“அப்பத்தா”

கணவன் இறந்த பிறகு நிலங்களை விற்று, ஊறுகாய் வியாபாரம் செய்து எப்படியாவது தனது ஒரே மகனை வளர்த்து ஆளாக்க அரும்பாடு படுகிறார் கண்ணம்மா.

அவளின் கஷ்டங்களை சிறிதும் புரிந்துக் கொள்ளாத / புரிந்துக் கொள்ள விரும்பாத மகனாக தனது மகன் இருந்தாலும்,
தாய்மை அவளை பாசம் என்னும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது.
பெற்றவளை தன் வீட்டு வேலைக்காரி என்று பள்ளி நண்பர்களிடம் கூறிய மகனையும் மன்னிக்க வைக்கிறது.
தன்னையும் தன் ஊறுகாய் வியாபாரத்தையும் மகன் வெறுத்தாலும் அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்காத தாயாக கண்ணம்மா.

வேதனைகளை மனம் என்னும் கூண்டுக்குள் போட்டு பூட்டி வைத்துக்கொண்டு வெளியே அப்பத்தாவாக கிராமத்தில் அனைவருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.

மகன் நன்றாக படித்து சென்னையில் பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து தன் தாயிடம் கூட சொல்லாமல் தன்னுடன் பணிபுரியும் ஒரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எதிர்த்து ஏதும் பேசாது அதையும் ஏற்றுக் கொண்டு, பேரப்பிள்ளை பிறந்ததும் ஓடிச் சென்று குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியவள் அதன் பின் மகன் வீட்டிற்கு போகவில்லை. அவனும் தன் அம்மாவை வரச் சொல்லி அழைக்கவும் இல்லை.

ஊரில் யார் கேட்டாலும் மகன் ரொம்ப பிசி என்றும் தினமும் இரவில் ஃபோனில் தன்னுடன் பேசுவதாகவும் கூறி ஊர் வாயை அடைக்க அவள் பேசும்போது அவளின் மனம் அழுவதை நம்மால் உணரமுடிகிறது.

பின்ன ஊர்வசின்னா சும்மாவா. அவங்க நடிப்பு அப்படி.

இப்படியாக ஊருக்கு வேஷம் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் குமுறும் அப்பத்தாவை திடீரென சென்னைக்கு வரும்படி அழைக்கிறான் மகன்.

தனது ஊறுகாய் வியாபாரத்தை தனது தோழியிடம் விட்டுவிட்டு பத்து வருடங்கள் கழித்து
மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் காண போகும் ஆசையை, ஆவலை பலகாரங்களாகவும் ஊறுகாய்களாகவும் கட்டி சுமந்துக் கொண்டு செல்கிறாள் அப்பத்தா.

அங்கே சென்றதும் தான் அவளுக்கு தெரிய வருகிறது அவளை சென்னைக்கு மகன் அழைத்ததற்கான காரணம். அதிர்ந்து போகிறாள். ஆனாலும் அசரவில்லை.

மகனின் வீட்டிற்கும் அவன் வீட்டின் நாய்க்கும் காவலாளி ஆகிறாள் அப்பத்தா. அவளின் சிறு வயதில் அவளை நாய் கடித்ததால் நாய்கள் என்றாலே ஓட்டம் எடுக்கும் அப்பத்தா என்கிற கண்ணம்மா தன் மகன் வீட்டில் வளர்க்கப்படும் நாயுடன் தனியாக எப்படி இருக்கப் போகிறாள் என்பது தான் கதை.

அதை மிக சிறப்பாக கையாண்டு நகைச்சுவையோடு புதைந்து கிடந்த மனச் சுமையை கலந்து மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். எந்த நாயை கண்டு அப்பத்தா பயந்து ஓடினாளோ கடைசியில் அதுதான் அவளுடன் செல்கிறது.

சில அப்பார்ட்மெண்ட் நகைச்சுவை காட்சிகள் நமக்கு ஏற்கனவே ஒரு படத்தில் பரிட்சயமான காட்சிகள் தான்.
அதில் முதியவர் இதில் மூதாட்டி! பழைய வீட்டுக்கு அடிக்கப்பட்ட புதிய நிற சாயம் அவ்வளவே.

திரைப்படத்தில் நடித்த அனைவருமே கச்சிதமாக அவரவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து ரசிக்க வைத்துள்ளனர்.

கிராமத்து காட்சிகள் அனைத்தும் மலையாளப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் பிரியதர்ஷன். இயற்கை நம்மை கண்ணில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஓவியமாக காட்சியளிக்கிறது.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மகன் என்னத்தான் வெறுப்பு இருந்தாலும் பொதுவில் அப்படி நடந்துக் கொள்வாரா? ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது இந்த காட்சிக்கு கட்சிதமாக பொருந்தும். அது படிப்பு, பதவி, இடம், காலம் என எதுவும் பார்க்காது போல! என்று தான் நம்மை நினைக்க வைக்கிறது.

பாசம் வைத்தால் மோசம் போவோம் என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் தன்னலமற்ற உண்மையான பாசம்
என்றுமே மோசம் போகாது என்பதற்கு இந்த படம்
ஒரு சிறந்த உதாரணம்.

மகனுக்காக மெழுகு போல் உருகும்
அப்பத்தா அன்பின் அடையாளம்.

-நா. பார்வதி. பார்வதி

Leave a comment