு ?

அவா இன்னும் ரெண்டு வாரத்தில சொல்லுவாலாம் அதுவரைக்கும் வேய்ட் பண்ணனும்..

சட்புட்னு சொல்ல மாட்டாலோ என்னத்துக்கு இழுத்தடிக்கறா??

அம்மா சாப்பிடும்போது பேசப்படாதுன்னு சொல்லுவ ஆனா இப்போ நீயே பேசர!!

ஏன்னா நீங்க இப்போ சாபடரேளா இல்லை வேனு வந்துட்டு அவனோட சேர்ந்து சாபடரேளா?

வேனு வரட்டும் நாங்க சேர்ந்து சாப்பிட்டுக்கறோம் நீங்க ரெண்டு பேரும் பேச்ச கொறச்சு… சாப்ட்டு ஏந்திரிங்கோ.

இதோ நம்ம வேனுவும் வந்தாச்சு சரி அப்போ எங்களுக்கும் தட்டு வை.

ஃப்ரஷ்அப் ஆகிட்டு சாப்பிட வரேன்பா நீ சாப்பிட ஆரம்பிச்சுக்கோ நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்..

வந்தாச்சு….அம்மா எனக்கு சரி பசி என்ன பண்ணிருக்க? ஓ வாவ் சாம்பார் அன்ட் உருளை ஃப்ரையா சூப்பர்…

அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் அம்புஜம் மிருதுளாவிடம்….

சரி சாப்டாச்சோனோ எனக்கு கொஞ்சம் உன் பங்கு சித்திக்கு ஃபோன போட்டுக்குடுடி மிருது இதோ இத உள்ள வச்சுட்டு வந்துடரேன்.

ஹலோ சித்தி நான் மிருது பேசறேன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசனம்னு ஃபோன போட்டுத்தர சொன்னா ஆனா ஆள கானோம் …கொஞ்சம் ஹோல்ட் பண்ணு சித்தி …இதோ வரா. என்னமா ஃபோன போட சொல்லிட்டு நீ எங்க போனாய்….சித்தி வேய்ட்டிங்..

சரி…டி …அங்க கிடந்த ரெண்டு கரண்டிய தேச்சுட்டு வந்தேன் அதுதான்… கொஞ்சம் நகர்ந்துக்கோ….ஹலோ பங்கு புள்ளகள கூட்டிண்டு ஆத்துக்கு வந்தாச்சா ?

அம்பு உன்ன அத்திம்பேர் சொல்லரதில் தப்பே இல்லடி. ஆத்துக்கு வந்ததனால தானே லான்ட்லைன்ல ஆன்ஸர் பண்ணறேன். சரி என்ன விஷயம் சொல்லு.

 நீ உன் சினேகிதி மேனகாட்ட நம்ம மிருதுவோட ஜாதகத்தையும் ஃபோட்டவையும் அவாள்ட்ட கொடுக்க சொல்லு. பிடிச்சிருந்தா பொன் பார்க்க எப்போ வராங்கறதையும் கேட்டு சொல்லச்சொல்லு என்ன சரிதானே.

அம்பு …மிருதுட்ட கேட்டயோ?

அவ என்னத்த சொல்லப்போறா எல்லாம் நாம பார்த்து வச்சா அவ நல்லபடியா இருப்பா.

சரி அம்பு நான் நாளைக்கே மேனகாட்ட சொல்லிடரேன். வைக்கட்டுமா? இங்க ரெண்டும் அடிச்சுக்கறதுகள். என்னனு போய் பார்க்கரேன். பை அம்பு.

மறுநாள் பங்கஜம் தனது சிநேகிதி மேனகாவிடம் மிருதுளாவின் ஜாதகத்தையும், ஃபோட்டோவையும் குடுத்து அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விருப்பமிருந்தால் பெண்ப்பார்க்க அவர்களுக்கு எப்போ தோதாக இருக்கும் என்பதையும் கேட்டுச்சொல்ல சொன்னாள்.

மேனகாவும் அன்று மாலை வேலை முடித்து வீடு சென்றதுமே அவர்கள் பக்கத்து வீட்டு பர்வதம் மாமியிடம்

“பர்வதம் மாமி உங்க பெரிய புள்ள நவீனோட ஜாதகத்தை இதிலிருக்கும் பொன்னுவீட்டுக்காராள்ட்ட கொடுத்தேன். அவா பொன்னோட ஜாதகம் அன்ட் ஃபோட்டோவை உங்கள்ட்ட கொடுக்கச்சொன்னா இந்தாங்கோ இதில அவா ஃபோன் நம்பர் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா  நீங்களே அவாளுக்கு டைரெக்ட்டா ஃபோன் போட்டு சொல்லிடுங்க்கோ. அமைஞ்சுதுனா சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடுங்கோ. அவாளோட எல்லா டிடேல்ஸும் இதுல இருக்கு வரட்டா மாமி “

அதைக்கேட்ட பர்வதம்… வீட்டில் அனைவருடன் கலந்து பேசி சொல்லுவதாக சொல்ல அதை மேனகா மறுநாள் பங்கஜமிடம் தெறிவித்தாள். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பங்கஜம் அதை அம்புஜத்திடம் ஃபோனில் விவரித்தாள். அதற்கு அம்புஜம்

“பகவான் யாருக்கு யாருன்னு எழுதி வச்சுருப்பார்….நம்ம மிருதுக்கு அந்த புள்ளான்டான் தான் ஆத்துக்காரர்

ஆகனும்னு அவ ஜாதகத்தில எழுதிருந்தா இது நடக்கும். எல்லாம் அவன் விட்ட வழி..சரி பங்கு ரொம்ப தாங்ஸ். நீ போய் உன் ரெண்டு வாலுகளப்பாரு நான் வைக்கறேன்”

என்று கூறி ஃபோன் கால் ஐ துண்டித்து “பகவானே” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

இவ்வாறு சீராக சென்றுக்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் வந்த  இந்த வரன் அமையுமா! அமைந்தால் நல்லதா!!

RTA பார்க்கிங் பரீட்சையின் முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெற முடியாது போனதும் மனம் தளர்ந்து போனது. அப்போது சட்டென நம்ம பாரதியாரோட

“துன்பம் நெருங்கி வந்த போதும்
நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா!”

என்ற பாட்டு மனதில் உதித்தது. உடனே தெம்பு பிறந்தது.

“மீண்டும் ஓர் முயற்சி செய்வோம் அதில் வெற்றியை மட்டுமே காண்போம்”

என்ற நம்பிக்கையுடன் அடுத்த முயற்சிக்கு பதிவு செய்தேன். வழக்கம் போல் குறித்த நாளில் (புதன்கிழமை) குறித்த நேரத்தில் (3 pm) RTA பார்க்கிங் பரீட்சை நடக்கும் வளாகத்திற்கு சென்றேன்.

இந்த தடவை உள்ளே நுழைந்ததும் அங்கே வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த அரபு நாட்டவர் மற்றொரு மாணவரிடம் “நீங்கள் பாஸ்” என்று கூறுவதை கேட்டுக் கொண்டே நுழைந்ததில் “நல்ல சகுனம் பார்வதி” என்று
என் மனம் கூறியது எனக்கு கேட்க
மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க அடையாள அட்டையை கொடுத்தேன். எனது முறைக்கு காத்திருந்தேன்.

ஏதாவது ஒன்றை நாம் மீண்டும் மீண்டும் செய்தாலோ அல்லது ஏதாவது ஒன்று மீண்டும் மீண்டும் நமக்கு நடந்தாலோ அதை நம் மனம் முதல் தடவை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அடுத்தடுத்த முறை அதுவே பழகி போய்விடுவது போல எனக்கு இந்த தோல்வி என்பது பழக்கமாகி விட்டதாலோ என்னவோ இம்முறை எந்தவித கலக்கமும் இன்றி அமர்ந்திருந்தேன்.

அன்று நிறைய நபர்கள் பரீட்சை கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த அந்த பதினைந்து நிமிடங்களில் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சையில் தேர்ச்சி பெற்று சந்தோஷத்தில் துள்ளித் குதித்து சென்றனர். அதைப் பார்த்ததும் என் மனதில் “பாவம் எத்தனை முறை முயற்சித்தார்களோ!” என்று தான் எண்ண தோன்றியது. மேலும் நான் தேர்ச்சி பெற்றால் எப்படி ரியாக்ட் செய்வேன் இல்லை செய்வது என்ற யோசனையை புள்ளி கோலம் போல் வரைந்து பார்க்க முயற்சித்து நாளு புள்ளி வைப்பதற்குள் எனது பெயர் அழைக்கப்பட்டது.
உடனே புள்ளிகள் அழிக்கப்பட்டது.
கார் எண் 4 என்று கூறப்பட்டது. பார்க்கிங் யார்டுக்குள் செல்லும் கதவு திறக்கப்பட்டது.

அந்த கதவு வழியே பார்க்கிங் யார்டுக்குள் சென்று எனக்கான காரின் கதவை திறந்ததும் விக்ரமாதித்தன் தோளில் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போல் தொற்றிக் கொண்டது ஒரு வகை பயம் என்னும் வேதாளம். ஏனென்று தெரியவில்லை. வேதாளம் ஏன் தொற்றிக் கொண்டது என்று ஆராய்வதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அதை சுமந்து கொண்டு காரில் ஏறினேன்.

ஹில் மற்றும் கராஜ் இரண்டில் தேர்ச்சி பெறாததால் அவ்விரண்டையும் தான் செய்ய வேண்டும். அதனால் இம்முறை நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நேராக ஹில் பார்க்கிங் செய்து காட்ட சென்றேன். போன முறை பீப் சப்தம் வரும் முன் நிப்பாட்டி விட்டதால் இம்முறை அந்த சப்தத்திற்காக காத்திருந்தேன் அது ஒலித்ததும் சரியாக நிப்பாட்டினேன். பின் கார் என்னிடம், அடுத்த பார்க்கிங் செய்து காட்ட செல்லும் படி கூறியதும் அங்கிருந்து அடுத்ததாக கராஜ் பார்க்கிங் செய்ய காரை ஓட்டிச் சென்றேன்.

போன முறை செய்த தவற்றை இம்முறை செய்யக்கூடாது என்ற கவனம் கூடுதலாக இருக்க, கார் எந்த கோட்டிலும் பட்டுவிடாது மெல்ல பார்க் செய்தேன். எனக்கு தெரிந்து எந்த தவறும் இம்முறை செய்யவில்லை என்ற மனத்திருப்தியில் பார்க் செய்ததும் சில நோடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் பார்க்கிங் பிரேக் போட்டேன். கார் என்னை அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல உத்தரவிட்டது. அப்பாடா எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுப்பா என்று காரை எங்கிருந்து எடுத்து ஓட்டி சென்றேனோ அங்கேயே ஓட்டி சென்று பார்க் செய்து, காரில் இருந்து இறங்கி நேராக வரவேற்பு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வரவேற்பாளர் என்னை காத்திருக்கும் படி சொன்னார்.

மனதில் அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்த என்னை அழைத்தார். எழுந்து சென்று அவர் மேஜையின் முன் நின்றேன். அவர் என்னைப் பார்த்து

“நீங்கள் நன்றாக தான் பார்க் செய்தீர்கள் ஆனால்… அந்த வீடியோவை பாருங்கள்”

என்று கூறி மீண்டும் அங்கிருந்த டிவியை பார்க்க சொன்னதும்

“போச்சுடா மறுபடியும் அவுட்டா?!!!”

என்று என் மனம் என்னிடம் கேட்க, பதற்றம் தொற்றிக் கொள்ள, வாடிய முகத்துடன் டிவியை பார்த்தேன். முதலில் ஏதாவது கோட்டில் கார் பட்டுவிட்டதா என்று தான் என் கண்கள் தேடின. ஆனால் சரியாக தான் பார்க் செய்திருந்தேன். பின்பு ஏன் அவர் ஆனால் என்று இழுத்தார்!!!! என்ற குழப்பம் முகத்தில் பளிச்சிட அவரை பார்த்தேன். அதைப் பார்த்த அவர் விளக்கமளிக்க துவங்கினார்

“நீங்கள் பார்க்கிங் சரியா செய்தீர்கள் ஆனால் ஏன் ஹேண்ட் பிரேக் போட லேட்டாச்சு? காரை பார்க் செய்ததும் ஹேண்ட் பிரேக் போட வேண்டுமல்லவா?”

அதை கேட்டதும் அதிர்ந்து போனேன். உடனே சுதாரித்துக் கொண்டு

“இல்லை… நான் எந்த கோட்டிலும் படாது பார்க் செய்த மனத்திருப்தியில் சற்று அமர்ந்து விட்டேன். அதுவும் சில நொடிகள் தான் எடுத்துக் கொண்டேன். பின் உடனே பார்க்கிங் பிரேக்கை போட்டு விட்டேனே!”

என்று விளக்கமளித்தேன். அதை கேட்டவர் சிரித்துக் கொண்டே

“ரிலாக்ஸ் மேடம். ரிலாக்ஸ். யூ ஆர் பாஸ்”

என்றார். அதை கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது நான் காண்பது கனவா இல்லை நிஜமா என்பது போல் சற்று நேரம் நின்றதும்

“பார்வதி நிஜம் தான் நிஜம் தான் நிஜமே தான்”

என்று திருவிளையாடல் தருமியை போல என் மனம் எனக்கு உணர்த்தியதும் முதலில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு வேக வேகமாக வெளியே வந்து எனக்காக காத்திருந்த என் மகனிடமும் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். அவர்களும் அடுத்ததாக RTA ரோட் டெஸ்ட்டுக்கு உடனே பதிவு செய்ய சொன்னார்கள். ஏனெனில் அதற்கான பரீட்சை தேதி கிடைக்க காலதாமதமாகலாம்.

அவர்கள் இருவரிடமும் என்னை கடைசி நேரத்தில் தொற்றிக் கொண்ட வேதாளத்தை பற்றி கூறியதும். இருவரும் ஒன்றாக

“எதற்கு பயம் ? இட்ஸ் ஜஸ்ட் எ பார்க்கிங் டெஸ்ட் அவ்வளவு தானே.! யூ ஆர் டேக்கிங் இட் டூ சீரியஸ். தேவையே இல்லை. அதுவும் நீ இந்தியால கார் ஓட்டி இருக்க வேற!! அப்புறமென்ன?”

என்று கேட்டதும்.

“ஆமாம்! நீங்க ரெண்டு பேரும் சொல்றது கரெக்ட் தான்…இருந்தாலும் அந்த பார்க்கிங் யார்டுக்குள்ள போனாலே எனக்கு ஏதோ ஒரு மாதிரி ஆயிடுது என்ன பண்ண?!”

“அம்மா அந்த மாதிரி எல்லாம் ரோட் டெஸ்ட் ல ஆகக்கூடாது மா. பார்த்துக்கோ!”

என்று மகன் சொன்னதை தலையசைத்து ஆமோதித்தார் கணவர். நான் சிரித்துக் கொண்டேன். கைபேசியை எடுத்தேன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்தேன். RTA ரோட் டெஸ்ட்டுக்கு பதிவு செய்தேன்‌. பரீட்சைக்கான நாள் வியாழக்கிழமை, பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி மதியம் இரண்டு மணி. தேர்ச்சி பெற்றால் உடனே கையில் லைசன்ஸ். சொல்லவும் கேட்கவும் நன்றாக தான் இருக்கும் ஆனால் நடந்தது என்ன? அடுத்த பதிவில்.

🚗பயணம் தொடரும்…🚗

RTA பார்க்கிங்

ஒரு வழியாக பல படிகளை தாண்டி கடைசி இரு படிகளுக்கு வந்து சேர மூன்று மாதங்கள் எடுத்தது. இன்னும் ஒரு மாதம் தான் RTA அளித்த லர்னிங் பர்மிட் செல்லுபடியாகும். அதற்குள் லைசென்ஸ் கிடைக்காவிட்டால் மீண்டும் பணம் செலுத்தி அதை புதுப்பிக்க வேண்டுமென்று டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் கூறினர். ஒரு மாசம் இருக்கே பார்க்கலாம் என்ற தைரியத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு பதிவு செய்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு முன் தினம் இரண்டு மணி நேர வகுப்புக்கு பதிவு செய்து பயிற்சி எடுக்க சொல்லி அறிவுறுத்தினர் நண்பர்கள். சரி அவர்கள் அறிவுரையை அலட்சியம் பண்ண மனமின்றி அதற்கும் பதிவு செய்தேன்.

இரண்டு மணி நேர வகுப்பு சென்றேன்.

“நன்றாக பார்க் செய்கிறீர்கள். இப்படியே நாளையும் எந்தவித பதற்றமும் இன்றி செய்து ஒரே அட்டெம்ட்டில் பாஸ் ஆகி விடுங்கள். ஆல் தி பெஸ்ட்”

என்று எனது பயிற்றுவிப்பாளரின் ஆசிர்வாதத்துடன் முடிந்தது பார்க்கிங் வகுப்பு. அன்றைய தினம் முழுவதும் ஏதோ சொல்ல முடியாத ஒரு த‌விப்பு. பாஸ் ஆகி விடுவோமா மாட்டோமா! என்ற குழப்பம் நீடித்ததில் பார்க்கிங் ஜுரம் நூறை தாண்ட அன்று சரியாக சாப்பிடவில்லை, அன்றிரவு சரியாக தூங்கவில்லை.

மறுநாள் காலை விடிந்தது. விருட்டென எழுந்து காலை கடமைகளை முடித்துக் கொண்டு ஒரு கையில் ஒரு கப் காபி மறுகையில் கைபேசியுடன் அமர்ந்தேன்‌. RTA பார்க்கிங் வீடியோக்களை யூடியூப்பில் போட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கணவர் வந்து காலை உணவு என்ன என்று கேட்ட போது நேரத்தைப் பார்த்தேன். கடிகாரம் ஒன்பதரை என்று காட்ட உடனே அடுப்படிக்கு சென்று அவருக்கு தோசையை சுட்டுக் கொடுத்து விட்டு அடுப்பை அணைத்து விட்டேன். அதைப் பார்த்த என் கணவர்.

“ஏன் இன்னைக்கு இவ்வளவு பதற்றம்? உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் வேண்டாமா? அடுப்பை ஆஃப் பண்ணிட்ட? இன்னைக்கு இன்னொரு பார்க்கிங் கிளாஸ் தான் போக போறன்னு நினைச்சு போ. டோன்ட் டேக் இட் டூ சீரியஸ். புரியுதா? நீ போ நான் உனக்கு தோசை சுட்டு தரேன்.”

என்ற ஆறுதல் வார்த்தைகளை கூறினாலும் என் மனதில் ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது. பரீட்சை மதியம் மூன்று மணிக்கு இருந்தது. ஆனால் இரண்டரை மணிக்கெல்லாம் சென்று அடையாள அட்டையை அங்கிருக்கும் வரவேற்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு சென்றேன். அங்கே சென்றால் எப்போதும் அங்கிருக்கும் வரவேற்பாளர் இருக்கவில்லை ஏனெனில் அவர் அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பாளர் என்பதால் அவர் மாலை அஸஸ்மெண்ட் பரீட்சையின் போது தான் அங்கு அமர்ந்திருப்பார். RTA பரீட்சைக்கு அரபு நாட்டை சேர்ந்தவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நேராக அவரிடம் சென்று பார்க்கிங் பரீட்சைக்கு வந்திருப்பதாக கூறினேன். அவர் அவரின் கனத்த குரலில் எமிரேட்ஸ் ஐடி என்று கேட்க உடனே கைபையில் இருந்த ஐடியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு, என்னை சற்று நேரம் அமர்ந்திருக்கும் படி கூறினார்.

மனதில் பதற்றம் வெளியே புன்னகை என்று அமர்ந்திருந்தேன். அவர் சொன்னது போலவே சற்று நேரத்தில் எனது பெயரை சொல்லி அழைத்து கார் எண் 7 ஐ பார்க்கிங் செய்து காட்ட சொல்லி, வாழ்த்துக்களையும் கூறினார். அன்று பரீட்சைக்கு ஏனோ வேறு யாருமே இருக்கவில்லை போலும். நான் மட்டும் தான் இருந்தேன்.

வரவேற்பு அறையின் கதவை திறந்து பார்க்கிங் யார்டுக்குள் (இதற்கு முன் மூன்று முறை சென்று வந்த இடம். முதல் முறை பகலில்…) சென்றேன். அங்கே ஒரு செக்யூரிட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரிடம் கார் எண் 7 என்று கூறினேன். என்னை அழைத்துக் கொண்டு கார் எண் 7 அருகே சென்று

“ஆல் தி பெஸ்ட் மேடம்”

என்று கூறினார். நானும் நன்றியை தெரிவித்துக் கொண்டு அந்த ஸ்மார்ட் காருக்குள் ஏறி அமர்ந்ததும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்து எனது வலது புறம் இருந்த பெரிய டேப்லட்டுக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த காமெராவிடம் நான் ரெடி என்று கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சரி நான் தான் ஏதாவது சம்பிரதாயத்தை செய்ய தவறிவிட்டேனோ என்று எண்ணி ஒரு முறை அனைத்தையும் சரி செய்துக் கொண்டு மீண்டும் அந்த காமிரா முன் நான் தயார் என்று சொன்னேன். அப்போதும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

உடனே இறங்கி போய் சொல்லலாம் என்று சீட் பெல்ட்டை கழற்ற முற்பட்ட போது…பார்க்கிங் பரீட்சைக்கு என்று காரில் ஏறி விட்டால் அதை முடிக்கும் வரை காரை விட்டு வெளியே வரக்கூடாது என்று எனது ஆய்வாளர் கூறியது நினைவுக்கு வர, சட்டென சீட் பெல்ட்டில் இருந்து கைகளை எடுத்து காருக்கு முன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று ஆக்ஷனில் கூற அவர் யாரிடமோ ஃபோனில் ஏதோ கேட்க பின் என்னிடம் ஃபைவ் மினிட்ஸ் என்று கை விரல்களை காட்டி சொல்ல. என்னடா இந்த பார்வதிக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் கார் ஸ்டார்ட் ஆனது. உங்கள் பார்க்கிங் பரீட்சை தொடங்குகிறது என்ற குரல் காருக்குள் ஒலித்தது.

காரை ரிவர்ஸ் கியரில் போட்டேன். வண்டியை அதன் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு ஓட்டிச் சென்றேன். முதலில் ஹில், பின் பாரலல், எமர்ஜென்சி, ஆங்கிள் கடைசியில் கராஜ் பார்க்கிங் என்று அனைத்தையும் செய்து முடித்ததும் காரை எங்கிருந்து எடுத்தேனோ அதே பார்க்கிங்கில் கொண்டு வந்து பார்க் செய்து விட்டு வரவேற்பு அறைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த மண்ணின் மைந்தன் வரவேற்பாளர் சற்று நேரம் அமரும் படி கூறினார். எல்லாம் சரியாக செய்த திருப்தியில் அமர்ந்திருந்தேன்.

சற்று நேரம் ஆனதும் இன்னும் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சை எடுக்க வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி பேச்சை ஆரம்பித்த போது வரவேற்பாளர் எனது பெயரை சொல்லி அழைத்தார். எழுந்து அவர் அமர்ந்திருந்த மேஜை அருகே சென்றேன். அவர் ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டி

“நீங்கள் ஹில் மற்றும் கராஜ் ஃபெயில் மற்ற மூன்றிலும் பாஸ். டூ ட் வெல் நெக்ஸ்ட் டைம். ஆயுஷ்”

என்று அடுத்த மாணவரை அழைத்தார். நானோ கையில் அந்த பேப்பருடன் சற்று நேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து ஆட்கள் பரீட்சையை எடுக்க யார்டுக்குள் சென்றார்கள். அங்கேயே நின்றிருந்த என்னை வரவேற்பாளர் அழைத்தார். சென்றேன். அவர் பக்கத்தில் இருந்த டிவியை பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். அதில் நான் வண்டி ஓட்டிய வீடியோ போடப்பட்டிருந்தது. பாஸ் ஆனதை எல்லாம் ஓட்டிவிட்டு ஃபெயில் ஆன பார்க்கிங்கை மட்டும் போட்டுக் காட்டினார். முதலில் ஹில் டெஸ்ட்டில் பீப் சத்தம் வருவதற்கு முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டேன். அடுத்ததாக கராஜ் பார்க்கிங், இதில் வண்டியை பார்க் செய்யும் போது லைட்டாக கோட்டில் டையர் பட்டுவிட்டது. மேலும் வண்டியை நான் செய்த கராஜ் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுக்கும் போது சிக்ஸ் பாயிண்ட் செக் எனப்படும் ஓர் சம்பிரதாயத்தை செய்யாது எடுத்துவிட்டேன். இரண்டு தவறுகளையும் பார்த்து விட்டு அவரிடம் தாங்க்ஸ் என்று கூறி இன்ஸ்டிடியூட்டிற்கு வெளியே காத்திருந்த எனது கணவரிடம் வந்து நடந்ததை கூறினேன். அவரும் வழக்கம் போல என்னை தேற்றினார்.

பரீட்சையை நன்றாக செய்தேன், முதல் முயற்சியிலேயே RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆகி விடுவேன் என்று பரீட்சையை முடித்ததும் நம்பிக்கையில் இருந்த எனக்கு, உன் நினைப்பு தவறு… என்ன தான் சரியாக செய்திருந்தாலும் உனக்கே அறியாமல் சில சின்ன சின்ன தவறுகள் செய்துள்ளாய் என்று அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்ததை போட்டு காட்டியபோது தான் உணர்ந்தேன்.

காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரத்தில், அன்று அந்த பார்க்கிங் பரீட்சையில் நடந்ததை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொண்டே வந்ததில் ஒன்று நன்றாக புரிந்தது என்னவென்றால் எப்படி எனக்கே தெரியாது செய்த சிறிய தவற்றை அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்து என்னை ஃபெயில் ஆக்கியதோ அதே போல் தான் நாம் நம் வாழ்க்கையிலும் நமக்கே தெரியாது செய்யும் தவறுகளை நமக்கு உணர்த்திடவே அவ்வப்போது சில தோல்விகள், இழப்புகள், வருத்தங்கள் ஆகியவை வந்து போகிறது. உணர்ந்தால் அவற்றை திருத்திக் கொண்டு வாழ்க்கையையும்/வண்டியையும் சரியான முறையில் நல்வழியில் ஓட்டிச் செல்லலாம். அப்படி இல்லையென்றால் தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டியது தான். எவ்வளவு முயன்றாலும் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

தவறு செய்வது மனித இயல்பு
தவற்றை தவறு என்று உணர்ந்தும் அதையே செய்வது இறுமாப்பு
தவற்றை உணர்ந்ததும் திருந்தி/ திருத்தி கொள்வது இயல்பிருப்பு

இல்லையா!

ஒரு கார் பார்க்கிங் டெஸ்ட் தானே! ஒரு சாதாரண இன்டர்வியூ தானே! அதில் என்ன பிரமாதம் அது ஒரு சின்ன போட்டி தானே! இதிலென்ன பிரமாதம் என்றெல்லாம் பலர் நினைக்கலாம்/கூறலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம்! தோல்விகள் வெற்றிக்கான முதல் படின்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? ஏன்னா தோல்வி அப்படிங்கறது நம் சிந்தனை, நமது பார்வை, நமது எண்ணம், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் விதம், பொறுமை, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தைரியம் போன்ற பல குணாதிசயங்களை நமக்குள் வரவழைக்கும். நம்மை நாம் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

இந்த தோல்வி என்னை வெற்றிக்கு நகர்த்தி சென்றதா? இரண்டாவது முயற்சியில் RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆனேனா இல்லையா என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

🚗பயணம் தொடரும்…🚗

பார்க்கிங் பரீட்சையில் எந்த வகை பார்க்கிங்கில் ஃபெயில் ஆகிறோமோ அதை மட்டும் மீண்டும் எடுத்தால் போதுமென்று இரண்டாவது பரீட்சையில் தோல்வியுற்ற பின் அங்கிருந்த எனது சீனியர் மாணவர்கள் (மூன்றாவது முறை பரீட்சை எடுக்க காத்திருந்தவர்கள்) கூற கேட்டதும் இரண்டாவது முயற்சிக்கு முன் என் மனதில் எழுந்த சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது. அப்பாடா மூன்றாவது முயற்சியில் கராஜ் பார்க்கிங் மட்டும் செய்தால் போதும் என்று எண்ணி என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த நாள் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்டை மூன்றாவது முறை கொடுக்க சென்றேன்.

இம்முறை ஏழு மணி ஸ்லாட் தான் இருக்கிறது என்று வாடிக்கையாளர் சேவை மையத்தில் கூறினர். நாம ஆறு மணிக்கு புக் செய்தாலும் எட்டு மணிக்கு தான் பரீட்சையை எடுக்க முடியுதுங்கும் போது எதுவா இருந்தா என்னன்னு அந்த ஸ்லாட்டை புக் செய்திருந்தேன். வழக்கம் போல் அவர்களின் விதிமுறைப்படி ஆறரை மணிக்கு சென்று அங்கிருந்த வரவேற்பாளரை பார்த்து ஒரு “ஹாய்” சொல்லிவிட்டு எனது கைபைக்குள் இருந்து அடையாள அட்டையை எடுக்க முற்பட்ட போது

“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தே….ன்
உங்கள் பார்க்கிங் பரீட்சையில்
இம்முறை
பாஸ் ஆக வந்தே…ன்”

என்று எனது எண்ணம் மனதிற்குள் பாட்டாக ஒலித்தது போல் இருக்க உடனே நிமிர்ந்து வரவேற்பாளரிடம் அடையாள அட்டையை நீட்டினேன். அவருக்குள்ளும் என் மனதில் ஒலித்தது போலவே

ரா ரா… இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டுக்கு மீண்டும் ரா..ரா..

என்று அவர்கள் பாஷையில் அது போல ஏதாவது தோன்றியிருக்கும் போல் இருந்தது அவரின் சிரித்த முகத்துடனான வரவேற்பு. அவர் எனது விவரங்களை கணினியில் சரி பார்த்த பின் “ஆல் தி பெஸ்ட்” என்று கூறி பரீட்சை நடக்கும் யார்டுக்கு போக சொன்னார். நானும் வழக்கம் போல நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து யார்டை நோக்கி நடக்கலானேன். நமக்கு நன்றாக பழகி போன பாதை. அதில் பயணிப்பது இதுவே கடைசி முறை. இனி அந்த யார்டுக்குள் RTA பரீட்சை எடுக்கத் தான் செல்ல வேண்டும் என்றெல்லாம் மனதில் பல கணக்கு போட்டுக்கொண்டு சென்று அமர்ந்தேன்.

என் பெயர் அழைக்கப்பட்டது. இருக்கையில் இருந்து எழுந்து நிமிர்ந்து பார்த்தால் எனது முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்டுக்கு வந்த அதே ஆய்வாளர். அவருக்கு ஒரு “ஹாய்” சொல்ல அவரும்

“ஹாய் பார்வதி. ஆல் தி பெஸ்ட்”

என்று கூறினாலும் “மறுபடியும் நீயா?” என்பது போல அவரின் முக பாவம் இருந்ததாக எனக்கு தோன்றியது. அவர் சாதாரணமாக இருந்திருந்தாலும் எனது இரண்டு முறை தோல்வி என் மனதில் அவ்வாறு ஒரு எண்ணத்தை வரவழைத்தது. அவர் சொன்ன காரில் ஏறினேன். நேராக கராஜ் பார்க்கிங்கிற்கு காரை ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டார். பின் என்னை கராஜ் பார்க்கிங் செய்து காட்ட சொன்னார்.

இம்முறை பாஸ் ஆகி அடுத்து RTA பரீட்சைக்கு செல்ல வேண்டும் தாயே உதவி புரிவாயே என்று மனதிற்குள் அம்பாளை வேண்டிக்கொண்டேன். ரிவர்ஸ் கியர் போட்டேன். பார்க் செய்தேன். ஆய்வாளரை கார் ஜன்னல் வழியாக பார்த்தேன். அவர் முகத்தில் சந்தோஷம் தெரிந்ததும் என் முகம் மலர்ந்தது. காருக்குள் ஏறி அமர்ந்தவர் என்னிடம்

“எப்படி இப்போது ஒரே டிரையில் எந்தவித அட்ஜெஸ்ட்மென்ட்டுமின்றி பர்ஃபெக்ட்டா பார்க் செஞ்சீங்க? இதே போல RTA டெஸ்டிலும் ஒரே அட்டெம்ட்ல பாஸ் ஆகுங்க. ஆல் தி பெஸ்ட். யூ ஹாவ் கிளியர்டு தி பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்”

என்று சொன்னதும் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டு காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு சேர்த்துவிட்டு, ஆய்வாளரிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டு நேராக RTA கவுண்டர் சென்று RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கூறினேன்.

பார்க்கிங் இன்டர்ணல் அஸஸ்மெண்ட் டெஸ்ட் முடிவுகள் கணினியில் பதிவேற்றிய பின்னரே RTA பரீட்சைக்கு பதிவு செய்ய முடியும் என்றும், ஆய்வாளர்கள் அனைவரது பரீட்சையையும் முடித்த பின்பு தான் அதை பதிவேற்றம் செய்வார்கள் என்றும், அதற்கு இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் அந்த கவுண்டரில் இருந்த நபர் கூறினார். சரி மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவே அதற்கும் பதிவு செய்வோம், அதற்காக இரண்டு மணிநேரம் எல்லாம் காத்திருக்க முடியாது என்று முடிவெடுத்து அங்கிருந்து நகர்ந்து அந்த இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பரையில் அமர்ந்திருந்த என் மகனிடம் சென்று முதலில் நான் பாஸ் ஆன விஷயத்தை சொல்லி மற்ற விவரங்களையும் விவரித்தேன். பின் மகனுடன் அவரின் காரில் ஏறி வீட்டிற்கு சென்று என் கணவரிடம் விவரத்தை சொன்னதும்

“பரவாயில்லையே சொன்னபடி செய்து காட்டிட்ட! குட். அடுத்தது RTA தானா? இன்னும் இரண்டே இரண்டு படி தான் அதையும் தாண்டிட்டா உன் கையிலும் ஐக்கிய அரபு அமீரக ஓட்டுனர் உரிமம் இருக்கும்.”

“அது எவ்வளவு தடவை எடுக்க வேண்டி இருக்குமோ!! பார்ப்போம்”

“அதெல்லாம் உன்னால முடியும். RTA டெஸ்ட்டுக்கு புக் பண்ணிட்டியா? டேட்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்”

“இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு தானே புக் பண்ண முடியும். சரி இன்னைக்கு டின்னர் வெளியே சாப்பிடுவோமா? அப்படியே அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட் ப்ராஞ்ச்ல போய் RTA டெஸ்ட்டுக்கும் புக் பண்ணிட்டு வந்திடலாம்.”

என்று நான் சொன்னதும் அதற்கு என்னவரும் எங்களவரும் சம்மதிக்க, ஒரு டென்ஷன் விலகிய மகிழ்ச்சியை கொண்டாட மூவருமாக வெளியே சென்றோம். அவரவருக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்து நன்றாக உண்டோம். RTA பரீட்சைக்கு பதிவு செய்தோம். வீட்டிற்கு திரும்பி வந்தோம்.

இன்டர்ணல் பரீட்சை ஜுரம் குறைந்தது
RTA பரீட்சை ஜுரம் ஆரம்பம் ஆனது!

🚗பயணம் தொடரும்…🚗

பாகம் 4 முடிந்து ஐந்தாவது பாகம் பதிப்பிக்க காலதாமதமானதற்கு முதல் முயற்சியின் தோல்வியில் இருந்து வெளிவர இவ்வளவு நாட்கள் எடுத்தது என்று நினைத்துக் கொண்டு மன்னிக்கவும்.😅

முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் இரண்டு மணிநேர வகுப்புக்கு சென்றேன். அன்று எனக்கு வந்த பயிற்றுவிப்பாளர் நான் காரை பார்க் செய்வதைப் பார்த்து ,

“நீங்கள் நன்றாக தானே பார்க் செய்கிறீர்கள் பின்பு ஏன் பாஸ் ஆகவில்லை?”

என்று கேட்க. நான் அவரிடம்

“அது என்ன மாயமோ தெரியல! என்ன மந்திரமோ புரியல! அந்த டெஸ்ட் யார்டுக்குள்ள போனாலே தப்பு தப்பா தான் வருது”

என்று சொல்ல அவரும் எனது முந்தைய பயிற்சியாளர் சொன்னது போலவே பயத்தை தவிர்க்க சொன்னார். நானும் சரி என்று தலையை ஆட்டினேன். வீட்டில் கணவர் அல்லது மகன் /மகள் கார் இருந்தால் அதில் பார்க்கிங் பயிற்சி எடுத்துப் பார்க்க சொன்னார். ஓகே என்று கூறி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றேன்.

முதலில் எனது கணவரிடம் அவரின் காரை சிறிது நேரம் பயிற்சி செய்ய கேட்டேன். அவரது கார் பெரியது என்றும் எங்கள் மகனின் கார் செடான் என்பதால் அதில் பயிற்சி எடுக்குமாறு கூறி விட்டார். நானும் அது சரி தானே என்று எண்ணி மகன் பக்கம் திரும்பினேன். உடனே அவர்

“அம்மா என்னை பார்க்காதே எனக்கு நாளைக்கு காலேஜ் இருக்கு.”

என்று வேகவேகமாக கூற,

“அட போங்கப்பா நான் வகுப்பு போனதை வச்சே பாஸ் ஆனா ஆகிறேன் இல்லைன்னா வேண்டாம்.”

என்று சொல்லி இரண்டாவது இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட் பகல் நேரத்தில் எடுக்க முடியுமா என்று கேட்டதற்கு பகல் முழுவதும் RTA பரீட்சை நடக்கும் என்றும் மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்க்கிங் யார்டு இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு கிடைக்கும் என்றும் கூற வேறு வழியின்றி முதல் ஸ்லாட் ஆன ஆறு மணி ஸ்லாட்டை பதிவு செய்தேன். ஏன்னா பக்கபலமாக கொஞ்சம் சூரியன் இருப்பார் என்று நினைத்தேன். மூன்று நாள் கழித்து மீண்டும் நம்பிக்கையுடன் சென்றேன்.

வெளிச்சத்தோட டெஸ்ட் எடுத்தா பாஸ் ஆகிடலாம்ன்னு நெனச்சு போன எனக்கு வருணபகவான் ரூபத்துல ஆப்பு ஆப்போஸிட்டுல ஆட்டம் போட்டுச்சு பாருங்க. ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம் போட்டுச்சு. அதோட அந்த ஆட்டத்துல ஆறு மணிக்கு இருந்த பரீட்சையை எல்லாம் எட்டு மணிக்கு தள்ளி வச்சுட்டாங்க. அப்படி காத்திருக்க விருப்பமில்லைனா வேற ஒரு நாளுக்கு டெஸ்ட்டை மாத்தி வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அவ்வளவு தூரம் போயாச்சேன்னும், அன்று அந்த பரீட்சையை முடிச்சிடணும்னும் காத்துகிட்டு இருந்தேன். மணி எட்டாச்சு மழையும் விட்டாச்சு. ஆறு மணி பரீட்சைக்கு புக் செய்தவர்களை அழைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் இருந்தனர்.

ஏற்கனவே இரண்டு மணிநேரம் காத்துக் கொண்டிருந்ததில் பதற்றத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தது. இதில் எனது ஆய்வாளர் என்னிடம் டென்ஷன் இல்லாம ஓட்டுங்கன்னு சொன்னதைக் கேட்டதும் முழிச்சேன் பாருங்க ஒரு முழி. அதை பார்த்து அவரு என்ன நெனச்சாரோ தெரியல உடனே

“ம்…வண்டியை எடுங்க. நேரா ஹில், அடுத்தது ஆங்கிள் நெக்ஸ்ட் கராஜ் ஓகே. ஆல் தி பெஸ்ட்”

என்றவரிடம் சும்மா இல்லாம

“அப்போ பாரலல் அன்ட் எமர்ஜென்சி”

என்று கேட்க போய்

“ஓ!!! உங்களுக்கு மறுபடியும் அந்த ரெண்டு டெஸ்ட்டும் எடுக்கணும்னா எடுங்க எனக்கு நோ ப்ராப்ளம். டூ யூ வான்ட் டு டூ அகெய்ன்?”

என்று கேட்டவரிடம் வேகவேகமாக

“நோ நோ. ஐ வாஸ் ஜஸ்ட் ஆஸ்க்கிங்‌.”

என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு புறம் அப்பாடா என்றும் மறுபுறம் ஏன் அந்த ரெண்டு டெஸ்ட் எடுக்க வேண்டாம்? என்ற குழப்பத்தோடு கிளம்பினேன்.

அவர் கூறிய மூன்றில் இரண்டு முடிந்தது. மூன்றாவதாக கராஜ் பார்க்கிங் செய்ய முற்பட்ட போது சற்று முன்னதாக காரை வலது புறம் திருப்பியதால் ஒரு சிறு தடு மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதை அவர்கள் அளித்துள்ள ஒரு முறை அட்ஜெஸ்ட்மென்ட் செய்யலாம் என்ற சலுகையை உபயோகிக்க முயற்சித்தேன். பார்க் செய்தேன். வெளியே நின்றிருந்த ஆய்வாளர் காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு நிப்பாட்ட சொன்னார். நானும் ஓட்டி சென்று நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு, கியரை பார்க்கிங்கில் போட்டு, சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு, எனது கைபையை எடுத்துக் கொண்டு ஒரு வழியா முடிச்சிட்டேன்டாப்பா என்று எண்ணிக்கொண்டு ஆய்வாளரிடம் சென்றால் அவர் என்னிடம்

“நீங்கள் ஹில் அன்ட் ஆங்கிள் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் கராஜ் ஃபெயில். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”

என்று கூறிவிட்டு அடுத்த ஆட்டின் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவர் அடுத்த ஆட்டுடன் யார்டுக்குள் நுழைந்தார். அந்த ஆடும் ஆய்வாளர் கூறிக்கொண்டே வந்த விதிமுறைகளுக்கு என்னை போலவே நன்றாக தலையை ஆட்டியது. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றிருந்த என்னை பார்த்து…

“உங்க பரீட்சை முடிஞ்சிடிச்சு. நீங்க போகலாம்‌. யூ கெட் இன்சைட் தி கார்”

என்று அடுத்த ஆடிடம் சொன்னதும் அதுவரை பிரமயில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு முன்பு ஆட்டியது போலவே மீண்டும் தலையை சரி என்று ஆட்டிவிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டு வெளியே வந்து எனக்காக காத்திருந்த கணவரிடம்

“மீண்டும் நான் ஃபெயில்”

என்று கூறி எனது வருத்தத்தை தெரிவித்தேன். அப்போது வாடி போயிருந்த என்னிடம்

“உன்னால முடியலனா விடு நோ ப்ராப்ளம்”

என்றார். அதை கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியாத உத்வேகம் தோன்ற உடனே அவரிடம்

“ஏன் முடியாது? என்னால் முடியும். முடியும் வரை முயற்சிக்க போகிறேன்.”

என்று கூறி மூன்றாவது முறை இன்டர்ணல் அஸஸ்மெண்ட் பரீட்சைக்கு அடுத்த நாளே ஸ்லாட் கிடைத்ததும் சற்றும் யோசிக்காமல் பதிவு செய்தேன்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்று பலிக்குமா!!!
அடுத்த பதிவில்…

🚗பயணம் தொடரும்…🚗

“இப்போது இந்த இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு நீங்கள் இந்த வண்டியை ஓட்ட போவதில்லை இந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் உங்களுக்கு தருவார்கள். நீங்கள் RTA டெஸ்ட்டின் போது ஓட்ட வேண்டிய ஸ்மார்ட் காரை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கான ஒரு இருபது நிமிட வகுப்பு தான் இது.”

என்று கூறி வேறொரு காரின் அருகே சென்று

“இந்த கார் இப்போது உங்களுடையது. இதை நீங்கள் வகுப்புகளில் எப்படி ஓட்டினீர்களோ அப்படியே ஓட்டி பார்க் செய்து காட்டுங்கள். இப்போ இந்த இன்டர்ணல் பரீட்சையை இந்த காரில் எடுத்து பாஸ் ஆகுங்கள். ஆல் தி பெஸ்ட்”

என்று அவர் கூறியதை கேட்டதும் “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதற்கு எந்தவித சேதமுமின்றி கொண்டு வந்து இங்கேயே என்கிட்ட விட்டுடுமான்னு” சிவாஜி ஸ்டைலில் சொன்னது போல் ஒரு நிமிட கற்பனை பளிச்சிட என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். உடனே அவர் என்னை “என்னடா பரீட்சை எடுக்கறதுக்கு முன்னாடி ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க? ஒரு வேளை முடிவு தெரிஞ்சிடிச்சோ!!! அப்படிங்கற மாதிரி பார்க்க, சாரி என்று நான் கூறி ரைட் இன்டிகேட்டரை போட்டு காரை ஆங்கிள் பார்க்கிங்கில் இருந்து பின்னால் மெல்ல எடுத்து பின் வளைத்து நேரே சென்றேன்.

முதலில் சுலபமான ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் முடித்து விடலாம் என்று மனதில் ஒரு கணக்குப் போட்டு அதன்படி முதலில் ஹில் டெஸ்ட் எடுக்க சென்றேன். அந்த மலை மீது இரு கோடுகள் குறுக்கே வரையப்பட்டிருக்கும். நாம் நமது காரை அந்த இரு கோட்டிற்கு நடுவில் நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். இது தான் சரியான முறை. அதை தான் நான் கற்றும் கொண்டேன். அன்று வரை வகுப்பு பயிற்சிகளில் இந்த வகை பார்க்கிங்கில் எந்த தவறும் இன்றி செய்து வந்ததால் கொஞ்சம் கூடுதல் தன்னம்பிக்கையோடு மலை மீது ஏறினேன். அந்த சிறிய மலை மீது ஏறியதும், முன் சொன்னது போல் கார் அந்த இரண்டு கோடுகளுக்கு நடுவில் வந்ததும் நிறுத்த வேண்டும்.

நான் பரீட்சை எடுத்தது இரவு ஏழரை மணிக்கு. அன்று வரை எந்த வகுப்பும் இரவு நேரத்தில் இருக்கவில்லை. மலை மீது காரை ஏத்தினேன். கண்ணாடிகளில் பார்த்தேன் வெள்ளைக் கோடு தெரிந்தது உடனே காரை நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டேன். எனது கார் அருகே வேகமாக வந்த ஆய்வாளர் என்னை சற்று எனது கார் எங்கே இருக்கிறது என்று இறங்கி பார்க்க சொன்னார். நானும் இறங்கினேன். பார்த்தேன்😲 கார் முதல் கோட்டின் மேல் நின்று கொண்டிருந்தது. ஐய்யோ! என்று தூக்கிவாரிப் போட்டது. எப்பிடி டி!!!! அப்படின்னு என் மனம் என்னை கேட்டது. செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்த என்னிடம் காரை அடுத்த பார்க்கிங்கிற்கு ஓட்டி செல்லும் படி கூறினார் ஆய்வாளர்.

நானும் காருக்குள் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி அடுத்ததாக எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு செல்ல ஆயத்தம் ஆனேன். இன்டர்ணல் ரோட் டெஸ்ட் அஸஸ்மெண்ட்டில் செய்ததைப் போலவே இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டிலும் எடுத்ததும் தவறிழைத்து விட்டதை எண்ணி என் நெத்தியில் நானே எனது வலது கையால் தட்டிக் கொண்டே எமர்ஜென்சி பார்க்கிங் முன் வந்து சேர்ந்தேன். பின் பயிற்றுவிப்பாளர் கற்று தந்ததை போலவே காரை இருபதுக்கு மேல் இருபத்தி ஐந்துக்குள் ஸ்பீடு இருக்கும் படி ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் ஸ்டாப் என்று சொன்னதும் உடனே ப்ரேக்கை முதலில் செய்த தவற்றை மனதில் கொண்டு எனது முழு பலத்தையும் திரட்டி ஒரு மிதி மிதித்து காரை நிறுத்தினேன். ஏனெனில் கார் ப்ரேக் அழுத்தியதும் உடனே அதே இடத்தில் நிற்க வேண்டும் அவ்வளவு பலமாக அழுத்த வேண்டும் இல்லையேல் வண்டி சற்று முன்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்றால் நாம் அதில் ஃபெயில்!

ஆய்வாளர் நெக்ஸ்ட் என்று சொல்ல உடனே காரை அங்கிருந்து ஆங்கிள் பார்க்கிங்கை நோக்கி ஓட்டி சென்றேன்‌.
எனது பயிற்றுவிப்பாளர் சொல்லி கொடுத்ததை போலவே திருப்பினேன். ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸ்க்குள் காரை சரியாக ஓட்டி சென்று நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டு ஆய்வாளர் முகத்தைப் பார்த்தேன். அவர் தலையை இடது வலது புறமாக ஆட்டிக்கொண்டே என்னை காரிலிருந்து வெளியே வர சொன்னார். போச்சுடா!!! இதுவும் அவுட்டா என்று என் மனம் என்னிடம் கேட்டது அவருக்கு தமிழ் தெரிந்திருந்தால் நிச்சயம் புரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏன்னா அவ்வளவு சத்தமாக மைண்ட் வாயிஸ் என்றெண்ணி நானே சொல்லிவிட்டேன். ஒரு முறை காரை சுற்றி பார்த்தேன். கார் சரியாக தான் பார்க்கிங் பாக்ஸுக்குள் நின்றிருந்ததை பார்த்ததும் அப்பாடா என்று இருந்தது. கார் பார்க்கிங் பாக்ஸுக்குள் தானே நிற்கிறது பின்பு ஏன் என்னை இறங்கி பார்க்க சொன்னார் ஆய்வாளர் என்று என் முகத்தில் ஒரு பெரிய ஆச்சர்ய குறியுடன் அவரை நோக்கினேன்.

என்னருகே வந்து நின்றவர் என்னிடம், நான் சரியாக தான் ஆங்கிள் பார்க்கிங்கிற்குள் வண்டியை ஓட்டி வந்ததாகவும், கார் ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிருத்தியதாகவும் கூறி அதன் பின் ஆனால்…என்று ஒரு இழு இழுத்து….காரை நன்றாக உள்ளே ஓட்டி வந்து பார்க் செய்வதற்கு பதில் சற்று முன்னதாகவே நிறுத்தி பார்க்கிங்கில் வண்டியை போட்டதாக கூறினார். அப்போது மீண்டும் காரை நன்றாக பார்த்தேன் அது சில சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தான் முன் கோட்டில் இருந்து சற்றே பின்னால் இருந்தது. அதைப் பார்த்ததும் நான் பாஸ் தானே என்ற குழப்பமான முகத்துடன் அவரைப் பார்த்தேன். அதற்கு அவர்

“இப்படி நீங்க RTA பார்க்கிங் டெஸ்ட் ல பார்க் பண்ணுனீங்கன்னா நிச்சம் ஸ்மார்ட் கார் உங்களை ஃபெயில் ஆக்கி விடும்”

என்று கூற

“அச்சச்சோ! மறுபடியும் மொதல்லேந்தா!!” என்ற வடிவேலு டையலாக் தான் அந்த இடத்தில் ஞாபகம் வந்தது. ஆய்வாளர் என்னை மீண்டும் காருக்குள் ஏறி அடுத்த பார்க்கிங் செய்து காண்பிக்க சொன்னார். தெம்பு குறைந்த மனதுடன் காருக்குள் ஏறி அடுத்த கராஜ் பார்க்கிங்கை நோக்கி காரை மெல்ல ஓட்டி சென்றேன்.

காரை ரோட்டின் நடுவே இருக்கும் வெள்ளை நிற கோட்டிற்கு மிக அருகே இருக்கும் படி ஓட்டி சென்று பின் ரிவர்ஸில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து பின்னால் எடுத்து வந்து சரியாக அந்த கராஜ் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிறுத்த வேண்டும். நானும் அது படியே செய்து வண்டியை அதன் பாக்ஸிற்குள் நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு காருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் முகத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனுமின்றி அடுத்த பார்க்கிங்கிற்கு செல்லும் படி கூறினார். அப்பாடா பாஸ் என்று எண்ணிக் கொண்டு அடுத்ததாக என்னை சோதிக்க காத்திருந்த பாரலல் பார்க்கிங்கை நோக்கி காரை ஓட்டி சென்றேன்.

பாரலல் பார்க்கிங்கிற்கு காரை பார்க்கிங் அருகே இருக்கும் வெள்ளைக் கோட்டில் இருந்து ஒரு அடி தள்ளி ஓட்டி சென்று பின் ரிவர்ஸ் கியரில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து வண்டியை மெல்ல பாரலல் பார்க்கிங் பாக்ஸிற்குள் நுழைத்து வகுப்பில் கற்றுக் கொண்டதை போலவே பார்க் செய்தேன். ஹேண்ட் ப்ரேக் போட்டேன். ஆய்வாளரை பார்த்தேன். அவர் கார் கதவை திறந்து உள்ளே வந்து டிரைவர் சீட்டுக்கு அருகே இருக்கும் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்துக் கொண்டதும் என்னை நேராக முதன் முதலில் எங்கிருந்து பார்க்கிங் டெஸ்ட்டுக்கு காரை வெளியே எடுத்து வந்தேனோ அதே பார்க்கிங்கிற்கு ஓட்டி சென்று பார்க்க செய்ய சொன்னார். நானும் அவர் கூறிய படியே பாரலல் பார்க்கிங்கில் இருந்து வண்டியை வெளியே எடுக்கும் முன் செய்ய வேண்டிய சிக்ஸ் பாயிண்ட் செக் ஆகிய சம்பிரதாயங்களை செய்து வெளியே எடுத்து அவர் கூறிய பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன்.

ஆய்வாளர் என்னைப் பார்த்து ” நீங்கள் ஹில் பார்க்கிங்கில் கோட்டின் மீது காரை நிறுத்தி விட்டீர்கள், ஆங்கிள் பார்க்கிங்கில் சில சென்டிமீட்டர் முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டீர்கள், கராஜ் பார்க்கிங்கில் காரை பாக்ஸிற்குள் சரியாக தாங்கள் கொண்டு வரவில்லை சற்று முன்னதாக வண்டியை திருப்பியதால் கோட்டின் மீது வண்டியின் டயர் ஏறியது. எமர்ஜென்சி பார்க்கிங் அன்ட் பாரலல் பார்க்கிங் மட்டும் தான் பாஸ் ஆகி இருக்கிறீர்கள். எனவே மீண்டும் ஒரு இரண்டு மணி நேர வகுப்பிற்கு புக் செய்து நன்றாக கற்றுக்கொண்ட பின் மீண்டும் இன்டர்ணல் டெஸ்ட் கொடுங்க. ஆல் தி பெஸ்ட்.”

என்றார். அதை கேட்டதும். எங்கோ கேட்ட குரல் போல் இருக்க…

“அட பார்வதி! உனக்கு இந்த கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் இன்டர்ணல் டெஸ்ட்டில் இரண்டாவது முயற்சியில் தான் பாஸ் ஆக வேண்டுமென்பது எழுதப்படாத விதியோ!!!”

என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வெளியே எனக்காக காத்திருந்த என் கணவரிடம் சென்று

“நான் ஃபெயில் ஆகி விட்டேன்”

என்று சொன்னதும்

“அதெல்லாம் டிரைவிங்கில் சகஜமப்பா” என்றார்.

அவர் ஏற்கனவே லைசென்ஸ் எடுத்துள்ளதால் அவருக்கு என் கஷ்டம் புரிந்தது. ஆனாலும் எனக்கு அந்த பரீட்சையின் பதற்றம் குறைய சில மணி நேரம் ஆனது.

வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் சற்று நிதானித்து கொண்டு

“அடுத்த முறை பார்த்துக்கலாம்”

என அடுத்த இரண்டு மணி நேர வகுப்புக்கு கால் சென்டர் எண்ணை அலைபேசியில் அழைத்து பதிவு செய்தேன். நாம எது செய்தாலும் அதில் சில வெற்றிகளும் பல தோல்விகளும் இருப்பது தான் வாழ்க்கை. இல்லையா! இரண்டாவது முயற்சியில் பாஸ் ஆனேனா? இல்லையா!!!! அடுத்த பதிவில் காண்போம்.

🚗…பயணம் தொடரும்…🚗

ஒரு வழியாக இரண்டாவது முயற்சியில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் பாஸ் ஆனதும் நம்பிக்கை பிறந்தது. அடுத்ததாக நான்கு மணிநேரம் பார்க்கிங் வகுப்புக்கு செல்லும் படி கூறினர். சரி என்று சென்றேன்.
பார்க்கிங்கில் ஐந்து வகை என்று ஆரம்பித்தார் பார்க்கிங் பயிற்றுவிப்பாளர். பாரலல், கராஜ், ஆங்கிள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் என்று நான்கு மணிநேர வகுப்பில் கற்றுத் தந்தார். ஆங்கிள் பார்க்கிங் தவிர மற்ற அனைத்தும் நன்றாக சரியாக செய்தேன். இந்த வகுப்பின் போது தான் பார்க்கிங் டெஸ்ட் ஸ்மார்ட் காரில் எடுக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அது என்ன ஸ்மார்ட் கார்? என்று கேட்டேன். அதற்கு அவர், இன்டர்ணல் டெஸ்ட்டின் போது அந்த கார் எப்படி இருக்கும் அதில் நான் எப்படி டெஸ்ட் எடுக்க வேண்டுமென்பதை முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டு தான் அதில் டெஸ்ட் எடுக்க சொல்வார்கள் என்றார். எல்லாம் ஒரு அனுபவம் தானே! இல்லையா. சரி அதையும் பார்ப்போம் என்று அதற்கான இன்ஸ்டிடியூட்டின் பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சைக்கு பதிவு செய்தேன். ஏனெனில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் போலவே இந்த இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டை க்ளியர் செய்தால் தான் RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கே அனுப்புவார்களாம்.

சிங்கத்தின் குகைக்குள் போயாச்சு ஒண்ணு அதோட போராடி எப்படியாவது வெளியே வெற்றியோடு வரணும் இல்லையா சத்தமில்லாம அங்கிருந்து ஓடிடணும். இந்த ரெண்டு ஆப்ஷன் தான். தோற்று ஓட மனமில்லை. எனவே போராட முடிவெடுத்து பார்க்கிங் இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு சென்றேன். அங்கே எனது ஆய்வாளர் என்னை அந்த ஸ்மார்ட் காரில் ஏறி அமரச் சொன்னார். நானும் அம்ர்ந்தேன். முதலில் அவர் அந்த காரை ஓட்டி அது எப்போது என்ன சொல்லும், அப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். நான் ஒரு முறை அந்த காரை சுற்றிப் பார்த்தேன். அதன் ஸ்டியரிங் வீலில் பொட்டு பொட்டாக சென்சர்ஸ் இருந்தது. காருக்குள் முன் கண்ணாடி மீது இரண்டு காமிராக்கள், காரின் நடுவில் இரண்டு காமிராக்கள், பின் சீட்டிற்கு மேல் இரண்டு காமிராக்கள், அதை தவிர இன்னும் பல காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. காரினுள் ஏறி டெஸ்ட் எடுக்கத் துவங்கியதும் காரை விட்டு இறங்கவோ இல்லை அனாவசியமாக நிறுத்தவோ கூடாது என்ற எச்சரிக்கை வேறு. டிரைவர் சீட்டுக்கு அருகில் ஒரு பெரிய டேப்லட் பொருத்தப் பட்டிருந்தது.

நாம் காரில் ஏறியதும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பின் அந்த டேப்லெட் மேல் இருக்கும் காமிராவிடம் நான் டெஸ்ட்டுக்கு தயார் என்று கை கட்டைவிரலை (thumbs up) காட்ட வேண்டும். உடனே நமது அனைத்து விவரங்களும் நமது புகைப்படத்துடன் அந்த டேப்லெட்டில் பளிச்சிடும். அதன் பின் வண்டிக்குள் “உங்கள் பார்க்கிங் டெஸ்ட் ஆரம்பம் ஆகிறது” என்று ஓர் குரல் ஒலிக்கும். உடனே நாம் கார் பார்க்கிங் நோக்கி ஓட்டிச் செல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு கால அவகாசம் உள்ளது. அந்த ஐந்து பார்க்கிங் டெஸ்ட்டையுமே இருபது நிமிடங்களில் முடிக்க வேண்டும். வண்டியை எடுக்க மற்றும் மீண்டும் எடுத்த இடத்தில் ஓட்டி வந்து நிறுத்த ஏழு நிமிடங்கள், பாரலல் பார்க்கிங்கிற்கு ஐந்து நிமிடங்கள், கராஜ் பார்க்கிங்கிற்கு மூன்று நிமிடங்கள், ஆங்கிள் பார்க்கிங்கிற்கு இரண்டு நிமிடங்கள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு தலா தொண்ணூறு நொடிகள்.

பரீட்சை களத்தில் மூன்று ஆங்கிள் பார்க்கிங், மூன்று கராஜ் பார்க்கிங், இரண்டு பாரலல் பார்க்கிங் ஸ்லாட்டுகள் இருக்கும். மேலும் ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் தளங்கள் ஒன்று தான் கொடுக்கப்பட்டிருக்கும். பரீட்சை களத்தில் நாம் மட்டுமின்றி இன்னும் பலர் பரீட்சை எடுத்து கொண்டிருப்பார்கள் எனவே நாம் கவனமாக காரை ஓட்டிச் சென்று எப்பெப்போ எந்தெந்த ஸ்லாட் காலியாகிறதோ அப்போது அங்கு சென்று பார்க்கிங் செய்ய வேண்டும். பின் அடுத்த பார்க்கிங் ஸ்லாட்டிற்கு பொறுமையாக செல்ல வேண்டும். இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு பார்ங்க்கிங் டெஸ்ட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பார்க்கிங்கிற்கும் நாம் காரை ஓட்டி செல்லும் அந்த ரோட்டில் சென்சர்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நாம் அதன் மீது நமது காரை ஓட்டிச் செல்லும் போது நாம் ஓட்டிச் செல்லும் காருக்குள்(உதாரணத்திற்கு ) “இப்போது நீங்கள் கராஜ் பார்க்கிங் செய்ய போகிறீர்கள்” என்ற குரல் ஒலிக்கும். இதே போல அனைத்து பார்க்கிங் பகுதிக்குள் நாம் செல்லும் போதும் கார் நம்மிடம் எந்த பார்க்கிங் செய்ய இருக்கிறோம் என்பதை கூறும். அதே போல் ஹில் பார்க்கிங் செய்ய மலை போலிருக்கும் அந்த ரோட்டின் மேலே ஏறும் போது பீப்… பீப்… பீப் என்று நமது காருக்குள் சப்தம் வரும் அந்த சப்தம் வந்ததும் காரை பார்க் செய்து ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். ஹேண்ட் ப்ரேக் போட்டதும் நமது கார் நம்மிடம் அடுத்த பார்க்கிங் செய்ய அங்கிருந்து கிளம்ப சொல்லும். உடனே அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும்.

ஸ்மார்ட் கார் என்ன சொல்லும் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி வண்டியை ஓட்டி ஒவ்வொரு பார்க்கிங்காக போட வேண்டும் போன்ற அனைத்தையும் சொல்லிக்கொடுத்த பின் ஆய்வாளர் காரை விட்டு இறங்கி என்னையும் இறங்க சொன்னார். நானும் இறங்கினேன். அனைத்தும் புரிந்ததா என்று கேட்டார். நானும் எல்லாம் புரிந்தது என்று கூறினேன். அதுக்கப்புறம் அவர் சொன்னார் பாருங்க ஒரு விஷயம்…அது என்னன்னா அதுவரை அவர் ஓட்டி காண்பித்த அந்த ஸ்மார்ட் காரில் நான் இன்டர்ணல் அஸஸ்மஎண்ட் டெஸ்ட் எடுக்கப் போவதில்லையாம். அந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் தருவார்களாம். மேலும் அப்போதைக்கு நான் பயிற்சி மேற்கொண்ட சாதாரண காரில் தான் பரீட்சையை எடுக்கணும்முன்னு சொன்னார்.

ஒரு விதத்தில் அந்த பல கண்கள் (காமிராக்களை தான் அப்படி சொல்லறேன்) கொண்ட காரை ஓட்ட தேவையில்லை…மேலும் மனிதர்கள் ஆய்வாளர்களாக இருந்தால் கூட கொஞ்சம் கவணிக்க தவற வாய்ப்பிருக்கிறது ஆனால் இந்த மெஷின் அப்படி இல்லையே நாம் இழைக்கும் தவறுகள் அனைத்தையும் படம் பிடித்து விடுமே என்ற பதற்றத்தில் இருந்து தற்காலிகமாக விடுப்பட்டதை எண்ணி அப்பாடா என்றிருந்தது. ஆனால் RTA டெஸ்ட்ட அதில் தானே எடுக்க வேண்டும் என்று மனதின் ஓரத்தில் அசிரீரி ஒலிக்க உடனே என் மனதின் மற்றொரு பக்கம், முதலில் இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த கார் அதனால் இப்போ அதை ஒத்தி வச்சுட்டு இப்ப என்ன செய்யணுமோ அதை செய்ய போ என்று கட்டளையிட உடனே ஓரத்தில் ஒலித்த அசிரீரியும் நானும் அமைதியாக அப்ப நடக்க இருப்பதை நடத்திக் காட்டுவோம் என்று முடிவெடுத்து இரண்டு கண்கள் முன்னிலையில் பரீட்சையை மேற்கொள்ள எனக்கான காரில் ஏறினேன்.

காரை மெல்ல பார்க்கிங்கில் இருந்து எனது பயிற்றுவிப்பாளர் சொல்லிக்கொடுத்தது போலவே வெளியே எடுத்து பின் சர்ரென்று பரீட்சையை எதிர்கொள்ள புறப்பட்டேன்.

எந்தெந்த பார்க்கிங் எப்படி எப்படி செய்தேன். இந்த பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சையில் பாஸ் ஆனேனா? இல்லையா? போன்ற கேள்விகளின் விடைகளையும் பார்க்கிங் சுவாரஸ்யங்களையும் நாளை பதிவில் காண்போம்.

🚗பயணம் தொடரும்… 🚗

அப்பேற்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பிக்கப்பட்ட எனது ஓட்டுனர் வகுப்பில் அன்று முதல் கப்சிப்😷 சரி அவர் சொல்வது போலவே நடந்துக் கொள்வோம் என்று காரை ஓட்ட ஆரம்பித்தேன். அங்கே பார், இங்கே பார், ஷோல்டர் செக் பண்ணு, ஓட்டும் போது மூன்று கண்ணாடிகளையும் பார், சாலையில் நடப்பவர்களுக்கு நின்று வழிவிட வேண்டும். ரோட்டில் டாட்டட் லைனில் நிதானித்து வண்டி ஏதுமில்லை என்றால் வேகமாக செல் வண்டியை நிறுத்தாதே. ரோட்டில் சாலிட் லைன் இருந்தால் கட்டாயம் வண்டியை நிறுத்திவிட்டு தான் செல்ல வேண்டும். வண்டி அந்த கோட்டையும் தொடக்கூடாது இந்த கோட்டையும் தொடக்கூடாது நடுவில் செல்ல வேண்டும். மஞ்சள் கோட்டை தொடவே கூடாது. நாற்பது ஸ்பீடு லிமிட் என்றால் நாற்பது முதல் நாற்பத்தைந்து வரை தான் செல்ல வேண்டும் அதை விட அதிக வேகம் கூடாது. அதே நேரம் அதை விட கம்மி வேகத்திலும் செல்லக் கூடாது. ரோட்டில் குறிப்பிட்டுள்ள வேகத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும். வண்டி ஜெர்க் ஆக கூடாது. ஸ்மூத்தாக ஓட்ட வேண்டும். ரோட்டில் இருக்கும் பெரிய வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது ஸ்பீடு இருபதை தாண்ட கூடாது. சிறிய வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது ஸ்பீடு ஜீரோவில் இருக்க வேண்டும். இண்டிகேட்டர் போடாது வண்டியை திருப்பக்கூடாது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது இண்டிகேட்டர் குடுக்க வேண்டும் எந்த இண்டிகேட்டர் குடுக்க வேண்டும் என தியரியாக படிக்கும் போது இருந்ததை விட ரோட்டில் காரை ஓட்டும் போது சற்றே நம்பிக்கை தளர்வதை உணர்ந்தேன். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேர வகுப்பு. வாரத்திற்கு இரண்டே வகுப்புகள் என பத்து மணிநேர வகுப்பு முடிந்ததும் அவர்கள் இன்ஸ்டிடியூட்டின் இன்டர்ணல் டிரைவிங் அசஸ்மெண்ட் டெஸ்ட் இருப்பதாகவும் அதை நான் எடுக்க வேண்டும் என்றும் கூறினர். சரி என்று அதற்கு பதிவு செய்தேன். அதற்கான நாள் வந்தது. இன்ஸ்டிடியூட் சென்றேன். பெண்களுக்கான வரவேற்பரையில் அமர்ந்தேன். சற்று நேரமானதும் ஒரு பெண்மணி வந்து எனது பெயரை அழைத்தார். நான் எழுந்து அவர் பின்னால் சென்றேன். என் கையில் கார் சாவியை கொடுத்து ஓர் காரை காட்டி அதில் ஏறும்படி கூறினார். நானும் ஏறி எனது பயிற்றுவிப்பாளர் சொன்னதை போலவே சீட் பெல்ட் போடுவதற்கு முன் செய்ய வேண்டி சடங்குகள் (அது படி தான் செய்ய வேண்டும்) ஆன இஞ்சின் ஸ்டார்ட் செய்வது, ஏ.சியை ஆன் செய்வது, கண்ணாடிகளை சரி செய்வது போன்றவற்றை முடித்தேன். சீட் பெல்ட்டை அணிந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளரும் சீட் பெல்ட் போட்டிருக்கிறாரா என்றும் நாம் பார்க்க வேண்டும். அதையும் பார்த்தேன். பின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆய்வாளர் வண்டியை நிதானமாக வெளியே எடுத்து ஓட்டச் சொன்னார். சிக்ஸ் பாயிண்ட் செக் என்று சொல்லப்படும் வலது புற கண்ணாடி, ஷோல்டர் செக், இடது புற கண்ணாடி ஷோல்டர் செக், வண்டிக்கு பின்னால், காரின் சென்டர் மிரர் ஆகியவைகளை சரி பார்த்த பின் காரை இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே ஓட்டி வந்தேன். அதுவரை எல்லாம் நல்லபடியாக தான் சென்றது.

அன்று வரை இன்ஸ்டிடியூட்டில் இருந்து வண்டியை அத்தனை முறை வெளியே எடுத்து வந்துள்ளேன். ஆனால் அன்று பதட்டத்தில் அதன் வாசலில் இருந்த ஸ்டாப் சைனை கவணிக்க தவறிவிட்டேன். நான் அந்த பரீட்சையில் தோல்வியுற்றதாக ஆய்வாளர் கூறி வலது புறம் வண்டியை திருப்பி ஓட்டச் சொன்னார். அதை கேட்டதுமே அவ்வளவுதான் என்று என் மனம் என்னிடம் கூறியது. அடுத்து பதினைந்து நிமிடங்கள் ஆய்வாளர் சொன்னபடி காரை ஓட்டி இருக்கிறேன். ஆனால் எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஏனெனில் என் மனம் முழுவதும் எடுத்ததும் நான் செய்த தவற்றை எண்ணிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக இன்ஸ்டிடியூட்டிற்குள் வந்து காரை நிறுத்தினேன். சீட் பெல்ட்டை கழற்றினேன். பக்கத்தில் இருந்த ஆய்வாளர், வண்டி ஓட்டிய அந்த பதினைந்து நிமிடங்களில் நான் செய்த தவறுகளை பட்டியலிட்டார். அய்யோ! பார்வதி நீ என்னடான்னா ஒரே ஒரு தப்ப நினைச்சுட்டு இருக்க இங்க இந்தம்மா என்னடான்னா இருபது தவறுகளை அடுக்கறாங்களே! என்று என் மனம் என்னை ஏளனம் செய்தது எனக்கு கேட்டது. உடனே நான் ஆய்வாளரிடம்,

“முதலிலேயே நான் ஒரு பெரிய தவற்றை செய்து விட்டதால் பதற்றத்தில் அடுத்தடுத்து தவறுகளை இழைத்து விட்டேன். மன்னியுங்கள்”

என்றேன். அதற்கு அவர்

“எதற்கு மன்னிப்பு? ஒரு போதும் வண்டி ஓட்டும் போது பதற்றம் இருக்க கூடாது. தன்னம்பிக்கை வேண்டும். நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்கள். அதனால் தான் தவறு நேர்கிறது. இம்முறை நீங்கள் இந்த பரீட்சையில் தோல்வி அடைந்துள்ளீர்கள். மீண்டும் வகுப்புகள் எடுத்து நன்றாக பயிற்சி பெற்றதும் வாருங்கள் வண்டியை ஓட்டி காட்டுங்கள். இங்கே நாங்கள் வைக்கும் பரீட்சையில் நீங்கள் பாஸ் ஆனால் தான் உங்களை நாங்கள் RTA ரோட் டெஸ்ட்க்கு அனுப்புவோம். ஆல் தி பெஸ்ட்”

என்று கூறினார். நன்றியை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். மனம் சற்று சோர்வடைந்து தான் இருந்தது. ஆனால் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் உதித்தது. நான்கு மணிநேர வகுப்புக்கு சென்றேன். மீண்டும் அதே இன்டர்ணல் டெஸ்ட் எடுத்தேன். இம்முறை சற்று தன்னம்பிக்கை கூடியிருந்தது. சரியாக ஓட்டி, அப்படியும் ஆறு சிறிய தவறுகள் செய்தேன். பத்து வரை சிறிய தவறிழைக்கலாம் என்பதால் பாஸ் ஆனேன்.

அடுத்ததாக பார்க்கிங் கிளாஸில் சேர வேண்டும் என்று கூறினார்கள். அதற்கான வகுப்புகளை பதிவு செய்ய சென்றேன். இரண்டு நாட்கள் நான்கு மணி நேர வகுப்பை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

பார்க்கிங் பரிதாபங்கள் நாளைய பதிவில்😊

🚗பயணம் தொடரும்…

ஒரு பக்கம் சுசிலா அவர்கள் சொசைட்டி  குழந்தைகளுக்கு பாரதியார் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் சத்தமாக நம் மகாகவியின் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். 

மறுபக்கம் அவளின் பக்கத்து வீட்டுக்காரர்களான வசந்தியும் ராதாவும் பேசிக் கொண்டிருந்தனர். 

வசந்தி: ஏய் ராதா இன்னிக்கு நம்ம கண்ணம்மா வேலைக்கு உன் வீட்டுக்கு வந்தாளா?

ராதா: இல்லையே வசந்தி. நானும் அவளுக்கு தான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். நீ என்னடான்னா என்கிட்ட வந்து கேட்கிற!!!

வசந்தி: என்ன ஆச்சு அவளுக்கு? இந்த சுசிலா வேற ஞாயிறு ஆச்சுன்னா பாரதியார்… பாட்டுன்னு ஆரம்பிச்சிடறா!!!  

ராதா: விடுப்பா. இந்த மாதிரி யாராவது சொல்லிக்கொடுத்தா தான் இந்த காலத்து குழந்தைங்க பாரதி யாருன்னே தெரிஞ்ப்பாங்க. 

வசந்தி:  நான் அந்த கண்ணம்மாக்கு ஃபோன் செஞ்சும் பாத்தேன். ஆனா அவ எடுக்கல!! 

ராதா: அவ நம்ம கிட்ட வேலை கேட்டு வந்தப்ப எப்படி இருந்தா!! ஆனா இப்ப!!! ஞாயிறு லீவு வேணுமாம், சம்பளத்த Gpay or phonepay பண்ணுங்கறா!! அதை கேட்ட நான் பப்பேன்னு முழிச்சுக்கிட்டு நின்னேன்!!! 

வசந்தி: நீ சொல்லறதும் கரெக்ட் தான் ஒண்ணும் தெரியாதவளா இருந்தவ நம்மக்கே அட்வைஸ் சொல்லற அளவுக்கு என்ன வாய்? 

ராதா: அத சொல்லு வசந்தி. சரி சரி விடு! என்ன பண்ண! ஒரு வேளை அவளுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ!! ஏய் அதோ நம்ம சுசிலா வரா!! 

வசந்தி: ஆமாம் ஆமாம்!! அவ குடுக்குற தைரியத்துல தான் இந்த கண்ணம்மா ரொம்ப ஆட்டம் போடறா!

ராதா: சும்மா இரு வசந்தி. சுசி! ஏய் சுசி!

சுசிலா: ஹே ராதா. எப்படி இருக்க? ஹாய் வசந்தி நீ எப்படி இருக்க? ஆஃபீஸ் வேலையெல்லாம் எப்படி போவுது? 

ராதா: நான் நல்லா இருக்கேன் சுசி.

வசந்தி: ம்…ம்…நல்லா தான் இருக்கேன். சரி இன்னைக்கு அந்த கண்ணம்மா உன் வீட்டுக்கு வேலைக்கு வந்தாளா? 

சுசிலா: இல்ல வரல! 

வசந்தி: அப்படீன்னா அவ இன்னைக்கு நம்ம காலனிக்குள்ளயே வரலையா! ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவ பாட்டுக்கு லீவு போட்டா நாம என்ன பண்ணறது? 

சுசிலா: இப்படி நின்னு பேசறதுக்கு பதிலா வேலையை பார்க்கலாமே!! அவளும் மனுஷி தானே. அவளுக்கும் வாரத்துல ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா? 

வசந்தி: உனக்கென்னமா உன் வீட்டுல நீயும் உன் பொண்ணும் மட்டும் தான் ஆனா என் வீட்டுல அஞ்சு டிக்கெட் அப்படீன்னா எவ்வளவு பாத்திரம் சேரும்? எவ்வளவு வேலை இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு!

சுசிலா: சரி சரி! எனக்கு நேரமாச்சு நான் வரேன்.

வசந்தி: நியாயமான கேள்வி கேட்டா எப்படி தப்பிக்கறா பாரு!!

சுசிலா: என்ன சொன்ன வசந்தி!! நான் தப்பிக்கல. எனக்கு வேலை இருக்குப்பா. “புறஞ்சொல்லலாகாது பாப்பான்னு” நம்ம பாரதி சொன்னது பாப்பாக்கு மட்டுமில்ல நம்மளுக்கும் தான்.  அதுவுமில்லாம கண்ணம்மா அவ கனவ நெனவாக்க போயிருக்கா. அவ இன்னைக்கு வர்றது டவுட் தான். சும்மா பேசிட்டு இருக்காம ரெண்டு பேரும் வேலையை போய் பாருங்க.

ராதா: பார்த்தியா வசந்தி!! அப்படீன்னா அந்த கண்ணம்மா இன்னிக்கு வரமாட்டேன்னு இவகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கா!

வசந்தி: ஏன் நம்மகிட்டயும் சொல்லிருக்கலாம் இல்ல

ராதா: நாம விட மாட்டோம்ன்னு தான் சொல்லலையோ என்னவோ! 

வசந்தி: சரி சரி!! நம்ம சுசிலா மாதிரி நானும் ஒரு பாரதியார் லைன் எ இந்த சிட்டுவேஷனுக்கு ஏத்தா மாதிரி சொல்லவா…

ராதா: என்னது? சொல்லேன் கேட்போம்!

வசந்தி: “துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா” சாரி ராதா! ராதா! போ நீயும் போய் உன் வேலையை பாரு. 

என்று பாத்திரத்தை தேய்ப்பது போல் பாவனை காட்டிக் கொண்டே சொன்னாள் வசந்தி.

ராதா: எனக்கு தோனுற பாட்டு என்ன தெரியுமா “கண்ணம்மா கண்ணம்மா சீக்கிரம் வேலைக்கு வந்துடுமா” 

மறுநாள் ஆனது

கண்ணம்மா: வசந்தி மா வசந்தி மா!! 

வசந்தி: வாடி மா வா! நேத்து ஏன் மகாராணி வரலை?

கண்ணம்மா: நேத்திலேந்து நான் என் வேலைய விட்டு விலகிட்டேன் மா.

வசந்தி: என்னடி சொல்லுற?

கண்ணம்மா: அம்மா! அதுதான் இங்கிலிஷ் ல சொல்லுவாங்களே!! ரெஸிக்னேஷன் அத செய்யறேன் மா‌. 

வசந்தி: என்னடி கண்ணம்மா! குண்ட தூக்கி போடற? ராதா க்கு தெரியுமா?

கண்ணம்மா: அவங்க கிட்டயும் சொல்லிட்டேன்ம்மா. இப்போ நம்ம காலனில ஒரு மீட்டிங் வச்சிருக்கேன் மறக்காம வந்திடுங்க. நான் வரேன். 

வசந்தி: ஆஃபீஸ் இருக்கே!

கண்ணம்மா: அம்மா அதுதான் ஒர்க் ஃப்ரம் ஹோம் தானேமா! ஒரு பத்து நிமிஷம் தான்ம்மா… வாங்கமா! 

வசந்தி: சரி சரி வரேன். 

என்று கண்ணம்மாவிடம் கூறிய வசந்தி நேராக ராதாவிடம் சென்றாள் 

வசந்தி: ராதா…

ராதா: வசந்தி….என்ன நடக்குது? 

வசந்தி: எனக்கும் ஒண்ணும் புரியல. சரி வா நாம போய் அப்படி என்னத்த இந்த கண்ணம்மா சொல்ல போறான்னு கேட்போம். 

என்று இருவரும் அவர்களின் மற்றொரு தோழியான மாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த காயத்ரி இவர்களை பார்த்ததும்…

காயத்ரி: ஹே உமா, ராதா, வசந்தி என்ன நம்ம கண்ணம்மா எல்லாம் மீட்டிங் போட்டிருக்கா?

உமா: அவ ரொம்ப நாளா அவளுக்கு ஒரு கனவு இருக்கு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தா…அது…இந்த மீட்டிங் தானோ!!!

ஹீ ஹீ ஹீ ஹீ… என்று அவர்களுக்குள்ளேயே சிரித்து கேலி செய்துக் கொண்டனர். அப்போது அங்கு ஏதோ பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்த கண்ணம்மா அவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. பேப்பர்களை அடுக்கி கையில் ஏந்திக் கொண்டு வந்து அங்கிருந்த அந்த காலனி பெண்களைப் பார்த்து பேசலானாள். 

கண்ணம்மா: ம்….எல்லாரும் வந்துட்டீங்கன்னு நினைக்கறேன். இன்னேலேந்து நம்ம காலனில நான் வேலைப் பார்க்க போறதில்ல. 

வசந்தி: அதத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே!

கண்ணம்மா: ஆனா ஏன்னு காரணத்த சொல்லணுல்லமா. 

உமா: என்னடி மா…அந்த காரணம்!!

கண்ணம்மா: அது என்னன்னா!!! எனக்குள்ளேயும் நிறைய கனவு இருக்கு. அதுல ஒண்ணு நல்லா படிக்கணும்ங்ற கனவு, பன்னெண்டாம் வகுப்பு மட்டுமே படிச்ச நான் நம்ம சுசிலா அம்மா தயவால டிகிரி முடிச்சிட்டேன். என்னோட ஒரு கனவு பலிச்சிடுச்சு. 

Gayathri: அதுக்கும் நீ வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லறதுக்கும் என்ன கண்ணம்மா சம்மந்தம்?

கண்ணம்மா: இருங்க இருங்கம்மா.  என்னோட இன்னொரு கனவு சுயம்மா ஒரு தொழில் பண்ணனும்ன்னுங்கறது. அதுக்கும் சுசிலா மா சொல்லி தந்த பாரதியார் பாட்டு தான் எனக்கு ஊந்துகோலா இருந்துச்சு. 

வசந்தி: அப்படி என்ன பண்ணின?

கண்ணம்மா: நேத்து ஒரு ஏஜென்சி எடுக்குற இன்டர்வியூ விஷயமா போயிருந்தேன். அந்த ஆர்டர் எனக்கு கிடைச்சிருக்கு. இனி இந்த காலனி மட்டுமில்லாம இன்னும் நிறைய காலனிகளுக்கும் “கண்ணம்மா ஹோம் க்ளீனிங் சர்வீஸஸ்” லேந்து என்னோட ஸ்டாஃப் தான் உங்க வீடெல்லாத்தையும் பளபளக்க  செய்வாங்க. 

வசந்தி: அப்பாடா. வயத்துல பால வார்த்த கண்ணம்மா! 

கண்ணம்மா: இருங்க அதுக்கும் சில விதிமுறைகள் எல்லாம் இருக்கு அதெல்லாம் இந்த ஃபார்ம்ல இருக்கு இதுக்கெல்லாம் உட்படறவங்க மட்டும்  கையெழுத்து போட்டு தந்தா உங்க வீட்டுவேலைக்கு ஆள் வருவாங்க. இல்லாட்டி இல்ல. அவங்கள மரியாதையா நடத்தணும். 

என்று அவள் கையில் வைத்திருந்த ஃபார்ம்களை அனைவருக்கும் குடுத்தாள். அதை வாங்கி பார்த்தனர் அக்காலனி பெண்கள். அப்போது ராதா கண்ணம்மாவிடம்…

ராதா: சரி கண்ணம்மா! உனக்கு இவ்வளவு விஷயங்களும் தைரியமும் எங்கேந்து வந்தது?

கண்ணம்மா: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்

தொழுது படித்திடடி பாப்பான்னு பாரதியார் பாட்டு நீங்க கேட்டதில்ல? அதுக்கு ஏத்தா மாதிரி படிப்பை தொழுது படிச்சேன்.

ராதாவை பார்த்து சொன்னாள் 

ராதா: ஓ!!!!

வசந்தி: சரி படிச்ச. ஆனா தைரியம் எப்படி வந்துச்சு?

கண்ணம்மா: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! உங்களுக்கு மட்டுமில்ல மா என்னை மாதிரி இருக்கறவங்களுக்கும் தான் 

வசந்தியை பார்த்து சொன்னாள் கண்ணம்மா. 

வசந்தி & ராதா: ஆங் (என்று வாய் பிளந்து நின்றனர்)

கண்ணம்மா: வாயை மூடுங்கம்மா ஈ இல்ல கொசு போயிட போகுது. நளைக்குள்ள ஃபார்ம் ஃபில் செஞ்சு குடுங்க. சரியா.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”ன்னு

இருக்குற இந்த காலத்துலன்னு இல்லங்க எந்த காலமா இருந்தாலும் நம்ம பாரதியார் சொல்லி இருக்குறா  மாதிரி ஒரு பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி அவங்க படிப்பும் அறிவும் உழைப்பும் என்னென்னைக்கும் வீண் போனதில்லை, வீண் போகாது.

ஒரு பொண்ண நல்லா படிக்க வச்சீங்கன்னா அடுத்த சந்ததியையும் சேர்த்து படிக்க வைக்கிறது சமம்ங்க. 

சுசிலா: சபாஷ் கண்ணம்மா. சரியா சொன்ன. 

கனவு மெய்ப்பட வேண்டும்ங்கற நம்ம பாரதியார் வரிகளுக்கு ஏத்தா மாதிரி  கண்ணம்மா கண்ட கனவு நெனவாகிடுச்சு. நீங்க எல்லாரும் எதுக்கு காத்திட்டு இருக்கீங்க? ம்…உங்க கனவுகளை நிஜமாக்க புறப்படுங்க. உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

🙏நன்றி🙏

நா. பார்வதி 

ஓர் புதிய பயணம்

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது என்பது ஒரு மாபெரும் சாதனை புரிவதற்கு இணையானதாகும் என்று அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை என்று இங்கிருக்கும் மக்கள் அனைவரும் நன்கறிந்த விஷயமாகும். இந்தியாவில் கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதன்முதலில் துபாய் வந்த போது இங்கேயும் ஓட்டுனர் உரிமம் எடுத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது இந்த விருப்பத்தை நண்பர்களிடம் சொன்ன போது, இங்கு கார் ஓட்டுவது சுலபம், ஏனெனில் லேன் சிஸ்டம். ஆனால் அதற்கான உரிமம் பெறுவது என்பது மிக மிக கடினமான செயல்முறை என்றும், மேலும் பலர் ஒரு வருட காலம் எல்லாம் பயிற்சி பெற்றும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் உள்ளனர் என்றும் அவர்கள் கூற கேட்டதும் மனதிற்குள் ஓர் அச்சம் எழுந்தது உடனே அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தேன். முதலில் என் கணவர் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். இருபது வருடங்கள் கார் ஓட்டி பழக்கம் இருந்தாலும், அவரை இருபது மணிநேரம் வகுப்பு எடுத்தாக வேண்டும் என்று கூறிவிட்டனர் துபாயின் சாலை போக்குவரத்து ஆணையம். அவரின் அலுவலக பணிக்கு இடையே அவற்றை பூர்த்தி செய்து அவர் அந்த ஓட்டுனர் உரிமத்தை பெற ஐந்து மாதங்கள் எடுத்தது. அதற்கே நண்பர்கள் பலர் “பலே” என்று கூறினர். அப்போதும் என்னடா ஒரு ஓட்டுனர் உரிமம் பெறுவதில் என்ன இருக்கிறது! அதுவும் இந்தியாவில் பல வருடங்களாக கார் ஓட்டி பழக்க இருப்பவர்களுக்கு! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது என்று கணவரும் கூற கேட்டதும், முதலில் ஒத்தி வைத்த நான் பின்பு வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.

எங்காவது சென்று வர வேண்டுமெனில் டாக்ஸி/ மெட்ரோ வில் சென்று வந்தேன். சில நேரங்களில் கணவர் அழைத்து செல்வார் அல்லது நண்பர்கள் அழைத்து செல்வார்கள். பின்பு மகன் அழைத்துச் சென்றான். இப்படியே ஏழு ஆண்டுகள் உருண்டோடின. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வேலை நிமித்தம் அடிக்கடி வெளியே சென்று வர வேண்டியிருப்பதால் கணவர் மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்ய கஷ்டமாக இருந்தது. நானும் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்று முடிவெடுத்தேன். கடந்த டிசம்பர் மாதம் கார் ஓட்டுனர் வகுப்பில் சேர்ந்தேன். சேர்ந்ததும் முதலில் RTA அங்கீகாரம் பெற்ற கண் பரிசோதனை மையம் சென்று கண்களை பரிசோதனை செய்துக் கொள்ள சொன்னார்கள். நானும் சென்றேன் பரிசோதனை முடிந்ததும் அவர்கள் சிஸ்டத்தில் அப்டேட் செய்தனர். தானாக அது RTA ஆப் இல் அப்டேட் ஆனது. மீண்டும் அதே சென்டருக்கு சென்று, கார் ஓட்டி அனுபவம் இருப்பதாக கூறி எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை காட்டினேன். இருந்தாலும் வகுப்புகள் எடுத்தாக வேண்டும் என்று கூறினர். நாம் தான் இந்தியாவில் ஓட்டி இருக்கிறோமே! பார்த்துக்கலாம்! என்ற நினைப்பில் தைரியமாக இருந்தேன்.

முதலில் ஆன்லைனில் தியரி கிளாஸ் எட்டு மணிநேரம் எடுத்தாக வேண்டும் என்றனர். சரி என்று அந்த வகுப்பில் கலந்துக் கொண்டேன். அது முடிந்ததும் அதற்கான பரீட்சை தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்து அதற்கு பதிவும் செய்தேன். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் துபாய் RTA அலுவலகம் சென்றேன். பெண்கள் அமர்ந்துக் கொள்வதற்தான இடத்தில் அமர்ந்தேன். எனது பெயரை அழைத்தனர். உள்ளே சென்றேன். அங்கே குட்டி குட்டியாய் நிறைய அறைகள் இருந்தன (நம்ம ஊரில் முன்பெல்லாம் இருந்த எஸ்.டி.டி பூத் மாதிரி) அதில் ஒரு அறைக்குள் என்னை அமர்ந்து பரீட்சையை கணினியில் எடுக்கச் சொன்னார்கள். நான் சென்று அமர்ந்து காதில் ஹெட் ஃபோனை வைத்து ஸ்டார்ட் பட்டனை அழுத்தியதும் துவங்கியது பரீட்சை‌. அரை மணி நேர பரீட்சை, நாற்பது கேள்விகள். பன்னிரண்டு கேள்விகளுக்கு மேல் தவறான பதில் அளித்தால் அந்த நபர் தோல்வி அடைந்து விட்டார் என்று மீண்டும் வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். நான் பரீட்சையை முடித்து அந்த கூண்டிற்குள் இருந்து வெளியே வந்ததுமே அங்கு அமர்ந்திருந்த RTA ஊழியர் (பெண்மணி) ஒருவர் வாழ்த்துகள் நீங்கள் ஹை ஸ்கோர் செய்துள்ளீர்கள் என்று சொல்லி ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டினார். நானும் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்து அதை கையில் வாங்கிப் பார்த்தேன். நாற்பதுக்கு முப்பத்தி எட்டு என்றும் தியரி டெஸ்ட் பாஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே அதை கைபேசியில் படம் பிடித்து கணவருக்கும் மகனுக்கும் வாட்ஸ்அப் இல் அனுப்பி வைத்தேன்.

அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அங்கிருந்த வரவேற்பாளரை கேட்டேன். அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று அடுத்ததாக ஓட்டுனர் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய சொன்னார். நானும் சென்றேன். ஆனால் வகுப்புகள் இரண்டு வாரம் தள்ளி தான் உள்ளதாக கூறினர். சரி பரவாயில்லை என்றேன். அடுத்து, உங்களுக்கு பெண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா இல்லை ஆண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா என்று கேட்டனர். ஆங்!! யாராக இருந்தாலும் சரி நான் சீக்கிரம் லைசென்ஸ் பெற வேண்டும் அவ்வளவு தான் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே பதிவு செய்து விட்டதாகவும், வகுப்பு அட்டவணை மெஸேஜில் வரும் என்றும் கூறி வேறு எதாவது தெரிந்துக் கொள்ள வேண்டுமா என்றார். மனதிற்குள் அவரின் சிரிப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டே… இல்லை அவ்வளவு தான் நன்றி என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்.

அவர்கள் கூறியது போலவே வகுப்பு அட்டவணை மெஸேஜ் வந்தது. இரண்டு வாரம் கழித்து வகுப்புக்கு சென்றேன். பயிற்றுவிப்பாளருக்கு காலை வணக்கம் சொன்னேன். காரில் அமரும்படி சொன்னார். எனக்கு கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதல் வகுப்பில் எனது பயிற்றுவிப்பாளர் என்னை சற்று நேரம் காரை ஓட்டி காண்பிக்க சொன்னார். நானும் ஓட்டினேன். நிறுத்த சொன்னார். நிறுத்தினேன். “காரில் உள்ள கண்ணாடிகளை பார்க்கும் பழக்கமே இல்லையா? எப்படி நீங்கள் உங்கள் ஊரில் கார் ஓட்டினீர்கள்?” என்று கேட்க, சற்றும் தயங்காமல் “அடுத்தவர் அதை தட்டி உடைத்து விடுவார்கள் என்று எங்கள் ஊரில் நாங்கள் காரின் கண்ணாடிகளை மடக்கி கொண்டு காருக்குள் இருக்கும் சென்டர் மிரரை மட்டும் பார்த்து வண்டி ஓட்டுவோம்.” என்று பதிலளித்தேன். அதைக் கேட்டவர் என்னை பார்த்து, “இங்கே நீங்கள் காரின் வலது, இடது புற கண்ணாடிகள், சென்டர் மிரர், ஷோல்டர் செக் இதெல்லாம் பார்த்து ஒட்டவில்லை என்றால் உங்களுக்கு லைசென்ஸ் கிடைக்காது” என்றார். ஆக இப்படிப்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பித்தது எனது கார் ஓட்டுனர் வகுப்பு.

பயணம் தொடரும்…..

மையின் சாரல்கள் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் வேண்டி இக்கதையை எழுத இருக்கிறேன். இக்கதை முழுக்க முழுக்க எனது கற்பனைக் கதையாகும். இதில் வரும் கதாபாத்திரங்கள், இடம், காலம் மற்றும் பொருள் அனைத்தும் என்னுள் தோன்றியதை வைத்து படைத்துள்ளேன். நமது தமிழ்நாட்டின் வீர மங்கைகளாக திகழ்ந்த/ திகழ போகிற மூன்று பெண்கள் பற்றிய கதையாகும்.

வீரத்திலும், விவேகத்திலும்
ஆளுமையிலும், ஆன்மீகத்திலும்
ஆனந்தத்திலும், ஆக்ரோஷத்திலும்
பாசத்திலும், பண்பிலும்
அன்பிலும், அக்கறையிலும்
ஆவலிலும், ஆர்பாட்டத்திலும்

என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய நமது பெண் சிங்கங்களின் அருமைப் பெருமையையும் அதே போல் இன்றும் நம்முள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண் சிங்கங்களின் ஆற்றலையும் உணரச் செய்திடும் கதையாக இது அமையும் என்ற முழு நம்பிக்கையுடன் எழுதத் துவங்கியுள்ளேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம், பெண் சுதந்திரம், பெண்கள் அதிகார பதவி வகித்தல் என்று பலர் பலவிதமாக போர்க்கொடி உயர்த்தியும், பல இடங்களில் இதைப் பற்றி முழக்கமிட்டும், வானொலி, தொலைக்காட்சி, கீச்சகம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஆக்கப்பூர்வமாக பேசியும், எழுதியும், படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். இவற்றால் மாற்றங்கள் நேர்ந்ததா? என்றால் அதற்கு முழுமனதோடு ஆம் நிகழ்ந்துள்ளது, என்று கூற முயன்றாலும் முடியாது மீண்டும் அதே பல்லவியை பாட ஆரம்பிக்கின்றோம். ஏனெனில் அனைத்திற்கும் ஓர் முற்றுப் புள்ளி வைக்க தவறுகிறோம் என்பதே உண்மை. ஆங்காங்கே இன்றளவும் பெண்களுக்கு எதிராக பெண்களே/ஆண்களே செய்து வரும் வக்ரங்களை பற்றிய செய்திகளை காணும் போதும், படிக்கும் போதும் பிறரிடமிருந்து கேள்விப்படும்போதும் மனம் பத பதைக்கத் தான் செய்கிறது. இல்லையா! ஏன் அப்படி? என்றால் நம்முள் இன்னமும் கொஞ்சம் ஈரம் மிச்சம் உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

அந்த ஈரத்தை வைத்து ஏதாவது செய்யலாமென்று ஒரு அடி முன் வைத்தால் அதற்குள் அடுத்த சம்பவம் ஒன்று நடந்தேறி, அது அடுத்த நாள் நாளிதழ், செய்திகள், மீம்ஸ் என்று அனைத்திலும் பளிச்சிட நாம் முதலாவது சம்பவத்திற்காக கொடி பிடிப்பதா? இல்லை இரண்டாவதாக நடந்த சம்பவத்திற்கு போராட்டம் செய்வதா? என்று ஒரு முடிவெடுத்து இரண்டிற்குமாக ஏதாவது செய்ய முயலும் போது மூன்றாவதாக ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விடுகிறது.

அந்த காலத்தில் பெண்கள் படிப்பறிவு அவ்வளவாக இல்லாதவர்களாக இருந்தாலும் நுண்ணறிவு நிறைந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.
பாசம், அன்பு, பண்பு, பொறுப்பு, அக்கறை என்று நிறைந்திருந்தாலும் தன் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒன்று நேர்ந்து விட்டால் தன் உயிரைக் கொடுத்தாவது போராடி அவர்களை காப்பாற்றுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

முப்பெரும் தேவியர்களாக திகழ்ந்த மூன்று பெண் சிங்கங்கள் கர்ஜித்தால் என்னவாகும் என்பதை பற்றியது இந்த கதை. முப்பெரும் தேவியர் என்றதும் சரஸ்வதி, லட்சுமி மற்றும் சக்தி என்று சட்டென எண்ணிக் கொள்ளாதீர்கள். இக்கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் நான் கூற வரும் முப்பெரும் தேவியர் யார் என்பது உங்களுக்குத் தெரிய வரும்‌. குடும்பத்திற்காக, நாட்டு மக்களுக்காக, பொது மக்கள் நலனுக்காக, நாட்டையும் வீட்டையும் மீட்டெடுப்பதற்காக என போராடிய / போராடிக் கொண்டிருக்கும் முப்பெரும் தேவியரை பற்றிய கதை தான் இது.

மரணத்தை துணிந்து ஏற்றுக்கொண்ட அக்கால பெண்களும், அவர்களுக்காக மரணம் வரை சென்று மீண்டு வரும் இக்கால பெண்களும் என மாறி மாறி நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்த உள்ளனர்.

சில கதைகளை படித்ததும் பிடித்துவிடும். சில நாட்களில் மறந்தும் போய்விடும். ஆனால் சில கதைகள் படித்ததும் பிடித்து விடாது, மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தால் அதன் உள் அர்த்தங்களும், அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், கதாபாத்திரத்தின் உருவாக்கமும் புரிய ஆரம்பித்ததும் மனதில் பச்சைக் குத்தியது போல ஒட்டிக்கொள்ளும். அப்படிப் பட்ட கதை நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். அது போன்ற கதையாக இக்கதை அமைய வேண்டுமென்ற ஆசையுடன் எழுதியுள்ளேன்.

பரபரப்பு நிறைந்த இக்கதையை படித்துப் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் மட்டுமின்றி உத்வேகத்தையும் கொடுக்க வல்லமைப் பெற்றதாகும்.

எனவே தொடர்ந்து படியுங்கள்
விமர்சனங்களை அள்ளித் தாருங்கள்
என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டு வாருங்கள். மீண்டும் வாருங்கள்.

நன்றி
நா. பார்வதி.

டக் டக் டக்…டக்…டக்டக்டக்…

என்று கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சோபாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்த சதீஷ் சட்டென எழுந்து கண்களை கசக்கி கொண்டு

“ஆங் ஆங்!! இதோ வரேன். வரேன்”

என சொல்லிக் கொண்டே கதவை திறந்தான். அப்போது அவனுக்கு வந்த கொட்டாவியை அடக்க முடியாது, யசோதை முன் வாய் திறந்து உலகை காட்டிய கிருஷ்ணனை போல வாசலில் நின்றிருந்தவர் முன் வாயை “ஆவ்” என்ற சப்தத்துடன் திறக்க, அவரைப் பார்த்ததும் “ஆங்” “அம்” என வந்த கொட்டாவியை அடக்க முயற்சிக்க, அதைக் கண்டு வாசலில் நின்றிருந்த ராஜரத்தினத்தைப் பார்த்து

“அப்பா!! நீங்க! எங்க!! இங்க?”

“ஏன் உன்னைப் பார்க்க சொல்லாம கொள்ளாம வர கூடாதோ!! தள்ளுடா.”

“அப்பா!! உங்க சட்டையெல்லாம் என்னது இது?”

“ஓ! இதுவா!! இது…ஆங்! அது தான் இந்த ஊர்ல அவன் அவன் வாயில பீடாவ போட்டு மென்னுகிட்டே அங்கங்க துப்புறாங்களே அதுல எவனோ ஒருத்தன் என் சட்டையில ஆட்டோகிராப் போட்டுட்டான் போல!”

“என்னப்பா சொல்லுறீங்க?”

“அத விடுடா. இப்படி நைட்டெல்லாம் வேலைப் பார்த்துட்டு பகலெல்லாம் தூங்கறதுங்கறது என்னடா வாழ்க்கை? பேசாம எனக்கு ஒத்தாசையா ஊருலயே எங்க கூடவே இருந்திருக்கலாம் இல்ல. இப்படி ஊரு விட்டு ஊரு வந்து…இதோ இத்தனூண்டு ஒரு ரூம்ல…தேவையாடா? என்னமோ கம்ப்யூட்டிங்…அது தான் படிப்பேன்…அந்த வேலையை தான் பார்ப்பேன்னு சொல்லிட்டு இந்த மொழி தெரியாத ஊருக்கு வந்து இப்படி எல்லாம் கஷ்டப்படணுமா!!! என்னமோ போ! சரி சரி பாத்ரூம் எங்க!!! ஆங் அது தானே! என்னமோ தெரியலை இனிக்கு என்னையே எனக்கு ரொம்ப நாத்தம் அடிக்குது டா! என்னோட இந்த நாத்தத்தை என்னாலயே சகிச்சுக்க முடியல…சரி சரி நான் போய் மொதல்ல குளிச்சிட்டு வரேன்.”

என்று வீட்டுக்குள் நுழைந்தது முதல் மூச்சுவிடாது பேசிவிட்டு குளியலறைக்குள் சென்றார் ராஜரத்தினம். எப்போதும் தனது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் பிஸினஸ், மேட்ரிமோனி பிஸினஸ், காய்கறி வியாபாரம், மளிகை கடை வியாபாரம் என்று அங்குமிங்கும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் ராஜரத்தினம் தனது மகன் சதீஷ் வேலைப்பார்க்கும் மும்பை மாநகரத்துக்கு முதன்முதலாக சென்றுள்ளார்.

“அப்பா… அம்மா, ரேணு எல்லாரும் எப்படி இருக்காங்க? அவங்க ஏன் வரல?”

“ஆங்!! நல்ல வேளை அவங்க வரல.”

“என்ன?”

“டேய் மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா. நான் டிபன் செஞ்சு வைக்கறேன். ரெண்டு பேருமா சாப்பிடுவோம்‌. எனக்கு உன்கிட்ட சில விஷயங்களை சொல்லணும். சொல்லிட்டு உடனே கிளம்பணும்.”

“என்னது உடனே கிளம்பணுமா?”

“டேய் சொன்னத இப்பவாவது கொஞ்சம் எனக்காக கேளுடா”

“என்னமோ பா! நீங்க சொல்லறது செய்யறது எல்லாமே ரொம்ப புதுசா இருக்கு…சரி சரி டிவி ஆன் பண்ணறேன் பார்த்துட்டு இருங்க… நான் குளிச்சிட்டு வரேன்.”

என்று சதீஷ் டிவியை ஆன் செய்ததும் வேகமாக அவனிடமிருந்து ரிமோட்டை பிடிங்கி டிவியை ஆஃப் செய்த ராஜரத்தினம்

“டேய் டிவி எல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம் டா. நீ போய் குளிச்சிட்டு வா டா”

“என்னப்பா நம்ம ஊருல என்னேரமும் டிவில நியூஸை போட்டு போட்டு பாப்பீங்க!!! என்னமோ… நீங்க சரியில்லைப்பா‌. மொதல்ல நான் அம்மாக்கு கால் பண்ணி கேட்கறேன்”

என்று சதீஷ் தன் மொபைலை எடுத்ததும் ராஜரத்தினம் வெடுக்கென அதை சதீஷ் கையிலிருந்து பிடுங்கி டிவி அருகே வைத்து விட்டு

“நீயும் உன் அம்மாவும் பேச தொடங்குனீங்கன்னா, அப்புறம் நீ குளிக்க போனா மாதிரிதான்.இது இங்கேயே இருக்கட்டும் நீ போய் குளிச்சிட்டு வா.”

என்று கூறி சதீஷை குளியலறைக்குள் அனுப்பி வைத்து, கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு உப்புமா கிளறி சட்னி அரைத்து டேபிளில் வைத்து சதீஷுக்காக காத்திருந்தார். சதீஷ் குளித்து முடித்து வந்ததும் இருவருமாக உப்புமாவை உண்டு முடித்தனர்.

“ஏன் பா! இந்த உப்புமாவ கிளறிக் கொடுக்கத்தான் நீங்க ஊருலேந்து கிளம்பி வந்திருக்கீங்களா என்ன?”

“தெரியல பா. தெரியல!”

“அதுக்கில்ல…நானும் வந்ததுலேந்து பாக்குறேன் நீங்க ஆளே சரியில்லையே! அதுவுமில்லாம நீங்க உங்க வேலை எல்லாம் விட்டுட்டு வர ஆள் கிடையாதே! அது தான் கொஞ்சம் இடிக்குதுப்பா”

“டேய் நம்ம ரேணுக்கு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை அமெரிக்காவுல இருக்காரு. நல்ல குடும்பம். நானும் அம்மாவுமா அவங்க வீட்டுக்கெல்லாம் போய் பார்த்துட்டோம். நல்லவங்களா தான் இருக்காங்க.”

“ஓ! அதுதான் விஷயமா! அதெல்லாம் சரிப்பா! அந்த பையன நம்ம ரேணுக்கு பிடிச்சிருக்கா? ஏன்னா அவ அந்த பையன கட்டிக்கிட்டா அப்புறம் அவ பாக்குற வேலையை விட்டுட்டு அமெரிக்கா போக வேண்டியிருக்குமே! அம்மணி அவங்க வேலையை விடுவாங்களா? போன வாரம் கூட நான் அவகிட்ட பேசினேன் அப்போ கூட அவ எதுவுமே சொல்லலையே!”

“அதெல்லாம் அவ அந்த பையன் கூட ஃபோன்ல பேசிட்டா. அவளுக்கும் பிடிச்சிருக்குது. அதுதான் அது விஷயமா உன்கிட்டயும் பேசிட்டு அப்படியே சில முக்கியமான முடிவுகளையும், விஷயங்களையும் உனக்கு புரிய வச்சுட்டு போக தான் வந்திருக்கேன். நீ இப்போ ஃப்ரீயா பேசலாமா?”

“என்னப்பா! பெரிய பீடிகை எல்லாம் போடறீங்க?”

“இல்லப்பா எனக்கும் வயசாகிட்டே போவுது இல்ல. அத! அத! அப்பப்ப! செஞ்சுட்டா திருப்தியாகிடும் இல்லையா. அதுதான்.”

“சரிப்பா. சொல்லுங்க. கேட்டுக்குறேன்.”

“ம்… இரு இரு நான் போய் என்னோட முக்கியமான ஒரு பையை எடுத்துட்டு வரேன்.”

“ம்…சரிப்பா!!”

ராஜரத்தினம் பையை எடுத்துவர உள்ளே சென்றதும் சதீஷ் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான். அது சுவிட்ச் ஆஃப் ஆக இருந்ததும் அதில் சார்ஜ் இல்லையோ என்றெண்ணி அதை சார்ஜில் போட்டு அதை ஆன் செய்து அதைப் பார்க்க முற்பட்ட போது ராஜரத்தினம் சதீஷின் தோளை தட்டி…

“என்ன அதுக்குள்ள மொபைல்ல என்ன வந்திடப் போகுது. அப்புறமா பார்த்துக்கோ. மொதல்ல இங்க வந்து உட்காரு.”

“இல்லப்பா…மொபைல் ஆஃப் ஆகியிருந்தது. சார்ஜ் இல்ல போல அது தான் சார்ஜ்ல போட்டேன். இன்னுமா நீங்க இந்த மஞ்சபையை விடல!!! ம்…சரி சொல்லுங்க”

“இந்த மஞ்சப்பை தான் உன் அப்பனோட பேங்க் லாக்கர். தெரியுமா!!”

“சரி அப்படி என்ன வச்சுருக்கீங்க உங்க லாக்கர்ல?”

“அதை சொல்லத் தானே வந்திருக்கேன். இதோ இது தான் அந்த மாப்பிள்ளை பையனோட வீட்டு விலாசம், இது தான் போட்டோ. அப்புறம்… நம்ம ஊருலயே பெரிய மண்டபம் நம்ம சுப்பிரமணி அண்ணாச்சியோட கல்யாண மண்டபம் தான். அங்க தான் நம்ம ரேணு கல்யாணத்தை நடத்தணும். இது என்னோட பேங்க் பாஸ்புக், இது செக்புக், இதுல நான் கையெழுத்து போட்டு ஒரு மூணு செக் வச்சிருக்கேன். ஒரு புத்தகத்துல எனக்கு யார்யார் எவ்வளவு பணம் தரவேண்டியிருக்கு அதேபோல நான் யார்யாருக்கு எவ்வளவு தரவேண்டியிருக்குங்கற விவரமெல்லாம் இருக்கு. அந்த புத்தகம், நம்ம காய்கறி கடை, மளிகைக்கடை கணக்கு புத்தகம், எனக்கும் உங்க அம்மாவுக்கும்ன்னு இரண்டு லைஃப் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கேன். அதோட பாலிசி டாக்குமெண்ட், நம்ம வீட்டு பத்திரம், அப்புறம் ராணிபேட்டையில உன் பேர்ல வாங்கின ரெண்டு கிரௌண்ட் நிலப் பத்திரம், நம்ம கடைகளோட பத்திரம் ரெண்டு, உன் பேருலையும் ரேணு பேருலையும் மாசாமாசம் டெப்பாசிட் பண்ணிட்டு வந்திட்டுருக்கேனே அதோட டாக்குமெண்ட்ன்னு எல்லாமே நம்ம வீட்டுல இருக்குற என்னோட பீரோல இருக்கு. இது தான் அதோட சாவி. இது எப்பவுமே என்னோட இந்த பை உள்ள தான் இருக்கும். உன் அம்மாவோட நகை அப்புறம் ரேணுவுக்குன்னு வாங்கின நகை எல்லாம் அம்மா பீரோல இருக்கு. நம்ம பேங்க் மேனேஜர் சுந்தரமூர்த்தி ரொம்ப நல்ல மனுஷர். அவர் உனக்கு எல்லா உதவியும் செய்துத் தருவாரு.”

“அப்பா! இப்போ சென்னையிலேந்து டிரெயின் ஏறி மும்பை வந்து இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லறீங்க? உங்களுக்கு என்ன ஆச்சுப்பா? உடம்புக்கு ஏதாவது ?”

“நான் நல்லா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா எப்போ எது நடக்கும்னு யாருக்குத் தெரியும்!! அப்போ என் பையன் நீ தவிக்கக் கூடாது இல்லையா. அதுக்கு தான் முன் எச்சரிக்கையா எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டா எனக்கு ஒரு நிம்மதி.”

“””””தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே”””””

என்று சதீஷின் கைபேசியில் இருந்து அழைப்பு பாடல் ஒலித்தது, அதை கேட்டதும் ராஜரத்தினத்தின் கண்கள் குளமாகின. உடனே கைபேசியை எடுத்த சதீஷ்

“ஹலோ அம்மா! சொல்லுமா! என்னமா!! அப்பா என்கிட்ட சொல்லாம கொள்ளாம…..”

என்று கூறி முடிப்பதற்குள் மறுபக்கத்திலிருந்து ரேணு…

“அண்ணே!!! அண்ணே!!! நம்ம அப்பா…நம்ம அப்பா…நம்மளை விட்டுட்டுப் போயிட்டார் அண்ணே! போயிட்டாரு”

“ஏய் ரேணு? என்ன சொல்லுற? அவர் இப்ப தான் …”

என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்த சதீஷ் அதிர்ந்து போனான். ஏனெனில் அதுவரை அவனுடன் பேசிக் கொண்டிருந்த ராஜரத்தினம் அங்கு இருக்கவில்லை. உடனே தன் தங்கையிடம்

“ஏய் ரேணு! என்ன தான் நடக்குது? அப்பா எங்க? அப்பாக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லுமா. அம்மா எங்க?”

“அண்ணே!! எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை உனக்கு சர்ப்ரைஸா நேர்ல வந்து சொல்லணும்னு நம்ம அப்பா உன்னை பார்க்க நேத்து காலையில கிளம்பினாரு…”

“ஐய்யோ! அழாம விஷயத்தை சொல்லுமா”

“அந்த டிரெயின் தடம் புரண்டுடுச்சாம் அண்ணே!! அதுல பயணம் செஞ்ச நிறைய பேரு இறந்துட்டாங்களாம் ணே. அதுவும் மும்பைக்கு அருகாமையில் தான் நடந்திருக்கு! அப்பா நம்பருக்கு கால் பண்ணினா நாட் ரீச்சபள்னு வருது! காலையிலேந்து உனக்கு இந்த விஷயத்தை சொல்ல கால் பண்ணிட்டே இருக்கோம். ஆனா உன் ஃபோனும் சுவிட்ச் ஆஃப்னுனே வருது.”

“நீ என்ன சொல்லுற ரேணு…சரி அம்மாவை பத்திரமா பாத்துக்கோ. நான் சம்பவம் நடந்த இடத்துக்கு போய் என்ன ஏதுன்னு விசாரிச்சு உனக்கு கால் பண்றேன். பத்திரமா இரு. அம்மாவையும் பத்திரமா பார்த்துக்கோ. சரியா”

என்று கைபேசியில் சிவப்பு பொத்தானை அழுத்திவிட்டு வேகமாக தனது வீட்டிலிருந்த ஒரே ஒரு அறைக்குள் சென்று பார்த்த சதீஷ் அதிர்ந்து போனான். அங்கே அவன் அப்பா ராஜரத்தினம் படுத்திருந்தார். அதைப் பார்த்ததும் சதீஷின் மனதிற்குள் ரேணு சொன்ன விஷயம், அப்பா பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள், அவர் செய்து தந்த உப்புமா, அம்மாவின் முகம் என அனைத்தும் மாறி மாறி வந்து அவனை குழப்பியதில் தான் பார்ப்பது ரத்தமும் சதையுமாக இருக்கும் தந்தையையா இல்லை அவரின் நிழலான ஆவியையா என்று ஒரு நொடி திகைப்பில் ஆழ்ந்தான். அந்த அறையை விட்டு ஒரு நொடி வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்று பார்த்தான் அப்போதும் அவன் அப்பா அங்கு படுத்து இருந்ததை அவனால் பார்க்க முடிந்தது. அவன் உடனே அவனின் நண்பன் ரகுவுக்கு கால் செய்து நடந்தவற்றை விளக்கி

“டேய் ரகு இப்ப நான் என்னடா செய்வேன். இப்போ என் வீட்டுல இக்குறது என் அப்பாவா இல்ல அவரோட ஆவியான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா. என் அப்பாவுக்கு ஏதுவும் ஆகியிருக்க கூடாது டா.”

“அதை அவர்கிட்டயே கேளேன்டா!”

“என்னது!! என் அப்பாட்ட போய் நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையான்னு எப்படிடா கேட்கறது? எனக்கென்னவோ அவர் உயிரோட இருக்கறா மாதிரி தான் தெரியுது டா. அவர் உயிரோட தான் இருக்கணும். இருப்பாரு”

“அப்படீன்னா அவர் ஏன் உன்கிட்ட அந்த ஆக்ஸிடென்ட் சம்பவத்தை பத்தி ஒண்ணும் சொல்லல!”

“அது தான் எனக்கும் குழப்பமா இருக்கு டா ரகு.”

“இரு நான் உன் ரூமுக்கு இன்னும் அஞ்சே நிமிஷத்துல வரேன். ரெண்டு பேருமா அவர்கிட்ட கேட்போம். கவலைப்படாதே. அவர் உயிரோட தான் இருக்கார்ன்னு நாம நம்புவோம். தைரியமா இருடா சதீஷ்”

ரகு சொன்னது போலவே அடுத்த ஐந்தாவது நிமிடம் சதீஷ் ரூமில் இருந்தான். அவர்கள் இருவருமாக உள்ளே படுத்திருந்த ராஜரத்தினத்தை மெல்ல தட்டி எழுப்பினர். அவரும் எழுந்து அவர்களைப் பார்த்து

“டேய் சதீஷ் நம்ம ரேணு கல்யாணத்த சுப்பிரமணி அண்ணாச்சியோட மண்டபத்துல தான் நடத்தணும்டா…இதோ என்னோட பேங்க் பாஸ்புக்….”

“அப்பா!! அப்பா!! அப்பா!! சரிப்பா சரி… நம்ம ரேணு கல்யாணத்த சூப்பரா நடத்திடலாம். நீங்க வந்த டிரெயின் ஆக்ஸிடென்ட் ஆச்சே, அதுலேந்து நீங்க எப்படி தப்பிச்சு இங்க வந்தீங்க? என்ன தான் நடந்ததுப்பா?”

“டேய் சதீஷ் நம்ம ரேணு கல்யாணத்த நம்ம சுப்பிரமணி அண்ணாச்சி மண்டபத்துல தான்டா நடத்தணும். இது என்னோட பேங்க் பாஸ்புக்….”

என்று மறுபடியும் ஆரம்பித்ததும் சதீஷ் தன் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன்

“நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்கப்பா”

என்று அவரை மீண்டும் படுக்க வைத்து விட்டு ரகுவும் சதீஷும் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும்

“சரி… உங்க அப்பா வந்ததுலேந்து சொன்னதையே தான் சொல்லுறாரா?”

“இல்ல டா ரகு. வந்ததுலேந்து மனுஷன் ஏதோ ஒரு மாதிரி பரபரப்பாவே இருந்தாரு. அவரோட பேச்சு நடவடிக்கை எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்துச்சு…ஏதோ எல்லா பொறுப்பையும் என் கிட்ட ஒப்படைச்சிட்டு உடனே எங்கயோ கிளம்பிப் போகணும் அப்படிங்கற மாதிரியே அவசரப் பட்டாரு. எல்லாத்தையும் சொல்லி முடிக்கற வரைக்கும் நல்லா தான் இருந்தாரு ஆனா சொல்லி முடிச்சதுக்கு அப்புறமா தான் இப்படி சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொல்லுறாரு”

“சரி சரி அப்பா அப்படி ஒரு கண்டத்துலேந்து தப்பிச்சு நல்லபடியா உன்கிட்ட வந்து சேர்ந்துட்டாரு. அதை நினைச்சு நிம்மதியா இரு. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்.”

என்று கூறிச் சென்றது போலவே ரகு மருத்தவருடன் வந்தான். மருத்துவர் ராஜரத்தினத்துடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஒரு ஊசியை போட்டார். பின் அந்த அறையின் கதவில் சாய்ந்து தனது அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்த சதீஷை தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்த டாக்டர்,

“தம்பி… எதிர்பாராது நடந்த இந்த ஆக்ஸிடென்ட் ல உங்க அப்பா மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. எங்கடா அவரு உங்களை எல்லாம் விட்டுட்டு எதுவும் சொல்லாம போயிடுவாறோன்னு பயந்திருக்காரு. அந்த பயத்துல எப்படியாவது உங்களைப் பார்த்து எல்லாத்தையும் விளக்கமா சொல்லி புரிய வச்சு, உங்களை தவிக்க விட்டுட கூடாதுங்கறதுல அவரு மனசு உறுதியா இருந்திருக்கு. அந்த மன உறுதி தான் அவரை எப்படியோ இங்க உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு. வந்தவரு அவர் மனசுல இருந்ததை எல்லாம் விளக்கியதும் வந்த ஜோலி முடிஞ்சிருச்சுன்னு மனசளவுல சோர்ந்துட்டார். வேற ஒண்ணுமில்ல. எந்த ஒரு பாதிப்பையும் நம்ம மனசு ஏத்துக்கறதுக்கு பல காலமெடுக்கலாம். ஆனா தனக்கு நேர்ந்த பாதிப்பினால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதித்திடக்கூடாது என்பதை தான் உங்க அப்பா மனசு அந்த நேரத்திலும் யோசிச்சிருக்கு. இப்போ அவர் நிம்மதியா தூங்கறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். அவரை நல்லா பாத்துக்கோங்க. அது தான் அவருக்கு இப்போ வேண்டியது. டோன்ட் வரி. எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட்”

“ரொம்ப தாங்ஸ் டாக்டர்.”

என்று டாக்டர் சென்றதும்‌ பெருமூச்சு விட்ட சதீஷ் தனது அப்பாவின் அருகே சென்று அவரின் தலையை தடவிக் கொடுத்தான். அப்போது ரகு சதீஷிடம்

“நாம என்ன தான் வெளியூரு, வெளிநாடுன்னு போனாலும் நம்ம அப்பா அம்மா எல்லாம் எப்பவுமே நம்மள பத்தியும் நம்மளோட எதிர்காலத்தைப் பத்தியும் தான் என் நேரமும் யோசிப்பாங்க போல… இல்லடா. இவ்வளவு பெரிய ஆபத்திலும், அதிர்ச்சியிலும்! பாரேன்! உன் அப்பாவுக்கு உன்னையும் உன் தங்கச்சியையும் பத்தின விஷயம் மட்டும் தான் மனசுல அழியாம ஆழமா இருந்திருக்கு. நீ தவிக்கக் கூடாதுன்னு எப்படியோ தப்பிச்சு வந்து உன்கிட்ட எல்லா விவரங்களையும் சொல்லிருக்காரு பாரேன்!!!!! அம்மா எல்லாம் இப்படி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன், கதைகள்ல எல்லாம் படிச்சிருக்கேன் ஆனா அப்பாவும் அப்படி தான்னு இன்னைக்கு என் கண்ணு முன்னாடி பார்த்துட்டேன் டா சதீஷ்….பெத்தவங்கள கடவுள்ன்னு சும்மா வா சொல்லறாங்க. சரிடா இப்ப என்ன பண்ணப் போற?”

“அப்பாவ கூட்டிட்டு ஊருக்கு போக போறேன்”

“சூப்பர் டா சதீஷ். ஒரு ரெண்டு மாசம் அவங்க கூடவே நீ இருந்துட்டு வா?”

“இனி நான் இங்கன்னு இல்ல எங்கயுமே போக போறதில்ல ரகு. சாகப் போற நேரத்துல கூட எனக்காக யோசிச்சு, அவரோட மறைவுக்கு பின்னாடி நான் தவிக்கக் கூடாதுன்னு நினைச்ச அவரு இந்த பூமில இருக்குற வரைக்கும் அவர்கூடவே தான் இருக்க போறேன். அவர் சொன்னது போலவே அவரோட பிசினஸ் எல்லாத்தையும் இனி நான் பார்த்துப்பேன். அவர் விருப்பப்படியே ரேணுவோட கல்யாணத்தையும் செய்து முடிப்பேன். நான் வரேன் டா ரகு”

“அப்போ இங்க இருக்குற இந்த பொருளெல்லாம்!!”

“என் அப்பா முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லடா! நான் வரேன்.”

“அப்போ சாயந்தரம் டாக்டர்ட்ட போகணுமே”

“இனி என் அப்பாக்கு மருந்தே நான் தான். பை ரகு.”

என்று கூறிய சதீஷ் தனது அப்பாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றான். அன்றிரவு சதீஷின் அறையிலேயே தங்கியிருந்த ரகு, சதீஷுடன் சேர்ந்து பதற்றமானதில் சற்று அசந்து போய் சதீஷ் வீட்டிலிருந்த சோபாவில் படுத்துறந்கினான்.

திடீரென வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் தொடர்ந்து ஒலித்தது

டக்…டக்…டக்…டக்…டக்….டக்….டக்….

உறக்கம் கலைந்த கோபத்தில் எழுந்த ரகு கண்களை கசக்கிக்கொண்டே

“யாரது? இந்த நேரத்துல?”

டக்…டக்….டக்…டக்…டக்….

“ஆங் ஆங்! வரேன் வரேன்!”

டக்டக்டக்டக்டக்……..டக்….டக்…டக்

நன்றி
நா. பார்வதி

நளபாகத்தின் ஒரு பாகமான மத்திய விருந்தில் நடந்த சம்பாஷணை;

நடக்கிறதோ இல்லையோ யாமறியேன் பராபரமே!
ஆனால் நடந்தால் எப்படி இருக்கும்?
கற்பனை பிறந்தது
சம்பாஷணை நடந்தது.

வாழை இலை 1 : அப்பாடா மூச்சு முட்ட முட்ட எங்களை ஒருவர் மீது ஒருவர் என அடுக்கி வைச்சதிலிருந்து விடுதலை விடுதலை விடுதலை…

வாழை இலை 2: என்னத்த விடுதலை! இதோ இப்போ நம்ம மேல தண்ணீயை தெளித்து ஒவ்வொன்னா வைக்க ஆரம்பிப்பாளே..

வாழை இலை 3: அதோ வர ஆரம்பிச்சுட்டா! முதலில் என்னது?

சுவீட் : ஹாய் வாழை இலை..நான் வந்துட்டேன்.

பாயசம் : நானும் வந்துட்டேன்…ஆனா! இப்போ எல்லாம் என்னை இந்த கப்புல வச்சுடறா. என்ன பண்ண!

சுவீட் : உன்னை வாழை இலையில் ஊத்தினா நீ தான் எல்லாத்தோடயும் கலந்து எல்லாத்தையுமே இனிக்க வச்சுடறயே. அதுனால இருக்குமோ!

வாழை இலை 4 : அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனா… என்னக்கென்னவோ அந்த காலத்துல இருந்த பாயசம் மாதிரி இல்லாம… இப்பெல்லாம் உன்னை தண்ணியாட்டம் செஞ்சுடறாளா அதுனால குடிக்க வசதியா இருக்குமேன்னு கப்புல வச்சிருக்கா போல!

வாழை இலை 5: சுவீட்டும் அதைத் தானே சொன்னா!!

வாழை இலை 6: எதுவா இருந்தா என்ன நம்ம தலையில விழறதுல ஒரு ஐட்டம் கம்மி ஆகிடுத்துன்னு நெனைச்சு நாம சந்தோஷப் பட்டுப்போம். இதோ அடுத்தது வந்துண்டிருக்கு பாருங்கோ.

சுவீட் பச்சடி : என்ன! என்ன! இங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமா இருக்கு?

சுவீட் : வாடி என் பச்சடி. நீயும் இனிப்பு நானும் இனிப்பு. பின்ன எதுக்கு நம்ம ரெண்டு பேரையும் பரிமாரறாளோ தெரியலை?

சுவீட் பச்சடி : ஏன் பாயசம் மட்டும் என்ன கசப்பா!!! அது மாதிரி தான். நான் வந்ததுல உனக்கென்ன கஷ்டமா போச்சு?

சுவீட் : எனக்கென்ன கஷ்டம்? நான் தான் ஃபர்ஸ்ட் டு பி சர்வ்டு ஆக்கும்.

சுவீட் பச்சடி : க்கும்!!

வாழை இலை 7: ரெண்டு பேரும் நிப்பாட்டுங்கோ!! ஏய் சுவீட் பச்சடி எங்கடி உன் சிநேகிதி தயிர் பச்சடி? அவளும் நீயுமா தானே ஜோடி போட்டுண்டு வருவேள்! இன்னைக்கு ஏன் நீ மட்டும் வந்திருக்க?

சுவீட் பச்சடி : ஹா ! ஹா! ஹா! எப்போ நான் மட்டும் வந்திருக்கேன்? இதோ என் பக்கத்திலேயே சத்தமில்லாம உட்கார்ந்திருக்காளே! வெள்ளரி தயிர் பச்சடி. ஏன் உன் தலையில அவ உட்கார்ந்தது தெரியலையோ!!

சுவீட் : அது ஒண்ணுமில்லை ரெண்டு பேரையும் ரெட்டைப் பிரவிகளாட்டம் டக்கு டக்குன்னு போட்டுட்டுப் போயிட்டாளோனோ! அது தான் வாழை இலைக்கு ஒண்ணு போல தோனிருக்கு!

வாழை இலை 8: சரி சரி அதோ அங்க வரது நம்ம பாசிபருப்பு கோஸ்மல்லி தானே!

வாழை இலை 9: சாக்ஷாத் அவனே தான்.

பாசிபருப்பு கோஸ்மல்லி : டன்டடான் ஹாய் படீஸ்

தயிர் பச்சடி : வாடா வா. வந்து ஐக்கிய மாகிக்கோ!

பாசிபருப்பு கோஸ்மல்லி : என்ன தச்சு பச்சு அக்கா!

சுவீட் பச்சடி : டேய்! நீ அப்படி அவளை கூப்பிடறது நல்லா தான் இருக்கு டா. ஹீ ஹீ ஹீ!

தயிர் பச்சடி : ம்…இருக்கும் இருக்கும்!! ஏன் போன முஹூர்த்துக்கு அந்த ஜட்ஜ் ஆத்து சஷ்டியப்தபூர்த்தி பந்தில உன்ன அவன் எப்படி கூப்பிட்டான்னு ஞாபகம் இருக்கா?

சுவீட் பச்சடி : அச்சச்சோ! அது ஏன் இப்போ?

தயிர் பச்சடி : ஆங்! அது! அப்போ நான் என்ன அவனோட சேர்ந்துண்டு உன்னை கேலி செஞ்சேனா! இல்ல ஹீ ஹீ ஹீன்னு எகத்தாளமா சிரிச்சேனா!

சுவீட் பச்சடி : மன்னிச்சுக்கோமா தாயே! சரி சரி நம்ம உருளை காரகறி உருண்டுண்டே வந்து விழறத எல்லாரும் பாருங்கோளேன்!

பாசிப்பருப்பு கோஸ்மல்லி : டேய் ! உருளை செத்த நகந்துக்கோயேன்டா! எப்பப் பார்த்தாலும் உருண்டுண்டே என் மேல வந்து விழறதே உன் பொழப்பா போச்சு!

உருளை காரகறி : சாரி அண்ணா! நானாவா வந்து உங்க மேல விழறேன்!! அதோ பறிமாறறாரே அந்த சுப்புணி பண்ணற வேலையாக்கும்! அவருக்கு என்ன அப்படி தலபோற அவசரம்ன்னு தெரியலை. இப்படி என்னை படக் படக்னு இலையில உருட்டி போட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிண்டுருக்கார். ம்…இதோ நம்ம இலைக்கு முன்னாடி உட்கார்ந்துண்டு இருக்குற புன்னியவதி என்னை உங்க மேலேந்து நகர்த்தி வச்சுட்டா. நிம்மதியாச்சா?

பாசி பருப்பு கோஸ்மல்லி: பின்ன! ஆங் ஆங்! சரி சரி

உருளை காரகறி : அண்ணா இதோ நம்மகூட அளவலாவ பீன்ஸ் உசிலி துள்ளிண்டு வந்துட்டான் பாருங்கோ!

பீன்ஸ் உசிலி : எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லிக்கறேன்! என்ன நான் வர்றதுக்குள்ள நிறைய பேசிறிப்பேளே! நான் என்னத்த மிஸ் பண்ணினேன்னு வரிசையா சொல்லுங்கோ பார்ப்போம்!

தயிர் பச்சடி : ஐய்யயோ!!

பீன்ஸ் உசிலி : என்ன ஆச்சு பச்சடி அக்கா?

தயிர் பச்சடி : நம்மளை எல்லாரையும் சேர்த்து செஞ்ச மாதிரி இருப்பானே! அவன் வந்துட்டான் டா வந்துட்டான்!

பீன்ஸ் உசிலி : நம்மளை சேர்த்து செஞ்சா மாதிரியா? ஓ! ஓ! ஓ! ஆங்! ஆங்! ஆங்! ஆமாம்! அதுவும் என் பக்கத்துலயே வந்து உட்காருவானே…ம்…உட்கார்ந்துட்டன்… ஹலோ மிஸ்டர் அவியல்

அவியல் : ஹாய் மை டியர் தோழர்களே! தோழிகளே!

உருளை காரகறி : இவரே ஒரு கலப்படம்! இதுல மொழி கலப்படம் வேறயா! ஹாய்

அவியல் : உருளை நீ ஏதோ சொன்னா மாதிரி இருந்துதே!

உருளை காரகறி : ஒண்ணுமில்ல மாமா!

அவியல் : இப்படியே மெயின்டேயின் பண்ணிக்கோ! சரியா! உன்னோட இந்த வாயால தான் உன்னை என்னோட சேர்த்துக்க மாட்டேங்கறேன்!

உருளை காரகறி : ஓகே ஓகே! அதுதான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே மாமா!

அவியல் : அச்சச்சோ! இவளா! இவளைப் பார்த்தாலே புளிப்பு மண்டைக்கு ஏறுமே!

பீன்ஸ் உசிலி : வாம்மா மின்னல்!

இஞ்சிப்புளி : எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? நலமா?

அவியல் : ம்க்கும்! எங்க!! அதுதான் நீ வந்துட்டியே!

இஞ்சிப்புளி: நான் மட்டும் தனியா வரலை இதோ இவளும் வந்திருக்கா. ஏன்டி ஒரு ஹாய் சொன்னா தான் என்னவாம். உனக்கு ஊறும் காய்ன்னு பேரு வச்சாலும் வச்சா நீ அப்படியே ஊறி போயிட்டயாக்கும்.

ஊறுகாய்: ஹாய்

இஞ்சிப்புளி: ம்க்கும்! இப்படி சுரத்தே இல்லாம சொல்லறதுக்கு நீ சும்மாவே இருந்திருக்கலாம் போ.

வாழை இலை 10: வந்துட்டாங்கப்பா கொற கொறன்னு சத்தம் குடுக்கற டிவின்ஸ்! வாங்க அப்பளம் சார் அன்ட் மொறு மொறு வடை சார்.

அப்பளம் : என்ன இந்த பந்தில வரவேற்பு கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி இருக்கே! நீ என்ன சொல்லற வட்டு என்கிற வடையாரே?

வடை : அட ஆமாம்! அப்பு என்கிற அப்பளமாரே நீர் சொல்லறது சரி தான். நமக்கு முன்னாடியே வந்து ப்ரைம் ஸ்லாட்டை பிடிச்சுண்டு உட்கார்ந்துக்கறதால ரொம்ப தான் பண்ணறா!! இருக்கட்டும்! இருக்கட்டும்! அடுத்த பந்தில நாம இல்லாம போனோம்ன்னா தெரியும் இவாளோட கதி!

இஞ்சிப்புளி : அதை விடுங்கோ அப்பு அன்ட் வட்டு. இதோ வந்திருக்கானே இவனை போட்டு தான் நம்ம எல்லாரையும் தயார் பண்ணறா! ஆனாலும் இவனை எதுக்கு இப்படி நம்மளோட சேர்த்து பந்தில வாழை இலை மூலையில வைக்கறாளோ தெரியலை!

அப்பளம் : என்ன தான் இவனைப் போட்டு உங்களை செய்திருந்தாலும் சிலருக்கு இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தேவைப்படுறான் அதுதான் காரணம். என்னடா உப்பு நான் சொன்னது சரி தானே!

உப்பு : சரி தான் அய்யா! உங்களிலும் நான் இருக்கிறேன்! ஆனால் ஏனோ நீங்கள் அதை மறந்து விடுகிறீர்கள். பரவாயில்லை.

அப்பளம்: இதோ வந்துடுத்து வழவழ கொழ கொழ வாழைப்பழம்.

வாழை இலை 11: அச்சச்சோ! அதோ சாதம் வந்துண்டிருக்கே! சுட சுட வந்து என் தலையில அவளை போடுவாளே! தயாரா இருங்கோ அவளோட ஆவி உங்க மேலயும் படும்.

சாதம்: சூடான சாதம் நான், சுட சுட சுட இருப்பேனாம். ஈடில்லா சூடு சாதம் இதை நீங்க பாருங்க. ஓ….

வாழை இலை 12: அச்சச்சோ இவளையே தாங்க முடியல இதுல இவ பாட்டு வேற!!! இவளவிட சூடா ஒருதன் வருவானே அவனெங்க?

பருப்பு: ….ஆங் அவனுக்கு முன்னாடி நான் தான் வருவேன்.

நெய்: நானும் தான்!

வாழை இலை 12: வந்துட்டான்யா வந்துட்டான் எல்லாரையும் நகர்ந்துக்க சொல்லுவான்…நானும் அவன் பேச்சை கேட்டு நகர்ந்துண்டேன்னா என்னாகும்?

சாம்பார் : ஏய்!! எல்லாரும் தள்ளுங்கோ தள்ளுங்கோ வரிசைப்படி நான் தான் ஃபர்ஸ்ட் …நீங்க எல்லாரும் நெக்ஸ்ட்.

பொறியல்கள் : ஹலோ மிஸ்டர் சாம்பார் உங்களை மட்டும் ஊத்தி சாப்பிட்டா ருசியிருக்காது எங்களையும் தொட்டுண்டா தான் ருசிக்கும்

அவியல் : எல்லா காய்கறிகளையும் என்னோடு சேர்த்துண்டு, ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான அவியல் ஆகிய நான் இல்லாத விருந்தே கிடையாது தெரியுமா!

இவைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே சாம்பர் சாதத்தோடு கைக்கோர்த்து பொறியலை அதனுள் அனுமதித்து, எஜமானரின் வயிற்றுக்குள் சென்று வயிற்றை நிரப்பியது.

சாதம்: அச்சச்சோ! இவாளுக்கு சரி பசி போல, அதுதான் இவ்வளவு சீக்கிரமா நான் மறுபடியும் பிரவேசிக்க வேண்டியதா போச்சு.

ரசம்: “வெண்ணிற சாதமாய் வெந்தவனே! தக்காளி ரசம் என்னை பாராய்”

என்று பாட்டாவே படிச்ச ரசம்… சாதத்துடன் கைக்கோர்த்து, அப்பளத்தை அதில் நொறுக்கிப் போட்டு, மீதமுள்ள காய்கறிகளுடன் இணைந்து எஜமானருக்கு ஜீரன சக்தியை அதிகரித்தது.

சாதம்: மறுபடியும் நானா!!

தயிர்: நீயும் வெள்ளை நானும் வெள்ளை ஒன்றாய் சேர்ந்தால்!!! குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவோமே. அதுனால தான் நம்மை விருந்தில் கடைசியா சாப்படறா!! லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்ட்டாக எப்போதும் திகழும் தயிர் சாதம் ஆகிய நான் என்னை உட்கொண்டவருக்கு அருமருந்தாகி இந்த விருந்தை நிறைவு செய்கிறேன்.

என்று தயிர் சாதம் சொன்னதும்

வாழை இலை 13: அச்சச்சோ! இப்போ நம்ம மேல பரிமாறப்பட்டதுல மீதமிருக்கறதெல்லாத்தையும் ஒண்ணாக்கி நடுவுல வச்சுட்டு நம்மள மூடிடுவாளே!!

வாழை இலை 14: ஆமாம்! அவ்வளவு தான் நம் வாழ்க்கை அவ்வளவு தான்.

வாழை இலை 1: இதுக்கு நாம பேசாம ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துன்னு இருந்திருக்கலாம் இல்ல!

வாழை இலை 15: அப்படி இருந்திருந்தா நாம யாருக்குமே பிரயோஜனம் இல்லாம காஞ்சு போயிருப்போம். அதுக்கு இது எவ்வளவோ மேல்.

வாழை இலை 16: ஆமாம்! ஆமாம்! வெரி வெரி கரெக்ட். நம்மகிட்ட இருந்த சத்துக்கள் எல்லாத்தையும் நம்மள உபயோகப்படுத்தினவாளுக்கு கொடுத்துட்டோம்.

வாழை இலை 17: அடுத்தது என்ன?

வாழை இலை 18: அடுத்தது என்ன!!
குப்பையில் போடப்படுவோம்
ஆடும் மாடும் நம்மள நன்னா மென்னு தின்னும்.
இப்படி ஒரு விருந்து சாப்பாட்டோட சுவடே இல்லாம போயிடும்.

வாழை இலை 19: அது மட்டுமில்லக்கா நம்மளால ஆரோக்கியம் பன்மடங்காகும்.

வாழை இலை 20: ஆட்களுக்கும் ஆடு மாடுகளுக்கும்ன்னு குறிப்பிட்டு சொல்லுமா…
ஓகே அடுத்த விருந்தில் மீண்டும் பிறப்போம்
இதே போல சுவையான உணவோடு இணைவோம்
நம்ம அரட்டையை தொடர்வோம்.

வாழ வைக்கும் வாழை இலையில் உணவு உட்கொள்ளுங்கள்
வாழ்க்கை முழுதும் ஆரோகிய குறைபாடுகள் ஏதுமின்றி நல்வாழ்வு வாழ்ந்திடுங்கள்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி. பிடித்திருந்தால் பகிரலாமே.

நன்றி
நா. பார்வதி.

ஜேம்ஸின் வந்த வேலை முடிந்ததும் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்படுவதற்காக தன் இருக்கையிலிருந்து எழுந்து,

“ஓகே சக்தி.
அப்போ நான் கிளம்பறேன்.”

“ஓகே ஜேம்ஸ்.
சீ யூ டுமாரோ”

“எதுக்கு சக்தி?”

“சும்மா தான்.
நாளைக்கு எப்படியும் உங்க நண்பன் விஷால் வந்திடுவான்.
எப்படியும் நீங்க மீட் பண்ணுவீங்க.
நானும் அவனோடு வருவேன்.
அதுதான் சொன்னேன்.”

“அப்பப்பா!! ரொம்பவே முன்னோக்கி யோசிச்சுப் பேசறீங்க சக்தி.
பார்ப்போம் எனக்கு எதுவும் முக்கியமான வேலை இல்லாட்டி நாம் சந்திப்போம்.
இப்போ நான் கொஞ்சம் உங்க செகரெட்டரி அம்மாவை விசாரிச்சிட்டு அப்படியே கிளம்பறேன். பை சக்தி.”

“ஆங்! ஓகே! பை ஜேம்ஸ்.”

என்று சக்தியிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு நேராக ருத்ரா அமர்ந்திருந்த அறையை பார்த்தான். உள்ளிருந்து ருத்ராவும் ஜேம்ஸை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைய அதன் கண்ணாடி கதவைத் தட்டினான் ஜேம்ஸ். அதை அப்போது தான் கவனித்தது போல பாவனை செய்த ருத்ரா தன் முன்னிருந்த கணினியின் மேல் வழியாக எட்டிப்பார்த்து, உடனே எழுந்து சென்று அவளின் அறை கதவை திறந்து

“ஹாய்! மிஸ்டர் ஜேம்ஸ்.
ப்ளீஸ் கம் இன்.”

“ஓ! தாங் யூ.
மிஸ்டர் எல்லாம் வேண்டாமே!
ஜேம்ஸ் என்றே கூப்பிடலாமே
மிஸ் ருத்ரா”

“ஓ! ஓகே.
அதே மாதிரி நீங்களும் என்னை ருத்ரா என்றே கூப்பிடலாம் ஜேம்ஸ்.”

“சரி ருத்ரா.
இப்போ நான் நேரா விஷயத்துக்கே வரேன்.”

“சொல்லுங்க ஜேம்ஸ்.
நான் என்ன பண்ணணும்?”

“நீங்க நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்”

“சரி கேளுங்க”

“சக்தி விஷாலை பார்க்க போனது உங்களுக்கு தெரியும் தானே”

“ம்…தெரியும்.
அவ என்கிட்ட சொல்லிட்டு தான் போனா”

“உங்களுக்கு சக்தியை எவ்வளவு நாளா தெரியும்?”

“அவளும் நானும் ரூம் மேட்ஸா இருந்த நாள் முதல் எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் தெரியும். ஏன் கேட்கறீங்க?”

“ஓ! ஓகே.
அப்புறம் ஏன் இப்போ நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கீங்க?”

“அது வந்து…வந்து”

“ஏன் தயங்குறீங்க ருத்ரா? பதில் சொல்லுங்க.
என்கிட்ட சொல்லுற விஷயம் எதுவும் இந்த ரூமைத் தாண்டாது.”

“ம்…அது வந்து…நான் ஒரு நாள் என்னோட பாய் பிரெண்டை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தேன்.
அதுனால சக்தி வேற வீடு பார்த்துட்டு போயிட்டா.”

“உங்க பாய் பிரெண்டை கூட்டிட்டு வந்ததுக்கு எதுக்கு சக்தி ரூமை காலி பண்ணணும்!
புரியலையே!
கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?”

“அவளுக்கு எந்த ஆம்பளையையும் ரூமுக்கு கூட்டிட்டு வர பிடிக்காது.
அதை எங்க ரெண்டு பேரோட ரூம் ரூல்ஸ்லயே எழுதி வச்சிருந்தோம்.
மொதோ தடவை நான் அவனை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தப்போவே அவ என்னை எச்சரிச்சா…
நானும் சாரி கேட்டு இனி இது போல நடக்காதுன்னு சொன்னேன்.
ஆனா ரெண்டாவது தடவை நானும் என் பாய் பிரெண்டும் அவனோட ஒரு பிரெண்டோட பார்ட்டிக்கு போயிருந்தோம்.
அங்க என்னத்த குடுத்தாங்களோ தெரியலை எனக்கு போதை தலைக்கு ஏறிடுச்சு.
அதுனால அவன் என்னை என் ரூமில் டிராப் பண்ணிட்டு போக வந்தான்.
நானும் ஹால்ல இருந்த சோஃபாவிலேயே தூங்கியிருக்கேன்.
மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தா….
எதிர்த்த சோஃபாவுல சக்தி தலைவிரி கோலத்துல கோவமா உட்கார்ந்திட்டிருந்தா.
என்ன ஆச்சு? ஏன் அப்படி உட்கார்ந்திருக்கான்னு அவகிட்ட கேட்டேன்.
அதுக்கு அவ என்னை டிராப் பண்ண வந்த என் பாய் பிரெண்ட் சக்தியிடம் மிஸ் பிஹேப் பண்ணப் பார்த்தான்னும்,
அவனை அடிச்சு ரூமை விட்டு துறத்தி விட அவ ரொம்ப போராடியிருக்கான்னும் அவ சொல்லி எனக்கு தெரிய வந்தது.
அவகிட்ட அதுக்கு மன்னிப்பும் கேட்டேன்.
ஆனா அவ நடந்ததை என்கிட்ட சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே தனியா போயிட்டா.
என்னாலையும் ஒண்ணும் சொல்ல முடியலை.
அன்னைக்கு பிரிஞ்சோம்.
இன்னைக்கு வரை நாங்க தனித்தனியா தான் இருக்கோம்.”

“அந்த…உங்க பாய் பிரெண்ட் என்ன ஆனான்?”

“எனக்கு தெரியாது ஏன்னா…அவனை நான் கடைசியா பார்த்தது அன்னைக்கு நைட்டு தான்.”

“அவனை அப்புறமா அவன் வீட்டுக்கோ இல்ல நீங்க அவனை அடிக்கடி சந்திக்கும் இடங்களுக்கோ போய் நீங்க பார்க்க முயற்சிக்கலையா?”

“போனேன்.
ஏன்டா என் சந்தி கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தன்னு கேட்க அவனை எல்லா இடத்துலேயும் தேடினேன்.
ஆனா அதுக்கப்புறம் அவனை நான் எங்கேயுமே பார்க்கலை.”

“அவன் வீடு உங்களுக்கு தெரியாதா?
அங்க போய் பார்த்திருக்கலாமே!”

“இல்ல அவன் வீடு எனக்கு தெரியாது.
அவன் ஏதோ ஒரு பிரெண்டோட ரூமுல தங்கிட்டிருக்கறதா தான் சொன்னான்.”

“என்ன பாய் பிரெண்டு?
என்ன ஒரு பிரெண்ட்ஷிப் இதெல்லாம்.
ஒருத்தர் ஒருத்தர் எங்க தங்கறாங்கன்னே தெரியாம என்ன ஒரு லவ்வோ!
ஐ ஆம் சாரி ருத்ரா.
ஏதோ சொல்லணும்னு தோனிச்சு சொன்னேன்.”

“இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.
அதை எல்லாம் எனக்கு புரிய வச்சது சக்தியின் பிரிவு தான்.
அன்னேலேந்து இன்னைக்கு வரை நானும் எந்த ஒரு ஆணையும் என் ரூமுக்குள்ள விடறதே இல்லை.
சொல்லப் போனால் எனக்கு எந்த பாய் பிரெண்ட்ஸுமே இல்லை.
நானும் தி போல தன்னந்தனியா தான் இருக்கேன்.”

“ம்…ம்…குட் குட்.
அதெல்லாம் இருக்கட்டும் ருத்ரா.
சக்தி விஷாலை பார்க்க போன அன்னைக்கு காலையில் உங்க ஆஃபிஸ் கேண்டினில் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட போயிருந்தப்போ…
நீங்க அவங்களுக்கு ஒரு ஜூஸ் குடுத்தேங்களே…
அது என்ன ஜூஸ்? எங்கேந்து வாங்கிக் குடுத்தீங்க?”

“அது நான் ஆஃபிஸ் வரும் போது வழியில் என் காருக்கு பெட்ரோல் போட ஒரு கியாஸ் ஸ்டேஷன்ல நின்னேன்.
அப்போ அங்க இருந்த கடையில் நான் குடிக்க வாங்கினேன்.”

“அப்புறம் ஏன் நீங்க குடிக்காம அதை சக்திக்கு குடுத்தீங்க?”

“அதை வாங்கிட்டு வெளியில் வந்ததும் என் காருக்கு பெட்ரோல் போட்டாச்சுன்னு அங்க இருந்த பையன் சொன்னான்.
அதைக் கேட்டதும் நேரா வந்து என் காருக்குள்ள உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணி ஆஃபிஸுக்கு வந்துட்டேன்.
இங்கே ஆஃபிஸுக்கு கார் பார்க்கிங் வந்ததுக்கு அப்புறமா தான் நான் வாங்கின அந்த ஜூஸ் கேனை பாரத்தேன்.
சரி லிஃப்ட்டுல போகும் போது குடிக்கலாமேன்னு அதையும் எடுத்துகிட்டு லிஃப்ட்டுல ஏறினேன்.
அதுல எங்க டீமோட டி.எல் ஆன ராகேஷ் இருந்தார்.
அவர் கூட பேசிட்டே வந்ததுல மறுபடியும் அந்த ஜூஸை குடிக்கலை.
அப்புறம் அவர் அவரோட கேபினுக்கு போயிட்டார்.
எனக்கு சரியான பசி வேற…
ஆனா தி அதுக்குள்ள மீட்டிங்குக்கு எல்லாத்தையும் ரெடி பண்ண சொல்லிட்டா…
சோ அப்பவும் குடிக்க முடியலை.
ஒண்ணும் சாப்பிடவும் முடியலை.
அப்புறமா அவ மீட்டிங் எல்லாம் முடிச்சிட்டு வேகமா கேண்டினுக்கு போனா.
நானும் சரியான பசியில் இருந்ததால் அவ பின்னாடியே போனேன்‌.
அவ சாண்ட்விச் வாங்கிட்டு போய் உட்கார்ந்தா.
நானும் சாப்பிட்டுட்டு அவ எங்க உட்கார்ந்திருக்கான்னு பார்த்தேன்.”

“ஏன் அவங்க பின்னாடியே போன உங்களுக்கு அவங்க எங்க உட்கார்ந்தாங்கன்னு தெரியலையா?”

“நீங்க எங்க காண்டீனை பாருங்க அப்போ தான் நான் சொன்னது உங்களுக்கு புரியும்.
அது ஒரு கடல் மாதிரி.
அதுக்குள்ள சக்தி போனதும் நானும் போனேன்.
ஆனா என்னோட பசி முதல்ல என் வயிற்றை நிரப்ப தான் சொல்லிச்சு.
சோ அதை தான் முதல்ல செய்தேன்.
அப்புறமா அவளை தேடி கண்டு பிடிச்சு அவ பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.
அவ தண்ணியோ ஜூஸோ வாங்காம வெறும் சாண்ட்விச் மட்டும் வாங்கிட்டு வந்திருந்ததைப் பார்த்தேன்.
அப்போ என்கிட்ட இருந்த ஜூஸ் கேனை எடுத்து அவளுக்கு கொடுத்தேன்.
அவ்வளவு தான்.
அவளும் சாப்டுட்டு நேரா ரெஸ்ட் ரூம் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு பாரிஸுக்கு கிளம்பி போயிட்டா.”

“ஓ. ஓகே.”

“ஏன் நீங்க நான் குடுத்த ஜுஸைப் பற்றியே கேட்கறீங்க?”

“அது ஒண்ணுமில்ல ருத்ரா.
என்குவைரின்னு வந்துட்டா எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் தானே விசாரிக்கணும்!”

“என்குவைரியா? எதுக்கு?
அதுவும் என்னை எதுக்கு என்குவைரி பண்ணணும்.”

“இட்ஸ் ஓகே ருத்ரா.
ஜஸ்ட் லீட்.
உங்களோட ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
ம்… உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கு.
எனக்கு சொல்லணும்னு தோனிச்சு சொல்லிட்டேன்.
சொன்னது தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.
நான் கிளம்பறேன்.
பை.”

“ம்….இட்ஸ் ஓகே.
தாங்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட் ஜேம்ஸ்.
பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”

“யூ டூ ருத்ரா.”

ருத்ராவுடன் விசாரணை என்ற பெயரில் பேசி விட்டு வெளியே வந்த ஜேம்ஸ் தனக்கு தானே

“இவ சொல்றதை பார்த்தா நம்புறா மாதிரி தான் இருக்கு…
அதே நேரம் ரொம்ப பர்ஃபெக்ட்டா வரிசையா நடந்ததை எல்லாம் சொல்றதை பார்த்தா எங்கயோ இடிக்குற மாதிரியும் இருக்கே!
பார்ப்போம்…
கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.
இவ சொன்னது மட்டும் உண்மையா இருந்ததுன்னா…
டேய் ஜேம்ஸ் கூடிய சீக்கிரமே உனக்கொரு கேர்ள் பிரெண்ட் கிடைச்சிடுவா டா…”

என்று கூறிக்கொண்டே சிறு புன்னகையுடன் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்பட்டு தனது ஸ்டேஷன் சென்றடைந்தான்.

தொடர்வாள்…

கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை பார்த்து

“ஏய் வி!
என்ன நீ ஓட்ட போறியா?”

“ம்…ஆமாம்.
ஏன்?
நான் ஒட்ட கூடாதா?”

“இல்ல சாவி…எப்படி?”

“என்கிட்ட சாவி எப்படி வந்ததுன்னு கேட்க வர அது தானே!”

“ஆமாம்.”

“ஜேம்ஸ் பேசிட்டு போனதுலேந்து நீ பிரமை பிடித்தவ போல இருந்த.
ஜேம்ஸ் வேற நம்மளை அங்கே இருக்க வேண்டாம்ன்னு உடனே கிளம்பி வீட்டுக்கு போக சொன்னான்.
நான் திரும்பி உன்னைப் பார்த்தா நீ இந்த உலகத்துலயே இல்ல.
என்ன பண்ணுவேன்?
உன் கையிலிருந்த சாவியை எடுத்தேன்.
உன்னை அப்படியே கை தாங்கலா கூட்டிண்டு வந்து காருக்குள்ள உட்கார வச்சேன்.
இதோ வண்டிய ஸாடார்ட் பண்ணினேன்‌.
எங்கயோ இருந்த நீ இதோ இப்ப இங்க இந்த உலகத்துக்கே வந்துட்ட.
சரி இப்போ நாம உன் வீட்டுக்கு போகலாமா?”

“ஓ எஸ் போகலாம்.
ஆனா மணி இப்போ ஒன்றரை ஆகுது.
பேசாம லீ கார்னர் ல போய் லஞ்ச் சாப்டுட்டு அப்படியே ஆஃபிஸ் ல தலையை காட்டிட்டு வரட்டுமா வி!”

“ஹலோ! இன்னைக்கு லீவ் சொல்லிருக்க ஞாபகமிருக்கா?”

“ஆமாம். நல்லாவே ஞாபகமிருக்கு.
ஆனா ஜேம்ஸ் மத்தியானம் ஆஃபிஸ் வரேன்னு சொன்னதா கேட்டுது.
ஆனா ஏதோ கிணத்துக் குள்ளேந்து கேட்டுது.”

“அவன் அப்படி தான் சொன்னான்.
தெளிவா தான் சொன்னான்.
ஆனா நீ ஏதோ சிந்தனையில் ஆழமா மூழ்கி இருந்ததால உனக்கு அப்படி கேட்டிருக்கு.”

“சரி சரி நான் சொன்னா மாதிரி பண்ணலாமா?”

“எல்லாம் சரி.
எனக்கும் ஆஃபிஸ்னு ஒண்ணு இருக்கு அது தெரியுமா உனக்கு.”

“இருக்கு உனக்கு! ஆஹா ஹ ஆஹா!
என்ன ஒரு வார்த்தை ஜாலம்.”

“தி விளையாடாதே.”

“சரி சரி நீ பாரிஸுக்கு கிளம்பு‌.
உன்னை யாரு இங்க இருக்க சொன்னா?”

“சொல்ல மாட்ட நீ.
பாவமே இவளை சுத்தி ஏதேதோ நடக்குதேன்னு… கூடவே இருந்ததுக்கு இப்படியா சொல்லுவா?”

“இதுல என்ன தப்பு வி.
உனக்கு ஆஃபிஸ் இருக்கு உண்மை தான்.
நீ போய் தான் ஆகனும் அதுவும் உண்மைதான்.
அப்போ போன்னு தானே சொல்ல முடியும்.
போகாத என்கூடவே இருன்னா சொல்ல முடியும்!”

“ஆங்…ஏன் அது மாதிரி சொன்னா என்ன கொறஞ்சிடுமாம் மகாராணிக்கு?”

“சரி அப்படி நான் சொன்னா உனக்கு ஆஃபிஸ் போக வேண்டியதில்லையா.
அதுனால உனக்கு பிரச்சினை வராதா?”

“ம்….அது…”

“என்ன ம்…இழுவை! எனக்கு தெரியும் வி.
டயலாக்குக்காக வேணும்னா அப்படியெல்லாம் சொல்லிக்கலாம்.
ஆனால் பிராக்டிகல்லா யோசிச்சுப் பார்த்தா வேலை முக்கியம் தானே!
எனக்காக நீ இந்த இரண்டு நாள் என் கூடவே இருந்ததே எனக்கு பெரிய பலமா இருந்தது.
அதை வைத்தே வரும் நாளெல்லாம் ஓட்டிடுவேன்.
யூ டோண்ட் வரி வி.
நீ இப்பவே கூட லஞ்ச் முடிச்சிட்டு பாரிஸ் கிளம்பு.”

“ஆனா உன்னை எப்படி தனியா விட்டுட்டு…”

“ஹலோ சார்! நான் இத்தனை வருஷமா தனியா தானே இருந்தேன்.”

“ஆனா இத்தனை வருஷத்துல உனக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கா? இல்லையே!
அது தான் யோசனையாவே இருக்கு.”

“இட்ஸ் ஓகே வி.
இன்னைக்கு பாரிஸ் போ.
இன்னும் இரண்டு நாள்ல வீக் என்ட் வந்திடும் அப்புறமென்ன இந்க வந்துடு.
அப்போ உன் பேரன்ட்ஸ் கிட்டயும் டைம் வாங்கிண்டு வா.
நாம எல்லாரும் பேசலாம்.
என்ன சொல்லுற?”

“ம்…ஓகே தான்.
ஆனா நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் தி.”

“அதெல்லாம் இருப்பேன் வி.
நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாம சாப்டுட்டு கிளம்பு.”

“ம்…ஓகே.”

“இதோ லீ கார்னர் வந்துட்டோம்.”

சக்தியும் விஷாலும் சேர்ந்து மத்திய உணவை உண்டு முடித்ததும் விஷால் அவன் காரை எடுத்துக் கொண்டு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான். சக்தி அவளது அலுவலகம் சென்று அவளின் மேலதிகாரியிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறினாள். அவரும் அவளை புரிந்துக் கொண்டு அவள் கேட்டது போலவே அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தவள் நேராக ருத்ராவை வரவழைத்து அன்றைக்கு பாதியில் விட்ட மீட்டிங்கை தொடர்வதாக கூறி அனைவரையும் மீட்டிங் அறையில் கூடச் சொன்னாள். அப்போது ருத்ரா அன்று சிலர் லீவில் இருப்பதாகவும் அதனால் அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க அதற்கு சக்தி

“இல்ல ருத்ரா! நான் நாளைக்கும் நாளான்னைக்கும் லீவு கேட்டிருக்கேன். சோ ஆஃபிஸ் வரமாட்டேன்.
அதுதான் இன்னைக்கு முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்…
சரி சரி நம்மளோட அந்த புது ரோபோ எந்த ஸ்டேஜ்ல இருக்கு?
அன்ட் அன்னைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியோட நடந்த மீட்டிங்க்கு அப்புறம் அவங்க கிட்டேந்து எந்த ரெஸ்பான்ஸும் எனக்கு வரலையே!! அது என்ன ஆச்சுன்னு அவங்ககிட்ட கேட்டுட்டு அப்படியே அவங்கள ஈமெயில் பண்ண சொல்லு ருத்ரா.”

“புது ரோபோ பாராஜெக்ட் வேகமா நடந்துட்டு இருக்கு தி.
ஆனா அன்னைக்கு மீட்டிங்கில் நம்ம டீம் மேட்ஸ் ஏதோ டவுட் கேட்க வந்தாங்க இல்ல…
அப்ப கூட நீ அந்த விஷாலை பார்க்க போகணும்னும் நீ பார்த்துக்கறேன்னும் சொல்லிட்டு போனியே!
ஐ திங்க் அவங்களுக்கு நீ அதுக்கான விளக்கத்தை ஒரு ஈமெயிலா போட்டுட்டேன்னா அந்த ப்ராஸஸ் நிக்காம இருக்கும்.”

“ஆக்ச்சுவலி அன்னைக்கு அவங்க என்ன சொல்ல வறாங்கங்கறது எனக்கு புரிஞ்சிடிச்சு அதுனால தான் நான் அப்பறமா சொல்லறேன்னு சொல்லிட்டு வெளியே போனேன். அதுக்கான சல்யூஷனை அன்னைக்கே ஈமெயில் பண்ணிட்டேனே!”

“இல்ல தி.
நீ பண்ணலை.
அதுனால தான் அவங்க உன்கிட்டே ஈமெயில் வர வரைக்கும் அதுக்கு முன்னாடி ஸ்டெப் வரை ப்ராஸஸ் பண்ணிட்டிருக்காங்க.
நீ அதற்கான சல்யூஷனை அனுப்பிருந்தேன்னா அவங்க அதை இன்னேரம் இம்ப்ளிமென்ட் பண்ணிருப்பாங்க தி.”

“இல்லையே! இரு நான் செக் பண்ணறேன்.
ஊப்ஸ்!! நான் ஈமெயில் டைப் பண்ணிருக்கேன் ஆனா சென்டு பண்ணலை.
இதோ இப்பவே அனுப்பிடறேன்.
ஆங் டன்.
இந்த ஆராடர் டெலிவரி டேட் என்ன?”

“அடுத்த மாசம் இருப்பத்தி எட்டாம் தேதிக்குள்ள கவர்மென்ட்டுக்கு குடுக்கணும்.”

“அதுக்குள்ள முடிஞ்சிடுமில்ல ருத்ரா?”

“தி நீயா!!”

“வாட் டூ யூ மீன் பை நீயா?”

“இல்ல இத்தனை வருஷத்துல இது மாதிரி டவுட் ஃபுல்லா நீ எப்பவுமே இருந்ததில்லையே!
அதுதான் கேட்டேன்.
உனக்கு உடம்பு சரியில்லையா தி.
எனி ப்ராப்ளம்?”

“உடம்புக்கு ஒண்ணுமில்ல ருத்ரா.
ம்…சரி நான் ஈமெயில் அனுப்பிட்டேன்.
நம்ம டீமை முழு மூச்சோடு வேலையில் இறங்க சொல்லு.
வீ ஹாவ் டூ டெலிவர் இன் டைம்.
சோ இது சால்வுடு.
அந்த எம்.என்.எம் என்ன ஆச்சு?
அதைப் பத்தி ஒண்ணுமே நீ சொல்லலையே!”

“ஆங் அவங்கிட்ட இருந்து ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல தி.
நானும் நீ எதுவம் சொல்லாததால் ஃபாலோ அப் பண்ணலை.”

“என்ன ருத்ரா.
நான் தான் சொல்லலை.
அட்லீஸ்ட் நீயாவது என்னை கால் பண்ணி கேட்டிருக்கலாமில்ல!”

“சாரி தி.”

“சரி சரி இன்னைக்கே அவங்களுக்கு கால் பண்ணி பேசிட்டு அப்படியே ஈமெயிலும் போட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சு எனக்கு கால் பண்ணி சொல்லு”

“ஓகே தி.
டன்.”

“எக்ஸ்க்யூஸ்மி தி.”

“எஸ் பீட்டர்.
ஓகே ருத்ரா நீ போய் நான் சொன்னதை எல்லாம் இன்னைக்கே முடிச்சிடு.
கம் இன் பீட்டர்”

“உங்களை பார்க்க ஜேம்ஸ்ன்னு ஒருத்தர் வந்திருக்கார்.”

“ஓ வந்துட்டாரா.
ஓகே அவரை என் கேபினுக்கு அழைச்சிட்டு வாங்க.”

“ஓகே. இதோ அழைச்சிட்டு வரேன்”

சிறிது நேரம் கழித்து பீட்டர் ஜேம்ஸை அழைத்துக் கொண்டு சக்தியின் கேபினுக்குள் வந்தான்.

“வாங்க ஜேம்ஸ் வாங்க வாங்க.
ஓகே பீட்டர் தாங்ஸ்.
யூ கேன் கேரி ஆன் வித் யுவர் வொர்க்.
ஏதாவது தேவைன்னா கூப்பிடுறேன்.”

“ஓகே தி.”

“ம்…சொல்லுங்க ஜேம்ஸ்.”

“நான் உங்க ஆஃபிஸ் சிசிடிவி ரிக்கார்டிங் எல்லாத்தையும் பார்க்கணும்னு சொல்லியிருந்தேனே.
பார்க்கலாமா?”

“ஓ ஷுவர்! வாங்க போகலாம்.”

என்று சக்தி சொன்னதும் இருவருமாக செக்யூரிட்டி அதிகாரியிடம் சென்றனர். அவரிடம் சக்தி ஒரு பேப்பரை காட்டியதும் அதை படித்த அந்த அதிகாரி அவர்களை சிசிடிவி ரிக்கார்டிங் அறைக்குள் அழைத்து சென்றார்.
அங்கே ஜேம்ஸ் அவரிடம் சக்தி பாரிஸ் கிளம்பி சென்ற நாளின் காலை முதல் மத்தியப் வரையிலான ரிக்கார்டிங் கை பார்க்க வேண்டுமென கூறினான். அதிகாரியும் அவரின் கீழ் வேலை பார்க்கும் மைக்கேலிடம் ஜேம்ஸ் கேட்டது போலவே அந்த ரிக்கார்டிங்கை காண்பிக்க சொன்னார். அதைப் பார்த்துவிட்டு அதன் ஒரு காபியை தனது மொபைலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் சக்தியின் கேபினுக்கு வந்தனர் சக்தியும் ஜேம்ஸும். சக்திக்கு அதில் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.

“வாங்க ஜேம்ஸ்.
உட்காருங்க.
காஃபி ஆர் டீ?”

“காஃபி”

“ருத்ரா டூ காஃபி ப்ளீஸ்”

ருத்ரா ஆஃபிஸ் பாய் இடம் சொல்ல அவனும் இரண்டு காஃபி எடுத்துக் கொண்டு சக்தியின் அறைக்கு சென்று கதவை தட்டினான் அப்போது உள்ளிருந்து

“எஸ் கம் இன்.”

“காஃபி எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.
தாங்க்ஸ் டக்லஸ்.
ம்…சொல்லுங்க ஜேம்ஸ்…
இந்த சிசிடிவி ரிக்கார்டிங் பார்த்ததுல உங்களுக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”

“ஒண்ணு கன்பர்மா தெரியறது என்னனா நீங்க அன்னைக்கு… நீங்க சொன்னா மாதிரியே ஆஃபிஸ்லேந்து நீங்க சொன்ன டைமுக்கு கிளிம்பியிருக்கீங்க.”

“அப்பாடா இப்பவாவது நம்பீனீங்களே.”

“இதுவரை உங்க கேஸ்ல இந்த ஒண்ணு மட்டும் தான் உண்மையா இருக்கு…”

“ஆங்…”

“இருங்க சக்தி. அதே நேரம் நீங்க அன்னைக்கு ஆஃபிஸ் கேண்டீன்ல சாப்பிட்ட போது உங்க பிரெண்ட் ஜூல்ஸ் குடுத்தான்னு சொன்னீங்களே அது அவங்க கேண்டீன்ல வாங்கினது இல்ல.”

“அப்படியா? இல்லையே ருத்ரா அதை எனக்காக வாங்கிண்டு வந்ததா தானே சொன்னா!”

“உங்களுக்காக தான் வாங்கிட்டு வந்திருக்காங்க.
அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனா அதை எங்கேந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு அவங்க கிட்ட தான் கேட்கணும்.”

“இல்ல ஜேம்ஸ் அந்த சாஃப்ட் ட்ரிங்க்ஸ் எங்க கேண்டீன்ல கிடைக்கறது தான்”

“இருக்கலாம் ஆனா அன்னைக்கு அவங்க அங்கேந்து வாங்கல.
வேறெங்கேந்தோ வாங்கிட்டு வந்து அங்க வாங்கினதா சொல்லிருக்காங்க.”

“அப்படியா? அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

“இதோ இப்போ பார்த்தோமே அந்த கேண்டீன் சிசிடிவி ல தான் தெரிஞ்சுது.
நீங்க வேற பக்கமா திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களால அவங்க அங்கேந்து தான் வாங்கிட்டு வந்தாங்களான்னு தெரியாம போச்சு.”

“அப்படீன்னா அவ தான் எனக்கு அதுல ஏதாவது கலந்து குடுத்திருப்பாளா?ஆனா அவ ஏன் அப்படி செய்யணும்?”

“தீர்க்கமா சொல்ல முடியாது.
ஆனால் அவங்கள என் சஸ்பிஷன் லிஸ்ட்டில் சேர்த்துள்ளேன்.
நான் அவங்க கிட்ட தனியா பேசி விசாரிச்சுக்கறேன்.
நீங்க எதுவும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம்.”

“ம்…சரி.
அவளை இப்போ இங்க வர சொல்லவா?”

“இல்ல இல்ல நான் வெளியே போகும் போது பார்த்து பேசிக்கறேன்.”

“சரி நளினி விஷயம் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”

“அடாப்ஸி ரிப்போர்ட் வந்தா தான் தெரியும்.”

“அப்படியா! அது வறதுக்கு எவ்வளவு நேரமாகும்?”

“இருபத்தி நான்கு மணி நேரமாகும்.”

“ஓ! ஓகே ஓகே. சரி நீங்க டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து எனக்கு கால் பண்ணி அந்த நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டீங்களே ஏன்?”

“ஆங்!! ஆங்!! அது ஏன்னா! அந்த பொண்ணு சொன்ன நேரத்துல, அவ சொன்ன அந்த இடத்துல எதுவுமே நடக்கலை.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த வித அறிகுறியும் அந்த ஏரியாவில் இருக்கும் எந்த சிசிடிவிலேயும் பதிவாகலை.
அதுவுமில்லாம நான் தனிப்பட்ட முறையில் அந்த ஏரியா காரங்களையும் விசாரிச்சுப் பார்த்தேன்.
அதுல…”

“எக்ஸ்க்யூஸ்மி தி.
மே ஐ கம் இன்”

“ஆங்…ஒன் செகண்ட் ஜேம்ஸ்.
எஸ் கம் இன் ருத்ரா”

“தி….”

“யூ டோண்ட் வரி ருத்ரா.
இவர் பேரு ஜேம்ஸ்.
என்னோட நண்பர்.
ஜேம்ஸ் இவங்க தான் ருத்ரா.
மை செகரெட்டரி.”

“ஹலோ மிஸ் ருத்ரா”

“ஹாய்”

“சரி என்ன விஷயம் ருத்ரா?”

“அந்த எம்.என்.எம் கம்பெனி உனக்கு அன்னைக்கே அவங்க ப்ரபோசல உன் ஈமெயிலுக்கு அனுப்பிட்டாங்களாம்.
உன் கிட்டேந்து தான் ரிப்ளை எதிர்பார்த்திட்டிருக்கறதா சொன்னாங்க.
அதை சொல்லி உனக்கு ஞாபக படுத்திட்டு போக தான் வந்தேன்.
நீயே அவங்களுக்கு ரிப்ளை பண்ணிடு சரியா.
ஓகே நான் என் சீட்டுக்கு போறேன்.
நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர் ஜேம்ஸ்.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”

“தாங்யூ மிஸ் ருத்ரா. விஷ் யூ தி சேம்.”

என்று சந்தேக கண்ணுடன் ருத்ராவைப் பார்த்த படி அமர்ந்திருந்த ஜேம்ஸை பார்த்து சக்தி தன் தொண்டையை சரி செய்துக் கொள்வது போல சப்தம் எழுப்பியதும் ஜேம்ஸ் அவளைப் பார்த்து

“ம்…என்ன சொன்னீங்க சக்தி?”

“நான் ஒண்ணுமே சொல்லலை ஜேம்ஸ்.
தொண்டை வரண்டு போன மாதிரி இருந்தது.
அதுதான் தண்ணி குடிச்சேன்.
நீங்க தான் ருத்ராவை வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டே இருந்தீங்க”

“இல்ல அவங்க கிட்ட ஏதோ ஒரு ரகசியமிருக்குன்னு என் மனசுக்கு படுது.
எதுக்கும் அவங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கறேன்.
நீங்களும் அவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.”

“எனக்கு தெரிஞ்சு அவ ரொம்ப நல்லவ தான்.
நான் ஜாக்கிரதையா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்…
நீங்க அவளை பார்த்ததைப் பார்த்தா அவளை உங்க சந்தேக லிஸ்ட்டுல சேர்க்க பார்த்தா மாதிரி தெரியலையே!”

“அட போங்க சக்தி.
நீங்க வேற…
எப்ப விளையாடுறதுன்னு இல்ல.
சரி நம்ம பையன் விஷால் எங்க?
ஆளையே காணுமே!”

“ஹலோ ஜேம்ஸ் இது என்னோட ஆஃபிஸ்.
இங்க எப்படி அவனிருப்பான்.
அவன் கிளம்பி பாரிஸ் போயாச்சு.
நாளைக்கு மத்தியானமா வருவான்.”

“ம்…ஓகே ஓகே!”

ஜேம்ஸ் நளினி சொன்ன சம்பவத்தைப் பற்றி சக்தியிடம் விளக்கிக் கொண்டிருக்கையில் ருத்ரா உள்ளே நுழைந்து அவர்கள் பேச்சை திசை திருப்பி விட அந்த விஷயம் மீண்டும் தட்டிப் போனது.

தொடர்வாள்….

ஜேம்ஸ் வேறெந்த விவரமும் கூறாமல் நேரில் பார்க்கும் போது சொல்வதாக கூறி கைபேசி அழைப்பை துண்டித்ததும் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த சக்தியிடம் விஷால்

“ஏய் தி…தி…தி…
என்ன ஆச்சு?
என்ன யோசிக்கிற?
என்னைப் பாரு தி”

என்று கூறிக்கொண்டே அவள் தோளை பிடித்து உலுக்கி அவனைப் பார்க்கச் செய்தான்.

“வி எனக்கு ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரி தோணுது.”

“என்ன தப்பு?
எங்க?
யாருக்கு?”

“அதெல்லாம் தெரியலை.
ஆனா ஏதோ பெரிய தப்பு நடக்கப் போறதா என் மனசு சொல்லுது.”

“தி நீ அனாவசியமா போலிஸோட டென்ஷனை எல்லாம் மண்டைக்குள்ள எடுத்துண்டு உன்னை நீயே குழப்பிக்கற.”

“இல்ல வி நல்லா யோசிச்சுப் பாறேன்.
நான் அன்னைக்கு உன் வீட்டுக்கு வர கிளம்பினேன்…
ஆனா நான் அந்த ஹைவேல டிராவலே பண்ணலன்னு போலீஸ் சொல்லறா!
எனக்கு ஏதோ நடந்திருக்கு ஆனா என்னன்னு தெரியாது.
பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் இத்தனை வருஷமா எங்கேயுமே போகாதவங்க திடீர்னு சொல்லிக்காம எங்கயோ போயிட்டாங்க.
பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் ல செடெடிவ் ரத்தத்துல கலந்திருக்குனு டெஸ்ட் எடுத்து வசுந்தரா குடுத்த ரிப்போர்ட்டும் காணாம போயிடுச்சு அதை கொடுத்த வசுவையும் காணலை.
அதை கேட்க போனா அந்த ஹாஸ்பிடல்ல ஒரு நர்ஸை கொலை செய்ய முயற்சி நடந்தது.
அவங்களும் இப்போ ஐசியூ ல இருக்காங்க.
அடுத்து வசுவோட நர்ஸ் நளினி.
அவங்களை பார்த்து பேசிட்டு வந்திருக்கேன்.
இப்போ என்னடான்னா ஜேம்ஸ் அதெல்லாம் சரியான இன்ஃபர்மேஷன் தானான்னு கேட்டு கால் பண்ணறார்!
ஒரு வேளை அந்த நளினிக்கும் ஏதாவது ஆகிடுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தி.
நீ போலீஸ் மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை தி.
ஜஸ்ட் ரிலாக்ஸ்.”

“அப்படி என்னை சுத்தும் அந்த மர்ம நபர் யார்?
ஏன் என்னையே சுத்தி வரணும்?”

“இப்ப தானே சொன்னேன் தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதேன்னு.
மறுபடியும் ஆரம்பிச்சுட்டயே!”

“நாம ரெண்டு பேரும் போய் அந்த நர்ஸ் நளினி பத்திரமா இருக்காளான்னு பார்த்துட்டு வரலாமா வி!”

“இதுக்கு எதுக்கு அங்க போகணும்?
உனக்கு அவங்க நம்பர் தெரிஞ்சா ஒரு கால் பண்ணி கேளு”

“ஆங்…நம்பர் குடுத்தா.
ஆனாலும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமே”

“நீ மொதல்ல கால் பண்ணிப் பாரு.
அப்படி அவங்க நல்லா இருக்காங்கன்னா அதுக்கப்புறம்
வேணும்னா நாம கிளம்பி போய் பார்ப்போம்.
என்ன சொல்ற தி?”

“ம்..சரி இதோ உடனே பண்ணறேன்”

“ஏய் தி…இரு இரு…
அந்த நளினி தான் அவங்களோட மொபைல்ல வசுந்தரா வோட கார்லேயே விட்டுட்டாங்கன்னு அவங்க சொன்னதா நீ சொன்னையே அப்புறம் எப்படி எந்த நம்பருக்கு கால் பண்ணற?”

“அவங்களோட ரூம்ல இருக்குற ஃபிக்ஸ்டு லைன் நம்பரை தான் நளினி குடுத்தா.
அதுக்கு தான் கால் பண்ணப் போறேன்.”

“அது தானே மொபைல்ல கார்ல விட்டுட்டேன் சொன்னவ எப்படி நம்பர் குடுத்திருக்க முடியும்னு ஒரு செகண்ட் யோசனை வந்தது.”

“ஆமாம் ஆமாம் மொபைல விட்டா பேசறதுக்கு ஃபிக்ஸ்டு லைன் இருக்குங்கறதையே நிறைய பேரு மறந்திட்டா என்ன பண்ண?
மொபைல் நம்மள அப்படி அதுக்குள்ளயே கட்டிப் போட்டிருக்கு.”

“சரி சரி நீ இப்போ ஃபோன் பண்ணி கேளு.”

“ஆங் ரிங் போறது.
ஹலோ நளினி.
நான் தான் சக்தி பேசறேன்.
உங்களை இன்னைக்கு காலையில வந்து பார்த்தேனே!
வசுவோட பிரெண்ட்.”

“சக்தி… சக்தி… சக்தி…”

“நளினி! நளினி!
என்ன ஆச்சு?
ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“சக்தி…காப்பா…த்…து…ங்க…ஆ!”

என்ற அலறல் சத்தம் கேட்டதும் தன் காதோடு வைத்திருந்த ஃபோனை சற்று தூரமாக பிடித்துக் கொண்ட சக்தி உறைந்து நின்றிருந்தாள்

“தி…தி…தி…
என்ன ஆச்சு?
ஏதாவது பேசு தி…
அந்த ஃபோனை குடு…
ஹலோ மிஸ் நளினி…
என்ன இது ஃபோன் கட்டாகியிருக்கு?
தி…தி…
கம் ஆன் தி…
பேசு.
என்ன ஆச்சு?
இரு இரு…இதோ வரேன்.
ஆங் இந்தா மொதல்ல இந்த தண்ணிய குடி.”

என்று சக்திக்கு தண்ணீர் குடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் விஷால். ஆனாலும் அவள் பதற்றமாகவே இருந்தாள்.

“தி…ஜஸ்ட் ரிலாக்ஸ்…
டேக் எ டீப் பிரெத்…
இப்போ சொல்லு என்ன ஆச்சு?”

“வி…வி…நாம நளினி ரூமுக்கு போகலாம்னு சொன்னேனில்லையா!
நாம போயிருந்தா அந்த பொண்ண காப்பாத்திருக்கலாம்.”

“சரி இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சாம்?”

“ஐ திங்க்…ஐ திங்க்…
அவளை யாரோ கொன்னுட்டா!”

“வாட்?
என்ன உளர்ர தி!”

“இல்ல வி…
அவங்க என் கூட பேசு போது அங்க வேற யாரோ இருந்திருக்கா.
ஏன்னா நளினி குரல்ல நடுக்கமும் பயமும் இருந்தது.
அவ திக்கி திக்கி தான் பேசினா.
கடைசியில் ஆ ன்னு ஒரு அலறல் சத்தம் கேட்டது அவ்வளவு தான் ஃபோன் கால் கட்டாகிடுத்து.”

“இரு இதை உடனே நான் ஜேம்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன்.
அதுக்கப்புறம் நாமும் நளினி ரூமுக்கு போவோம்.
ஆங்…இட்ஸ் ரிங்கிங்…
ஹாய் ஜேம்ஸ்…”

என்று நடந்தவற்றை ஜேம்ஸிடம் விளக்கிக் கூறினான் விஷால். அதை கேட்ட ஜேம்ஸ்…

“அப்படியா!
ஓ மை காட்!
சரி சரி நான் அந்த நளினி ரூம் இருக்குற அந்த ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுக்கு இப்பவே போறேன்.”

என்று விஷாலிடம் கூறிவிட்டு தனது மேலதிகாரியான எட்வார்ட் கிள்பர்ட்டிடம் விரைந்து சென்று விளக்க முயன்ற போது அவர்

“என்ன ஜேம்ஸ்!
நீங்க இவ்வளவு நேரம் இங்க நம்ம பக்கத்துல இருக்குற டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுல இருந்தீங்க.
அது எப்படி அந்த ஹாஸ்பிடல் ஸாடாஃப் தங்குற அப்பார்ட்மெண்ட்ல கொலை நடந்திருக்குன்னு சொல்லறீங்க?
இன்னும் எந்த போலிஸ் ஸ்டேஷனுக்கும் எந்த தகவலும் வந்தா மாதிரி தெரியலையே!!”

என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவரின் தொலைபேசி மணி ஒலித்தது. அதை எடுத்து மறுபக்கத்திலிருந்து வந்த செய்தியை கேட்டதும் அமைதியாக

“ம்…ப்ரொசீட்.
நம்ம ஜேம்ஸும் ஸ்பாட்டுக்கு வருவார்.
ம்…”

என்று கூறி ஃபோனை வைத்தவர் ஜேம்ஸை பார்த்து

“என்ன ஆச்சு ஜேம்ஸ்?
அது எப்படி உங்களுக்கு முதலில் தெரிய வந்தது?”

“சார் அதை சொல்ல தான் நான் வந்தேன்.
இது ஒரு வித்தியாசமான கேஸாக இருக்கிறது.
நான் கொலை நடந்துள்ள ஸ்பாட்டுக்கு போயிட்டு வந்து உங்களுக்கு விளக்கி சொல்லவா!”

“ம்…ஓகே ஓகே.
நீங்க மொதல்ல அங்க போங்க.
அங்க என்ன ஏதுன்னு பார்த்ததுட்டு வந்து…எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க.”

“ஓகே சார்.
ஐ வில் டூ”

என்று கூறிவிட்டு நேராக நளினியின் ரூமிருக்கும் இடத்திற்கு சென்றான் ஜேம்ஸ். அதே நேரம் சக்தியும் விஷாலும் சக்தி வீட்டிலிருந்து அதே இடம் செல்ல புறப்பட்டனர்.

ஜேம்ஸ் முதலில் சென்றான். அவன் பின்னாலேயே சக்தியும் விஷாலும் அங்கு சென்றார்கள். சக்தி வேகமாக நளினியின் ரூமிற்கு சென்றாள். அங்கே போலிஸ் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜேம்ஸ் அவளிடம்

“சக்தி அன்ட் விஷால் நீங்க ரெண்டு பேரும் கீழே வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு என்ன ஏதுங்கற விவரத்தை சொல்லறேன்.”

“ஜேம்ஸ் அந்த பொண்ணோட முகத்த ஒரே ஒரு தடவ பார்த்துட்டுப் போனேனே ப்ளீஸ்.”

“இல்ல சக்தி அது முடியாது.
சில ப்ரோட்டோகால்ஸ் இருக்கு.
உங்களை இப்போ உள்ளே விட மாட்டாங்க.
விடவும் கூடாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க.
எல்லாம் முடிஞ்சு பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணி ஒப்படைக்கும் போது தான் நீங்க பார்க்க முடியும். டேய் விஷால் இவங்கள கூட்டிட்டு கீழே போ.
நான் கொஞ்ச நேரத்துல கீழ வரேன்.”

“ப்ளீஸ் தி..‌.
வா நாம் ஜேம்ஸ் சொல்லற படி கீழ போய் நிற்போம்.
வா தி…ம்…வா”

என்று கண்களில் கண்ணீருடன் நளினி ரூமின் வாசலிலேயே நின்றிருந்த சக்தியை அழைத்துக் கொண்டு அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சென்று ஒரு மரத்தடியில் இருவருமாக நின்றுக் கொண்டனர். அப்போது விஷால் சக்தியிடம்

“ஏய் சக்தி! இன்னும் அரைமணி நேரத்துல நீ ஆஃபிஸ் போகணும்.”

“ஓ! ஆமாம். நான் லீவுனு மெஸேஜ் அனுப்பிடறேன்.”

“சரி அதை செய்.”

“ம்…அனுப்பிட்டேன் வி.
என்னை நினைச்சா எனக்கே கோபம் வருது வி.”

“நீ என்ன செஞ்ச?”

“பின்ன என்னால் தானே இத்தனை பேருக்கு பிரச்சினை.
நான் அந்த ஹாஸ்பிடலுக்கு போனதால் தானே அந்த நர்ஸ் இப்போ ஐசியூ ல இருக்கா.
நான் இந்த நளினியை பார்க்க வந்ததால் தானே அவளும் இதோ இப்படி இறந்து போயிட்டா!
நான் வசுந்தராகிட்ட பிளட் டெஸ்ட் எடுத்ததால தானே அவளும் காணாமல் போயிருக்கா!
ஸோ எல்லாமே என்னால் தானே!
இதை எல்லாம் நினைக்க நினைக்க எனக்கு என் மேல் கோபமும் ஆத்திரமும் தான் வருது வி.”

“இதுக்கும் உனக்கும் நீ நினைக்கிற மாதிரியான சம்மந்தம் இல்ல…
ஆமாம் உன்ன சுத்தி ஏதோ ஒரு வலை பின்னப்படுதுங்கறது என்னவோ உண்மைதான்.
ஆனா அதுக்கு நீயே நீதான் காரணம்னு சொல்லிக்கறதை முதல்ல நிப்பாட்டு சரியா.”

“என்ன தான் சொன்னாலும் என்னால் ஒரு உயிர் போயிருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வி.”

“இட்ஸ் ஓகே! என்ன நீயா கொலை பண்ணின?”

“நான் நேரடியா பண்ணலைனாலும் இதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேனேன்னு நினைக்கும் போது தான் எனக்கு…”

“இதோ ஜேம்ஸ் வந்துட்டான்.
வா ஜேம்ஸ் என்ன ஆச்சு?”

“அந்த பொண்ணு டெலிபோன் கேபிளால கழுத்தை நெரிச்சு கொலை செய்யப்பட்டிருக்கா.”

“அய்யோ! அப்ப அவ என் கிட்ட பேசும் போது தான் அது நடந்திருக்கு.
கடவுளே.”

“ஆமாம் அதுனால தான் உங்களுக்கு அவங்களோட அலறல் சத்தம் பாதியா கேட்டிருக்கு”

“ஐயோ! பாவமே!
கடைசியா என்கிட்ட சக்தி காப்பாத்துங்கன்னு அந்த பொண்ணு சொன்னாளே!!!”

“சக்தி உங்களோட அவங்க பேசிய போது உங்களுக்கு வேற ஏதாவது குரல் அல்லது சத்தம் கேட்டுதா?
கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க சக்தி ப்ளீஸ்”

“ம்…இல்ல ஜேம்ஸ்.
இன்னமும் அந்த பொண்ணோட ஆ ன்னு அலறல் சத்தம் தான் கேட்குது.
அதை தவிர வேறெதுவும் எனக்கு கேட்கலை.”

“ம்…”

“இதை செஞ்சது யாரா இருக்கும் ஜேம்ஸ்?”

“நம்ம சக்தியை ஃபாலோ பண்ணுறவங்களா இருக்கலாம்.
இல்ல வேற யாராவதா இருக்கலாம்.
பார்ப்போம் இன்வெஸ்ட்டிகேஷன் முடிஞ்சா தான் ஒரு க்ளியர் பிக்சர் தெரிய வரும்.
லெட் அஸ் வெயிட் அன்ட் வாட்ச்”

“ம்…அதுவும் சரிதான் ஜேம்ஸ்.
சரி நீ ஏதோ டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மெண்ட்டுலேந்து சக்திக்கு கால் பண்ணி நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டியே அது ஏன்?”

“அது வந்து விஷால்…”

“மிஸ்டர் ஜேம்ஸ் உங்க மொபைலுக்கு மிஸ்டர் கிள்பர்ட் கால் பண்ணினாறாம்‌.
நீங்க எடுக்கலைமாம்.
உடனே உங்கள அவருக்கு கால் பண்ண சொன்னார்.”

“ம்…ஓ! ஆமாம்.
என் ஃபோன் சைலென்ட் ல இருந்ததால் கவனிக்கல.
இதோ உடனே பண்ணறேன்.
சரி விஷால் அன்ட் சக்தி நீங்க இங்க நிற்க வேண்டாம் வீட்டுக்கு போங்க.
நான் இங்க ஃபார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு… சக்தி… உங்க ஆஃபிஸுக்கு வரேன்.
பை டேக் கேர்.”

“ஓகே டா பை.
சக்தி நாம இங்கேந்து கிளம்புவோமா?”

என்று விஷால் கூறிக்கொண்டே சிலை போல் நின்றிருந்த சக்தியை காரில் அமரவைத்து. அவள் கையிலிருந்த கார் சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்தான்.

தன்னை பின்தொடர்பவர்கள் நளினியை கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜேம்ஸ் கூறியதைக் கேட்ட சக்தி அப்படியே சிலை போல் நின்றவள் விஷால் காரை ஸ்டார்ட் செய்த சப்தம் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தாள்.

தொடர்வாள்…

“நளினி ரூம்ல அவ மட்டும் தான் இருந்தா.
அவ தனியா தான் இருந்தா.
அங்க வசுந்தரா இருக்கலை.”

“சரி நளினி ரூமுக்கு நீங்க போனீங்க. அவங்க தனியா தான் இருந்தாங்க. ஓகே.
அங்க வேற என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சக்தி.”

“வசுந்தரா அவளோட ஆஃப்டர்னூன் ஷிப்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது நளினியும் அவ ரூமுக்கு கிளம்பியிருக்கா.
அப்போ வசுந்தரா நளினியை அவ கார்ல ஏற சொல்லிருக்கா.
நளினியும் ஏறியிருக்கா.
இரண்டு பேரும் பாட்டுக் கேட்டுக்கிட்டும், பேசிக்கிட்டும் போனதுல…போனதுல…”

“போனதுல என்ன ஆச்சு.
ஏன் தயங்கறீங்க சக்தி சொல்லுங்க.
என்ன ஆச்சு?”

“நான் சொல்லுவேன்.
ஆனா நீங்க அதுக்கப்புறம் அந்த பொண்ணு நளினியை தொந்தரவு செய்யக் கூடாது.
ஏன்னா நான் அவளுக்கு வாக்கு குடுத்திருக்கேன்.”

“ஐயோ! சரி தொந்தரவு பண்ண மாட்டேன்.
தயவுசெய்து சொல்லுங்க சக்தி.”

“அவங்க கார் ஏதோ ஒரு ஜீப்பில மோதியிருக்கு”

“அப்புறம்?”

“உடனே வசுந்தரா அதிர்ச்சியில மயக்கமாகியிருக்கா.
ஆனா சுயநினைவுல இருந்த நளினி வசுந்தரா உயிரோடு இருக்காளான்னு செக் பண்ணி அதை ஊர்ஜிதப் படுத்திண்டதுக்கப்புறமா ஹாஸ்பிடலுக்கு கால் பண்ண தன்னோடு மொபைலை தேடியிருக்கா. அது எங்கயோ தெரிச்சுப் போய் இருக்கு. அவளால கண்டுபிடிக்க முடியலை. உடனே காரிலிருந்து இறங்கியிருக்கா.
நேரா அந்த ஜீப்பு கிட்ட போயி டிரைவர் சீட்டை பார்த்திருக்கா.
அப்போ காரோட பின்னாடி சீட்டுலேந்து யாரோ ஒருத்தர் நளினியை கட்டையால் அடிக்க முயற்சி செய்திருக்கான்.
ஆனா அவன் கிட்டேந்து தப்பிச்ச நளினி வேகமா ஓடி நேரா அவ ரூமுக்கு போய் கதவை அடைச்சிட்டு உட்கார்ந்தவ நான் போய் தட்டியதும் தான் கதவைத் தொறந்திருக்கா.”

“நளினிக்கு டிரைவர் சீட்டுல யாரிருந்தான்னு தெரிஞ்சுதா?
அவங்களை கட்டையால் அடிக்க வந்தவனை அடையாளம் பார்த்தாங்களா?
எந்த இடத்தில் இது நடந்ததாம்?
எத்தனை மணிக்கு நடந்துதாம்?”

“அச்சச்சோ எவ்வளவு கேள்விகள்?”

“ஆமாம் சக்தி.
உங்க கேஸ் எனக்கு பெரிய சவாலா இருக்குமோன்னு தோணுது.
அதுனால உங்க விஷயத்துல ஏதாவது ஒரு க்ளூ கிடைத்திடாதான்னு தேடுற எனக்கு
இந்த நர்ஸ் நளினி இருட்டுல தெரியும் ஒரு சிறு வெளிச்சம் போல இருக்க மாட்டாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு தான்.
அதுதான் கேட்கிறேன்.
கொஞ்சம் யோசிச்சு கரெக்ட்டா சொல்லுங்க சக்தி”

“எனக்கும் புரியுது ஜேம்ஸ்.
ஆனா நீங்க கேட்ட கேள்விகள்ல நான் அவகிட்ட கேட்டது எந்த இடத்தில் அன்ட் எத்தனை மணிக்கு? இந்த ரெண்டு கேள்விகள் தான்.”

“சரி அதுக்கு என்ன பதில் சொன்னாங்க?”

“ஒரு பத்து மணியளவுல அவங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுலேந்து ஒரு ஐநூறு அடி முன்னாடி நடந்ததுன்னு நளினி சொன்னா.”

“ம்…மொதல்ல அந்த நேரத்துல அங்கிருந்த சிசிடிவிகளை எல்லாம் செக் பண்ண சொல்லறேன்.
ஏதாவது ஆக்ஸிடென்ட் கேஸ் ரிஜிஸ்டர் ஆகிருக்கான்னும் விசாரிக்கணும்.”

“என்னடா ஜேம்ஸ் கிணறு தோண்ட பூதம் கிளம்பின கதையா என்னென்னவோ நடக்குது!”

“ம்…இதுல அவங்க டார்கெட் சக்தி தான்னு அவங்கள ஃபாலோ பண்ணற விதத்தில் இருந்து புரியுது.
ஆனா ஏன்? எதுக்கு? யாரு?
சரி சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஏதாவது பண்ணுங்க.
நான் டிராஃபிக் டிப்பார்ட்மெண்ட் வரை போயிட்டு அப்படியே சக்தி ஆஃபிஸ் வந்திடறேன்.
சக்தி நீங்களும் அங்க வந்திடுங்க.”

“ம்…ஓகே ஜேம்ஸ்.
நான் கரெக்ட்டா ஒரு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் ல இருப்பேன்.
நீங்க வரலாம்.”

“ம்…நானும் வறதுக்கு அந்த டைம் ஆயிடும்.
சீ யூ இன் யுவர் ஆஃபிஸ்.
பை
பை டா ரோல்ஸ் ராய்ஸ்”

“பை ஜேம்ஸ்”

“ம்….ம்….பை டா போலீஸ்”

“சரி. சிவ பூஜையில் கரடி மாதிரி இவ்வளவு நேரம் இருந்த இம்சை போயாச்சு.
இப்ப சொல்லு தி.”

“எக்ஸ்க்யூஸ் மீ.”

“என்னடா நீ இன்னும் கிளம்பலையா?”

“ம்…என் கூலர்ஸ் விட்டுட்டு போயிட்டேன்.
அதை எடுக்க வந்தேன்.”

“சரி எடுத்துக்கோ”

“இம்சை!!! ம்….
கரடி ம்….
இன்னைக்கு நைட்டு என் வீட்டுப் பக்கம் வந்திடாதே!
சொல்லிட்டேன்.”

“டேய் டேய் டேய்!! ஜேம்ஸ் சும்மா சொல்லிட்டிருந்தேன் டா.”

“நண்பனை பத்தி அவன் இல்லாட்டி என்னென்ன சொல்லுவீங்கன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன் டா.
யப்பா!! நண்பா விஷால்.”

“சரி டா சாரி டா.”

“ம்…அது நண்பனுக்கு அழகு!
ஓகே ஓகே எஞ்சாய் எஞ்சாய்.
பை”

“ஆங் ஆங் பை பை”

“வா வா வி.
உட்காரு.
இது உனக்கு தேவையா?
ஒழுங்கா பேச வேண்டியது தானே”

“போலிஸ்காரன்ங்கறது சரியா தான் இருக்கு இல்ல.
எப்ப, எப்படி, எங்க வருவாங்கன்னே தெரியாது ஆனா வர வண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்து நிப்பாங்க.”

“ம்…ம்…”

“ஏய் தி.
ஏன் ஏதோ மாதிரி இருக்க?”

“இந்த ஜேம்ஸ் வந்ததால நிறைய முடிச்சுகள் வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு வி.
என்னை சுத்தி எனக்கே தெரியாம நிறைய முடிச்சுகள் போடப்பட்டிருக்கு.
போடறவங்க யாரு?
ஏன் போடுறாங்க?
என்ட்ட என்ன இருக்கு?
என்கிட்டேந்து என்ன எதிர்பார்க்கறாங்க?”

“அதைப் பத்தி எல்லாம் நீ ஏன் யோசிக்கிற? கவலைப்படற?
அதெல்லாம் ஜேம்ஸ் பார்த்துப்பான்.”

“எல்லாம் உன்னைப் பார்க்க பாரிஸ் வந்ததுலேந்து தான் இப்படி எல்லாம் நடக்குது.
இதுக்கு நான் அங்க வராமலே இருந்திருக்கலாம்.
இல்ல இப்போ மாதிரி நீயே அப்போவும் வந்திருக்கலாம்.”

“என்ன நீ இப்படி பேசுற தி?”

“பின்ன என்ன வி?
யோசிச்சுப் பாரு என்னைக்கு உன்னைப் பார்க்க பாரிஸுக்கு கிளம்பினேனோ அன்னேலேந்து தானே என் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்க ஆரம்பிச்சிருக்கு!
உன்னால இல்லைன்னு சொல்ல முடியுமா சொல்லு!”

“அது என்னவோ உண்மை தான்.
ஆனா நீ இப்படியே யோசிச்சேன்னா அப்புறம் இப்போ என்னைப் பார்க்க வந்ததாலன்னு சொல்லற நீ நாளைக்கே உன்னால தான் என்னை சொல்லாம இருந்தா சரி.”

“அது எப்படி வி சொல்லுவேன்!”

“அப்பாடா.
அது போதும்.
நன்றிமா உனக்கு நன்றி”

“அதுக்கில்ல இப்படி எல்லாம் பண்ணறதுக்கு மூளை வேணுமே!
அதுனால தான் அப்படி சொன்னேன்.”

“என்னது?
சொல்லுமா சொல்லு.
என்ன வேணும்னாலும் சொல்லு.
சரி இந்த கேஸு கீஸூ எல்லாம் சரி கிஸ்ஸுன்னு ஒண்ணு இருக்குங்கறது உனக்கு தெரியுமா?”

“அட அட அட!!
கேஸூ கீஸூ கிஸ்ஸு!!
என்ன வார்த்தை ஜாலம்.
நீ எப்படி?
எப்போலேந்து இப்படியெல்லாம்?”

“கிண்டலா?”

“இல்ல சுண்டல்.”

“சரி சரி… என்ன?
நீ ஆஃபிஸ் போற வரைக்கும் இங்கேயே உட்கார போறோமா?”

“இல்ல இல்ல!
அதுக்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கே!”

“அதுவரைக்கும் என்ன பண்ணலாம்?”

“வா என் வீட்டுக்கு போகலாம்.”

“ஐயோ! உன் வீட்டுக்கா?
அப்புறம் உன் பாலிஸி, பிரின்ஸிப்பிளுக்கு எல்லாம் பங்கம் வந்திடுமே!”

“ஹலோ!
அது நைட் ஸ்டேக்கு தான் சொன்னேன்.
நான் போகப் போறேன்.
நீ வறயா இல்லையா?”

“ம்…ம்…காலையில் ஒரு பாலிஸி…
மாலையில் ஒரு பாலிஸி…
விளங்க முடியா மங்கை நீ தி”

“ஆமாம் ஆமாம்.
இப்படி எல்லாம் பேசினா கமல்ஹாசனா ஆயிட முடியுமா?”

“அச்சச்சோ! சும்மா ஏதோ தோனினத சொன்னேன் அவ்வளவு தான்.
ஏய் தி…தி…தி…இரு வந்துட்டேன்.
தாங்க்ஸ் மிஸ்டர் வில்யம்ஸ் பை.
ஹாவ் எ நைஸ் டே”

“யூ டூ சார்.
பை”

“ஏய் தி நில்லு நில்லுன்னு சொல்லிண்டே வரேன்…
கண்டுக்காம போற!
சரி இப்போ நான் என் கார்ல வரணுமா இல்ல உன் கார்லயே போகலாமா?”

“என் காரிலேயே போகலாம் வி.
என் ஆஃபிஸுக்கு போகும் போது அப்படியே இங்க வந்து உங்க காரை எடுத்துண்டு நீங்க பாரிஸ் போகலாம்.
இந்த லீ கார்னர் என் வீட்டிலேந்து என் ஆஃபிஸ் போற வழியில் தான் இருக்கு.”

“ஓ! ஓகே ஓகே. அப்போ சரி.
பூட்டிட்டேன். ம்…போகலாம்.”

“எனக்கு யாரு எதிரி?
ஜேம்ஸ் சொன்னா மாதிரி என்னை யாரு டார்கெட் பண்ணறது?
ஒரே கொழப்பமா இருக்கு வி.”

“ஏய் தி.
நீ ஏன் அனாவசியமா உன்னை நீயே கொழப்பிக்கற?”

“எப்படி கொழம்பாம இருக்க முடியும் வி?”

“அதை எல்லாம் பார்த்துக்க தான் ஜேம்ஸ் இருக்கான்.
அவன் பாத்துப்பான்.
இதை எல்லாம் நினைச்சு நீ இப்படி கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை தி.
ஜஸ்ட் ச்சில் அன்ட் ரிலாக்ஸ்.
பட் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.
தட்ஸ் ஆல்.”

“ம்…ம்…ஓகே ஓகே!
அப்பா அம்மாக்கு வேற கால் பண்ணணும்.
அவா காலேலேந்து இரண்டு தடவை கால் பண்ணட்டா.”

“எதுக்கு கால பண்ணிருக்கா?”

“வேற எதுக்கு?
என்னாச்சு ஏதாச்சு?
நேத்து வேற உன் கசினுக்கு ஆக்ஸிடென்ட் ன்னு சொல்லிருக்கோமா!
அதைப் பத்தி கேட்க…
அவாளுக்கு என் கிட்ட கேட்க ஏதாவது கேள்வி இருந்துண்டே தான் இருக்கும்.
ஆத்துக்கு போனதும் கால் பண்ணணும்.
சரி வி. எப்ப மறுபடியும் உன் பேரன்ட்ஸ் கிட்ட நான் பேசறது?”

“நானும் அவாகிட்ட பேசி குரு எப்படி இருக்கான்னு கேட்கணும்.
அப்படியே இன்னைக்கு பேசலாமான்னும் கேட்கிறேன்.”

“ம்…ஓகே.
வீடு வந்தாச்சு.
இறங்கலாமா?”

“இப்ப ஏன் யாருமே இல்லாத தெருவுல, உன் வீட்டு வாசல் ல ஹாரன் அடிச்ச?”

“தெரியாம கை பட்டு டுத்து.”

“ஓ சரி சரி!!”

“ம் வா வி வா வா.
வீட்டை திறக்கிறேன் வா.”

“சரி தொற…அதுக்கு ஏன் அனௌன்ஸ் பண்ணற?
உனக்கு என்ன ஆச்சு தி?
ஏன் திடீர்னு ஒரு மாதிரி நடந்துக்கற?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே வி.
நீ உள்ள வாயேன்.
நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.”

“சர்ப்ரைஸா!
என்னடா இது? உலகமகா அதிசயமா இருக்கு!
உன்னை அந்த லீ கார்னர் ப்ரேக் ஃபாஸ்ட் என்னமோ செய்துடுத்து!!”

“உட்காரு வி.
லெட் மீ கெட் யூ சம் ஆரஞ்சு ஜூஸ்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தி.
அது தான் ஹோட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு தானே வந்திருக்கோம் அப்புறம் என்ன?
வா வந்து நீயும் உட்காரு.”

“அப்ப சரி.
ம்…சொல்லு.
இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கு
என்ன பண்ணலாம்?”

“என்ன பண்ணலாமா?
அட போ தி!”

“ஏய்!!”

“சரி சரி என்னமோ சர்ப்ரைஸ் வச்சிருக்கன்னு சொன்னியே!
என்ன அது?”

“அதுவா! அது வந்து! அது வந்து!”

“என்ன அது வந்து அது வந்துன்னு சொல்லிண்டே நீ எங்கயோ எழுந்து போற?”

“ம்…அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே!”

“ம்..என்ன கேளு!”

“ஆங்…ஓகே…அது வந்து….
ஊப்ஸ் என் மொபைல் வைப்ரேட் ஆகறது…
ஓ ஜேம்ஸ் தான் கூப்பிடறார்.
இரு வி அட்டென்ட் பண்ணிட்டு சொல்லறேன்.”

“கரடி கரடி”

“ஆங் என்ன சொன்ன வி?”

“ஒண்ணுமில்லையே! நீ பேசு”

“ஆங்! சொல்லுங்க ஜேம்ஸ்.”

“சக்தி நான் டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து தான் பேசறேன்”

“ஆங் ஆமாம் அங்க போறதா தானே செல்லிட்டுப் போனீங்க.
சொல்லுங்க என்ன ஆச்சு?
ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”

“என்ன தி?
என்ன ஆச்சாம்?”

ஃபோனை கைகளால் மறைத்துக் கொண்ட சக்தி விஷாலிடம்

“தெரியலையே!
அவர் அங்கே யார் கூடவோ பேசிட்டே என்கிட்ட பேசறார்.
இரு அவர் இன்னும் சொல்லலை.
ஆங் ஜேம்ஸ் இருக்கேன் சொல்லுங்க”

“நீங்க நர்ஸ் நளினி சொன்னதா சொன்ன நேரம் இடம் கரெகட்டான இன்ஃபர்மேஷன் தானே?”

“ஏன் கேட்கறீங்க?
எல்லாமே அவ சொன்னதை தான் அப்படியே நானும் உங்க கிட்ட சொன்னேன்.”

“ம்…ஓகே ஆஃபிஸ் ல சந்திப்போம்”

“ஏன் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”

“நாம மீட் பண்ணும் போது சொல்லறேன் சக்தி.
இப்போ நான் இன்னொரு முக்கியமான இடத்துக்கு போக வேண்டியிருக்கு.
பை.”

“ஓகே பை ஜேம்ஸ்.”

“என்னவாம் அவனுக்கு?
என்ன சொல்றான்?”

“அவரு நளினி என்கிட்ட சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டார்.”

“சரி”

“நானும் சரியான இன்ஃபர்மேஷன் தான்னு சொன்னேன்.
சரி ஆஃபிஸ் ல சந்திக்கும் போது விவரங்களை சொல்லறேன்னு சொல்லி ஃபோனை வச்சுட்டார்.”

தொடர்வாள்…

“மகேஷ் நேரமாயிடுச்சு பா. கிளம்பலாமா”

“ஏய் கீதா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டயா?”

“ஆங் ஆங்!”

“பாஸ்போர்ட்?”

“ஆங்.”

“கோவிட் டாக்யூமென்ட்ஸ்”

“ஆங்”

“சரி சரி பத்திரமா போயிட்டு வா.
நான் நம்ம சுட்டியை நல்லா பார்த்துக்கறேன்”

“அம்மா நானும் அப்பாவும் சமத்தா இருப்போம் மா. நீ காலேஜுக்குப் போயிட்டு வா மா”

“சரிடா கண்ணா.
உம்ம்மா…
ஓகே மகேஷ் நான் போயிட்டு வரட்டா.”

“ஓகே கீதா. ஒன்ஸ் அகேயின் கங்ராட்ஸ் அன்ட் ஹாவ் எ சேஃப் டிராவல்”

“தாங்க்யூ மகேஷ்”

“என்ன கண்ணனுக்கு மட்டும் தானா எனக்கில்லையா?”

“அச்சச்சோ பாரு கண்ணா உன் அப்பாவ!
சரி அப்பாக்கும் குடுத்திடட்டுமா?”

“ம்…சரிமா. அப்பாவும் பாவம் தானே. குடுத்துட்டுப் போ”

“சரி நம்ம பையன் பர்மிஷன் தந்துட்டான்.
வரேங்களா”

“எல்லாம் என் நேரம்.
இந்த சுண்டெலி பர்மிஷன் எல்லாம் தேவைப்படுதுப்பா.”

“ஹலோ வறேங்களா!
இல்லை நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.”

“அப்பா போப்பா”

என்று சுட்டிக் கண்ணன் தன் அப்பாவைத் தள்ளிவிட மகேஷ் கீதா மீது சாய இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். சட்டென கீதா விலகி

“மகேஷ் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. இப்படியே நின்னுட்டிருந்தா அப்புறம் ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவேன்”

“ஊப்ஸ்!
சரி சரி பத்திரமா போய்ட்டு சீக்கிரமா வா”

“இதையே எத்தனைத் தடவை சொல்லுவீங்க?
வாங்க ரெண்டு பேருமா என்னை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணிட்டு ஊர் சுத்த கிளம்பிக்கோங்க”

“ம்….ஓகே கண்ணா.
நாம போய் அம்மாவ ஃப்ளைட் ஏத்தி விட்டுட்டு வருவோமா?”

“எஸ் அப்பா.
போகலாம்.”

என்று மூவரும் காரில் ஏறினர். மகேஷ் காரை ஓட்டிச்சென்று லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றான். கீதாவை இறக்கி விட்டுவிட்டு அவளுக்கு கையசைத்து பறக்கும் முத்தங்களை வாரி வழங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மகேஷும் அவன் மகன் கண்ணனும்.

கீதா ஏர்போர்ட் சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட்டு அங்கிருந்த ஒரு காஃபி ஷாப்பில் ஒரு காஃபி வாங்கி அதை கையில் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக அதற்குண்டான வாயிலின் அருகேயிருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்து மெல்ல ரசித்துக் குடித்தாள். காஃபி தீரவும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும் சரியாக இருந்தது. விமானத்திற்குள் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள். தரையிலிருந்து வானில் விமானம் பறந்து அமெரிக்க மண்ணை மெல்ல கடந்து அட்லாண்டிக் பெருங்கடல் மீது சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது கீதா அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் தன்னை எதற்கும் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் தனக்கு ஏதாவது தேவை என்றால் தானே வந்து கேட்டு வாங்கிக்கொள்வதாகவும் கூறிவிட்டு விமானத்தில் கொடுத்த கம்பளியை நன்கு சுற்றிக்கொண்டு மெல்ல ஜன்னலில் சாய்ந்தாள். விடியற் காலையில் எழுந்ததால் அவளின் கண்கள் அவள் பேச்சைக் கேட்க மறுத்தன.
மெல்ல அவளது கண்கள் அவளின் அனுமதியின்றி மூடிக்கொண்டன. அவளை அவளின் நினைவலைகள் இழுத்துச் சென்றன.

சிறு வயது முதல் ஒரு பெரிய பதவியில் பணிப்புரிய வேண்டுமென்ற எண்ணம்/ஆசை கீதா மனதிற்குள் இருந்து வந்தது. அதற்காக நன்றாக படித்தாள். பல திறமைகளை வளர்த்துக் கொண்டாள். ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்திருந்தாள். வெட்கத்தினாலா? இல்லை அடுத்தவர்கள் ஏதாவது கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலா? என்று அவளுக்கே தெரியாதிருந்த பள்ளி மற்றும் கல்லூரி காலம் அது. வணிகவியல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்த சமயம்…ஒரு நாள் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் கீதாவை அழைத்ததாக அவள் தோழி லதா சொன்னதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் பயம் அப்பிக்கொண்டது.

“நான் எந்த தவறும் செய்யவில்லையே பின்பு ஏன் என்னை வர சொல்லியிருப்பார்?”

என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். கல்லூரி மாணவ மாணவிகளை துறைத் தலைவர் அவர் அறைக்கு அழைக்கிறார் என்றால் ஏதோ நன்றாக திட்டு வாங்கப் போகிறோம் என்று தான் முதலில் அவர்கள் மனதில் தோன்றும். (அந்த காலத்தில்) அதே போல கீதாவுக்கும் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது உடனே ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்று கதவை தட்டி உள்ளே வரலாமா என்று கேட்டு நின்றாள். உள்ளே வாருங்கள் என்ற கம்பீரக் குரல் ஒன்று ஒலித்தது. அது தான் அவளின் வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியையின் குரல். உள்ளே சென்றாள். அவளைக் கண்டதும் ஆசிரியைகள்

“வாழ்த்துக்கள் கீதா.”

என்றனர். திட்டுவதற்காக தன்னை அழைக்கவில்லை என்று மகிழ்வதா இல்லை வாழ்த்தியதற்காக மகிழ்வதா என்ற குழப்பத்திலேயே

“நன்றி மிஸ்.
எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“நிச்சயமா. அதுக்கு தானே உன்னை வர சொல்லியிருக்கோம். நமது வணிகவியல் கலாச்சார நிகழ்வுகள் செயலாளராக உன்னை நியமித்துள்ளோம்”

என்று அவர் கூறியதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடினாலும் கூடவே பயமும் தொற்றிக் கொண்டதில் கண்கள் குளமாகின. அதைக் கண்ட ஆசிரியை

“ஏய் என்ன ஆச்சு? ஏன் அழற?”

“மிஸ் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்னால் இதை செய்ய முடியாது. என்னை மன்னியுங்கள்”

“உன்னால் முடியுமா முடியாதா என்று எங்களுக்கு தெரியும்.
நாங்கள் சும்மா உன்னிடம் இந்த பதவியைக் கொடுக்க வில்லை. இரண்டு வருடங்களாக உன்னை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லா ஆக்டிவிட்டிஸ்லேயும் நல்லா பர்ஃபார்ம் பண்ணிருக்க.
உன்னால் முடியும்ன்னு நாங்க நம்பறோம்.
மேலும் உன்கிட்ட இருக்கிறயான்னு ஆலோசனைக் கேட்கலை…
இருன்னு சொல்லறோம்.
புரிந்ததா.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பதவி ஏற்பு விழாவில் நமது வணிகவியல் துறை சார்பாக நீ பேச வேண்டும். ம்…இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”

“மிஸ்…”

“உன்னை நீ நம்பு.
ம்…அடுத்த வார நிகழ்வுக்கு தயாராக இரு.
இப்போது நீ போகலாம்.”

“நன்றி மிஸ்”

என்று கூறி கண்களில் நீர் வழிய ஆசிரியைகள் அறையிலிருந்து வெளியே வந்த கீதாவைப் பார்த்த அவள் தோழி லதா

” ஏய் கீதா. ஏன் அழுதுகிட்டே வர? என்ன ஆச்சு?”

“என்னை நம்ம டிப்பார்ட்மென்ட் கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரியா நியமிச்சிருக்காங்களாம். அடுத்த வாரம் பதவி ஏற்பு விழாவுல நான் நம்ம டிப்பார்ட்மென்ட்டுக்கா பேசணுமாம்”

“சரி அதை சொல்லவா உன்னை அழைச்சாங்க?”

“ஆமாம்”

“நீ தான் சூப்பரா பேசுவியே! அதுக்கு ஏன் அழுதுகிட்டே வெளியே வர?”

“பேசறதைப் பத்தி இல்ல லதா.
என்னால எல்லாம் இந்த பதவி ல எல்லாம் இருந்துகிட்டு… முடியாதுப்பா! அதுதான் பயத்துல கண்ணு கலங்கிடுச்சு.
இது வரைக்கும் நான் அப்படி எல்லாம் எந்த பதவிலேயும் இருந்ததில்லைப்பா.”

“எல்லாரும் எல்லா பதவியிலேயும் இருந்துட்டு தான் பதவி ஏத்துக்கணும்னா அப்புறம் எந்த பதவியும் இருந்திருக்காது.
யாரும் எந்த பதவியும் ஏத்துக்கிட்டிருக்கவும் மாட்டாங்க. எல்லாத்துக்கும் எல்லாருக்கும் முதல் படின்னு ஒண்ணு இருக்கும்.
அதுபோல உன்னோட ஃப்ர்ஸ்ட் ஸ்டெப் இதுன்னு எடுத்துக்கிட்டு மேலே போவியா…
அத விட்டுட்டு பயப்படறாளாமே!
இந்த பதவிக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல எத்தனை பேர் ஆசைப்பட்டுக்கிட்டிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.
உன்ன கூப்பிட்டுக் குடுத்திருக்காங்கன்னா உன்கிட்ட ஏதோ ஒரு தனித்திறமை இருக்கறத அவங்க தெரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. கண்ணைத் துடைச்சிகிட்டு வேலையைப் பாருப்பா”

என்று அன்று கீதாவின் தோழி லதா அவளிடம் கூறியது அவள் மனதில் பச்சைக் குத்தியது போல் பதிந்து விட்டது. மனம் அதை ஏற்றுக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் தன்னால் முடியும் என்ற எண்ணம் அவளுக்குள் உதித்தது. சரி என்று ஒப்புக்கொண்டு அந்த ஆண்டில் நடந்த அனைத்து கலாச்சார நிகழ்வுகளையும் தனது கல்லூரி தோழிகளின் உதவியுடன் சிறப்பாக நடத்தி வந்தாள் கீதா.

அந்த ஆண்டில் இந்திய சுதந்திர தின விழாவிற்காக உப்பு சத்தியாகிரகம் பற்றிய ஒரு டாப்ளோ எனப்படும் குறிப்பிடத்தக்க காட்சி படம் ஒன்றை தயார் செய்தாள் கீதா. அதில் நடிப்பதற்கான தோழிகளை அனைவருமாக அமர்ந்து அனைவரோடும் கலந்து பேசி தேர்ந்தெடுத்தாள். அதற்கான நகரும் ஆளுயுர பேனர்களை கீதாவே வடிவமைத்துக் கொடுத்தாள். அதை அனைவருமாக இணைந்து செய்து முடித்தனர். மற்றும் அதற்கான எழுத்து வடிவத்தையும் தயார் செய்தாள். அதை கீதாவும் அவளது உயிர் தோழியுமான லதாவும் திரைக்கு பின்னாலிருந்து காட்சிக்கு தகுந்தாற் போல பேசினர். அது போல ஒரு நிகழ்வை எவருமே அக்கல்லூரியில் செய்து காட்டியதில்லை என்ற விவரம் அன்று தான் கீதாவுக்கும் அவளின் தோழிகளுக்கும் தெரிய வந்தது. அவர்களின் வணிகவியல் துறைக்கு பல ஆண்டுகளுக்கு பின் பரிசு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியை அவரது அறைக்கு வரும்மாறு அழைத்தார். கீதாவும் சென்றாள். ஆனால் இம்முறை மனதில் எந்த பயமுமின்றி குழப்பமுமின்றி தெள்ளத் தெளிவான மனதுடன் சென்று அறை கதவை தட்டினாள். மீண்டும் கம்பீர குரலில் உள்ளே வர சொன்னார் துறை தலைமை ஆசிரியை. உள்ளே சென்றவளிடம்

“என்ன உன்னால முடியாதுன்னு சொன்ன! இப்போ எப்படி முடிஞ்சுது? உன்கிட்ட இருக்கும் திறமை எங்களுக்கு தெரிந்ததால் தான் உன்னை தேர்ந்தெடுத்தோம்.
நீ உன் வாழ்வில் இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கும்.
உன்னால் முடியும் என்று நீ நம்பினால் போதும் எல்லாம் இனிதே நடந்தேறும்.
நீ கதவை தட்டிய விதத்தில் இருந்தே தெரிகிறது உனக்குள் தெளிவு பிறந்திருக்கிறது என்று.
அதை கெட்டியாக பிடித்துக் கொள் வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்து. வாழ்த்துக்கள்.
இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”

“நன்றி மிஸ்.”

என்று மட்டும் கூறினாள் கீதா. வேறெதுவும் கூற வாய் வரவில்லை ஏனெனில் அவள் மனம் முழுவதும் அவரின் வார்த்தைகள் நிறைந்திருந்தது.

மேலும் அந்த ஆண்டின் கல்லூரி இதழில் கீதா மற்றும் அவள் தோழிகள் அறங்கேற்றிய டாப்ளோவான உப்பு சத்தியாக்கிரகம் இதழின் அட்டைப் படமானதைக் கண்டு அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

“ஹேய் கீதா உன்னால முடியாது முடியாதுன்னு வருஷ ஆரம்பத்துல அழுத!
இப்ப என்னடான்னா அந்த இங்லீஷ் டிப்பார்ட்மென்ட்டை வீழ்த்தி நம்ம டிப்பார்ட்மென்ட் ப்ரோகிராம நம்ம கல்லூரி இதழோட அட்டைப் படமா மாத்திட்டயே!
யூ ஆர் ரியலீ க்ரேட் டி.”

“நம்ம கீதாவுக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா”

“ஓ !!!! ஓ!!!”

அந்த சப்தம் கேட்டதும் விருட்டென எழுந்து சுற்றி முற்றிப் பார்த்த கீதா மெல்ல தன் நெற்றியில் வலது கையால் செல்லமாக தட்டிக்கொண்டே புன்னகைத்தாள். பின் மனதிற்குள்…

“ம்…எல்லாம் இப்போ நடந்தா மாதிரி இருக்கு.”

என்று கூறிக் கொண்டே எழுந்து சென்று வாஷ்ரூம் போய்விட்டு பேன்ட்ரியிலிருந்து சூடா ஒரு கப் காபி மட்டும் வாங்கி அங்கேயே நின்று குடித்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கலானாள்.

கீதாவுக்கே தெரியாதிருந்த அவளது திறமையைத் தெரிந்துக் கொண்டதோடு நின்றிராமல் அதை வெளிக்கொணர்ந்து அவளுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி அவளுக்குள் அதுவரை இருந்து வந்த பயம், அச்சம், தயக்கம் ஆகியவைகளை உடைத்தெறிய செய்த அவளது கல்லூரி வணிகவியல் தலைமை ஆசிரியைக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டாள்.

நமக்குள் இருக்கும் திறமைகளை நாம் தான் வெளி கொண்டு வரவேண்டும். மற்றவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு

அதற்கான வழியில் செல்ல தயக்கம் கொண்டு

இடையில் அச்சம் ஆட்கொண்டு

ஊருக்குள் இருக்கும் அந்த நாலு பேர் பற்றி எண்ணி கவலை கொண்டு

மனதில் பயத்தை வளர்த்துக் கொண்டு

திறமைகளை அப்படியே மனமெனும் பாதாள சுரங்கத்திற்குள் வீசி தாழிட்டுக் கொண்டு

ஆட்டு மந்தைக் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துக் கொண்டு

தலையை ஆட்டிக்கொண்டு
இருந்த நேரத்தில்

கீதாவுக்கு கலங்கரை விளக்கு போல் வழிகாட்டி, அவள் வாழ்வில் ஒளி வீச செய்த அந்த தலைமை ஆசிரியையை சந்திக்க பத்து வருடங்களுக்கு பிறகு
ஒன்றரை நாள் பயணம் மேற்கொண்டு சென்னை விமானநிலையம் சென்றிறங்கினாள்.

நேராக தன் தாய் வீட்டுக்குச் சென்று குளித்து அம்மா கையால் சாப்பிட்டு, நன்றாக உறங்கி மத்தியம் ஒரு இரண்டு மணியளவில் எழுந்து மீண்டும் அம்மா கையால் மத்திய உணவு உண்ட பின் கிளம்பி உறவினர்கள் வீடுகளுக் கெல்லாம் சென்று அங்கு அனைவரோடும் பேசிவிட்டு அவர்களுக்காக வாங்கி வந்ததை எல்லாம் அவரவர்களுக்குக் கொடுத்து மகளாகவும் மருமகளாகவும் தனது கடமைகளை இரண்டே நாட்களில் முடித்து எதற்காக சென்னை சென்றிருந்தாளோ அதற்கான வேலையில் இறங்கினாள் கீதா. மூன்றாவது நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி காரில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றாள்.

திருச்சியிலிருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் வாசலில் கார் சென்று நின்றது. கீதா மெல்ல காரிலிருந்து இறங்கினாள். உடனே எங்கிருந்தோ ஒரு பெண் ஓடி அவளருகே வந்து

“ஹாய் மேம்.
ஐ ஆம் லதா.
தேர்டு இயர் காமர்ஸ் டிப்பார்ட்மென்ட் மேம்.
வெல்கம் டூ அவர் காலேஜ்”

என்று அன்று பூத்த மலர் போல மலர்ந்த முகத்துடன் லதா கீதாவின் கையில் பூச்செண்டை கொடுத்து வரவேற்றாள். லதா என்ற பெயரைக்கேட்டதுமே கீதாவுக்கு ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது. பூச்செண்டை வாங்கிக்கொண்டு

“தாங்ஸ் லதா.
என்னுடைய உயிர் தோழி பெயரும் லதா தான்.”

“வாவ் ஈஸ் இட்!”

“எஸ்.
நான் இங்க இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினரா வந்ததற்கு அவளும் ஒரு காரணம்.”

“அப்படீன்னா நானும் உங்க பிரெண்டா இருக்கலாமா மேம்.”

“ஷுவர் மிஸ். லதா”

என்று இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் வணிகவியல் துறையை சென்றடைந்தனர். அங்கே கீதா சென்றதும் அவளுக்கு அவளின் கல்லூரி நாட்கள் மீண்டும் ஞாபகம் வந்தது. அப்போது ஆசிரியை அறைக்குள் இருந்து வெளியே வந்த துறை தலைமை ஆசிரியை கீதாவைப் பார்த்ததும்

“ஓ மை சைல்டு!
வெல்கம்.
எப்படி இருக்க மா?
ஐ ஆம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ மை கேர்ள்”

என்று கீதாவை அணைத்துக் கொண்டார்.

“மேம் நைஸ் மீட்டிங் யூ.
இட்ஸ் மை ப்ளஷர் மேம்.
என்ன மேம் உங்க கம்பீர குரல் கொஞ்சம் குறைஞ்சிருக்கு!”

“வயசாயிடுச்சு இல்ல மா.
சரி சரி உள்ளே வா.
இந்த இடம் ஞாபகமிருக்கா?”

“ம்…நல்லாவே இருக்கு மேம்.
நான் நின்னு அழுத இடம்.
என் வாழ்க்கையையே மாற்றிய இடம். இந்த ரூம் அப்படியே இருக்கு மேம். “

“ம்…எஸ் மை சைல்டு. ஹாவ் தி காஃபி கீதா”

“தாங்ஸ் மேம்.”

“தென் ஹவ் இஸ் லைஃப்”

“உங்களால ரொம்ப நல்லாவே இருக்கு மேம்.”

“ஏய் எல்லாம் உன்னோடு உழைப்பு உன்னோட திறமை மா.
இதுல நான் என்ன செஞ்சேன்?”

“மேம் என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க மட்டும் எனக்கு அந்த பதவியை தந்திருக்கலேனா நான் இன்னமும் அச்சத் தோடவே இருந்திருப்பேன்.”

“அப்படி எல்லாம் இல்லமா நான் இல்லாட்டி வேற யாராவது அதை செஞ்சிருப்பாங்க.
அவ்வளவு தான்.
இல்லாட்டி நீயே அதை எல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்திருப்ப…
சரி சரி நாம நிகழ்ச்சி நடக்குற அரங்குக்கு போகலாமா?
எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க”

“எஸ் மேம்.”

என்று கல்லூரி காலங்களில் தலைமை ஆசிரியையிடமிருந்து பத்தடி தள்ளி நின்று பேசிய கீதா இன்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அவருடன் அரங்கிற்கு நடந்து சென்றாள்.

அரங்கில் கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும் அமர்ந்திருந்தனர். மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தது அதில் கீதாவுக்கென்று தனி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் அவளின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து அவள் மனம் பூரித்து போனது. அவளை அங்கே அமர செய்து விட்டு தலைமை ஆசிரியை மெல்ல நடந்து சென்று அங்கிருந்த ஒலிபெருக்கியில் அனைவரையும் வரவேற்கும் வண்ணம் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் அவர்

“நமது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புற செய்வதற்காக நமது கல்லூரியின் முன்னாள் மாணவியும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனமான ஏஞ்சல்ஸ் இன்ஃபோடெக்கின் ஃபௌண்டர் அன்ட் சி.ஈ.ஓவுமான திருமதி கீதா கிருஷ்ணகுமார் அவர்களை சிறப்புரையாற்ற அன்போடு அழைக்கிறேன்”

என்று கூறி மெல்ல நடந்து சென்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். கீதா எழுந்து சென்று ஒலிபெருக்கியை சற்று மேலே தன் உயரத்துக்கு ஏற்றார் போல் தூக்கி சரி செய்து தனது உரையை துவங்கினாள்

“அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் இங்கு உங்கள் முன் நின்று இப்படி பேசுவதற்கு முழு காரணமும் என் தலைமை ஆசிரியையான திருமதி ஏஞ்சல் டிசோசா அவர்களையே சேரும். ஆம் எனது நிறுவனத்திற்கு அவர் பெயர் தான் வைத்துள்ளேன்.
நம்ம திறமைகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் மற்றவர்கள் நம்மிடமிருக்கும் திறமைகளை கண்டு அதை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அளித்தால் அதை நாம் தவற விடக்கூடாது.
ஆம் நான் என் வாழ்க்கையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டேன் ஆனால் அனைத்தையும் என்னுள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் என் தலைமை ஆசிரியை அதை கண்டுப்பிடித்து எனக்கான ஒரு வாய்ப்பை தந்தார். அப்போதும் எனது பயம், கூச்சம் என்னை மறுக்க செய்தது.
ஆனால் அவர் கண்டிப்பாக இருந்து என்னுள் இருந்த திறமை என்னும் விதையை விருட்சமாக்கினார்.

அவர் இல்லையெனில் அது விதையாகவே இருந்திருக்குமா, இல்லை மெல்ல ஒரு சாதாரணமான குட்டி செடியாகியிருக்குமா என்று எனக்கே தெரியாது.
என்னைப் போல பலர் இருந்திருப்பார்கள் உங்களுள் இருந்துக்கொண்டும் இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை தெளிவிக்க விரும்பவது என்னவென்றால் நமக்கு கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என நிறைய இருக்கலாம் ஆனால் அதை எந்த வித தங்கு தடைகள் இன்றி வாய்ப்பு கிடைக்கும் போது வெளி கொண்டு வர வேண்டும்.
அப்படி ஒரு முறை…
ஒரே ஒரு முறை நமது திறமை வெளி வந்து…
அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மேலே எழ ஆரம்பித்தால் நீங்கள் ஒவ்வொரு வரும் இந்த கீதா கிருஷ்ணகுமார் என்ன!
அவளை விட பெரிய இடத்திற்கு போகலாம்.
பல சாதனைகளை படைக்கலாம்.

இன்று நான் சிறந்த பிஸ்னஸ் உமன் என்று பல பட்டங்களும் பதவிகளும் பெரும்போது என் தலைமை ஆசிரியையை தான் மனதில் நினைத்துக் கொள்வேன்.

ஒரு பருக்கு அரிசியை தனது இருப்பிடத்திற்கு ஒரு எறும்பு எடுத்து செல்லும் போது வழியில் ஏதேனும் தடையிருந்தால் அதாவது ஒரு கல் அல்லது ஒரு காகிதம் என ஏதாவது கிடந்தால் அது சும்மா இருக்காது அதை தாண்டி செல்லவே முயற்சிக்கும். அதுவும் அந்த அரிசி பருக்கையோடு. அப்படி பல திறமைகளை சுமந்துக் கொண்டு வழியிலிருந்த தடைகளான அச்சம், கூச்சம், சமுதாயம் ஆகியவைகளில் இருந்து தவித்துக் கொண்டிருந்த அந்த எறும்பை ஒரே ஒரு குச்சி அதாவது கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரி என்ற குச்சியை பாலமாக வைத்து தாண்ட உதவி புரிந்ததில் உங்கள் முன் நான் ஒரு நிறுவனத்தின் ஃபௌண்டர் அன்ட் சி.இ.ஓ வாக நிற்கிறேன்.

நம்ம அப்துல் கலாம் சார் சொன்ன மாதிரி நிறைய கனவு காணுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அச்சம் தவிருங்கள், நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சியுங்கள் அல்லது கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் முன்னேருங்கள்.
நீங்கள் கண்ட கனவை நிஜமாக்கும் வரை ஓயாதீர்கள்.
முயற்சி என்றுமே நம்மை கைவிடாது என்றாவது அதற்கான மெய்வருத்த கூலி தரும் என்று கூறி என்னை மீண்டும் எனது கல்லூரிக்குள் வலம் வர வாய்ப்பளித்த நமது கல்லூரி தலைவர் அவர்களுக்கும், எனது வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியைக்கும் மற்றும் இங்குள்ள அனைத்து நல்லூள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.”

என்று கீதா தன் நீண்ட உரையை முடித்ததும். சற்று நேரம் அமைதி நிலவியது. அதன் பின் பலத்த கரகோஷம் எழுந்ததில் அரங்கமே அதிர்ந்தது. ஒரு கல்லூரியில் நன்றாக படித்து நல்ல பெயருடன் வெளியே வருவதென்பதே மிக பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில்…தான் படித்த போதும், படித்து முடித்து இவ்வளவு வருடங்களாகியும் கீதாவை மறக்காது மீண்டும் கல்லூரிக்கு அழைத்து கௌரவப்படுத்தி அடுத்த சந்ததி மாணவிகளுக்கு நல்வழி காட்டி ஊக்கமளித்துள்ளனர் கீதாவின் கல்லூரி ஆசிரியைகள். கல்லூரியில் கீதாவுக்கு அன்று இரவு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளும் தனது ஆசிரியைகளுடன் இரவு உணவு உண்டு பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். அனைவரும் உண்டு முடித்ததும் கீதாவிடம் ஒரு பரிசை கொடுத்தார் அவளுக்கு மிகவும் பிடித்த அவளது துறை தலைமை ஆசிரியை. அதை கீதாவின் கைகளில் கொடுத்து

“மை டியர் சைல்டு.
இதை நீ உன் வீட்டுக்கு சென்ற பின் உன் குடும்பத்தினருடன் சேர்ந்து திறந்துப் பார்.
சரியா”

“ஷுவர் மிஸ்.
நீங்க சொன்னா தட்டாம செய்வேன் மிஸ்.
நான் அமெரிக்கா சென்று என் கனவர் மற்றும் மகன் முன் வைத்து தான் இதை திறந்து பார்ப்பேன் மிஸ்.”

“இந்த மரியாதையான குணமும், நன்னடத்தையும் தான் மா உன்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு.
இனியும் நீ வளரணும்.
உன்னோட ஸ்பீச் மிக அருமையா இருந்தது மா.”

“தாங்க்ஸ் மேம். சரி மேம் எனக்கு நேரமாயிடுச்சி நான் இப்போ கிளம்பினா தான் நைட் ஒரு பன்னிரெண்டு மணிக்காவது என் வீட்டுக்கு போய் சேர முடியும்.
நான் கிளம்பட்டுமா? நாளைக்கு நள்ளிரவு நான் அமெரிக்காவுக்கு கிளம்பணும்.”

“ஓ! ஷுவர் மை சைல்டு.
எங்களை மதித்து எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து இந்த நாளை இவ்வளவு பிரகாசமாக்கியதற்கு நன்றிமா.”

“ஓ! ஓ! மிஸ் நீங்களெல்லாம் நன்றி சொல்ல கூடாது.
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த உங்களுக்கெல்லாம் தான் நான் நன்றி சொல்லணும்.”

என்று பேசிக் கொண்டே கீதாவின் கார் நின்று கொண்டிருந்த இடம் வரைக்கும் வந்தனர். கார் அருகே வந்ததும் கீதா காரின் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்து

“சரி மேம் நான் போயிட்டு வரேன்.
டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்”

“நிச்சயமா மா.
தாங்ஸ் டியர்.
பத்திரமா போயிட்டு வா.
இன்னும் பல சாதனைகளை புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மா.
பை பை.
ஹாவ் எ சேஃப் ட்ரிப்”

“பை மேம்.”

என்று கீதா அங்கிருந்து விடைப் பெற்று திருச்சியிலிருந்து சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதே மகிழ்ச்சியோடு அமெரிக்காவிலிருக்கும் தனது கனவருக்கு கால் செய்தாள்.

“ஹலோ கீதா மேடம்.
எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் மகேஷ்.
நீங்க எப்படி இருக்கீங்க?
நம்ம சுட்டிப் பையன் எப்படி இருக்கான்? ரெண்டு பேரும் நான் இல்லாம என்ன பண்ணறீங்க?”

“அம்மா!”

“கண்ணா. உம்ம்மா.”

“அம்மா நீ உன் காலேஜுக்கு போனயே. உன் மேம் என்ன சொன்னாங்க மா?”

“ம்….நான் ரொம்ப குட் கேர்ள்னு சொல்லி இதோ இந்த கிஃப்ட் கொடுத்தாங்க. இதை உன் முன்னாடி தான் ஓபன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க.
சோ நான் நம்ம வீட்டுக்கு வந்ததும் நாம மூணு பேரும் சேர்ந்து ஓபன் பண்ணி பார்க்கலாம். சரியா”

“அது எனக்கு குடுத்திருக்காங்களா மா?”

“நமக்கு குடுத்திருக்காங்க கண்ணா.
சரி உனக்கு நான் என்ன இங்கேந்து வாங்கிட்டு வரணும்?”

என்று கனவர் மகனுடன் பேசிக்கொண்டே பயணித்ததில் நேரம் போனது தெரியாது போக தனது தாய் வீட்டுக்கு சட்டென வந்து சேந்தது போல இருந்தது கீதாவுக்கு.

மறுநாள் ஷாப்பிங் சென்று வேண்டியவைகளை வாங்கிக் கொண்டு அன்று முழுவதும் தனது அப்பா அம்மாவுடன் இருந்துவிட்டு அன்றிரவு உணவு உண்ட பின் தன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள் கீதா.

அதே ஒன்றரை நாள் பிரயாணம். மீண்டும் அமெரிக்க மண்ணில் கால் வைத்தாள். மகேஷும் கண்ணனும் அவளுக்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் தூரத்திலிருந்தே “ஹாய்” என்று கூறினாள். கண்ணன் அவளை கட்டியணைக்க ஓடி வந்ததும் அவனை தடுத்தாள் கீதா. இப்போதிருக்கும் இந்த காலம் நம் குழந்தைகள் ஆசையாக ஓடி நம்மிடம் வரும்போது அவர்களை உடனே தூக்கி கொஞ்ச அனுமதிப்பதில்லையே!! கலி காலம் என்று நொந்துக் கொள்ள வேண்டியது தான். அதை போலவே கீதாவும் தன் குழந்தையை தடுத்து நிறுத்தி

“கண்ணா அம்மா டிராவல் பண்ணிட்டு வந்திருக்கேன் இல்ல…
இப்போ உன்ன தூக்கிக்க முடியாதுப்பா..
உனக்கு தெரியும் தானே?
வீட்டுக்கு போய் குளிச்சிட்டு அம்மா உன்னை தூக்கிக் கொஞ்சறேன் சரியா கண்ணா”

“ஓகே அம்மா. அப்பா சொன்னா.”

“குட் பாய்.”

என்று வீட்டுக்கு சென்றதும் குளித்துவிட்டு தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்தாள். அப்போது கண்ணன்

“அம்மா உன் மேம் குடுத்த கிஃப்ட் எது மா?
நாம அதை ஓபன் செஞ்சுப் பார்ப்போமா?”

“ஷுவர் கண்ணா.
இதோ இது தான் அது.
நாம ஓபன் பண்ணுவோமா”

“ம்…அப்பா நீயும் வாப்பா”

“நானும் வந்துட்டேன்.”

என்று தலைமை ஆசிரியை சொன்னது போலவே மூவருமாக அதிலிருந்த ரிப்பனை அவிழ்த்தனர். பின் மகேஷ் அதன் மேலிருந்த கிஃப்ட் ராப்பரை அவிழ்த்தான். அதனுள் ஒரு மரப் பேழை இருந்தது. அதை கீதாவிடம் கொடுத்தான். கீதா அதை கண்ணனிடம் கொடுத்து திறக்கச் சொன்னாள். கண்ணனும் மெல்ல திறந்தான். அதனுள்ளே இருந்து ஒரு பெண் சிலை வெளிவந்தது. அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்தது. அப்போது பின்னணியில் ஒரு மெல்லிய இசையோடு தலைமை ஆசிரியையின் குரலும் ஒலித்தது.

“ஒரு பெண் என்பவள் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் வல்லமைப் பெற்றவள் ஆவாள்.
ஆனால் அவளை அவளே செதுக்க கல் வேண்டுமல்லவா.
அது தான் அவளை பெற்றவர்கள். உளியின்றி அவள் எப்படி அவளை செதுக்க முடியும்?
அந்த உளியாக அவளின் கனவனும் அவளின் குடும்பமும் இருந்தால் போதும் அவள் அழகிய சிற்பமாக மட்டுமல்லாது சிறந்த சிற்பியாகவும் திகழ்வாள். உங்களையும் செதுக்கி அழகுறச் செய்வாள்.
வாழ்க வளமுடன்”

என்று கூறி நின்றது ஆனால் அந்த மரப்பேழையை மூடும் வரை அந்த பெண் சிலை தன்னை செதுக்குவதை நிறுத்தவில்லை. அதைப் பார்த்ததும் மகேஷ் கீதாவை கட்டியணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு

“ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யூ மை டியர் கீதா”

என்றான். அவள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. அதைத் துடைத்த கண்ணனின் பிஞ்சுக் கைகளை பற்றிக்கொண்டு முத்தமிட்டாள் கீதா. வானத்தை நோக்கி கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள்

“ஐ ஆம் ப்ளெஸ்டு.
தாங்யூ காட்.
இதற்கு மேல் எனக் கெதுவுமே தேவையில்லை.
என்னை போலவே எல்லா பெண்களுக்கும் இது போன்ற வாழ்வையும் உணர்வையும் கொடு ஆண்டவா.”

முற்றும்

நா. பார்வதி

இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள், சக்தி மற்றும் விஷால் ஆகியோர் கூரை தளம் சென்று அவர்கள் லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்ததும் வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை பார்த்தனர். அப்போது சக்தி

“ஜேம்ஸ் என்ன ஆச்சு? இதோ டாக்டர்ஸ்!”

“ஓ மை காட்!! ஏய் நம்ம கீர்த்தனா!”

“வா வா வா! கீர்த்தனா! கீர்த்தனா!”

“நகருங்க சிஸ்டர்.
என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.”

“ஏன் சார் எங்க ஹாஸ்பிடல் நர்ஸ்க்கு எப்படி இப்படி நடந்தது?
நீங்க யாரு?”

“டாக்டர்…”

என்று கூறிக்கொண்டே டாக்டரின் கோர்ட்டில் அவரது பெயரை தேடியது ஜேம்ஸின் கண்கள். அது அகப்பட்டதும்

“டாக்டர் ராமசந்திரன் என் பெயர் ஜேம்ஸ் இமானுவேல்.
நான் பிரான்ஸ் போலீஸ்.
இது தான் என் ஐடி”

“சரி சார்.
எதுக்காக போலீஸ் நீங்க எங்க ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?
எங்க நர்ஸ்க்கு என்ன நடந்தது?”

“ஹேய் ராம் கீர்த்தனா உயிரோட தான் இருக்கா.
மொதல்ல அவளை ஐசியூ வுக்கு ஷிப்ட் பண்ணணும்.
சீக்கிரம் வா.
மத்ததெல்லாம் அப்புறமா பேசிப்போம்.”

“நர்ஸ் கொஞ்சம் நகந்துக்கோங்க.
ம்… இப்போ க்ரௌண்ட் அழுத்து.”

“சார் நீங்க எல்லாரும் கீழே வாங்க.
அங்க பேசிக்கலாம்.
மொதல்ல இவங்கள காப்பாத்தணும்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.”

“ஷுவர்.
நீங்க போங்க நாங்க கீழே வரோம்.
எப்படியாவது அவங்கள காப்பாத்துங்க.”

என்று ஜேம்ஸ் கூறிக் கொண்டிருந்த போதே லிஃப்ட்டின் கதவுகள் மூடின. உடனே ஜேம்ஸ்

“சக்தி, விஷால் வாங்க நாம அந்த லிஃப்ட்டுல கீழ போகலாம்.
ம்… சீக்கிரம் உள்ள வாங்க.”

என்று பக்கத்து லிஃப்ட்டிற்குள் மூவரும் சென்றதும்

“ஜேம்ஸ் என்ன நடக்குது இங்க?
யார் அந்த நர்ஸ்?
அவங்க ஏன் இப்படி?…
யார் அவங்கள அப்படி பண்ணிருக்காங்க?
நீ எப்படி கூரை தளத்துக்கு வந்த!
ஏன் வந்த?”

“அந்த நர்ஸ்…சரி சரி கிரௌண்ட் ஃப்ளோர் வந்துட்டோம்.
மொதல்ல அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுப்போம் வாங்க”

“வி என்னப்பா நடக்குது.
நான் ஆஃபிஸ் வேற போகணுமே!”

“பேசாம இன்னைக்கு லீவ் போடு தி.
இங்க நடக்கறதெல்லாம் பார்த்தா ஏதோ விபரீதமா இருக்குமோன்னு தோணுது.”

“ம்…லீவு கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கிறேன்.”

“சக்தி நீங்க இங்க இருக்க வேண்டாம்.
நீங்க உங்க ஆஃபிஸுக்கு போய் நான் கேட்ட பர்மிஷன் வாங்கி வையுங்க.
நான் வரேன்.”

“அப்போ பாரிஸ்?”

“அந்த கேஸை வேற ஒருத்தருக்கு மாத்திக் கொடுத்துட்டேன்.
அதுனால இன்னைக்கு இதை கண்டு பிடிச்சே ஆகணும்”

“ஆக்சுவலி நான் ஈமெயில் போட்டு உங்களுக்கு பர்மிஷன் வாங்கியாச்சு ஜேம்ஸ்.”

“அப்புறம் என்னடா அவளும் நம்ம கூடவே இருக்கட்டுமே ஜேம்ஸ்”

“ம்…ஓகே சக்தி.
அப்படீன்னா இங்க நிலவரம் தெரிஞ்சுகிட்டு நாம உங்க ஆஃபிஸ் போகலாம்.”

“நான் இன்னைக்கு ஹாஃப் டே பர்மிஷன் கேட்டிருக்கேன்.
பார்ப்போம்… கிடைச்சா நீங்க சொன்னபடியே செய்யலாம்.
இல்லாட்டி…நான் போக வேண்டி இருக்கும்.”

“ஓகே.”

“எப்போ தெரியும் தி?
ஈமெயிலுக்காக காத்திருக்காம…
நீயே கால் பண்ணிக் கேட்டுடேன்.”

“ம்…அதுவும் சரி தான் வி.
இதோ கால் பண்ணிட்டு வந்துடறேன்”

என்று சக்தி அங்கிருந்து நகர்ந்து சென்றதும் விஷால் ஜேம்ஸிடம்

“என்ன தான் நடக்குது ஜேம்ஸ்?
ஒண்ணும் புரியல.
அந்த நர்ஸை அப்படி ரத்தவெள்ளத்துல பார்த்ததும் அப்படியே தல சுத்தித்து தெரியுமா!
அவங்களை யார் என்ன பண்ணிட்டாங்க?”

“நாம இங்க வசுந்தராவைத் தேடி வந்தப்ப அந்த வரவேற்பாளர் பொண்ணு அவங்க ஷிப்ட் முடிச்சுட்டு நைட்டே ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சொன்னப்போ… இப்போ அடிப்பட்டுக் ஐசியூல இருக்காங்களே இந்த நர்ஸ் அவசர அவசரமா ஒரு பதட்டத்தோடு புறப்பட்டுட்டிருந்தாங்க.
அவங்க கண்ணு என்கிட்ட ஏதோ சொல்ல தவிச்சது எனக்கு புரிஞ்சுது.
சரி தனியா போனா ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைச்சு அவங்க பின்னாடியே போனேன்.
அப்போ தான் லிஃப்ட்டுக்குள்ள போனாங்க நான் படிகள்ல ஏறி போனேன்.
அவங்க போன லிஃப்ட் கூரை தளத்தில் நின்னுது.
நானும் அங்க போய் பார்த்தேன் ஆனா அவங்கள அதுக்குள்ள யாரோ அப்படி பண்ணிட்டுப் போயிருக்காங்க.
அதுக்கப்புறம் நான் சக்திக்கு கால் பண்ணி டாக்டர்ஸோட வரச்சொன்னேன்.
அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே”

“அப்போ அந்த நர்ஸ்க்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லறயா ஜேம்ஸ்.”

“வாய்ப்பிருக்கலாம்….
இல்லாமலும் இருக்கலாம்.”

“என்னடா குழப்பற?”

“ஆமாம் அவங்க வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தானே தெரியும்.
சரி நீ இங்கேயே இரு இதோ நான் வந்துடறேன்.”

“எங்கடா போற?”

“நீ அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு டாக்டர்ஸ் வந்து சொல்லுற வரைக்கும் அங்கேந்து நகராத சரியா.
அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்”

“ஹேய் வி.
ஜேம்ஸ் எங்கே?
நீ மட்டும் நிக்கற!”

“அவன் ஏதோ ஒரு விஷயத்துக்காக அந்த பக்கம் போயிருக்கான்.
வந்தா தான் என்ன விஷயம்ன்னே தெரியும்.
சரி உனக்கு பர்மிஷன் என்ன ஆச்சு?”

“ஆங்! ஆங்! அதெல்லாம் கிடைச்சாச்சு.
நான் இனி மத்தியானம் ஒரு ஒன்றரை மணிக்கு ஆஃபிஸ் போனா போதும்.”

“குட் குட்….”

“ஏய் வி அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?”

“தெரியலையே!
இப்போ தான் என்ன நடந்ததுனு ஜேம்ஸ் சொல்லி முடிச்சிட்டு போனான் நீ வந்துட்ட”

“அப்படியா என்ன நடந்தது?”

என்று சக்தி கேட்டதும் ஜேம்ஸ் சொன்ன அனைத்து விவரங்களையும் விஷால் சக்தியிடம் விளக்கிக் கூறினான். அதைக் கேட்ட சக்தி

“என்னது இது சினிமா கதை மாதிரி இல்ல இருக்கு!”

“அது இருக்கட்டும் தி.
எங்க உன் பிரெண்டு வசுந்தரா?”

“அது தான் எனக்கும் தெரியலை வி.”

“அவளுக்கு ஒரு ஃபோன் போட்டு கேட்க வேண்டியது தானே”

“பண்ணாம இருப்பேனா வி!
எத்தனைத் தடவை கால் பண்ணறது.
நாட் ரீச்சபள் ன்னு தான் வருது.
குடும்பத்தோட எங்கயாவது வெளியூருக்கு போயிருப்பாளோ?”

“என்கிட்ட கேட்டா!
எனக்கென்ன தெரியும் தி?
நீதான் சொல்லணும்.”

“ம்…என்ன பண்ணலாம்…
எப்படி அவளை கண்டு பிடிக்கறது?
ம்….ஆங்!
ஒரு வழியிருக்கு…”

“என்ன அந்த வழி தி?”

“இரு வி இதோ நான் வந்துடறேன்.”

“ஏய் தி அது என்ன வழின்னு சொல்லிட்டுப் போயேன்.”

“இரு இரு வி.
அது சரியானதான்னு மொதல்ல செக் பண்ணிட்டு…
அப்புறமா வந்து சொல்லறேன்.
நீ அங்கேயே இரு வி.
இதோ வந்துடறேன்.”

“அட போங்கப்பா.
நான் என்ன காவலாளியா என்ன?
என்னை இங்க நிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில போறீங்க.
ஆங் டாக்டர்!
டாக்டர் அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?
இப்போ எப்படி இருக்காங்க?”

“மிஸ்டர் ஜேம்ஸ் இமானுவேல் எங்க?”

“அவர் ஏதோ அவசரமா வெளியே போயிருக்கார்.
எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்லலாம்.”

“நீங்களும் போலீஸா?”

“இல்ல இல்ல.
நான் ஜேம்ஸோட பெஸ்ட் பிரெண்ட்.
அதுவுமில்லாம அவன் தான் என்கிட்ட நீங்க வெளிய வந்ததும் என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்டு வைக்க சொன்னான்.”

“கீர்த்தனாவுக்கு காயங்கள் ரொம்ப சிவியரா இருக்கு.
பயங்கரமா தாக்கப்பட்டிருக்கா.”

“அப்படியா? உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்!
ஆங்! இதோ ஜேம்ஸே வந்துட்டான்.”

“டாக்டர் அந்த நர்ஸ் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு?
அவங்க கண் முழிச்சிட்டாங்களா?”

“இல்ல மிஸ்டர் ஜேம்ஸ்”

“நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் டாக்டர்.
மிஸ்டர் எல்லாம் தேவையில்லை”

“ஓகே ஜேம்ஸ்.
அந்த பொண்ண கத்தியால் பயங்கரமா தாக்கியிருக்காங்க.
உடம்புல எல்லா இடங்களிலும் கத்திக் காயமிருக்கு.
மோரோவர் அவளை கொல்ல விடாம அவ ரொம்ப போரடிருக்கா.
ஏன்னா அவ கை எல்லாம் கத்தி கீறல்களா இருக்கு.
கடைசியில் தான் அவ வயிற்றுல குத்திருக்காங்க.
நல்ல வேளை அந்த கத்தி அவ்வளவா உடலுக்குள் போகலை.
அதுனால அவ பொழச்சுக்கிட்டா!”

“அந்த பொண்ணு எப்படி டாக்டர்?”

“எப்படின்னா?”

“இல்ல காரெக்டர் எப்படி?”

“ரொம்ப நல்ல பொண்ணு அவ.
அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா.
வேலையில் ரொம்ப சின்சியிர்.
அந்த பொண்ணுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலை?”

“இதுக்கு முன்னாடி உங்க ஹாஸ்பிடல் ல இது மாதிரி நடந்திருக்கா டாக்டர்?”

“இல்லவே இல்லை ஜேம்ஸ்.
இது தான் ஃப்ர்ஸ்ட் டைம்.”

“நீங்க எத்தனை வருஷமா இந்த க்ளினிக் ல டாக்டரா இருக்கீங்க ராம்?
ஐ திங்க் யூ டோண்ட் மைன்ட் மி காலிங் யூ ராம்!”

“நோ நோ நாட் அட் ஆல். இங்க எல்லாரும் என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க.
நான் கடந்த பதினோரு வருஷமா இதே ஹாஸ்பிடல் ல தான் டாக்டரா இருக்கேன்.”

“சரி இங்க வசுந்தரான்னு ஒரு டாக்டர் இருக்காங்களா?”

“வசுந்தரா வா!! ஆமா ஆமாம்.
அவங்களுக்கு இந்த வாரம் ஆஃப்டர்னூன் ஷிப்ட்.
மத்தியானம் இரண்டு மணிக்கு தான் வருவாங்க.”

“ஓ! அப்படியா?”

“ஏன் அவங்கள தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அது வேறொரு விஷயம் ராம்.
சரி இந்த நர்ஸ் எப்போ கான்சியஸ்க்கு வருவாங்க?”

“அவ இன்னும் ஒரு ஆறு லேந்து ஏழு மணி நேரம் கழிச்சு தான் கான்சியஸ்க்கு வருவா.”

“சரி டாக்டர் ராம்.
ரொம்ப தாங்க்ஸ். அனாவசியமான கேள்விகள் கேட்காம உடனே மாடிக்கு வந்து உதவினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.
இந்த நர்ஸ் கீர்த்தனா எழுந்து சொல்லப் போறதுல தான் என்னோட ஒரு கேஸுக்கான முதல் க்ளூ இருக்கப் போகுது.
நான் அவங்க காவலுக்கு ரெண்டு சென்ட்ரி போடறேன்.
தயவுசெய்து அவங்கள உங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்பும் பத்திரமா பார்த்துக்கோங்க.
கீர்த்தனா வீட்டுல சொல்லியாச்சா?”

“இல்ல. இன்னும் சொல்ல ல.
அவ இங்க இருக்கற எங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுல தான் மற்ற நர்ஸ்களுடன் தங்கியிருக்கா.
அவ சொந்தங்கள் எல்லாம் இந்தியாவுல இருப்பாங்க.”

“அப்படீன்னா இப்போதைக்கு அவங்க வீட்டுல எதுவும் சொல்லிக்க வேண்டாம்.
அவங்க நல்ல படியா குணமானதும் சொல்லிக்கலாம்.
இல்லாட்டி அவங்க எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க.”

“ஆனா அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா?”

“ஆச்சுன்னா எல்லாருக்கும் கஷ்டம் தான் டாக்டர் ராம்.
அதுனால அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க.
சரி அது என்ன இந்த ஹாஸ்பிடல் ல இருக்கற ஸ்டாஃப் முக்கா வாசி பேரும் இந்தியர்களா இருக்கீங்க!”

“இந்தியர்களும், இலங்கையர்களும் இருக்கோம்.
இது நம்ம கம்யூனிட்டிக்காக எங்க சேர்மென் மிஸ்டர் கோபாலன் உருவாக்கின ஹாஸ்பிடல்”

“ஓ!! இர்ட்ரெஸ்டிங்.
அவர் இப்போ எங்க இருக்கார்?”

“அவர் இப்போ இந்தியாவுல இருக்கார்.
அடுத்த வாரம் இங்க வருவார்.”

“சரி அவருக்கு அவர் ஹாஸ்பிடல் ல இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரியுமா?
இல்ல நீங்க யாராவது அவருக்கு தெரியப்படுத்தி இருக்கேங்களா?”

“எஸ் எஸ்!
அதெல்லாம் அப்பவே அவர்கிட்ட இன்ஃபாம் பண்ணியாச்சு.”

“ம்…சரி சரி டாக்டர் ராம்.
இதோ நான் சொன்ன ரெண்டு சென்ட்ரி வந்துட்டாங்க.
இவங்க பகல் முழுவதும் இங்கேயே இருப்பாங்க.
நைட் ஷிப்ட்டுக்கு ஆள் மாறுவாங்க.
சரியா.
சென்ட்ரீஸ் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா எங்கேயும் இந்த இடத்தை விட்டு போகக்கூடுது.
யாராவது ஒருத்தர் இங்கே இருந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நைட் ஷிப்ட் வர்றவங்க கிட்டேயும் இந்த அப்டேட் குடுத்துட்டு வீட்டுக்கு போங்க.”

“எஸ் சார்.”

“நான் மீண்டும் ஈவ்னிங் வரேன்.
ஓகே டாக்டர் ராம் சீ யூ பை.
நான் வேறொரு இடத்துக்கும் போக வேண்டியிருக்கு.”

“ஓகே ஜேம்ஸ்.
பை. டேக் கேர்.”

“இந்தாங்க இது என் கார்ட்.
அந்த நர்ஸ் கண் முழிச்சதும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.”

“ஓ! ஷுவர் ஜேம்ஸ்.”

“டேய் ஜேம்ஸ் என்னாட இவ்வளவு நேரம் அந்த டாக்டர்ட்ட பேசிட்டிருந்த?
அவர் என்ன தான் சொல்றார்?
அந்த நர்ஸ் பொழப்பாளா மாட்டாளா?”

“ஏன்டா!!! பொழைக்கணும்னு வேண்டிக்கோயேன் டா.
அப்ப தான் நம்ம சக்தியோட விஷயத்துல ஏதாவது ஒரு ஹின்ட்டாவது கிடைக்கும்.”

“ஆங்!! ஆங்!! வேண்டிக்கறேன்…வேண்டிக்கறேன்.”

“சரி சக்தி எங்க?”

“உன்னை மாதிரியே இதோ வர்றேன்னு சொல்லிட்டு போனா…
இன்னும் வரலை.
ஆங்… அதோ வர்றாளே!
நீயே கேட்டுக்கோப்பா!”

“ஹேய் சக்தி நீங்க எங்க போயிருந்தீங்க?
உங்களுக்கு ஹாஃப் டே பர்மிஷன் கிடைச்சுதா?”

“ஆங் அதெல்லாம் கிடைச்சாச்சு.”

“இப்போ எங்கேந்து வர்றீங்க?”

“அப்பா துப்பறிவாளரே!
உனக்கு பசிக்குதோ இல்லையோ!
எனக்கு பசிக்குது டா.
மணி என்ன பாரு.
பத்தாக போவுது.
என்ன தி நீ நல்லா ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு தான் வந்திருக்க போல!”

“இல்ல வி.
வசுந்தரா வீட்டுல சாப்பிடலாம்ன்னு தான் வந்தேன்.
ஆனா இப்போ அவளையே காணல!
வேணும்னா மறுபடியும் அவங்க வீட்டுக்கு போய் பார்ப்போமா?”

“ம்…இதுவும் நல்ல யோசனை தான்.
சரி வாங்க வசுந்தரா வீட்டுக்கு போய் பார்த்துட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டுட்டு அங்கேந்து சக்தி நாம உங்க ஆஃபிஸுக்கு போகலாம்.
என்ன சொல்லுறீங்க?”

“ம்…ஓகே.”

“என்னவோ எதுவோ!
வாங்கப்பா சீக்கிரம் போய் ஏதாவது சாப்பிடுவோம்.”

மூவருமாக வசுந்தரா வீட்டுக்கு மீண்டும் சென்று பார்த்தனர். ஆனால் அவள் வீடு பூட்டியபடியே இருந்தது. உடனே ஜேம்ஸ் வசுந்தரா வீட்டுப் பக்கத்து வீட்டிலிருப்பவரிடம் விசாரித்தான். பின் அங்கிருந்து கிளம்பி ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றனர். அங்கே சக்தி ஜேம்ஸிடம்

“வசுந்தரா பக்கத்து வீட்டுக் காரங்க கிட்ட விசாரிச்சேங்களே…
அவங்க என்ன சொன்னாங்க?”

“உங்க பிரெண்ட் நேத்து ராத்திரியே மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு ஊரை விட்டே போயிட்டாங்களாம்.”

“ஏன் போனாளாம்?”

“அதைப் பத்தி அவங்களுக்கு ஒண்ணும் தெரியல.
இதை எல்லாம் வச்சுப் பார்த்தா…
உங்க பிரெண்ட் வசுந்தரா வை யாரோ நல்லா மிரட்டி இருக்காங்க.
அதுனால பயந்து அவங்க ஊரை விட்டே போயிருப்பாங்க அப்படீங்கறது என்னோட யூகம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க சக்தி?”

“அப்படி முழுசா நம்பிவிட முடியாது ஜேம்ஸ்.
மிரட்டலுக்கு பயந்து போயிருப்பாங்கன்னு தோணல… அவங்க ஹஸ்பன்ட் தொந்தரவால கூட போயிருக்க வாய்ப்பிருக்கு.
நான் எங்கேந்து வந்தேன்னு அப்போ ஹாஸ்பிடல் ல கேட்டீங்களே அது எங்கன்னா…
என் வசுந்தராவோடவே எப்பவும் இருக்குற நர்ஸ் நளினிக்கு கால் பண்ண போனேன்.”

“அவங்க கிட்ட பேசினீங்களா?
என்ன சொன்னாங்க?”

“பேசினேன்.
அவங்க என்னை அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்க.
நானும் வசுந்தராவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு உடனே போனேன்.”

“அவங்களை மீட் பண்ணிணீங்களா?
இல்ல ஒரு வேளை வசுந்தரா அவங்களோடு இருந்தாங்களா?”

தொடர்வாள்…

விஷாலின் கார் திறக்காததால் சக்தி அவனிடமிருந்த சாவியை வாங்கி திறக்க முயற்சித்தாள். பின் தன் கையிலிருந்த சாவியை நன்றாக பார்த்த சக்தி…

“ஹலோ வி! உன் கார் எப்படி திறக்கும்?”

“ஏன் தி?”

“இது என் காரோட சாவி!”

“ம்…அப்படியா?”

“இதோ இங்கே பாரு!
என் கார் திறந்திருக்கு!”

“அட ஆமா!”

“என்ன ஆமா?
சரி எப்படி என் கார் சாவி உன்கிட்ட வந்தது?”

“அது தானே எப்படி வந்தது?”

“டேய் விஷால் என்ன சக்தி கேட்கிற கேள்வியை அப்படியே திருப்பிக் கேட்குற?
எப்படி உன்கிட்ட அவங்க கார் சாவி வந்ததுன்னு மொதல்ல சொல்லுடா”

“அதுவா!
நாம எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம் இல்லையா அப்போ அவ டேபிள் மேல வச்சிருந்தா,
சாப்பாடு கொண்டு வந்த வில்லியம்ஸ் தட்டுகளை வைக்க நான் தான் சாவியை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுண்டேன்”

“ஓ! ஓகே ஓகே!
இது என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்.
எப்பவுமே சாவியை பேக் உள்ள போடணும்னு நினைப்பேன்…
ஆனா மறந்து கையிலேயே வச்சுப்பேன் அப்புறம் எங்கயாவது மறந்து வச்சுடுவேன்.”

“சரி சரி இரு என் கார் சாவியை எடுக்கிறேன்.
ம்…இதோ என் கார் கீ.
இப்போ பாருடா ஜேம்ஸ்”

“வாவ்! சூப்பர்ப் கார் விஷால்.
சரி நீ தான் கார் வச்சிருக்கியே அப்புறமும் ஏன் சக்தி கார்ல போற?”

“ஒண்ணா போயிட்டு ஒண்ணா வரலாமேன்னு…”

“ஓ! ஓ! ஓகே ஓகே! நடத்து நடத்து.
சரி ரெண்டு பேரும் பத்திரமா வீடு போய் சேருங்க.
எனக்கென்னவோ உங்களை எப்பவும் யாரோ ஃபாலோ பண்ணிகிட்டே இருக்காங்களோன்னு தோணுது.”

“அப்படியா சொல்லுற?”

“ஆமாம்…ஸோ எப்பவுமே ஜாக்கிரதையா இருங்க.
நாளைக்கு டாக்டர் வசுந்தரா வீட்டுல சந்திப்போம்.”

“அப்போ நாளைக்கு என் ஆஃபிஸுக்கு நீங்க வரலையா? என் ஆஃபிஸ் வரேன்னு சொன்னீங்களே! அதுவுமில்லாம நீங்க பாரிஸ் போகணும்னும் சொன்னீங்களே!
அப்புறம் எப்படி வசுந்தரா வீட்டுல மீட் பண்ணலாம்ன்னு சொல்லறீங்க?

“அச்சச்சோ எத்தனை கேள்விகள்?
சக்தி நாளைக்கு காலையில ஏழரை மணிக்கு வசுந்தரா வீட்டுக்கு போவோம்.
அதுக்கப்புறமா நான் பாரிஸ் போறேன்.
நீங்க ஆஃபிஸ் போங்க.
பாரிஸுலேந்து நான் திரும்பி இங்க வரும்போது உங்க ஆஃபிஸுக்கு வந்து சிசிடிவியை செக் பண்ணிக்கறேன்.
இப்போ எல்லாம் கரெக்ட்டா இருக்கா?”

“எஸ் எஸ் இப்போ எல்லாம் ஓகே.
அப்படீன்னா நானும் நாளைக்கு வசு வீட்டுக்கு ஏழரைக்கு வரணும் இல்ல!”

“அஃப்கோர்ஸ் சக்தி.
இதுல என்ன கேள்வி?”

“இல்ல வி…
இப்பவே மணி என்னாச்சுப் பாரு…
இதுல காலையில ஏழரை மணிக்கெல்லாம் வசுந்தரா வீட்டுல இருக்கணும்னா!
நான் ஆறு மணிக்கெல்லாம் எழுத்துக்கணுமேன்னு யோசிச்சேன்.”

“அடிப் பாவி நாங்களும் தானே அவ்வளவு சீக்கிரம் எழுந்து வரணும்!”

“சரி சரி இங்கேயே நின்னுட்டு இப்படியே மாறி மாறி பேசிட்டிருந்தா காலை ஆறு மணி ஆயிடும்.
பேசாம கிளம்பி போய் ஒரு நாலஞ்சு மணி நேரமாவது தூங்கிட்டு வாங்க.
போங்க போங்க..
நானும் கிளம்பறேன். பை.”

“ஓகே டா ஜேம்ஸ்.
பை.
குட் நைட்”

“ஓகே ஓகே.
குட் நைட்”

“சக்தி என்னோட நம்பருக்கு அந்த டாக்டர் அட்ரெஸை ஷேர் பண்ணிடுங்க.”

“ஷுவர்.
இதோ இப்பவே பண்ணிடறேன்.”

என்று உடனே ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் சக்தி. அது கிடைத்ததை சக்தியிடம் சொன்ன ஜேம்ஸ் அவன் காரில் புறப்பட்டுச் சென்றதும் சக்தி விஷாலை பார்த்து

“சார் என்ன என் வண்டில ஏறப் பாக்குறீங்க?”

“அப்புறம் என்ன பண்ணுவேன் தி?”

“அதோ உங்க கார் இருக்கே!
அதை எடுத்துட்டு பாரிஸ் கிளம்ப வேண்டியது தானே!”

“என்ன தி!
என்னை துரத்தி விடற?”

“பின்ன என்னவாம்?”

“இப்பவே டைம் பதினொன்னு ஆயிடுத்து!
இதுக்கு மேல நான் டிரைவ் பண்ணி பாரிஸ் ரீச்சாகறதுக்கு இரண்டு ஆர் மூணு மணி ஆயிடும்.
அப்புறம் மறுபடியும் காலையில உன் வீட்டுக்கு வரணும்!
நான் பாவம் தானே!”

“அதுக்கு நான் என்ன பண்ணறது?”

“என்ன இப்படி சொல்லற?
ஏன் உன் வீட்டுக்குள்ள என்னை அலௌ பண்ண மாட்டியா என்ன?”

“நோ வே வி.
நமக்கு கல்யாணம் ஆகுற வரை ராத்திரியில் ஒண்ணா தங்குறதெல்லாம் சரி கிடையாது.”

“எந்த காலத்துல இருக்க நீ?”

“ஒண்ணா தங்கினா என்னவாம்?
அவா அவா ஒண்ணா அஞ்சாறு வருஷம் லிவ்ங் டுகெதர்ன்னு சொல்லி இருந்துட்டு தான் கல்யாணமே பண்ணிக்கறா…
நீ என்னடான்னா?”

“நான் இப்படி தான் வி.
எனக்குன்னு சில பாலிஸிஸ் இருக்கு.
நான் அது படிதான் நடந்துப்பேன்.
யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டேன்.
நம்மளோட கல்யாணம் வரை நோ நைட் ஸ்டே”

“ஏன் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா?”

“வாட்?
மொதல்ல நீ கிளம்பு வி.
நான் கிளம்பறேன்.
பை. பை. குட் நைட்”

“தி…தி…தி…
அடி போடி.
இவளும் இவளோட பாலிஸியும்.
பொல்லாத பொடலங்கா பாலிஸி!
முன்னாடியே சொல்லியிருந்தான்னா நான் ஜேம்ஸோட அவன் வீட்டுக்காவாவது போயிருப்பேன்.
இப்படி நடு ராத்திரி தனியா பொலம்ப விட்டுட்டுப் அவ பாட்டுக்கு போயிட்டாளே!
என்ன பண்ணலாம்.
சரி பேசாம ஜேம்ஸ் வீட்டுக்கே போக வேண்டியது தான்.
வேற வழி?”

என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே காரை ஜேம்ஸ் வீட்டிற்கு விட்டான். அங்கே அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான். அப்போது கதவைத் திறந்த ஜேம்ஸ்

“டேய் விஷால் என்ன? என்னாச்சு?
சக்தி எங்க?
ஏன் நீ மட்டும் வந்திருக்க?”

“ஹலோ வீட்டுக்கு யாராவது வந்தா முதல்ல உள்ள வாங்கன்னு கூப்பிடணும் தெரியுமா?
அதை விட்டுட்டு ஏதேதோ கேள்வி மேல கேள்வியா அடுக்கிக்கிட்டே போற?”

“சரி சரி வா வா உள்ள வா”

“ம்…வீட்டை நல்லா தான் வச்சிருக்க!
ஆங் இப்போ கேளு”

“அது தான் அப்பவே கேட்டுட்டேனே!
பதில் சொல்லு”

“அவ அவளோட வீட்டுக்கு போயிட்டா!
நான் நடு ரோட்டுல நின்னுட்டிருந்தேன்.
அது தான் நம்ம நண்பன் நீ இருக்கயேன்னு நேரா இங்க வந்துட்டேன்”

“ஏன் நீ அவங்களோட அவங்க வீட்டுக்கு போகலை?
சம் பியர்”

“நோ தாங்க்ஸ்!
எங்க கல்யாணம் முடியற வரைக்கும் நாங்க ஒரே வீட்டுல ஒண்ணா நைட்டு தங்கக் கூடாதாம்.
அது அந்த அம்மணியோட பாலிஸியாம்”

“அதுவும் சரி தான்.
ஆனா நீ அவங்கள தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது டா!”

“வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னதுக்கப்புறம் நான் எப்படி அவ கூட போவேன் ஜேம்ஸ்”

“நீ அவங்க கூட போயிருக்க வேண்டாம்.
ஆனா அவங்க வீடு வரைக்கும் பின்னாடியே போயி விட்டுட்டு வந்திருக்கலாம்.
ஏன்னா அவங்களை சுத்தி ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்குது இல்ல!”

“அட ஆமா இல்ல.
எனக்கு இது தோணலப் பாரேன்!”

“எப்படி தோணும்?
உன் மனசுல கோபம் நிறைஞ்சிருந்தா இப்படியெல்லாம் எப்படி தோணும்?”

“ச்சே! ஆமாம் ஜேம்ஸ்.
நான் தப்பு பண்ணிட்டேன்”

“சரி சரி அவங்களுக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்களான்னாவது கேளுடா”

“ம்…இரு இரு…
இப்பவே கேட்கிறேன்..
ஆங்…ரிங் போறது!”

“ஹலோ வி”

“ஹாய் தி.
வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?”

“இல்ல இதோ இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆயிடுவேன்.”

“ஓகே நீ ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு”

“வேண்டாம் வேண்டாம் வி.
நீ டிரைவ் பண்ணிண்டிருப்ப…நான் டிஸ்டர்ப் பண்ணலை.”

“ஹலோ மெட்ஸ் ல உன் வீட்டைவிட்டா எனக்கு தங்குறதுக்கு இடமா இல்லை.”

“எங்க தங்கியிருக்க?”

“என் நண்பன் ஜேம்ஸ் வீட்டுல தான்”

“ஓகே ஓகே.
காலையில் மீட் பண்ணுவோம்.
பை”

என்று பேசி முடித்ததும் வீட்டு வாசலில் சென்று காரை நிறுத்திவிட்டு, காரை பூட்டி, வீட்டை திறந்து உள்ளே சென்று

“ஹேய் ப்ளூ.
நீ வெளிய வரலாம்.
ப்ளூ கேட்குதா?”

“ம்…ம்…
கேட்குது நல்லாவே கேட்குது.
இதோ வரேன்”

“வா வா வா மை டியர் ப்ளூ கண்ணா.
உம்மா…”

“ஆமா ஆமா! காலையிலேந்து அந்த பேஸ்மென்ட்டுலேயே கிடக்கேனாம்…
இப்ப வந்து கண்ணாவாம்…
உம்மாவாம்….
அட போ மா”

“அடடே என் ப்ளூ செல்லத்துக்கு கோவமாக்கும்?”

“பின்ன இருக்காதா?
அந்த வி வந்ததிலேந்து நீ ஆளே சரியில்ல பார்த்துக்கோ… அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

“ஹலோ! சும்மா அலுத்துக்காதப்பா!
நாங்க தான் இவ்வளவு நேரம் வீட்டுலேயே இருக்கலையே!
அப்புறம் என்ன?
ப்ளூ ஐய்யா சுதந்திரமா சுத்தியிருப்பாரே!”

“ஆங்…ஆங்!!
சுத்தினேன்! சுத்தினேன்!
எப்படா உன் கார் சத்தம் வரும் ஓடி ஒளிஞ்சுக்கணும்னு தவிச்சுக்கிட்டே சுத்திட்டிருந்தேன் தெரியுமா!
நிம்மதியாவா சுத்தினேன்?”

“ஓ !! அது தான் மேட்டரா?”

“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் தி.
நீ போன காரியம் என்ன ஆச்சு?”

“அது ஒரு பெரிய கதை ப்ளூ.
நிறைய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் இருக்கு.
என்னன்னு சொல்லறது?”

“பரவாயில்லை இந்தா உன்னோட ஃபேவரைட் காபியை குடிச்சுக்கிட்டே சொல்லு.
கேட்கிறேன்”

“ஹலோ! டைம் என்ன ஆச்சுன்னு பார்த்தியா?
உனக்கு தூக்கம் எல்லாம் தேவையே இல்லப்பா…
ஆனா எனக்கு அட்லீஸ்ட் ஒரு அஞ்சு மணி நேரமாவது தூங்கி ஆகணும்.
அப்போ தான் நாளைக்கு என்னால ஆஃபிஸ் போக முடியும்.
அதுனால கதையை நாளைக்கோ இல்ல எனக்கு எப்போ ஃப்ரீ டைம் கிடைக்குதோ அப்ப சொல்லறேன்.
சரியா.
இப்போ நான் போய் தூங்கறேன்.
குட் நைட் ப்ளூ.”

“இதுக்கு எதுக்கு என்ன கூப்பிட்ட?”

“உன்னை காலையிலேந்து நான் பார்க்கலையா அதுதான் கூப்பிட்டு பார்த்தேன்.”

“சரி சரி பார்த்து படியேறி போ தி.”

“ஆங்! ஏய் ப்ளூ! இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே!”

“என்னது?
பார்த்து! பார்த்து! படியில மெதுவா இறங்கி வா தி…
விழுந்துட போற”

“நம்ம பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் இருக்காங்க இல்ல…
அவங்க இன்னைக்கு அங்க வீட்டுல இல்ல.
அவசரமா கிளம்பி எங்கயோ போயிருக்காங்களாம்.
அவங்க வீட்டுல வேலை செய்வானே ஒரு பையன் அவன் தான் சொன்னான்.”

“நீ அவங்கள கடைசியாக எப்ப பார்த்த தி?”

“இன்னைக்கு!
ஓ மணி ஒண்ணா ஆயிடுச்சோ!
அப்படீன்னா நேத்து காலையில் ஆஃபிஸ் போகும் போது பார்த்தது தான் ப்ளூ.
அதுக்கப்புறம் மத்தியானம் நானும் வி யுமா வீட்டுக்கு திரும்பி வந்தோம் இல்லையா அப்போ அவங்க அங்க இருக்கலை.
காலையில அவங்க எதுவுமே சொல்லவுமில்லை!”

“ஆனா அந்த பாட்டி எதுவானாலும் உன்கிட்ட சொல்லுவாங்களே!
இப்படி திடுதிப்புன்னு ஊருக்கு கிளம்பி போயிருக்காங்கன்னா உன்னை ஃபோன் ல பிடிக்க முடியலைன்னாலும் மெஸேஜாவது அனுப்பி இருப்பாங்களே தி!”

“ஆமாம் ப்ளூ…
அதுதான் எனக்கும் காலையிலேந்து ஒரே வருத்தமா இருக்கு.”

“சரி இப்போ… உனக்கு அஞ்சு மணி நேரம் தூக்கம் வேண்டாமா தி?”

“ஊப்ஸ்…
சரி சரி மீதியை அப்பறமா யோசிச்சுப்போம்.
குட் நைட் ப்ளூ”

“குட் நைட் குட் நைட் போ போ போய் தூங்கு தி”

என்று ப்ளூ சொல்லி முடிப்பதற்குள் சக்தி அவள் அறையினுள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். பின் உடையை மாற்றிவிட்டு படுத்துறங்கலானாள்.

மறுநாள் காலை சரியாக ஆறு மணியளவில் வழக்கம் போல ப்ளூ சக்தியை எழுப்பி விட அவள் அறைக்குள் வந்தது. ஆனால் சக்தி படுக்கையில் இருக்கவில்லை. அவளின் படுக்கையும் அழகாக விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ப்ளூ தனக்குத் தானே

“என்ன இது உலகமகா அதிசயமா இருக்கே!
இந்த தி நான் எழுப்புறதுக்கு முன்னாடியே இப்ப எல்லாம் எழுந்துக்கறாளே!
தி…தி…தி…
குளிச்சிட்டிருக்கியா?”

“ஆமாம் ப்ளூ.
நீ போ நான் ரெடியானதும் கீழே வரேன்.”

“ஓகே. வா வா.”

ஆஃபீஸுக்கு கிளம்பி கீழே வந்த சக்தியை மேலிருந்து கால் வரைப் பார்த்த ப்ளூ

“தி என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே கிளம்பிட்ட?”

“நான் தான் நேத்து நைட்டே சொன்னேனே ப்ளூ.
இன்னைக்கு நிறைய வேலையிருக்குன்னு…
அதுதான் கிளம்பிட்டேன்.”

“சரி…உன் காபி இந்தா.”

“இல்ல ப்ளூ.
எனக்கு நேரமாயிடுச்சு.
நான் இப்ப வசுந்தரா வீட்டுக்கு தான் போறேன்.
அங்கேயே காபி டிபன் எல்லாம் சாப்பிட்டுக்கறேன்.
நீ உன் வேலைகளை முடிச்சுட்டு பேஸ்மென்ட்டுக்கு போயிடு.
ஏன்னா நான் வியோட இங்க வந்தாலும் வருவேன்.”

“அப்படீன்னா இன்னைக்கும் எனக்கு பேஸ்மென்ட் தானா!!
இப்பவே எல்லாம் போக மாட்டேன்.
உன் கார் சத்தம் கேட்டதுக்கப்புறமா வேணும்னா போறேன்.”

“என்னமோ பண்ணு.
நான் போயிட்டு வரேன் ப்ளூ.
பை”

“பை தி.”

என்று ப்ளூவிடமிருந்து விடைப் பெற்று வெளியே வந்து வீட்டின் கதவை பூட்டிய சக்தியின் கண்கள் பக்கத்து வீட்டுப் பாட்டியை தேடியது. அப்போது அவளது கைப்பேசி அதிர்வுற்றதில் கிடுகிடுவென கதவைப் பூட்டிவிட்டு கைப் பேசியை அழுத்தி

“குட் மார்னிங் வி.”

“ம்…குட் மார்னிங். குட் மார்னிங்”

“நாங்க உன் தோழி வசுந்தரா வீட்டுக்கு கிளம்பிட்டோம்.
நீ உன் வீட்டிலிருந்து புறப்பட்டாச்சா?”

“ஆங்! ஆங்! புறப்பட்டாச்சு புறப்பட்டாச்சு!
சரி அது என்ன நாங்க?”

“ம்…நானும் என் நண்பனும் தான்.
எனக்கு நேத்து நைட்டு ரூம் தந்த புண்ணியவான்”

“ம்…ஓகே ஓகே.
நான் கால் ஐ கட் பண்ணிட்டு காரை ஸ்டார்ட் பண்ணட்டுமா?
இல்ல இப்படியே உன் கூட பேசிட்டே இருக்கட்டுமா?”

“சரி சரி சீக்கிரமா வந்து சேருமா.
நான் வச்சுடறேன்”

என்று கூறி விஷால் ஃபோனை வச்சதும் வீட்டிலிருந்து புறப்பட்ட சக்தி நேராக வசுந்தரா வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டினாள். அவள் காரிலிருந்து இறங்கிய போது அவளருகில் சர்ரென இரு கார்கள் வந்து நின்றது. சக்தி திரும்பிப் பார்த்தாள். அதிலிருந்து இறங்கினர் விஷாலும் ஜேம்ஸும்.
அவர்களைப் பார்த்ததும் சக்தி

“குட் மார்னிங் ஜேம்ஸ்.”

“குட் மார்னிங் சக்தி.”

“ஓ நீங்க தான் வி க்கு ரூம் குடுத்த வள்ளலோ”

“ஆமாம் என்ன பண்ண? ராத்திரி வந்து பாவமா வீட்டு வாசல்ல நின்னவனை வேற என்ன பண்ணுவேன் சொல்லுங்க”

“ரோல்ஸ் ராய்ஸ் வச்சிருக்கறவனுக்கு ஒரு ஹோட்டல்ல ரூம் போட முடியலையாக்கும்!”

“அதுதானே! அதை சொல்லுங்க சக்தி”

“அடேய் ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஹோட்டலா ரூம் கேட்டு ஏறி இறங்க முடியுமா?
அதைவிட பெஸ்ட் என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறது தானே!
இதை எல்லாம் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னவங்க எல்லாம் பேச வேண்டாம்ன்னு சொல்லு ஜேம்ஸ்”

“அச்சச்சோ! உங்க சண்டைக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு இப்போ நாம வசுந்தரா வீட்டுக்குள்ள போகலாமா?
இதை முடிச்சுட்டு நான் பாரிஸ் வேற போகணும்”

“சாரி ஜேம்ஸ்.
வாங்க போகலாம்.”

“ம்…நீங்க ஃபர்ஸ்ட் போங்க சக்தி.
நாங்க ரெண்டு பேரும் உங்களை ஃபாலோ பண்ணி வறோம்”

“ம்…ஷுவர். வாங்க வாங்க.
வசு…வசு…”

“ஹலோ மேடம்! கொஞ்சம் நல்லா பாருங்க”

“அட ஆமாம்! என்ன வீடு பூட்டியிருக்கு?”

“உங்க கிட்ட ஏதாவது உங்க பிரெண்ட் சொன்னாங்களா சக்தி?”

“இல்லையே! ஒரு வேளை அவ அப்பா அம்மா பொண்ணு மூணு பேரும் எங்கயாவது வெளிய பேயிருப்பாங்கன்னு நினைக்கறேன்.”

“நாம பார்க்க வந்தது உன் தோழி வசுந்தராவ தானே!”

“ஆமா வி. ஆனா வசு க்ளினிக்கை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாளே!! ஜேம்ஸ் நாம அவ க்ளினிக் போய் பார்ப்போமா?”

“ம்..சரி அவங்க க்ளினிக் எங்க இருக்கு?”

“நான் லொக்கேஷன் ஷேர் பண்ணியிருக்கேன் பாருங்க.
நீங்க ரெண்டு பேரும் அங்க வந்துடுங்க.
நானும் அங்க வந்துடறேன்”

“சரி கொஞ்சம் சீக்கிரமா போகலாமா?”

“ம்…இதோ நான் கிளம்பிட்டேன்”

என்று மூவருமாக அவரவர் காரில் வசுந்தராவின் க்ளினிக் சென்றனர். அங்கே சென்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வசுந்தரா முன்தினம் மாலை டியூட்டி முடிந்து ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்ற செய்தி தான் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த ஒரு நர்ஸ் நைட் ட்யூட்டி முடித்து விட்டு பரபரப்பாக வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டே ஜேம்ஸைப் பார்த்தாள். அவள் கண்கள் ஜேம்ஸிடம் ஏதோ சொல்ல துடித்ததை உணர்ந்த ஜேம்ஸ் மெல்ல சக்தி விஷாலை அங்கேயே இருக்க சொல்லி விட்டு அந்த நர்ஸை பின் தொடர்ந்து சென்றான். அவள் லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள். ஜேம்ஸும் அதே லிஃப்ட்டிற்குள் நுழைய ஓடிச் சென்றான் ஆனால் லிஃப்ட்டின் கதவுகள் மூடியதால் அவன் அந்த நர்ஸ் ஏறிய லிஃப்ட் எங்கே செல்கிறதென்று நின்று பார்த்தான். அது அந்த கட்டிடத்தின் கூரை தளத்திற்கு சென்றது.

பக்கத்து லிஃப்ட்டை எடுத்தால் ஜேம்ஸ் அந்த நர்ஸை தவரவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் …ஏனெனில் ஒரு வேளை அவள் அவனை ஏமாற்ற அங்கு சென்று விட்டு மீண்டும் கீழே ஏதாவது தளத்தில் இறங்கினால்! என்று யோசிக்க சில வினாடிகளே எடுத்த ஜேம்ஸ் படிகளில் ஏறிச் சென்றான். அப்படி ஏறுவதால் அவள் இடையில் எந்த தளத்தில் இறங்கினாலும் அவனிடம் அகப்படுவாள்.

ஜேம்ஸ் வேக வேகமாக படிகளில் ஏறிச் சென்றான். ஆனால் மேலே கூரை தளத்திற்கு சென்ற லிஃப்ட் கீழே வரவேயில்லை. அவனும் கூரை தளத்தை சென்றடைந்தான். அங்கே பீப் பீப் பீப் என்ற ஒலியுடன் லிஃப்ட் மூடாமல் திறந்திருந்தது. யாரோ ஒருவரின் கால்கள் லிஃப்ட்டின் கதவுகளை மூடவிடாது குறுக்கே தடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜேம்ஸ் வேகமாக லிஃப்ட் அருகே சென்று பார்த்தான். அவன் யாரைத் தேடி வந்தானோ அந்த நர்ஸ் தான் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்திருந்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் உடனே சக்தியை கைபேசியில் அழைத்து டாக்டர்களுடன் வேகமாக கூரை தளத்திற்கு வருமாறு கூறினான்.

ஜேம்ஸின் பேச்சில் இருந்த படபடப்பு ஏதோ ஆபத்தான விஷயம் நடந்துள்ளது என்பதை சக்திக்கு உணர்த்தியது. உடனே அவள் அங்கிருந்த வரப்வேற்பாளரிடம் சென்று அவசரம் என்று கூறி இரண்டு டாக்டர்கள் மற்றும் இரண்டு நர்ஸுகளுடன் லிஃப்ட்டை நோக்கிச் சென்றாள். அப்போது விஷால் அவளிடம்

“ஏய் தி…தி…தி…எங்க போற?
ஜேம்ஸ் எங்க”

என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னால் செல்ல அவனும் அவர்களுடன் லிஃப்ட்டிற்குள் சென்றான். லிஃப்ட்டின் கதவுகள் மூடியது. சக்தி கூரை தளம் செல்வதற்கான பொத்தானை அழுத்தினாள்.

தொடர்வாள்….

ஆயிரம் பொய்கள் சொல்ல
ஆயிரம் ஜென்மங்கள் வேண்டாம்
நமது வாழ்நாளே போதுமானது!

பொய்களில் உண்டு இருவகை
அதற்கான விதைகளோ பல வகை

தீமை இழைக்கும் பொய்
நன்மை பயக்கும் பொய்

தீமை இழைக்கும் பொய்களின் விதைகள் சுயநலம், பொறாமை, பேராசை, ஆணவம், அதிகாரம், தற்பெருமை, சோம்பல், புறம்பேசுதல், பாரபட்சம், வாக்குவாதம்…

நன்மை பயக்கும் பொய்களின் விதைகள் அன்பு, பாசம், ஒற்றுமை, பிறரை வாழ வைப்பது, சக மனிதர்களின் மகிழ்ச்சி, குடும்ப நலன்…

தீமை இழைக்கும் பொய் முடிவில்லாதது
நன்மை பயக்கும் பொய் சுபத்தில் முடிவது

தீமை இழைக்க சொன்ன பொய் நன்மையிலும்
நன்மை பயக்க சொன்ன பொய் தீமையிலும்
சிலநேரங்களில் நிலையெதிர் மாறாக மாறுவதும் உண்டு
மனம் துவண்டு போக வேண்டாம் அதை கண்டு

பொதுவான பொய் சொல்வதும் தவறு
பொதுவாக பொய் சொல்வதும் தவறு

ஆயிரம் ஆயிரம் பொய்களப்பா
அதை சற்று ஆராய்ந்து நல்லவைகளுக்காக சொன்னால் நல்லதப்பா

நன்றி🙏
நா. பார்வதி

சக்தி மற்றும் விஷாலை சந்திக்க வந்த ஜேம்ஸ் அவர்களிடம் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று சக்தி அந்த ஹைவேயில் போனதுக்கான எந்த ஒரு தடயமும் சிசிடிவியில் இல்லை என்று கூறியதைக் கேட்டதும் இருவரும் பிம்மித்துப் போயினர்‌. உடனே விஷால் ஜேம்ஸிடம்…

“ஏய் ஜேம்ஸ்! என்ன சொல்லுறடா?”

“அட ஆமாம் வி”

“நல்லா பார்த்தாயா?”

“நான் நல்லா எல்லா கேமராக்களையும் செக் பண்ணிட்டேன் டா.”

“அது எப்படி தி அந்த ரோட்டுல போனது மட்டும் இல்லாம போகும்?”

“அதுனால தான் அவங்க கிட்ட போனீங்களான்னு கேட்டேன்.”

“அஃப்கோர்ஸ் நான் அந்த ஹைவேல தான் டிராவல் பண்ணினேன்.
அது எப்படி கேமராவில் பதிவாகம இருக்கும்?”

“பதிவாகலையே சக்தி.
நீங்க போனது பதிவாகியிருந்தா ஏதாவது ஒரு க்ளூவாவது கிடைச்சிருக்கும்.
ஆனா உங்க கார் அந்த ரோட்டுல போனதாவே எங்கேயும் பதிவாகலையே!
அந்த விஷுவல்ஸை எல்லாம் பார்த்தது வேந்து…
நான் எதை வச்சு இந்த இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணறதுன்னு யோசிச்சிக்கிட்டே தான் இருக்கேன்.”

“இதுக்கு வேற வழியே இல்லையா ஜேம்ஸ்?”

“வழியெல்லாம் இல்லாம இருக்காது விஷால்.
உண்மையாவே சக்தி அன்னைக்கு அந்த ரோட்டுல டிராவல் பண்ணியிருந்து… அது சிசிடிவி எதுலேயுமே பதிவாகலைன்னா இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிசா இருக்குன்னு எனக்கு தோனுது.”

“என்ன ஜேம்ஸ்? பண்ணியிருந்துன்னு இழுக்கறீங்க?
நான் டிராவல் பண்ணினேன்.”

“எக்ஸ்க்யூஸ்மி சார் அன்ட் மேடம்.
யுவர் டின்னர்.
மே ஐ சர்வ்?”

“இட்ஸ் ஓகே! நாங்களே சர்வ் பண்ணிக்கறோம்.
தாங்க் யூ.”

“ஓகே மேடம்.
எஞ்சாய் யுவர் டின்னர்.”

“ம்…போதும் போதும் சக்தி.”

“வி…இந்தா உனக்கு.”

“தி போதும்.
அப்பா எவ்வளவு போட்டுட்ட?”

“ம்…நீங்க கன்டினியூ பண்ணுங்க ஜேம்ஸ்”

“எங்க விட்டேன்?
ஆங் அந்த சம்பவத்துக்குப் பின்னாடி ஏதோ பெரிய கைகள் இருக்குன்னும் எடுத்துக்கலாம்.
இதை ஊர்ஜிதம் படுத்திக்க சக்தி நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.”

“ஓ ஷுவர் ஜேம்ஸ்!
என்னால் ஆன எல்லா ஹெல்ப்பும் பண்ணறேன்.
எனக்கும் அன்னைக்கு எனக்கு என்ன நடந்துதுன்னு தெரிஞ்சே ஆகணும்.”

“என்ன தி?
இன்னைக்கு காலேல நாம் டாக்டர்ட்ட போகும் போதும் சரி…
போலீஸ் ஸ்டேஷன் போகும் போதும் சரி…
இதெல்லாம் தேவையான்னு கேட்ட?
இப்ப என்னடான்னா தெரிஞ்சே ஆகணும்ன்னு சொல்லற?”

“பின்ன நான் போகவேயில்லைன்னு சொன்னா?
அது எப்படி காரை டிரைவ் பண்ணிட்டு போன நான் கேமராவுல பதிவாகலை?
ஒரே மர்மமா வேற இருக்கு?
வசுவோட ரிப்போர்ட்டுலயும்…
ஓ! வி…
நல்ல வேளை ஞாபகம் வந்தது…
எக்ஸ்க்யூஸ்மி கைஸ்.
நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.
நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிட்டிருங்க.”

“எங்க போறீங்க சக்தி?”

“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ஜேம்ஸ்…
வந்து சொல்லறேன்”

“என்னடா இது வந்ததும் நீ பத்து நிமிஷம் போன!
இப்போ இவங்க என்னமோ அவசர அவசரமா எங்கயோ போறாங்க?
என்னடா நடக்குது விஷால்?
இந்த ரெஸ்டாரன்ட் நல்லா தானே இருக்கும்!”

“ஹேய் ஜேம்ஸ்!
அதெல்லாம் நல்லா தான் இருக்கு.
தி க்கு எதோ ஞாபகம் வந்திருக்கு போல்!”

“அப்படின்னா அதை சொல்லாம ஏன் எழுந்து வெளில போகணும்?”

“ஓ!! ஓகே ஓகே!!”

“என்னடா ஓகே?”

“அவ அவளோட பிளட் ரிப்போர்ட்டை எடுக்கப் போயிராக்கான்னு நினைக்கறேன்.”

“பிளட் ரிப்போர்ட்டா?
அது எதுக்கு?”

“ஆக்ச்சுலா…
இந்த விஷயத்தை தி சொன்னதும் நாங்க அவளுக்கு யாராவது ஏதாவது குடுத்திருப்பாங்களோன்னு சந்தேகப்பட்டு…
அவளோட டாக்டர் பிரெண்ட் கிட்ட போயி ஒரு டெஸ்ட் எடுத்தா.
அதைத் தான் எடுத்துண்டு வரப் போயிருக்கான்னு நினைக்கறேன்”

“அதை ஏன் நீங்க மத்தியானம் என்னைப் பார்க்க வந்த போது காமிக்கலை?”

“அப்போ நாங்க மறந்துட்டோம் டா.
வீட்டுக்குப் போனதுக்கப்பறமா தான் ஞாபகம் வந்தது.
இப்பவும் மறந்துட்டோம்.
ஆனா அவளுக்கு ஞாபகம் வந்ததும் எடுக்கப் போயிருக்கா!”

“ம்….டாக்டர் என்னன்னு எழுதிருந்தாங்க?”

“அது வந்து…
ஆங்…இதோ தி யே வந்துட்டா.”

“வாங்க தி.
ரிப்போர்ட் எங்க?
காமிங்க!”

“அது வந்து…
வந்து…”

“என்ன ஆச்சு தி?
ஏன் தயங்கற?
ரிப்போர்ட் எங்க தி?”

“வாங்க சக்தி.
முதல்ல வந்து உட்காருங்க.
இப்போ சொல்லுங்க.
ரிப்போர்ட் எடுக்கவா வெளிய போனீங்க?”

“ம்…ஆமாம் ஜேம்ஸ்”

“சரி ரிப்போர்ட் எங்க?”

“அதை என் கார்ல தான் வச்சிருந்தேன்…”

“ஆமாம். வி சொன்னான்.”

“ஆனா அதை இப்ப எடுத்துண்டு வரலாம்னு போய் பார்த்தேன்…”

“சரி அது எங்க?
ரிப்போர்ட் எடுக்க போயிட்டு வெறும் கையோடு வந்திருக்கீங்க?”

“அந்த ரிப்போர்ட் என் கார்ல இல்ல.
நான் என் கார்ல வச்சிருந்த ரிப்போர்ட்டை காணல!”

“என்ன சொல்லுற தி?
அது எப்படி காணாம போகும்?”

“இரு இரு வி.
சக்தி அதை நீங்க உங்க கார்ல தானே வச்சீங்க?”

“ஆமாம் என் காரோட டாஷ்போர்டுல தான் வச்சிருந்தேன்.
ஆனா அதை இப்போ காணுமே!”

“அதை உங்க காரோட டாஷ்போர்டுல எப்போ வச்சீங்க?”

“ஆக்ச்சுவலி நான் என்னோட ஒரு பையில் தான் வச்சிருந்தேன்.
அதை உங்க கிட்ட கொடுக்க மறந்துட்டு நாங்க வீட்டுக்கு போனதுக்கப்புறமா அதை என் காரோட டாஷ்போர்டுல வச்சேன்.
அட்லீஸ்ட் இந்த மீட்டிலாவது உங்ககிட்ட காட்டணும்னு நினைச்சு வச்சேன்.
ஆனா மறுபடியும் மறந்துப் போயிட்டேன்.”

“உங்க கார்ல வச்சிருந்த ரிப்போர்ட் எப்படி காணாம போகும் சக்தி?”

“அது தானே தி!
அது எப்படி காணாம போயிருக்கும்?
அதுவுமில்லாம நானும் உன் கூடவே தானே மத்தியானத்துலேந்து இருக்கேன்!
நீ எப்ப அந்த ரிப்போர்ட்டை உன் டாஷ்போர்டுல வச்ச?
நான் பார்க்கலையே!”

“நீ கார்லேந்து இறங்கினதும்…
நான் என் பையை பின் சீட்டிலிருந்து எடுத்தேனே!”

“ஆமாம் எடுத்த.
அதைத் தான் எடுத்துண்டு கதவைத் திறக்க வந்துட்டியே!”

“இல்ல பின்னாலிருந்து பேக்கை எடுக்கும் போதே ரிப்போர்ட்டை எடுத்து என்னோடு சைடுல இருக்குற டாஷ்போர்டுல வச்சுட்டு தான் கதவை திறக்க வந்தேன்.”

“ஏன் அதை மாத்தி வச்ச தி?”

“இல்ல வி…
நான் ஈவ்னிங் பேக் மாத்திப்பேன்.
அதுனால எடுக்க மறந்துட்டா என்ன பண்ணறதுன்னு தான் கார்லேயே வச்சேன்.”

“ஓகே ஓகே.
இப்போ உங்க ரிப்போர்ட்டும் காணாம போயிடுச்சு சரி.
அதுல என்ன இருந்துதுன்னு உங்களுக்கு தெரியுமா சக்தி?”

“ஆங்…வசு சொல்லிட்டு தான் என்கிட்ட குடுத்தா.”

“அது யாரு வசு?”

“நான் தான் சொன்னேனே டா…
தி யோட டாக்டர் பிரெண்ட்.
அவங்கள தான் சொல்லுறா”

“ஆமாம் ஜேம்ஸ்.
அவங்க பேரு டாக்டர் வசுந்தரா.
எனக்கு அவங்களை ஒரு இரண்டு வருஷமா தான் தெரியும்.
ஒரு பார்ட்டி ல சந்திச்சோம் அப்படியே பிரெண்ட் ஆகிட்டோம்.”

“ஓ ஓகே. சக்தி நீங்க என்னோட இன்னொரு கேள்விக்கு பதிலே சொல்லலையே!”

“ஆங்!! ஆங்!!
அந்த ரிப்போர்ட் ல என்னோட பிளட்ல செடடிவ் இருந்ததா வசு சொன்னா.
அதுவுமில்லாம அது ஏதோ ஸ்லோ செடடிவ்வாம்.
அதை ஒரு தடவைக்கு மேல் குடுத்திருக்காங்கலாம்.
ஆனா அது எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல ஜேம்ஸ்.
அதுனால எல்லார்கிட்டேயும் என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னா வசு.”

“ரிப்போர்ட் காணாம போனதுக்கு நீங்க டென்ஷன் ஆக வேண்டாம் சக்தி.
நாளைக்கு அந்த டாக்டர் வசு வை சந்திச்சு அவங்க குடுத்த ரிப்போர்ட்டோட காபி ஒண்ணை வாங்கிக்கலாம்.
அது ஒரு பிரச்சினையே இல்லை.
ஆனா…”

“என்ன ஆனான்னு… இழுக்கறீங்க?”

“இல்ல சிசிடிவி ல நீங்க டிராவல் பண்ணிணதுக்கான எவிடன்ஸ் எதுவுமே இல்ல!
இப்போ என்னடான்னா உங்க காருக்குள்ள நீங்க வச்சிருந்த ரிப்போர்ட் காணாம போயிருக்கு!
ரிப்போர்ட் ல உங்களுக்கு செடடிவ் குடுத்திருக்கறதா டாக்டர் சொல்லியிருக்காங்க!
இதெல்லாம் சேர்த்து யோசிச்சுப் பார்த்தா ஏதோ பெரிய தப்பா இருக்கும் போல தெரியுதே!”

“என்ன தப்பா இருக்கும் ஜேம்ஸ்?”

“என்னன்னு என்னால் இப்போ யூகிக்க முடியாது விஷால்.
ம்…சக்தி உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?
உங்க வேலை சம்பந்தமா,
இல்ல நட்பு ரீதியா…
இப்படி ஏதாவது இல்ல யாராவது மேல சந்தேகம் இருக்கா?”

“ம்…ஹும்.
எனக்கு அப்படி யாரையுமே சந்தேகப் படத் தோணலை ஜேம்ஸ்.
நானும் அதை யோசிச்சு யோசிச்சுப் பார்க்கறேன் ஆனா யாருமே என்க்கு எந்தவித கெடுதலும் நெனைக்கறவங்க இல்ல…
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”

“இட்ஸ் ஓகே கூல் கூல் சக்தி”

“உங்களுக்கே தெரியாம உங்களுக்கு செடடிவ் குடுத்து உங்கள யாரோ கடத்திருக்காங்க ஆர் கடத்த முயற்சிப் பண்ணிருக்காங்க.”

“அது யாராக இருக்கும் ஜேம்ஸ்?”

“தெரியலையே விஷால்.
சக்திக்கிட்ட பேசினா ஏதாவது தெரிஞ்சுக்கலாம்னு நெனச்சேன்…
ஆனா அவங்களுக்கு தெரியலை!
ம்…இன்டரெஸ்டிங்!”

“இப்போ என்ன பண்ணறது ஜேம்ஸ்?”

“ம்…நாளைக்கு அந்த டாக்டர் வசுந்தராவ பார்த்து சக்தியோட ரிப்போர்ட்டோட காபியை வாங்கணும்.
ஆங்…சக்தி உங்க ஆஃபிஸுக்கு நாளை நான் வரலாமா?”

“ஓ! தாராளமா வரலாமே!
டைம் மட்டும் சொல்லிடுங்கோ.
நான் எந்த மீட்டிங்கும் இல்லாம ஃப்ரீயா வச்சுக்கறேன்.”

“ஆனா டைம் சொல்ல முடியாதே சக்தி!
ஏன்னா எனக்கு இன்னொரு கேஸ் விஷயமா பாரிஸ் போக வேண்டியிருக்கு…
ஸோ எப்ப வருவேன்னு எல்லாம் சொல்ல முடியாதே!
சரி ஒண்ணு பண்ணுங்க…
நான் வந்தா என்னை உங்க ஆஃபிஸ் உள்ளே விடவும் உங்க சிசிடிவி டிப்பார்ட்மென்டுக்குள்ள விடவும் பர்மிஷன் வாங்கி வச்சுக்கோங்க.
அது போதும்.
நான் எப்ப வந்தாலும் என் வேலையைப் பார்த்துக்க அது உபயோகமா இருக்கும்.
மத்தப்படி நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கலாம்.
நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.”

“அதெல்லாம் இன்னைக்கு நைட்டே ஈமெயில் போட்டு வாங்கிடுவேன்.
நீங்க தாராளமா எங்க ஆஃபிஸுக்குள்ள வரலாம்.
ஆனா நான் நாளைக்கு ஃபுல்லா இருக்குற மீட்டிங்ஸ் எல்லாத்தையும் நாளன்னைக்கு போஸ்ட்போன் பண்ணிக்கறேன்.
போ பிராப்ளம்”

“ஓகே தென் நேரமாயிடுச்சு.
நான் கிளம்பறேன்.
தாங்க்ஸ் ஃபார் தி டின்னர்.
டேக் கேர்.
ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.”

“ஹேய் இரு டா.
நாங்களும் கிளம்ப வேண்டியது தான்.
இதோ பில் பே பண்ணிட்டா ஆச்சு.”

“ம்…என்ன டா ஹெவி டிப்ஸ் வைக்கிற?”

“பாவம் தானே டா!
அதுவுமில்லாம நான் மாஸ்டர்ஸ் படிக்கும் போது படிப்புக்கு இடையில பாக்கெட்மணிக்காக இந்த மாதிரி எல்லாம் வேலைப் பார்த்திருக்கேன்.
அது தான்.”

“சரி சரி. வா போகலாம்”

என்று மூவருமாக கார் பார்க்கிங் வரை ஒன்றாக நடந்து பேசிக்கொண்டே வந்தனர். அப்போது விஷால் சக்தி காரில் ஏறப்போனதைப் பார்த்த ஜேம்ஸ்

“ஏன்டா விஷால் நீ இன்னுமா கார் வாங்கலை?”

“அடேய்! இதோ நிக்குது பாரு என் கார்.”

“அடேங்கப்பா ரோல்ஸ் ராய்ஸ் காரா!
ஏய் நிஜமாவே இது உன்னோடது தானா?”

“இங்க பாரு என் கார் கீ.
இரு ஓபன் பண்ணிக் காட்டுறேன் அப்புறமா நீ நம்பு.”

என்று தனது காரைத் திறக்க முயன்ற போது அவனால் காரை திறக்க முடியாது போனது. அதைப் பார்த்த ஜேம்ஸ்

“ஹலோ! ஓகே ஓகே!
யாரோடாவது காரை உன்கிட்ட இருக்குற சாவியை வைத்துத் திறக்க முயற்சித்தால் தண்டனை என்ன தெரியுமா?
அதுவும் என்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு இந்த வேலைப் பார்க்குற…ம்….”

“இல்ல இல்ல ஜேம்ஸ் அது வி யோட கார் தான்.
எனக்கு நல்லா தெரியுமே!”

“அப்பாடி! தாயே என்னை காப்பாற்றிவிட்டாய்.”

“அதெல்லாம் இருக்கட்டும் வி.
உங்க கார்‌ ஏன் ஓபன் ஆகமாட்டேங்கறது?”

தொடர்வாள்…

“எப்படி இருக்கேங்கள்?”

“நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்களும் நல்லா இருக்கோம் பா.”

“தி எப்பவுமே உங்க ரெண்டு பேரைப் பத்தி தான் சொல்லிண்டே இருப்பா. யூ போத் ஆர் ரியலி க்ரேட்”

விஷால் சக்தியை தி என்று குறிப்பிட்டதும் மிருதுளாவும் நவீனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் அழைப்பது போலவே விஷாலும் அழைக்கிறானே என்று சந்தோஷப்பட்டனர்.

“பாரிஸில் என்ன பண்ணறேங்கள்?”

“என்னை முதல்ல “ங்கள்” போட்டு கூப்பிடறதை விட்டுடுங்கோ. என்னை விஷால் ஆர் வி ன்னே கூப்பிடலாம்.”

“ஓ! தட்ஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ வி. ஓகே வா?”

“ம்…இது ஓகே அப்பா.”

“என்னது இவ்வளவு நேரமா பெயர் டிஸ்கஷனும் எப்படி கூப்பிட்டுக்கறதுங்கறது தான் போயிண்டிருக்கா?”

“இவளுக்கு எப்பவும் எல்லாத்துலேயுமே விளையாட்டு தான் பா.”

“ஆமாம் மா.
ஆமா!”

“சரி சரி. விஷால் உங்க சொந்த ஊரப் பத்தியும் வேலையைப் பத்தி எல்லாம் தி எங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டா. எங்க பொண்ணு செலக்சன் எதுலயும் என்னிக்குமே தப்பான தில்லை.
அவ எதுக்குமே அவ்வளோ சீக்கிரம் ஒரு டிசிஷன் எடுக்க மாட்டா.
பல முறை யோசிச்சு ஆராய்ஞ்சு அப்புறம் தான் ஒரு முடிவுக்கே வருவா. சின்ன வயசுலேந்தே அவ அப்படி தான். பத்து வயசு குழந்தைக்கு சைக்கிள் வாங்கித் தரேன்னு அப்பா சொன்னா அது உடனே வாங்கி தர தானே சொல்லும் ஆனா ஒரு சைக்கிள் வாங்கறதுக்கு நாங்க அவ கூட எத்தனைக் கடைக்கு ஏறி இறங்கி இருப்போம் தெரியுமா?
எங்க பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னா அவ அந்த முடிவை எடுக்க எவ்வளவு காலம் எடுத்திருப்பா எவ்வளவு யோசிச்சிருப்பான்னு அவ அப்பாவான என்னால் யூகிக்க முடியும். அதனால தான் நாங்க அவளோட விருப்பத்துக்கு எந்த விதமான தடையும் போடலை.”

“ஆமாம் ஆமாம் பா.
அது எனக்கும் நல்லாவே தெரியும்.
எனக்கு ஓகே சொல்லவே அவ மூணு வருஷம் எடுத்தா.
அதுனால நானும் அனுபவிச்சிருக்கேன்.”

“பரவாயில்லையே தியை நல்லாவே புரிஞ்சிண்டிருக்கேங்கள்.
ரொம்ப சந்தோஷம் பா விஷால்.
நாங்க உங்கள்ட்ட எதிர்பார்க்கிறது ஒண்ணே ஒண்ணு தான்.
எக்காரணம் கொண்டும் உங்களால் எங்க பொண்ணு கண்கலங்கி வருத்தப் படக்கூடாது.
அது மாதிரியான சூழல் வந்தாலும் அதை நீங்க தவித்து அவளுக்கு எல்லா நேரத்துலயும் பக்கபலமா இருக்கணும்.
எந்த இடத்துலேயுமே அவளை விட்டுக் கொடுத்துடக் கூடாது.
ஏன்னா….”

“அம்மா ப்ளீஸ் நீ உடனே உன்னோட ஃப்ளாஷ் பேக்குக்கு போயிடாதே மா.”

“போடி! நான் எங்கேயும் போகலை.
என்னை சொல்ல விட மாட்டேங்கற பாரு”

“சரி சொல்லு சொல்லு”

“போ மறந்துட்டேன்.
மொத்தத்துல எங்க தியை நல்லா பார்த்துக்கணும் பா.
அவ்வளவு தான்”

“இதை அப்பவே சொல்லிருக்க வேண்டியது தானே மா”

“ஹேய் தி.
இட்ஸ் ஓகே.
அம்மா அவாளோட எதிர்பார்ப்ப தானே சொன்னா.
அம்மா நீங்க கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை.
நீங்க எப்படி அவளைப் பார்த்துண்டேங்களோ அதே மாதிரி இல்ல அதைவிட ஒரு மடங்கு நல்லாவே பார்த்துப்பேன்.”

“ரொம்ப தாங்ஸ் பா”

“சரி சரி அப்பா அன்ட் அம்மா.
நாங்க இப்போ வியோட பேரன்ட்ஸ்கிட்ட பேசணும்.
அவா கிட்டயும் பேசிட்டு மறுபடியும் வீடியோ கால் பண்ணி உங்களை அவாளுக்கும் அவாளை உங்களுக்கும் இன்ட்ரோ பண்ணி வைக்கறோம் சரியா.
அவா வெயிட் பண்ணிண்டிருப்பா.
நாங்க இந்த கால் கட் பண்ணறோம்.
பை.”

“ஓ சரி மா.
பை தி அன்ட் வி”

“பை அம்மா அன்ட் அப்பா”

“வி எப்படி என் பேரன்ட்ஸ்?
ஜெல்லாயிட்ட போல!”

“லவ்லி பேரன்ட்ஸ் தி.
அவா ரெண்டு பேரும் பேசினதுலேந்து எனக்கு ஒண்ணு நன்னா தெரிஞ்சுண்டேன்.
ரெண்டு பேரும் உன் மேல உயிரையே வச்சிருக்கா.”

“எஸ் வி.
ஐ ஆம் ப்ளெஸ்டு டூ ஹாவ் தெம் ஆஸ் மை பேரன்ட்ஸ்.
சரி சரி உன் பேரன்ட்ஸுக்கு கால் பண்ணு.”

“ம்…இதோ பண்ணிட்டேன்.”

“ஏன் எடுக்க மாட்டேங்கறா?”

“அதுதான் தெரியலை.
இரு இரு இன்னொரு தடவை ட்ரை பண்ணறேன்”

“அவா பிஸியா இருக்காளோ என்னவோ?
கொஞ்சம் நேரம் கழிச்சு பண்ணிப் பாரு வி.”

“இல்ல இல்ல நான் டைம் சொல்லிருக்கேன்.
ஸோ அவா ரெடியா தான் இருப்பா.
ஆனா ஏதாவது இன்டர்நெட் பிராப்ளமா? என்னன்னு தெரியலையே!”

“சரி மொபைல்ல டேட்டா இருக்கும் இல்லையா!
மொபைல்ல கால் பண்ணிப் பாரு”

“ம்…இதோ பண்ணறேன்.
ஆங் ரிங் போறது.”

“ஹலோ விஷால் எப்படி இருக்க?”

“அம்மா என்ன மா வீடியோ கால்ல வரச்சொன்னேனே.
ஏன் வரலை?”

“அதுவா…உன் ரவி சித்தப்பா பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுத்து அது தான் நாங்க எல்லாரும் ஆஸ்பத்திரி வந்திருக்கோம்.
அதனால தான் வீடியோ கால்ல வர மறந்துட்டோம்.”

“ஓ!! ஓ! அப்படியா? எப்படி குருவுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு?”

“அவன் பைக்கை ஒரு கார் காரன் பின்னாடிலேந்து வந்து இடிச்சிருக்கான். குருவுக்கு பேலன்ஸ் போயிருக்கு பைக்கோட சறுக்கிண்டே போயிருக்கான்.”

“வி யாருக்கு என்ன ஆச்சு?”

“ஒரு நிமிஷம் தி”

“அம்மா குரு இப்போ எப்படி இருக்கான்? காயம் ஒண்ணும் ஜாஸ்தி இல்லையே”

“மயக்கமா தான் இருக்கான் டா. உடம்புல ஆறேழு தையல் போட்டுருக்கான்னு ரவி சொன்னான்.
நாங்க இன்னும் குரு வ பாக்கலை. அவனை வார்டுக்கு கொண்டு வந்ததுக்கப்புறமா தான் பார்க்கணும். ஆனா அடி பலமா பட்டுருக்கு போல. பாவம் ரவிக்கும் மங்களத்துக்கும் ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ளி இப்படி ஆஸ்பத்திரில படுத்துண்டிருக்கு. அந்த பகவான் தான் இந்த புள்ளைய சீக்கிரம் குணப்படுத்தணும்னு வேண்டிண்டே இருக்கேன்.
நாம வேற என்ன பண்ண முடியும் சொல்லு…
சரி இடையில பேசினது நம்ம சக்தியா?”

“ம்..ஆமாம் மா. சரி சரி நீங்க அங்க சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்துக்கோங்கோ.
குரு வ டாக்டர்ஸ் பார்த்துப்பா ஆனா இப்போ அவா ரெண்டு பேருக்கு தான் சப்போர்ட் வேணும்.
புரியறதா?”

“ம்…அதுனால தானே டா முக்கியமான கால் இருந்தும் இப்படி இங்க ஓடி வந்திருக்கோம்.”

“சரி சரி நீ சக்தி கிட்ட பேசறயா?
ஃபோனை அவகிட்ட குடுக்கவா?”

“இல்ல இல்ல வேண்டாம் விஷால்.
இப்போ நிலைமை சரியில்லை.
மொதோ மொதோ பேசப்போறோம் அப்ப போயி ஆக்ஸிடென்ட் விஷயத்தோடவா பேசணும்.
அவ இனி எப்ப ஃபிரியா இருப்பான்னு கேட்டு வை.
இன்னொரு நாளைக்கு பேசிக்கறோம்.”

“சரி மா பத்திரமா இருங்கோ.
அங்க எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு.”

“ஓகே டா கண்ணா.
வச்சுடவா.”

“ம்…ஓகே மா. பை.”

“ம்…பை பை. அப்புறமா அப்பாவ பேச சொல்லறேன்.”

“ஓகே ஓகே ஃபோனை வை மா”

“என்ன வி யாருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருக்கு?”

“என்னோட சித்தப்பா பையன் குருவுக்கு.”

“ஹவ் இஸ் ஹீ நவ்?”

“அவன் இன்னும் மயக்கத்துல தான் இருக்கானாம்.
பயப்படும் படி ஒண்ணுமில்லன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காளாம்.”

“ஓ! கடவுளே அந்த பையன காப்பாத்துப்பா.
சரி என்கிட்ட ஃபோன குடுத்திருக்கலாம் இல்லையா!
நானும் அம்மாட்ட ஒரு வார்த்தை விசாரிச்சிருப்பேனே.”

“நான் உன் கிட்ட குடுக்கட்டுமான்னு அம்மாட்ட கேட்டேன்.
ஆனா அம்மா தான் மொதோ மொதோ பேசப் போற விஷயம் ஆக்ஸிடென்ட் பத்தி இருக்க வேண்டாம்னு சொல்லி இன்னொரு நாள் பேசறோம்னு சொல்லிட்டா.”

“ஓ! ஓகே ஓகே.”

“ஹேய் தி உன் பேரன்ட்ஸ் நம்மலோட கான்ஃபரென்ஸ் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா.
நீ அவாளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு சொல்லிடு.”

“ம்…சரி சரி நான் அப்பவே மெஸேஜ் அனுப்பிட்டேன்.
அவாளும் ஓகேன்னு சொல்லிட்டா.”

“சரி இந்த வீட்டுல நீ மட்டும் தனியாக வா இருக்க?”

“ஆமாம். ஏன் கேட்கற?”

“இல்ல உனக்கெல்லாம் இந்த பயம் எல்லாம் இல்லையா?”

“ஹா ஹா ஹா! நான் லாஸ்ட் அஞ்சு வருஷமா தனியா தான் இருக்கேன்.
ஆரம்பத்துல பயமெல்லாம் இருந்தது.
ஆனா வருஷங்கள் போக போக எல்லாம் பழகிடுத்து.
தைரியம் தானா பொறந்துடுத்து.”

“ஹே டைம் எட்டாச்சு தி”

“ஸோ வாட்?”

“நாம ஜேம்ஸை ஒன்பது மணிக்கு லீ கார்னர்ல மீட் பண்ணறோம்னு சொல்லிருக்கோமே!”

“அட ஆமாம். சரி அப்படீன்னா நாம கிளம்புவோமா?”

“ஓ ஷவர்.
ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு தி?”

“அதோ அந்த லெஃப்ட் சைட்ல தான் இருக்கு வி.
நானும் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.”

“ம்…ஓகே.”

“என்ன தி இவ்வளவு சீக்கிரமா ரெடி ஆகி வந்துட்ட?”

“நானென்லாம் அப்படி தான்.
எனக்கு வெறும் அஞ்சு நிமிஷம் போதும்.”

“அப்பாடா அப்படீன்னா நான் குடுத்து வச்ச கணவனாக போறேன்.”

“என்னை போல ஒருத்தி உனக்கு மனைவியா கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் வி.”

“அதைத் தானே மா நானும் சொன்னேன்.
நான் இல்லைன்னா சொன்னேன்”

“சரி சரி வா போகலாம்.”

என்று வீட்டினுளிருந்து வெளியே சென்றதும் கதவை தாழிட்டுக் கொண்டே பக்கத்து வீட்டைப் பார்த்தாள் சக்தி. எப்போதுமே அலங்கார விளக்குகள் பளிச்சிட்டவாறு ஜொலிக்கும் பக்கத்து வீடு அன்று இருள் சூழ்ந்திருந்ததைப் பார்த்ததும் நேராக அவர்கள் வீட்டுக்கு சென்றாள். அதைப் பார்த்த விஷால்

“ஹேய் தி.
அங்க எங்க போற?”

“ஒரு நிமிஷம் வி.
நீ கார்ல உட்காரு.
இதோ வந்துடறேன்.”

என்று கூறிக்கொண்டே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் திண்ணை விளக்கை போட்டு விட்டு காரருகே வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் எப்போதும் அமர்ந்திருக்கும் திண்ணையையே பார்த்துக்கொண்டு காரின் கதவைத் திறந்தாள்

“தி வாம்மா.
நேரமாகுது.
ஜேம்ஸ் நமக்காக காத்துண்டிருப்பான்”

“ஓகே இதோ இதோ வந்துட்டேன்.”

“என்ன உன் பக்கத்து வீட்டுக்கு நீ தான் ஒளி கொடுக்கும் தேவதையா?”

“ம்….அப்படி இல்ல வி.
அவங்க வீடு எப்பவுமே விளக்குகளால் ஜொலிச்சிண்டே இருக்கும்.
இப்போ இருட்டடைஞ்சு பார்க்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு.
அதுதான் போய் வாசல் லைட்டை போட்டுட்டு வந்தேன்.”

“நாம டின்னருக்கு ஜேம்ஸை வரச்சொல்லிட்டு நாமளே லேட்டா போகப் போறோம்.”

“நோ நோ. நாம இன்னும் பத்தே நிமிஷத்துல லீ கார்னர் ரீச் ஆயிடுவோம்.
கவலைப் படாதே வி”

“அட ஆமா! நீ சொன்ன மாதிரியே கரெக்ட் டைமுக்கு வந்துட்டயே!
அதோ என் கார் பக்கத்துலேயே பார்க்கிங் காலியா இருக்கு பாரு அங்கேயே பார்க் பண்ணிடு”

“ஓகே டன்.
கார்லேந்து இறங்கு வி.”

“ஓகே காரை லாக் பண்ணிட்டயா?”

“ம்.‌.ம்…பண்ணியாச்சு.
எதுக்கு என் காரையே பார்க்கற வி?”

“ஒண்ணுமில்லை…நான் உன் காரை பாக்கலை.
நான் என் காரை பார்த்துண்டிருக்கேன்.”

“காலையிலேந்து உன் காரை மிஸ் பண்ணறயோ?”

“அஃப்கோர்ஸ் எஸ் தி!”

“வெல்கம் மேடம் அன்ட் சார்”

“ஹாய் மிஸ்டர் வில்யம்ஸ்”

“தி நாம அங்க உட்காரலாமா?”

“ஓ எஸ்.”

“மிஸ்டர் வில்யம்ஸ் நாங்க எங்க நண்பருக்காக காத்திருக்கணும்.
அவர் வந்ததும் ஆர்டர் கொடுக்கறோம்”

“ஹவ் அபௌட் சம் திங் டு ட்ரிங்க்?”

“ம்…நோ ப்ளீஸ். தாங்க் யூ.”

“ஹேய் வி அதோ பாரு ஜேம்ஸ் சொன்ன டைம்க்கு கரெக்ட்டா வந்துட்டார்.”

“ஹாய் ஜேம்ஸ் வா வா வா.”

“ஹாய் டா.
ஹாய் சக்தி.”

“ஹாய்!”

“ம்…ரெண்டு பேரும் உட்காருங்க.”

என்று ஜேம்ஸ் கூறியதும் மூவருமாக அமர்ந்தனர். பின் அவரவருக்கான உணவை ஆர்டர் செய்தனர். அப்போது விஷால்

“ஒன் மினிட் கைஸ்…
எக்ஸ்க்யூஸ்மி…
நான் ரெஸ்ட் ரூம் வரை போயிட்டு வந்துடறேன்.
நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.”

“ஓகே டா சாப்பாடு வரதுக்கு முன்னாடி வந்துடு.
இல்லாட்டி நம்ம மெஸ் மாதிரி உன்னோட சாப்பாட்டையும் நானே சாப்பிட்டுடுவேன்.”

“சாப்பிட்டுகோ…சாப்பிட்டுக்கோ”

என்று கூறி வெளியே சென்றான் விஷால். அதைப் பார்த்த சக்தி

“என்ன இவன் வெளிய போறான்?”

“ஏன் போகக் கூடாதா சக்தி?”

“இல்ல இல்ல அதுக்கில்ல ஜேம்ஸ்.
ரெஸ்ட் ரூம் அதோ அந்த பக்கம் லெஃப்ட்ல இருக்கு.
ஆனா இவன் அது தெரியாம எங்கயோ போறான்.”

“போயிட்டு அங்க இல்லன்னா திரும்பி வரப்போறான் அவ்வளவு தானே!
இதுக்கு எதுக்கு நீங்க டென்ஷன் ஆகறீங்க?”

“ம்…ம்…அதுவும் சரிதான்.
சரி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“இன்னும் இல்லங்க.
வீட்டுல பொண்ணு தேடும் படலம் நடந்துட்டிருக்கு.
போலீஸ்ன்னாலே எல்லாரும் பொண்ணு குடுக்க மாட்டேங்கறாங்க.”

“ஓ அப்படியா? ஏன்?”

“பயம் தான் வேறென்ன?”

“உங்களுக்குன்னு ஒருத்தி பொறக்காமயா இருப்பா?
உங்களைத் தேடி வருவா பாருங்க.”

“உங்க வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும்.
அது நடக்கும் போது நடக்கட்டும்…சரி உங்க விஷயத்துக்கு வருவோம்”

“என் விஷயமா? அது என்ன?”

“என்னங்க காலையில தானே என்னோட ஆஃபிஸ் வந்து கம்பிளேயிண்ட் கொடுத்தீங்க! இப்போ என்ன விஷயம்னு கேட்கறீங்க?”

“ஓ! அதுவா…
இல்ல அது நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு தானே சொல்லறேன்னு சொன்னீங்க?
அதுனால தான் அது தோணலை.”

“ம்…அதுவும் சரி தான்.”

“சரி என்ன ஆச்சு?
ஏதாவது தெரிஞ்சுதா?
சிசிடிவியை பார்த்தீங்களா?
இதோ வியும் வந்துட்டான்.”

“என்ன ரெண்டு பேரும் மும்மரமா பேசிட்டிருக்கேங்கள்?”

“வி நம்ம ஜேம்ஸ் நாம குடுத்த கம்பிளேயிணட் பத்தி தான் சொல்ல வந்தார்…நீயும் வந்துட்ட.
உட்காரு வி.
ஜேம்ஸ் நீங்க சொல்லுங்க.”

“விஷால் அன்ட் சக்தி நான் சொல்லப் போறத ரெண்டு பேரும் முழுசா கேட்டுட்டு அப்புறமா உங்க கேள்விகளையோ இல்ல சந்தேகங்களையோ கேளுங்க சரியா.”

“என்னடா ரொம்ப பீடிகை எல்லாம் போடற?
சொல்லு டா”

“சக்தி நீங்க அன்னைக்கு உண்மையாவே பாரிஸுக்கு போனீங்களா?”

“ஏன்? ஏன் ஜேம்ஸ் அப்படி ஒரு கேள்வியை கேட்கறீங்க?”

“காரணம் இருக்கு சக்தி. சொல்லுங்க”

“ஆமாம் போனேன்.
உங்க கிட்ட சொன்னா மாதிரி ஆஃபிஸ்லேந்து மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பிப் போனேன்.”

“ஆனா உங்க கார் நீங்க சொன்ன அந்த டைம்ல மெட்ஸ் டூ பாரிஸ் ஹைவேல இருக்குற எந்த சிசிடிவி கேமராவுலேயும் பதிவாகலையே!”

தொடர்வாள்…

ஜேம்ஸை சந்தித்து புகார் கொடுத்து விட்டு வெளியே வந்து சக்தியின் காரில் இருவரும் ஏறி சக்தி வீட்டை நோக்கி பயணித்தனர். அப்போது சக்தி விஷாலிடம்

“நல்ல வேளை உங்க பிரெண்டு ஜேம்ஸ் இருந்ததால நமக்கு வேலை சுலபம் ஆயிடுச்சு,
இல்லாட்டி எவ்வளவு அலைக்கழித்து இருப்பாங்களோ!!
என்ன வி ஒண்ணுமே பேசாம வரீங்க”

“ஆமாம் தி அவன் மட்டும் அங்க இல்லன்னா நம்ம வெளிலே வரதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ!!
அதுவுமில்லாம அவன் நமக்காக கொஞ்சம் தீவிரமாக இந்த கேஸை விசாரிச்சு சீக்கிரமே உனக்கு என்ன ஆச்சுங்கறத கண்டுபிடிச்சு தருவான்னு நினைக்கிறேன்.
லெட் அஸ் வெயிட் அன்ட் சீ”

“அவர் பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியறார் நிச்சயமா கண்டுபிடிச்சு சொல்லுவாரு பாரு வி”

“ம்…ம்…”

“இல்லையே நீ ரொம்ப டல்லா இருக்கறா மாதிரி எனக்குத் தெரியுதே!!
ஏன் வி? என்ன ஆச்சு?”

“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பேரன்ட்ஸோட பேசப் போற வீடியோ கால் பத்தி யோசிச்சிட்டு வரேன்.”

“ஓ! மாமனார் மாமியார்ட்ட பேச போறத நினைச்சு பயப்படறயா வி?
கவலைய விடு.
என் பேரன்ட்ஸ் ரொம்ப டீசன்ட் அன்ட் உன் கிட்ட நல்லாவே பேசுவா.
பேசறதுன்னா அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.
அவா கூட பேசினா நீயே தெரிஞ்சுப்ப பாரு.
ஐ ஹோப் உங்க பேரன்ட்ஸும் அப்படி தான்னு நினைக்கிறேன்”

“ம்…ம்…ஆமாம் ஆமாம்”

“வி கம் ஆன்.
எதற்கு டென்ஷன்?
கொஞ்சம் ச்சில் பண்ணு மாப்பி!”

“பாட்டு…. ம்….?
டென்ஷன் எல்லாம் இல்ல தி.
ஆனா ஏதோ ஒரு மாதிரி இருக்கு.
உனக்குள்ள அப்படி ஒரு ஃபீல் இல்ல?”

“இருக்கு…
ஓ! ஓ!”

“என்ன ஆச்சு தி?”

“பார்த்தியா நாம என்னோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை உன் பிரெண்டு ஜேம்ஸ் கிட்ட குடுக்க மறந்துட்டோம்.”

“அட ஆமாம்.”

“என்ன அதை ஏதோ சந்தோஷமா சொல்லறா மாதிரி இருக்கே!”

“இதுல என்ன சந்தோஷம் இருக்கு தி?
ஆமாம் மறந்துட்டோமேன்னு தான் சொன்னேன்.”

“ம்…சரி அதுனால என்ன நாம தான் இன்னைக்கு நைட் அவரோட டின்னர் சாப்பிட போறோமே அப்போ குடுத்துக்கலாம்‌.
என்ன வி?
சரிதானே?”

“ம்…ம்…வெரி கரெக்ட்.
அப்பவே குடுத்துடலாம்.”

“ம்…வீடு வந்துடுச்சு.
காரிலிருந்து இறங்கலாமா.”

“ஓ எஸ் தி”

என்று காரை நிப்பாட்டி விட்டு இருவரும் காரிலிருந்து இறங்கியதும் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் திண்ணையைப் பார்த்தாள். ஆனால் அன்று அவளை பாரத்துப் புன்னகைக்க திருமதி டேவிட் அங்கிருக்கவில்லை. சக்தி பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த விஷால் அவளிடம்

“ஹேய் தி.
அங்க என்ன பார்க்கிற?
இது தானே உன் வீடு?”

“ஆங். ஆமாம் வி.
நான் எப்ப வீட்டை விட்டு கிளம்பினாலும் சரி, வெளியே இருந்து வீட்டுக்கு வந்தாலும் சரி அங்க தெரியுது பாரு அந்த திண்ணையில் உட்கார்ந்துட்டே அழகான புன்னகையோடு எனக்கு விஷ் பண்ணுவாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்.
ஆனா அவங்களை இப்போ காணுமே!”

“அவங்க ஏதாவது வேலையா வீட்டுக்குள்ள இருப்பாங்க தி”

“இல்ல இல்ல வி.”

“என்ன தி இது?
அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் இல்லையா?”

“இல்ல வி.
எனக்கு மார்னிங் அன்ட் ஈவினிங் விஷ் பண்ண அவங்க தவறினதே இல்லை.
இது தான் முதல் தடவையா அவங்க அங்க இல்லை.”

“ஒரு வேளை வெளிய எங்கயாவது போயிருக்கலாம் இல்லையா?”

“இல்ல வி.
அவங்க அப்படியெல்லாம் எங்கேயுமே போக மாட்டாங்க.
எல்லாமே அவங்க வேலைக்காரன் தான் வாங்கிட்டு வருவான்.”

“சரி தி.
இப்போ என்ன பண்ணலாம்ன்னு சொல்லற?”

“ஒரு வேளை அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்குமோ?”

“அப்படி அவங்களுக்கு என்ன வயசாகுது தி?”

“அவங்களுக்கு எழுபத்தைந்து வயதாகுது வி.
ஆனா துரு துரு இருப்பாங்க.
இரு நான் போய் என்னன்னு பார்த்துட்டு ஒரு நொடியில் வந்துடறேன்”

“சரி அதுவரைக்கும் நான் இங்கேயே வாசல்லயே நிக்கட்டுமா?”

“ஊப்ஸ்! சாரி வி.
நீயும் வாயேன்.
அவங்க கிட்ட உன்னை இன்ட்ரோ பண்ணி வைக்கறேன்.”

“என்னன்னு?”

“என்னோட வருங்கால கணவர்ன்னு”

“ம்…என்னமோ பண்ணு.
இரு இரு மெல்லமா போ.”

என்று விஷாலின் கையைப் பிடித்துக் கொண்டு பக்கத்து வீடான மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் வாசலில் நின்று அவர்கள் வீட்டின் அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினாள் சக்தி. அப்போது அந்த வீட்டின் வேலைக்காரனாக அந்த வீட்டோடு இருக்கும் ஜான் கதவைத் திறந்தான். அவனிடம் சக்தி

“ஹாய் ஜான்.
ஹோப் ஆல் இஸ் வெல்!”

“ம்…ஆமாம் ஆல் இஸ் வெல் மிஸ் சக்தி.”

“சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் எங்க?
அவங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கோம்.”

“ஓ! ஓ! அவங்க வீட்டுல இல்லையே!”

“என்னது வீட்டுல இல்லையா?”

“ஆமாம் சக்தி மேடம்.”

“எங்க போயிருக்காங்க?”

“அதைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலை மேடம்.”

“எப்போ திரும்பி வருவாங்க?”

“அதுவும் எனக்குத் தெரியாது மேடம்”

“சரி மிஸ்டர் டேவிட் எங்கே?”

“அவரும் மேடமும் தான் வெளிய போயிருக்காங்க.
பெட்டி எல்லாம் எடுத்துகிட்டு போயிருக்காங்க.”

“ஆனா உங்க கிட்ட ஒண்ணுமே சொல்லலையா?”

“இல்ல இல்ல என்னை இன்னைக்கு வீட்டை ஃபுல்லா சுத்தம் பண்ணிட்டு என்னோட வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க.
அவங்க திரும்பி வந்ததும் கால் பண்ணறதாகவும் அப்போ வந்தா போதும்ன்னும் சொல்லிட்டு தான் போனாங்க. அதுவுமில்லாம எனக்கு இரண்டு மாச சம்பளத்தையும் குடுத்துட்டுப் போயிருக்காங்க.”

“அப்படியா? ம்…சரி
நான் வரேன்.”

என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தார்கள் சக்தியும் விஷாலும்.

“ஏன் சக்தி? உன்கிட்ட அந்த லேடியோட மொபைல் நம்பர் இல்லையா?”

“இல்ல வி.
எனக்கு அவங்க வீட்டு ஃபோன் நம்பர் தான் தெரியும்.
நான் அவங்க மொபைல் நம்பரைக் கேட்டதுமில்லை அவங்க தந்ததுமில்லை.”

“ஓ! ஓ! சரி ஏதாவது எமர்ஜென்சியா இருந்திருக்கலாம்.
அதனால அவசரமா கிளம்பியிருக்கலாம் இல்லையா!”

“இருக்கலாம்…”

“என்ன இழுக்கற தி?”

“இல்ல எனக்கென்னவோ அந்த வேலைக்காரன் ஜான் மேல தான் டவுட்டா இருக்கு வி”

“சரி சரி நான்சி ட்ரூ.
என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தன்னு நினைச்சேன்!”

“உஸ் சாரி சாரி வி.
அவங்க ரொம்ப நல்லவங்க.
எனக்கு பல தருணங்கள்ல ரொம்பவே ஹெல்ப் புல்லா இருந்திருக்காங்க.
அன்னைக்கு நான் வரதுக்கு லேட் ஆனப்போக் கூட என்ன ஏதுன்னு வந்து விசாரிச்சுட்டுப் போனாங்க தெரியுமா”

“சரி மா இதை எல்லாம் உன் வீட்டுக்குள்ள போய் பேசலாமே! இப்படியே இவங்க வீட்டு வாசல்லயே நிக்கணுமா?”

“ஆமாம் ஆமாம். ஒன்ஸ் அகெயின் சாரி வி.”

“இன்னைக்கு தி சாரி சொல்லும் நாளா என்ன?”

“வா வா. உள்ள வா வி. வெல்கம் டூ மை ஹோம்.”

“அப்பாடா வீட்டுக்குள்ள அழைச்சுட்டு வந்தியே.
ரொம்ப சந்தோஷம் மா.”

என்று சக்தியின் வீட்டை சுற்றிப் பார்த்த வி அவளிடம்

“ஹேய் வீடு சூப்பரா இருக்கு.
ரொம்ப சுத்தமா வச்சிருக்கயே!
எப்படி வேலைக்கும் போயிட்டு வீட்டையும் இவ்வளவு சுத்தமா வச்சிருக்க நீ?
வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்கயா என்ன?”

“இல்ல இல்லப்பா…
இங்க வேலைக்கு ஆள் வச்சா எவ்வளவு குடுக்கணும்ன்னு உனக்கு தெரியாதா?
அதுக்கெல்லாம் பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் போல ரொம்பவே பணக்காரர்களாக இருக்கணும்”

“சுத்தி சுத்தி அவங்க கிட்டயே வரியே தி”

“ஓ! ஓ! நான் பக்கத்து வீட்டைப் பத்தி பேசினதுல…
நாம என் பேரன்ட்ஸ் கூட பேச வேண்டியதை மறந்துட்டேனே!
இதோ என் அப்பா அம்மா மெஸேஜ் அனுப்பிருக்கா.
பேசிடலாமா வி?”

“ஓ எஸ் பேசலாம்.”

“இரு இரு நான் நமக்கு காபி போட்டுட்டு வர்றேன்.
அதுக்கப்பறமா கால் பண்ணலாம்.
ஏன்னா அதுக்கப்புறம் உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசணும் இல்லையா”

“உனக்கு காபி போட தெரியுமா?”

“ம்…இந்தா காபி.
குடிச்சிட்டு சொல்லு நல்லா இருக்கான்னு!
இரு கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்துண்டு வந்து கால் கனெக்ட் பண்ணறேன்.”

“ஏய் பாவம் உன் பேரன்ட்ஸ் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க”

“இதோ இதோ வந்துட்டேன்.
ம்…கால் போறது.
என் காபி எப்படி?”

“ம்…சூப்பர்.”

“இந்தா வி…இந்த முறுக்கை அப்பப்போ கடிச்சுக்கோ”

“ஓகே. ஹேய் கால் கனெக்ட் ஆகிடுச்சு பாரு”

“ஹலோ மா. ஹலோ பா.
எப்படி இருக்கேங்கள்?
இதோ வி. சாரி சாரி விஷால்.
விஷால் இவங்க தான் என் அம்மா மிருதுளா அன்ட் அப்பா நவீன்.
இனி நீங்க பேசிக்கோங்கோ நான் போய் இந்த காபி கப்ஸ்ஸை சிங்க்ல போட்டுட்டு வர்றேன்.”

“ஹாய் விஷால்.”

“ஹாய்!”

தொடர்வாள்…

இன்று நம் மத்தியில் சிறு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உபயோகிக்கும் பெரிய வார்த்தை, அதற்காக ஒரு தனி படிப்பு, தனி பிரிவு என்று பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகள் என்று பூதாகரமாக நம் முன் படமெடுத்து ஆடும் அந்த வார்த்தை… வேறொன்றுமில்லை “மன அழுத்தம்” என்பதே ஆகும். இந்த பதிவில் தற்போது குழந்தைகளுக்குள் நிலவும் இந்த சொல்லின் தொல்லைப் பற்றியும், அதன் சில காரணங்கள் பற்றியும், விளைவுகள் பற்றியும் காண்போம்.

என்னடா நம் நாடே இதை பெரிய அளவில் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர் வேறொன்றுமில்லை மன அழுத்தம் தான்னு சாதாரணமாக சொல்லுகிறாரே என்ற எண்ணம் முதல் பத்தியைப் படித்ததும் நிச்சயம் அனைவருக்கும் தோன்றியிருக்கும். அது தாங்க மன அழுத்தத்திற்கான முதல் படி.

அடுத்தவர்களை வைத்து நம்மை நாம் மதிப்பிடுவது நம்மை மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடியதாகும். அந்த காலத்தில் நமது பெற்றோர்களுக்கு இல்லாத மன அழுத்தமா? இல்லை நம் பாட்டி தாத்தாக்களுக்கு இல்லாத மன அழுத்தமா? ஆனால் அதை அப்போது பெரிதாக எவரும் எடுத்துக்கொள்ளவில்லை “குடும்பம்னா நாலும் இருக்கும் பா” “இதெல்லாம் வாழ்க்கையில சகஜம் பா” என்ற மூன்றே வார்த்தைகளில் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு அவரவர் வேலைகளில் மூழ்கிடுவர். அதே போல அன்றைய காலக்கட்டத்தில் பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்ததோடு மகிழ்ச்சியையும் அளித்து வந்துள்ளது. மேலும் பெற்றவர்கள் அவ்வளவாக படிக்காததாலோ என்னவோ அவர்கள் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து மகிழ்ந்தனரே இன்றி அடுத்த வீட்டு பையன் எவ்வளவு எடுத்திருக்கிறான் என்று எண்ணிக் கூட பார்க்காதிருந்தனர்.

ஆரம்ப பள்ளிகளில் மதிப்பெண்கள் வழங்கக் கூடாதென்றும், அது சிறுவயது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அளிக்கும் என்றும் எடுத்துரைத்ததில் ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த கல்வி முறையை மாற்றி அதை எல்லா பள்ளிகளிலும் செயல்படுத்தியும் ஆகிவிட்டது. ஆனால் அதே வயது குழந்தைகள் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் மதிப்பிடப் படுகிறார்கள், மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாது அவர்களுக்கிடையே குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ள குழந்தைகள் யார் யார் என்றும் அவர்களை முன்னால் நிறுத்தி அதை பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் மட்டுமின்றி உலகத்திற்கே பகிர்கிறார்களே! இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்களோ என்னவோ!

மன அழுத்தம் என்பது நமது உடல் ரீதியாக அதாவது உடல் பருமன் காரணமாக அல்லது குடும்ப வம்சாவழி காரணமாக உதித்தால் அதற்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவே மன ரீதியாக உதித்தால் அதை சரி செய்வதென்பது சற்று கடினமானது தான். ஆனால் முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை. எனவே மன ரீதியாக மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்களுக்கு அவர்களே அதற்கான மருந்தும் ஆவர். ஆம் அவர்களே நினைத்தால் தான் அதிலிருந்து வெளிவர முடியும். மன ரீதியாக மன அழுத்தம் ஏன் வருகிறது? என்று சற்றே ஆராய்ந்து பார்த்தோமே என்றால்
அது ஒவ்வொருவரின் ஆசைகள், ஏக்கங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அதனால் எழக்கூடிய பொறாமை, கோபம், சமுதாய நெருக்கடி, சமூக ஊடகங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளின் பிரதிபலிப்பே மன அழுத்தம் ஆகும்.

இப்படி நமக்கு வெளியிலிருந்து நம்மைத் தாக்கி நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அனைத்தையும் நாம் பெரிதாக பொருட்படுத்தாமல் நம்மை விட்டு தள்ளி வைக்கக் கற்றுக்கொண்டு விட்டோமே என்றால் அது அப்படியே அடுத்த நிகழ்வு ஏதாவது நடந்ததும் மறைந்து, மீண்டும் எழுவதற்கு தெம்பில்லாமல் அப்படியே புதைந்து போய்விடும். பின் இதற்காகவா நாம் மன வேதனைக்கு உள்ளானோம் ச்சே! என்று நினைக்க வைக்கும். உதாரணத்திற்கு ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டும் விவரிக்க விரும்புகிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இதுவும் ஒன்று. நாம் நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் அல்லது கலைகளில் சிறந்து விளங்க வேண்டுமென்றெல்லாம் எண்ணுவதில் தவறேதுமில்லை ஆனால் அவர்களை அவர்களின் நண்பர்களோடு அல்லது பெற்றவர்களின் நண்பர்கள் பிள்ளைகளோடு ஒப்பிட்டு, ஏன் அவர் மகன்/மகள் போல என் மகன்/மகள் மதிபெண் எடுக்க மாட்டிங்கிறாள்/ன் அல்லது ஏன் அவர்களைப் போல இந்த துறையில் மிளிர மாட்டிங்கிறான்/ள்? ஆமாம் எப்ப பார்த்தாலும் விளையாடிக் கொண்டேயிருந்தால் எங்கிருந்து முன்னேறுவது என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் உதிக்க ஆரம்பித்து விட்டால் நாமே மன அழுத்தமென்னும் புதைக் குழிக்குள் விழ ஆரம்பித்துவிட்டோமென்று அர்த்தமாகும்.
இவ்வாறு எண்ணும் பெற்றவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே போல பிள்ளைகள் அவர்கள் நண்பர்களின் பெற்றவர்களோடு தங்களின் பெற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் அது பெற்றவர்களுக்கு வேதனையளிக்கும் அல்லவா! பின்பு ஏன் அதே வேதனையை பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் அளிக்க வேண்டும்? இதை செய்வதால் பெற்றவர்கள் பிள்ளைகள் இருவரும் பாதிக்கப் படுகிறார்கள்.

குழந்தைகள் எது செய்தாலும் அவர்களை தட்டிக்குடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களை ஒழுங்குப் படுத்த தவறுகிறார்கள் நவீன உலகப் பெற்றோர்கள். சுவற்றில் கிறிக்கினால் கிறுக்கட்டுமே அவள்/அவன் பெரிய ஓவியராக வரட்டுமே! அதிகப்பிரசங்கித்தனமாக பேசினால்… பேசட்டுமே பெரிய பேச்சாளராக போகிறார்கள்! என்பதெல்லாம் சரிதான் ஆனால் அதே குழந்தைகளுக்கு ஒரு காகிதம் அல்லது புத்தகத்தைக் கொடுத்து அதில் படம் வரையும் படி பொறுமையாக கற்றுக் கொடுத்தால் எந்த குழந்தையும் முதல் இரண்டு முறை கேட்காவிட்டாலும் மூன்று அல்லது நான்காவது முறை நிச்சயம் கேட்கவும் செய்யும், அது படி நடக்கவும் பழகிக்கொள்ளும். பெரிய ஓவியர்களாகவும் ஆவார்கள். அதிகப்பிரசங்கித்தனமாக பேசாதே என்று ஓரிரு முறை பொறுமையாக எடுத்துச் சொல்லிக்கொடுத்தால் அக்குழந்தை அதன் குழந்தைத் தனம் மாறாது வளர ஏதுவாக இருக்கும். குழந்தைகளைக் குற்றம் சொல்வானேன்! அவர்கள் அனைத்தும் அறிந்து கொண்டு பிறப்பதில்லையே! அவர்களை சுற்றியிருக்கும் பெரியவர்களிடமிருந்து தானே அனைத்தும் கற்றுக் கொள்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி பிள்ளைகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவர்களைப் பெற்றவர்கள் அடிக்கக் கூடாது திட்டக்கூடாது என்றெல்லாம் கூட சட்டங்கள் வர ஆரம்பித்தாகிவிட்டது. அப்படி இருந்தால் அது பிள்ளைகளுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் தெரியுமா என்றெல்லாம் முழக்கமிட்டு அமல் படுத்தியவர்கள், அது எந்தவிதத்தில் நன்மை அளித்துள்ளது என்பதைப் பற்றிய விவரங்கள் எங்கே என்று தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். பார்க்கப் போனால் பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதற்கான முக்கிய காரணமாக கூட இந்த மாற்றம் அமைந்துள்ளது எனலாம். ஏனெனில் அவர்களை நெறிப் படுத்த சில நேரங்களில் கண்டிப்பு மிக அவசியமான ஒன்றாக அமைகிறது என்பதை நவீன உலகம் மறக்கடிக்கச் செய்து விட்டது எனலாம்.

அப்படி இருக்கும் மேற்கத்திய நாட்டு குழந்தைகளின் நிலை என்ன என்று சற்று அலசிப் பார்க்க வேண்டியதும் அவசியமாகும். சொல்லப் போனால் அவர்கள் நமது நாட்டின் பாரம்பரிய முறைகள் பிடித்துப் போய் அதைப் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள். ஆனால் நாம்? இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது இதுதானோ! கண்டிப்புடன் வளர்க்கப் பட்ட நமது நாட்டின் எழுபது, என்பது, தொண்ணூறுகளின் குழந்தைகள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அன்றைய பெற்றவர்கள் கண்டிப்புடன் வளர்த்திருந்தாலும் அவர்களின் பிள்ளைகள் எவரும் அவர்களை வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை. ஆனால் இன்றோ பத்து வயது குழந்தை பெற்றவர்களைப் பார்த்தே “ஐ ஹேட் யூ” என்கிறதென்றால்!! எதிர்காலத்தை எண்ணி அஞ்ச வேண்டிய சூழல் உருவாக ஆரம்பித்து விட்டது என்று தான் தோன்றுகிறது.

ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு பாசத்தை வாரி வழங்க வேண்டும். ஆனால் ஆறு வயது முதல் பதினைந்து வயது வரை கண்டிப்புடன் இருந்து அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் ஆசாரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று சாணக்கியர் ஏன் கூறியுள்ளார்? என்று நாம் சற்று சிந்திக்க வேண்டிய நேரமும் காலமும் இதுதான் என்று தோன்றுகிறது.

இதைப் போலவே நமது எதிர்பார்ப்புகளை நமது பிள்ளைகள் மீது நாம் திணிக்க நினைத்தால் அதுவும் இருவருக்குள்ளும் தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும். உன்னிப்பாக கவனித்தோமே என்றால் குழந்தைகளை சுதந்திரமாக சுவற்றில் கிறுக்க விடும் அதே பெற்றவர்கள் தான் தங்கள் குழந்தைகள் மீது தங்களின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை திணிக்கின்றனர். சுதந்திரம் கொடுக்க வேண்டும் ஆனால் அது பதினைந்து வயது வரை அவர்களை நெறிப் படுத்திய பிறகு பதினாறு வயது முதல் கொடுக்க வேண்டும். அதைத் தான் சாணக்கியரும் கூறியுள்ளார். பதினாறு வயதுக்கு பின் பெற்றோர் குழந்தைகளை நண்பர்களாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். சாணக்கியர் கூறியுள்ள மேலாண்மை போதனைகளை பல இடங்களில் கோடிட்டுக் காட்டும் பலர் அவரின் இந்த போதனைகளையும் பெரிதாக கருதி அவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்த முயற்சித்தால் நமது எதிர் கால சந்ததிகளும் அவர்களின் எதிர்காலமும் பிரகாசமாக அமைய வாய்ப்புள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்குள் நிலவி வரும் மன அழுத்தமென்னும் சொல்லை அவர்களே எரேசர் எனப்படும் அழிப்பான் கொண்டு முற்றிலுமாக அழித்தும்விடுவர்.

போதாக்குறைக்கு இரண்டு வருடங்களாக நிலவிக் கொண்டிருக்கும் இந்த பெருந்தொற்றுக் காலம் பிள்ளைகளை பெரிதும் பாதித்துள்ளது எனலாம். அவர்களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை, நண்பர்களுடன் ஓடியாடி விளையாட முடியவில்லை. பாடங்கள் அனைத்தும் கணினி வழியாக நடத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொற்றுக்காலத்துக்கு பின் பள்ளிக்கு வந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றிய விவாதம் ஒன்று காட்சியாக்கப்பட்டிருந்தது. அதில் பிள்ளைகள் ஒரு புறமும், அவர்களின் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறுபுறமும் என்று விறுவிறுப்பாக விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. அதில் பிள்ளைகள் சரமாரியாக கேள்விகளைக் கேட்டனர். பெற்றவர்களும் ஆசிரியர்களும் மென்னு முழுங்கி பதிலளித்தனர். இதில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் செய்த ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது என்னவென்றால் அவர்கள் நிகழ்ச்சியில் முன்னாளில் பங்கெடுத்த ஒரு பெண்ணை வரவழைத்து அவரை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த பெண் முன்பு அதே நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட போது படிக்க வசதியின்றி பள்ளிக்கூடம் போக வழியின்றி இருந்ததை கூறியதாகவும் அதைப் பார்த்து பலர் அந்த பெண்ணுக்கு உதவிப் புரிந்ததையும் எடுத்துக்கூறினர். இறுதியில் அந்த பெண்ணிடம், இப்போது குழந்தைகள் இவ்வளவு பிரச்சினைகளை முன் வைக்கின்றனரே இதற்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அந்த பெண் அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து ஒன்றைக் கூறினார். அனைத்து வசதிகளைப் பெற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் ஆதரவும் கிடைத்தும் இவ்வளவு குறைக் கூறுகிறீர்களே! எந்த வசதியுமின்றி குடும்ப பாரமும் சுமந்து சில நல்லுள்ளங்களின் உதவியால் படித்து இப்போது டாக்டராக இருக்கிறேன். ஆக படிப்பதற்கு எதுவுமே தடையில்லை. படிக்க வேண்டும் என்ற திடமான மனமிருந்தால் போதும் எந்த சூழ்நிலையும் நம்மை பாதிக்காது என்று கூறியதும் என்னை அறியாமல் என்னை கை தட்ட வைத்து சபாஷ் போட வைத்தது. ஆம் பெறியவர்கள் இந்த தொற்றுக் காலத்தை பெரிதாக பேச பேச அதைக் கேட்கும் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுகின்றனர். பெருந்தொற்றுக்காலம் பல இன்னல்களை அனைவருக்கும் அளித்துள்ளது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை தான் ஆனால் அதை ஏன் நாம் குழந்தைகள் முன் பேசி பேசி பெரிதாக்கி அவர்களை பாதிப்படைய செய்ய வேண்டும்? இதுவும் ஒரு வகையான மன அழுத்ததை பிள்ளைகளுக்கு பெரியவர்கள் கொடுப்பதாகும்.

மன அழுத்தம் என்பது இருந்துள்ளது, இருக்கின்றது, இருக்கப் போகிறது. இதில் எந்த வித மாற்றமும் இல்லை. அதை நாம் கையாண்டோம், கையாள்கிறோம், இனி கையாளவும் போகிறோம் என்பதிலும் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் எவ்வாறு கையாளப் போகிறோம் கடந்த காலத்தைப் போலவா அல்லது நிகழ்காலத்தில் அதாவது தற்போது கையாள்கிறோம் என்று கூறி ஏதேதோ செய்து வருகிறோமே அதைப் போலவா இல்லை வேறு ஏதாவது வழியிலா? கடந்த காலத்தை பின்பற்றலாமென்றால் பழையப் பஞ்சாங்கம், பின் தங்கிய சிந்தனை என்றெல்லாம் முத்திரை குத்தப்படும். ஆனால் “ஓல்டு இஸ் கோல்டு” என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

“அவங்களே வைப்பாங்களாம் அவங்களே எடுப்பாங்களாம்” என்ற நகைச்சுவை வசனத்துக்கு ஏற்றார் போல அனாவசியமாக பெரியவர்களே மன அழுத்தம் என்ற வார்த்தையை பிள்ளைகளுக்கு முன் கூறுவார்களாம் பிறகு பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் அதிகமாகி வருகிறது என்று கூறி கூறி அதை பிஞ்சுப் பிள்ளைகள் மனதில் விதைப்பார்களாம். அதன் பின் அதை சரி செய்ய மருத்துவர்களிடம் செல்வார்களாம்!! குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். அவர்களை சிறு வயதிலேயே பெரியவர்கள் போல் நடத்தி அவர்களின் குழந்தைத்தனத்தை தொலைக்கச் செய்திடாதீர்கள். அவர்களே நினைத்தாலும் மீண்டும் அந்த பருவம் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. குழந்தைகளை குழந்தைகளாகவும், நண்பர்களாகவும், பெரியவர்களாகவும் நடத்த அதற்கான காலமும் நேரமும் இருக்கிறது. அது படி பெரியவர்கள் நடந்துக் கொண்டு குழந்தைகளையும் சரிவர நடக்கச்செய்து நமது எதிர்கால சந்ததியினரை நல்வாழ்வு வாழச் செய்திடுவோம். அவர்களின் உலகை சுபீட்சமாக்கிட பெரியவர்கள் ஏன் அதற்கான சரியான புள்ளிகளை சரியான விதத்தில் இணைக்க ஆரம்பிக்கக் கூடாது!

பின் குறிப்பு:- இங்கு கண்டிப்பு என்றால் அடி உதை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை ஏதுமின்றியும் கண்டிப்பை வெளிப்படுத்தலாம். பிள்ளைகளை நெறிப்படுத்தலாம்.

நா. பார்வதி

சக்தியும் விஷாலும் வெகுநேரம் கைபேசியில் பேசிவிட்டு உறங்குவதற்கு பன்னிரெண்டு மணி ஆனதால் மறுநாள் காலை விடிந்தும் சக்தி எழாமல் உறங்கிக்கொண்டே இருந்தாள். ப்ளூ வழக்கம் போல சக்தியின் அருகே வந்து அவளை எழுப்பியது. சக்தியும் வழக்கம் போல டூ மினிட்ஸ் டைம் கேட்டாள். சரியாக இரண்டு நிமிடங்களானதும் ப்ளூ அவளை எழுப்பியது அதற்கு சக்தி

“என்ன ப்ளூ!
இப்படி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க!
நிம்மதியா தூங்க விட மாட்டேங்கறயே!”

“தீ டைம் என்ன ஆச்சு தெரியுமா?”

“என்ன ஆச்சு?”

“மணி இப்போ ஏழாச்சு”

“என்னது ஏழாச்சா!
அய்யயோ ப்ளூ!
ஏன் முன்னாடியே என்ன எழுப்பல?”

“ம்…ஹும்…சொல்ல மாட்ட!
உன்ன ஆறு மணிலேந்து எழுப்பிவிட்டுட்டே இருக்கேன்.
ஆமாம் அது எப்படி உனக்கு தெரியும்!
நீ தான் டூ மினிட்ஸ் டூ மினிட்ஸ்ன்னு ஒரு மணி நேரமா தூங்கறயே!”

“ம்…சரி சரி நகரு நகரு.
நான் போய் சீக்கிரம் ரெடி ஆகணும்.”

“ம்…ம்…போ போ.
இதோ நான் நகர்ந்துக்கிட்டேன்.
இல்லாட்டி அன்னைக்கு மாதிரியே என்னை தள்ளிவிட்டுட்டு போயிடவ.
நான் போய் என் வேலையைப் பார்க்கட்டும்”

என்று சக்தி குளித்து தயாராகிக்கொண்டிருந்த வேலையில் ப்ளூ வீட்டை சுத்தம் செய்து.
அடுப்படியில் சக்தி காபி போடுவதற்கும், ப்ரெட் டோஸ்ட் பண்ணுவதற்கும் எல்லாத்தையும் மேடையில் எடுத்து வைத்தது. சக்தி வந்தாள் காபி போட்டுக்கொண்டு இரண்டு பிரட் துண்டுகளை அப்படியோ எடுத்து உண்ணலானாள். அதைப் பார்த்த ப்ளூ அவளிடம்

“ஏய் தீ.
ஏன் பிரட்ட டோஸ்ட் பண்ணாம அப்படியே சாப்பிடற?”

“அதுக்கெல்லாம் டைம் இல்ல ப்ளூ”

“சொல்லிருந்தா நானாவது டோஸ்ட் பண்ணி வச்சிருப்பேன் இல்ல”

“இட்ஸ் ஓகே ப்ளூ.
ஆங் ப்ளூ இன்னைக்கு ஈவினிங் நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் அழைச்சிட்டு வரப்போறேன்.”

“யாரு தீ அது?”

“நம்ம வி தான் ப்ளூ”

“விஷாலா?
அவர் எதுக்கு இப்போ இங்க வரார்?”

“அது ஒரு பெரிய கதை ப்ளூ.
அது சொல்லறதுக்கெல்லாம் எனக்கு இப்போ டைம் இல்ல.
ஸோ நைட் சொல்லறேன்‌.
இப்போ நான் ஆஃபீஸுக்கு கிளம்பறேன்”

“ஏய் தீ ஏன் எதுக்கு வரார்னு சொல்லிட்டு போ தீ.
நான் ஹால்ல இருக்கலாமா இல்ல சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கணுமா?”

“நீ சார்ஜிங் ஸ்டேஷன்லயே இரு ப்ளூ.
நான் கூப்பிட்டா வந்தா போதும் சரியா”

“அப்போ நான் எப்போ அந்த விஷாலை பார்க்கறது?”

“நான் சொல்லும் போது‌ பார்த்தா போதும்.
சரி சரி எனக்கு டைம் ஆச்சு.
பை பை ப்ளூ”

“ஏய் தீ…தீ…தீ…போயிட்டாளா?
இப்போ எதுக்கு அவன் இங்க வரணும்?
என்னவா இருக்கும்?
பார்ப்போம் வரட்டும்.”

ஆஃபீஸுக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது காரிலிருந்தே சக்தி தன் பெற்றோரிடம் மாலை விஷாலுடன் பேச முடியுமா இல்லை அவர்களுக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்பதை வீடியோ கால் போட்டு கேட்டு அதற்கு அவர்களின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டாள். பின் தன் காரை ஆஃபீஸ் பார்க்கிங்கில் நிப்பாட்டிவிட்டு நேராக மீட்டிங் ரூமிற்குள் சென்றாள்.

பாரிஸிலிருந்து புறப்படுவதற்கு முன் விஷால் தன் பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறி மாலை சக்தியுடன் பேச விருப்பமா என்று கேட்டு அதற்கான சம்மதத்தையும் பெற்று அங்கிருந்தே சக்தி இருக்கும் ஊரான மெட்ஸ் சென்றிட காரில் புறப்பட்டான்.

சக்திக்கு அன்று என்னவோ மீட்டிங் ரொம்ப நேரம் நடப்பதைப் போலவும், நேரம் போகாததுப் போலவும் இருந்ததில் அடிக்கடி தன் கைகடிகாரத்தைப் பார்த்தபடியே மீட்டிங் அட்டென்ட் செய்துக் கொண்டிருந்தவளை கவனித்த அந்த எம்.என்.எம் கம்பெனி காரர் ஒருவர் சக்தியிடம்,

“என்ன தீ?
உங்களுக்கு வேற ஏதாவது முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கா?”

“நோ நோ நாட் அட் ஆல்.
இன்னைக்கு ஸ்லாட் உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கேன்.
ஏன் அப்படி கேட்கறீங்க?”

“இல்ல நீங்க அடிக்கடி டைம் பார்க்கறதால உங்களுக்கு வேற ஏதாவது மீட்டிங்குக்கு நேரமாச்சோன்னு நான் நினைச்சுக்கிட்டேன்.
ஐ ஆம் சாரி.
அப்படியே இருந்தாலும் நோ பிராப்ளம் நீங்க அதை முடிச்சுட்டே வாங்க.
நாங்க வெயிட் பண்ணறோம்.”

“இல்ல இல்ல சாரி.
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.
ப்ளீஸ் கண்டின்யூ.”

என்று கூறி அன்று நடந்த அந்த இரண்டரை மணி நேர மீட்டிங் முடிந்ததும் மீண்டும் கைகடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை என்று காட்டியது இதயவடிவிலான கைகடிகாரம். நேரகா பேன்ட்ரீ சென்று ஒரு டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்று இரண்டு பிஸ்கட்டுடன் அந்த டீயைக் குடித்து முடித்ததும்‌ அவளின் அசிஸ்டன்ட்டாக பணி புரியும் ருத்ரா அவளிடம் வந்து

“ஹாய் தீ.
அடுத்தது நம்ம ரெகுலர் டீம் மீட் பதினோரு மணிக்கு இருக்கு.
உனக்கு ஞாபகப் படுத்த தான் வந்தேன்.”

“ஓகே ருத்ரா.
மெயினா எதைப்பத்தி இந்த மீட்?”

“அது தான் உனக்கு நான் ஈமெயில் அனுப்பிருக்கேனே தீ.
இட்ஸ் பேஸிக்கலி நம்ம புது ரோபோ ஒண்ணை உருவாக்கிக்கிட்டிருக்கோமே அதைப் பத்தின மீட்டிங் தான் தீ.
டீட்டேயில்ஸ் எல்லாம் உன் ஈமெயில்ல இருக்கு.”

“ம்…ஆங்..
எஸ் எஸ்…இருக்கு இருக்கு.
சாரி நான் தான் கவனிக்கலை.
ஓகே இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு.
நான் வந்துடறேன்.
நீ எல்லாரையும் கொஞ்சம் சீக்கிரம் அங்க அஸம்பிள் பண்ண சொல்லு ருத்ரா.”

“ஷுவர் தீ.
நான் எல்லாரையும் இப்பவே போய் இருக்கச் சொல்லிடறேன்.
தீ கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்”

“என்ன ருத்ரா?”

“முந்தாநாள் நீ உன் பிரெண்ட் யாரோ விஷாலைப் பார்க்க போறேன்னு சொல்லிட்டுப் போன!
ஆனா உன் அம்மா எனக்கு ஃபோன் பண்ணி நீ எங்கன்னு கேட்டாங்க.
அப்படி எங்க போயிருந்த தீ?”

“அதெல்லாம் என் பேரன்ட்ஸ் கூட பேசி சார்ட் அவுட் பண்ணியாச்சு ருத்ரா.
மறுபடியும் ஆரம்பத்துலேந்து சொல்ல எனக்கு இப்போ டைம் இல்ல.
ஸோ அப்புறமா ஒரு நாள் உனக்கு நான் விவரமா சொல்லறேன்.
சரியா.
இப்போ நீ போய் எல்லாரையும் நம்ம டீம்மீட்டுக்கு வரச்சொல்லு.
நான் ஒரு பன்னிரண்டரை மணிக்கு வெளில போகணும்.
இன்னைக்கு நான் ஹாஃப் டே லீவ்.
ஸோ எதுவா இருந்தாலும் நாளைக்கு மார்னிங் தான் இனி.
ஓகே.”

“ம்…ஓகே தீ.
நீ சரியா பதினோரு மணிக்கு மீட்டிங் ரூமுக்கு வந்துடு.
நான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கறேன்”

“ம்…ம்…சீக்கிரம் ருத்ரா.
இட்ஸ் ஆல் ரெடி டென் பிஃப்டி ஆச்சு.
கோ கோ.
நானும் உன் பின்னாடியே வரேன் நீ போயிட்டே இரு.”

என்று கூறிக்கொண்டே எழுந்து மீட்டிங் ரூமை நோக்கிச் சென்றாள் சக்தி. ருத்ரா அவளிடம் கூறியது போலவே அனைவரையும் அங்கு வரவைத்திருந்தாள். அனைவருமாக அவரகளின் புதிய ப்ராஜெக்ட் ஒரு ரோபோவைப் பற்றிய தீவிரமான கலந்துரையாடலில் இறங்கினர். சக்தியின் மனம் முழுவதும் விஷாலை இந்த முறை ஏமாற்றமடையச் செய்திடக் கூடாது என்ற ஒரே எண்ணம் தான் ஓடியது. நேரம் கிடுகிடுவென பறந்ததை கவனித்துக் கொண்டேயிருந்த சக்தி மணி பன்னிரெண்டரை ஆனதும் சட்டென்று தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.

“ஓகே! எல்லாருக்கும் நன்றி.
இந்த மீட்டிங் நாளையும் தொடரும்.
இப்போது எல்லாரும் அவங்க அவங்க ஸீட்டுக்கு போகலாம்.”

“மிஸ் தீ.
பிராப்ளம் ஸ் நாட் சிம்பிள்.
நீங்க இதுக்கு ஒரு சல்யூஷன் குடுக்காம மீட்டிங்கை தள்ளி வைக்கறீங்களே!”

“மிஸ்டர் டானி இட்ஸ் ஓகே.
நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன் இல்லையா.
அப்படின்னா நான் பார்த்துப்பேன்.
நீங்க கவலைப் பட வேண்டாம்.
நாளை இதுக்கு ஒரு சல்யூஷனை நான் யோசிச்சு சொல்லறேன்.
நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதாவது வழியை யோசிச்சு வையுங்க.
இட்ஸ் டைம் ஃபார் மீ டூ லீவ்.”

என்று பிரச்சினை என்னவென்று சரியாக அறிந்துக் கொள்ளாததைப் போல தனது டீமை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி ரெஸ்டாரன்ட்டுக்கு தன் காரில் சென்றாள் சக்தி. ஆனால் கார் ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது அவள் மனதிற்குள் அன்று நடந்த கலந்துரையாடலும் அதில் அவர்கள் கூறிய பிரச்சினைகளுமாக இரு அணிகளாக பிரிந்து ஒன்றோடொன்று வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தது. அதன் முடிவு தெரிய வேண்டிய நேரம் வந்ததும் சக்தியின் கார் ரெஸ்டாரன்ட் கார் பார்க்கிங்கில் நின்றது. அதிலிருந்து இறங்கி காரை லாக் செய்தபின் ரெஸ்டாரன்ட்டை நோக்கி நடந்துக் கொண்டே தனது ப்ராஜெக்ட் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துக் கொண்டே ரெஸ்டாரன்ட் கதவைத் திறந்தவளிடம்

“வெல்கம் மிஸ் சக்தி”

என்று புன்னைத்துக் கொண்டே சக்தியை வரவேற்றார் மிஸ்டர் வில்லியம். அவரின் குரல் கேட்டதும் அவளுள் நடந்துக்கொண்டிருந்த வாக்குவாதம் அதற்கான தீர்வைத் தேடும் மனம் என்று எல்லாம் அப்படியே உறைந்துப் போனது. அவளும் முகமலர்ச்சியுடன்

“ஹாய் மிஸ்டர் வில்லியம்.”

என்று கூறினாள். அவளின் கண்கள் விஷாலைத் தேடியது. அதை கவனித்த மிஸ்டர் வில்லியம்

“என்ன மிஸ் சக்தி நீங்க யாரையோ தேடுவது போல தெரியுதே!”

“எஸ் எஸ் மிஸ்டர் வில்லியம்.
அன்னைக்கு வந்தார் இல்லையா விஷால்.
அவரைத் தான் தேடுறேன்.”

“அவர் வந்து பத்து நிமிஷமாச்சு மேடம்.
அதோ அந்த கடைசி டேபிள்ல உட்கார்ந்திருக்கார் பாருங்க.
எக்ஸ்க்யூஸ்மி மேடம்.
அங்க என்னை கூப்பிடறாங்க நான் போயிட்டு வரேன்.”

“ஓ ! ஷுவர் யூ கேரி ஆன்.”

என்று சக்தி கூறியதும் வில்லியம் அங்கிருந்து அவரை அழைத்த டேபிளுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அன்று மத்திய சாப்பாட்டு நேரமென்பதால் அவர் ரெஸ்டாரன்ட்டில் கூட்டமிருந்தது. சக்தி நேராக விஷால் அமர்ந்திருந்த டேபிளை நோக்கிச் சென்றாள். விஷால் மற்ற பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்ததில் சக்தி வருவதை பார்க்கவில்லை. அவன் அவனின் கைபேசியில் ஏதோ டைப் செய்துக் கொண்டிருந்தான். சக்தி அவனருகே சென்றதும்.

“பூம்….ஹாய் வி.
சாரி ஆம் ஐ லேட்”

“நோ நோ.
நீ கரெக்ட்டா ஒன்றரை மணிக்கு தான் வந்திருக்க.
நான் தான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன்.
இன்னைக்கு அவ்வளவா டிராஃப்பிக் இருக்கலையா அதுதான் வந்துட்டேன்.
வா வா உட்காரு தீ.
என்ன சாப்பிடற?”

“ம்…இன்னைக்கு உன்னோட விருப்பம் வி.”

“ஓகே தென் நானே ஆர்டர் பண்ணறேன்”

என்று இருவரும் மத்திய உணவை உண்டுக்
கொண்டே

“தீ அந்த ப்ளட் ரிப்போர்ட் எடுத்துட்டு வந்திருக்க இல்ல…”

“ஆங் கொண்டு வந்திருக்கேன் வி
என் பையில இருக்கு…
ஓ ஓ !”

“என்ன ஆச்சு தீ?”

“ஏதோ ஒரு ஞாபகத்துல என் பையை கார்லயே விட்டுட்டு வந்துட்டேன் வி.”

“வண்டியைப் பூட்டிட்ட தானே!”

“ஆங் ஆங்!! பூட்டிட்டேன்”

“அப்புறமென்ன தீ.
கவலைப் படாதே.”

“சரி சாப்பிடு தீ.
நாம இப்போ சாப்டுட்டு இங்கேந்து நேரா போலீஸ் ஸ்டேஷனக்கு போறோம்.
ஓகே வா?”

“எல்லாம் சரி தான்.
ஆனா போலீஸ் எல்லாம் தேனவையா வி?”

“என்ன பேசுற தீ?
உனக்கு ஒண்ணும் ஆகலை சரி.
சப்போஸ் உன் பேரன்ட்ஸ் சொன்னா மாதிரி ஏதாவது ஆகிருந்தா?
ஸோ போலீஸ் கிட்ட ஒரு கம்பிளையின்ட் கொடுத்து வைக்கறது நல்லதுன்னு எனக்கு தோனுது.
மத்தது உன் விருப்பம்.”

“சரி…போகலாம்.”

“ம்.. சரி உனக்கு வேற ஏதாவது இன்னும் வேணுமா?”

“இல்ல வி”

“ஏதாவது டிஸர்ட் வேண்டாமா?”

“இல்லப்பா.
எனக்கு டம்மி ஃபுல்.
நீ வேணும்னா வாங்கி சாப்பிடு வி”

“இல்ல இல்ல.
எனக்கு வேண்டாம் தீ.
உனக்கும் வேண்டாம்னா…
அப்ப வா.
கிளம்பு தீ.
நாம போலீஸ் ஸ்டேஷன் போவோம்”

என்று சாப்பிட்டதற்கான பில்லை செட்டில் செய்து விட்டு இருவரும் கார் பார்க்கிங் வந்ததும் விஷாலும் சக்திக் காரிலேயே வருவதாக கூறினான். அதற்கு சக்தி

“வி நாம போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அப்படியே என் வீட்டுக்கு போகப்போறோம்.
உன் கார் இங்கேயே அது வரைக்கும் நிக்கலாமா?”

“பரவாயில்ல தீ.
இங்கேயே இருக்கட்டும்.
நாம உங்க வீட்டுக்கு போயிட்டு அதுக்கப்புறமா நான் பாரிஸுக்கு புறப்படும்போது நீ வந்து என்னை இங்கேயே டிராப் பண்ணு.
அதுவுமில்லாம உன் காரை பார்க்கணும்னு போலீஸ் சொல்லுவா.
ஸோ நாம உன் காருலேயே போகலாம்.”

“ஓகே வி”

என்று இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காரை நிப்பாட்டிவிட்டு ஸ்டேஷனுள் சென்றனர். உள்ளே சென்றதும் அங்கிருக்கும் மேலதிகாரியைப் பார்க்க வேண்டுமென்று விஷால் சொன்னதும் அங்கிருந்த இருவர் அவர்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டினர். விஷால் முன்னே சென்று அந்த மேலதிகாரியின் அறைக் கதவைத் தட்டினான். அவன் பின்னாலேயே சென்றாள் சக்தி. உள்ளேயிருந்து ஒரு கனத்தக் குரல்

“ம்..கம் இன்.”

என்றது. உடனே இருவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்த அந்த மேலதிகாரி தன் இருக்கையிலிருந்து எழுந்து நேராக அவர்களிடம் வந்து…

“ஹாய் விஷால்.
எங்க இவ்வளவு தூரம்?
நீ பாரிஸ் ல இல்ல இருக்க!”

“ஹல்லோ ஜேம்ஸ்!
நீ எங்க இங்க?”

“நான் தான்ப்பா இங்க எல்லாமே.”

“ஓ ! நீ காலேஜ் ல சொன்னா மாதிரியே போலீஸ் அதிகாரியாகிட்ட.
க்ரேட் டா.
ஓ சாரி க்ரேட் சார்”

“ஏய் பார்த்தயா.
நீ என்னை டான்னு சொன்னாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன்.
ஓகே…அதெல்லாம் இருக்கட்டும்…
யாரு இந்த பொண்ணு?”

“ஓ! பார்த்தயா உன்ன பார்த்ததுல இன்ட்ரொடியூஸ் பண்ண மறந்துட்டேன்.
ஐ ஆம் சாரி”

“எனக்கெதுக்கு சாரி எல்லாம்.”

“அடேய் இது உனக்கு சொல்லலை என் சக்திக்கு சொன்னது டா”

“ஓ அவங்க பேரு சக்தி யா?”

“ஆமாம் ஜேம்ஸ்.
சக்தி இவன் தான் ஜேம்ஸ்.
என்னோட அன்டர்கிராட் காலேஜ்ல கிரிமினாலஜி படிச்சான்.
அப்பவே போலீஸா தான் ஆவேன்னு சொல்லிட்டிருப்பான்.
அதே மாதிரி போலீஸாகிட்டான்.”

“ஹாய் மிஸ்டர் ஜேம்ஸ்”

” மிஸ்டர் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்.
நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் சக்தி.”

“ஓ! ஷுவர் ஜேம்ஸ்.
ஆமாம் வி நீ படிச்சது…ஆனா இவர் கிரிமினாலஜி…
எப்படி உங்களுக்குள்ள…”

“பிரெண்ட்ஷிப் ஆச்சுன்னு தானே கேட்க வர.
அது நாங்க ரெண்டு பேருமே காலேஜ்ல டென்னிஸ் ப்ளேயர்ஸ்.
அப்படி தான் எங்களுக்குள்ள பிரெண்ட்ஷிப் டெவலப் ஆச்சு.
இப்போ புரிஞ்சுதா தீ?”

“ஆங். புரிஞ்சுது வி”

“தீ…வி…ஆஹா ஆஹா என்னப்பா ஒரு எழுத்துல பெயரை சுருக்கி கூப்பிட்டுக்கிறீங்க?
என்ன லவ் பண்ணறேங்களா?”

“அச்சோ ஜேம்ஸ் அந்த கதையை உனக்கு அப்புறமா சொல்லறேன்.
அது ஒரு பெரிய கதை.”

“ம்…சரி சரி.
காபி எடுத்துக்கோங்க.
இப்போ என்ன இங்க வந்திருக்கீங்க?
எனி பிராப்ளம்?”

“ஆமாம் ஜேம்ஸ்.
நாங்க ஒரு‌ கம்பிளேண்ட் குடுக்க தான் வந்திருக்கோம்.”

“அப்படியா என்ன ஆச்சு?
யார் மேல கம்பிளேண்ட்?”

“என்ன ஆச்சுன்னு தீ சொல்லுவா.
ஆனா யாருன்னு எங்களுக்கே தெரியலை”

“என்ன சொல்லுற விஷால்?”

“ஆமாம் ஜேம்ஸ்.
தீ க்கு நடந்தது எதுக்கு? ஏன்? யாரால? எப்படி? அப்படின்னு எந்த கேள்விகளுக்கும் எங்ககிட்ட பதிலில்லடா.”

“ஓகே சக்தி நீங்க சொல்லுங்க.
என்ன நடந்தது?”

சக்தி ஜேம்ஸிடம் நடந்ததை அப்படியே கூறி முடித்ததும் அதை கேட்ட ஜேம்ஸ்

“ம்…இன்ட்ரஸ்டிங்.
அது எப்படி நீங்க பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல அதே எடுத்துல இருந்தும் போலீஸ் கண்ணுல படல?
அதுக்கு சான்ஸே இல்லையே.
அப்படின்னா நீங்க…
ஐ மீன் உங்க காரும் நீங்களும் அங்க இருக்கலன்னு தான் அர்த்தம்.”

“இல்லையே நான் கண் முழிச்சுப் பார்த்தப்போ அதே இடத்துல…நான் எப்படி டிரைவர் சீட்டுல உட்கார்ந்திருந்தேனோ அப்படியே தானே இருந்தேன்.”

“ம்…ஹும்…ஏன் உங்களையும் உங்க காரையும் எங்கயாவது எடுத்துட்டுப் போயி இல்ல எங்கயாவது தள்ளிட்டுப் போயிருக்கக் கூடாது!”

“இல்ல அப்படின்னா…”

“இருங்க சக்தி. நான் இன்னும் என்னோட யூகத்தை முழுசா சொல்லலையே!”

“ஓ சாரி. யூ கன்டின்யூ.”

“அப்படி போயிட்டு காலையில உங்களுக்கு மயக்கம் தெளியப் போற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி மறுபடியும் அங்கேயே கொண்டு வந்து வச்சிருக்கக் கூடாது?”

“எப்படிடா ஜேம்ஸ் இப்படி எல்லாம் உன்னால யோசிக்க முடியுது?
அப்படியே செஞ்சிருந்தாலும் எதுக்காக செஞ்சாங்க?
யாரு செஞ்சாங்க?”

“அப்படி தான் நடந்திருக்கணும்னு நான் சொல்ல வரல.
ஆனா அப்படி நடந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஏன்னா எங்க போலீஸ் பெட்ரோலிங் அன்ட் டிராஃபிக் போலீஸ் பெட்ரோலிங் இதுலேந்தெல்லாம் ரோட்டோரமா காருக்குள்ள நீங்க மயங்கிக் கிடந்தது தப்பிருக்க வாய்ப்பே இல்லை.
ஏன்னா அவ்வளவு நேரமெல்லாம் ஒரு கார் அப்படி நிக்குதுன்னா உடனே அது எங்க பார்வைக்கு வந்திருக்கும்.
இதுல வேற ஏதோ இருக்கு.”

“ஜேம்ஸ் நானும் தீ யும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”

“ஓ சுப்பர்.
நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி தான்.
எப்போ கல்யாணம்?”

“அதெல்லாம் இன்னும் டிசைட் பண்ணல.
அதுனால நீ கொஞ்சம் இந்த மேட்டரை அன்அஃபிஷியலா டீல் பண்ணி என்ன ஏதுன்னு கண்டுபிடிச்சு சொல்லறயா?”

“இங்க வந்ததுக்கப்புறமா தானே நான் உன் பிரெண்டுன்னு உனக்கு தெரிய வந்துது.
சப்போஸ் இந்த இடத்துல என்ன தவிர வேற யாராவது இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப விஷால்?”

“அவர்கிட்டேயும் இதே போல ரிக்குவஸ்ட் பண்ணிருப்பேன் ஜேம்ஸ்.”

“சரி சரி நான் சும்மா தான கேட்டேன்.
டோன்ட் வரி.
நான் பார்த்துக்கறேன்.
மொதல்ல அந்த ஏரியா சிசிடிவி எல்லாத்தையும் எடுத்துட்டு வரச் சொல்லி பார்க்கறேன்.
அதுக்கு எப்படியும் நாளைக்கு காலையில ஆயிடும்.
அதைப் பார்த்தா விஷயம் தெரிஞ்சுடும்ன்னு நினைக்கறேன்.
பார்ப்போம்.
எதுக்கு நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஒரு பதினொரு மணி போல வாங்க.
என்ன நடந்திருக்கும்னு சொல்லறேன்.
பை தி பை சக்தி உங்க காரோட டீட்டெயில்ஸ் அன்ட் நீங்க எப்போ ஆஃபீஸ்லேந்து கிளம்பினீங்க எங்க வண்டியை நிறுத்தினீங்க அப்படீங்கற எல்லா டீட்டெயில்ஸையும் இந்த பேப்பர்ல எழுதித் தாங்க.”

“ஓகே. ஷுவர் ஜேம்ஸ்.”

என்று ஜேம்ஸ் கேட்ட அனைத்து விவரங்களையும் அவன் கொடுத்த பேப்பரில் எழுதிக்கொடுத்தாள் சக்தி. அதை வாங்கிப் படித்துப் பார்த்த ஜேம்ஸ்

“சூப்பர் சக்தி.
என்னோட இன்வெஸ்டிகேஷன் ஆரம்பமாகிடுச்சு.
நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா போயிட்டு நாளைக்கு வாங்க.
அதுக்குள்ள யாரு என்னங்கற விவரங்களை கலெக்ட் பண்ணி வச்சிருப்பேன்.”

“ஓகே ஜேம்ஸ்.
அப்போ நாங்க கிளம்பறோம் டா.
நாளைக்கு சந்திப்போம்.
ஏற்கனவே உன்னோட அஃபிஷியல் நேரத்துல வந்து ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டோம்.
ஈவ்னிங் மீட் பண்ணலாமா?”

“ஓ ஷுவர் விஷால்.
ஈவ்னிங் ஒரு ஏழு மணிக்கு?”

“இல்ல இல்ல எங்களுக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு.
ஹவ் அபௌட் ஒன்பது மணி?
அட் லீ கார்னர் காஃபி ஷாப்?”

“ஓகே டன்.
அப்போ ஒன்பது மணிக்கு லீ கார்னர் ல மீட் பண்ணுவோம்.”

“பை ஜேம்ஸ்.”

“பை ஜேம்ஸ். நைஸ் மீட்டிங் யூ”

“பை விஷால். பை சக்தி. நைஸ் மீட்டிங் யூடூ.”

தொடர்வாள்….

உலகின் அனைத்து வளர்ச்சிகளிலுமே முதன்மையாக இருக்க முயன்று அதை சாத்தியமாக்கிக் கொண்டு உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க செய்து வரும் அமீரகத்தின் அடுத்த பிரம்மாண்டம் தான் எக்ஸ்போ 2020. அப்படி என்றால் என்ன? எதற்காக இந்த ஏற்பாடு? இதில் என்ன இருக்கிறது? போன்ற கேள்விகளின் பதிலாக எனது பார்வை வழியாக உங்களை அழைத்து சென்று நீங்களும் அறிந்துக் கொள்ளவே இந்த பதிவு.

கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தில் பல நாடுகளில் உள்ள மனிதர்களின் பல கண்டுபிடிப்புகள், சாதனைகள், திறமைகள் ஆகியவற்றின் வரலாற்று பொக்கிஷமாகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பல அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதுமைகளின் மாதிரியாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட மக்கள் ஓரிடத்தில் அவரவர் நாடுகளின் கலை, கலாச்சாரம், புவியியல் ஆகியவற்றை பறைசாற்றும் வகையிலும், அதை அனைவரும் கண்டு களிக்கவும், அறிந்து கொள்ளவுமே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்

உலக நாடுகளின்
வரலாற்றை புரட்டி
எதிர்காலத்திற்கு வண்ணம் தீட்டி
நிகழ்காலத்தில் நமது கண்களுக்கு காட்சியாக்கி தந்துள்ளனர்!

என்று கூறுவது மிகையாகாது. இந்த நிகழ்வை பல நாடுகள் நன்றாக உபயோகித்துக் கொண்டு தங்கள் நாட்டின் அருமை பெருமைகளையும், எப்படி இருந்த நாங்க இப்போ எப்படி இருக்கோம் என்றும், இனி எப்படி இருக்கப் போகிறோம் பாருங்க என்றும் பல வகையான தொழில்நுட்பங்களால் நம்மை சபாஷ் போட வைத்துள்ளனர்.

எக்ஸ்போ 2020 என்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வு துபாயின் தெற்கு மாவட்டத்தில் 4.38 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
எதிர்கால சந்ததியினரும் அனைத்து இயற்கை வளங்களையும் அனுபவிக்க வேண்டி நிகழ்காலத்து மக்கள் எவ்வாறு அவற்றை உபயோகிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக பேண்தகுநிலை (sustainability),
அறிவு, சிந்தனை,எண்ணங்கள் ஆகியவற்றின் நகர் திறன் (mobility) மற்றும் நமது ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலும் ஏதாவது ஒரு வகையான சிற்றலை விளைவை உருவாக்கக் கூடியது தான். அது போல கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறப்பு உண்டாக்கும் வகையில் வாய்ப்பு (opportunity) என மூன்று காட்சிக் கூடங்களின்(pavillions) கீழ் 192 நாடுகள் பங்கெடுத்துக் கொண்டுள்ளன.

இந்த நிகழ்வு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி துவங்கியது. இது மார்ச் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி வரை நடக்கவுள்ளது. வார நாட்களில் காலை பத்து மணி முதல் நள்ளிரவு வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களில் காலை பத்து மணி முதல் விடியற்காலை இரண்டு மணி வரை மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் நுழைவு சீட்டு ஜூலை மாதம் 2021 முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது. single entry tickets எனப்படும் ஒரு முறை நுழைவு சீட்டு, six months pass எனப்படும் ஆறு மாதத்திற்கான பாஸ், monthly pass ஒரு மாதத்திற்கான பாஸ் என பலவகையான நுழைவு சீட்டுகள் உள்ளன. இங்கு சீனியர் சிடிசன்ஸ், மாணவர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம். உள்ளே நுழைய அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

வேலை நிமித்தம் வார நாட்களில் எங்களால் சென்று பார்க்க முடியாது. ஆகையால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே நாங்கள் சென்று வர முடியும் என்பதாலும் ஓரிரு நாட்களில் அல்லது ஒரிரு மாத காலத்தில் 192 பெவிலியன்களையும் கண்டிட முடியாது என்பதாலும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று பார்த்து வரும்படியான ஆறு மாத கால பாஸ் வாங்கி வைத்துக் கொண்டோம். ஒரு நாள் கட்டணம் திர்ஹாம் 45, ஒரு மாத பாஸ் திர்ஹாம் 95, ஆறு மாத பாஸ் திர்ஹாம் 495 ஆக இருந்தது. தற்போது எக்ஸ்போ முடியும் தருவாயில் உள்ளதால் திர்ஹாம் 50 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிகழ்வு நடக்கும் இடத்தை சென்றடைய பல்வேறு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. டாக்ஸிகள், மெட்ரோ, துபாயின் அனைத்து இடங்களில் இருந்தும் இலவச ஏசி பஸ் வசதி ஆகியவை மக்கள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவரவர் வாகனங்களில் சென்றாலும் அதற்கான பார்க்கிங் வசதியும் மிக அருமையாக நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் பார்க்கிங்கிலிருந்து எக்ஸ்போ நுழைவாயில் சென்றிடவும் இலவச ஏசி பஸ் வசதி உள்ளது. ஆகையால் நாம் நமது காரில் சென்று அதை பார்க்கிங்கில் எங்கு நிப்பாட்டினாலும் நாம் நுழைவாயில் வரை நடக்க வேண்டுமே என்ற கவலை வேண்டாம் ஏனெனில் பார்க்கிங்கில் ஆங்காங்கே பஸ் ஸ்டாப் எனப்படும் பஸ் நிற்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நொடிக்கு ஒரு பஸ் என வந்துக் கொண்டேயிருக்கும். அதில் ஏதாவது ஒன்றில் ஏறி அமர்ந்தால் ஐந்தே நிமிடத்தில் எக்ஸ்போ நுழைவாயிலில் இருந்து ஒரு ஐம்பதடி முன் நம்மை கொண்டு இறக்கிவிடும்.

நேரடியாக நிகழ்விற்கு சென்று நான் கண்ட காட்சிகளையும், அறிந்து கொண்ட விவரங்களையும் எனது புரிதல் மூலம் உங்களுக்கு பகிர்ந்துக் கொள்ளும் ஆவலில் இந்த தொகுப்பை பதிவிட்டுள்ளேன். துபாயில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 க்குள் நுழைவோம் வாருங்கள்.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர் எளிதாக ஏறி இறங்கி பார்ப்பதற்கான வசதி அனைத்து பஸ்களிலும், அரங்குகளிலும் (Pavillions)அமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங், பஸ் நிலையம் முதல் நுழைவாயில் வரை அனைத்து இடங்களிலும் பல சானிட்டைசர் ஸ்டான்டுகள் பொருத்தப் பட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் பி.சி.ஆர் நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே உள் நுழைய அனுமதி கிடைக்கும். முக கவசம் இல்லை என்றால் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

நாங்கள் முதலில் சஸ்டைநபிலிடி பெவிலியன் செல்லவேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான கார் பார்க்கிங்கிற்குள் நுழைந்தால் அங்கு குறந்தது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் கார்கள் நிற்கூடிய அளவு கடல் போல் விரிந்திருந்தது கார் பார்க்கிங். அதில் காரைப் பார்க் செய்வது கடினமல்ல ஆனால் மீண்டும் நமது காரை எப்படி அடையாளம் கண்டுக் கொள்வது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே காரை பார்க் செய்துவிட்டு ஒரு ஐந்தடி நடந்து பஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கே ஒரு உயரமான அந்த பஸ் ஸ்டாப்பின் எண் எழுதப்பட்ட பலகை இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே சென்ற எங்களிடம் அங்கு நின்றுக் கொண்டிருந்த உதவியாளர் அந்த பலகையில் இருக்கும் பார்கோடை எங்கள் மொபைலில் ஸ்கேன் செய்துக் கொள்ளும் படி கூறினார். ஏன்? எதற்காக? என்று கேட்டோம் அதற்கு அவர் “உங்க காரை எங்க பார்க் பண்ணிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? நீங்களே கண்டு பிடிச்சுப்பீங்களா?” னு கேட்டார். உடனே நான் “அதைப் பற்றி தான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பார்கோடை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டால் எங்கள் கார் நிற்கும் இடத்தை காட்டுமா?” என்று கேட்க அதற்கு அந்த உதவியாளர் “உங்கள் கார் நிற்கும் இடத்தை இது காட்டாது ஆனால் நீங்கள் இந்த பஸ் நிலையத்திலிருந்து ஏறியுள்ளீர்கள் என்பதைக் காட்டும். ஆகையால் நீங்கள் திரும்பி வரும் போது இங்கு தான் இறங்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இதை வைத்து உங்கள் கார் இந்த சோனில் தான் வைத்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியப்படுத்தவே இது. உங்கள் கார் எந்த வரிசையில் நிப்பாட்டியுள்ளீர்கள் என்பதை உங்கள் கார் வைத்துள்ள வரிசையின் முடிவில் இதே போல் ஒன்று நிறுவப்பட்டிருக்கும் அதையும் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டால் இந்த கடல் போன்ற கார் பார்க்கிங்கில் உங்கள் காரை கண்டுப்பிடிப்பது எளிதாகிவிடும். ஆகையால் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார். அவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் கூறியது போலவே இரண்டு பார்கோடுகளையும் ஸ்கேன் செய்துக் கொண்டோம். இந்த சம்பாஷணைகள் நடந்துக்கொண்டிருக்கையில் இரண்டு பஸ்கள் எங்களை கடந்து சென்றன. மூன்றாவதாக வந்த பஸ்ஸில் ஏறியதும் பஸ் ஓட்டுனருக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு அமர்ந்தோம். கார் பார்க்கிங் நடுவே வானூர்தி போல சென்று எக்ஸ்போ நுழைவாயிலில் இருந்து ஐம்பதடி முன்னிருந்த பஸ் நிலையத்தில் நின்றது. தானியங்கி கதவுகள் திறந்தன பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போது ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்துவிட்டு இறங்கினோம்.

நுழைவாயிலின் இருபுறமும் எக்ஸ்போவில் பங்கெடுத்துக் கொண்டுள்ள நாடுகளின் தேசிய கொடிகள் வானுயர்ந்து பறந்துக்கொண்டிருந்ததைப் பார்த்தால் நம்மை அந்த நாடுகள் வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்பதுப் போலவே எங்களுக்குத் தோன்றியது.

நுழைவாயிலுக்கு வெளியே அதற்கு நேராக பச்சை நிறத்தில் எக்ஸ்போ 2020 என்று பெரிதாக அழகாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மக்கள் வரிசையாக காத்திருந்தனர். வாழ்க்கையில் இது போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதால் கிடைத்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று நாங்களும் ஐந்தாவதாக வரிசையில் நின்றுக் கொண்டோம். எங்கள் முறை வந்ததும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

எக்ஸ்போவின் நுழைவாயிலை கீழிருந்து மேல் வரைப் பார்த்தால் “ஆ” என்று வாய்பிளக்க செய்யும் விதம் நிறுவப்பட்டிருந்தது. ஆம். பிரம்மாண்டம் நுழைவாயிலில் இருந்தே தொடங்கியது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஒன்றல்ல மூன்று பிரம்மாண்டமான நுழைவாயில் மூன்று பெவிலியன்களுக்கும் தனிதனியாக அமைக்கப்பட்டிருந்தது. இதைப் போன்ற நுழைவாயில் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.

21 மீட்டர் உயரமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நுழைவாயில் சுமார் பதினெட்டு டன் எடையுள்ளதாகும். இது பிரிட்டிஷ் கட்டிட கலைஞர் ஆசிஃப் கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை நினைவூட்டும் வகையில் இஸ்லாமியர்களின் மஷ்ரபியா கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு கார்பன் இழைகளால் வடிவியல் துள்ளியத்துடன் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மஷ்ரபியா கட்டிடக்கலையானது வெப்பத்திலிருந்து பாதுக்காப்பதோடு குளிரூட்டும் தன்மை உடையதாகவும் விளங்குகிறது. வெறும் கம்பிகளால் இணைக்கப்பட்ட கூடு போல் இருந்தாலும் இது இங்கு வரும் மக்களுக்கு இந்த அரபு நாட்டு வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான நிழலைத் தருகிறது. நாம் இந்த வாயிலை நடந்து கடந்து செல்லும் போது உற்றுக் கவனித்தோமே என்றால் இரண்டு மற்றும் முப்பரிமான புதிரான வடிவமைப்பின் காரணமாக இதில் எக்ஸ்போ வின் லோகோ வடிவத்தைக் காணமுடிகிறது.

எக்ஸ்போ 2020 லோகோ 4000 வருட பழமையான ஒரு மோதிரத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது 2002 ஆம் ஆண்டு அரபு நாட்டின் அல் மர்மூமில் சாருக் அல் ஹதீத் என்ற தொல்லியல் தளத்திலிருந்து கண்டறியப்பட்டது. இந்த மோதிரம் சாருக் அல் ஹதீத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான வரலாற்றுச் சின்னம் இனி வரப்போகும் வளமையான எதிர்காலத்துக்கான உத்வேகச் சின்னமாக இருக்கிறது. மனங்களை இணைப்போம் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்பதே இதன் தாரக மந்திரமாகும்.

இந்த லோகோவின் அர்த்தத்தையும் அது உருவான விதத்தையும் மற்றும் பிரம்மாண்டமான இந்த நுழைவாயில் பற்றிய விவரங்களையும் அறிந்துக் கொண்டோம் இனி எக்ஸ்போவினுள் நாம் காண காத்திருக்கும் பல நாடுகளின் பெவிலியன்கள் பற்றி அடுத்து வரவிருக்கும் பதிவில் காண்போம்.

நன்றி
-நா. பார்வதி

சக்தி கைபேசியில் விஷாலை அழைத்துப் பேசியபோது அவன் பட்டும் படாதது போல பதிலளிக்க அதற்கான காரணத்தை அவளே யூகித்துக்கொண்டு அவனிடம்,

“ஹேய் ‘வி’ ஐ ஆம் சாரி பா.
நடந்தது என்னன்னு உனக்கு தெரிஞ்சா நீ இப்படி டல்லா பேச மாட்ட தெரியுமா!
உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னா?
நான் வராததை பத்தி நீ அவா கிட்ட என்ன சொன்ன?
உன்ன அப்படி ஒரு ஸிட்டுவேஷன்ல நிறுத்தினதுக்கு ஐ ஆம் எக்ஸ்ட்ரீமிலி சாரி.
எனக்கு புரியுது உன்னோட சங்கடம்
ஆனா…”

என்று அவள் சொல்ல முயன்றபோது அவளைத் தொடர விடாது சட்டென்று விஷால் அவளிடம்

“போதும் தீ போதும்.
இது ஒண்ணும் எனக்கு புதுசில்லையே!
ஒரு தடவ இல்ல இது ரெண்டாவது தடவ சொல்லாம கொள்ளாம இருக்கறது.
அப்புறம் வந்து சாரி கேட்கறது.
இந்த தடவ என்ன ஸ்டோரி சொல்ல போற?”

“பார்த்தயா!!
அப்போ நான் வேணுனே அப்படி செய்தேன்னு நீ நெனச்சிருக்க இல்ல?
அப்படி நீ நெனச்சாலும் உன்னை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வி.
ஏன் தெரியுமா?
ஏன்னா அந்த ரெண்டு தருணத்திலேயும் தப்பு என் பக்கம் தான்.
அது எனக்கு நல்லாவே தெரியும்.
ஆனா அந்த ரெண்டு சந்தர்ப்பங்கள்லேயும் என்னால எதுவும் பண்ணமுடியாம போச்சு வி.
மொதோ தடவ நீ என்ன ப்ரபோஸ் பண்ணின போது என்னோட மறைவுக்கு பின்னால் என்ன நடந்ததுன்னு உன்கிட்ட சொல்லிட்டேன்.
அதே மாதிரி இந்த தடவ…”

“ம்…சொல்லு அவ கால் பண்ணினா இல்ல இவ கால் பண்ணினா.
அதக் காப்பாத்த போனேன்…
இதக் காப்பாத்த போனேன்னு எதையாது சொல்லப் போற அதுதானே!”

“இல்ல வி நான் சொல்லறதைக் கேட்கற மனநிலையில நீ இல்ல.
ஸோ குட் நைட்.
நீ இப்போ தூங்கப் போ.
நாளைக்கு ஈவ்னிங் பேசலாம்.
பை.”

“ஏய் தீ என்ன விளையாடறயா?
நான் கோபப்படறது தப்பு ஆனா நீ செஞ்சது தப்பில்லையா?”

“அச்சோ! உன் கோபம் நியாயமானது தான்னு தானே நானும் சொல்லறேன்.
அதே நேரம் அந்த ரெண்டு தடவையும் என் மேல எந்த தப்பும் இல்லன்னும் சொல்லறேன் அவ்வளவு தான்.
நீ கேட்க ரெடின்னா நான் எக்ஸ்பிளேயின் பண்ணறேன்”

“ம்…சொல்லு கேட்கறேன்.”

“நான் ஆஃபீஸ் மீட்டிங் முடிஞ்சிட்டு அங்கேந்து கிளம்பினேன்.
உன் வீட்டுக்கு என் காரை டிரைவ் பண்ணிட்டு வந்துட்டிருந்தேன்.
அப்போ பாதி தூரம் கிராஸ் பண்ணினதும் எனக்கு மயக்கம் வரா மாதிரி இருந்தது…”

“அய்யயோ! அப்புறம் என்ன ஆச்சு தீ?”

“இரு இரு வி.
நான் உடனே என் காரை ஹைவே சைட் லேன்ல நிப்பாட்டினேன்.”

“நிப்பாட்டி! டிட் யூ கால் ஃபார் ஹெல்ப்?”

“எங்கேந்து கூப்பிடுவேன்?
நான் அப்போ ஆல்ரெடி பாதி மயக்கத்துல இருந்தேன்.”

“சரி கார விட்டு வெளியில வந்திருக்கலாம் இல்ல!”

“வர தோணலை!
ஆக்சுவலா வர முடியல.”

“அட்லீஸ்ட் எனக்காவது கால் பண்ணிருக்கலாம் இல்ல!
ஒரு ரிங் குடுத்துட்டு விட்டிருந்தா கூட நான் உன்னை ட்ராக் பண்ணி நீ இருந்த இடத்துக்கு வந்திருப்பேனே தீ!”

“எங்க நான் ஆஃபீஸ் மீட்டிங் போது என்னோட மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி
வச்சிருந்தேன்.
அதை சுவிட்ச் ஆன் பண்ண மறந்துட்டேன்‌.
அதுவும் எமர்ஜன்சிக்கு கால் பண்ணலாம்னு என் பேக்லேந்து மொபைல எடுக்கும் போது தான் சுவிட்ச் ஆஃப் பண்ணினதே தெரிய வந்துது.
அந்த அரை மயக்கத்துலேயும் என் மொபைல சுவிட்ச் ஆன் பண்ணினது நல்லா ஞாபகமிருக்கு…
ஆனா எமர்ஜன்சிக்கு கால் பண்ணினேனா இல்லையான்னு எனக்கு சுத்தமா ஞாபகமில்ல.
ஏதோ ஒரு பெரிய கண்டேயினர் ல மோதி நின்னா மாதிரி ஒரு ஃபீலிங் இன்னமும் இருக்கு.
பட் என் வண்டிக்கு ஒரு சேதமுமில்லை.
அதுனால நான் மோதிருக்க மாட்டேன்னு நானா நெனச்சுண்டேன்.
அப்போ அது ஒரு இல்யூஷனோ என்னவோ தெரியலை வி.”

“ஓ இவ்வளவு நடந்திருக்கா?
ஏன் உனக்கு பிசிக்கலி ஏதாவது பிராப்ளம் இருக்கா?
ஏன்னா திடீர்னு மயக்கம் வந்திருக்கேன்னு கேட்கறேன்.
இல்ல இது மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவாவது மயக்கம் வந்திருக்கா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல வி.
இதுக்கு முன்னாடி எனக்கு மயக்கமெல்லாம் வந்ததில்லை.
இதுதான் ஃபர்ஸ்ட் டைம் இது மாதிரி ஆயிருக்கு.”

“அப்போ பிசிக்கல் பிராப்ளம்ஸ் ஒண்ணுமில்லன்னா…
எதுக்கும் மொதல்ல காலையில எழுந்ததும் ஃபர்ஸ்ட் டாக்டர்ட்ட போ.
ஃபுல் டெஸ்ட் எடு.”

“நான் சாயந்தரமே டாக்டர்ட்ட போயிட்டு வந்துட்டேன் வி.”

“ஓ அப்படியா!
தட்ஸ் குட்.
டாக்டர் என்ன சொன்னா?”

“அதைக் கேட்டதிலிருந்து தான் எனக்குள்ள பல கேள்விகளும் சந்தேங்கங்களும் அப்படியே கிடு கிடுன்னு வளர ஆரம்பிச்சிருக்கு வி.”

“அப்படி என்ன அந்த டாக்டர் சொன்னா?”

“எனக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்தா.
அதுல என்னோட ப்ளட்ல மயக்கமருந்து இருந்தது தெரிய வந்துது.”

“அச்சச்சோ!
நீ என்ன சொல்லற தீ?”

“பாரு இதைக் கேட்டதும் உனக்கே இவ்வளவு ஷாக் ஆ இருக்கே வி…
அப்போ எனக்கு எப்படி இருக்கும் சொல்லு.”

“இட்ஸ் ஷாக்கிங் டு ஹியர் தீ.
அப்படீன்னா…
உனக்கு விரோதிங்கன்னு யாராவது?
நீ வேலை செய்யற இடத்துல…
இல்லாட்டி உன் கம்பெனி காம்படீட்டர்ஸ் யாராவது?”

“எனக்கு தெரிஞ்சு அப்படி எல்லாம் யாருமே இல்ல வி.
இல்ல அப்படி யாராவது எனக்கே தெரியாமா இருக்காளான்னும் தெரியலை!”

ம்…சரி மயக்கமான!
அப்போ எப்ப எப்படி அங்கேந்து வீட்டுக்குப் போன?
போலீஸ் வந்திருப்பாளே?

“அது தான் இப்போ எனக்கு இன்னொரு பெரிய குழப்பமா இருக்கு வி”

“எதைச் சொல்லற தீ?
எது உனக்கு குழப்பமா இருக்கு?”

“ஆமாம் நான் அந்த ரோட்டோரமா மயக்கமாகி நின்னது மத்தியானம்…
ஆனா எனக்கு நெனவு வந்து நான் கண் முழிச்சுப் பார்த்தது இன்னைக்கு விடியற்காலையில தான்…
அதுவும் அதே இடத்துல எப்படி என் காரை நிப்பாட்டியிருந்தேனோ அதே மாதிரி என் காரும், அதே மாதிரி நானும் என்னோட ஸீட்ல உட்கார்ந்துண்டிருந்தேன்.
ஸோ நியர்லீ மோர் தன் டுவல் அவர்ஸ்!
அது எப்படி போலீஸுக்கு தெரியாம போச்சுன்னு தான் குழம்பிண்டிருக்கேன்.”

“ம்…தட்ஸ் எ வாலிட் பாயிண்ட் தீ.
சரி போலீஸ் கம்பிளைன்ட் குடுத்தியா?”

“என்னன்னு குடுப்பேன் வி?”

“இப்போ என் கிட்ட என்ன சொன்னயோ அதை அப்படியே போலீஸ்கிட்ட சொல்ல வேண்டியது தானே!
அவா அந்த ஏரியா சிசிடிவில பார்த்து ஏதாவது சொல்லுவா இல்ல?
அத வச்சு நாம ஒரு டிசிஷன் எடுக்கலாம் இல்லையா?
இல்ல அட்லீஸ்ட் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கவாவது செய்யலாமே!”

“ம்…அதுவும் சரி தான்.
ஆனா நான் போய் சொன்னா நம்புவாளா?
ஏன்னா அதுக்கப்புறம் ப்ராஸஸ் ரொம்ப இருக்குமேன்னு யோசனையா இருக்கு”

“அதப்பத்தி எல்லாம் கவலைப் படாதே தீ.
அதுக்கப்புறம் என்ன ப்ராஸஸாக இருந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன்.
ஸோ கவலைப் படாம நாளைக்கே போலிஸுல கம்பிளைன்ட் குடு புரிஞ்சுதா?

“சரி உன்கிட்ட அந்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் இருக்குமே!”

“ஆமாம் இருக்கு வி”

“அதை வச்சுகூட நீ போலீஸ் கிட்ட கம்பிளைன்ட் பண்ணலாமே தீ!”

“அப்படீங்கற!”

“அட ஆமாம் தீ.
நான் வோணும்னா நாளைக்கு உன் வீட்டுக்கு வரட்டுமா?
நாம சேர்ந்து போய் போலீஸ் கம்பிளைன்ட் குடுக்கலாம்.”

“ம்…நல்ல ஐடியா தான்.
ஆனா…”

“என்ன ஆனா ஆவன்னானுட்டு?”

“இல்ல எதுக்கு உன்ன கஷ்டப்படுத்தணும்னு யோசிக்கறேன்.
வேற ஒண்ணுமில்லை”

“இதுல என்ன கஷ்டமிருக்கு?”

“உனக்கு ஓகேன்னா தாராளமா வா வி.”

“ஷுவர். நிச்சயமா வரேன்.
நாளைக்கு காலையில ஒரு பதினோரு மணிக்கு உன் வீட்டு வாசல்ல இருப்பேன்.”

“ஓ…ஓ…இல்ல வி.
எனக்கு நாளைக்கு ஆஃபீஸ்ல ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கு.
அது இன்னைக்கு இருந்திருக்கணும்…
இன்னைக்கு நான் ஆஃபீஸ் போகாததால அதை நாளைக்கு ஷிஃப்ட் பண்ணிருக்கா.
ஸோ அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வரதுக்கே பதினொன்னு ஆர் பன்னிரண்டு மணி ஆகிடும்.”

“சரி அப்போ லெட் அஸ் மீட் இன் தி ஆஃப்டர்னூன்.”

“ம்…ஓகே.
அப்படீன்னா நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினோமே அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வரயா வி?
லெட் அஸ் மீட் தேர் ஃபார் லஞ்ச் அட் 1:30!”

“அப்போ உன் வீட்டுக்கு வரக்கூடாதுங்கற!”

“ச்சே ச்சே! அப்படி இல்ல வி.
எப்படியும் லஞ்சுக்கு வெளில தான் போகணும் அதுனால சொன்னேன்.
இப்போ என்ன லஞ்ச் சாப்டுட்டு நாம போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன்ட் குடுத்துட்டு வீட்டுக்கு போகலாமே.
நான் என் ஆஃபீஸ் ல ஹாஃப் டே லீவ் போட்டுடறேன்.”

“ம்…மேடம் நான் ஒரு நாள் லீவ் போட்டுட்டு வரேன்!”

“அதுக்கு தான் நீ வரணுமான்னு கேட்டேன்.”

“சும்மா சொன்னேன் தீ.”

“சரி என் உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னான்னு நீ சொல்லவே இல்லையே வி!
ப்ளீஸ்… நான் சாரி சொன்னேன்னு அவாகிட்ட சொல்லிடு.”

“என்னத்த சொல்லுவேன்!
நீ வர்க்ல பிசியா இருக்க.
அதுனால உன்னால வரமுடியலைன்னு நீ சொன்னதாக அவாகிட்ட சொல்லி…
நீ சாரி கேட்டதாகவும் சொன்னேன்”

“ஸோ சுவீட் ஆஃப் யூ வி.
அதுக்கு அவா என்ன சொன்னா?”

“அவாளா…!
அதுக்கு அவா….”

“ஏன் இழுக்கற வி?
என்ன என்னைத் திட்டினாளா!
திட்டியிருந்தாலும் தப்பில்ல தான்.”

“உன்ன ஒண்ணும் சொல்லல தீ.”

“அப்புறம்?”

“அவா…
கல்யாணத்துக்காவது வந்திடுவாளா இல்ல அன்னைக்கும் உன்ன மேடையில உட்கார வச்சுட்டு வராம இருந்திடுவாளான்னு சொன்னா.
நீ கேட்டயேன்னு சொன்னேன்.
எதுவும் தப்பா எடுத்துக்காத தீ.”

“அவாள நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வி.
அதே நேரம் என் மேலயும் எந்தவித தப்பும் இல்லங்கறத நீ தான் அவா கிட்ட எடுத்து சொல்லணும்.
செய்வியா வி?”

“ம்…முதல்ல நானும் உன் மேல சரி கோபத்துல இருந்தேன்.
இப்போ விவரம் தெரிஞ்சதும் காம் ஆகிட்டேன்.
அவாளும் இதெல்லாம் தெரிஞ்சா உன்னைப் புரிஞ்சுப்பா”

“அப்படீன்னா நான் உன்கிட்ட சொன்னது அத்தனையும் அவாகிட்ட சொல்லப் போறயா வி”

“ஆமாம் ஏன் அதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணற தீ?”

“இல்ல நான் என் பேரன்ட்ஸ் கிட்ட இதைப் பத்தி எதுவுமே சொல்லலை.
அதுதான் யோசிக்கறேன்”

“அப்படீன்னா உன் அப்பா அம்மாவுக்கு இங்க உனக்கு நடந்தது எதுவுமே தெரியாதா தீ?”

“இல்ல இல்ல வி…
நான் மயக்கமானது வீட்டுக்கு லேட்டா வந்தது எல்லாம் தெரியும்.
ஆனா எனக்கு யாரோ மயக்கமருந்து குடுத்திருக்கானோ…
அதுனால குழப்பத்துல இருக்கேன்னோ சொல்லலை.
அதுனால நீ இந்த டாப்பிக்கையே அவாயிட் பண்ணிட்டு பேசாம என் கார் ப்ரேக் டவுன் ஆயிடுத்துன்னு சொல்லிடேன்.
ஏன்னா அவாளும் இதை எல்லாம் கேட்டுட்டு அப்புறம் பயந்துக்கப் போறா…
அதுதான் சொன்னேன்”

“ம்…அதுவும் சரிதான்.
ஓகே நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.
யூ டோன்ட் வரி தீ”

“என்னத்த சொல்லி சமாளிக்கப் போறேன்னு எனக்கும் சொல்லு வி.
அப்பதானே அவா இதப்பத்தி எனக்கிட்ட எப்பவாவது கேட்டுக்கும் போது நானும் அதையே சொல்லமுடியும்.”

“ம்..ம்..நிச்சயமா சொல்லறேன் தீ.”

“ஒண்ணு பண்ணினா என்ன?”

“என்ன தீ?”

“பேசாம நாளைக்கு ஈவ்னிங் என் வீட்டுலேந்து அவாளைக் கால் பண்ணி பேசிட்டா என்ன?
அப்படியே என் பேரன்ட்ஸோடயையும் பேசிடலாம்.
என்ன சொல்லற வி?”

“ம்…நல்ல ஐடியாவா தான் இருக்கு.
ஆனா அவா ரெண்டு பேரும் ஃப்ரீயா இருக்கணுமே?”

“நாளைக்கு காலையில ஐ வில் கன்பார்ம் வித் மை பேரன்ட்ஸ்.
நீ பாரிஸிலிருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே அவாளைக் கால் செஞ்சு கன்பார்ம் பண்ணிக்கோ.
சப்போஸ் ரெண்டு பேரு வீட்டுலயும் ஓகே சொல்லிட்டா நாளைக்கே பேசி முடிச்சிடலாம்.
என்ன சொல்லுற வி”

“ம்…ஓகே டன்.
நான் அவாகிட்ட கேட்டுட்டு அங்க வந்து என்ன ஏதுங்கறதை நாம மீட் பண்ணும் போது சொல்லறேன்.
நீயும் அப்போ சொல்லு.
சரி சரி மணி பன்னிரண்டு ஆயிடுத்து.
இப்போ நீ போய் நிம்மதியா படுத்துத் தூங்கு.
நாளைக்கு மத்தியானம் ரெஸ்டாரன்ட்ல சந்திப்போம்.”

“ஓகே வி.
பை பை.
குட் நைட்
ஹாவ் எ நைஸ் ஸ்லீப் வி”

“ஓகே பை தீ.
குட் நைட்.”

தொடர்வாள்…

வசுந்தரா வீட்டிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பி குழப்பத்திலேயே சென்ற சக்தி எட்டரை மணிக்கு அவள் வீட்டை சென்றடைந்தாள். காரை தன் வீட்டு பார்க்கிங்கில் நிப்பாட்டி விட்டு மெல்ல யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி நடக்கலானாள். அப்போது பக்கத்து வீட்டு பாட்டி வழக்கம் போல சக்தியிடம்

“ஹாய் தீ. குட் ஈவ்னிங்.”

என்று சொன்னதை கவனிக்காது தன் சிந்தனையில் மூழ்கியப்படி நடந்து வீட்டினுள் சென்றாள் சக்தி. அதைப் பார்த்த பாட்டி தனக்கு தானே

“ஏதாவது பிரச்சினையா இருக்குமோ! இதுவரை தீ இப்படி விஷ் பண்ணாம போனதே இல்லையே!
சரி அப்புறமா போய் விசாரிச்சுக்கலாம்.”

என்று தனது சுவடர் பின்னும் வேலையைத் தொடர்ந்தார்.

வீட்டினுள் நுழைந்த சக்தியைப் பார்த்த ப்ளூ அவள் அருகே வந்து

“ஹாய் தீ.
வெல்கம் ஹோம்.
என்ன ஆச்சு இவளுக்கு?
நான் விஷ் பண்ணிட்டே இருக்கேன்…
கண்டுக்காம அவ பாட்டுக்கு அவ ரூமுக்கு போறா!!
தீ…தீ…தீ”

என்று அழைத்துக்கொண்டே ப்ளூ அவள் பின்னால் சென்றது. ஆனால் அவள் அதை கவனிக்காது படார் என்று அவள் அறையின் கதவை சாற்றினாள். அதைப் பார்த்த ப்ளூ மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்து ஒரு மூலையில் நின்றது. அங்கிருந்தே அது அவ்வப்போது சக்தியின் அறைக் கதவு திறக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சக்திக்காக காத்திருந்தது. நேரம் பறந்தது. இரவு பத்து மணியானது. சக்தி அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. ப்ளூவால் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் மேலே சென்று அவள் அறைக்கதவை தட்டியது. ஆனால் பயனில்லாது மீண்டும் கீழேயே வந்து நின்றது.

சக்தி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். அதனால் கதவு தட்டும் சப்தம் அவளை தொந்தரவு செய்ய முடியவில்லை. ஆனால் அவள் அருகே இருந்த கைபேசி சட்டென்று அலறியதும் விருட்டென்று எழுந்துக்கொண்ட சக்தி தனது கைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவள் பெற்றோரிடமிருந்து ஒரு நாலைந்து மெஸேஜுகள் வந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி

“இப்போ நான் வசு சொன்ன விஷயத்தை அப்பா அம்மாட்ட சொன்னா அவா ரெண்டு பேரும் டென்ஷன் ஆகிடுவா.
ஸோ இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.
ஐ ஹோப் இட் டஸன்ட் ஹாப்பன் அகேயின்.
ஓ! ஓ! மணி பத்தாச்சா?
என்ன இந்த ப்ளூ டின்னர் சாப்பிட கூப்பிடவேயில்லை?
ஓ! நான் தான் வசு வீட்டுலேயே டின்னர் சாப்டுட்டு தானே வந்தேன்!
நேத்து காலையில அது செய்த டிஃபனை தானே சாப்டுட்டுப் போனேன்!
ஒரு வேளை ப்ளூ எதையாவது….
ச்சே! ச்சே! ச்சே!
அது எப்படி செய்யும்.
அய்யோ சக்தி நீ இத வச்சு உன்னையே நல்லா குழப்பிக்கற!
இத மறந்துட்டு பேசாம உன் வேலையைப் பாரு… போ.
அச்சோ இது என்ன ‘வி’ கிட்டேந்து இவ்வளவு கால்ஸ் வந்திருக்கே!
மறுபடியும் நான் மிஸ் பண்ணிருக்கேன்.
என்னடி சக்தி நீ?
சரி மொதல்ல அப்பா அம்மாக்கு மெஸேஜ் அனுப்பிட்டு அப்புறம் ‘வி’ யை கால் பண்ணி பேசலாம்.
என்னதிது லைட்டா பசிக்குறா மாதிரி இருக்கே!
ஃபர்ஸ்ட் போய் ஏதாவது சாப்பிடலாம்.”

என்று தன் அறைக் கதவைத் திறந்து கையிலிருந்த கைபேசியில் தன் அப்பா அம்மாவுக்கு ப்ளட் டெஸ்ட்டில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் தான் நன்றாக இருப்பதாகவும், ப்ளட் ப்ரெஷர் சற்றே குறைந்திருந்ததால் மயக்கம் வந்ததாகும் பயப்பட தேவையில்லை என்றும் ஒரு மெஸேஜை தட்டிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த சக்தியைப் பார்த்ததும் ப்ளூ ஓடி அவளருகே வந்து

“ஹேய் தீ.
என்ன ஆச்சு உனக்கு?
ஏன் சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் என்ன கண்டுக்காம நீ பாட்டுக்கு உன் ரூமுக்குள்ள போய் கதவை தாப்பா போட்டுகிட்ட?
ஏதாவது பிரச்சினையா?”

“உஷ்…அபா…
ப்ளூ எவ்வளவு கேள்வி கேட்குற நீ?
ஒரு பிரச்சினையும் இல்ல ப்ளூ.
நான் நல்லா தான் இருக்கேன்.
இன்னைக்கு நான் டாக்டர்ட்ட போனேன் இல்ல…”

“டக் டக் டக் டக்”

“ப்ளூ யாரோ வந்திருக்காங்க போல.
கதவு தட்டுற சத்தம் கேட்குது.”

“ஆமாம் தீ.
யாரா இருக்கும்?
அதுவும் இந்த நேரத்துல!”

“சரி சரி நீ பேஸ்மென்ட்டுக்கு போ ப்ளூ.
நான் யாருன்னு பார்த்துட்டு உன்னை கூப்பிடறேன்.”

“ஓகே தீ.”

என்று ப்ளூவை பேஸ்மென்ட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கதவைத் திறந்தாள் சக்தி.

“ஹாய் தீ.
குட் ஈவ்னிங்.”

“ஹாய் மிஸ்ஸர்ஸ் டேவிட்.
வெரி குட் ஈவ்னிங்.
வாங்க உள்ள வாங்க.”

“ம்…ம்… எங்க உன் பெஸ்ட்டீ ப்ளூ?”

“ஆங்!
அதுக்கு சார்ஜ் இல்லாததால சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கு.
நீங்க சொல்லுங்க.
உங்க வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு போன கிறிஸ்மஸ்க்கு அப்புறம் இப்ப தான் வறீங்க!”

“ஆமாம் தீ.
என்ன பண்ண?
இந்த மூட்டு வலி என்னை எங்கேயுமே அசைய விட மாட்டீங்குதே!
சரி சரி நான் வந்த விஷயத்தை விட்டுட்டு என் பிரச்சினைப் பத்தி பேசறேன் பாரேன். இன்னைக்கு நான் ராட்டட்டூயிவும், ஸ்பினாச் ஷாஃபுலும் செஞ்சேன்.
அதுதான் உன் கூடயும் ஷேர் பண்ணிக்கலாமேனு எடுத்துட்டு வந்தேன்.
இந்தா நீயும் சாப்பிடு.”

“ஓ! ஸோ நைஸ் ஆஃப் யூ.
நீங்க சாப்ட்டாச்சா?”

“ம்…ம்… ஒரு போர்ஷன் செஞ்சு நானும் டேவிட்டும் சாப்பிட்டாச்சு.
பேட்டர் மீதி இருந்தது ஸோ உனக்கும் ஒரு போர்ஷன் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்.
ம்…சாப்ட்டு எப்படி இருக்குன்னு சொல்லு தீ”

“ம்…இட்ஸ் டிலீஷியஸ்.
லவ் யூ மிஸ்ஸர்ஸ் டேவிட்.
எனக்கு நீங்க என் அம்மா மாதிரி”

“ஓ! தீ. தாங்க்யூ மா.
அதெல்லாம் இருக்கட்டும் தீ.
உனக்கு ஏதாவது பிரச்சினையா?”

“ம்…ம்… என்ன கேட்டீங்க?”

“உனக்கு ஏதாவது பிரச்சினையா?”

“அப்படி எதுவும் இல்லையே!
ஏன் கேட்கறீங்க?”

“இல்ல நீ இதுவரைக்கும் எனக்கு விஷ் பண்ணாம இருந்ததே இல்லை.”

“ஆமாம்.
மார்னிங் அன்ட் ஈவ்னிங் உங்களைப் பார்த்து விஷ் பண்ணாம நான் இருந்ததில்லை இருக்கவும் மாட்டேன்.”

“இல்ல தீ இன்னைக்கு ஈவினிங் நீ எனக்கு விஷ் பண்ணலை மா.
அதுவுமில்லாம நீ ஏதோ பெரிய குழப்பத்துல இருந்தா மாதிரி இருந்தது.
அது தான் நானே நேர்ல வந்து விசாரிக்கலாம்னு வந்தேன்.
எனி பிராப்ளம் தீ?”

“ஓ!! ஓ!! நாட் அட் ஆல்.
நான் நல்லா இருக்கேன்.
ஈவினிங் கொஞ்சம் தலைவலி அன்ட் தூக்கக் கலக்கமா இருந்தது.
அதுதான் உங்களை கவனிச்சிருக்க மாட்டேன்.
என்னை மன்னிச்சிடுங்க.
சாரி”

“ஹேய்!
எதுக்கு சாரி எல்லாம் கேட்குற தீ?
என்னடா இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு?
ஐ வாஸ் வரீடு வெரி மச்.”

“கவலைப் படாதீங்க.
நான் நல்லா தான் இருக்கேன்.
எனக்குன்னு கவலைப்பட என் அப்பா அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான்.”

“சரி தீ.
இட்ஸ் ஆல் ரெடி டென் தர்ட்டி ஆயிடுச்சு.
டேவிட் வெயிட் பண்ணிட்டிருப்பார்‌.
நான் கிளம்பறேன்.
டேக் கேர்.
எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்.
சரியா.
வரட்டுமா”

“ம்..ஷுவர் மிஸ்ஸர்ஸ் டேவிட்.
எனக்கும் வேற யாரிருக்கா.
நிச்சயம் எதாவது தேவைன்னா உங்ககிட்ட தான் வருவேன்.
பத்திரமா நடந்துப் போங்க.”

“ம்…வந்துட்டேன் மா.
பை தீ.
குட் நைட்.
ஸ்லீப் டைட்”

“குட் நைட் டு யூ டூ மிஸ்ஸர்ஸ் டேவிட்.”

என்று பக்கத்து வீட்டுப் பாட்டிக் கொடுத்த ராட்டட்டூயிவையும் ஸ்பீனாச் ஷாஃபுலயும் முழுவதுமாக ருசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சக்திக்கு அவள் மனதில் திடீரென ஒன்று தோன்றியது

“இதே போல தானே அன்னைக்கு மிஸ்ஸர்ஸ் டேவிட் குக்கீஸ் குடுத்தாங்க!
ஒரு வேள அதுவா இருக்குமோ?
அது அவங்க அதுக்கு முன்னாடிக்கும் முன்னாடி நாள் தந்தது.
ச்சே ச்சே அவங்க ஏன் எனக்கு மயக்கமருந்து குடுக்கணும்?
அதுல அவங்களுக்கு என்ன இருக்கு?
அய்யோ! இந்த அப்பா அம்மா சொன்னதைக் கேட்டு ஒரு ப்ளட் டெஸ்ட் எடுக்கப் போயி இப்போ நான் எல்லாரையும் சந்தேகப் பட ஆம்பிச்சுட்டேனே!”

சக்தி இவ்வாறு தனக்குத் தானே பேசிக்கொள்வதாக எண்ணி சத்தமாக கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டே வந்த ப்ளூ

“என்ன தீ?
என்ன சந்தேகம்?
எதுக்கு சந்தேகப்படற?”

“ம்…நான் என் மனசுக்குள்ள நெனச்சதை எப்படி நீ சொல்லுற ப்ளூ?
இது எப்போலேந்து?”

“ஆமாம் ஆமாம்.
நீ மனசுக்குள்ள பேசறதா நினைச்சுகிட்டு சத்தமா தான் பேசிட்டிருந்த.
அதைக் கேட்டுட்டு தான் சொல்லறேன்.”

“ஓ! ஓ! அது ஒண்ணுமில்ல ப்ளூ நான் இன்னைக்கு வசு கிட்ட போய் ப்ளட் டெஸ்ட் எடுத்தேன் இல்லையா அதுனால வந்த குழப்பம் தான்”

“அதுனால என்ன குழப்பம் தீ?”

“என்னோட ப்ளட்டுல செடட்டிவ் இருந்திருக்கு.
அது எனக்கு யார் குடுத்திருப்பா?
எப்படி குடுத்திருப்பா?
எப்போ? எங்கே? ஏன்? குடுத்திருப்பான்னு எனக்குள்ள ஒரே குழப்பமா இருக்கு.”

“சரி குழப்பத்துல ஏதாவது தெரிய வந்துதா?”

“என்னத்த?
நானும் சாயந்தரத்துலேந்து யோசிச்சுப் பார்த்துண்டே தான் இருக்கேன்.
யாரன்னு நான் சந்தேகப்படறது சொல்லு.
குக்கீஸ் குடுத்த பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
மீட்டிங்ல காஃபி குடுத்த ஆஃபிஸ் பாய் ஆ?
கேன்டீன் ல சான்ட்விச் செய்து குடுத்த அந்த ஜானையா?
அப்போ அங்க வந்து எனக்கு ஜூஸ் வாங்கித் தந்த ருத்ராவையா?
இல்ல என்னைக்குமே இல்லாத அதிசயமா நேத்து எனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செய்து தந்த உன்னையா?
சொல்லு.”

“அய்யோ தீ!
என்னது இது என்னை ஏன் நீ சந்தேகப்படணும்?”

“ஏன் படக்கூடாது ப்ளூ?”

“தீ நீ ஈண்மையாவா கேட்கற?
நான் உருவானது உன்னால தீ.
நான் எப்படி உன்னை…
போ தீ.
நான் இதை எதிர்பார்க்கவேயில்லை தீ”

“எதை எதிர்பார்க்கலை நீ?
நான் உன்னை கண்டுப் பிடிச்சுடுவேன்னா!”

“அய்யோ! தீ! நீ என்ன கன்பார்ம் ஆனா மாதிரியே பேசுற?”

“ம்…ம்…இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுற ப்ளூ.
சும்மா உன்னோட விளையாண்டேன்.
அவ்வளவு தான்.
உன்னைப் பத்தி உன்னவிட எனக்குத் தானே நல்லா தெரியும்.”

“அப்பாடா! ஒரு நிமிஷத்துல எனக்கு பெரிய அதிர்ச்சிய குடுத்துட்ட தீ.”

“அதிர்ச்சிய உனக்குக் குடுக்கல ப்ளூ.
நான் தான் அதிர்ச்சில இருக்கேன்.”

“என்ன சொல்லற தீ.
எனக்கு ஒண்ணுமே புரியலை.”

“பின்ன இருக்காதா சொல்லு!
நான் உண்டு என் வேலையுண்டு இருக்கறவ நான்.
எனக்கு தெரிஞ்சு விரோதிகள்னு எனக்கு யாருமே இல்ல!
பிரெண்ட்ஸும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் இருக்காங்க.
எனக்கு செடட்டிவ் குடுத்து என்ன பண்ண நினைச்சிருப்பாங்க?
ஏன் பண்ணல?
இல்ல ஏதாவது பண்ணிட்டாங்க ஆனா அது எனக்கு தெரியலையா?
அய்யோ இந்த ப்ளட் டெஸ்ட் எடுத்தாலும் எடுத்தேன்…இப்போ அதோட ரிசல்ட் என்னை பைத்தியம் பிடிக்க வச்சுடும் போல தோணுது.”

“எல்லாரையும் சந்தேகப்பட்ட நீ ஒருத்தர விட்டுட்டியே தீ!”

“யார் அது ப்ளூ.
சொல்லு யாரை விட்டுட்டேன்?”

“அந்த நபர் தான் புதுசா நமக்குள்ள வந்திருக்கார்.
அந்த நபர் வந்ததுக்கப்புறமா தான் உனக்கு இது நடந்திருக்கு இல்லையா.
அப்புறம் எப்படி நீ அவரை உன் சந்தேக லிஸ்ட்டில் சேர்க்கலை?”

“ப்ளூ நீ யார சொல்ல வர?
‘வி’ யவா சொல்லற?”

“ம்…ஆமாம் தீ”

“ப்ளூ அது எப்படி வி ய சந்தேகப் படறது?”

“ஏன் படக்கூடாது?”

“ப்ளூ அப்படியே நான் சந்தேகப்பட்டாலும்…
அதுல ஒரு லாஜிக் வேண்டாமா?
அவர் இருக்கறது பாரிஸ் ல.
நான் இருக்கறது மெட்ஸ் ல.
அவர் நேத்து இங்க வரவேயில்லை.
நான் தான் அவர் வீட்டுக்கு போயிட்டிருந்தேன்.
வழியில தான் எனக்கு இப்படி ஆச்சு.
ஸோ இந்த பஸில் பீஸஸ் ல அவர் எங்கயுமே ஃபிட் ஆகலையே!”

“மே பி ஏதாவது பீஸஸ் எங்கயாவது மிஸ்ஸாகுதோ என்னவோ?”

“ப்ளூ நானே ரொம்ப குழம்பி போயிருக்கேன்.
இதுல நீ வேற என் சந்தேக லிஸ்ட்டுல இன்னும் ஆட்களை சேர்க்காம இரு ப்ளீஸ்”

“ஓகே.
எனக்குத் பட்டதை உன்கூட ஷேர் பண்ணினேன் அவ்வளவு தான்.
உன்னை குழப்பி எனக்கென்ன ஆகப்போவுது.
பேசாம போய் நிம்மதியா படுத்து தூங்கு தீ.
காலையில எழுந்ததும் ஃபிரெஷா யோசி.
ஏதாவது க்ளூ கிடைக்கலாம்.
குட் நைட் தீ.”

“ம்…அதுவும் சரி தான் ப்ளூ.
சரி ப்ளீஸ் க்ளீன் தி ப்ளேஸ்.
இன்னைக்கே ஆஃபீஸுக்கு லீவ் போட்டாச்சு.
நாளைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியிலிருந்து ஒரு டிஸ்கஷனுக்கு வரப் போறாங்க.
ஸோ நான் அங்க இருந்தாகணும்.
நான் போய் படுத்துக்கறேன்.
குட் நைட் ப்ளூ.”

என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்த சக்தி அவள் கைபேசியைப் பார்த்துக் கொண்டே

“சரி சரி இந்த வி வேற நிறைய தடவ கால் பண்ணிருக்கானே!
சாப்டுட்டு அவன்கிட்ட பேசலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள மிஸ்ஸர்ஸ் டேவிட் வந்துட்டாங்க.
அப்படியே மறந்துட்டேன்.
ஒரு வேளை ப்ளூ சொன்னா மாதிரி வி ஏதாவது?
ச்சே ச்சே அதுனால அவனுக்கு என்ன லாபம்?
நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவா வேற!
இப்போ கால் பண்ணினா முழிச்சுண்டிருப்பானா?
இல்ல தூங்கியிருப்பானா?
சரி எதுக்கும் கால் பண்ணிப் பார்ப்போம்.
எடுத்தா பேசலாம்.
ம்…கால் போறது…
கம் ஆன் வி கால் ஐ எடு.”

“ஹலோ”

“ஹாய் வி.
நான் தான் தீ”

“ம்…ம்… தெரியறது தெரியறது.
சொல்லு.”

சந்தேகமென்பது கொடிய வியாதி. அது மெல்ல மெல்ல நம் மனதை அரித்து பின் முழுவதுமாக நம்மை ஆட்கொண்டுவிடும். அதைத் தான் சக்தி அனுபவிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்களோ!!

தொடர்வாள்…

ஹாஸ்பிடல் சென்ற சக்தி தனக்கு மிகவும் நெருக்கமான தோழியான டாக்டர் வசுந்தராவின் நர்ஸிடம் ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்துவிட்டு அவளின் கேபின் கதவைத் தட்டினாள். உடனே உள்ளிருந்து

“எஸ் கம் இன்”

“ஹாய் வசு. எப்படி இருக்க?”

“ஹாய்! ஹாய்! ஹாய்! தீ.
நான் ரொம்ப நல்லா இருக்கேன்.
தாங்க்யூ.
நீ எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் வசு.”

“அம்மா அப்பா எல்லோரும் நலமா இருக்குறாங்க தானே?
நாம மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு இல்ல”

“அப்பா அன்ட் அம்மா ஆல் டூயிங் க்ரேட். உன்ன விசாரிச்சதா சொல்ல சொன்னா.
ஆமாம் ஆமாம் நாம மீட் பண்ணி எப்படியும் ஒரு நாலு மாசம் இருக்கும்னு நினைக்கறேன்.”

“ம்…இருக்கும்.
நீ லாவன்யா பொறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்தது இல்ல…
கரெக்ட் நாலு மாசமாச்சு நாம பார்த்து.
சொல்லு தீ”

“உங்க ஃபேமிலில எல்லாரும் எப்படி இருக்காங்க? குட்டி புயல் லாவன்யா எப்படி இருக்கா? என்ன பண்ணறா?”

“எல்லாவரும் நலமாக இருக்கிறார்கள். அவளுக்கென்ன தாத்தா பாட்டி கூட ரொம்பவே சந்தோஷமா நேரத்தை கழிச்சுக்கிட்டிருக்கா.
நீ அவளோட பொறந்த நாளுக்கு செய்து கொடுத்த அந்த ரோபோ டாலோட எப்பப்பாரு எதையாவது பேசிகிட்டு அதை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுன்னு அந்த பொம்மைய விட்டு நகர்றதில்லை.
அவளுக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு.
அதுக்கு அவ லக்கின்னு பேரு கூட வச்சிருக்கா.”

“ஸோ ஸ்வீட்.
அவ உன்னோட அழகான ஏன்ஜல் வசு.”

“ம்…ஆமாம் சக்தி.
என்னோட வலிகளை மறக்கச் செய்ய அந்த ஆண்டவன் எனக்குக் குடுத்த குட்டி தேவதை தான் என் லாவ்.”

“ஆம் சாரி வசு.
லாவ்வ அப்படி சொல்லி உங்களோட பழசை ஞாபகப்படுத்திட்டேனா?”

“ம்…ம்…ம்…இட்ஸ் ஓகே.
அப்புறம் என்ன? நீ க்ளினிக் வந்திருக்க?
வீட்டுக்கே வந்திருக்கலாமே!”

“இல்ல இல்ல இப்போ நான் என் ப்ரெண்ட் வசுவ பார்க்க வரலை.
ஒரு பேஷ்ண்ட்டா டாக்டர் வசுந்தராவ பார்க்க வந்திருக்கேன்.”

“ம்…சரி சரி.
என்ன ஆச்சு தீ?”

என்று வசுந்தரா கேட்டதும் சக்தி அவளுக்கு நடத்ததை வசுந்தராவிடம் விவரித்தாள். அதை கேட்ட வசுந்தரா

“தீ அது எப்படி நீ மோர் தன் டுவல்வ் அவர்ஸா ஹைவே சைட் லேன்ல யாருக்கும் தெரியாம இருந்திருக்க முடியும்?
போஸீஸ் கூடவா பார்க்கல?
இல்லையே எனக்கு இது சரியா படலையே தீ!”

“இதே டவுட் எனக்கும் என் பேரண்ட்ஸுக்கும் இருக்கு வசு.
அவங்க ரெண்டு பேரும் ஒரு படி மேலயே போய் எனக்கு யாரோ எதையோ கலந்துக் கொடுத்து ஆக்ஸிடன்ட் ஆக வைக்க பார்த்திருப்பாங்கன்னு சொன்னாங்க தெரியுமா!
அதைக் கேட்டதும் முதல்ல எனக்கு ஒரே காமெடியா இருந்தது.
ஆனா அப்புறமா யோசிச்சுப் பார்த்தேன்…
அதுதான் உன்கிட்ட வந்து ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்த்துடலாமேன்னு வந்திருக்கேன்.”

“ம்…உன் பேரன்ட்ஸ் சொன்னதுலயும் ஒரு பாயின்ட் இருக்கு தீ.
ஓகே ஒரு நிமிஷம்.
நர்ஸ் ப்ளீஸ் கம்மின்”

“எஸ் டாக்டர்.”

“நர்ஸ் தீ க்கு இதுல நான் எழுதியிருக்குற ப்ளட் டெஸ்ட் எடுங்க.”

“ஓகே டாக்டர்.
மேம் ப்ளீஸ் வாங்க.”

“ஓகே வசு நான் போய் ப்ளட் டெஸ்ட் குடுத்துட்டு வரேன்‌.”

“ஷுவர் தீ.
நீ போய் டெஸ்ட்டுக்கு குடுத்துட்டு வா.”

சக்தி நர்ஸுடன் சென்று தனது ரத்தத்தை பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு வந்தாள்.

“மே ஐ கம் இன்”

“ஆங் உள்ள வா தீ”

“என்ன வசு எப்பவும் பிஸியா இருக்கற நீ இன்னைக்கு ரொம்ப ஃப்ரீயா இருக்க?”

“நல்லது தானே தீ.
மக்கள் எல்லாரும் ஆரோகியமா இருக்காங்கன்னு தானே அர்த்தம்.
அது நல்லது தானே.”

“அது என்னவோ உண்மை தான்.
ஆனா இப்ப இருக்குற இந்த பான்டமிக் காலத்துல அது எப்படி சாத்தியம்?”

“தீ என்ன பேசற நீ.
ஆக்ட்சுவலி இந்த பான்டமிக் நம்ம மக்களுக்கு ஒரு நல்லத செஞ்சிருக்கு தெரியுமா?”

“அப்படியா?”

“ஆமாம்.
முன்பெல்லாம் ஏதாவது ஒரு சின்ன வலின்னா கூட உடனே ஹாஸ்பிடல் வந்திடுவாங்க.
ஆனா இப்போ எதுவந்தாலும் ஹாஸ்பிடல் பக்கம் போயிடக்கூடாதுன்னு இல்ல நெனைக்கறாங்க!
பழையபடி வீட்டு வைத்தியத்துலேயே சரி செஞ்சுக்க பார்க்கறாங்க.
இதுவும் நல்லது தானே.”

“ம்…ஆமாம் ஆமாம்.
அது சரி தான்.
சரி வசு ரிசல்ட் எப்ப வரும்?”

“அது ஒரு த்ரீ ஆர் ஃபோர் அவர்ஸ்க்குள்ள வந்திடும்.
நான் உனக்கு வாட்ஸ்அப் பண்ணறேன்‌.
ஆர் எல்ஸ் சாயந்தரம் டின்னருக்கு வீட்டுக்கு வாயேன்.”

“ஓ! டின்னர் தந்து ப்ளட் ரிசல்ட் தர்ற நீங்க ரெடின்னா!
நானும் வந்து டின்னர் சாப்டுட்டு ரிசல்ட்டை வாங்கிக்க ரெடி தான்.”

“ஓகே தென்.
வீ வில் மீட் அட் செவன் தர்ட்டி அட் மை ரெஸிடன்ஸ்.
மறந்திடாத சக்தி”

“டோன்ட் வரி வசு.
நிச்சயமா வரேன்.
போன தடவ மாதிரி மறக்க மாட்டேன்.
லாவ் கிட்ட சொல்லு அவளோட அந்த லக்கி டாலுக்கு எக்ஸ்ட்ராவா ஒண்ணு கொண்டு வரேன்னு.”

“ம்.‌..ஹும்…நான் மாட்டேன்.
அப்புறம் நீ வீட்டுக்கு வரவரைக்கும் அதைப் பத்தியே கேட்டு கேட்டு என்ன நச்சரிப்பா.
நீ கொண்டு வந்து குடுக்கும்போதே தெரிஞ்சுக்கட்டும்.”

“ஓகே தென்.
பை ஃபார் நவ்.”

“பை தீ.”

ஹாஸ்பிடலில் இருந்து சக்தி வெளியே செல்லும் போதே மணி நான்காகி இருந்தது. நேராக அவள் வீட்டுக்குச் சென்றாள். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மிஸர்ஸ் டேவிட் சக்தியின் கார் வந்து அவள் வீட்டு வாசலில் நின்றதும்

“ஹாய் தீ.
நேத்து ஆஃபீஸ் போகும்போது பார்த்தது.
எப்படி இருக்க மா?”

“நான் நல்லா இருக்கேன் மிஸ்ஸர்ஸ் டேவிட் நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்னமா அதே ரொட்டீன்.
போரடிக்குது.
ஆமாம் நீ ரொம்ப டல்லா இருக்கயே!!
ஏன்?”

“அப்படியா!
எனக்கு ரொம்ப தூக்கம் வருது அதுதான்.”

“அப்படீன்னா ஏன் என்கூட பேசி நேரத்த வேஸட் பண்ணற?
போய் தூங்கு தீ‌.
இப்போ தூங்கினா தான் உண்டு”

“ஏன் அப்படி அலுத்துக்கிட்டே சொல்லறீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்?”

“ஆமாம் மா.
இதோ எங்க வயசுல மாத்திரைப் போட்டுக்கிட்டாலும் தூக்கம் வரமாட்டேன்னு வம்பு பண்ணுதே!
அதுனால தான் அப்படி சொன்னேன்.
போ போ போய் தூங்கு”

“ஓகே.
பை.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”

“யூ டூ பேபி.
ஃபர்ஸ்ட் கோ அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் மை ச்சைல்டு”

மிஸ்ஸர்ஸ் டேவிட்டுடன் பேசி விட்டு சக்தி உள்ளே நுழைந்ததும் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் பொத்தென்று படுத்துக் கொண்டதும் உறங்கிப்போனாள்.
யாரோ கதவைத் திறந்து உள்ளே வந்த சப்தம் கேட்டு ப்ளூ மெல்ல சோபாவிற்கு பின்னாலிருந்த அடுப்படியிலிருந்து எட்டிப்பார்த்தது. யாருமில்லை என்றெண்ணிக் கொண்டே திரும்பும் போது சோபாவின் மேல் ஒரு கை இருந்ததைப் பார்த்தது. உடனே சோபா அருகே வந்து சக்தி நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் உள்ளே சென்று க்வில்ட் எனப்படும் மெல்லிய மெத்தையைக் கொண்டு வந்து அவளுக்கு போர்த்திவிட்டது. பின்பு ப்ளூ மீண்டும் அடுப்படியில் அதன் வேலையை செய்யத் துவங்கியது. வீடே அமைதியாக இருள் சூழ்ந்து ஹாலில் ஒரே ஒரு சின்ன விளக்கை மட்டும் போட்டிருந்தது ப்ளூ. சட்டென்று எழுந்துக் கொண்ட சக்தி தனது கைகடிகாரத்தைப் பார்த்தாள்.

“அச்சச்சோ டைம் ஏழேகால் ஆ!!”

“ம்…என்ன ஆச்சு தீ?
ஏன் கத்தின?”

“மணி ஏழேகால் ஆயிடுச்சு ப்ளூ.
என்ன ஒரு ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருக்கலாம் இல்ல ப்ளூ”

“நல்லா இருக்கே நீ சொல்லறது!
உன்ன ஆறு மணிக்கு எழுப்பி விடணும்னு என்கிட்ட சொல்லிட்டா படுத்த?
சரி சரி அதுக்கென்ன இப்போ.
நல்லா தூங்கின தானே.
விடு தீ.
வா வா டின்னர் சாப்பிடு.
எல்லாம் ரெடியா இருக்கு.”

“ஓ நோ ப்ளூ.
சாரி நான் இன்னைக்கு டின்னருக்கு வசு வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கேன்.
நான் அங்க போகணும்.
ஸோ சாரி ப்ளூ.
நீ செஞ்சதை ஃப்ரிட்ஜில வச்சுடு.
நாளைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு சாப்ட்டுக்கறேன்.”

“ம்…ம்…சரி சரி.
ஆமாம் வசுங்கறது உன் பெஸ்ட் பிரெண்டு அந்த டாக்டர் தானே?”

“ஆமாம் ஆமாம்.
அவங்களே தான்.
இன்னைக்கு ப்ளட் டெஸ்ட்டுக்கு போயிருந்தேன் இல்ல
அப்ப அவங்க டின்னருக்கு என்ன இன்வைட் பண்ணினாங்க.
அதுக்கு தான் கிளம்பிட்டிருக்கேன்”

“அவங்க பொண்ணுக்கு தானே எனக்கு ரொம்ப பிடிச்ச எலிஸைக் கொண்டு போய் குடுத்துட்ட.”

“அந்த பொண்ணுக்கு உன் எலிஸை ரொம்ப பிடிச்சுப் போயிடுத்தாம்.
தெரியுமா!”

“என் எலிஸ யாருக்கு தான் பிடிக்காது! ம்…”

“அட அட அட!! ப்ளூ டூ மச்.
உன் எலிஸுக்கு பேசக்கூடிய தன்மையை கொடுக்குற வாய்ஸ் டூல் ஐ இன்னைக்கு பிக்ஸ் பண்ணிக் குடுக்கப் போறேன்.”

“அப்போ என் எலிஸ் இனி பேசுவாளா?
ஆனா நான் கேட்க முடியாதே!”

“என்னமோ காதல் ஜோடிய நான் பிரிச்சா மாதிரி இருக்கு உன் பேச்சு.”

“பின்ன இல்லையா?”

“ஓ!!! ஓகே ஓகே.
இப்போ இந்த எலிஸ் போனா என்ன நான் உனக்கு புதுசா ஒரு ஏன்ஜல் செஞ்சு தரேன்.
என்ன சொல்லற?”

“ம்‌…அப்படீன்னா உனக்கு உன் விஷாலுக்கு பதில் ஒரு திஷால தரேன்னா நீ ஒத்துப்பியா?”

“ப்ளூ நீ வர வர ரொம்ப பேசற.”

“பதில் சொல்லு தீ”

“போ ப்ளூ விளையாடாதே.
நான் இப்போ வசு வீட்டுக்கு போறேன்.
வர்றதுக்கு எப்படியும் நைட் பத்து மணி ஆகிடும்.
அப்பா அம்மா கால் பண்ண மாட்டாங்க சப்போஸ் பண்ணினாங்கன்னா நான் வசு வீட்டுக்கு போயிருக்கறதா சொல்லிடு.
ஓகே பை ப்ளூ.”

“ம்…ம்…பை தீ.”

என்று தன் வீட்டிலிருந்து வசுந்தரா வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது சக்தி தனக்குத்தானே

“வர வர இந்த ப்ளூவோட பேச்சு நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கறா மாதிரி எனக்குத் தெரியுது.
அது ஏன்?
எப்படி?
எதுக்குன்னு நான் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.
இந்த விஷாலுக்கு எத்தனைத் தடவ கால் பண்ணறது.
அவன் ஏன் ஃபோன் அட்டென்ட் பண்ணகூட மாட்டேங்கறான்?
ஆமாம் அவனுக்கும் கோபமிருக்காதா?
ரெண்டாவது தடவையா சொல்லாம கொள்ளாம இருந்திருக்கேன்.
சரி வசு வீடு வந்திடுச்சு.
இங்க டின்னர முடிச்சுட்டு வீட்டுக்கு போனதும் மறுபடியும் விஷாலுக்கு கால் பண்ணுவோம்‌.”

“ஹாய் தீ ஆன்டி”

“ஹாய் லாவ் குட்டி.
வாசல்ல என்ன பண்ணிட்டிருக்க?”

“உங்களுக்காக தான் வெயிட்டிங் ஆன்டி.”

“ம்….அப்படியா.
இந்தா சாக்லேட்ஸ்.”

“வாங்க உள்ள போகலாம் ஆன்டி. அம்மா பாட்டி தாத்தா எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட்டிங்”

“ம்…வா போகலாம்.”

“ஹாய் சக்தி வாமா வா. எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் அம்மா.
நல்லா இருக்கேன் அப்பா.
நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?”

“எங்களுக்கென்னமா அதே ஒரே ரொடீனான லைஃப்‌.
அதுல கொஞ்சம் சுவாரஸ்யம் குடுக்கறது நம்ம லாவ் தான்.”

“ஆங் இவ போதுமே டைம் போறதே தெரியாதே”

“ஹாய் தீ வா வா.
இந்தா ஜூஸ் எடுத்துக்கோ”

“தாங்கஸ் வசு.”

“அம்மா தாத்தாக்கு பாட்டிக்கு அன்ட் எனக்கு?”

“இதோ எல்லாருக்கும் கொண்டு வந்திருக்கேன் மா.
எல்லாரும் எடுத்துக்கோங்க”

“ஆங் லாவ் உன்னோட லக்கிக்கு நான் வாய்ஸ் எனேபிள் பண்ணப்போறேனே.”

“அப்படீன்னா?”

“அப்படீன்னா இன்னேலேந்து உன்னோட லக்கி கிட்ட நீ பேசலாமே”

“நான் தான் எப்பவும் அது கூட பேசிகிட்டிருக்கேனே ஆன்டி”

“இனி அதுவும் உன்கூட பேசும். ஹாப்பியா?”

“அய்யா ஜாலி ஜாலி.”

“ம்…இதோ ஆல் செட்.
இப்போ நீ அதுகூட பேசலாம் அதுவும் உனக்கு ரிப்ளை பண்ணும்.”

“தாங்க்ஸ் ஆன்டி. நான் போய் இதுகூட பேசிப் பார்க்கறேன்”

“ம்…ஓகே லாவ்.
வசு என்னோட ரிப்போர்ட்ஸ் வந்துடுத்தா?”

“அவளோ தான்.
இனி அடுத்த ஒரு வாரத்துக்கு அவளுக்கு சாப்பாடு தூக்கம் எதுவுமிருக்காது.
ஆங் வந்திடுச்சு தீ.
மொதல்ல டின்னர் சாப்டுட்டு பிறகு அதைப் பத்தி பேசலாம்.
எல்லாரும் வாங்க டின்னர் சாப்பிடலாம்.
லாவ் வாடா கண்ணா.
சாப்டுட்டு போய் விளையாடு”

“அம்மா நான் அப்பறமா சாப்டுறேன்.
இப்போ எனக்கு வேண்டாம்.”

“விடு மா வசு.
நாம சாப்டுட்டு அவளுக்கு நான் போய் ஊட்டி விடுறேன்.
சாயந்தரம் தான் வடை எல்லாம் சாப்பிட்டிருக்கா”

“சரி வா தீ நாம சாப்பிடலாம்.”

“டின்னர் ரொம்ப சூப்பரா இருந்தது வசு. ரொம்ப தாங்க்ஸ் ஃபார் திஸ் லவ்லி டிலீஷியஸ் புஃட்”

“எல்லாம் அம்மா பண்ணினது தான் தீ.
நான் இன்னைக்கு வீட்டுக்கு வந்ததே ஏழு மணிக்கு தான்.
நான் வந்து ஜூஸ் மட்டும் தான் போட்டேன்”

“ஓ அப்படியா.
அம்மா சூப்பர் சாப்பாடு.
ரொம்ப தாங்க்ஸ் மா.”

“அதெல்லாம் எதுக்குமா.
நீயும் எங்க பொண்ணு மாதிரி தானே மா.”

“ஸோ நைஸ் ஆஃப் யூ அம்மா.”

“சரி அம்மா நீங்க நம்ம லாவ்க்கு சாப்பாடு ஊட்டறேங்களா?”

“ஆங் சரி மா வசு.
இதோ எல்லாம் எடுத்துக்கிட்டேன்.
அவ கிட்ட போய் உட்கார்ந்து ஊட்டிவிட வேண்டியது தான்.
நீ போய் சக்திக் கூட பேசிட்டு இருமா.
லாவ்வ நாங்க பார்த்துக்கறோம்.”

“ஓகே மா.
தீ வாங்க நாம மேல போகலாம்.”

“என்ன ஆச்சு வசு?
என் ரிப்போர்ட் என்ன ஆச்சு?
ஏன் ஒரு மாதிரி இருக்க வசு?”

“அது வந்து தீ.
உன் பேரன்ட்ஸ் யூகிச்சது சரி தான்.”

“அப்படீன்னா?”

“ஆமாம் தீ உனக்கு யாரோ எந்த விதத்திலயோ செடெடிவ் குடுத்திருக்காங்க.
உன் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்ல இருந்துது.
அது ஒரு வகையான கான்ஷியஸ் செடடிவ்.
அது ஐவி வழியா குடுத்தா தான் சட்டுன்னு வேலை செய்யும் இல்லாட்டி அது மெதுவா தான் வேலை செய்யும்.
நீ சொன்னத வச்சுப் பார்த்தா. உனக்கு அது மெதுவா தான் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு.
ஆக்ச்சுவலி இது ஷார்ட் டெர்ம் செடடிவ் தான்.
ஆனா உனக்கு அது மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கலாம் அது ஐவி த்ரூவா குடுத்திருக்கலாம் அப்படீங்கறது என்னோட யூகம் தான். ஏன்னா நீ விடியற்காலை வரைக்கும் மயக்கத்துல இருந்திருக்க.”

“ஆனா மறுபடியும் குடுக்கணும்னா!! அப்போ என் காருக்குள்ள வச்சே எனக்கு குடுத்திருக்காங்களா?
இல்லையே என் கார் பூட்டினது பூட்டினபடியே தானே இருந்தது”

“என்ன தீ !!
இந்த காலத்துல காரை சாவியே இல்லாம தொறக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல பா.
அதை விடுங்க உனக்கு யார் முதல்ல குடுத்திருப்பா?
ஏன்?”

“ஆமாம் இல்ல.
யாரா இருப்பாங்க?
எனக்கு எதிரிங்கன்னு யாருமே இல்லையே வசு.
அப்புறம் நான் யாரன்னு யோசிக்கறது.
எல்லாரும் என்னோட நல்லா தான் பழகுறாங்க.
நான் யாரன்னு சந்தேகப்படுவேன்?”

“நல்லா யோசி தீ.
உனக்கே தெரியாமா உனக்குத் தரப்பட்டிருக்கு.
அது ரொம்ப தப்பு.
யாரோ உனக்கு ரொம்ப பக்கத்துல இருக்கறவங்க, ரொம்ப பழக்கமானவங்க, நெருக்கமானவங்க, உன்னோட ஆக்டிவிடிஸ் நல்லா தெரிஞ்சவங்க தான் இதை முதல்ல உனக்கு தந்திருக்கணும்.
ஸோ பொறுமையா யோசிச்சு கண்டு பிடி.
இல்லாட்டி அது மறுபடியும் நடக்க வாய்ப்பிருக்கலாமில்லையா.
யூ ஹாவ் டு பீ எக்ஸ்ட்ரீமிலி கேர்ஃபுல்”

“அய்யோ எனக்கு தலையே சுத்துது வசு.
என்னால யாரையுமே சந்தேகப் பட முடியலையே.
யாரன்னு நான் சொல்லுவேன்?”

“நிச்சயம் உனக்கே தெரியாம உனக்கு ஒரு துரோகி இருக்காங்க.
அதுவும் உங்க கூடவே பயணிக்கறாங்க.
அது யாரு என்னன்னு சீக்கிரம் கண்டு பிடி தீ.
இல்லாட்டி வர்றீங்களா நாம போய் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு வரலாம்.”

“என்னன்னு கம்ப்ளெயின்ட் பண்ணுவேன் வசு?
யாரன்னு கை காட்டுவேன்?
எப்போ எப்படி இப்படி நடந்துதுன்னு சொல்லுவேன்?
ஏன்னா எனக்கே எதுவும் தெளிவா இல்லன்னா…
நான் போலீஸ்க்கு எப்படி என்னத்த சொல்லுவேன்?
அதுவுமில்லாம அங்க எல்லாம் போனோம்னா அது எவ்வளவு பெரிய ப்ரொஸீஜர்ஸ் எல்லாம் ஃபாளோ பண்ண வேண்டியிருக்கும்.”

“அதுக்காக அப்படியே விட்டுவிடறதா தீ?”

“இல்ல இல்ல!
அதுதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்.”

“ஆங்…பேசாம என்னோட பிரெண்டோட பிரதர் இந்த நாட்டுக்காரர் தான்.
அவரு இந்த டிராஃபிக் போலீஸா தான் இருக்காருன்னு நெனைக்கறேன்.
நான் அவங்ககிட்ட கேட்டு நீங்க அந்த ஹைவேல இருந்த அந்த பதிமூணு மணிநேரம் என்ன நடந்ததுன்னு அவங்களோட சிசிடிவி ல பார்த்து சொல்ல சொல்லறேன்.”

“அது முடியுமா வசு?”

“லெட் அஸ் ட்ரை.
ஆனா நீயும் இனி ஜாக்கிரதையா இரு தீ.”

“ம்…தாங்க்ஸ் வசு.
சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்.”

“யூ ஆர் கன்ஃப்யூஸ்டு நவ்.
பேசாம இங்கேயே இருந்துட்டு காலையில போயேன் தீ”

“ஓ…நோ நோ வசு.
நான் போயே ஆகணும்.
ஆஃபீஸுக்கு நேத்து ஹாஃப் எ டே லீவ் போட்டேன்
இன்னைக்கு போகவேயில்ல.
நாளைக்கு காலையில சீக்கிரம் போகணும். இல்லாட்டி இருந்திருப்பேன்.
ஆம் சாரி வசு.”

“இட்ஸ் ஓகே தீ”

“வசு நீ கொஞ்சம் உன் பிரெண்டுட்ட சொல்லி அந்த சிசிடிவி ல என்ன இருந்ததுன்னு சொல்ல சொல்லு பா.”

“நிச்சயமா நான் அவங்க கிட்ட இப்பவே கூப்பிட்டு சொல்லறேன்.
கவலைப் படாம பத்திரமா வீட்டுக்கு போயிட்டு வா தீ.
பை பை.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் தீ.”

“யூ டூ வசு.
அப்பா அம்மா நான் போயிட்டு வரேன்.
லாவ் பை.”

“பை மா.”

“பை அன்டி.”

வசுந்தரா வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு செல்லும் வரையிலும் சக்தி தனக்கு மயக்கமருந்து கொடுத்தவர் யாராக இருக்கக்கூடும் என்ற குழப்பத்திலேயே
சென்றாள்.

தொடர்வாள்…
































சக்தி பாரிஸ் போகவில்லை என்று அவளே சொன்னதைக் கேட்டு மீண்டும் குழப்பமடைந்த நவீன் மிருதுளா இருவரும் தெளிவு பெறவேண்டி சக்தியிடம் கேட்ட கேள்விகளுக்கு சக்தி

“அப்பா… அப்பா…அப்பப்பா…
எத்தனை கேள்விகள்?
இருங்கோ இருங்கோ…
கூல் கூல்…”

“சக்தி விளையாடாத.
அப்பா கேட்டதுக்கு பதில் சொல்லுடி”

“அம்மா…
சொல்லத்தானே கால் பண்ணிருக்கேன்.”

“அப்போ சொல்லு.”

“நீங்க ரெண்டு பேரும் என்னை எங்க சொல்ல விட்டேங்கள்?
மாறி மாறி பேசிண்டும்.
கேள்வி மேல கேள்வி கேட்டுண்டும் இருந்தா!
என்னையும் பேச விடணும் இல்ல.”

“சரி விட்டுட்டோம் சொல்லு மா.”

“நான் மீட்டிங் முடிச்சுட்டு ஆஃபிஸ் கேன்டீன்ல ஒரு சான்ட்விச் சாப்டுட்டு என்னோட கார்ல பாரீஸ் போலாம்னு கிளம்பினேன்.
ஒரு ஒன்றர மணிநேர டிராவல் பண்ணினதும் எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது.”

“என்ன மாதிரி இருந்தது சக்தி மா?”

“இருங்கோ நவீ அவ முழுசா சொல்லட்டும்.
நீ சொல்லுமா சக்தி”

“ஒரு மாதிரின்னா…
ஏதோ தல சுத்தற மாதிரி இருந்துது.
நானும் வண்டிய ஸ்லோ பண்ணி ஓட்டினேன்.
ஆனா அடுத்த ஒரு பத்து நிமிஷத்துல எல்லாம் அப்படியே ப்ளாக் அவுட் ஆகறா மாதிரி இருந்தது.
உடனே வண்டியை ஹைவேலேந்து சைட் லேனுக்கு கொண்டு போய் அங்க நிப்பாட்ட நெனெச்சேன்.
ஆனா அந்த லேன்ல எனக்கு முன்னாடி ஏதோ ஒரு பெரிய கண்டெய்னர் வண்டி நின்னுண்டிருந்தா மாதிரி இருந்தது அவ்வளவு தான் எனக்கு தெரியும்.
அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியலை.
காலங்காத்தால சட்டுன்னு முழிப்பு வந்துப் பார்த்தா
அதே லேன்ல என் காருக்குள்ள இருந்தேன்.
ஆனா என் காருக்கு முன்னாடி அப்போ அங்க அந்த கண்டெயினர் வண்டி இருக்கல.
அப்போ தான் நான் மயக்கமாயிருப்பேன்னு நெனச்சு என் ஃபோன தேடி எடுத்தேன்.
பார்த்தா சுவிட்ச்டு ஆஃபா இருந்தது.
அங்க தான் எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.”

“என்ன கன்ஃப்யூஷன் சக்தி?”

“நான் மயக்கமாகறதுக்கு முன்னாடியே என்னோட ஃபோன ஆன் பண்ணி எமர்ஜன்சிக்கு கால் பண்ண ட்ரை பண்ணினதா எனக்கு ஞாபகம்.
ஆனா நான் மயக்கம் தெளிஞ்சதும் ஃபோன் மறுபடியும் சுவிட் ஆஃப்லயே தான் இருந்தது.
அப்படின்னா நான் சுவிட்ச் ஆன் பண்ணவேயில்லையா?
ஆன் பண்ணறதுக்குள்ள மயங்கிட்டேனா?”

“அப்படியே இருந்தாலும் சக்தி!
நீ மயக்கமானது எப்படியும் உங்க ஊரு மத்தியானம் ஒரு பன்னெண்டு பன்னெண்டர மணி இருக்குமா?”

“ஆங் இருக்கும் பா”

“அப்போ நீ மத்தியானம் பன்னெண்டர மணிலேந்து இன்னைக்கு விடியக்காலை வரைக்கும் உன் காருக்குள்ளேயே மயங்கிக் கிடந்தன்னு சொல்லறயா சக்தி?”

“அப்படித் தான்னு நெனைக்கறேன்.
ஏன்னா நான் மயக்கமாகும் போது என்னோட கார நிப்பாட்டின இடத்துலேயே தான் முழிச்சுப்பார்க்கும் போதும் நின்னுண்டிருந்தேன்.”

“நீ சொல்லற படிப்பார்த்தா எப்படியும் ஒரு பதிமூணு டூ பதிநாலு மணிநேரமா ஹவே சைடு லேன்ல உன் காருக்குள்ளயே மயங்கி கிடந்திருக்க.
இல்லையா?”

“ஆமாம் பா.”

“நீ மயக்கத்துல கார நிப்பாட்டிருக்க அப்படீன்னா நிச்சயம் ஒழுங்க நிப்பாட்டிருக்க வாய்ப்பில்ல.
நீ முழிச்சதும் உன் கார் சரியா பார்க் பண்ணிருந்ததா?”

“நான் கவனிக்கலப் பா.
நான் முழிச்சதும் டைம பார்த்தேன்.
அய்யோ நடு ஹைவேல இருக்கோமேன்னு நெனச்சேன்.
உடனே கார திருப்பிண்டு நேரா ஆத்துக்கு வந்துட்டேன்.”

“அதுவுமில்லாம அவ்வளவு நேரமா எப்படி அப்படி ஒரு கார் ஹைவேல நிக்கறத உங்க ஊரு ஹைவே பெட்ரோலிங் போலீஸ்கார கவனிக்காம இருந்திருப்பா?”

“எனக்குள்ள இருக்கற பெரிய டவுட்டும் அதுதான் பா.
ஒரு வேளை அவா அன்னைக்கு ஹைவே பெட்ரோலிங்குக்கு வரலயோ என்னவோ!
ஏன்னா அவா வந்திருந்தான்னா…நிச்சயம் என்ன அப்படி அங்க மயக்கமாவே விட்டுருக்க மாட்டா.
உடனே என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருப்பா.
அன்ட் என் காரையும் அங்கேந்து அகற்றிருப்பா.
ஏன்னா பதிமூணுமணிநேரம் ஈஸ் டூ மச் டைம்.”

“அதுதான் நானும் சொல்லறேன் சக்தி.
அப்படி பதிமூணு மணிநேரமெல்லாம் பெட்ரோலிங்க பண்ணாம இருக்க மாட்டா!”

“அதெல்லாம் இருக்கட்டும் நீ நல்லா தானே இருக்க சக்தி?”

“அம்மா ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட்.
எனக்கு எந்த வித சேதமுமில்ல.
நான் எப்படி டிரைவ் பண்ணிண்டே மயங்கினேனோ அதே மாதிரி தான் உட்கார்ந்துண்டிருந்தேன்.
என் உடம்புலேயும் எந்த விதமான காயங்களும் இல்ல.
போதுமா!”

“அதுக்கில்ல சக்தி!”

“அம்மா எனக்கு உன்னோட கவலைப் புரியறது மா.
ஆனா இது எப்படி? எதுக்கு? அப்படீங்கற கேள்விகள் தான் இப்போ என் மனசுல ஓடறது.”

“நீ எதுக்கும் ஹாஸ்பிடல் போய் ஒரு டெஸ்ட் எடுத்துண்டு வந்துடேன் சக்தி!
ஏன் மயக்கம் வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமே.
இது மாதிரி உனக்கு முன்னாடி எப்பவாவது வந்திருக்கா?”

“இல்லப்பா இது தான் ஃபர்ஸ்ட் டைம்.”

“நீ நேத்து என்னென்ன சாப்ட்ட?
எங்க சாப்ட்ட?”

“காலையில ப்ளூ தான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு தந்தான்.
அதை சாப்டேன்”

“ப்ளூவா அது ஏன் உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு தந்தது?
எப்பவும் நீ தானே பண்ணிப்ப?
அது டின்னர் மட்டும் தானே பண்ணும்.”

“ஆமாம் மா.
ஆனா நேத்து நான் சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்ததாலையும்,
நேத்து டின்னர் விஷாலோட சாப்ட போறேன்ங்கறதாலையும்,
ப்ளூ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணித்து”

“சரி அதுக்கப்புறம் என்ன எங்க சாப்ட்ட இல்ல குடிச்சன்னு நல்லா யோசிச்சுப் பாரு சக்தி.”

“ம்…அப்புறமா ஆஃபீஸ்ல மீட்டிங் போது ஒரு காஃபி குடிச்சேன்.
அதுக்கப்புறமா கேன்டீன்ல ஒரு சான்ட்விச் சாப்டேன்…”

“ம்…அதுக்கப்புறமா நீ ஒண்ணுமே எங்கயுமே எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லையா?”

“ம்…ம்…ஆங்!! சான்ட்விச் சாப்பிட உட்கார்ந்தேனா அப்போ ரூத்ரா ஒரு டெட்ரா பேக் ஜூஸ் வாங்கித்தந்தா.
அதைக் குடிச்சேன்.
அவ்வளவு தான்.
அதுக்கப்பறமா நான் வேற எதுவுமே சாப்பிடல குடிக்கல.
ஏன்ப்பா உன் பொண்ணுக்கு யாராவது எதையாவது கலந்துக் குடுத்துட்டாளான்னு நெனக்கறையா?”

“காலம் கெட்டுக்கடக்குமா”

“எனக்கு யாருப்பா எதிரி இருக்கா?
அதுமாதிரி எல்லாம் பண்ண?
அப்படியே குடுத்திருந்தாலும் அதுல எந்த மோட்டிவும் இருக்கறா மாதிரி தெரியலையே!”

“என்ன மிருது மோட்டிவ் இல்லங்கற!”

“என்னவா இருக்கும்?”

“ஒரு வேள டிரைவிங் பண்ணும்போது நீ மயக்கமடஞ்சு ஆக்ஸிடென்ட் ஆகணுனு கூட இருக்கலாம் இல்லையா!”

“அச்சச்சோ! சக்தி யாருமா இதை செஞ்சிருப்பா?”

“அய்யோ அப்பா அன்ட் அம்மா.
ரெண்டு பேரும் ஷெர்லாக் ஹாம்ஸா மாறவேண்டாம்.
எனக்கு தெரிஞ்சு சம் விட்டமின் டெஃபிஷியன்சியா இருக்கும்.
அவ்வளவு தான்.
அதுக்குள்ள ரெண்டு பேருமா ஏதோ பெரிய த்ரில்லர் பட ரேஞ்சுக்கெல்லாம் பில்ட்அப் பண்ணாதீங்கோ”

“அதுக்கில்ல சக்தி.
எதுக்கும் நீ குளிச்சுட்டு போய் டாக்டர பார்த்து ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துண்டு வா”

“ஓகே பா.
நான் பண்ணறேன்.
டோன்ட் வரி.
எனக்கு ஒண்ணுமே இல்ல.
நான் நன்னா இருக்கேன்.
நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருங்கோ.
நான் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் உங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணறேன்‌.
ஏன்னா நீங்க அப்போ நல்லா தூங்கிண்டிருப்பேங்கள்.
சரியா”

“ம்…அது ஓகே.
ஆனா விஷாலோட பேரன்ட்ஸ் நேத்து உனக்காக கால்ல வெயிட் பண்ணிண்டிருந்திருப்பாளே தீ!
அவாள்ட்ட என்னன்னு சொல்லுவ?”

“ம்…அப்பாடா அப்பா நார்மல்சிக்கு ரிட்டர்ன் ஆயிட்டா”

“ஏன்?
எத வச்சு சொல்லற தீ?”

“இதோ இப்போ சொன்னயே “தீ” ன்னு அத வச்சு தான்.”

“ம்…ஆமாம் மா நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பரிதவிச்சுப் போயிட்டோம்.
சரி அவள்ட்ட என்ன சொல்லப் போற?”

“நடந்தத சொல்லுவேன்.
மொதல்ல விஷால்ட்ட சொல்லுவேன்.
அவன் அவனோட அப்பா அம்மாட்ட சொல்லிப்பான்.
உங்களோட பேசி முடிச்சதும் அடுத்தது விஷாலுக்கு தான் பண்ணனும்.”

“சரி சரி நீ விஷால்ட்ட பேசி எக்ஸ்ப்ளேயின் பண்ணிக்கோ.
மொதல்ல டாக்டர்ட்ட போ.
சரியா”

“ஓகே டன்.
விஷால்ட்ட பேசி முடிச்சதும் டாக்டர்ட்ட போறேன்.
ஓகே பை.
டேக் கேர்.
லவ் யூ அப்பா அன்ட் அம்மா”

“வீ டூ லவ் யூ டா கண்ணா.
பத்திரமா இருமா.
பை”

என்று தன் பெற்றோருடன் பேசி முடித்ததும் சக்தி தனக்குள்

“ம்…அப்பா சொல்லறதுலேயும் ஏதாவது இருக்கலாம்.
டாக்டர் டெஸ்ட் பண்ணி சொன்னா தெரிஞ்சுடும்.
ஆனா அதுக்கப்புறம் அது யாரா இருக்கும்ன்னு ஒரு கன்ஃப்யூஷன் வருமே!!
அதை டெஸ்ட் ரிசல்ட்டுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.
இப்போ வி க்கு கால் பண்ணி சொல்லுவோம்.
பாவம் அவனும் டென்ஷன்ல இருப்பான்.”

என்று விஷாலுக்கு கால் செய்தாள் சக்தி. ரொம்ப நேரம் அவன் கைபேசி ஒலித்தும் அவன் எடுத்துப் பேசவில்லை. மீண்டும் முயற்சித்தாள். ஆனால் அவனிடமிருந்து பதிலில்லை. உடனே மொபைலை மெத்தை மீது வைத்துவிட்டு

“இந்த ப்ளூ எங்க காணவே காணம்.
ப்ளூ ப்ளூ.
எங்க போயிருப்பான்?
வீட்டைவிட்டு வெளியே போக மாட்டானே.
ஆங் பேஸ்மென்ட்ல சார்ஜிங் ஸ்டேஷன்ல இருப்பான்.
போய் பார்கறேன்”

என தனக்குத் தானே பேசிக்கொண்டே அவள் வீட்டின் பேஸ்மென்ட்டுக்குச் சென்று பார்த்தாள். அவள் நினைத்ததுப் போலவே ப்ளூ சார்ஜிங் ஸ்டேஷனில் இருந்தது. அதனருகே சென்று

“ப்ளூ இப்ப எல்லாம் நீ அடிக்கடி இங்க வந்து செட்டில் ஆகிடற!!
என்ன விஷயம்?
உனக்கு என்ன ஆச்சு?”

என்று சார்ஜிங் ஸ்டேஷன் சுவிட்ச்சை பிடுங்கிவிட்டாள் சக்தி. அதிலிருந்து வெளிவந்ததும் ப்ளூ சக்தியைப் பார்த்து…

“ஹாய் சக்தி”

“ஹாய் ப்ளூ”

“என்ன? நீ எங்க போன?
விஷால பார்க்கபோன சரி.
உங்களுக்குள்ள நீங்க பேசிட்டிருக்கும் போது
நான் டிஸ்டர்ப் பண்ணிடுவேனோன்னு தானே உன் மொபைல சுட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்த?”

“ம்…ஆமாம் ஆமாம்.
நீ தான் எங்க லவ்வுக்கு வில்லன்.
போதுமா.
வா வா.
உள்ள போகலாம்.”

“நான் வில்லனா ஆனா என்ன ஆகும் தீ?”

“நீயா?
வில்லனா?
ஹா! ஹா! ஹா!
காமெடி பண்ணாத ப்ளூ.”

“ம்…ம்…சரி விஷாலோட உன் மீட்டிங் எப்படி இருந்தது?”

“எங்க நான் தான் பாரிஸ் போகவேயில்லையே!”

“அப்புறம் இவ்வளவு நேரமா எங்க போயிருந்த?”

“அது ஒரு பெரிய கதை.
வா சொல்லறேன்.”

என்று தன் அப்பா அம்மாவிடம் கூறியதை ப்ளூவிடமும் பகிர்ந்துக் கொண்டாள் சக்தி. அதைக் கேட்டதும் ப்ளூ சக்தியிடம்

“இவ்வளவு நடந்திருக்கா தீ?”

“சரி அதெல்லாம இருக்கட்டும்.
காலைல நீ ஏன் எனக்கு ரெண்டு தடவ கால் பண்ணின?
நான் அந்த நேரத்துல மீட்டிங் ல இருப்பேன்னு உனக்கு தெரியுமில்ல.
அப்புறம் எதுக்கு தொடர்ந்து கால் பண்ணின?”

“உனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமேன்னு தான் பண்ணினேன்.
நீ தான் என் கால ஐ அட்டென்ட் கூட பண்ணலையே!”

“ஆமாம் ஆமாம்.
உன்னால தான் நான் ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினேன்.
அதுக்கப்புறம் அந்த விஷாலோட நெனப்புல ஆன் பண்ண மறந்துட்டேன்.
இதெல்லாம் என்னோட அப்பா அம்மாவ எவ்வளவு கஷ்டப்படுத்திருக்கு தெரியுமா?
எல்லாம் உன்னாலையும் அந்த விஷாலாலையும் தான்.”

“ம்…”

“என்ன ம்? ப்ளூ”

“ஒண்ணுமில்ல தீ”

“சரி சரி நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரேன் ப்ளூ.”

“ஹாஸ்பிடலா!! எதுக்கு தீ? யாருக்கு என்ன ஆச்சு?”

“யாருக்கும் எதுவும் ஆகல ப்ளூ.
சும்மா ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்துக்கப் போறேன்.”

“ப்ளட் டெஸ்ட்டா!! எதுக்கு?
உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா தீ?”

“இல்ல ப்ளூ.
அப்பாக்கு நான் சாப்பிட்டதுல யாராவது எதையாவது கலந்திருப்பாளோன்னு ஒரு டவுட்.
அதுதான் ஒரு டெஸ்ட் எடுத்தா தெரிஞ்சுடுமேன்னு போறேன்.
நான் வரேன் ப்ளூ.
டேக் கேர்.
பை”

“பை தீ.
என்ன இவ ப்ளட் டெஸ்ட் எடுக்க போறேன்னு கிளம்பி அவ பாட்டுக்குப் போயிட்டா?”

தொடர்வாள்…

ஆடிட் மீட்டிங்கை முடித்துவிட்டு மத்திய சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான் நவீன். பின் காலிங் பெல்லையும் இரண்டு முறை அழுத்தினான். மிருதுளா நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததில் அவளுக்கு கதவு தட்டும் சத்தமோ, காலிங் பெல்லின் சத்தமோ கேட்கவில்லை. நவீன் அவளின் மொபைலுக்கு கால் செய்தான். கொஞ்ச நேரம் ரிங் ஆகி கட்டானது. வீட்டினுள் மொபைல் ஒலிக்கும் சத்தம் வெளியே நவீனுக்குக் கேட்டது ஆனால் மொபைல் பக்கத்திலேயே உறங்கிக் கொண்டிருக்கும் மிருதுளாவுக்கு கேட்கவில்லை. நவீன் அவர்கள் வீட்டு நம்பருக்கு கால் செய்தான். அந்த லாண்ட்லைன் ஃபோனின் சத்தம் மிருதுளாவின் காதைத் துளைத்தது. அவள் விருட்டென எழுந்துக்கொண்டு,

“யாரு அது இந்த நேரத்துல?”

என்று கூறிக்கொண்டே அலுத்துக் கொண்டே ரிசீவரை எடுத்து

“ஹலோ! நான் மிருதுளா பேசறேன்”

“ஹலோ மிருது.
நான் தான் நவீன் பேசறேன்.”

“ம்…சொல்லுங்கோப்பா.
எங்கேந்து பேசறேங்கள்?
மணி ஒன்றரை ஆச்சு எப்போ ஆத்துக்கு வருவேங்கள்?”

“ம்….நான் நம்ம ஆத்து வாசல்லேந்து தான் கால் பண்ணறேன்.
வந்து கொஞ்சம் கதவைத் தொறக்கறையா?”

“ம்…அப்படியா!!

என்று ஜன்னலின் திரைசீலையை அகற்றிப் பார்த்து ரிசீவரை வைத்துவிட்டுச் சென்று கதவைத் திறந்து

“ஏன் ஆத்து வாசல்ல நின்னுண்டு கால் பண்ணினேங்கள்?
காலிங் பெல் அடிச்சிருக்கலாம்!
இல்ல கதவ தட்டிருக்கலாமில்லையா?”

“ரெண்டுமே பண்ணினேன்.
மூணாவதா உன் மொபைலுக்கும் கால் பண்ணினேன்.
நீ எடுக்கலை.
அதுதான் லாண்ட்லைனுக்கு கால் பண்ணினேன்.
உனக்கு என்னமோ ஏதோன்னு பதறிப்போயிட்டேன்.
உனக்கு உடம்பு சரியில்லையா?
டாக்டர் கிட்ட போலாமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நவீ.
நல்லா தூங்கிட்டேன்.
அதுதான்.
சரி நீங்க போய் முகம் கைக்கால் எல்லாம் அலம்பிண்டு வாங்கோ.
நான் தட்டு கரண்டி எல்லாம் எடுத்து வெக்கறேன்”

“ம்…சரி சரி இதோ வந்துயறேன்”

என்று பாத்ரூமுக்குள் சென்ற நவீன் ஃப்ரெஷாகி வெளியே வந்து மிருதுளாவுடன் சேர்ந்து மத்திய உணவருந்தினான். மிருதுளா சாப்பிட்டதும் நவீனிடம்

“நீங்க மறுபடியும் நம்ம ஆஃபீஸுக்கு போக போறேங்களா நவீ?”

“இல்ல நவீ.
நானும் நேத்து நைட்டு சரியாவே தூங்காததால ஒரு மாதிரி இருக்கு அதுனால நல்லா படுத்து தூங்கப் போறேன்.”

“ம்..அதுதான் சரி.
வேற என்ன சொன்னா உங்க பொண்ணு?”

“நான் தான் அவ சொன்னத அப்படியே உன்கிட்ட சொல்லிட்டேனே.
அதுதான்.
வேறெதுவும் அவ சொல்லல.
அதுதான் சாயந்தரமா கால் பண்ணறேன்னு சொல்லிருக்காளே!
அப்போ உன் சந்தேகங்கள் எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கோ.
என்ன பொறுத்த வரைக்கும் அவ ஸேஃபா இருக்கான்னு நான் நம்பறேன்.
அவ்வளவு தான்.”

“ம்…சாயந்தரம் அவகிட்ட பேசிப்போம்.
இப்போ போய் நீங்க படுத்து தூங்குங்கோ.”

நவீன் உறங்கச் சென்று படுத்ததும் மிருதுளா அடுப்படியில் போட்டது போட்டபடி இருந்ததை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஹாலில் சோபாவில் வந்து அமர்ந்தவள் அப்படியே ஒரு பக்கமாக படுத்தாள். மீண்டும் உறங்கிப்போனாள்.

மாலை ஐந்து மணிக்கு எழுந்து முகம் கை கால் கழுவி காபி போட்டு நவீனை எழுப்பி இருவருமாக காபி குடித்துவிட்டு சுவாமிக்கு விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி முடித்தாள் மிருதுளா. மணி ஆறானது.

“என்ன நவீ சக்தி கால் பண்ணுவான்னு சொன்னேங்கள்.
எங்க இன்னும் கால் வரலையே!
அவளுக்கு இப்போ டைம் மத்தியானம் ஒன்றரை ஆகறது.”

“அவ பண்ணறேன்னு சொல்லிருக்கா.
ஸோ பண்ணுவா வெயிட் பண்ணு”

என்று நவீன் பேசி முடிக்கவும் மிருதுளாவின் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. உடனே மிருதுள் எடுத்துப் பார்த்து

“ம்…ம்…அவளே தான்.”

என்று சக்தியிடமிருந்து வந்த வீடியோ கால் ஐ ஆன் செய்தாள் மிருதுளா

“ஹாய் மா.
எப்படி இருக்க?
காலேல உனக்கு நான கால் பண்ணினேன்
நீ எடுக்கவேயில்ல அதுனால அப்பாட்ட பேசினேன்.
ஆமாம் நீ ஏன் கால் ஐ எடுக்கல மா?”

“ஏன்டி நான் உனக்கு நேத்தேலேந்து எத்தனை தடவ கால் பண்ணிருப்பேன் தெரியுமா?
நீ எடுத்தயா?”

“ஓ! பழிக்குப் பழியா மா!
சூப்பர் சூப்பர்”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.
நான் சுவாமிகிட்ட எங்க பொண்ண காப்பாத்துப்பான்னு வேண்டிண்டு இருந்ததுல எடுக்கலை.”

“என்னை எதுக்கு காப்பாத்தணும்?
நான் எதுல இல்ல யார்கிட்ட மாட்டிண்டிருக்கேன் என்னை அந்த சுவாமி காப்பாத்த!!”

“சக்தி விளையாடினது போதும்.
சொல்லு நேத்து நீ எங்க போயிருந்த?
உனக்கு என்ன ஆச்சு?
ஏன் உன் ஃபோன் சிவிட்ச்டு ஆஃப்ன்னே வந்தது?”

“அம்மா அம்மா.
நான் நேத்து ஆஃபீஸ் போயிட்டு ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணினேன்.
அப்போ இந்த ப்ளூ தொணதொணன்னு எனக்கு கால் பண்ணினான்.
அது மீட்டிங்கை அட்டென்ட் பண்ண விடாம டிஸ்டர்ப் பண்ணித்தா.
அதுனால என்னோட ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினேன்.
அதை அப்படியே மறந்துட்டேன்.
அதுக்கப்புறமா ஆஃபீஸ்லேந்து கிளம்பி பாரிஸ்ல விஷாலோட வீட்டுக்கு போறதுக்காக என் கார்ல போயிண்டிருந்தேன்.”

“சரி அதை ஏன் நீ எங்ககிட்ட சொல்லலை?”

“எதை?”

“நீ விஷாலோட ஆத்துக்கு போறதை”

“அது நான் போய் பேசிட்டு வந்துட்டு சொல்லாம்னு நினைச்சேன்!”

“சரி அந்த பையனோட அப்பா அம்மா எல்லாரும் பாரிஸ்ல தான் இருக்காளா?”

“இல்ல அவா எல்லாரும் இந்தியால சென்னைல இருக்கா.”

“அப்புறம் எதுக்காக அவா பேரன்ட்ஸோட பேச நீ பாரிஸ் போகணும்?
உன் வீட்டிலிருந்த படியே வீடியோ கால்ல பேசிருக்கலாமே!”

என்று மிருதுளா கேட்டதும் நவீன்

“அய்யோ மிருது”

என்று தலையில் தன் கையால் தட்டிக்கொண்டான். அதைப் பார்த்த மிருதுளா

“இஸ்”

என புருவத்தை உயர்த்தி நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அப்படி வா வழிக்கு என் மிருது அம்மா.
அப்படீன்னா நான் பாரிஸுக்கு போறதும், விஷால சந்திக்க இருந்ததும், அவன் பேரன்ட்ஸோட பேச போறதும் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு.
ஆனாலும் தெரியாத மாதிரியே கேட்கறதா நெனச்சுண்டு பேசற பெரிய புத்திசாலி அம்மாவே…
ப்ளூகிட்டேந்து கறந்த விஷயங்களா?”

“ஆமாம்.
நேத்து நீ மொபைல கால் எடுக்கலன்னதும் வீட்டுக்கு கால் பண்ணினோம்.
ப்ளூ தான் இந்த விவரங்கள் எல்லாம் சொல்லித்து.
அதெல்லாம் விடு.
சரி அங்க போன வந்த.
உன்னப் பத்தின விவரம் ஏதும் தெரியாம, உன்ன உன் மொபைல்ல கான்டாக்ட்டும் பண்ண முடியாம நாங்க ரெண்டு பேரும் எப்படி தவிச்சுப் போனோம் தெரியுமா!”

“தெரியும்மா.
அதுதான் ஃபோனை ஆன் பண்ணினதும் உனக்கு தானே முதல்ல கால் பண்ணினேன்.
அப்புறம் என்னவாம்.
சரி சரி ஆம் வெரி வெரி சாரி ஃபார் தட்.”

“ம்…ஆமாம் ஆமாம்.
இந்த ரெண்டெழுத்தை சொல்லிட்டா நாங்க பட்ட மனக்கஷ்டம் மறஞ்சுடுமா என்ன?”

“அம்மா அது அஞ்சு எழுத்து வார்த்தை”

“ம்…தமிழ்ல ரெண்டு எழுத்து தான்.”

“இப்போ அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இதுதான் ரொம்ப முக்கியமான டாப்பிக் டு பீ டிஸ்கஸ்டு பாருங்கோ.
இங்க குடு மிருது.
நான் அவகூட பேசட்டும்.
சரி சக்தி கண்ணா பாரீஸ் போனயே விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசினியே அவா எல்லாரும் எப்படிப்பட்டவாளா உன் மனசுக்குப் படறா?
நல்ல மனுஷா தானே!”

“ஆங் நானும் அதைப்பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு நெனச்சேன் சக்தி”

“அப்புறம் என்னத்துக்கு ரெண்டு வார்த்தை அஞ்சு வார்த்தைனுட்டு வார்த்தை விளையாட்டு விளையாடிண்டிருந்தயாம்?”

“நான் அவகிட்ட நல்லா நறுக்கு நறுக்குனு கேட்கணும்னு இருந்தேன்.
ஆனா எல்லாத்தையும் அவளப் பார்த்ததும் மறந்துட்டேன்.
ஆமாம் நீ கால் பண்ண ஏன்டி இவ்வளவு நேரமாச்சு?
நான் உன்கிட்டேந்து எங்க டைம் மூணு மணிக்கெல்லாம் கால் ஐ எதிர்ப்பார்த்தேன்.
தெரியுமா?”

“அம்மா நான் வீட்டுக்கு வந்ததே லேட்டு.
அப்பாட்ட பேசிட்டு நல்லா தூங்கிட்டேன்.
ஒரு மணிக்கு தான் எழுந்துண்டேன்.
நல்ல பசி வேற.
ஸோ ப்ரஷ் பண்ணிட்டு ரெண்டு பிரெட்ட டோஸ்ட் பண்ணிண்டு ஒரு கப் காஃபி போட்டுண்டு வந்து உட்கார்ந்து அதை சாப்டுண்டே உனக்கு கால் பண்ணினேன்.”

“மறுபடியும் டாப்பிக் மாறிடுத்து.
மிருது நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கயா?
சக்தி அப்பா கேட்டதுக்கு நீ ஒண்ணுமே பதில் சொல்லலையே மா!”

“எதுப்பா?”

“அதுதான் நீ பாரீஸ் போனதப் பத்தியும்,
விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசினதப் பத்தியும் அப்பா கேட்டேனே!”

“நான் தான் பாரீஸ் போகவேயில்லையேப்பா.
அப்பறம் எங்கேந்து விஷாலோட பேரன்ட்ஸ்ட்ட பேசறது?”

“என்னது நீ பாரீஸ் போகவே இல்லையா?

என்று நவீனும் மிருதுளாவும் ஒருமித்துக் கேட்டனர்.

“ம்…ஆமாம் நான் பாரீஸ் போகலை.
போகலைங்கறத விட போக முடியலைன்னு தான் சொல்லணும்”

“நாங்க நீ அங்க போனதால தான் வீட்டுக்கு லேட்டா வந்திருக்கன்னு… இல்ல நெச்சிண்டிருந்தோம்.
நீ என்னடான்னா பாரீஸ் போகவேயில்லங்கற!!!
ஒரே குழப்பமா இருக்கு சக்தி.
அப்போ விடியக்காலேல வர எங்கபோயிருந்த நீ?
என்னதான் நடந்தது?”

தொடர்வாள்…

காலை விடிந்து மணி ஏழானது நவீனும் மிருதுளாவும் இரவு முழுவதும் அவர்களின் மகள் சக்தியை எண்ணிக்கொண்டே வெகுநேரம் தூங்காமல் இருந்ததில் மணி ஏழானது கூட தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தனர். சட்டென்று மிருதுளா எழுந்தாள். மணியைப் பார்த்தாள். கடிகாரம் ஏழரை என்றுக் காட்டியது. சக்திக்கு ஃபோன் செய்து பார்ப்போமா என்று நினைத்து மொபைலை எடுத்தவள் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நவீனைப் பார்த்தாள். பின் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்து மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மனம் ஒன்று நினைத்தது ஆனால் கைகள் சக்தியின் நம்பரை அழுத்திட துடித்தது. அவள் சற்று நிதானித்துக் கொண்டு மனம் சொல்வதைக் கேட்கலானாள்.

“இப்போ சக்திக்கு விடியற்காலை ரெண்டரைலேந்து மூணு மணிக்குள்ள இருக்கும்.
ஒரு வேளை அவ நைட்டு லேட்டா வந்துட்டு இப்ப தான் தூங்க போயிருந்தான்னா!!! அப்பறம்…
நான் தேவையில்லாம குழந்தைய எழுப்பி விட்டுருவேன்.
வேண்டாம் வேண்டாம்! அவ எழுந்துரிக்கட்டும்.
சரி வீட்டு நம்பருக்கு கால் பண்ணினா என்ன?
இல்ல இல்ல அந்த ப்ளூவும் சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கும் அப்புறம் சக்தி தான் எழுந்து வரவேண்டியிருக்கும்.
அப்படி அவ வீட்டுக்கு வந்திருந்தான்னா நிச்சயம் எங்க கால்ஸை பாத்திருப்பா…
அப்படி பார்த்திருந்தான்னா உடனே எங்களுக்கு மெஸேஜாவது பண்ணிருப்பாளே!
ஏன் பண்ணல?
அப்படீன்னா அவ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தானே அர்த்தம்!
கால் பண்ணிடலாமா? ம்…சரி பண்ணித்தான் பார்ப்போம்.
இதுக்கு மேல என்னால இந்த டென்ஷன தாங்க முடியாது.
ஆனா நான் கால் பண்ணி அவ மொபைல் மறுபடியும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்துதுன்னா?”

என்று தனக்குள் ஒரு வினாவிடை அமர்வு நடத்திக்கொண்டிருக்கும் போது அவளின் தோளைப் பிடித்து உலுக்கி

“ஏய் மிருது!
காலையில மொபைலை கையில வச்சுண்டு என்ன யோசனை?
மிருது கால் பண்ணினாளா?”

“ம்…ஆமாம் நவீன்.
அவள்ட்ட பேசிட்டு இப்ப தான் வச்சேன்”

“அப்படியா!
என்னை ஏன் எழுப்பலை?
அப்போ நான் உடனே அவளைக் கூப்பிட்டு பேசட்டும்.”

“ம்..இல்ல இல்ல.
இப்ப வேண்டாமே நவீன்.”

“ஏன் வேண்டாம்ங்கற?
அப்படீன்னா நான் டென்ஷனாகக் கூடாதுன்னுட்டு நீ சும்மா சொல்லறயா?”

“அய்யோ! இல்ல நவீன்.
அவ இப்ப தான் என்கூட பேசிட்டு தூங்க போயிருக்கா.
இப்போ நீங்க அவளுக்கு கால் பண்ணி அவள எழுப்பிவிட போறேங்களா?”

“ஓ!! சரி சரி சரி அதைச் சொல்ல வேண்டியது தானே!
ஏன் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப் பண்ணிருந்தாளாம்?”

“அது…அது…அது வந்து…
ஆங் நாம சொல்லிண்டா மாதிரியே தான்.
அவ ஃபிரென்ட்ஸோட அவுட்டிங் போயிருக்கா அதுக்கு முன்னாடியே ஏதோ மீடிங்குன்னு…
ப்ளூ சொல்லித்தே அப்பவே ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினாலாம்.
அப்புறம் மறுபடியும் சுட்விச் ஆன் பண்ண மறந்துட்டாளாம்.
ரொம்ப சாரின்னு சொன்னா”

“அப்பாடா!
இப்போ தான் உயிரே திரும்பி வந்தா மாதிரி இருக்கு மிருது.”

“ம்..ஆமாம் ஆமாம் நவீ.
உங்களுக்கு திரும்பி வந்துடுத்து…”

“ம்…என்ன சொன்ன?”

“ஆங் அது ஒண்ணுமில்ல நவீ.
நீங்க ப்ரெஷ் பண்ணிட்டு வாங்கே நான் காபி போட்டு தர்றேன்.
போங்கோ”

“ஓகே டன். இதோ வந்துடறேன்”

என்று நவீன் பாத்ரூமுக்குள் சென்றதும் மிருதுளாவின் கண்கள் கலங்கின அவள் அடுப்படியிலிருந்தே அவர்கள் வீட்டு பூஜை அறையைப் பார்த்து

“அம்மா தாயே!
எங்க பொண்ணு பத்திரமா இருக்கணுமா.
மத்தியானத்துக்காள்ள அவ எங்களுக்கு கால் பண்ணும்மா.
ஏன்னா அதுக்கு மேல என்னால நவீனை சமாளிக்க முடியாதுமா.”

“என்ன மிருது காபி ரெடியா?”

“ம்…இதோ.
நீங்க உங்க பேப்பரை படிச்சிண்டிருங்கோ இதோ கொண்டு வர்றேன்.”

என்று நவீன் கண்டுப்பிடித்து விட கூடாதே என்று கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு காபியை எடுத்துச் சென்று நவீனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட நவீன் அவளிடம்

“என்ன மிருது?
எனக்கு மட்டும் கொண்டு வந்திருக்க!
எங்க உன் காபி?”

“ம்…நான் நீங்க எழுந்துக்கறதுக்கு முன்னாடியே குடிச்சுட்டேன்.
நீங்க குடிங்கோ.
ஆறிடப் போறது.”

என்று மனதிற்குள் படக் படகென்று அவளின் இதயம் துடித்தது அவளுக்கு கேட்டது.

“ஏன் நீ ஒரு மாதிரி இருக்க மிருது?”

“ஒண்ணுமில்ல நவீ.
நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ.
நான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு வைக்கறேன்.”

“ஆங்…அப்போ வாக்கிங்?”

“இன்னைக்கு நாம லேட்டா எழுந்துண்டோம் ஸோ நோ வாக்கிங்.”

“சரி இன்னைக்கு நம்ம ஆடிட்டர் பதினோரு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தார இல்ல…”

“ஆங் ஆமாம்.
அதுக்கென்ன இப்போ?”

“இல்ல நாம சக்திக்கு அப்போ காலையில ஆறரை மணி ஆகிருக்குமே!
அவ எழுந்துக்கற டைம் தானே.
அவகிட்டே ஃபோன்ல பேசிட்டா கொஞ்சம் மனசு லேசாகிடும்.
அதுதான் ஆடிட்டர் மீட்டிங்க ஒரு ஹாஃப் அன் அவர் தள்ளிப்போடட்டுமா?”

“ஏன் நவீ இப்படி இருக்கேங்கள்.
நம்ம ஆடிட்டர் எவ்வளவு பிஸியானவர்ன்னு உங்களுக்கே நன்னா தெரியும்.
அவரோட இந்த மீட்டிங்கை போன மாசம் டிசைட் பண்ணி கன்பர்மேஷனும் வாங்கிண்டோம்.
இப்போ போயி மாத்திக்க சொன்னா!
அப்பறம் மறுபடியும் அவருக்காக நாம வெயிட் பண்ண வேண்டி வரும்.
பேசாம மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுங்கோப்பா”

“என்னது பண்ணுங்கோ வா?
நீயும் தானே வரனும்.
உனக்கு தான் அக்கௌன்ட்ஸ் டீட்டேயில்ஸ் எல்லாம் தெரியும்.”

“ஆங்…ஆங்.
நான் எல்லாத்தையும் நம்ம அஃபீஸ் ல என்னோட செக்கரெட்ரி ரேணுகிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
அவ மீட்டிங்க்கு வேண்டிய ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணி வெப்பா.”

“மிருது நீ ஏன் வர மாட்டேங்கற?
நம்ம சக்தி நல்லா இருக்கா இல்லையா?”

“நவீ நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமே ஆகல.
அதுக்காக நான் அப்படி சொல்லலை.
நைட்டு ஃபுல்லா தூங்காததால தல வலிக்கறது அதுதான்.
வேற ஒண்ணுமில்ல.
அதுவுமில்லாம சக்தி லேட்டா தான் எழுந்துப்பேன்னு என்கிட்ட ஃபோன்ல சொன்னா.
நீங்க அவள நம்ம டைம் பதினோரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ.”

“ம்…ம்…சரி.
நான் போய் குளிச்சுட்டு நம்ம ஆஃபீஸுக்கு புறப்படறேன்.”

நவீன் குளித்து வந்ததும் மிருதுளா அவனுக்கு டிபன் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு நவீன் ஆஃபீஸுக்கு சென்று வர காருக்குள் ஏறி காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் தெரு முனையைத் தாண்டியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வாசல் கதைவைத் தாழிட்டு வீட்டினுள் வந்ததும் ஹாலில் உட்கார்ந்த மிருதுளா ஓவென்று அழுதுக்கொண்டே சக்தி மொபைலுக்கு கால் செய்தாள் மீண்டும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வாய்விட்டு

“அடியே சக்தி எங்கடி போயிருக்க?
கால் ல ஏன்டி எடுக்க மாட்டேங்கற?”

என்று கூறிக்கொண்டே வீட்டு நம்பருக்கு கால் செய்தாள். ரொம்ப நேரம் கால் சென்றுக் கொண்டே இருந்தது. ஆனால் ப்ளூவும் கால் ஐ எடுக்கவில்லை. பரிதவித்துக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை. நேராக பூஜை அறையில் அமர்ந்துக்கொண்டு வேண்டலானாள்‌.

ஒரு இரண்டு மணி நேரமானதும் மிருதுளாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்த ஃபோனின் சப்தம் நின்றது. அவள் சக்தியையே எண்ணிக்கொண்டு அப்படியே உறைந்து அமர்ந்திருந்ததால் ஃபோனின் வந்த சப்தமும் அது நின்று போனதும் தெரியாதிருந்தாள்.

இன்னுமொரு பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மீண்டும் மிருதுளாவின் மொபைல் ஒலித்தது. அந்த சப்தம் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல உணர்ந்த மிருதுளா சுயநினைவுக்கு வந்ததும் ஓடிப்போய் தனது மொபைலை எடுத்து யார் என்ன என்று கூட பார்க்காமல்

“ஹலோ! ஹலோ!”

“ஹலோ மிருது!
ஏன் இவ்வளவு பதட்டமா பேசற?
என்ன ஆச்சு?”

“ஓ! நீங்களா.
சொல்லுங்கோ நவீ.
ஒண்ணுமில்ல தலவலிக்கு மாத்திரை போட்டுண்டு தூங்கப் படுத்தேன்…
ரொம்ப நேரமா கால் பண்ணறேங்களோ?”

“இல்லையே இப்ப தான் பண்ணினேன்.
சரி ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லத்தான் கால் பண்ணினேன்.
நம்ம சக்தி எனக்கு கால் பண்ணினா.”

“என்னது நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினாளா?
என்ன சொல்லறேங்கள் நவீ?”

“ஆமாம் மிருது.
நான் மீட்டிங்குக்கு போயிண்டிருந்தப்போ அவகிட்டேந்து எனக்கு கால் வந்துது.
அவ உனக்கு தான் ஃபர்ஸ்ட் கால் பண்ணினாளாம்.
ஆனா நீ எடுக்காததால எனக்கு பண்ணினா.
அவ ரொம்ப டையர்டா இருக்காளாம்.
ரெஸ்ட் எடுத்துட்டு அவளோட ஈவினிங் டைம்ல நமக்கு மறுபடியும் கால் பண்ணறதா சொன்னா.
நானும் சரின்னுட்டேன்.”

“அச்சோ நவீ.
அவ எங்க போயிருந்தாளாம்?
எப்ப ஆத்துக்கு வந்தாளாம்?
மொபைல் ஏன் சுவிட்ச் ஆஃபா இருந்துதாம்?”

“ம்…நீ தான் காலையிலேயே அவகிட்ட பேசினேன்னு சொன்னயே!
அப்பவே இதெல்லாம் நீ அவகிட்ட கேட்கலையா மிருது?”

“ஷ்…நவீ!!
அது வந்து…”

“ஏன் மிருது? ஏன்?
இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்ல முயற்சிக்கற?
அப்படீன்னா நீ அவளோட காலையில பேசல தானே!
எங்கடா நான் மறுபடியும் ஹார்ட்ட பிடிச்சுண்டு ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பேனோன்னு தானே நீ என்கிட்டேந்து மறச்ச?”

“அய்யோ நவீ.
ஐ ஆம் எக்ட்ரீமிலி சாரி.
மொதல்ல நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினது உண்மையா?
இல்ல நீங்களும் எனக்காக பொய் சொல்லறேங்களா?
ப்ளீஸ் சொல்லுங்கோ நவீ.
காலையிலேந்து தவிச்சுண்டிருக்கேன்.”

“ம்…ம்…எனக்கு அப்பவே நீ பொய் சொல்லறன்னு தோனித்து மிருது.
இல்லாட்டி ஆடிட் மீட்டிங்குக்கெல்லாம் நீ வராம இருந்ததே இல்லையே!”

“அச்சோ அச்சோ நவீ… ப்ளீஸ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோளேன்.”

“ஆமாம் சக்தி தான் ஃபோன் பண்ணினா.
நான் பொய் சொல்லலை.
அவ ஏதோ தூக்க கலக்கத்துல பேசினா.
அவளோட ஆஃபீஸ் மீட்டிங் போது மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணினாளாம்.
அதுக்கப்புறம் அதை மறந்துட்டாளாம்.
இப்போ தான் ஞாபகம் வந்துதாம்.
ஃபோனை எடுத்துப் பார்த்தாளாம் நம்மகிட்டேந்து நிறைய தடவ கால்ஸ் வந்ததால என்னமோ ஏதோன்னு கால் செய்தாளாம்.
இதை எல்லாம் உன்கிட்டயும் சொல்ல சொல்லி சொன்னா.
இல்லாட்டி நீ டென்ஷனாகிடுவேன்னும் சொன்னா.
அவ்வளவு தான் அதுக்கப்புறம் தூக்கம் வர்றதுன்னும், தூங்க போறதாவும், சாயந்தரமா பேசறேன்னும் சொல்லி ஃபோன வச்சுட்டா.
இது தான் நானும் சக்தியுமா பேசிண்டது.
ஸோ ஷு ஈஸ் ஆல்ரைட்.
அவகூட பேசினதுக்கப்பறமா தான் நிம்மதியானேன்.
இனி மீட்டிங்கை நல்லபடியா முடிச்சுட்டு ஆத்துக்கு வரேன்.
நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மிருது.
நான் நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கிண்டு வரேன்.
சரியா?”

“ம்…சரி சரி.
தாங்க்ஸ் பா எனக்கு உடனே தகவல் சொன்னதுக்கு.
இல்ல நான் சமச்சுடறேன்”

“ம்..ஹூம்..
நீ ரொம்ப டென்ஷனா இருக்க.
அதுனால இன்னைக்கு நாம ஹோட்டலேந்து வாங்கியே சாப்பிடுவோம்.
பை பை ஆடிட்டர் இஸ் வெயிட்டிங்.”

“ம்…பை நவீ”

என்று மிருதுளா ஃபோனை வைத்ததும் சக்திக்குக் கால் செய்தாள். ரிங் போனது ஆனால் சக்தி ஃபோனை அட்டென்ட் செய்யவில்லை. உடனே மிருதுளா தன் மனதிற்குள்

“மனுஷால இப்படி பரிதவிக்க விட்டுட்டு இவ அப்படி எங்கதான் போனான்னு கேட்கணும்னு ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறாளே!!
ம்…சாயந்தரம் ஃபோன் பண்ணட்டும் அப்போ வச்சுக்கறேன் அவளுக்கு.
ஆமாம் அந்த ப்ளூ ஏன் கால் ஐ எடுக்கல?
அது எங்க போச்சு?
இந்த பசங்கள வெளிநாட்டுல படிக்கவும் வேலைக்கும் அனுப்பிட்டு பெத்தவா படற பாடு இருக்கே ஆண்டவா!!!
அப்பா காலையிலேந்து பட்ட பதட்டத்துக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சிருக்கு.
ஆனாலும் அவ கிட்ட பேசறவரைக்கும் என்னால ஃப்ரீ ஆக முடியாது.
எனிவேஸ் கடவுளே எங்க மகள் பத்திரமாகத்தான் இருக்கான்னு எங்களுக்கு அவ மூலமாவே தகவல் தெரிவித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்.
நான் வேண்டிண்ட படியே எல்லா நிறைவேத்திடறேன்.
அப்பாடா”

என்று அமைதியாக கொஞ்ச நேரம் படுத்துக்கொண்ட மிருதுளா. ஆழ்ந்து தூங்கலானாள்.

கடத்தப்பட்ட சக்தியிடமிருந்து ஃபோன் வந்ததாக நவீன் சொல்வது உண்மையா? அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அவள் எங்கிருந்து கால் செய்திருப்பாள்?
அவள் எப்படி கடத்தப்பட்டவர்களிடமிருந்து தப்பித்திருப்பாள்?
அதைப் பற்றி எல்லாம் நவீனிடம் ஏன் அவள் ஒன்றுமே கூறவில்லை?
இல்லை அவள் கூறி நவீன் மிருதுளாவிடம் சொல்லாமல் மறைத்தானா?
என பல கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாமும் வரும் நாட்களில் தேடுவோம்.

தொடர்வாள்…

ஃபோன் கால் பேசி முடித்ததும் நவீனின் வாடிய முகம் கண்டு

“ஏன் ரொம்ப சோகமா இருக்கேங்கள்?
என்ன ஆச்சு?”

“ம்… ஒண்ணுமில்லை!”

“உங்க வாய் தான் ஒண்ணுமில்லைனு சொல்லறது.
ஆனா உங்க முகம் ஏதோ இருக்குன்னு பளிச்சுன்னு சொல்லறதே!”

“ம்…அப்படியா?
அப்போ என் முகத்துக்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ.”

“சரி சரி எதுவாயிருந்தாலும் கவலைப் படாதீங்கோ.
நாம ரெண்டு பேருமா எவ்வளவு பார்த்தாச்சு லைஃப்ல.
ஜஸ்ட் டேக் இட் ஈஸி மை டியர் ஹஸுபண்டு.
நான் டின்னர் பண்ணபோறேன்”

“ம்…ம்ம்…என்ன நீ ஏன் என்னனு கேட்காமயே சமாதனம் பண்ணற…
டின்னர் பண்ண போறேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு அடுப்படிக்குள்ள போயிண்டேயிருக்க?”

“ஹலோ மிஸ்டர் நவீன் என்ன விளையாடறேளா?
நீங்க ஃபோன வச்சதுமே என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்?
நீங்க சரியா பதில் சொல்லலை நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்க தொடங்கிட்டேன்.
இப்போ நான் டின்னர் பண்ணனுமா வேண்டாமா?”

“அது ரொம்ப முக்கியம்.
மனுஷன் இங்க டென்ஷன்ல இருக்கான்.
டின்னராம் டின்னர்.”

“ஓகே சார் ஜி.
உங்களோட இந்த டென்ஷனோட காரணம் என்னனு நானே சொல்லட்டுமா!”

“தெரியுமா?
எப்படி?
எப்போலேந்து மைன்ட் ரீடிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்ச?”

“ஆமாம்! இதுக்கு அதெல்லாம் வேற கத்துக்கணமாக்கும்.
என்னத்த?
எப்பவும் போல உங்க பொண்ணு கால் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டா.
உடனே டென்ஷன் ஆகிருப்பேங்கள்.
இதுதானே!
விடுங்கோப்பா.
அவ என்ன சின்ன குழந்தையா?
அவளுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும்.
அவளே எப்பவும் போல அப்பறமா கால் பண்ணுவா.
ஸோ வெயிட் பண்ணுங்கோ.”

“அதுக்கில்ல மிருது.
நான் மொபைலுக்கு கால் பண்ணினதும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்தது.
அவ ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்?
இது வரை அவ அப்படி பண்ணினதே இல்லையே!
அதுவுமில்லாம நான் அவ வீட்டு நம்பருக்கும் கால் பண்ணினேன் தெரியுமா!!
அங்கேயும் அவ இல்லன்னு ப்ளூ சொல்லித்து.”

“அச்சச்சோ நீங்க என்ன அபியும் நானும் பிகாஷ்ராஜ் மாதிரி ஆகிண்டிருக்கேங்கள்?
அவ எங்கயாவது ஃபிரண்ட்ஸோட போயிருப்பா!!”

“ம்…ஆமாம் ஆமாம்…
ப்ளூ சொல்லித்து அவ ஆஃபிஸுலேந்து நேரா பாரிஸ் போயிருக்காளாம்!”

“சரி போகட்டும்.
அங்க ஏதாவது வேல இருந்திருக்கும்.”

“ஆஃபிஸ் வேலை இல்ல மிருது.
அவ விஷாலோட பேரன்ட்ஸ் கிட்ட வீடியோ கால்ல பேசறதுக்காக போயிருக்காளாம்.”

“சரி பேசட்டுமே.
நமக்கு எப்படி விஷாலோட பேசணும்னு தோனறதோ அதே போல தானே அவாளுக்கும் நம்ம சக்தியோட பேச தோனிருக்கும்.
அதுதான் போயிருப்பா.”

“நாமளும் தான் அந்த பையன்ட்ட பேசணும்னு சொன்னோம்.
ஏன் நம்மளோட அவன இவ ஆத்துக்கு வரவச்சு பேசவச்சுட்டு…
அப்புறமா இவ அவாளோட பேச போயிருக்கலாமில்லையா?
அந்த பையன் எப்படி என்னனு நாம தெரிஞ்சுண்டதுக்கு அப்பறமா அவள் அங்க போயகருக்கலாம்ன்னு எனக்கு படறது.”

“ம்…ஹும்…
நீங்க பிரகாஷ் ராஜ்ஜே தான் போங்கோ.
அவ நம்ம பொண்ணு எப்போதும் தப்பான முடிவு எடுக்க மாட்டா.
கவலைப் படாதீங்கோ நவீ”

“அது சரிதான்.
போகட்டும் நான் வேண்டாங்கல.
நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்லையா.
அதுதான் எனக்கு வருத்தத்த தர்றது”

“நீங்க ஒரு வருத்தமும் படவேண்டிய அவசியமே இல்ல.
இருங்கோ நான் சூடா நாலு இட்லி எடுத்துண்டு வரேன்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி தொக்கு பண்ணிருக்கேன்.
சாப்டுட்டு மாத்திரைய போட்டுக்கோங்கோ.
சக்தி பத்தின கவலை உங்களுக்கு நேவையே இல்ல.
சரியா”

என்று நவீன் பதற்றமடையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மிருதுளா அவனை தேத்திவிட்டு அடுப்படிக்குள் டின்னர் செய்துக்கொண்டே மனதிற்குள்

“என்ன ஆச்சு?
ஏன் இந்த பொண்ணு மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா?
ஒரு வேள முன்ன நடந்தா மாதிரியே மொபைல தொலச்சிருப்பாளோ?
அப்படின்னா எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருப்பாளே!!
நவீன் சாப்டுட்டு தூங்கட்டும்.
அப்புறமா மறுபடியும் நான் அவளுக்கு கால் பண்ணிப் பாக்கறேன்.”

யோசித்துக் கொண்டே வேலையை செய்துக் கொண்டிருக்கையில் நவீன் ஹாலில் இருந்து

“என்னமோ டின்னர் பண்ணித்தரேன்னும்.
தக்காளி தொக்குன்னும் எல்லாம் சொன்ன?
ஆனா இன்னும் ஒண்ணும் வரலையே!
மிருது! மிருது!”

நவீனின் குரல் கேட்டதும் சட்டென்று தனது மகளைப் பற்றிய யோசனைகளிலிருந்து சுயநினைவுக்கு வந்த மிருதுளா கடகடவென தட்டில் இட்லியும் தயிரும் வைத்து எடுத்துச் சென்று நவீன் முன் வைத்தாள். அதைப் பார்த்த நவீன்

“உனக்கு என்ன ஆச்சு மிருது?”

“ம்..ஏன் கேட்கறேங்கள்?”

“இல்ல தக்காளி தொக்குன்னு சொல்லிட்டு இப்போ வெறும் தயிர் வச்சு கொண்டு வந்திருக்கயேன்னு கேட்டேன்.”

“ஓ! சாரி நவீ.
இருங்கோ தொக்கு கொண்டுண்டு வரேன்.”

என்று கூறி கொண்டு வந்து கொடுத்து, அவன் சாப்பிட்டதும் மாத்திரையையும் கொடுத்தாள். எப்போதும் மாத்திரையை போட்டுக்கொண்ட அரைமணிநேரத்தில் தூங்கும் நவீன் அன்று அவனது மனக்குழப்பதால் தூங்காமல் இருந்தான். அவன் தூங்கினப் பிறகு தான் சக்தியோட பேசி விஷயத்தை தெரிஞ்சுக்க முடியுமேன்னு காத்திருந்த மிருதுளா நவீனிடம்

“என்ன இன்னிக்கு தூங்காம உட்கார்ந்துண்டிருக்கேங்கள்?”

“தூக்கம் வர்றது.
ஆனா தூங்க என் மனசு விட மாட்டேங்கறது மிருது.
என்னமோ தெரியல மத்தியானத்துலேந்து எனக்கு சக்தி ஞாபகமாவே இருக்கு.”

“கவலைப் படாதீங்கோ நவீ.
அவ நேத்து நம்ம கூட நல்லா தானே பேசினா!
அப்புறமென்ன?
இன்னைக்கு அவ அவளோட வருங்கால மாமனார் மாமியாரோட பேச பேயிருக்கா.
அவ அந்த டென்ஷன்ல கூட ஃபோன எடுக்காம இருந்திருக்கலாம் இல்லையா”

“எடுக்காம இருந்தா ஓகே தான்.
ஆனா ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்னு தான் யோசனையா இருக்கு!”

“ம்….சுவிட்ச் ஆஃப் பண்ணலைன்னா நீங்களே அவள ரெண்டு மூணு தடவ தொந்தரவு செய்திருப்பேங்கள்.
உண்மையா இல்லையா.
சொல்லுங்கோ!”

“ம்…அப்படியும் இருக்கலாமோ!”

“இருக்கலாமோ என்ன அப்படித்தான் இருக்கும்.
அவ அவாளோட பேசிண்டிருக்கும் போது நீங்க கால் பண்ணினா அது அவ்வளவு சரியா இருக்காது நவீ.
புரிஞ்சுக்கோங்கோ.
அவ தான் அந்த பைனை நம்ம கூட வீடகயோ கால்ல பேச வைக்கறேன்னு சொல்லிருக்காளோனோ அப்புறம் ஏன் உங்களுக்கு அவசரம்.
எழுந்திரிங்கோ வாங்கோ போய் படுக்கலாம்.
இல்லாட்டி நாளைக்கு உங்களுக்கு முடியாம போயிடும்.
ம்…கிளம்புங்கோ நவீ”

“ஒரே ஒரு தடவ சக்திக்கு கால் பண்ணிப் பார்த்துடவா?”

“நவீ திஸ் ஈஸ் டூ மச்.
அவ சின்ன குழந்தைக் கிடையாது.
தயவுசெய்து வாங்கோ வந்து படுத்து தூங்குங்கோ.
காலையில அவளே கால் பண்ணி உங்க கூட பேசுவா.”

“ம்..சரி சரி… வரேன்.”

“ம்…படுங்கோ இதோ நான் வந்துடறேன்”

“நீ எங்க போற?”

“எனக்கு கிட்சன்ல கொஞ்சம் வேலையிருக்குப்பா.
அதை முடிச்சுட்டு வந்துடறேன்.
நீங்க தூங்குங்கோ.
லைட்ட ஆஃப் பண்ணறேன்.
சரியா.
குட் நைட் நவீ.
ஹாவ் எ நைஸ் ஸ்லீப்”

“குட் நைட் மிருது.”

என்று நவீனை தூங்குவதற்காக படுக்க வைத்துவிட்டு அவன அடுப்படியிலிருந்த வேலைகளை வேகவேகமாக முடித்து மெல்ல நவீன் உறங்கிக்கொண்டிருந்த அறையினுள் எட்டிப்பார்த்தாள். அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதும் வேகமாக தனது மொபைலை எடுத்து சக்திக்கு கால் செய்தாள். அப்போதும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வீட்டு நம்பருக்கு கால் செய்துப் பார்த்தாள். மீண்டும் ப்ளூவிடமிருந்து அதே பதில் தான் வந்தது.
மிருதுளாவும் நவீனைப் போலவே பதற்றமானாள். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த மிருதுளா உடனே சக்தியுடன் வேலை பார்க்கும் அவளின் சினேகிதி ருத்ராவுக்கு கால் செய்தாள்.

“ஹலோ ருத்ரா.
நான் சக்தியோட அம்மா பேசறேன் மா.
எப்படி இருக்கமா?”

“ஹாய் ஆன்டி.
நான் நல்லா இருக்கேன்.
நீங்க எப்படி இருக்கீங்க?
அங்கிள் எப்படி இருக்கார்?”

“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் மா.
தாங்க்ஸ்.
நான் வந்து உனக்கு எதுக்கு கால் பண்ணினேன்னா!!”

“எதுக்கு ஆன்டி.
ஏன் தயங்குறீங்க.
எதுவானாலும் செல்லுங்க ஆன்டி.
அங்கிளுக்கு மறுபடியும்…”

“ச்சே ச்சே…
அதெல்லாம் ஒண்ணுமில்லமா.
சாயந்தரத்துலேந்து சக்தி மொபைலுக்கு கால் பண்ணி பார்த்துண்டே இருக்கோம் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப்ன்னே வர்றது மா.
அதுதான் உனக்கு அவ ஏதாவது ஃபோன் பண்ணினாளான்னு கேட்க தான் உன்னை நான் கால் பண்ணினேன் மா.”

“இல்ல ஆன்டி.
அவ எனக்கு எந்த காலும் பண்ணல.
மோரோவர் அவ அவளோட புது ஃபிரண்ட் யாரோ விஷாலாம் அவன் வீட்டுக்கு பாரிஸுக்கு போறதா சொல்லி காலையில பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பி ஆஃபீஸுக்கு ஹாஃப் டே லீவு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாளே!”

“ஆங் அத எங்ககிட்ட சொன்னாமா.
ஆனா அதுக்கப்பறமா தான் அவள கான்டாக்ட் பண்ண முடியலை.
அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு”

“ஒரு கவலையும் வேண்டாம்.
சில நேரங்கள் ல டவர் கிடைக்காது ஆன்டி.
அதுனாலையும் இருக்கலாம்.”

“ஆனா அவ இன்னேரத்துக்கு பாரிஸ் போய் சேர்ந்திருக்கணுமே மா!
ஆனா அவ ஏன் இன்னும் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கா?”

“ஆன்டி அதுவும் நல்ல பாயின்ட் தான்…
ம்…”

“சரி மா.
உன்கிட்ட அவளோட அந்த பாரிஸ் ஃபிரண்ட் நம்பர் இருக்காமா?”

“சாரி ஆன்டி என்கிட்ட இல்லையே.
தீ என்கிட்ட அந்த பையனைப் பத்தி இன்னைக்கு காலையில தான் சொன்னா.
நானும் அவனை பார்த்ததில்ல.
நம்பர் எதுவும் இல்ல ஆன்டி.”

“ம்….அப்படியா!”

“ஆன்டி இப்போ உங்களுக்கு டைம் பதினொன்னு ஆகிருக்குமே!
டு நாட் வரி ஆன்டி.
அவளே கால் பண்ணுவா.
நானும் அவள கான்டாக்ட் பண்ண முயற்சிக்கறேன்.
கான்டாக்ட் பண்ணினா உடனே உங்களுக்கு ஃபோன் பண்ண சொல்லறேன்.
நீங்க போய் தூங்குங்க ஆன்டி.
ஒண்ணுமிருக்காது.”

“சரி மா.
நல்லது.
உன்னை தொந்தரவு செஞ்சதுக்கு ரொம்ப சாரிமா.”

“அய்யோ ஆன்டி.
எதுக்கு சாரி எல்லாம் சொல்லறேங்கள்.
என்னோட அப்பா அம்மாவும் என்னோட பேசமுடியலைன்னா சக்தியை தான் கால் பண்ணி கேட்பாங்க.
டோன்ட் வரி டூ மச் ஆன்டி.
அவளே உங்களுக்கு கால் பண்ணுவா பாருங்க.
ஏதாவது வேலையில ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பா…
அத மறுபடியும் சுவிட்ச் ஆன் பண்ண மறந்திருப்பா.
அவ்வளவு தான்.
இது மாதிரி நானே நிறைய தடவ பண்ணிருக்கேன் ஆன்டி.
ஸோ கவலைப் படாம போய் நிம்மதியா தூங்குங்க ஆன்டி.”

“சரி மா.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் ருத்ரா.
நான் வச்சுடறேன்.
பை”

“ம்…பல ஆன்டி.
குட் நைட் அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் ஆன்டி.
பை பை.”

என்று மொபைலை ஆஃப் செய்தும் மொபைலயே வெறித்துப் பார்த்துக்கொண்டே கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் மிருதுளா.
சட்டென மேலே முகத்தை தூக்கியவள் அதிர்ந்துப் போனாள். ஏனெனில் அவள் அமர்ந்து ருத்ராவுடன் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அறையின் கதவில் சாயந்தபடி கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தான் நவீன். அவனைப் பார்த்ததும் மிருதுளா அவளின் கண்களைத் துடைத்துக் கொண்டு

“நீங்க எப்போ வந்தேங்கள்?
தூங்கலையா?”

“நம்ம சக்திக்கு என்ன ஆச்சு மிருது? உண்மைய சொல்லு மிருது!”

“அய்யோ!
அவளுக்கு என்ன ஆகிடப் போறது நவீ.
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.
வாங்கோ நாம போய் படுத்துண்டு தூங்கலாம்.”

“இல்ல இல்ல…
சம்திங் ராங்.
நீ இப்போ அவளோட ஃபிரண்ட் ருத்ரா கிட்ட தானே பேசிண்டிருந்த?
அப்படின்னா அவளோட மொபைல் இன்னமும் சாவிட்ச் ஆஃப்ல தானே இருக்கு!
எங்க நம்ம பொண்ணு சக்தி மிருது?”

“நவீ…நவீ…நவீ!!
நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாலை ஆகவும் ஆகாது.
வாங்கோ தூங்குங்கோ ப்ளீஸ்”

“அப்புறம் ஏன் உன் கண்ணுலேந்து கண்ணீர் வந்துது?”

“பின்ன எனக்கும் கவலையிருக்காதா என்ன?
ஆனா உங்கள மாதிரி எல்லாம் நான் கற்பனை பண்ண மாட்டேன்.
அவ காலையில கட்டாயமா ஃபோன் பண்ணுவா.
இப்போ வாங்கோ”

என்று குழந்தையை சமாதானம் செய்வதுப் போல செய்து நவீனை மீண்டு அவர்கள் அறைக்கு அழைத்துப் போய் படுக்கவைத்தாள் மிருதுளா.

“ஹேய் மிருது!
இப்போ மறுபடியும் எங்க எழுந்துப் போற?”

“தண்ணி காலி ஆயிடுத்து இல்லையா.
அது தான் வேற பாட்டில் தண்ணி எடுத்துண்டு வரலாமேன்னு எழுந்துண்டேன்.
கவலைப் படாம தூங்குங்கோ.
இதோ நானும் தண்ணி எடுத்துண்டு வந்திடுவேன்.”

என்று கூறிக்கொண்டே அடுப்படிக்கு சென்று ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து படுக்கைபக்க மேஜையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டே

“அம்மா சமயபுரத்தம்மா தாயே!
எங்க பொண்ணுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது.
அவ நன்னா இருக்கணும்.
நாளைக்கு விடிஞ்சதும் அவ எங்களோட கால் பண்ணி பேசணும் மா.
எங்க கொழந்தைய பார்த்துக்கோமா”

என்று மனதில் வேண்டிக்கொண்டு ரொம்ப நேரம் தூக்கமின்றி புரண்டு படுத்தவள் அவளுக்கே அறியாது தூங்கிப்போனாள்.

விடிந்தால் நவீனும் மிருதுளாவும் காத்திருக்கும் கால் சக்தியிடமிருந்து வருமா?

தொடர்வாள்…