1000 Babies

2024 ஆம் ஆண்டு வெளி வந்த 1000 பேபிஸ் (ஆயிரம் குழந்தைகள்) என்ற மலையாள வெப் சீரிஸின் சீசன் ஒன்று பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். பிடித்திருந்தால் இந்த வெப் சீரிசை பார்க்கவும்.

முதல் மூன்று எபிசோட்களில் கதை எதை நோக்கி நகர்கிறது? அவற்றில் வரும் மனநிலை சரியில்லாத  மூதாட்டி சுவற்றில் என்ன எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? அந்த மூதாட்டியிடம் தான் கதை உள்ளது என்பது நமக்கு புரிந்தாலும்… அது என்ன கதை? அவருக்கு ஏன் குழந்தைகள் அழுகுரல் கேட்கிறது? அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா? இல்லை அவ்வாறு நடிக்கிறாரா? போன்ற பல கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழ வைத்துள்ள கதாசிரியர்  நான்காவது எபிசோட் முதல் அதற்கான விடைகளை அந்த மூதாட்டி  தன் மகனுக்கு கறி விருந்து அளித்து அவன் உண்பதை பார்த்து ரசித்து விட்டு விளக்குகிறார்.

அதை கேட்ட அவர் மகன் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு ஓடி அந்த மூதாட்டி அறைக்குள் சென்று சுவற்றில் அவள் வரிசையாக ஏதோ எழுதி வைத்திருந்ததில் வேக வேகமாக எதையோ தேடுகிறான். அப்போது டைனிங் அறையில் அமர்ந்திருந்த மூதாட்டி பலமாக சிரிக்கிறாள். அவளின் சிரிப்பொலி அவள் மகனை அவளிடம் அழைத்து வருகிறது. அங்கு வந்த மகன் அவளை ஓங்கி அடிக்கிறான். அவள் நாற்காலியில் அமர்ந்தபடியே தரையில் மல்லாந்து விழுகிறாள். அப்போதும் சிரிப்பதை அவள் நிறுத்தவில்லை. அவளின் தலைக்கு பின்னால் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது.

அவள் மருத்துவமனையில் மருத்துவர் முன் தலையில் கட்டுடன் படுத்திருக்கிறாள். கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் தனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரையும் ஜூடிசியரியையும் காண வேண்டும் என்று கூறுகிறாள். பின் அங்கிருந்த ஒரு நர்சிடம் அவளின் பக்கத்து வீட்டு காரர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவழைக்கிறாள்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மருத்துவமனை வந்து மூதாட்டியை சந்திக்கிறார். அப்போது அவள் ஒரு கவரை அவர் கையில் கொடுக்கிறாள். மற்றொன்றை ஜூடிசியரியின் ஆளிடம் கொடுக்கிறாள். அந்த கவரை முதலில் பிரித்து படிக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போகிறார். உடனே அந்த ஏரியா எஸ்.பியிடம் விவரங்களை தெரிவித்து அந்த லெட்டரை கொடுக்கிறார். அதிர்ச்சியான எஸ்.பி அந்த லெட்டர் ஜூடிசியரியிடம் போகாது தடுக்க வேண்டுமென்று வேகமாக நீதிபதி அலுவலகத்துக்கு இருவரும் செல்கிறார்கள். ஆனால் அதற்குள் அந்த லெட்டர் அந்த நீதிபதியின் கையில் சென்றடைகிறது. வேறு வழியின்றி சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரும் எஸ்.பியும் நீதிபதியிடம் கடிதத்தில் இருந்த விவரங்களை கூறுகின்றனர். நீதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்திலும் அதே விவரங்கள் இருக்க, இருபது வருடங்களுக்கு முன் நடந்த அந்த க்ரைமின் விவரங்களை இப்போது வெளியிட்டால் அது சமூகத்தில் பெரியளவில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அதை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்றும் யோசித்து மூவர் மட்டுமே அறிந்த அந்த உண்மையை அப்படியே மறைத்து விடுகின்றனர்.

அப்படி என்ன அந்த கடிதத்தில் அந்த மூதாட்டி எழுதியிருக்கிறார்? என்ற யோசனையில் அடுத்த எபிசோடை பார்த்தால் அதில் ஒரு நடிகையின் கொலை விசாரணை பற்றி நகர்கிறது கதை. இதற்கும் முதல் நான்கு எபிசோடுகளுக்குமான சம்மந்தம் என்ன? என்ற கேள்விக்கான விடை, அந்த நடிகையின் கொலையை விசாரணை செய்து அதில் வெற்றி காணும் ஆஜி குரியன் என்ற போலீஸ் அதிகாரி… நடிகையின் கணவனிடமிருந்து பெறும் வாக்குமூலத்தில் முளைக்கிறது.

அதிலிருந்து அன்று வரை அதாவது கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக மூவரால் மூடி மறைக்கப்பட்ட அந்த மூதாட்டி கடிதத்தின் விவரங்கள் நான்காவதாக ஆஜி குரியனுக்கும் தெரிய வருகிறது.

நடிகையின் கொலைக்கும் மூதாட்டியின் கடிதத்திற்கும் லிங்க் உள்ளதா? அப்படி அந்த கடிதத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தது. எப்படி ஒரு நடிகையின் கொலை விசாரணை ஆஜியை மூதாட்டி கடிதத்தின் விவரங்களுக்கு அழைத்து செல்கிறது! போன்று பல திருப்பங்களை கொண்டு மிகவும் கவனமாக பின்னப்பட்டிருக்கும் கதைக்களம் நம்மை இருந்த இடத்தில் இருந்து எழவிடாது நம்மையும் விசாரணையில் இணைந்திருக்க செய்த அரௌஸ் இர்ஃபான் மற்றும் நஜீம் கோயா ஆகிய இரு திரைக் கதையாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

இந்த வெப் சீரிசில் வரும் பல காட்சிகள் மறைமுகமாக பல விவரங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. அதை புரிந்து கொள்பவர்கள் குறை கூறமாட்டார்கள். புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எல்லாம் குறையே.

இதன் கிளைமாக்ஸ் கொஞ்சம் அவசர அவசரமாக எடுத்தது போல் இருந்தாலும் அது அடுத்த சீசனுக்கான லீட் என்று எடுத்துக் கொண்டால் அதுவும் சரியே என்று பார்வையாளர்களுக்கு புரியும்.

இதில் வரும் சில காட்சிகளுக்கான பதில் சீசன் இரண்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூதாட்டி சாராவாக நீனா குப்தா, அவரின் சிறுவயது சாராவாக ராதா கோமதி, அவரின் மகனாக சஞ்ஜு  சிவராம் மற்றும் ஆஜி குரியனாக ரகுமான் என்று களை கட்டியுள்ளது இந்த 1000 பேபிஸ்.

விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதை, சிறப்பான நடிப்பு, காட்சி அமைப்புகள், லொகேஷன்ஸ் என்று அனைத்துமே இந்த வெப் சீரிஸின் ப்ளஸ்.

நிஜத்தில் இது சாத்தியமா? இது போல் நடக்கக் கூடுமா? என்றெல்லாம் ஆராயாமல் கதையை கதையாக கண்டு மகிழ ஆயிரம் பேபிஸ் ஓர் சிறந்த படைப்பாகும்.

1000 Babies – புனரபி ஜனனம், புனரபி மாற்றம்.

Leave a comment