
ஒரு கதை கதாநாயகனாக இருந்தால் அந்த திரைப்படம் மணிமகுடம் சூடும் என்பதை எடுத்துரைத்துள்ளார் “மகாராஜா”.
கதையை நகர்த்திய விதம், காட்சிகள் பின்னப்பட்ட விதம், அதை நூடுல்ஸ் போல் சிக்கல்கள் ஏதுமின்றி கோர்வையாக வழங்கிய விதம் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் “மகாராஜா”.
“மகாராஜாவிடம்” நான் கொடுக்க நினைக்கும் மனு ஒன்று தான். அது என்னவென்றால் கதை நன்றாக நகர்ந்தாலும் காரணம் அதே பழைய பல்லவியாக இருப்பது சற்று வருத்தத்தை தருகிறது என்பதாகும். காரணத்தையும் மாற்றியமைத்து இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ஒருவருக்கு குப்பையாக/தேவையற்றதாக தோன்றும் ஒரு பொருள் அல்லது விஷயம் வேறொருவருக்கு மிகவும் முக்கியமான பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதையும் “மகாராஜா” உணர்த்தியுள்ளார்.
விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம். அவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
பீட்சாவில் தொடங்கிய பயணம் அவரை மகாராஜாவாக மகுடம் சூட்டிக் கொள்ள வைத்ததிருப்பது அவர் தேர்ந்தெடுத்த கதைகள் என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.
நடிகனை கொண்டாடுவதை விடுத்து
கதையை கொண்டாடினால் இன்னும் பல நல்ல திரைப்படங்களை திரையில் காணலாம்.
“மகாராஜா” மனம் என்னும் வனத்தின் அரிமா.
-நா. பார்வதி