
ஆயிரம் கண்ணுடையாள் சமயபுரத்தாள். அத்தகைய அம்மன் கோவிலில் அராஜகம். அவள் கண்களுக்கு இவை தென்படவில்லையா? தர்ம தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என்று இரு வழிகள் எல்லா கோவில்களிலும் இருக்கும் முறை. தர்ம தரிசன வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தால் கட்டண தரிசனத்தை தேர்ந்தெடுப்பது வழக்கம். அவ்வாறு கட்டணம் செலுத்தி முறையாக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது…அம்பாள் நடைக்கு முன் ஒரு கதவு இருக்கும் (இது சமயபுரம் சென்று வருபவர்களுக்கு நன்றாக தெரியும்) அதற்கு சற்று முன்னே வலது புறம் வழியாக தடதடவென ஒரு ஐம்பது நபர்கள் திடீரென எங்கள் வரிசையில் இடித்து பிடித்துக் கொண்டு நுழைந்தனர். அவர்களை அழைத்து வந்து ஒழுங்காக சென்று கொண்டிருந்த வரிசையினூடே நுழைத்து விட்ட நபரிடம்,
“ஏன் இப்படி செய்யறீங்க நாங்க இத்தன மணி நேரமா நுழைவாசல்லேந்து வரிசையில நின்னுட்டு வரோம். இது என்ன புது வழி?”
என்று அனைவரும் கேள்வி எழுப்ப… அழைத்து வந்த ஆசாமி அப்ஸ்காண்ட் ஆனார். இடையில் வந்து நுழைந்த அந்த ஐம்பது நபர்களில் இரண்டு மூன்று பேர்
“நாங்களும் காசு கொடுத்து தான் வந்திருக்கோம்”
என்று குரல் உயர்த்தி கூற. அதற்கு எங்கள் பின்னால் இருந்தவர்
“அப்ப நாங்க என்ன சும்மாவா நின்னுட்டு வர்றோம். ஒரு கட்டண வரிசை தானே இருக்கு. இது என்ன சைடு கட்டண வரிசையா! கடவுள பாக்கறதுலேயும் குறுக்கு வழியா! அம்மா இதெல்லாம் நீயும் பாத்துட்டு தானே இருக்க”
என்று கூற… அந்த லோக நாயகி முன் பெரிய வாக்குவாதம் நடைப்பெற்றது. இறுதியில் வரிசைனூடே நுழைந்தவர்களை போகட்டும் என்று அனைவரும் விட்டுவிட அவர்களும் முன்னே சென்றனர். அம்பாள் கர்ப்பக் கிரக முன் வாசலின் வலது புறத்தில் இருந்து இன்னும் ஒரு பத்து நபர்களை அதே ஆசாமி எங்கள் வரிசையில் இணைத்து விட…முதலில் இணைந்த அந்த ஐம்பதில் பத்து பேர் அதை கடிந்து பேசி சப்தம் எழுப்ப. அதை பார்த்த எங்கள் வரிசையில் முதலில் கடிந்து பேசிய நபர் இப்போது சத்தமாக
“அம்மா தாயி நீ இருக்க மா. நீ இருக்க.”
என்று கூற…இன்னொரு இளைஞர் அவருடன் சேர்ந்துக் கொண்டு
“நம்மளுக்கு வந்தா தக்காளி சட்னி அவுங்களுக்கு வந்தா ரத்தம் போல!”
என்று கூறியதும் முதலில் எங்கள் வரிசையில் இணைந்த அந்த ஐம்பது நபர்களும் பேசாமல் அமைதியாக அவர்கள் முன் இணைந்து கொண்டவர்களுக்கு வழி விட்டனர்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றொரு பழமொழி அந்த இடத்தில் பொய்யானது.
அங்கு நடந்தவைகளை கண்ட நாங்கள் அங்கிருந்த குருக்களிடம் புகார் அளிக்க. அவர்களோ யாமறியோம் பராபரமே என்று கைவிரிக்க. காவலாளிகளே இச்செயலை செய்வதால் அவர்களிடம் கூறி பயனில்லை என்றெண்ணி நாங்கள் கோவில் அலுவலகம் சென்று புகார் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் அடுத்த முறை சென்ற போதும் எவ்வித மாற்றமின்றி அதே கூற்று நடந்தேறியது! இனி யாரிடம் புகார் கூறுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லவும்.
சமயபுரம் கோவில் அதிகாரிகளே! நிர்வாகிகளே! தயவுசெய்து இது போன்றோர்களை கண்டித்து இனியும் இது போல் நடக்காது பார்த்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமென்றால் தனவான்களுக்கென இன்னுமொரு கட்டண வரிசையை அமல் படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மக்களே! கடவுளை காண்பதில் எதற்கு அவசரம். நின்று நிதானமாக சென்று தரிசனம் பெற்று வந்தால் தான் என்ன? உங்களுக்கு காசு கொடுத்த கடவுளை காசு கொடுத்து பாருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் அதிலும் ஏன் ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்குறீர்கள்? அக்கோவிலில் பலர் அங்குமிங்குமாக ஐநூறு கொடுங்கள் ஆயிரம் கொடுங்கள் நாங்கள் உங்களை நேராக கற்ப்பகிரகத்துக்குள்ளேயே அழைத்து செல்கிறோம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கோவில் நிர்வாகம் மக்களுக்காக இரு வரிசைகளை தான் ஏற்படுத்தி வைத்துள்ளது. அதை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்ற முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுத்து அது படியே நடந்து வந்தால் இது போன்ற ஆசாமிகள் காணாமல் போய் விடுவர்.
அம்பாளை தரிசிக்க இடைத்தரகர்கள் எதற்கு? சிந்தியுங்கள் மக்களே!
-நா. பார்வதி