அத்தியாயம் 54: பெற்றவர்களின் மனவேதனை

“அம்மா என்னம்மா அழுதுண்டே இருக்க? என்ன ஆச்சுன்னு சொல்லுமா”

என்று வேனு கேட்க கண்களை துடைத்துக் கொண்டு மிருதுளாவுக்கு நடந்த அனைத்தையும் தன் மகனிடம் கூறினாள் அம்புஜம். அதைக் கேட்ட வேனு 

“ச்சே என்னம்மா இப்படி எல்லாம் நம்ம மிருதுக்காவ பண்ணிருக்கா அன்ட் பேசிருக்கா!!! நீ அதிம்பேர்க்கு ஃபோன் போட்டு இவா இப்படி எல்லாம் பேசியிருப்பதை உடனே சொல்ல வேண்டியது தானே!! அதை விட்டுட்டு இப்படி அழுதுண்டிருக்க?”

“எப்படி சொல்லறது வேனு? அவர் இப்போ டிரெயின் ல குஜராத் போயிண்டிருப்பார். நாளன்னைக்கு காலையில தான் அவர் ஆபிஸுக்கு  ஃபோன் போட்டு சொல்ல முடியும். அதெல்லாம் தெரிஞ்சுதானே டா நம்ம பொண்ண இப்படி அசிங்கப் படுத்தி அனுப்பியிருக்குகள். அதுகளுக்கு நம்ம மிருது மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாளாடா!!! சொல்லு. அப்படிப் பட்ட பொண்ணை பட்டினிப் போட்டு, தூங்க விடாம, பேசக்கூடாததை எல்லாம் மாசமா இருக்கான்னு கூட பார்க்காம பேசியிருக்குகளே அதுகள் எல்லாம் மனுஷ ஜன்மங்களாடா? பாவிகள்!! பாவிகள் !!! என் பொண்ணை கள்ளம் கபடமில்லாத பூ மாதிரி வளர்த்து இப்படி ஒரு கூட்டத்துல குடுத்ததுனால அவ இப்படி வாடி கசங்கிப் போய் வந்திருக்காளே டா வேனு !!! எனக்கு அதை நினைக்க நினைக்க அழுகை அழுகையா தான் வர்றது டா!! நான் என்ன செய்வேன்? கடவுளே நீ இருக்கறது உண்மைன்னா என் பொண்ணை படுத்தின பாவிகளை சும்மா விடாதே!! சும்மா விட்டுடாதே”

“அம்மா கூல் கூல். பொறுமையா இரு நீ சத்தமா பேசி அவளை எழுப்பிடப் போற. இந்தா தண்ணி குடி”

என்று ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்தான் வேனு. அதை வாங்கிக் குடித்துப் பின் சற்று ஆசுவாசமானாள் அம்புஜம். மீண்டும் வேனு

“அம்மா நீ மத்தியானம் சாப்பிட்டயா?”

“எங்கேந்துடா எனக்கு சாப்பாடு இறங்கும். சரி சரி நீ காலேஜ்ல இருந்து வந்திருக்க, நீ போய் டிரஸ் மாத்திட்டு வா நான் அதுக்குள்ள உனக்கு டிபன் செய்து வைக்கறேன்”

“கண்ணை முதல தொடச்சுக்கோம்மா எல்லாத்துக்கும் சொல்யூஷன் இருக்கும் கவலைப்படாதே. சரி நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்”

“அவளை எழுப்பாதைக்கு மாத்திட்டு வாப்பா”

“சரி மா நான் பார்த்துக்கறேன்”

என்று மெதுவாக  மாற்றுத் துணியை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்று மாற்றிக் கொண்டு முகம் கை கால் அலம்பி விட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தான் வேனு. அம்புஜம் அவனுக்கு சுட சுட இட்டிலியும் அதனுடன் தேங்காய் சட்னியும் கொடுத்தாள். அதை சாப்பிட்டுக் கொண்டே

“மிருதுக்கா நல்லா அசந்து தூங்கறா மா. அவள எந்த சப்தமும் எழுப்ப முடியாது அப்படி தூங்கறா”

“பாவம் டா வேனு. அந்த ராட்சசி நம்ம பொண்ண தூங்கவிடாம படுத்தி எடுத்திருக்கா டா. மஹா பாவி. நாளு புள்ளகளை பெத்தா மட்டும் அம்மா ஆகிடுவாளா அவள். அதுகளை பார்த்துப் பார்த்து வளர்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். அவா வீட்டு வாரிசை சுமந்திண்டிருக்கற நம்ம பொண்ணை அப்படியே போயிடு திரும்பி வந்திடாதேன்னு சொல்லியிருக்குகள் டா அந்த பாவிகள். அதுகளுக்கு மனசு இருக்க வேண்டிய இடத்துல கல்லைத் தான் வச்சுப் படைச்சிருக்கான் அந்த ஆண்டவன்”

“சரி சரி விடு விடு அவா தானே வந்திடாதேன்னு சொல்லி வாழ்த்தி அனுப்பிருக்கா இனி நம்ம மிருதுக்கா அங்க போக வேண்டாம் அவ்வளவு தான்”

“முதல்ல எனக்கு அவ புருஷன்ட்ட நல்லா கேட்கணும். அப்பாவோட வேலைப் பார்க்கும் அந்த மாமா அப்போவே சொன்னார் அந்த மாமி சரியில்லை உங்க பொண்ண நிம்மதியா வாழவிட மாட்டான்னு அது சரிதான் டா. ஆனா அப்பவும் நான் பையன் நல்லவன்னு அவர் சொன்னதால தான் கட்டிக் கொடுத்தேன். இப்போ அவர் பாட்டுக்கு பொண்டாட்டிய இப்படி பட்டதுகள்ட்ட விட்டுட்டு போயிருக்காரே அவர்ட்ட ஏன் இப்படி செய்தார்ன்னுட்டு கேட்கணும் டா வேனு”

“சரி மா அத்திம்பேர் என்ன பண்ணுவார்? அவர் நம்ம மிருதுவ அம்மா ஆத்துல விடச் சொல்லிட்டுத் தான் போயிருக்கார்ன்னு மிருது சொல்லறா!!! ஆனா அவர் அப்பாவும் அம்மாவும் இப்படி பண்ணிணதுக்கு அவர் என்னமா செய்வார்?”

“இது நல்லா இருக்கே!!! நம்ம பொண்ணை அவர் அப்பா அம்மாவை நம்பி நாம குடுக்கலை அவரை நம்பித்தான் குடுத்திருக்கோம் அப்போ அவர் கிட்ட தானே கேட்கமுடியும். ஏன் நம்ம மிருது கேட்டுண்ட மாதிரி அவர் ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி அவளை நம்ம ஆத்துல அவரே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருந்தா இதுக்கெல்லாம் வழி இவ்லாம போயிருக்கும்மோனோ… அதைத் தான் கேட்கப் போறேன்”

“நீ கேட்டுக்கோ ஆனா நாம மூணு பேருமா சேர்ந்து நம்ம மிருதுக்காவ படுத்தின, பேசின அத்திம்பேரோட அப்பா, அம்மா கிட்ட தான் கேள்விகள் கேட்கணும்.  அவா தானே தப்பு பண்ணிணவா அப்போ அவா கிட்ட தான் கேட்கணும். நாம நாளைக்கே போய் கேட்டுட்டு வந்திடுவோம்”

“இல்லடா அது சரி இல்லை முதல்ல நம்ம மிருது ஆத்துக்காரர் கிட்ட நடந்ததைச் சொல்லணும். அவர் கிட்டேயே நாம அவர் அப்பா அம்மா ட்ட கேட்கப் போறதையும் சொல்லிட்டு போய் கேட்போம்.”

“ஓகே அம்மா ஓகே”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இட்டில சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து ஹாலுக்கு வருவதைப் பார்த்த வேனு. 

“ஹாய் மிருதுக்கா வா வா. இட்டிலி சாப்பிடறயா?”

“ஹாய் டா வேனு. எப்படி இருக்க? உன் காலேஜ் எல்லாம் எப்படி போறது?”

“அதுக்கென்ன ஜம்முனு போயிண்டிருக்கு. வா வந்து உட்காரு”

“நம்ம அம்மா சுடற பஞ்சு மாதிரி இட்டிலி சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு.”

“இரு மிருது உனக்கும் தட்டில் போட்டு கொண்டு வர்றேன்”

என்று அம்புஜம் ஒரு தட்டில் நான்க்கு இட்டிலியைப் போட்டு கொண்டு வந்து மிருதுளாவிடம் கொடுத்து சட்டினிப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக் கொடுத்தாள். வேனு சாப்பிட்டுக் கொண்டே…

“மிருதுக்கா உனக்கு நம்ம ஆத்துக்கு வரணும்னு தோணின உடனே அப்பாவுக்கோ இல்லை நம்ம ஆத்துக்கோ ஒரு ஃபோன் போட்டிருந்தா நாங்களே வந்து அழைச்சுண்டு வந்திருப்போம் இல்லையா? சரி விடு உன் இன் லாஸ் உன்னை அசிங்கப் படுத்தும் போது நீ ஏன் அவாகிட்ட கெஞ்சிண்டு எல்லாம் இருந்த? உன்னை அத்திம்பேர் நம்ம ஆத்துக்கு போகச் சொல்லிட்டார் அப்போ அவா கேவலமா பேச ஆரம்பிச்சதுமே நீ ஆத்துக்கு ஃபோன் பண்ணி “அம்மா என்னை உடனே வந்து கூட்டிண்டு போங்கோன்னு” சொல்லியிருந்தா நீயும் என் மருமானும் அவாகிட்ட தேவையில்லாததை எல்லாம் கேட்டிருக்க வேண்டாமில்லையா!!”

“ஆமாம் டா வேனு அதை செய்திருக்கலாம் டா. எனக்குத் தோணவேயில்லை ச்சே”

“சரி அது தான் தோணலை விடு. நீ படிச்சவ தானே அவாளை அவ்வளவு ஏன் பேச விட்ட? “

“டேய் அவா அப்படி எல்லாம் பேசப்போறன்னு எனக்கே என்ன ஜோசியமா தெரியும்? நானே அதிர்ச்சில இருந்தேன்”

“சரி அவா அப்படி பேச ஆரம்பிச்சதும் நீ பாட்டுக்கு உன் பையைத் தூக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பஸ்ஸுக்கு கூட வெயிட் பண்ணாம ஒரு ஆட்டோ பிடித்து நேரா இங்க வந்திருக்கலாம் இல்ல. அவா கிட்ட என்னத்துக்கு கொண்டு வந்து விடக் கெஞ்சியிருக்க?”

“ஆமாம் அதையாவது செய்திருக்கலாம். ஆனா நவீன் தான் பவின் கொண்டு போய் விடுவான்னு சொல்லிட்டுப் போயிருக்கார். அதுதான் அவா கிட்ட சொல்லி வெயிட் பண்ணினேன்”

“அய்யோ மிருதுக்கா அத்திம்பேர் சொன்ன மாதிரியா நடந்தது?”

“இல்லை”

“அப்புறம் என்னத்துக்கு அவர் சொன்னதைப் பிடிச்சுண்டு அங்க அவா பேசியதை எல்லாம் கேட்டுண்டு இருந்த?”

“ம் ….ம்….”

“சரி சரி அதெல்லாம் போகட்டும் விட்டுத்தள்ளு இனி இங்க நீ எங்களோட ஹாப்பியா இரு சரியா. நாளைக்கு நான் காலேஜ்லேந்து வரும்போது நம்ம ராணி பேக்கரிலேந்து உனக்குப் பிடிச்ச சமோசாவும், ஹனிகேக்கும் வாங்கிண்டு வர்றேன். நாம் தாயம், கார்ட்ஸ் எல்லாம் விளையாடலாம்”

“சூப்பர்!! ஜாலி!! ஜாலி!!! இரு இரு நான் சாப்பிட்ட தட்டைப் தேய்ச்சு வச்சுட்டு வந்துடறேன்”

“நீ அப்படியே போட்டுட்டு கையை கழுவிட்டு வாமா மிருது நான் பார்த்துக்தறேன்”

“அம்மா என்னமா இப்படி வெகுளியா இருக்கற நம்ம மிருதுக்காவை எப்படிமா அப்படி எல்லாம் அவாளால பேசவும் படுத்தவும் முடிஞ்சுது?”

“அதுதான்டா எனக்கும் கோவமா வருது. விடு அதுகளை அந்த ஆண்டவன் பார்த்துப் பார்”

“ஏன் மா அத்திம்பேர் கிட்ட மிருதுக்கா நடந்ததை சொன்னா அவர் கேள்வி கேட்பாரே அப்படின்னு அவாளுக்கு பயமிருக்காதா?”

“அவாளுக்கு அவா புள்ளை மேல மரியாதை இருந்திருந்தா இப்படி அவா நாட்டுப் பொண்ணை பேச தோணியிருக்குமா? சொல்லு”

“அதுவும் சரிதான். இதோ அப்பாவும் வந்துட்டா”

“ஆமாம் அவர்ட்ட சொன்னா மட்டும் என்னவாம்?”

அம்புஜமும், வேனுவும் மிருதுளாவுக்கு நடந்ததை ராமானுஜத்திடம் சொன்னார்கள். அதைக் கேட்ட ராமானுஜம்

“என்னைக்கு அவா வெள்ளி சாமான்களும், செயினும் எல்லாம் மூணாம் மனுஷனை விட்டு மாத்தி மாத்தி கேட்டாளோ அப்பவே எனக்கு அந்த ஃபேமிலியைப் பிடிக்கலை ஆனா மாப்பிள்ளை நல்லவரா இருக்காறேன்னு தான் ஓகே சொன்னோம். அதுக்கப்பறம் நடுரோடுன்னு கூட பாக்காம ரூபாய் பத்தாயிரத்தை கொடுத்தா தான் ஆச்சுன்னு பஸ் ஸ்டாப்புல வச்சு கேட்டாளோ அப்போ அந்த மாமா மாமி மேல இருந்த நல்ல அபிப்பிராயம் போயிடுத்து. இப்போ இது வேறயா?”

“என்ன இது வேறயான்னு இழுக்கறேங்கள்??” 

“அப்பா நாம மூணு பேரும் போய் ஏன் அப்படி செஞ்சா, பேசினான்னு நல்லா கேட்டுட்டு வரணும்”

“ஆமாம் அவாளை  சும்மா விடக்கூடாது”

“சரி இதுக்கு மாப்பிள்ளை என்ன சொல்லறாராம்?”

“அவருக்கு விஷயமே நாளன்னைக்கு தான் ஃபோன் போட்டு சொல்லணும் அதுவரைக்கும் தெரியாது.”

“இந்த விஷயம் தானே தெரியாது!! ஆனா பத்தாயிரம் வங்கினதுமா தெரியாது? அதை பத்தி கேட்டாராமா?”

“அப்பா அதுவும் என் மாமனார் மாமியாரோட வேலை தான். அவர் அப்படி பணம் ஏதும் கேட்கலையாம். அவருக்கே தெரியாம, அவர் கிட்ட சொல்லாம தான் நம்ம கிட்ட பொய் சொல்லி வாங்கிண்டிருக்கா”

“சரி அது தெரிஞ்சுண்டதுக்கப்பறமும் ஏன் அவர் அவா கிட்ட கேட்கலையாம்?”

“அது ….அது ….அது.. வந்து”

“என்னமா சொல்லு.”

“அது இல்லப்பா புள்ளகிட்ட பயமில்லாமல் அவர் பெயரைச் சொல்லியே நம்ம கிட்ட பொய் சொல்லி நம்மளை ஏமாத்தி பணம் வாங்கினவாட்ட கேட்டா மட்டும் உண்மையவா சொல்லப் போறான்னுட்டு அவர் சொன்னார் எனக்கும் அது சரின்னு பட்டுது அதுனால தான் அவரும் கேட்கலை நானும் அவரை கேட்கச சொல்லலை” 

“இது தான் விஷயம். புரியறதா?”

“என்ன சொல்ல வர்றேங்கள்ன்னு கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்கோளேன்”

“அப்படியும் இப்படியும் எப்படியும் பேசி பொய் சொல்லறவா கிட்ட கேட்டா நியாயம் கிடைக்குமா? அதனால் தானே மாப்பிள்ளையும் கேட்டுட்டில்லை. இதுல நாம போய் கேட்டா மட்டும் அப்படியே மாரிடப் போறாளாக்கும்!”

“அவாளை மாத்த நாம யாரு ? நம்ம பொண்ணை படுத்தினதையும் பேசினதையும் நாம தான் கேட்டாகணும். இப்போ விட்டுட்டோம்ன்னா அவா இதுக்கு மேலயும் படுத்துவா”

“இதுக்கு மேல படுத்தறதுக்கு நம்ம பொண்ணு ஏன் அங்க போகணும். விடு அவ இங்கேயே இருந்துடட்டும்”

“என்ன பேசறேங்கள் அப்போ அவா கிட்ட எதுவுமே கேட்க வேண்டாம்ன்னு சொல்லறேங்களா. அப்படி என்னால இருக்க முடியாது. என் பொண்ண அவா என்னென்ன பேசிருக்கா தெரியுமா? நாம பெத்து இருபத்தி இரண்டு வருஷம் நல்லா பார்த்துப் பார்த்து வளர்த்து இது மாதிரி பேச்சும் ஏச்சும் கேட்கவா தடல் புடலா கல்யாணம் பண்ணி வச்சோம்? நாம் நாளன்னைக்கு காலையில் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு அவா ஆத்துக்குப் போய் ஏன் என்னன்னு கேட்டுட்டு தான் வர்றோம். யார் வந்தாலும் வராட்டினாலும்  நான் போய் கேட்கத்தான் போறேன்.”

“சரி மா அதை நாளன்னைக்கு நாம மூணு பேருமா போய் கேட்போம். அப்பாவும் வருவா. இப்போ நாம ஒரு கேம் தாயம் போடுவோமா?” 

“ஓ எஸ் நான் ரெடி வாடா வேனு  அவா ரெண்டு பேரும் வர்றத்துக்குள்ள நாம காயின்ஸ் எல்லாம் எடுத்து வைப்போம்.”

“பாருங்கோ நம்ம பொண்ணை. எந்த வித சூது வாதும் தெரியாத பொண்ணா இருக்கிற இவளப் போய் அந்த பாவிகள்….”

“சரி போய் கேட்டுப் பார்ப்போம்”

தொடரும்…..

Leave a comment