ஏதேதோ படங்கள் வெப் சீரிஸ்களை பற்றி எல்லாம் பரபரப்பான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் உண்மையில், நல்ல படங்களும் வெப் சீரிஸ்களும் பற்றி ஏன் அதிகமாக சமூக வலைத்தளங்களில் எவ்வித பதிவுகளும் வலம் வருவதில்லை! என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு வேளை என் கண்ணில் அப்பேற்பட்ட கருத்துகளோ பதிவுகளோ தென்படவில்லையோ என்னவோ! என்ற பதிலும் தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு. என்னைப் போல் பதிவுகளை தவறவிட்டவர்களுக்காக (நல்ல வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை பற்றிய பதிவு போட தவறியவர்களுக்காகவும்)  இதோ  “ராக்கெட் பாய்ஸ்” வெப் சீரிஸ் பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sony liv- இல் 2022 (சீசன் 1) மற்றும் 2023 (சீசன் 2) ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ராக்கெட் பாய்ஸ்” என்னும் வெப் சீரிஸ் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படைப்பாகும். நமது இந்திய நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றிய படங்களை எல்லாம் விட… நம் நாட்டுக்கான முன்னேற்ற பாதையை வழிவகுத்து நம்மையும் நம் நாட்டையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நமது அறிவியலாளர்கள் /விஞ்ஞானிகள் பற்றிய முப்பது/ நாற்பது ஆண்டின் வரலாற்று சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக  விறுவிறுப்பு குறையாது இனிமையான (ரசிக்கும் வண்ணம்) பின்னணி இசையோடு கதைதயை நகர்த்தி நம்மை நம் இருக்கையோடு கட்டிப்போடுகின்றனர் நமது “ராக்கெட் பாய்ஸ்”.

இது விண்வெளி நாயகர்களின் வெறும் வரலாற்று கதை மட்டுமல்ல.  அறிவியல் தகவல்கள், அன்றைய அரசியல் தகவல்கள், எதிரி நாடுகளின் சூழ்ச்சிகள், அதற்கு பலியான நம்மவர்கள் என்று இந்த வெப் சீரிஸ் ஒரு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது.

அறிவால் ஒளிர்ந்த மகத்தான சிந்தனையாளர்களான மதிப்பிற்குரிய திரு. சி.வி. ராமன், திரு. ஹோமி ஜே. பாபா, திரு. விக்ரம் சாராபாய், திரு. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் நமது டாக்டர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் தங்கள் வாழ்நாளை முழுவதுமாக அறிவியல் என்ற தங்கள் ஒரே விருப்பத் துறையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணித்ததற்கான ஒரு பொருத்தமான மரியாதை அஞ்சலியாகவும் இந்த தொடர் அமைந்துள்ளது.

தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அது நட்பை ஒருபோதும் இழக்கச் செய்திடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், சிறந்த நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்த திரு. ஹாமி பாபா மற்றும் திரு. சாராபாய் நண்பர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றாகவே இருந்துள்ளது.

என்ன தான் இருவரும் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும்,  லண்டன் கேம்ப்ரிட்ஜில் படித்தவர்கள் என்றாலும் இருவரின் கனவும் மெய்ப்பட, அவர்கள் பல தடைகளை எதிர்கொண்டும், பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கவும் செய்துள்ளனர். அவரவர் பாதையில் பயணித்த போது எழுந்த தடைகளை இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து அவற்றை கடந்து வந்ததை நாம் இந்த படைப்பின் மூலம் அறிய வரும் போது நம்மையும் அறியாமல் அவர்கள் நட்புக்கு நம் மனம் மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.

பல தோல்விகளை சந்தித்தாலும் மனம் தளராமல் நமது நாட்டுக்காக மீண்டும் முயற்சித்த நமது அன்றைய அறிவியலாளர்கள்/அரசியல்வாதிகள்/ விஞ்ஞானிகளின் உடல் மற்றும் மனப்போராட்டங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிரவாகம்.

ஒரு நல்ல நாடு/நல்ல வீடு எதுவானாலும் நன்றாக வளர்ந்து வருமே என்றால் அதை வீழ்த்த எதிரிகள் வலம் வரத்தான் செய்வார்கள். அவ்வாறு அப்போது (இப்போதும்) வலம் வந்த நம் அண்டை நாட்டு எதிரிகளையும் அமெரிக்க நாட்டையும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும், அதில் எப்படி வெற்றிக் கண்டார்கள் என்பதையும் பார்வையாளர்களான நம்மை நகத்தை கடித்துக்கொண்டு நாற்காலியின் முன் வந்து அமர்ந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

எட்டப்பன் ஒருவனால் உயிரிழக்கிறார் திரு. ஹோமி. அவர் உயிரிழந்தாலும் அவர் விதைத்தது அறுவடை செய்யப்படுகிறது. இந்தியா பலம் பொருந்திய நாடாக இன்றும் வலம் வருகிறது.
அதற்கு காரணமான நம் அறிவியலாளர்களையும் விஞ்ஞானிகளையும் என்றென்றும் கருத்தில் கொள்வோம். அவர்களையும் போற்றி வணங்குவோம்.

கட்டபொம்மன் வம்சாவளியினர் இருந்து வருவதை போலவே எட்டப்பனின் வம்சாவளியினரும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

நம் நாட்டை பாதுகாப்பது ராணுவ வீரர்களின் கடமை மட்டுமல்ல அது இந்திய நாட்டின் பிரஜைகளான நமதும் ஆகும். கடமை உணர்ந்து செயல்படுவோம்.

நமது சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் சிந்திய வியர்வையும் உதிரமும் விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்பதை நாமும் நன்குணர்ந்து நமது சந்ததியினருக்கும் உணர்த்துவோம். நம் நாட்டை உயர்த்துவோம்.

முதல் அணுக்கரு உலை (nuclear reactor), முதல் ராக்கெட், முதல் தூர்தர்ஷன் நிகழ்ச்சி, முதல் ஆட்டம் பாம் என்ற நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து பின்னி அழகான மாலையாக நமது “ராக்கெட் பாய்ஸ்” க்கு சமர்ப்பித்துள்ள படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் அவரவர் கதாப்பத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

“ராக்கெட் பாய்ஸ்” – விண்வெளியை சென்றடைந்து விட்டாலும்,  வானிலும் நம் மனதிலும் இன்றும் ஒளிரும் விண்மீன்கள்.

நன்றி 🙏

நா. பார்வதி

தி வைல்டு ரோபோட் (The Wild Robot), திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ட்ரீம் வர்க்ஸ் தயாரிப்பில் வெளியான ஒரு அற்புதமான அனிமேஷன் படைப்பாகும்‌. இத்திரைப்படம் திரு. பீட்டர் ப்ரௌன் என்பவர் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கான படமென்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இது அனைத்து வயதினருக்குமான திரைப்படமாகும். ஏனெனில் அது கற்றுத் தரும் பாடம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருந்தும்.

மனிதர்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ரோபோட்களில் ஒன்று தான் ரோஸ் (Rozzum 7134), கதையின் நாயகி. ரோபோட்களை ஆர்டர் செய்தவருக்கு, அவைகளை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் புயலில் சிக்கிய அந்த கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்குகிறது. அதில் இருந்த நம்ம நாயகி ரோஸ் (Rozzum 7134) மட்டுமே பிழைத்து நீரில் மிதந்து ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் தீவை சென்றடைகிறாள். அந்த ரோபோட்டை அத்தீவில் இருந்த விலங்குகள் விசித்திரமாக பார்த்து, சுற்றி வந்து, அதன் மேல் ஏறி நின்று என்று விலங்குகளுக்கே உரித்தான சேஷ்டைகளை செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு பொத்தானை அழுத்த நம்ம நாயகி ரோஸ் விழித்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் அந்த நொடி முதல் படத்தின் இறுதி காட்சி வரை பார்வையாளர்களின் மனதை கவர்ந்திழுத்து தன்னுடனே பயணிக்க செய்திருப்பது சிறப்பு.  

மக்களிடம் மட்டுமே பேச தெரிந்த ரோஸ் விலங்குகளுடன் பேசி பழக தன்னை தானே அப்டேட் செய்து கொள்வதும், வனவிலங்குகளின் சம்பாஷணைகளை மொழிபெயர்ப்பு செய்து புரிந்துக் கொள்வதும் என பலவற்றை கற்றுக் கொண்டு அங்கிருக்கும் மிருகங்களுக்கு தன் சேவை தேவையில்லை என்பதை புரிந்துகொண்டதும்… தன்னை ஏற்றுமதி செய்தவரிடமே திரும்பி சென்றுவிட முடிவெடுத்து அவளை மீட்பதற்கான ட்ரான்ஸ்மிட்டரை செயல்படுத்த முயலும் போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி ட்ரான்ஸ்மிட்டர் பழுதாகிறது. வேறு வழியின்றி மீண்டும் மிருகங்களிடம் செல்ல, அவளை கண்டதும் அனைத்து விலங்குகளும் பூதமென்றெண்ணி தெறித்து ஓட, செய்வதறியாது மழையில் நனைந்தபடி நின்றிருந்தவளின் முன்னே ஏதோ பொத்தென வந்து விழுகிறது. அது என்னவென்று அதன் அருகே சென்று பார்க்கிறாள். அது ஒரு பறவையின் கூடு. அதில், இறந்து போன ஒரு பறவையும் ஒரு முட்டையும் இருக்கிறது. அந்த பறவையின் முட்டையை தன் கையில் எடுத்து பார்க்கும் ரோஸ் அக்கணம் முதல் அந்த முட்டையை பாதுகாப்பதையும் அதை வளர்த்து ஆளாக்குவதையும் தனது கடமையாக எடுத்துக் கொண்டு அதற்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து செயலில் இறங்குகிறாள். அன்று முதல் ரோஸ் (Rozzum 7134) ஒரு இயந்திர தாயாக மாறி அந்த முட்டைக்குள் இருந்து வெளிவரும் வாத்தை இயக்கத் துவங்குகிறாள்.

ரோஸ் எவ்வாறு அந்த வாத்தை வளர்க்கிறாள்? அதற்கு வேறு ஏதாவது விலங்கு உதவுகிறதா? அந்த தீவில் இருந்த மற்ற மிருகங்கள் எப்படி ரோஸுடன் பழகுகின்றன. ரோஸ் (Rozzum 7134) வளர்க்கும் வாத்து தன் இயந்திர தாய் போலவே இயந்திரமாகிறதா? அதன் குடும்பத்துடன் சேர்க்கப்படுகிறாதா? குடும்பத்தோடு சேர்கிறதா? அதன் குடும்பத்தாரால் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கான விடையாக நம் கண் முன்னே திரையில் விரியும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

ரோஸ் (Rozzum 7134) அந்த தீவில் சந்திக்கும் சவால்கள், அதை அவள் எதிர்கொள்ளும் விதங்கள் பற்றியும் மேலும் அவள் அந்த தீவை விட்டு வெளியேறுகிறாளா இல்லை அந்த தீவையே தன் வீடாக மாற்றிக்கொள்கிறாளா என்பதை எல்லாம் திரைப்படத்தை பார்த்து ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மித்து மூழ்கி, யான் பெற்ற இன்பம் என் சமூக ஊடக நட்பூக்களும் பெற வேண்டும்.

கப்பல் கவிழ்ந்து கரை சேர்ந்தது
காட்டு விலங்குகள் நிறைந்திருந்தது
இடிப்பட்டு அடிப்பட்டு உணர்கிறது
இயந்திரத்துக்கும் இதயம் இருப்பது
பறவை ஒன்றை கண்டெடுக்கிறது
பற்று அதன் மேல் வைக்கிறது
கதையின் கரு பழையது
கதையை அறிவியல் புனைவாக அளித்திருப்பது புதியது
மனிதனின் சேவைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரம்
மனிதனை காட்டிலும் மனிதநேயத்தை உணர்விக்கும் மந்திரம்
இந்த திரைப்படம் – தி வைல்டு ரோபோட்❤️













சீசன் 1&2

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 1 பார்வையாளர்களை சுழற்றியது போலவே தற்போது வெளிவந்துள்ள சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 பார்வையாளர்களை சுழற்றுவது நிச்சயம்.

முதல் சீசனான “சுழல்” பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் நமக்கு நெருக்கமானவர்களால் தான் நடைப்பெறும் என்றும், அதனால் உறவினர்கள் தானே என்று குழந்தைகளை அவர்களிடம் அலட்சியமாக விட்டுவிட வேண்டாம் என்றும், எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும் என்றும்,  அவ்வாறு இல்லாததால் நேரும் ஒரு பெண்ணின் இறப்பும் அதற்காக அவளைப் போலவே பாதித்த மற்றொரு பெண் வழங்கும் தண்டனையையும் ஒரு இன்வெஸ்டிகேஷன் சீரிஸாக மட்டுமின்றி அங்காளியின் மயானக் கொள்ளை பூஜை மற்றும் திருவிழாவையும் தெய்வ வழிபாட்டையும் இணைத்து மிக அழகாக கதையை சுவாரஸ்யம் குறையாது காட்சியாக்கப்பட்டிருந்த விதம் எட்டு எபிசோடுகளையும் பார்த்தாக வேண்டுமென்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் எழச்செய்தது.

அதை போலவே…சொல்லப் போனால் அதைவிட இன்னும் விறுவிறுப்பாக யார்! யார்! என்றும் யாராக இருக்கக்கூடும் என்றும் பார்வையாளர்களை சக்கரை என்கிற இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தியுடன் நம்மையும் தேட வைத்திருப்பது சிறப்பு. ஒரு கட்டத்தில் இவர் தான் என்று நாம் எண்ணிக் கொண்டு பார்த்தால் அவர் இல்லை என்று பதில் சொல்லும் அடுத்து வரும் எபிசோட். சரி கதை  எதைப் பற்றியது? நெறி தவறுதல் பற்றியதோ என்று நாம் நினைத்துப் பார்த்தோமேயானால் அடுத்த எபிசோடில் சைல்டு அப்யூஸ் பற்றியது என்று நம்மை சொல்ல வைக்கும். ஆனால் அதுக்கும் அடுத்த எபிசோட்  நம் எண்ணம் தவறு என்று கூறுவது போல் வேறொரு விஷயம் நம் கண்முன் காட்சியாக விரிந்து, அப்போ நாம நெனச்சது இல்லையா! என்று நம்மை நாமே கேட்க வைப்பதோடு என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் வைக்கிறது. இறுதியில் கதையின் புதிர்களுக்கான விடைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சுழல் ஒன்றில் போலீசாரிடம் சரணடைந்து ஜெயிலில் இருக்கும் நந்தினியின் வழக்கில் இருந்து ஆரம்பிக்கிறது சுழல் 2.  அவர் விடுவிக்கப் படுவாரா இல்லையா என்பது ஒரு பக்கம் விறுவிறுப்பை ஏற்றும் அதே நேரம் அவரின் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் இறந்து விடுகிறார். அவரின் இறப்பு தற்கொலையா இல்லை கொலையா என்று தொடர்கிறது இரண்டாம் பாகம். மேலும் அவரை கொன்றதாக கூறி எட்டு பெண்கள் போலீசாரிடம் சரணடைகின்றனர். அவர்கள் யார்? ஏன் கொலையா! தற்கொலையா! என்ற ஒரு முடிவுக்கு வராத நிலையில் எட்டு பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டும்? முதல் பாகத்தில் வரும் நந்தினி கதாப்பாத்திரத்திற்கும் இரண்டாம் பாகத்தில் வரும் இந்த எட்டு பெண்களுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? இதில் யார் தான் வில்லன்?
என்று நாம் கேட்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக பலரை நம் சந்தேக லிஸ்ட்டில் இடம்பெறச் செய்திருக்கும் கதாசிரியர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.

சமூக அக்கரை கொண்ட கதைக்களத்தில் இந்த சீசனிலும் அஷ்ட காளி திருவிழா என்ற தெய்வ வழிபாட்டை கதையோடு இணைத்திருக்கும் விதமும், அவ்வப்போது விழா மூலம் பார்வையாளர்களுக்கு கதைக்கான குறிப்பு அளித்திருக்கும் பாணியும் அருமை.

இந்த வெப் சீரிஸின் பின்னணி இசையையும், பாடல்களையும் மிகவும் கச்சிதமாக பொருந்தச் செய்திருக்கும் இசையமைப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். சில இடங்களில் இசை கதையாக ஒலிக்கிறது. டைட்டில் பாடலில் தொடங்கி பல இடங்களில் மிரட்டவும் செய்கிறது.

நடிகர்கள் தேர்வும் அவர்கள் அனைவரின் நடிப்பும் அபாரம். இரண்டாம் பாகத்தில் வரும் திரு லால் அவர்கள் மட்டும் எடுபடவில்லை என்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பல இடங்களில் அவரின் வசன உச்சரிப்பு சரியில்லாததால் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டி இருக்கும். அது மட்டும் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வேகத்தடை போடுவது போல அமைந்துவிட்டது. தமிழில் நடிகர்களுக்கா பஞ்சம்🤔 நடிகர் திரு. பசுபதி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சமூக அக்கறை கொண்ட படமாக இருந்தாலும் எவ்வித தேவையற்ற முழக்கங்கள்/பிரசங்கங்கள் இன்றி, நீண்ட வீராவேசமான வசனங்கள் இன்றி, அறிவுரைகள் ஏதும் இன்றி,  நடப்பவைகளையோ அல்லது நடந்தவைகளையோ  பின்னணியில் விவரிக்கும் (இடைஞ்சலான) குரல் ஏதுமின்றி கதையோடு கதையாகவே பார்வையாளர்கள் மனதில் கடத்தி இருப்பது, ஓ போட வைக்கிறது.

கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் நாயகன் அந்தஸ்து கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த வெப் சீரிஸ் உணர்த்தியுள்ளது.

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 –
சுவாரஸ்யமான கதையால் சுழன்று பார்வையாளர்கள் மனதை வென்று
தன்னுள் இழுத்து செல்லும் சுழல்
சூப்பர்.

2024 ஆம் ஆண்டு வெளி வந்த 1000 பேபிஸ் (ஆயிரம் குழந்தைகள்) என்ற மலையாள வெப் சீரிஸின் சீசன் ஒன்று பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். பிடித்திருந்தால் இந்த வெப் சீரிசை பார்க்கவும்.

முதல் மூன்று எபிசோட்களில் கதை எதை நோக்கி நகர்கிறது? அவற்றில் வரும் மனநிலை சரியில்லாத  மூதாட்டி சுவற்றில் என்ன எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? அந்த மூதாட்டியிடம் தான் கதை உள்ளது என்பது நமக்கு புரிந்தாலும்… அது என்ன கதை? அவருக்கு ஏன் குழந்தைகள் அழுகுரல் கேட்கிறது? அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா? இல்லை அவ்வாறு நடிக்கிறாரா? போன்ற பல கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழ வைத்துள்ள கதாசிரியர்  நான்காவது எபிசோட் முதல் அதற்கான விடைகளை அந்த மூதாட்டி  தன் மகனுக்கு கறி விருந்து அளித்து அவன் உண்பதை பார்த்து ரசித்து விட்டு விளக்குகிறார்.

அதை கேட்ட அவர் மகன் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு ஓடி அந்த மூதாட்டி அறைக்குள் சென்று சுவற்றில் அவள் வரிசையாக ஏதோ எழுதி வைத்திருந்ததில் வேக வேகமாக எதையோ தேடுகிறான். அப்போது டைனிங் அறையில் அமர்ந்திருந்த மூதாட்டி பலமாக சிரிக்கிறாள். அவளின் சிரிப்பொலி அவள் மகனை அவளிடம் அழைத்து வருகிறது. அங்கு வந்த மகன் அவளை ஓங்கி அடிக்கிறான். அவள் நாற்காலியில் அமர்ந்தபடியே தரையில் மல்லாந்து விழுகிறாள். அப்போதும் சிரிப்பதை அவள் நிறுத்தவில்லை. அவளின் தலைக்கு பின்னால் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது.

அவள் மருத்துவமனையில் மருத்துவர் முன் தலையில் கட்டுடன் படுத்திருக்கிறாள். கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் தனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரையும் ஜூடிசியரியையும் காண வேண்டும் என்று கூறுகிறாள். பின் அங்கிருந்த ஒரு நர்சிடம் அவளின் பக்கத்து வீட்டு காரர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவழைக்கிறாள்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மருத்துவமனை வந்து மூதாட்டியை சந்திக்கிறார். அப்போது அவள் ஒரு கவரை அவர் கையில் கொடுக்கிறாள். மற்றொன்றை ஜூடிசியரியின் ஆளிடம் கொடுக்கிறாள். அந்த கவரை முதலில் பிரித்து படிக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போகிறார். உடனே அந்த ஏரியா எஸ்.பியிடம் விவரங்களை தெரிவித்து அந்த லெட்டரை கொடுக்கிறார். அதிர்ச்சியான எஸ்.பி அந்த லெட்டர் ஜூடிசியரியிடம் போகாது தடுக்க வேண்டுமென்று வேகமாக நீதிபதி அலுவலகத்துக்கு இருவரும் செல்கிறார்கள். ஆனால் அதற்குள் அந்த லெட்டர் அந்த நீதிபதியின் கையில் சென்றடைகிறது. வேறு வழியின்றி சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரும் எஸ்.பியும் நீதிபதியிடம் கடிதத்தில் இருந்த விவரங்களை கூறுகின்றனர். நீதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்திலும் அதே விவரங்கள் இருக்க, இருபது வருடங்களுக்கு முன் நடந்த அந்த க்ரைமின் விவரங்களை இப்போது வெளியிட்டால் அது சமூகத்தில் பெரியளவில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அதை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்றும் யோசித்து மூவர் மட்டுமே அறிந்த அந்த உண்மையை அப்படியே மறைத்து விடுகின்றனர்.

அப்படி என்ன அந்த கடிதத்தில் அந்த மூதாட்டி எழுதியிருக்கிறார்? என்ற யோசனையில் அடுத்த எபிசோடை பார்த்தால் அதில் ஒரு நடிகையின் கொலை விசாரணை பற்றி நகர்கிறது கதை. இதற்கும் முதல் நான்கு எபிசோடுகளுக்குமான சம்மந்தம் என்ன? என்ற கேள்விக்கான விடை, அந்த நடிகையின் கொலையை விசாரணை செய்து அதில் வெற்றி காணும் ஆஜி குரியன் என்ற போலீஸ் அதிகாரி… நடிகையின் கணவனிடமிருந்து பெறும் வாக்குமூலத்தில் முளைக்கிறது.

அதிலிருந்து அன்று வரை அதாவது கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக மூவரால் மூடி மறைக்கப்பட்ட அந்த மூதாட்டி கடிதத்தின் விவரங்கள் நான்காவதாக ஆஜி குரியனுக்கும் தெரிய வருகிறது.

நடிகையின் கொலைக்கும் மூதாட்டியின் கடிதத்திற்கும் லிங்க் உள்ளதா? அப்படி அந்த கடிதத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தது. எப்படி ஒரு நடிகையின் கொலை விசாரணை ஆஜியை மூதாட்டி கடிதத்தின் விவரங்களுக்கு அழைத்து செல்கிறது! போன்று பல திருப்பங்களை கொண்டு மிகவும் கவனமாக பின்னப்பட்டிருக்கும் கதைக்களம் நம்மை இருந்த இடத்தில் இருந்து எழவிடாது நம்மையும் விசாரணையில் இணைந்திருக்க செய்த அரௌஸ் இர்ஃபான் மற்றும் நஜீம் கோயா ஆகிய இரு திரைக் கதையாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

இந்த வெப் சீரிசில் வரும் பல காட்சிகள் மறைமுகமாக பல விவரங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. அதை புரிந்து கொள்பவர்கள் குறை கூறமாட்டார்கள். புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எல்லாம் குறையே.

இதன் கிளைமாக்ஸ் கொஞ்சம் அவசர அவசரமாக எடுத்தது போல் இருந்தாலும் அது அடுத்த சீசனுக்கான லீட் என்று எடுத்துக் கொண்டால் அதுவும் சரியே என்று பார்வையாளர்களுக்கு புரியும்.

இதில் வரும் சில காட்சிகளுக்கான பதில் சீசன் இரண்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூதாட்டி சாராவாக நீனா குப்தா, அவரின் சிறுவயது சாராவாக ராதா கோமதி, அவரின் மகனாக சஞ்ஜு  சிவராம் மற்றும் ஆஜி குரியனாக ரகுமான் என்று களை கட்டியுள்ளது இந்த 1000 பேபிஸ்.

விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதை, சிறப்பான நடிப்பு, காட்சி அமைப்புகள், லொகேஷன்ஸ் என்று அனைத்துமே இந்த வெப் சீரிஸின் ப்ளஸ்.

நிஜத்தில் இது சாத்தியமா? இது போல் நடக்கக் கூடுமா? என்றெல்லாம் ஆராயாமல் கதையை கதையாக கண்டு மகிழ ஆயிரம் பேபிஸ் ஓர் சிறந்த படைப்பாகும்.

1000 Babies – புனரபி ஜனனம், புனரபி மாற்றம்.

சற்று தாமதமான விமர்சனம் தான். என்ன செய்ய? எனக்கு இந்த படத்தை பார்க்கும் நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது.  எனது பார்வையில் லப்பர் பந்து, உங்களை நோக்கி வீசி இருக்கிறேன், அது பவுண்ட்ரியா இல்லை அவுட்டா என்பது வாசகர்களான உங்கள் கையில்.

லப்பர் பந்து பலரை பள்ளி /கல்லூரி பருவத்திற்கு அழைத்துச் செல்வது நிச்சயம். பொதுவாக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே முளைக்கும் வழக்கமான பிரச்சினைகளை தவிர்த்து ஒரு லப்பர் பந்து அவர்கள் திருமணத்திற்கு இடையூறாக புனையப்பட்டிருக்கும் கதை சற்றே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.  கதையில் எவ்வித தொய்வின்றி நகர்த்திய விதம் இதம். இரு ஆண்களின் ஈகோ, விளையாட்டில் மட்டுமின்றி இருவர் வாழ்க்கையிலும் வினையை கொண்டு வந்து சேர்க்க இருக்கும்  தருணத்தில், சம்பந்தப்பட்ட இருவரையும் அதே விளையாட்டு ஒன்று சேர்த்து அவர்கள் வாழ்க்கையையும் அழகாக்குகிறது. இது தான் கதை சுருக்கம். ஆனால் இந்த இரு சம்பவத்திற்கிடையே உலா வரும் வண்ணமயமான காதல், நட்பு, கிராமத்து சூழலில் கிரிக்கெட், விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு, மாமியார் மருமகள் உறவு, கணவன் மனைவி உறவு,  சமத்துவம், அரசியல் என்று  அட்டவணை நீண்டுக் கொண்டே போனாலும் அவை அனைத்தையும் விளையாட்டு என்ற ஒரு புள்ளியில் இணைக்கும் கதை அருமை. அத்தகைய கதையை எழுதி இயக்கியுள்ள  திரு. தமிழரசன் பச்சைமுத்து அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நடிப்பு பொறுத்தவரை அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அன்பு, யசோதை, துர்கா, கருப்பையா, காத்தாடி, பூமாலையின் தாய், கொழந்த ஆகிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் நடிகைகளுக்கு பாராட்டுகள். அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ் இன்னும் கொஞ்சம் ஹோம் வர்க் செய்திருக்க வேண்டும் போல் படம் பார்க்கும்போது தோன்றுகிறது.  கெத்துக்கு கெத்து போதவில்லை. எனது பார்வையில் அன்பு தான் கெத்து.

சமீபத்தில் வெளிவந்த படங்கள் பலவற்றில் இசை பெரும் இரைச்சலாக இருந்து வரும் வேளையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதைக்கான இசையமைப்பு படம் முழுவதும் இதமாக ஒலிக்கிறது. இசையமைப்பாளர் திரு. ஷான் ரோல்டன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கதையில் வரும் திருப்பம் மற்றும் முடிவு பார்வையாளர்களால் யூகிக்க கூடியதாக இருந்தாலும் நம்மை எழுந்து செல்ல விடாது முழு படத்தையும் பார்க்க வைத்திருப்பது சிறப்பு. கிராமத்து குசும்பு என்பதை கமெண்ட்டேடர்களின் கமெண்ட்ரி நிரூபித்திருக்கிறது. வேர்ல்டு கப் கமெண்ட்டேடர்களை விட மிகவும் கலகலப்பாக கமெண்ட்ரி செய்த கமெண்டேட்டர்களுக்கு பாராட்டுகள்.

பாரதியார் அன்றே சாதிகள் இல்லையடி பாப்பா என்றொரு பாட்டை பாடி எழுதியிருக்கிறார். ஆனாலும் ஏன் இப்போது வரும் திரைப்படங்கள் அனைத்திலும் இந்த சாதியை கோர்க்கிறார்கள்?  இயக்குனர் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம். மேலும் ஒவ்வொருவர் பலவற்றை கற்றுத் தேர்ந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வர  துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்றிருப்போருக்கு அந்த வெற்றி கிடைத்தும் பலனிருக்காது என்பது ஏன் புரியவில்லை.  விட்டுக்கொடுப்போர் கெட்டுப் போவதில்லை ஆனால் எல்லாவற்றிலும் எல்லாரும் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேறுவோம் என்ற தவறான கருத்தை பரப்புவதை தவிர்த்து, இனி வரும் படங்களில் நன்றாக படித்து தன் உழைப்பில் முன்னேறுவது எப்படி என்றும் அவ்வாறான முன்னேற்றமே தனக்கான அடையாளத்தை தரக்கூடியதாக இருக்கும் என்றும் காட்சிகளும் வசனங்களும் அமைத்தல் நன்று. இட ஒதுக்கீடு வேண்டுமென்று உரிமை குரல் கொடுப்போர், இனி எங்களுக்கு அது  வேண்டாம் நாங்களே அவ்விடத்தை எட்டிப் பிடிப்போம்  என்ற குரலையும் ஒலிக்கச் செய்தால் கூடுதல் சிறப்பு.

லப்பர் பந்து – வீசப்பட்ட விதம், ஏற்படுத்தும்
கார்க் பந்தின் தாக்கம்.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகலன்னு நீலாம்பரி ’99 ல சொன்னது 2024 ல கூட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பொருந்துகிறது. அதுனால தான் அவர் இன்னமும் சூப்பர் ஸ்டார். இத் திரைப்படத்திலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார். அவரின் வயதுக்குரிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது சிறப்பு. நடிப்பில் நிதானம், முதிர்ச்சி இரண்டையுமே மிக அழகாகவும் அளவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்.

மஞ்சு வாரியர் ரஜினி காம்போ நன்று. பகத் பாசில் மிக அழகாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ரஜினி பகத் காம்போவின் ஒரு காட்சியில் நம்மை இருவருமே கண்கலங்க வைக்கிறார்கள்.

ரோகிணி, ராணா, அபிராமி, கிஷோர், ரித்திகா, துஷாரா விஜயன், ரமேஷ் திலக் ஆகியோர் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் வண்ணம் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனோ அமிதாப் அவர்களின் கதாப்பாத்திரம் ஏற்புக்குரியதாக அமையவில்லை. அதற்கு டப்பிங் ஒரு முக்கிய/ பெரும் காரணம் என்றே படம் பார்த்த அனைவருக்கும் கூற தோன்றும் முதல் மற்றும் அப்பட்டமாக தெரியும் பெரிய குறை. அவர் திரைப்படத்தோடும் கதாப்பாத்திரத்தோடும்  ஒட்டவில்லை. தனித்தே இருக்கிறார்.

அனிருத் இசையில் மாற்றம் ஏதுமின்றி அதே ஒரே இசை தான் ஒலிக்கிறது. மனதில் நிற்கும் படி பாடல்கள் ஏதும் சரியாக அமைக்கவில்லை.  காட்சிக்கு தகுந்தாற் போல் இசையமைக்காது சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே இசையமைத்திருப்பதால் திரைப்படத்தின் பின்னணி இசை வெறும் இரைச்சல்! பார்வையாளர்களுக்கு தரும் எரிச்சல்!. அனிருத் அவர்களின் அடுத்த படத்திலாவது இசையில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களில் நானும் ஒருத்தி. மொத்தத்தில் இத்திரைப்படத்தின் இசை – இம்சை.

என்கவுண்டர் நல்லதா கெட்டதா! இருக்கலாமா! இருக்கக்கூடாதா! இது தான் கதைச் சுருக்கம். இதை விளக்கும் விதமாக  மனிதாபிமானம், கார்ப்பரேட் மோசடி , தனி மனித உரிமை என பல விஷயங்களால் பின்னப்பட்டிருக்கும் கதை தான் “வேட்டையன்”.  முதல் பாதியில் கதை நகர்ந்த விதம் நம்முள்… அட என்னடா மறுபடியும் கற்பழிப்பு தான் கதைக்கான மோட்டிவா என்ற  அலுப்பு மனதில் எழும் தருணத்தில் சட்டென கதை களம் நம் நினைப்பை அப்படியே புரட்டிப்போடுகிறது.

போலீசுக்கு கொலைக்கான மோட்டிவ் வேணும் என்பதால் கற்பழிப்பு தான் சரியானதாக இருக்கும்  என்று  வில்லன் கூறும் போது, அட போலீசுக்கு மட்டுமில்லப்பா இப்போ வெளிவர பல படங்களின் கதைக்கான மோட்டிவே அதுவாகத்தான் இருக்கிறது என்ன செய்ய என்று நம்மை சொல்ல வைக்கும் விதம் அந்த வசனம் அமைந்திருக்கிறது. அது அமைந்ததா இல்லை அமைக்கப்பட்டதா! யாம் அறியோம் பராபரமே.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (சூப்பர் ஸ்டார்) பல குற்றவாளிகளை குறிவைத்து  குழியில் விழவைக்கிறார். அதற்காக அவரின் தேடல்கள் மற்றும் அவர் அமைக்கும் வியூகம் ஆகியவைகளை சுருக்கமாக சில காட்சிகளில் புரிய வைத்து சட்டென கதைக்குள் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறார் இயக்குனர். மேலும் கதை ஒரு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் சட்டென கதையில் பெரும் திருப்பம் ஒன்றை கொடுத்து கதையை அப்படியே வேறு கோணத்தில் கொண்டு சென்று விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நடிப்பு பாதி ஹீரோயிசம் மீதி என்று கலந்து செய்த கலவை தான் அதியன் கதாப்பாத்திரம். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்றார் போல் நேர்மைக்கு பெயர் போன எஸ்.பி. அதியன் ஓரிடத்தில் தவறிழைத்து விடுகிறார். அது என்ன தவறு? ஏன் தவறானது? அதை எப்போது! எப்படி! யாரால் உணர்கிறார்? தவற்றை திருத்திக் கொள்ள அவர் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளின் பதில்களை தேடும் வேட்டையில் இறங்கி திரையரங்கம் சென்று திரையில் “வேட்டையன்” வேட்டையை கண்டு களியுங்கள்.

“வேட்டையன்” – துப்பாக்கியால் குற்றவாளிகளையும் நடிப்பால் ரசிகர்களின் மனதையும் வேட்டையாடும் வேட்டையன் நம் டிக்கெட் பணத்திற்கு பங்கம் விளைவிக்காதவன்.

எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும், சமூக ஊடக சிபாரிசுகளும், காசுக்கு கூவும் கூட்டங்களும் இன்றி அமைதியாக வெளிவந்துள்ள அற்புதமான திரைப்படம். ரொம்ப நாள் கழித்து தமிழில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படம். இது எங்கள் சொந்த கதை, எங்கள் சோகக்கதை உண்மைக் கதை, முடக்கப்பட்டவர்கள் கதை, அந்த கதை, இந்த கதை என்ற சில பொய்களின் கூச்சல் மற்றும் அற்ப பரபரப்புகளுக்கிடையே ஜமா ஜொலிக்கிறது.

இதிலும் ஏற்றத்தாழ்வுகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அதற்கு பதிலடியாக திறமையை முன்னிறுத்தி, அதற்கு முதலுரிமை கொடுத்து மிக அழகாக கதை நம் மனதை தொடும் விதம்  ஜமாவை படைத்துள்ளார் இயக்குனர் திரு பாரி இளவழகன்.

இக்கதையும் துரோகத்தை சார்ந்தது என்றாலும் அதற்காக அருவாள் அல்லது கத்தி கொண்டு சதக் சதக் என்று இரத்தம் தெறிக்கும் விதம் பழிவாங்கும் காட்சிகள் இன்றி, கலையை நன்கு பயின்று தன் திறமையால் ரத்தமின்றி, வீண் சத்தமின்றி தன் உரிமையை நிலைநிறுத்த கதாநாயகன் தேர்ந்தெடுக்கும் திறமை என்னும் ஆயுதம் அபாரம். அவ்வாறு நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டு அதில் விஸ்வரூபம் எடுத்தால் அது நம்மை ஒடுக்குபவரை ஒதுங்கிக் கொள்ள வைக்கும் என்பதற்கு இப்படம் ஓர் சிறந்த உதாரணம்.

கல்யாணம் கதாப்பாத்திரத்தின் மூலம் நல்ல நடிப்பை மட்டுமின்றி இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு பண்பை விதைத்து இருக்கிறார் இயக்குனர்.

நமக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சாணக்கியர் நீதியை படமாக்கி உள்ளார் இயக்குனர்.  நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி,  வஞ்சகத்தை விடுத்து நேர்மையைத் தேர்ந்தெடுத்து, மற்றவர்களை குறைத்து மதிப்பிடாது, துரோகத்தின் சவால்களை முறியடித்து வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும்,  அதிலிருந்து வெளிவரலாம் (அது யாராக இருந்தாலும்) என்பதை ஜமா கதை நமக்கு உணர்த்துகிறது.

தாண்டவம் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரு சேத்தன் அவர்கள்  அமைதியாய் காய்களை நகற்றி ஆராவாரம் மற்றும் தேவையற்ற அலப்பறை இல்லா வில்லத்தனத்தை முகபாவத்திலும் பார்வையிலும் வசனம் பேசும் விதத்திலும்  தாண்டவம் ஆடியிருக்கிறார். கல்யாணத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகையின் நடிப்பு பிரமாதம். ஜகாவாக திரையில் வலம் வந்த அம்மு அபிராமி நடிப்பும் நன்று.

வித்தை கற்றுக்கொடுத்தவரிடமே உன் வித்தையை காட்ட நினைத்தால் விடையின்றி இவ்வுலகிலிருந்து விடை பெறுவாய்  என்பதையும் எடுத்துரைக்கிறது இந்த ஜமா.

இந்த படத்தின் இசை அதற்கு பலம் சேர்த்துள்ளது என்று எவராலும் சொல்லாமல் இருக்க முடியாது. இப்படத்திற்கு நம் இசைஞானியை தவிற வேறு யார் இசை அமைத்து இருந்தாலும் அது எடுபடாது போய் இருக்கும்.

மிதமான இசை, காட்சிக்கு ஏற்றார் போல் இசை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை. அதிலும் இப்படத்தில் சோக காட்சிகளின் பின்னணியில் நம் இசைஞானியின் இசையிலும் இழைந்தோடிய சோகம் நம் மனதை உருக்கும். அது போல் இசைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் படம் முழுவதும் அவர் இசையை நிறைத்திருக்கலாம். ஆனால் அவர் கதைக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் இசை கதையோடு கைக்கோர்த்து கதையை குலைக்காமல் கதைக்கும் வாசனத்திற்கும் வழிவிட்டு பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் அடிதடி, சண்டை, வெட்டு, குத்து, ஆசிட், இரத்தம், கற்பழிப்பு  போன்ற வழக்கமான காட்சிகளையும், காரணங்களையும் புறம் தள்ளிவிட்டு முன்னே தலை நிமிர்ந்து நடை போடும் ஜமா திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது போலவே திரைக்கதையிலும் அமைத்திருப்பது சிறப்பு.

கதை, திரைக்கதை, இசை, நடிக்கர்கள், நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்திலும் ஜமாய்த்திருக்கிறார்கள்.

ஜமா – ஜாலம்.

ஒரு காலத்தில் புது திரைப்படங்கள் வெளிவந்தால் ரசிகர்களிடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று அவர்களின் கருத்துகளையும் விமர்சன குழுவினரின் விமர்சனங்களையும் வைத்து எந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்றும், எது சிறந்தது என்றும் பத்திரிகைகள் அச்சிட்டு வந்தன. ஆனால் இப்போதோ ரிலீஸான  மூன்றே நாட்களில் இப்படத்தின் வசூல், ரிலீஸான இரண்டாவது நாள்  அப்படத்தின் வசூல் என்று நாட்கணக்கில் அப்போதும் வசூலை வைத்து திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில் மூன்று நாட்களுக்கு மேல் யாரும் எதுவும் கேட்க போவதில்லையே!

இதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமேயானால், இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்குள்ளேயே படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று அப்படக் குழுவினரே சிலாகித்து பேசிய நேர்காணல்கள் அல்லது பரபரப்புக்காக படத்தைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு பல்வேறு பதிவுகளை சமூக ஊடகங்களில் உலாவரச் செய்து முதல் மூன்று நாட்களில் வசூல் பார்க்க எண்ணுவது நமக்கு புலப்படும். இல்லையெனில் மக்கள் யாரும் அவர்கள் படத்தை பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்பாகவும் இருக்கக்கூடும் .

ஏமாறுபவர்கள் உள்ள வரை இது போல் ஏமாற்றுபவர்கள் சிம்மாசனம் ஏறத் தான் செய்வார்கள்.

நூறு நாட்கள் ஓடிய திரைப்படங்களும், வருடக்கணக்கில் திரையிடப்பட்ட திரைப்படங்களும் தந்த தமிழ் திரையுலகம் இன்று பத்து நாட்கள் தாண்டுவதற்கே தத்தளிக்கிறது.

சமீப காலமாக தமிழகம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏன் இவ்வளவு மோட்டிவேஷனல் மெஸேஜஸ்களும், பேச்சாளர்களும் தேவைப்படுகிறார்கள்! சிந்தியுங்கள். ஏன்? தமிழக மக்கள் மோட்டிவேடட்டாக இல்லை என்பதாலா இல்லை அந்த சாக்கில் மக்கள் மூளையை சலவை செய்வதற்காகவா? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதிலும் கருத்து, எங்கும் கருத்து, எதற்கும் கருத்து! கருத்தோ கருத்து! என்று கருத்தை கூறு போட்டு விற்காத குறையாக பள்ளி மாறுவேட போட்டி தொடங்கி திரையுலகம் வரை ஏன் இப்படி கருத்து கந்தசாமிகள் நிரம்பி இருக்கின்றனர்! சிந்தியுங்கள்.

திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக இருந்த வரை மேற்கூறியவாறு வருடக்கணக்கில் திரையிடப்பட்டு வந்தன. எப்போது திரைப்படத்தில் கருத்து திணிப்பு ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அதன் முடிவை அதுவே தேட துவங்கிவிட்டது.  கருத்து கதையோடு ஒன்றி பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்த வேண்டும் அல்லாமல் தனித்து /எடுத்து சொல்லப்படுமேயெனில் அது கதைக்கும் அத்திரைப்படத்திற்கும் பெரிய சறுக்கலாகும்.

கருத்து மிகுதியாக உட்புகுந்ததால்
கதை குலைந்து போனது
கதை குலைந்ததால்
திரைப்படம் குலைந்து போனது
திரைபடங்கள் அடுத்தடுத்து குலைந்து போவதால்
தமிழ் திரையுலகமே குலைந்து போய் கொண்டிருக்கிறது.

ஜாதி, மதம், இனம், பழிக்குப்பழி வாங்குதல் போன்ற திரைப்படங்கள் 80 /90 களிலும் நிறைய வந்துள்ளன ஆனால் அவை அனைத்தும் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் திரைப்படமாக்கவில்லை. அலுத்து போகவும் வைக்கவில்லை.  ஆனால் இப்போதோ!

மாற்றம் ஒன்றே மாறாதது.
இதுவும் மாறும்.
திரையுலகம் மீட்டெடுக்கப்படும்.
நல்ல ஜனரஞ்சக திரைப்படங்கள் திரையிடப்படும்
என்ற நம்பிக்கையுடன் அக்காலத்திற்காக காத்திருப்போம்.

எதார்த்த சினிமாவை படைக்கிறோம் என்று
கற்பனை வளத்தை கொன்று நாள்தோறும் நடப்பதை சித்தரித்து காட்டுவதை விடுத்து,
எதிர்பாராத ஒர் கதை கொண்ட நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களில் ஒருத்தியாக நான்.
-நா. பார்வதி

இத்திரைப்படத்தை என்னமோ தெரியவில்லை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை. மேலும்… கஷ்டப்பட்டு உழைத்த காசை  தியேட்டர் சென்று இப்படத்தை கண்டு வீணடிக்க என் மனம் ஏற்கவில்லை. ஓ.டி.டியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.  போன ஞாயிற்றுக்கிழமை மதியம் இப்படத்தை பார்க்கலாமென்று அமர்ந்தேன். படம் ஆரம்பம் முதலே கதை & திரைக்கதை இயக்கம் எல்லாம் திரையில் சரிவர ஒட்டாதது போலவே இருந்தது. 

மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக படத்தை பார்த்து விட்டேன். ஆனால் இப்படத்தைப் பற்றி என்ன எழுதுவது என்ற யோசனையில் மூழ்கினேன்.

எப்போதும் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்ப்பதும் அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்து காட்டி, குறைகளை மேலோட்டமாக விமர்சித்து எழுதுவதும் என்று இருந்த எனக்கு இப்படம் ஒரு சவாலாக இருந்தது. ஏனெனில் இப்படத்தை பற்றி எழுதுவதற்கு நல்லதா ஒரு விஷயம்…

எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்த்தேன் 

அது எங்கேயும் இல்ல! 

என்று நொந்து கொண்டது தான் மிச்சம். ஒரு திரைப்படம் எடுப்பது என்பது இமாலய சாதனை போன்றது என்று நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்பாடுமின்றி ஏனோ தானோ என்று எடுத்தது போல் இருப்பது வருத்தம் தருகிறது. 

சில படங்களை நன்றாக எடுத்து பெயர் வாங்கி விட்டால்… எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் அதை ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்ற மிதப்பில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும்  இப்படம் பெரும் ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் தராது என்பது உறுதி. இனி வரும் கலைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர் பட்டாளம், ஆடம்பரம், விளம்பரம் என்று ஆர்ப்பாட்டம் செய்த படக்குழுவினர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்,

 “தயவுசெய்து ரசிகர்களை முட்டாள்கள் என எண்ணி விட வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்ல தொடங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படத்தில் அப்பேர்ப்பட்ட இளைஞர்கள் ஒரு முதியவரை தேடி செல்வது நெருடல். வயதானால் தொணதொணவென பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற உலகறிந்த உண்மையை படம் போட்டு காண்பித்திருக்கிறார்கள். 

ஒரு படத்தில் கருடபுராணம் இதில் வர்மம். 

கருடபுராணம் கலக்கல் 

வர்மம் வழுக்கல்

ஒரு படத்தில் “மே” இதில் “மியாவ்”

“மே” மாஸ்

“மியாவ்” மிஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒலி மற்றும் ஒளிப்பதிவு, நடிப்பு, நடிகர்கள், ஒப்பனை, எடிட்டிங், பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால்…

இசை வெறும் இரைச்சல்

தரும் பெரும் எரிச்சல்!

இயக்கத்தில் இல்லை இறுக்கம்

ஆதலால் பாதியில் எழுந்து போக வைக்கும்!

கதையும் திரைக்கதையும் பெரும் சொதப்பல்

மூழ்கியது இந்தியன் 2 கப்பல்!

நடிப்பிலும் நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகை குழப்பம் 

புது முக நடிகர்கள் போல் இருக்கும்! (உலக நாயகன் உட்பட)

இந்தியன் தாத்தா ஒப்பனை

ஒப்பவில்லை 

எதுவுமே சரியாக ஒட்டவில்லை!

கருத்து பெருத்துப்போச்சு

படம் சருகாச்சு 

இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தா சென்ட்ரலை மட்டும் தான் தாக்குவாரோ! ஏன் ஸ்டேட்டை விட்டுவிட்டார்? 

அவசரத்தில் சொல்லப்பட்ட கதை. 

அரைகுறையான திரைக்கதை.

பாதி படம் எடுத்து முடித்து பார்த்ததும்… இந்தியன் கம் பேக் என்று வரவைத்து தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினார்களோ என்னவோ தெரியவில்லை அவர்களே இந்தியன் கோ பேக் என்றும் கூறி தங்களின் திரைப்படத்தின் விமர்சனத்தை படத்திலேயே காட்டிவிடும் நேர்மை மற்றும் தைரியத்திற்கு சல்யூட். 

சண்டை காட்சி மற்றும் மோனோ சைக்கிளிங் சீக்குவன்ஸ் எல்லாமே நம்மை பத்து வருடம் பின்நோக்கி  அழைத்து செல்வது உறுதி.  இவ்வளவையும் பார்த்து முடித்ததும் கடைசியில் இந்தியன் தாத்தா “ஐ வில் பி பேக்” என்று சொல்லி முடித்த விதம், 

“என்னது மறுபடியும் மொதல்லேந்தா! ஐயா சாமி போதும்டா சாமி. உங்க படத்துல சொன்னா மாதிரியே… ப்ளீஸ் கோ பேக்… அன்ட் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நெவர் எவர் கம் பேக்” 

என்று படம் பார்ப்பவர்களை சொல்ல வைக்கும். 

இந்தியன் 2 – இம்மியளவும் ஏற்க முடியாத இம்சை அரசன். 

-நா. பார்வதி

இத்திரைப்படத்தின் போஸ்டரில் ப்ரித்விராஜின் கெட்அப் பார்த்ததும் இப்படத்தை பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. அடுத்து வெளிவந்த டீசர் அதை மேலும் உறுதி செய்யும் விதம் அமைந்திருந்தது. நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்பறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் இல்லையா‌! அதனால் தான் என்னவோ இப்படத்தை பார்க்க நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது. பார்த்து விட்டேன், ஆனால் இன்னும் அந்த திரைப்படத்தில் இருந்து என் மனம் வெளிவரவில்லை.  அத்தகைய ஓர் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் இந்த உணர்வு உதிப்பது நிச்சயம்.

மலையாள எழுத்தாளர் திரு பென்யாமின் அவர்களின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்
நஜீப் கதாப்பாத்திரத்திற்கு ப்ரித்விராஜை தேர்வு செய்த இயக்குனர் திரு. ப்ளெஸி அவர்களுக்கு எனது முதல் பாராட்டு. ஏனெனில் மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் திரைப்படம் பார்ப்போருக்கு சொல்ல தோன்றும். 

திருமணமாகி இன்னும் சில மாதங்களில் அப்பாவாக இருக்கும் நஜீப் தனது மனைவி மற்றும் பிறக்க இருக்கும் குழந்தைக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று அங்கும் இங்கும் பணத்தை புரட்டி தங்கள் ஊர்க்காரர் ஒருவர் மூலம் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து மனதில் பல கனவுகளுடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  நஜீப்பின் பக்கத்து ஊர் பையன்  ஹக்கீமும் இவருடன் சேர்ந்து பயணிக்கிறார்.

மலையாள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாத நஜீப், அறைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஹக்கீம் ஆகிய இருவரும் சவுதி அரேபிய மண்ணில் கால் வைத்ததும் திரைப்படம் நம்மை பாலைவனத்திற்கு அழைத்து சென்று அங்கேயே நம்மை இரண்டரை மணிநேரம் கட்டிப்போட்டு விடும் கதைக்கு எனது இரண்டாவது பாராட்டு.

அந்நாடு நஜீப்பையும் ஹக்கீமையும் பிரித்து விட தவித்துப் போகிறார் நஜீப். ஓரே வேலைக்காக சவுதி சென்று இறங்கும் இவர்களை ஏன் பிரிக்கின்றனர்? யார் பிரிக்கிறார்கள்? எதற்காக? என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்வதே நன்று. மொழியும் தெரியாது தனித்து விடப்பட்ட நஜீப்பை சவுதி நாட்டை சேர்ந்த ஒருவர் ஓர் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அவ்விடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நஜீப், தான் யாரென்றும் எதற்காக சவுதி வந்திருப்பதாகவும் மலையாளத்தில் விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தம் போல் ஒலிக்க…விதி இது தான் என்று மதி சொன்னாலும் மனம் அதை கேட்காது அங்கிருந்து தப்பித்து செல்ல பல முயற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது. கடைசியில் அனைத்து முயற்சிகளும் மணலோடு மணலாக…விதி வென்றது.  அந்த வாழ்க்கையை ஏற்க விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி மெல்ல ஏற்க துவங்கும் நேரத்தில் ஹக்கீமை காண நேர்கிறது.  அதிலிருந்து திரைப்படம் நம்மை ஒரு வகையான பதற்றத்திலேயே பயணிக்க வைக்கிறது.

பாலைவனத்தில் ஓர் சோலை வனம் போல் அவ்வப்போது சரியான தருணத்தில் வந்து மறையும் ஃப்ளாஷ்பேக் நஜீப்புக்கும் பார்வையாளர்களுக்கும் அழகான ஓர் காட்சி விருந்து எனலாம்.

தண்ணீரிலேயே வாழ்ந்த ஒருவர் தண்ணீரின்றி தவிக்கும் காட்சியமைப்புகளும் கதையின் ஓட்டமும் அருமை. 

இறுதியில் நஜீப்பும் ஹக்கீமும் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்களா? பாலைவனத்தில் இருந்து வெளியேறுகிறார்களா? என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆடுஜீவிதம் எந்த ஒரு மனிதனும் கடந்து வரக்கூடாத ஓர் ஜீவிதம். ஆனால் கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஓர் மனிதரின் மறக்க முடியாத ஜீவிதம்.

ஆடுகளும், ஒட்டகங்களும் காட்டும் அன்பிலும் பாசத்திலும் பாதியாவது மனிதர்களுக்கு இருக்குமேயானால் மனிதம் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதை உணர்த்தும் திரைப்படம்.  நல்லுள்ளம் கொண்டர்களும், சுயநலவாதிகளும், தீயகுணமுடையவர்களும்  கலந்திருப்பது தான் நாடும் வீடும் என்பதை காட்சிகளின் மூலம் உணர வைத்துள்ளனர்.

பணம், பொருள், வசதி வாய்ப்பு இவைகளை வெளிநாடு சென்று ஏற்படுத்திக்கொண்டு ஓரிரு ஆண்டுகளில் ஊருக்கு திரும்பி விடலாம் என்று எண்ணி பயணிக்கும் விட்டில் பூச்சிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு இந்த படம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நஜீப் என்ற மனிதர் கடந்து வந்த கடினமான பாதையை காட்சிகளாக்கி நம்மையும் அவருடன் பயணிக்க செய்துள்ளனர் படக்குழுவினர்.

ப்ரித்விராஜ் சுகுமாரன் அவர்களின் நடிப்பு திறமை இத்திரைப்படம் முழுவதும் ஜொலிக்கிறது.

இக்கதையில் அமலா பால் அவ்வப்போது வந்து மறையும் அழகிய மின்மினி பூச்சி. 

நஜீப்பின் அம்மா, ஹக்கீம், ஹக்கீமின் நண்பனாக வரும் இப்ராஹிம் கத்ரி மற்றும் சவுதி அரேபியர்கள் கஃபீல், ஜசர் ஆக நடித்துள்ளவர்கள், சிறிது நேரம் வலம் வந்தாலும் பெரிய தாக்கத்தை உருவாக்கும் ஹிந்தி காரர் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்து படத்தில் நம்மோடு பயணிக்கின்றனர்.

ஜாதி, மதம், அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பழிக்குப்பழி என்று ரசிகர்களின் ரசனையை மாற்ற முயற்சிக்கும் விதம் சில காலங்களாக ஒரே பாதையில் பயணித்து வரும் இத்திரையுலகில்… நிறைய நிறை மற்றும் சில குறை என்று இரண்டையும் ஏந்தி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் வலம் வரும் ஓர் திருப்புமுனை “ஆடு ஜீவிதம்”. இது போலும் படம் எடுக்கலாம், இதையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் /ஆதரிப்பார்கள் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் இத்திரைப்படம்.

“ஆடுஜீவிதம் – பார்வையாளர்கள் மனதை ஆட்டி வைக்கும் ஓர் மனிதனின் ஜீவிதம்.”

-நா. பார்வதி

தீவிர ரஜினி ரசிகையான நான் எப்போதும் போலவே அவருக்காகவே/அவரை திரையில் பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க சென்றேன். அவரும் எப்போதும் போலவே என்னைப் போன்ற ரசிகர்/ரசிகைகளை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாங்க யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் இந்த வயசுலையும் அவரு திரையில் வந்தா அங்க வேற யாரையும் நம்ம கண் பார்க்காது. படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை விசில் சத்தமும், கைத்தட்டல்களும், தலைவா என்ற கோஷமும் தான் திரையரங்கம் முழுவதும் ஒலித்தது. என்னைப்  பொறுத்தவரை எழுபத்து ரெண்டு வயதிலும் இப்படி ஒரு வரவேற்பு, இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகலன்னு நீலாம்பரி இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னால் சொன்னது இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டான இன்றும் இந்த படத்தில் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

சரி, இப்போ நம்ம இயக்குனர் திரு. நெல்சன் அவர்களின் ஜெயிலர் தியைப்படத்திற்கு வருவோம்.

இந்தப் படத்தில் ரஜினியின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் பலவற்றின் பிரதிபலிப்பு இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வரும் பாண்டியன், ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம், தம்பிக்கு எந்த ஊரு பாலு, அண்ணாமலை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தாத்தாவும் பேரனுமாக அடிக்கும் லூட்டி காண்போரை ரசிக்க வைக்கிறது. பேரனாக நடிக்கும் சிறுவன் ரித்விக் மிக அருமையாக நடித்திருக்கிறார். இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.

தனது மகன் இனி இல்லை என்று அறிந்த அந்த தருணம் தலைவர் நடிப்பு தனித்துவம். மேலும் அதனால் உறக்கமின்றி பழிவாங்க புறப்படும் அப்பா அபாரம். யோகிபாபுவுடனான  காம்பினேஷன் கலக்கல். இறுதியில் தப்பு யார் செஞ்சாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கும் காட்சியில் அவரின் நடிப்பில், தான் செய்தது சரி என்றும் அதே நேரம் பாசத்தின் வெளிபாடும் கலந்து வெளிப்பட்டதும் அரங்கத்தில் கரகோஷம் அடங்கவே சற்று நேரம் எடுத்தது. 

அனிருத் இசை அரங்கை அதிர வைக்கிறது.

இடைவேளை வரை விருவிருவென நகர்ந்த படம் அதன் பின் சற்று இழுபறியாக இருக்கிறது என்பது எனது கருத்து. படத்தில் தலைவரின் ஃபிளாஷ் பேக் மிக அழகாகவும் சுருக்கமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.  ஃபிளாஷ் பேக்கில் ரஜினியின் மேக் கப் பிரமாதம்.

கதை என்னவோ மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையின் கதை போல் தான் நகரும். ஆனால் அதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. அந்த ட்விஸ்ட்டை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிய வைத்திருக்கலாம் ஆனால் அதை மேலோட்டமாக காண்பித்து முடித்து விட்டுவிட்டது ஏதோ கதையில் பெரும் தவறு போல் தோன்றுகிறது. மொத்தத்தில் கதையில் ஆங்காங்கே சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.

அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்கணும்…
ஆனா தனித்தனியா இல்ல ஒரே கதையில் எல்லாரும் வரணும் அப்படீங்கறத்துக்காகவே கதை பின்னப்பட்டிருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது. மார்வெல் படங்களில் வருவது போல…

திரு. ஜாக்கி ஸ்ராப், திரு. ஷிவ ராஜ்குமார் மற்றும் திரு. மோகன்லால் ஆகியோர் சிறிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும் அவர்களுள் திரு. லால் தான் மனசில் நிற்கிறார்.

திரு. யோகிபாபு அவர்களின் நடிப்பு எதார்த்தம் மற்றும் எகத்தாளம்  நிறைந்ததாக இருக்கிறது. அவர் பாரதியார் சொன்னதாக சொல்வது காமெடியாக இருந்தாலும் அவரை எப்படி அப்படி சொல்ல விட்டார் இயக்குனர் என்று எண்ணி முடிக்கும் போது அதற்கு தக்க பதில் கொடுக்கிறார் தலைவர். அப்போது வாயை மூடும் யோகிபாபு அதன் பின் பாரதியை தொந்தரவு செய்யவில்லை.

வில்லனாக வரும் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் திரு. வினாயகன் நடிப்பு சிறப்பு. தரமான வில்லன் தர்மம் கேட்டு பத்து ரூபாய் வாங்கி நிமிர்ந்து பார்க்கும் பார்வையில் வெளிப்படுத்தும் வஞ்சம் அபாரம்.

ஒரே ஒரு பாடலுக்காகவும், மூன்று சீன்களுக்காகவும் மட்டுமே வரும் தமன்னா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை குறையேதுமின்றி சிறப்பாக செய்துள்ளார். இருந்தும் பாவம் படத்தோடு ஒட்டவில்லை.

இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா…
இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் தமன்னா வரும் அந்த பாடல் “காவாலயா” பெரும் ஹிட் ஆச்சு இல்லையா. அப்போ ஒரு தோழர் அந்த பாடலையும் அதில் திரு ரஜினி அவர்களின் டான்ஸையும் கேலி செய்து ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். ஆக்சுவலி ஏன் ரஜினி அப்படி ஒரு ஸ்டெப் போடுகிறார் என்றும் அந்த பாட்டில் ஏன் அவர் அப்படி ஒட்டாது இருக்கிறார் என்றும் படத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.

ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படின்னு படம் பார்த்தவர்கள் பதிவிடுங்கள். வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்ல.

ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் என்னைப் பொருத்தவரை அந்த கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.

திரு சரவணன் மிக அனாயாசமாக அவர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆனால் அவர் அந்த சிலை கடத்தல் கூட்டத்திற்கு கொடுக்கும் பில்ட் அப் கொஞ்சம் கதையிலும் இருந்திருக்கலாம். கதையை மேலோட்டமாக சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை… சரி என்ன செய்ய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டுமெனில் சற்று கதையை மேலோட்டமாக தான் காட்ட முடியும் போல!

விடிவி கணேஷ் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துள்ளார். ஆனால் அவர் வரும் இடத்தில் கதை தான் நம்பும் படி இல்லை. மேலும் ரஜினியின் குடும்பத்தினர் எந்த கேள்வியும் கேட்காது இருந்தது நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. நடந்தே பெங்களூர் சென்றுவிட்டதாக கூறுவதையும், வில்லன் வந்து கதவை தட்டி பத்து ரூபாய் பிட்சை கேட்டதையும்  எவ்வித கேள்வியும் எழுப்பாமல் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்! இப்படியுமா இருப்பார்கள்!

படம் என்ன சொல்ல வருகிறது
மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையை பற்றியா
சிலை கடத்தல் கும்பல் பற்றியா
ஆந்திரா கோவிலில் இருக்கும் அந்த கிரீடத்தின் வரலாறு பற்றியா
பக்கத்து மாநிலங்களின் ஹீரோக்கள் பற்றியா
இல்லை ஜெயிலர் ஆக இருந்தால் அனைத்து பெரும் ரவுடிகளுடன் எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்பது பற்றியா?

மொத்தத்தில் திரு நெல்சன் எழுதி இயக்கிய ஜெயிலரிடம்
லாஜிக் இருக்கு ஆனா இல்ல!
கட்டாயம் மேஜிக் இருக்கு
அந்த மெஜிஷியன் நம்ம தலைவர் தான்.
ஏன்னா மூன்று மணிநேரம் போனதே தெரியலையே!

இது போல் இனி வரும் படங்களில் முக்கிய குணசித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து அதில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுடன் இணைந்து திரு அமிதாப் போல் நடித்து வந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயம் இனி இயக்குனர்களுக்கு துளியும்  வேண்டாம். நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தாத்தாவாக காண்பித்தும் ஏற்றுக் கொண்டு விட்டோமே பின்பு எதற்கு ஐயம்.
தாத்தா ஆனாலும் சரி கொள்ளு தாத்தா ஆனாலும் சரி தலைவர் எப்பவுமே தலைவர் தான். அவருக்கு நாங்க எப்பவுமே ரசிகர்கள் தான்.

ஜெயிலர் ஜெயிப்பார்.

-நா. பார்வதி

கணவன் இறந்த பிறகு நிலங்களை விற்று, ஊறுகாய் வியாபாரம் செய்து எப்படியாவது தனது ஒரே மகனை வளர்த்து ஆளாக்க அரும்பாடு படுகிறார் கண்ணம்மா.

அவளின் கஷ்டங்களை சிறிதும் புரிந்துக் கொள்ளாத / புரிந்துக் கொள்ள விரும்பாத மகனாக தனது மகன் இருந்தாலும்,
தாய்மை அவளை பாசம் என்னும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது.
பெற்றவளை தன் வீட்டு வேலைக்காரி என்று பள்ளி நண்பர்களிடம் கூறிய மகனையும் மன்னிக்க வைக்கிறது.
தன்னையும் தன் ஊறுகாய் வியாபாரத்தையும் மகன் வெறுத்தாலும் அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்காத தாயாக கண்ணம்மா.

வேதனைகளை மனம் என்னும் கூண்டுக்குள் போட்டு பூட்டி வைத்துக்கொண்டு வெளியே அப்பத்தாவாக கிராமத்தில் அனைவருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.

மகன் நன்றாக படித்து சென்னையில் பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து தன் தாயிடம் கூட சொல்லாமல் தன்னுடன் பணிபுரியும் ஒரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எதிர்த்து ஏதும் பேசாது அதையும் ஏற்றுக் கொண்டு, பேரப்பிள்ளை பிறந்ததும் ஓடிச் சென்று குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியவள் அதன் பின் மகன் வீட்டிற்கு போகவில்லை. அவனும் தன் அம்மாவை வரச் சொல்லி அழைக்கவும் இல்லை.

ஊரில் யார் கேட்டாலும் மகன் ரொம்ப பிசி என்றும் தினமும் இரவில் ஃபோனில் தன்னுடன் பேசுவதாகவும் கூறி ஊர் வாயை அடைக்க அவள் பேசும்போது அவளின் மனம் அழுவதை நம்மால் உணரமுடிகிறது.

பின்ன ஊர்வசின்னா சும்மாவா. அவங்க நடிப்பு அப்படி.

இப்படியாக ஊருக்கு வேஷம் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் குமுறும் அப்பத்தாவை திடீரென சென்னைக்கு வரும்படி அழைக்கிறான் மகன்.

தனது ஊறுகாய் வியாபாரத்தை தனது தோழியிடம் விட்டுவிட்டு பத்து வருடங்கள் கழித்து
மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் காண போகும் ஆசையை, ஆவலை பலகாரங்களாகவும் ஊறுகாய்களாகவும் கட்டி சுமந்துக் கொண்டு செல்கிறாள் அப்பத்தா.

அங்கே சென்றதும் தான் அவளுக்கு தெரிய வருகிறது அவளை சென்னைக்கு மகன் அழைத்ததற்கான காரணம். அதிர்ந்து போகிறாள். ஆனாலும் அசரவில்லை.

மகனின் வீட்டிற்கும் அவன் வீட்டின் நாய்க்கும் காவலாளி ஆகிறாள் அப்பத்தா. அவளின் சிறு வயதில் அவளை நாய் கடித்ததால் நாய்கள் என்றாலே ஓட்டம் எடுக்கும் அப்பத்தா என்கிற கண்ணம்மா தன் மகன் வீட்டில் வளர்க்கப்படும் நாயுடன் தனியாக எப்படி இருக்கப் போகிறாள் என்பது தான் கதை.

அதை மிக சிறப்பாக கையாண்டு நகைச்சுவையோடு புதைந்து கிடந்த மனச் சுமையை கலந்து மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். எந்த நாயை கண்டு அப்பத்தா பயந்து ஓடினாளோ கடைசியில் அதுதான் அவளுடன் செல்கிறது.

சில அப்பார்ட்மெண்ட் நகைச்சுவை காட்சிகள் நமக்கு ஏற்கனவே ஒரு படத்தில் பரிட்சயமான காட்சிகள் தான்.
அதில் முதியவர் இதில் மூதாட்டி! பழைய வீட்டுக்கு அடிக்கப்பட்ட புதிய நிற சாயம் அவ்வளவே.

திரைப்படத்தில் நடித்த அனைவருமே கச்சிதமாக அவரவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து ரசிக்க வைத்துள்ளனர்.

கிராமத்து காட்சிகள் அனைத்தும் மலையாளப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் பிரியதர்ஷன். இயற்கை நம்மை கண்ணில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஓவியமாக காட்சியளிக்கிறது.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மகன் என்னத்தான் வெறுப்பு இருந்தாலும் பொதுவில் அப்படி நடந்துக் கொள்வாரா? ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது இந்த காட்சிக்கு கட்சிதமாக பொருந்தும். அது படிப்பு, பதவி, இடம், காலம் என எதுவும் பார்க்காது போல! என்று தான் நம்மை நினைக்க வைக்கிறது.

பாசம் வைத்தால் மோசம் போவோம் என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் தன்னலமற்ற உண்மையான பாசம்
என்றுமே மோசம் போகாது என்பதற்கு இந்த படம்
ஒரு சிறந்த உதாரணம்.

மகனுக்காக மெழுகு போல் உருகும்
அப்பத்தா அன்பின் அடையாளம்.

-நா. பார்வதி. பார்வதி



ஒரு கதை கதாநாயகனாக இருந்தால் அந்த திரைப்படம் மணிமகுடம் சூடும் என்பதை எடுத்துரைத்துள்ளார் “மகாராஜா”.

கதையை நகர்த்திய விதம், காட்சிகள் பின்னப்பட்ட விதம், அதை நூடுல்ஸ் போல் சிக்கல்கள் ஏதுமின்றி கோர்வையாக வழங்கிய விதம் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் “மகாராஜா”.

“மகாராஜாவிடம்” நான் கொடுக்க நினைக்கும் மனு ஒன்று தான். அது என்னவென்றால் கதை நன்றாக நகர்ந்தாலும் காரணம் அதே பழைய பல்லவியாக இருப்பது சற்று வருத்தத்தை தருகிறது என்பதாகும். காரணத்தையும் மாற்றியமைத்து இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

ஒருவருக்கு குப்பையாக/தேவையற்றதாக தோன்றும் ஒரு பொருள் அல்லது விஷயம் வேறொருவருக்கு மிகவும் முக்கியமான பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதையும் “மகாராஜா” உணர்த்தியுள்ளார்.

விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம். அவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
பீட்சாவில் தொடங்கிய பயணம் அவரை மகாராஜாவாக மகுடம் சூட்டிக் கொள்ள வைத்ததிருப்பது அவர் தேர்ந்தெடுத்த கதைகள் என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.

நடிகனை கொண்டாடுவதை விடுத்து
கதையை கொண்டாடினால் இன்னும் பல நல்ல திரைப்படங்களை திரையில் காணலாம்.

“மகாராஜா” மனம் என்னும் வனத்தின் அரிமா.
-நா‌. பார்வதி