
சிறு வயது நந்தினி அழகில் மனதை மயக்கும் மோகினி
குந்தவை – அக நக அக நக முக நகையே!!
ஐஸ் – இந்த தடவை நடிப்பில் கொஞ்சம் நைஸ்!!
மதுராந்தகன் – மந்தம். மனிதர் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம்.
செம்பியன் மாதேவி – இந்த காட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அனாயாசமாக நிற்கும் இறுதி காட்சி எடுபடவில்லை.
பூங்குழலி – அழகும் வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவள் ஆனால் படத்தில் ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தியது ஏனோ! அவள் சேந்தன் அமுதனிடம் ராணியாக வேண்டுமென்று சொல்வதை கல்கியின் கதையை படிக்காதவர்கள் மனதில் “ஓடக்கார பெண்ணிற்கு பேராசையை பாரு” என்ற எண்ணம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. அவளுக்கென்றொரு கதை இருக்கிறது அதற்கு திரையிடப்பட்டிருக்கிறது!
வந்தியதேவன் – வருத்தெடுத்தாலும் வந்து நிற்கும் வல்லவரையன்.
பார்த்திபேந்திர பல்லவன் – வந்தியதேவனும் ஆதித்த கரிகாலனுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று நன்கறிந்தும் திடிரென வல்லவரையன் மீது ஏன் பழிபோடுகிறார்! என்பதை கதை படித்தவர்கள் நன்கறிவார்கள். படம் பார்ப்பவர்கள் மனதில் கேள்வி எழ வாய்ப்புகள் அதிகம்.
ஆதித்த கரிகாலன் – விக்ரம் நடிப்பு அபாரம். ஆதித்த கரிகாலனாக அவரது கோபம், நக்கல், காதல், சங்கடம், தவிப்பு அனைத்தையுமே மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் இவரின் இறப்பு பெரிய சொதப்பல் அப்பு!
அருள்மொழிவர்மன் – வாம்மா மின்னல் என்ற நகைச்சுவை காட்சியை போல் அவர் வரும் காட்சிகள் வேகமாக வந்து மறைந்தது. மனதில் நிற்க வில்லை.
வானதி – அடிக்கடி மயங்கி விழும் கோழை பெண்ணான வானதியும் வீரம் மிகுந்தவள் ஆவாள் என்பதை திரைப்படம் காட்ட தவறியது ஏனோ! முதல் பாகத்தில் குந்தவையுடனே சுற்றிக் கொண்டிருந்த வானதி இரண்டாவது பாகத்தில் ஏன்? எப்படி? தனியாக இருக்கிறாள்?? என்ற கேள்வி திரைப்படம் பார்ப்போருக்கு எழலாம் ஆனால் கதை படித்தவருக்கு தான் விவரம் தெரியும்.
பழுவேட்டரையர்கள் – வந்ததே சில காட்சிகள் தான். அதிலும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? என்று பார்ப்போருக்கு குழப்பம் எழச் செய்கிறது திரைப்படம்.
கதையில் மாற்றம் ஏமாற்றம்!
காட்சிகள் பின்னப்பட்டதில் தடுமாற்றம்!
சில விவரங்கள் காட்சி ஆக்காததால் கதைப் படிக்காதவர்களுக்கு எழும் சந்தேகம்
அதனால் முடிவு குழப்பம்
கதை படிக்காதவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதில் இன்றி முடிந்த திரைப்படம்.
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அதை ஏந்தி நடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலேயே முழு கவனம் செலுத்தியதால் கடைசியில் பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, அநிருத்தர், நம்பி ஆகிய கதாபாத்திரங்கள் வலுவிழந்து போயின.
இதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று பாராது இயக்குனர் திரு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்று வேண்டுமானால் பார்க்கலாம்.
ஆனால் மனதில் பல கேள்விகள் எழலாம்.
மீண்டும் கதையை தேடி செல்ல வேண்டி வரலாம்.
அமரர் கல்கியா இயக்குனர் மணியா என்ற குழப்பம் எழலாம்!
-நா. பார்வதி