கவின் முறைத்ததும் கஜேஸ்வரி
“இல்ல கவின் சும்மா தான் பேசினோம்”
என்று மழுப்ப நினைத்ததும் கவின் அவளிடம் “உஷ்” என்று கூறி அவளை மேலும் அது சம்மந்தமாக பேசாதிருக்கச் செய்தான்.
மறுநாள் கவினும் கஜேஸ்வரியும் குழந்தைகளும் ஊருக்குக் கிளம்பினர். அவர்களுக்கு சாப்பிடுவதற்கு சப்பாத்தி மற்றும் உருளை சப்ஜீ செய்து கொடுத்தனுப்பினாள் மிருதுளா. அவர்கள் சென்று ஒரு மாத காலம் கழித்து நவீனை சந்திக்க வந்தனர் அவன் சித்தப்பா மகன் ராம் குடும்பத்தினர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு விருந்து சமைத்துக் கொடுத்து உபசரித்தார்கள் நவீனும் மிருதுளாவும். அனைவரும் சாப்பிட்டப்பின் அமர்ந்து பேசலானார்கள். அப்போது ராம் நவீனிடம்
“நவீன் இது உனக்கு சம்மந்தமில்லாத விஷயம் தான் ஆனாலும் கேட்கறேன்”
“என்ன ராம் என்னன்னு சொல்லு”
“இல்ல இந்த கவின் என் வைஃப் மீராவோட அண்ணா மச்சினன் வீட்டைப் பார்த்தான். வாங்கறேன்னும் சொல்லியிருந்தான். அதுனால அவாளும் வேற யாருக்கும் குடுக்காம வச்சிருந்தா…அவன் வாங்கறானா இல்லையான்னு கேட்கலாம்ன்னு ஃபோன் பண்ணினா… அவன் குவைத் போயாச்சுன்னு சொல்லறா…அதுவுமில்லாம அவனால எங்க ஃபேமிலிக்குள்ள பெரிய குழப்பமாயிடுத்து”
“அவன் தான் இந்த தடவை வந்திருந்தப்போ வேற புது அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டானே. அதுக்கு அட்வான்ஸும் கொடுத்துட்டானே. அதை உன் கிட்ட அவன் சொல்லலையா?”
“இல்லையே!! அதுவுமில்லாம இவளோட அண்ணா மச்சினனோட ஃப்ரெண்டு தான் வீட்டை காட்டக் கூட்டிண்டு போயிருக்கார். அவர் கிட்ட அண்ணா மன்னின்னு யாரையோ அறிமுகப்படுத்திருக்கான். அது மட்டுமில்லாம டிஸிஷனை அண்ணா மன்னியே சொல்லுவான்னும் சொல்லிருக்கான். இவ அண்ணா மச்சினன் என்னடான்னா….நீங்க தான் அண்ணா மன்னி அவன் கூட வீட்டைப் பார்க்கப் போயிருக்கேங்களே அப்புறம் ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறேங்கள்ன்னு எங்கள்ட்ட கேட்கறான். நாங்க போகவேயில்லைன்னு சொன்னா…இல்லை அவன் அண்ணா மன்னியோட தான் வந்தான் அவாகிட்ட கேட்டுக்கோங்கோன்னு சொன்னான்னான்னு அடிச்சு சொல்லறான். ஒரே குழப்பமாயிடுத்து. ஏன்டா இவனுக்கு அந்த வீட்டைப் பத்தி சொன்னோம்னு ஆயிடுத்து. என் மச்சினன் கிட்ட நாங்க அந்த வீட்டைப் பார்க்க போகலைப்பான்னு சொல்லி அவனை நம்ப வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. இவனுக்கு வீடு இருக்குன்னு சொல்ல போய் என் ஃபேமிலி ல பெரிய குழப்பமாயிடுத்து நவீன்”
“இரு!! இரு!! அன்னைக்கு கவின் எங்களை விழுந்து விழுந்து அந்த வீட்டைப் பார்க்க அழைச்சுண்டு போனது இதுக்குத் தானா? அட பாவி!!! நான் கூட ஏதோ அண்ணா ஆச்சேன்னு வரச்சொல்லறான்னுப் பார்த்தா!!! அவனோட டிராமால எனக்கேத் தெரியாம என்னை ப்ளே பண்ண வச்சிருக்கான் பாரேன்”
“என்ன சொல்லுற நவீன் எனக்கு புரியலை”
“ராம்…உன் வைஃப் மீராவோட அண்ணன் மச்சினன் சொல்லும் அந்த அண்ணா மன்னி ….வீட்டைப் பார்க்க கவின் அழைச்சுண்டு போன அண்ணா மன்னி நாங்க தான்….ஆனா அவன் அந்த ப்ரோக்கர்ட்ட….அதாவது உன் அண்ணன் மச்சினனின் ஃப்ரெண்ட்….இவா தான் இங்க இருக்கற அண்ணா மன்னினும், எதுவா இருந்தாலும் இவா சொல்லுவான்னும் சொல்லிட்டுத் தான் கிளம்பினான்….அப்போ கூட நான் அவன்ட்ட கேட்டேன் ஏன் என்ட்ட கேட்கச் சொல்லறன்னு….அதுக்கு அதெல்லாம் அப்படி தான்….ஏதாவது சொல்லிட்டு கிளம்பணுமேன்னு சொன்னான்….அப்பவே எனக்கு டவுட்டா தான் இருந்தது…ஆனா இப்படி எங்களை நீங்கன்னு அவாகிட்ட யூஸ் பண்ணிப்பான்னு சத்தியமா நினைக்கலை….இப்போ நினைச்சாக் கூட ….எங்களை எப்படி முட்டாளாக்கிருக்கான்….ச்சே!!! இவா எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டா!!”
“ஓ!! கதை அப்படிப் போறதா!! அப்போ உங்களை கூட்டிண்டு போயி நீங்க தான் நாங்கன்னு சொல்லி வீட்டைப் பார்த்துட்டு கம்முன்னு போயிருக்கான் பாரேன்!!! இதுல நீ மட்டுமில்ல நவீன் … நம்ம ரெண்டு பேரையும் முட்டாளாக்கிருக்கான். என்ன ஒரு ப்ளானிங் அன்ட் எக்ஸிக்யூஷன் பாரேன். இந்த பித்தலாட்டமெல்லாம் தெரியாமயே போயிடும்ன்னு நினைச்சான் போல….இனி எந்த மூஞ்சியை வச்சுண்டு என்கிட்ட வருவான்? ச்சே!!! இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கக்கூட இல்லை தெரியுமா!!! எப்படிடா என் அண்ணன் மச்சினன் அண்ணா மன்னி வந்தா வீடப் பார்த்தான்னு அடிச்சு சொல்லறான்னு எவ்வளவு கன்ஃப்யூஸ் ஆனோம் தெரியுமா!! நம்ம ரெண்டு பேரையும் வச்சு என்னமா கேம் ஆடிருக்கான். எதுக்காக இப்படிப் பண்ணினான்? நேராவே வீடு வேண்டாம்னு சொல்லிருந்தா ஆச்சே!!”
“அவாளுக்கு என்னைக்குமே நேர் வழி எதுலேயுமே கிடையாது. அதுவுமில்லாம அந்த வீடு எண்பது லட்சம்….அதை வேண்டாம்னு சொன்னா…நீங்க அவாகிட்ட அவ்வளவு பணமில்லைன்னு நினைச்சுட்டா…அவா இமேஜ் என்ன ஆகும்!!! அதுதான் இந்த மாதிரி எல்லாம் என்னத்த சொல்ல? கவலையே படாதே அவா வேற மூஞ்சியை வச்சுட்டு உன்கிட்ட மறுபடியும் அவா எந்த தப்புமே பண்ணாத மாதிரி வருவா”
“சரி அப்போ இந்த பித்தலாட்டமெல்லாம் நாம பேசினதுமே வெளிச்சத்துக்கு வந்துடுத்தே இப்போ அவன் இமேஜ் ஸ்பாயில் ஆகாமையா இருக்கு”
“நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்க மாட்டேங்கற ராம். அவா இமேஜே பணம் தான் …இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. சரி… இப்படி பண்ணிட்டா…அது நமக்கு தெரியவும் வந்துடுத்து….இதை நீயோ நானோ வெளில ஒருத்தர் இல்ல ரெண்டு பேர்ட்ட சொல்லுவோமா? அவ்வளவு தானே…. எல்லார்கிட்டயும் சொல்லமாட்டோமே..ஆனா அவா இந்த நேரம் என்ன பண்ணிருப்பா தெரியுமா? எல்லார்ட்டையும் நாங்க ராம் சொந்தகாரா வீடு பார்த்தோம் அது அந்த விலைக்கு வொர்த்தில்லைன்னும் அதுனால தான் நாங்க வேண்டாம்னு சொல்லிட்டோம்ன்னும் ஊரே பரப்பியிருப்பா தெரியுமா!! ஏதோ அவாளுக்கு எண்பது லட்சத்துக்கு வீடு வாங்க வசதியிருக்குன்னும் ஆனா அந்த வீடு சரிவரலைன்னும் சொல்லியிருப்பான். வீடு வாங்க பட்ஜெட் எண்பது லட்சம்னு சொல்லிட்டு அதுல பாதி விலையிலுள்ள வீட்டை ஏன் வாங்குறன்னு நானே அவன்ட்ட கேட்டேனே. அதுக்கு சரியான பதில் சொல்லாம மழுப்பிட்டான்”
“அதுதானே எங்ககிட்டயும் அவன் பட்ஜெட் எண்பது லட்சம்னு தான் சொன்னான். அதுனால தான் நான் அந்த வீட்டையே காட்டச் சொன்னேன்…ஆனா…ஏன் அப்படி செய்தான்”
“நீங்க ரெண்டு பேரும் மண்டையை உடைச்சிக்குற அளவுக்கு அது ஒண்ணுமேயில்லை. நவீன் நாம சென்னையில வாங்கின வீடு எழுபது லட்சம் இல்லையா!”
“ஆமாம் அதுக்கும் இதுக்கும் என்ன?”
“அவா என்.ஆர்.ஐ வேற அப்போ அவா பட்ஜெட் எண்பது சொல்லிண்டா தானே நீங்க சொன்ன அவா இமேஜ் காக்கப்படும். அதே நாம எண்பதுக்கு வாங்கியிருந்தா அவா பட்ஜெட் தொண்ணூறு ஆர் ஒரு கோடின்னு சொல்லிருப்பா….நீங்க சொன்ன அதே லாஜிக் தான் நாம யாரையும் தேடிப் போய் எதையும் சொல்ல மாட்டோம் ஆனா அவா இதை ஊர் முழுக்க நாங்க தான் பணத்துல பெரியவான்னு தண்டோரா போட்டிருப்பா!!! இதுதான் பட்ஜெட் எண்பது லட்சத்தின் பின்னணி. புரியறதா? அவா எங்களை எதுக்குமே மதிச்சுக் கூப்பிட்டதில்லை…அப்படி இருக்கும் போது திடீர்னு வீடு பார்க்க ரொம்ப அக்கறையா அழைச்சப்போ எனக்கு சந்தேகமாவே இருந்தது. அப்போ நவீன்ட்ட இதுல ஏதோ இருக்குன்னு சொல்லி நாம போக வேண்டாம்னும் சொன்னேன். ஆனா கவின் நவீனை கம்பள் பண்ணினான் வேறு வழியில்லாம தான் நாங்க அவா கூட போனோம். இனியாவது நாம ஜாக்கிரதையா இருப்போம்.”
“அட ஆமாம் மிருது நீ சொல்லறதும் சரி தான். அன்னைக்கு நீ சொன்னதைக் கேட்டு அவா கூட போகாமலிருந்திருந்தா இப்போ இப்படி புலம்பிண்டு இருந்திருக்க வேண்டாம்.”
“அப்படி சொல்லாதீங்கோ. நாம போனதால தானே அவா இப்படி இம்பர்சோனேஷன் கூட பண்ணுவான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. ஸோ நாம ஏமாந்ததைப் பத்தியே நினைச்சுண்டிருக்காம அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடமா இதை எடுத்துப்போமே!!”
“எஸ் யூ ஆர் கரெக்ட் மிருதுளா. அவா என்ன வேணுனாலும் செய்யக் கூடியவான்னு தெரிஞ்சுக்க தான் இந்த இன்சிடெண்ட் நடந்திருக்குப் போல.”
“ஆமாம். மீரா ப்ளீஸ் நீ உன் அண்ணாகிட்ட விவரமா சொல்லி எங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்லிடுமா.”
“ஐய்யோ மிருதுளா நீங்க ரெண்டு பேரும் பிக்சர்ல இருக்கேங்கள்னு இப்போ தானே எங்களுக்கே தெரிய வந்தது. யூ டோண்ட் வரி. நான் என் அண்ணாகிட்ட எக்ஸ்ப்ளேயின் பண்ணிக்கறேன். ராம் நாம இன்னைக்கு இங்க வந்தது நல்லாதா போச்சு”
“எங்களுக்கும் தான். இல்லாட்டி நாங்க எங்களுக்கு தெரியாமையே இந்த ஆள் மாறாட்ட மோசடியில் ஒரு அங்கமாகிருப்போம். நீங்க வந்து சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் ராம் அன்ட் மீரா”
“அப்பப்பா நடந்ததை எல்லாம் நினைச்சா தலை சுத்தறது. ஆனா எவ்வளவு சிம்புளா மனசுல எந்த வித உறுத்தலும் இல்லாம செஞ்சுட்டு போயிட்டா”
“இதெல்லாம் விட பல மடங்கு செஞ்சிருக்கா ராம். அதுனால தான் நாங்க ஒதுங்கியே இருக்கோம். ஆனா அதையும் அவாளுக்கு சாதகமா பயன்படுத்திண்டு ஏதோ நாங்க எதுவுமே செய்யாம தள்ளியிருக்கோம்னு பரப்பிண்டிருக்கா. என்னமோ பண்ணிக்கோங்கோன்னு விட்டுட்டேன். இவாளுக்கெல்லாம் பதிலுக்கு பதில் குடுக்கலாம் ஆனா பிரயோஜனம் இல்லை அது தான் பேசாம இருக்கேன். இப்போ இந்த விஷயத்தையே நாங்க கேட்கறோம்னு வச்சுக்கோயேன் எங்கிட்ட உங்க மேல பழிப் போட்டு பேசுவா….அதே மாதிரி நீங்க கேட்டேங்கள்னா உங்ககிட்ட எங்க மேல பழியைப் போட்டுப் பேசி அதையும் சமாளிச்சுடுவா. சமாளிக்கறதோட நிறுத்த மாட்டா டெல்லி, பாம்பே, சென்னை, கல்கத்தானு நம்ம சொந்தக்காரா எல்லார்ட்டயும் விதவிதமா கதைக்கட்டி பரப்பிடுவா. நாமே மறந்த விஷயத்தை நமக்கும் நடந்த சம்பவத்துக்கும் சம்மந்தமே இல்லாத நபர் திடீர்னு ஒரு நாள் ஏதாவது விசேஷத்துல பார்க்கும் போது நம்மகிட்ட அதைப் பத்தி நமக்கே தெரியாத ஒரு வெர்ஷன் சொல்லுவா அது தான் அவாளோட டேலண்ட்.”
“அவாளை எல்லாம் பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது. ஒதுங்கிப் போறது தான் உத்தமம்”
“நீங்க ரெண்டு பேரும் என்னப் பாடுப்பட்டேங்கள்ன்னு எங்ககிட்ட சொல்லலை ஆனா உங்க ரெண்டு பேர் பேச்சிலிருந்தே நீங்க என்னப் பட்டிருப்பேங்கள்ன்னு புரிஞ்சுக்க முடியறது. இந்த ஒரு இன்சிடெண்ட் போதுமே அதை நாங்க புரிஞ்சுக்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு ஆள் மாறாட்ட மோசடிப் போறாதா அவா உங்களை என்னென்னப் பண்ணிருக்கக்கூடும்ன்னு நாங்க யூகிக்க!!! இனி நாங்க ஏமாற மாட்டோம்ப்பா…. அவாகிட்டயிருந்து விலகியே இருப்போம்.”
“சரி ராம் ரொம்ப லேட்டாயாச்சு. கிளம்பலாமா”
“எஸ் மீரா கிளம்பலாம். சரி நவீன் நாங்க கிளம்பறோம். தாங்க்ஸ் ஃபார் தி நைஸ் டின்னர் மிருதுளா. நீங்களும் எங்காத்துக்கு வாங்கோ.”
“ஷுவர் ராம் நாங்க வர்றோம். தாங்க்ஸ் ஃபார் கம்மிங்.”
“அச்சோ நீ வேற நவீன். இன்னைக்கு இங்க வந்ததால் என் குடும்பத்தில் ஒரு குழப்பம் தீர்ந்தது. சரி குட்நைட் நவீன் மிருதுளா. குட்நைட் சக்தி”
“பை டா பத்திரமா வண்டியை ஓட்டு”
“பை சித்தப்பா, சித்தி, பை மஞ்சு”
“பை சக்தி”
என்று ராம், மீரா அவர்கள் மகள் மஞ்சு சென்ற பின் மிருதுளா டைனிங் டேபிளை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். மீதமான சாப்பாட்டை கண்ணாடி டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டே நவீனிடம்
“பார்த்தேங்களா நவீ!!! எவ்வளவு பெரிய வேலைப் பண்ணிருக்கா இந்த கவினும் கஜேஸ்வரியும்!!! நம்ம ஆத்துல இருந்துண்டே நம்மளையே நம்மக்கு தெரியாமலேயே ஆள் மாறாட்டம் பண்ண வச்சிருக்கான்னா….சும்மா சொல்லக் கூடாதுப்பா தே போத் ஆர் வெரி டேலண்டெட் தான்”
“இதெல்லாம் டேலண்ட் இல்ல மிருது. இது பேரு பக்கா ஃப்ராடுத்தனம். நீ சொன்ன அந்த எண்பது லட்சத்துப் பின்னணி ரியலி குட். நான் கூட அதை நினைச்சுப் பார்க்கலை. அது உண்மை தான்.”
“இத்தனை வருஷமா நம்ம ஆட்களைப் பார்க்கறேன் பழகறேன் இல்லையா நவீ. இதுகூடவா புரிஞ்சுக்க முடியாது. இட்ஸ் வெரி சிம்பிள் நவீ. நாம அவா வீடு வாங்கினதும் வீடு வாங்கணும்னு உங்களுக்கும் சரி எனக்கும் சரி எப்ப தோணித்து? அந்த கஜேஸ்வரியும் அவ அம்மாவுமாவும் பேசின பேச்சைக் கேட்டுத்தானே நமக்குன்னு ஒரு வீடு வேணும்னு தேணித்து. அப்பவும் அவாகிட்ட நாம ஏன் அப்படி பேசினேங்கள்ன்னு மல்லுக்கு நிக்காம அவா சொன்னதிலிருந்த நல்லதை எடுத்துண்டு வீடு வாங்கினோம். நாம வாங்கினதும் உடனே அதே வருஷம் கவினும் ஈரோட்டில் மறுபடியும் ஒரு வீடு வாங்கினான். அடுத்து நாம அந்த வீட்டை வித்துட்டு சென்னையில் நமக்கு பிடித்த மாதிரி இருந்த ஒரு வீடு வாங்கினோம் டாக்ஸ் விழாமலிருக்க ரைட்டா….அதுக்கு அவா என்ன பண்ணினா உடனே அவசர அவசரமா இங்கே மைசூர்ல வந்து ஒரு வீட்டை வாங்கிருக்கா…இல்லையா.”
“ஹேய்!!! மிருது யூ ஆர் ரைட். அதே தான்”
“இருங்கோ நான் இன்னும் சொல்லி முடிக்கலை. இது நம்மளோட அனாலிசிஸ் நாம மட்டுமே பேசிப்போம் ஆனா அவா இந்த நேரம் ஊர் முழுக்க என்ன தண்டோரா போட்டிருப்பா தெரியுமா?”
“என்ன? தண்டோரா போட ஒண்ணுமில்லையே”
“ஏன் இல்லை. நம்மளோட அனாலிசிஸை அப்படியே உல்டா ஆக்கி. நாம தான் பொறாமை பிடித்து போட்டிக்கு வாங்கறதா ஊர் முழுக்க பரப்பியிருப்பா. இது தான் உங்க ஃபேமிலியோட ட்ரெண்டே. அவா செய்யுற தப்பு, அனியாயங்கள், அவாளுக்குள் இருக்கும் போட்டி பொறாமைன்னு எல்லாத்தையும் யாருக்கு செய்தாளோ / யார் மேலே வஞ்சமிருக்கோ அவா மேலேயே திருப்பி, ஊர் முழுக்கப் பரப்பி அதைப் பத்துப் பேரை சொல்ல வச்சு நியாயப்படுத்திடுவா தெரியுமா? இது நான் கல்யாணம் பண்ணிண்டு வந்த நாள்ளேந்து நடக்கற விஷயம் தான்.”
“நீ சொல்லறது சரிதான். ஒரு பொய்யைப் பத்துத் தடவைச் சொன்னா உண்மையாகிடும்ங்கறா மாதிரி இவா பத்துப் பேர்ட்ட பரப்பி அதை உண்மையாக்கப் பார்க்கறா. ஆமாம் இதை ஏன் நீ என்கிட்ட முன்னாடியே சொல்லலை?”
“என்னத்துக்கு அதைச் சொல்லி நமக்குள் பிரச்சினைன்னு தான் சொல்லலை. அப்படியே சொன்னாலும் நாம ரெண்டு பேரும் யார்கிட்டேயும் கேட்டுண்டோ இல்ல அவா செய்தது இது தான் அது இல்லன்னு சொல்லிண்டோ போப்போறதில்லை எக்ஸெப்ட் ஒன் ஆர் டூ பீப்புள் இல்லையா!!! ஆனா அவா செஞ்சது, செய்யறது, பேசினது, பேசறதுன்னு எல்லாத்தையும் அந்த ஆண்டவன் பார்த்துண்டு தான் இருக்கார். அந்த ஆயிரம் கண்ணுடையாள் கிட்டேயிருந்து தப்ப முடியுமா. நாம ஒண்ணுமே செய்ய வேண்டாம் அவ பார்த்துப்பா. நாம தள்ளி நின்னு பொறுமைக் காத்தாலே போதுமானது.”
“அதுவும் சரி தான். நாம நம்ம வேலையைப் பார்ப்போம். ஆனா ஒண்ணு அடுத்த வருஷம் லீவுக்கு இங்கே வருவான். அப்படி வந்து நம்மளை அவன் வீட்டைப் பார்க்கக் கூப்பிட்டா நாம போகக்கூடாது…போகவேக்கூடாது….சரியா”
“ம்…சரி நவீ.”
போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல
அது வியாபாரம்.
பொறாமை… பொருள் இழப்பை மட்டுமின்றி தன்னையும் இழக்கச் செய்திடும்.
போட்டி பொறாமை இரண்டுமிருந்தால் தீய வழியை தேர்ந்தெடுக்க வைக்கும்.
அந்த தீய வழியில் பயணிக்கும் போது வரும் இடையூறுகளை அகற்ற எதையும் செய்ய வைக்கும்.
புத்தியிலுள்ள நல்லவைகளை மழுங்கச் செய்திடும்
இறுதியில் அசிங்கத்தையும் அவமானத்தையும் பரிசளித்திடும்
போட்டிப் பொறாமை போன்ற தீய குணங்கள் என்றுமே நல்ல முடிவைக் எக்காலத்திலும் கொடுத்ததில்லை, கொடுப்பதுமில்லை, கொடுக்கப்போவதுமில்லை.
பட்டாலும் சிலர் அதை விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிப்பர். மீண்டும் மீண்டும் தோல்வியையேத் தழுவுவார்கள்.
எத்துனை முறை முயற்சித்தாலும் நல்லவர்களுக்கு அவர்களின் நல்ல எண்ணங்களும், செயல்களும், அந்த கடவுளும் துணையிருப்பார் என்பதை பொறாமை நிறைந்த மனதால் ஏற்க முடியாது. அதுவே அவர்கள் அடுத்தடுத்து எடுக்கும் தீய முயற்சிகளுக்கு காரணமும் ஆகிறது.
தொடரும்……