இரவு முழுவதும் வலியால் சரியாக தூங்காமல், அதிகாலை மூன்று மணிமுதலே நன்றாக உறங்க ஆரம்பித்தாள் மிருதுளா. மறுநாள் விடிந்ததும் காலை ஆறு மணிக்கு அவர்கள் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டது. நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மிருதுளா சத்தம் கேட்டதும் எழுந்துவிட்டாள். மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து கதவைத் திறந்துப் பார்த்தாள். பக்கத்து வீட்டு ஆறு வயது குட்டிப் பையன் நின்றிருந்தான். அவனிடம்
“ஹேய் குட்டி பையா நீயா கதவ தட்டினது? கொஞ்ச நாளா ஆள காணமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்”
“ஆமாம் அக்கா நான் தான் தட்டினேன். நானே எந்திரிச்சிட்டேன் ஆனா நீங்க இன்னுமா தூங்கிக்கிட்டு இருக்கீங்க?”
“ஆமாம் குட்டி நான் தூங்கிக்கிட்டிருந்தேன். அக்காவுக்கு உடம்பு சரியில்லையா அதுனால தூங்கிட்டேன். உனக்கு உடம்பு சரியில்லைன்னா நீ என்ன பண்ணுவ?”
“அம்மா மருந்து தந்து தூங்க வைப்பாங்க அக்கா”
“அதே தான் நானும் செய்திட்டிருந்தேன். சரி நீ எப்படி காலை ல வந்திருக்க? எங்க ரூம் கதவ தட்டவா வந்த?”
“இல்லை அக்கா பர்வதம் மாமி தான் என்னைக் கூப்பிட்டு நீ கூட சீக்கிரம் எந்திரிச்சிட்டே ஆனா மிருதுளா அக்கா இன்னும் தூங்கிட்டு இருக்கா நீ போய் அவங்களை கதவத் தட்டி எழுப்பி விட்டிட்டுவான்னு சொன்னாங்க. சரி அக்கா நான் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பணும் பை”
“சரி டா குட்டி நீ போய் ஸ்கூலுக்குக் கிளம்பற வேலைப் பாரு. ஹாவ் அ நைஸ் டே குட்டிப் பையா”
என்று அந்த சிறுவனை அனுப்பிவிட்டு திரும்பினாள் நவீன் உட்கார்ந்துக் கொண்டிருந்தான். அவனிடம்
“யுவர் அம்மா ஸ்டார்டட் சென்டிங் தட் ஸ்மால் பாய் அகேயின். சரி அடுத்ததா யாரையாவது அனுப்பறதுக்குள்ள நான் கீழே போறேன் நீங்க வாங்கோ”
“மெதுவா படில இறங்கிப் போ மிருது. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்”
“சரி சரி குட் மார்னிங்”
என்று கூறிவிட்டு மெதுவாக படியில் இறங்கிச் சென்று ஃப்ரெஷாகி அடுப்படிக்குள் காபி போட சென்றாள். ஹாலில் பர்வதம் அமர்ந்திருந்தாள். மிருதுளா இரண்டு காபி போட்டுக்கொண்டு ஹாலுக்கு வருவதற்குள் நவீன் ஃப்ரெஷாகி வந்தான். இருவரும் காபி அருந்திக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரன்…
“நவீன் காபி குடிச்சிட்டு டிபன் சாப்ட்டுட்டு ரெண்டு பேருமா ஈரோடுல இருக்குற லட்சுமி ஆத்துக்கு போயிட்டு வாங்கோ”
“ஆனா அத்தை நேத்து தானே இங்க வந்துட்டு போயிருக்கா!! உடனே நாங்க எதுக்கு அங்க போகணும்? அதுவுமில்லாம அவா எல்லாரையும் அறுபதாம் கல்யாண விஷேசத்துல பார்த்தாச்சு அப்புறம் ஏன் இப்போ நாங்க போகணும்? எனக்குப் புரியலை. அதுவும் இல்லாம நான் இன்னும் மூணு நாள்ல ஊருக்கு கிளம்பணும். ஆக்சுவலா இந்த வாரம் நாங்க மிருது ஆத்துல இருக்கறதா சொல்லியிருந்தோம் ஆனா இப்போ அதுல ரெண்டு நாள் போயாச்சு இப்போ ஈரோடு போயிட்டு வான்னா எப்படி?”
“உங்க கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் உங்களுக்கு நம்ம ஆத்து சைட்டுல அவ மட்டும் தான் இன்னும் விருந்து வைக்கலையாம். அதுக்குத் தான் வரச்சொல்லிருக்கா. நானும் வருவான்னு சொல்லிட்டேன். அதுனால போயிட்டு நாளைக்கு காலை ல திரும்பி வாங்கோ சரியா. வந்துட்டு இரண்டு நாள் மிருதுளா ஆத்துல போய் இருந்துட்டு வந்து ஊருக்கு கிளம்பிக்கோ”
“இல்ல இப்ப தான் ஒரு வேன் டிரிப் போன டென்ஷன் குறைஞ்சுண்டிருக்கு, அதுக்குள்ள மறுபடியும் மிருதுளாவ கூட்டிண்டு பஸ்ல டிராவல் பண்ணணுமான்னு யோசிக்கறேன்!”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வள வளன்னு பேசாம சட்டு புட்டுன்னு கிளம்பி போயிட்டு வாங்கோ”
“ஆனா அத்தை எங்ககிட்ட அவா ஆத்துக்கு வாங்கோ னோ இல்ல விருந்துப் பத்தியோ ஒண்ணுமே சொல்லலையே”
“என் கிட்ட சொன்னா நானும் அனுப்பி வைக்கறேன்னு சொல்லியாச்சு. இதுக்கு மேல பேச்சை வளர்க்காமல் இருந்தால் நல்லது. ஒரு நாள் தானே போயிட்டு வாங்கோ. சொந்தங்கள் வேணும் புரிஞ்சுதா?”
“சரி சரி” என்று நவீன் மிருதுளாவிடம் ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் சொன்னது அவளுக்கு மிகவும் வேதனை அளித்தது. அன்று அவள் வீட்டிற்கு செல்ல ஆசையாக இருந்தாள் ஆனால் அதில் மண்ணை வாரிப் போட்டார்கள் மூத்த தம்பதியினர். என்னாட செய்வது என்ற யோசனையிலிருந்த மிருதுளாவிடம் பர்வதம்
“என்ன மசமசன்னு உட்கார்ந்துண்டே இருக்க அப்பா சொன்னது காதுல விழலையா? போ போ கிளம்பு. உன்கிட்ட தான் சொல்லறேன். என்ன உட்கார்ந்தே தூங்க ஆரம்பிச்சுட்டயா. சுத்தம்”
“ஹாங்! ஹாங்! இல்லை எனக்கு திருக்கடையூர் போயிட்டு வந்ததிலேயே இடுப்பும் வயிறும் நேத்து பயங்கரமா வலிச்சுது. இப்போ ஈரோடு போகணும்னா ..!!!”
“என்ன இழுக்கற? அதெல்லாம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக எங்கயுமே போகாம வராமயா இருப்பா? ம்..ம்..கிளம்பு கிளம்பு”
என்று கூறிவிட்டு டிபன் செய்ய அடுப்படிக்குள் சென்றாள் பர்வதம். அவ்வளவு பொய்யும், புரட்டும் சொல்லிவிட்டும் மூத்த தம்பதிகளின் அதிகாரத்தை பார்த்தால் தவறு நவீனிடம் தான் உள்ளது என்பதுபோலதான் நமக்கு தோன்றும். பொறுப்பில்லாத பெற்றவர்களிடம் நவீன் தட்டிக் கேட்க ஏன் தயங்க வேண்டும்? தன் மனைவி இரவு முழுவதும் உறங்க முடியாமல் அவஸ்த்தைப் பட்டாள் என்பதை அறிந்தும் எவ்வாறு ஈரோடு செல்ல சம்மதித்தான்? மூத்தது கோழை இளையது காளை என்ற பழமொழிக்கு ஏற்ப நவீனின் நடத்தை கோழைத் தனமாகத் தான் தெரிகிறது. பெரியவர்களுக்கு மரியாதை குடுக்க வேண்டியது மிக முக்கியமான பண்பானாலும் அது சம்பந்தப் பட்ட பெரியவர்களின் நடவடிக்கைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெரியவர்கள் என்றால் என்ன வேண்டுமாலும் சொல்லலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்துக் கொள்ளலாம் எவரும் தட்டிக் கேட்கக் கூடாதென்பதெல்லாம் பொறுப்பற்ற பெரியவர்களின் குணாதிசியங்கள் ஆகும். அதே பொறுப்பான பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் மனமறிந்தே நடப்பார்கள். நவீன் பேச்சுக்கே அங்கே மரியாதை இல்லாத போது நம்ம மிருதுளா சொன்னால் எடுபடவா போகிறது? அது தான் அவ்வளவு அதிகாரம் செலுத்துகிறாள் பர்வதம். வேறு வழியின்றி புறப்பட்டனர் நவீனும் மிருதுளாவும்.
மிருதுளா நவீனிடம் ஒன்றுமே பேசவில்லை. இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள். நவீன் மிருதுளாவிடம் தண்ணீர் வேண்டுமா என்றான் அதற்கும் அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை என்றதுமே அவனுக்கு புரிந்துவிட்டது அவள் எதற்காக அப்படி நடந்துக் கொள்கிறாள் என்பது. சற்று நேரம் நவீனும் அமைதிக் காத்தான் பின்
“மிருது அம் சாரி. உன்னை இப்படி மறுபடியும் பஸ்ல டிராவல் பண்ண வைக்கறது தப்புதான். ஆனா என்ன செய்ய சொல்லு. இப்படி போனாலாவது உனக்கு ஒருநாள் ரிலீஃப்ன்னு நினைத்து தான் கிளம்பினேன்”
மிருதுளாவிற்கு கோபம் தலைக்கேறியது ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் தன்னைத் தானே அமைதிப் படுத்திக் கொண்டு
“என்ன சொல்லறேங்கள் நவீன்? நமக்கு நம்ம வீட்டில் கிடைக்காத ரிலிஃப் வேறு எங்குச் சென்றாலும் கிடைக்காது. நீங்க உங்க அப்பாகிட்ட ஏன் எனக்காக /நமக்காக பேசவே மாட்டேங்கறேங்கள்? இன்னைக்கு எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாப் போச்சு தெரியுமா”
“எனக்குப் புரியறது மிருது ஆனா அவா நான் சொன்னா எதை கேட்டிருக்கா? அவா பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு தான் சொல்லிண்டே இருப்பா. தேர் இஸ் நோ யூஸ் இன் கெட்டிங் இன்டூ அன் ஆர்க்யூமென்ட் வித் தெம். அவா அப்படி தான். இதுல என்ன வேடிக்கை தெரியுமா?”
“இதுல என்ன வேடிக்கையாம்?”
“எங்க அப்பா ஏதோ சொந்தங்கள் வேணும்ன்னு சொல்லறாரே இதே சொந்தம் தான் அதாவது இதே அத்தை தான் அவர் குடிகாரரா இருக்கும் போது அவா ஆத்துக்கு போனா… என் புருஷன் கௌரவமான வாத்தியார் எங்க ஆத்துக் கெல்லாம் இப்படி குடிச்சிட்டு வராதேன்னு புடிச்சு வெளிய தள்ளி கதவ சாத்தினவா தெரியுமா?”
“அப்படியா அதை ஏன் அங்க சொல்லலையாம். என்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்? உங்க அப்பா சொல்லும் போதே சொல்லிருக்கணும். எப்போ எதை எங்க பேசணுமோ அதை அங்க பேசாம இருக்கறதும் தப்புத் தான் தெரியுமா”
“சரி சரி விடு மிருது. அவாள எல்லாம் திருத்த முடியாது. என்னச் செய்ய?”
“எனக்கு ஒரு டவுட்”
“என்னது. அவா அப்படி தான்னு சொன்னேனே அதுலயா”
“ச்சே அது இல்ல. லட்சுமி அத்தை என்னை வேறு எங்கேயும் டிராவல் பண்ணாமல் பேசாம வீட்டிலேயே ரெஸ்ட் எடு கொழந்தை பொறக்கற வரைக்கும்ன்னு சொன்னா அப்படிப் பட்டவா எப்படி இப்படி வரச்சொல்லிருப்பா?”
“ஏன் என்கிட்டயும் தான் சொன்னா உன்னை உங்க ஆத்துலயே கொண்டு போய் விட்டுடச் சொல்லி”
“அப்படியா ஏனாம்? நான் உங்க ஆத்துல இருந்தா அவாளுக்கு என்னவாம்?”
“அவாளுக்கு ஒண்ணுமில்லை நம்ம ஆத்துல இருந்தா நம்ம குழந்தைக்கு சத்தான ஆகாரமும் உனக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்காதாம் அதுனால உன்னை உங்க அம்மா ஆத்துல விட்டுடச் சொன்னா”
“அது என்னவோ உண்மைத் தான். நானே உங்ககிட்ட அதப் பத்தி பேசணும்ன்னு இருந்தேன். நல்ல வேளை அத்தையும் சொல்லிருக்கா. ஆனா இதை நீங்க ஏன் அத்தை வந்துட்டு போண அன்னைக்கே சொல்லலை?”
“என்னமோ சொல்லணும்ன்னு தோனலை. அதுதான் இப்போ சொல்லிட்டேனே. சரி அத விடு நீ என்ன சொல்ல வந்தேன்னு மொதல்ல சொல்லு”
“அதுவா அது லட்சுமி அத்தை உங்ககிட்ட சொன்னது தான். நீங்க இன்னும் ஒரு மூணு நாள்ல ஊருக்குப் போயிடுவேங்கள் அதுக்கப்புறம் நான் உங்க ஆத்துல இருந்து என்னப் பண்ணுவேன்? அதுவுமில்லாம மாடிக்கு ராத்திரில தனியா ஏறி இறங்க எல்லாம் என்னால முடியாது. உங்க ஆத்துல உங்க அம்மா சத்தான சாப்பாடு சமைக்கவும் மாடேங்கறா என்னை சமைக்கவும் விடமாட்டேங்கறா. தூங்கவும் விடறதில்லை. அதுனால நீங்க ஊருக்கு போறதுக்கு ஒரு நாள் முன்னாடி என்னை எங்க ஆத்துல கொண்டு போய் விட்டுடறேங்களா?”
“அது தான் நாளைக்கு ஈரோட்ல இருந்து வந்ததும் உங்க ஆத்துக்கு தானே போகப் போறோம் பின்ன என்ன? உன்னை அங்கேயே விட்டுட்டு நான் ஊருக்கு போறேன்”
“ஆமாம் ஆமாம் போக விட்டுட்டாலும்”
“என்ன சொல்லற? எனக்கு கேட்கலை”
“ம்…ம்…பார்ப்போம் பார்போம் நளைக்கு நம்மள எங்க ஆத்துக்கு போக விட்டுட்டாலும்ன்னு சொன்னேன்”
“ஏன் அப்படி சொல்லற. அது தான் நேத்தே அதை பேசி முடிவெடுத்தாச்சே அப்புறமும் ஏன் உனக்கு சந்தேகம்”
“எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்வை நவீ. நிச்சயமா சொல்லறேன் நாம நாளைக்கும் போக மாட்டோம்”
“இங்க பாரு மிருது அவா அப்படித் தான் ஆனா அது தான் எல்லாம் முடிவாயாச்சே அதுக்கப்புறம் அவா ஒண்ணும் செய்ய முடியாது. நீ நம்பு”
“இப்பவும் சொல்லறேன் நான் நம்பறேன் நாமள போக விட மாட்டா. சரி லட்சுமி அத்தை ஆத்துலேந்து எப்போ ரிட்டர்ன்?”
“நாம ஒரு பதினோரு மணிக்கெல்லாம் ரீச் ஆகிடுவோம். லஞ்ச் சாப்பிடுவோம். ஈவ்னிங் காபி குடிச்சிட்டு ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பினோம்னா ராத்திரி எட்டு எட்டரைக்கெல்லாம் ஆத்துக்கு போயிடலாம்”
“ஓ! ஹோ! ஒரே நாள்ல எட்டு மணி நேரம் பஸ்ல டிரவல்லா நாளைக்கு எனக்கு முதுகு வலி கன்பார்ம்”
“நான் உனக்கு தைலம் தேய்ச்சுத் தரேன் கவலைப் படாதே”
“வலியைக் குடுத்துட்டு தைலம் தேய்ச்சுத் தர்றதுக்கு பதிலா வலியை குடுக்காமல் இருக்கலாமே”
“இனி எல்லாம் அப்படி தான். ஓகே வா”
“பார்ப்போம் பார்ப்போம்”
“என்ன நீ எதையுமே நம்பாத மாதிரியே சொல்லற?”
“இது வரைக்கும் நம்பற மாதிரி ஒண்ணுமே நடக்கலையே நான் என்ன பண்ணுவேன் நவீ”
“இனி நம்பு ..எல்லாம் நடக்கும். சரியா”
“நடக்கட்டும் நம்பறேன்”
“டன். நடக்கும் நீ நம்பத்தான் போற. சரி சரி பேசிண்டே வந்ததில் டைம் போணதே தெரியலை. இன்னும் ஒரு அரைமணி நேரத்துல நாம இறங்கணும்”
மூத்த தம்பதியான ஈஸ்வரனும் பர்வதமும் மிருதுளா வீட்டிற்கு போக இருந்த தங்கள் மகனையும் மருமகளையும் இரண்டாவது தடவையாக லட்சுமியைக் கொண்டே மறைமுகமாக தடை செய்தனர். லட்சுமி வீட்டிலிருந்து திரும்பி வந்ததும் நவீன் சொன்னதைப் போல இருவரும் மிருதுளா வீட்டிற்கு செல்வார்களா? இல்லை அதற்கும் தடை தயாராக இருக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.
தொடரும்….