நகைத் திருட்டு,
பணத் திருட்டு,
உடைத் திருட்டு,
இவை அனைத்தும் புறத் திருட்டு.

அவை பெரும்பாலும்…

பசி போக்கவும்,
பிரச்சினை தீர்க்கவும்
செய்யப்படும் திருட்டுகள்.

ஆனால் இன்று!

அகத்திருட்டு எனப்படும்

கருத்துத் திருட்டு,
அறிவுத் திருட்டு,
படைப்பு திருட்டு
பெருகி வருகிறது.

ஏனெனில்,
தானாக சிந்திக்க
அவர்களுக்கு நேரமுமில்லை,
சிந்தனை திறனுமில்லை.

இத்தகைய திருடர்கள்
நாகரீகத்தின் தோலணிந்த கள்வர்கள்,
பகுத்தறிவின் முகமூடிக்குள் மறைந்து,
பிறரின் கற்பனையையும் சிந்தனையையும் களவாடுகிறவர்கள்.

பசிக்காகவோ!
பெயர் புகழுக்காகவோ!
திருட்டு திருட்டே!

பசிக்காக திருடுபவனைச் சமூகம் புறந்தள்ளுகிறது,
ஆனால் பெயர் புகழுக்காக திருடுபவனை
பெருமையின் பீடத்தில் உயர்த்துகிறது.

அதுவே நாகரீகத்தின் நாணமற்ற பெருமிதம்.

அதிகாரத்தாலும் சூழ்ச்சியாலும்
வலியவன் எளியவனை தாக்க ஒருபோதும் தயங்குவதில்லை;
தயங்கியதுமில்லை!

வலியவன் வலி அறியமாட்டான்!

அதனால்…

மீண்டும் ஒட்டி, உறவாடி,
ஒற்றுமையை நிலைநாட்ட பெருந்தன்மையோடு முன்வருவான்!

ஆனால்…

தாக்கப்பட்ட எளியவன்!

அதை மறந்து, மன்னித்து,
தன்னை தாக்கியவனை மீண்டும் மதித்து, ஏற்று, உறவாட வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது…
சர்வசாதாரணமப்பா…

என்று குடும்பங்களில் நடக்கும் கூற்று,
இன்று உலக அரங்கில் வெகுவிமர்சையாக நடைந்தேறி வருகிறது.

🌍 தாக்கிய வலியவன் வருந்தி, திருந்த வேண்டும்!

💫 தாக்கப்பட்ட எளியவன், தனித்துநின்றாலும் துணிந்து,
அதனை உணர்த்த வேண்டும்!

🔥 வலியவன் மீண்டும் தாக்க கையை ஓங்கும் முன்,
எளியவன் எட்டாத தூரத்தில் இருத்தல் வேண்டும்!

நண்பர்களின் வாட்ஸ்அப் குழு மூன்று மாதங்கள் முன்புவரை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு நூறு மெஸேஜ் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு மெஸேஜுக்கு பதில் அளிப்பதற்குள் பத்து மெஸேஜஸ் குவிந்து விடும்

அரசியல், அலுவலகம், சினிமா, சீரியல் என்று ஒன்று விடாமல் எல்லாமும் குழுவில் புரட்டி எடுக்கப்படும்.

அவ்வளவு விறுவிறுப்பாக இருந்த குழு

இந்த மூன்று மாதங்களாக கிணற்றில் கல்லை போட்டது போல கம்முனு இருந்தது.

மெதுவாக குழுவில் ராமு…

எல்லாரும் இருக்கீங்களா? ஏன் ஒரு மெஸேஜ்ம் இப்பெல்லாம் யாரும் போடரதே இல்ல…ஒரு கொரோனா ஃபார்வேட் மெஸேஜ் கூட காணோமே ஹலோ டியர் நண்பர்களே!!!

ரொம்ப நேரம் கழித்து கோமுவிடமிருந்து பதில் வந்தது

கோமு: டேய் ராமு உனக்கு வாட்ஸ்அப் ல மெஸேஜ் பண்ணுற அளவுக்கு டைம் இருக்காடா??

ரவி : அப்போல்லாம் ஆஃபிஸ் போயிட்டிருந்தோம் வாட்ஸ்அப் ல ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருந்தோம்….இப்போ அப்பிடியா!!!வீட்டு வேலை பென்டெடுக்குதுடா…சரி சரி …நான் துணியை துவைத்துக்கொண்டிருந்தேன்.. பாதிலயே விட்டுவிட்டு உங்களோட பேச ஆரம்பிச்சிட்டேன்….குட்…பை …நண்பர்களே.

ரகு: சீக்கிரமே ஆபிஸுக்கு வரசொல்லனுமுனு வேண்டிக்கோங்கடா…

கொரோனாவால் பதிக்கப்படுவது உடல்நலம் மட்டும் அல்ல…..😉

அன்று வினாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.

மருமகள் ராணி வினாயகரை அலங்காரம் செய்து பின் சுவற்றில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.

ராணி:  அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்…

ஆச்சு என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் வினாயகருக்கு முன் வைத்து தனது கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.

அஞ்சனா: இதெல்லாம் என்ன பாட்டி?

பாட்டி: இன்னைக்கு பிள்ளையாருக்கும் பெர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா…அதனால இது பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை அப்பறம் வடை.

ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வா மா.

எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.

அஞ்சனா: பாட்டி நான் உன் கூட டூ!

பாட்டி: நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விடரா?

அஞ்சனா: பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?

பாட்டி : சரிதான்.

அஞ்சனா: அ  ஃபார் அஞ்சனா ரைட்டா?

பாட்டி : ரைட்டுதான்.

அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும், பிடிகொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?

பாட்டி: என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.

அஞ்சனா: எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்..அன்ட் அடையும் வேணும்.

அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை ..ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைப்போல செய்து எடுத்து வந்து ….

பாட்டி: அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி…

அஞ்சனா : சூப்பர் பாட்டி.

என்று உண்டு பின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

பிள்ளைகள் எப்பொழுது எதை கேட்ப்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதை அழகாக குழந்தை மனம் கோணாமல் லாவகமாக கையாண்டு சாபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.

ஆட்டோ வில் செய்தித்தாள் படித்துக் கொண்டே பயணித்து கொண்டிருந்தவருக்கும் ஆட்டோக்காருக்கும் இடையே நடந்த உரையாடல்

“என்ன சார் நியூஸ் இன்னிக்கு”

“அமைச்சர்களை எல்லாம் பதம் பார்த்த கொரோனா இப்போ நம்ம தலைவரையே பதம் பார்க்க போவுது போல”

“ஏன் சார் தலைவருக்கு மா! வந்துடுச்சு?”

“தெரியலையேப்பா டெஸ்ட் எடுத்திருக்காங்களாம்”

“இருக்கா? போயிடுச்சா? சார்?”

“எத …யாரை… கேக்கறே”

“கொரோனா வ தான் பின்ன தலைவரையா!!!! ச்சசச …ஏன்னா நம்ம ஆளுங்களப்பத்தி நமக்குத்தானே நல்லா தெரியும்…. கொரோனாக்கிட்டயே கம்மிஷன் கேட்டோ இல்ல அதுல அவங்க ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லியோ துன்புறுத்தி அத தொறத்தி கிறத்தி விட்டுட்டாங்களோனு கேட்டேன்”

“அந்த  வேலைகள் எல்லாம் இதுகிட்ட பலிக்குமா?  கமிஷன் கேட்க வாயை திறந்ததும் வாயிக்குள்ளே போய் குரவலைல அது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டுதுனா அப்பறம் பிரித்தெடுக்கவே முடியாது”

“இத இப்படியும் சொல்லலாமில்ல சார்”

“எப்படி?”

“ஸ்டிக்கர் ஒட்டினவர்களுக்கு  ஸ்டிக்கராலேயே அழிவு னு”

“ஹா ஹா ஹா !!!! சரி வண்டிய அப்படி லெஃப்ட் ல நிறுத்துப்பா. நான் இறங்கும் இடம் வந்துடுச்சு. நன்றி தம்பி உன் கூட பேசிட்டு வந்ததில் ஆட்டோ பயணத்தில் ஆடாமல் வந்ததுபோல இருந்தது”