ராக்கெட் பாய்ஸ்

ஏதேதோ படங்கள் வெப் சீரிஸ்களை பற்றி எல்லாம் பரபரப்பான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் உண்மையில், நல்ல படங்களும் வெப் சீரிஸ்களும் பற்றி ஏன் அதிகமாக சமூக வலைத்தளங்களில் எவ்வித பதிவுகளும் வலம் வருவதில்லை! என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு வேளை என் கண்ணில் அப்பேற்பட்ட கருத்துகளோ பதிவுகளோ தென்படவில்லையோ என்னவோ! என்ற பதிலும் தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு. என்னைப் போல் பதிவுகளை தவறவிட்டவர்களுக்காக (நல்ல வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை பற்றிய பதிவு போட தவறியவர்களுக்காகவும்)  இதோ  “ராக்கெட் பாய்ஸ்” வெப் சீரிஸ் பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sony liv- இல் 2022 (சீசன் 1) மற்றும் 2023 (சீசன் 2) ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ராக்கெட் பாய்ஸ்” என்னும் வெப் சீரிஸ் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படைப்பாகும். நமது இந்திய நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றிய படங்களை எல்லாம் விட… நம் நாட்டுக்கான முன்னேற்ற பாதையை வழிவகுத்து நம்மையும் நம் நாட்டையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நமது அறிவியலாளர்கள் /விஞ்ஞானிகள் பற்றிய முப்பது/ நாற்பது ஆண்டின் வரலாற்று சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக  விறுவிறுப்பு குறையாது இனிமையான (ரசிக்கும் வண்ணம்) பின்னணி இசையோடு கதைதயை நகர்த்தி நம்மை நம் இருக்கையோடு கட்டிப்போடுகின்றனர் நமது “ராக்கெட் பாய்ஸ்”.

இது விண்வெளி நாயகர்களின் வெறும் வரலாற்று கதை மட்டுமல்ல.  அறிவியல் தகவல்கள், அன்றைய அரசியல் தகவல்கள், எதிரி நாடுகளின் சூழ்ச்சிகள், அதற்கு பலியான நம்மவர்கள் என்று இந்த வெப் சீரிஸ் ஒரு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது.

அறிவால் ஒளிர்ந்த மகத்தான சிந்தனையாளர்களான மதிப்பிற்குரிய திரு. சி.வி. ராமன், திரு. ஹோமி ஜே. பாபா, திரு. விக்ரம் சாராபாய், திரு. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் நமது டாக்டர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் தங்கள் வாழ்நாளை முழுவதுமாக அறிவியல் என்ற தங்கள் ஒரே விருப்பத் துறையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணித்ததற்கான ஒரு பொருத்தமான மரியாதை அஞ்சலியாகவும் இந்த தொடர் அமைந்துள்ளது.

தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அது நட்பை ஒருபோதும் இழக்கச் செய்திடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், சிறந்த நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்த திரு. ஹாமி பாபா மற்றும் திரு. சாராபாய் நண்பர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றாகவே இருந்துள்ளது.

என்ன தான் இருவரும் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும்,  லண்டன் கேம்ப்ரிட்ஜில் படித்தவர்கள் என்றாலும் இருவரின் கனவும் மெய்ப்பட, அவர்கள் பல தடைகளை எதிர்கொண்டும், பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கவும் செய்துள்ளனர். அவரவர் பாதையில் பயணித்த போது எழுந்த தடைகளை இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து அவற்றை கடந்து வந்ததை நாம் இந்த படைப்பின் மூலம் அறிய வரும் போது நம்மையும் அறியாமல் அவர்கள் நட்புக்கு நம் மனம் மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.

பல தோல்விகளை சந்தித்தாலும் மனம் தளராமல் நமது நாட்டுக்காக மீண்டும் முயற்சித்த நமது அன்றைய அறிவியலாளர்கள்/அரசியல்வாதிகள்/ விஞ்ஞானிகளின் உடல் மற்றும் மனப்போராட்டங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிரவாகம்.

ஒரு நல்ல நாடு/நல்ல வீடு எதுவானாலும் நன்றாக வளர்ந்து வருமே என்றால் அதை வீழ்த்த எதிரிகள் வலம் வரத்தான் செய்வார்கள். அவ்வாறு அப்போது (இப்போதும்) வலம் வந்த நம் அண்டை நாட்டு எதிரிகளையும் அமெரிக்க நாட்டையும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும், அதில் எப்படி வெற்றிக் கண்டார்கள் என்பதையும் பார்வையாளர்களான நம்மை நகத்தை கடித்துக்கொண்டு நாற்காலியின் முன் வந்து அமர்ந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

எட்டப்பன் ஒருவனால் உயிரிழக்கிறார் திரு. ஹோமி. அவர் உயிரிழந்தாலும் அவர் விதைத்தது அறுவடை செய்யப்படுகிறது. இந்தியா பலம் பொருந்திய நாடாக இன்றும் வலம் வருகிறது.
அதற்கு காரணமான நம் அறிவியலாளர்களையும் விஞ்ஞானிகளையும் என்றென்றும் கருத்தில் கொள்வோம். அவர்களையும் போற்றி வணங்குவோம்.

கட்டபொம்மன் வம்சாவளியினர் இருந்து வருவதை போலவே எட்டப்பனின் வம்சாவளியினரும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

நம் நாட்டை பாதுகாப்பது ராணுவ வீரர்களின் கடமை மட்டுமல்ல அது இந்திய நாட்டின் பிரஜைகளான நமதும் ஆகும். கடமை உணர்ந்து செயல்படுவோம்.

நமது சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் சிந்திய வியர்வையும் உதிரமும் விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்பதை நாமும் நன்குணர்ந்து நமது சந்ததியினருக்கும் உணர்த்துவோம். நம் நாட்டை உயர்த்துவோம்.

முதல் அணுக்கரு உலை (nuclear reactor), முதல் ராக்கெட், முதல் தூர்தர்ஷன் நிகழ்ச்சி, முதல் ஆட்டம் பாம் என்ற நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து பின்னி அழகான மாலையாக நமது “ராக்கெட் பாய்ஸ்” க்கு சமர்ப்பித்துள்ள படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் அவரவர் கதாப்பத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

“ராக்கெட் பாய்ஸ்” – விண்வெளியை சென்றடைந்து விட்டாலும்,  வானிலும் நம் மனதிலும் இன்றும் ஒளிரும் விண்மீன்கள்.

நன்றி 🙏

நா. பார்வதி

Leave a comment