ஒரு நாள் போதுமா!

நாம் இன்று நாமாக இருப்பதற்கும்

இரண்டு கால்களால் நடப்பதற்கும்

இரண்டு கைகளால் உழைப்பதற்கும்

இரண்டு கண்களால் இவ்வுலகைக் கண்டு ரசிப்பதற்கும்

இரண்டு செவிகளால் நல்லவைகளை கேட்டு அறிந்துக் கொள்வதற்கும்

வாய்கொண்டு நல்லவைகளை பேசுவதற்கும்

இந்த பூமியில் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும்

நம்மை ஈன்ற தாயும் தந்தையுமே காரணம்

நம்மை பத்து மாதங்கள் தன் கருவில் சுமப்பவர் தாய்

நம்மை வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் சுமப்பவர் தந்தை

தாய் தன் உதிரத்தைப் பாலாக தந்து பசியாற்றுவார்

தந்தை தன் உதிரத்தை உழைப்பாக தந்து பசியாற்றுவார்

தாயையும் சேயையும் இணைப்பது தொப்புள் கொடி

தந்தையையும் சேயையும் இணைப்பது பாச கொடி

வார்த்தை ஜாலங்கள் இல்லாவிட்டாலும்

கண்டிப்பு நிறைந்திருந்தாலும்

அனைத்திலும் பிரதிப்பலிப்பது அவரின் அன்பே

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

தந்தை உடையார் எதற்கும் அஞ்சார்

கணக்கில்லா அன்பை

அளிக்கொடுப்பவர் நம் தந்தை

அதில் இல்லை ஏதும் விந்தை

வாழ்க்கை என்னும் பந்தை

விளையாடக் கற்றுக் கொடுப்பவர் நம் தந்தை

தந்தையைக் கண்டு வளர்த்துக் கொள்வோம் நல்ல சிந்தை

விந்தை உலகில் கைக்கொடுப்பது நல்ல சிந்தை

நமக்களிப்பது நமக்கு கிடைப்பதற்கரிய
பொக்கிஷமான நம் தந்தை !

இறைவன் ஒரு முறை தாயாக வந்து உதவியதால் தாயுமானவரானார்

தினம் தினம் தாயாகவும் நம் தந்தை வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்

தாயுள்ளத்தோடு தாயுமானவராக நம் வாழ்வில் வலம் வரும் அனைத்து தந்தைகளையும்

தந்தை பாசத்தோடு தந்தையுமானவராக நம் வாழ்வில் வலம் வரும் அனைத்து தாய்மார்களையும்

கொண்டாடிட வருடத்தில் ஒரு நாளை தேர்ந்தெடுப்பதை விட

ஒவ்வொரு நாளும் கொண்டாடினோமேயானால்

நமது வாழ்வு ஆரோகணத்திலும் கவலைகள் துன்பங்கள் அனைத்தும் அவரோகணத்திலும் இசைந்து

வாழ்க்கையை இன்னிசையாக ஒலிக்கச் செய்திடும்.




























Leave a comment