சுழல் – தி வோர்டெக்ஸ்

சீசன் 1&2

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 1 பார்வையாளர்களை சுழற்றியது போலவே தற்போது வெளிவந்துள்ள சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 பார்வையாளர்களை சுழற்றுவது நிச்சயம்.

முதல் சீசனான “சுழல்” பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் நமக்கு நெருக்கமானவர்களால் தான் நடைப்பெறும் என்றும், அதனால் உறவினர்கள் தானே என்று குழந்தைகளை அவர்களிடம் அலட்சியமாக விட்டுவிட வேண்டாம் என்றும், எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும் என்றும்,  அவ்வாறு இல்லாததால் நேரும் ஒரு பெண்ணின் இறப்பும் அதற்காக அவளைப் போலவே பாதித்த மற்றொரு பெண் வழங்கும் தண்டனையையும் ஒரு இன்வெஸ்டிகேஷன் சீரிஸாக மட்டுமின்றி அங்காளியின் மயானக் கொள்ளை பூஜை மற்றும் திருவிழாவையும் தெய்வ வழிபாட்டையும் இணைத்து மிக அழகாக கதையை சுவாரஸ்யம் குறையாது காட்சியாக்கப்பட்டிருந்த விதம் எட்டு எபிசோடுகளையும் பார்த்தாக வேண்டுமென்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் எழச்செய்தது.

அதை போலவே…சொல்லப் போனால் அதைவிட இன்னும் விறுவிறுப்பாக யார்! யார்! என்றும் யாராக இருக்கக்கூடும் என்றும் பார்வையாளர்களை சக்கரை என்கிற இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தியுடன் நம்மையும் தேட வைத்திருப்பது சிறப்பு. ஒரு கட்டத்தில் இவர் தான் என்று நாம் எண்ணிக் கொண்டு பார்த்தால் அவர் இல்லை என்று பதில் சொல்லும் அடுத்து வரும் எபிசோட். சரி கதை  எதைப் பற்றியது? நெறி தவறுதல் பற்றியதோ என்று நாம் நினைத்துப் பார்த்தோமேயானால் அடுத்த எபிசோடில் சைல்டு அப்யூஸ் பற்றியது என்று நம்மை சொல்ல வைக்கும். ஆனால் அதுக்கும் அடுத்த எபிசோட்  நம் எண்ணம் தவறு என்று கூறுவது போல் வேறொரு விஷயம் நம் கண்முன் காட்சியாக விரிந்து, அப்போ நாம நெனச்சது இல்லையா! என்று நம்மை நாமே கேட்க வைப்பதோடு என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் வைக்கிறது. இறுதியில் கதையின் புதிர்களுக்கான விடைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சுழல் ஒன்றில் போலீசாரிடம் சரணடைந்து ஜெயிலில் இருக்கும் நந்தினியின் வழக்கில் இருந்து ஆரம்பிக்கிறது சுழல் 2.  அவர் விடுவிக்கப் படுவாரா இல்லையா என்பது ஒரு பக்கம் விறுவிறுப்பை ஏற்றும் அதே நேரம் அவரின் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் இறந்து விடுகிறார். அவரின் இறப்பு தற்கொலையா இல்லை கொலையா என்று தொடர்கிறது இரண்டாம் பாகம். மேலும் அவரை கொன்றதாக கூறி எட்டு பெண்கள் போலீசாரிடம் சரணடைகின்றனர். அவர்கள் யார்? ஏன் கொலையா! தற்கொலையா! என்ற ஒரு முடிவுக்கு வராத நிலையில் எட்டு பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டும்? முதல் பாகத்தில் வரும் நந்தினி கதாப்பாத்திரத்திற்கும் இரண்டாம் பாகத்தில் வரும் இந்த எட்டு பெண்களுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? இதில் யார் தான் வில்லன்?
என்று நாம் கேட்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக பலரை நம் சந்தேக லிஸ்ட்டில் இடம்பெறச் செய்திருக்கும் கதாசிரியர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.

சமூக அக்கரை கொண்ட கதைக்களத்தில் இந்த சீசனிலும் அஷ்ட காளி திருவிழா என்ற தெய்வ வழிபாட்டை கதையோடு இணைத்திருக்கும் விதமும், அவ்வப்போது விழா மூலம் பார்வையாளர்களுக்கு கதைக்கான குறிப்பு அளித்திருக்கும் பாணியும் அருமை.

இந்த வெப் சீரிஸின் பின்னணி இசையையும், பாடல்களையும் மிகவும் கச்சிதமாக பொருந்தச் செய்திருக்கும் இசையமைப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். சில இடங்களில் இசை கதையாக ஒலிக்கிறது. டைட்டில் பாடலில் தொடங்கி பல இடங்களில் மிரட்டவும் செய்கிறது.

நடிகர்கள் தேர்வும் அவர்கள் அனைவரின் நடிப்பும் அபாரம். இரண்டாம் பாகத்தில் வரும் திரு லால் அவர்கள் மட்டும் எடுபடவில்லை என்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பல இடங்களில் அவரின் வசன உச்சரிப்பு சரியில்லாததால் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டி இருக்கும். அது மட்டும் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வேகத்தடை போடுவது போல அமைந்துவிட்டது. தமிழில் நடிகர்களுக்கா பஞ்சம்🤔 நடிகர் திரு. பசுபதி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சமூக அக்கறை கொண்ட படமாக இருந்தாலும் எவ்வித தேவையற்ற முழக்கங்கள்/பிரசங்கங்கள் இன்றி, நீண்ட வீராவேசமான வசனங்கள் இன்றி, அறிவுரைகள் ஏதும் இன்றி,  நடப்பவைகளையோ அல்லது நடந்தவைகளையோ  பின்னணியில் விவரிக்கும் (இடைஞ்சலான) குரல் ஏதுமின்றி கதையோடு கதையாகவே பார்வையாளர்கள் மனதில் கடத்தி இருப்பது, ஓ போட வைக்கிறது.

கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் நாயகன் அந்தஸ்து கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த வெப் சீரிஸ் உணர்த்தியுள்ளது.

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 –
சுவாரஸ்யமான கதையால் சுழன்று பார்வையாளர்கள் மனதை வென்று
தன்னுள் இழுத்து செல்லும் சுழல்
சூப்பர்.

Leave a comment