பைக் வாங்கிய நாள்முதல் அவ்வளவு மெதுவாக நவீன் என்றுமே ஓட்டியதில்லை. முன்தினம் நடந்த விபத்து அவனை எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்ட வைத்தது. பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனர். மிருதுளா வண்டியிலிருந்து இறங்க மிகவும் கஷ்டப்படுவதைப்பார்த்த நவீன் அவளை அப்படியே உட்காரச் சொல்லிவிட்டு தான் முதலில் இறங்கி பின் ஒரு கையில் பைக்கைப் பிடித்துக்கொண்டு மறுகையை மிருதுளாவிடம் நீட்டினான். எப்படியோ சமாளித்து கொண்டு இறங்கினாள் ஆனால் வலியில் சற்று துடித்தாள். நவீன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை திறந்து இருவருமாக உள்ளேச் சென்றனர். அப்போது தான் மிருதுளாவுக்கு ஞாபகம் வந்தது….
“நவீ இன்னைக்கு நீங்க ஆஃபீஸ் ஜாயின் பண்ணனும்ன்னு சொல்லியிருந்தேங்கள். போக வேண்டாமா? இப்பவே பதினொரு மணி ஆச்சே!!! நீங்க போய் கிளம்பிக்கோங்கோ. நான் பார்த்துக்கொள்கிறேன்“
“என்ன விளையாடறயா!!! உன்ன இப்படி விட்டுட்டு நான் எப்படி போவேன்? ஒன்னுப் பண்ணறேன் பக்கத்து வீட்டு லதா அக்கா கிட்ட உன்னை பார்த்துக்க சொல்லிவிட்டு நான் ஆஃபிஸ் போய் ஒரு வாரம் லீவ் அப்பளைப் பண்ணிட்டு அப்படியே நமக்கு லஞ்ச் வாங்கிண்டு வரேன்“
“லதா அக்கவ எல்லாம் ஏன் தொந்தரவு செய்யணும்..பேசாம நீங்க போயிட்டு வாங்கோ நான் அது வரை தூங்கறேன். காலை ல போட்ட மாத்திரையால தூக்கம் தூக்கமா வருது. கதவைப்பூட்டி சாவியை எடுத்துண்டு போங்கோ“
“ஆர் யூ ஷுவர்? நான் போயிட்டு வர எப்படியும் ஒரு மூணு மணி நேரமாகும் பரவாயில்லையா!!! இருந்துப்பியா?”
“நான் இருந்துப்பேன் நீங்க போயிட்டு வாங்கோ.“
நவீன் குளித்துவிட்டு தனது யூனிஃபார்மை போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் மிருதுளா உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து மெதுவாக கதவைப்பூட்டி ஆபீஸுக்கு சென்றான். அவன் உடல் தான் அலுவலகத்தில் இருந்தது அவனது உள்ளம் வீட்டில் மிருதுளா என்னச் செய்வாள் தனியாக அதுவும் இந்த நேரத்தில் விட்டுவிட்டு வரவேண்டியது ஆயிற்றே என்று தவித்துக்கொண்டே இருந்தது. வேக வேகமாக லீவ் லெட்டர் எழுதி அதை தனது மேல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரது பதிலுக்காக டென்ஷனுடன் அவனது இருக்கையில் அமர்ந்திருந்தான். நேரம் வேற கிடுகிடுவென ஓடிக்கொண்டிருந்ததில் அவனது இதயத்துடிப்பும் அதற்கு போட்டிப்போட்டு துடித்துக்கொண்டிருக்க…அவனது அலுவலக நண்பர்கள் அவனைப்பார்த்து..
“என்ன நவீன் மறுபடியும் லீவ் அப்ளை பண்ணிருக்க !!! என்ன புது மனைவியை விட்டு வர மனசு வரலையா?” என்று ஒருவர் கேட்க அதற்கு கல்யாணமாகாத மற்றொரு நண்பர்
” ஓ!!! அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆஃபிஸுக்கே வரமாட்டேனே!“என்று கூற அதற்கு பல்பீர் சிங்
“ஆமாம் ஆமாம் எல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்….ஒரு இரண்டு வருஷம் போட்டும் வீட்டை விட ஆஃபிஸ் சொர்கமா தெரியும்” என்று பதிலளிக்க அதைக்கேட்ட மற்றொருவர்
“என்ன பல்பீர் சார் உங்க வைஃப் கிட்ட இதை சொல்லட்டுமா” என நக்கலடிக்க
“ஏன் உனக்கு அந்த தேவையில்லாத வேலை. அவன் அவன் குடும்பத்தப் பாருங்கப்பா” என பல்பீர் கூறிக்கொண்டிருக்கையில் அவர்களின் மேலதிகாரி வர அனைவரும் எழுந்து சல்யூட் செய்ய அவர் நேராக நவீனிடம் வந்து..
“இதை நீ ஃபோனில் சொல்லியிருந்தாலே லீவ் கொடுத்திருப்பேனே எதற்காக உன் மனைவியை விட்டுவிட்டு வந்தாய். சாரி நான் மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால் இப்போது தான் உன் லீவ் லெட்டரைப்பார்த்தேன். சரி நீ இப்போதே கிளம்பலாம். உன் லீவை அப்ரூவ் பண்ணிட்டேன். சென்று உன் மனைவியை நல்லா பார்த்துக்கோ. ஏதாவது உதவி வேணும்னா ஒரு ஃபோன் போடு ஓகே.”
அவர் இதைக்கூறிவிட்டு அவர் அறைக்குள் சென்றதும் நவீனின் நண்பர்கள் அவனை சூழ்ந்துக்கொண்டனர். என்ன ஆச்சு ஏதாச்சு என விசாரித்தனர். நவீனும் நடந்தவற்றைக்கூறினான். அனைவரும் அவனை உடனே வீட்டுக்கு செல்லும்படி கூறினர். என்ன உதவி வேண்டுமானாலும் நண்பர்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை கொடுத்து நவீனை அனுப்பி வைத்தனர். நவீன் நேராக அவர்கள் குவார்ட்ஸுக்குள் இருக்கும் ரோஹித் டாபா சென்று இரண்டு சாப்பாடு பார்சல் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு நின்றுக்கொண்டிருக்கையில் அவனுக்கு மிருதுளாவுடன் முன்தினம் காலைப் பேசியது கண்முன் திரைப்படம் போல் ஓடியது…. அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் என்று அவள் கூறியதும், தனக்கு சமைக்க தெரியாது என்பதும், ரோஹித் டாபாவிலிருந்து வாங்கி வருவதாக சொன்னதும்… அவளுக்கு ஏன் உடம்பு சரியில்லாமல் போகும் என்று கேட்டு பேச்சை திசைத்திருப்பியதும்… அதேபோல ஆகிவிட்டதே என்றெண்ணிக்கொண்டிருக்கையில்….சட்டென்று
டாபாவில் வேலை செய்யும் பப்பு… அவனுக்கு மட்டுமே ஓடிக்கொண்டிருந்த படத்திரை முன் வந்து நின்று…
“சாப் !!!சாப்!!! நவீன் சாப் ஆப்கா பார்சல்“
என கூற திரையிலிருந்து கண்களை அகற்றி பப்புவிடம் பணத்தைக்கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு வந்து கதவைத்திறந்துப்பார்த்தான், மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். நவீன் தனது உடைகளை மாற்றிவிட்டு முகம் கை கால் அலம்பி விட்டு மிருதுளாவை எழுப்பலாமா வேண்டாமா என அவளைப்பார்த்துக்கொண்டே யோசித்தான்…. காலை ஒன்பது மணிக்கு சாப்பிட்டது அதுவும் ஒரே ஒரு சப்பாத்தி இப்போ மணி மூணு ஆகப்போகிறது என தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கையில்…. முனகிக்கொண்டே எழுந்தாள் மிருதுளா.
“ரொம்ப வலிக்கறது. ஓ !!! வந்துட்டேளா!!! டைம் என்ன ஆகறது? எனக்கு ரொம்ப பசிக்கறது” என்றாள்
“இதோ டாபாவிலிருந்து ரொட்டி சப்ஜீ, தால் அன்ட் ரைஸ் வாங்கிண்டு வந்திருக்கேன் வா சாப்பிடலாம்” என நவீன் கூப்பிட
“இருங்கோ ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்“
“நான் வரட்டுமா ஹெல்ப் பண்ண?”
“இல்லை நான் பார்த்துக்கறேன்“
பின் இருவரும் உணவருந்த அமர்ந்தனர். அப்போது மிருதுளா சாப்பிட சிரமப் படுவதைப் பார்த்த நவீன் …
“ஓ!!! இதனால தான் காலை ல ஒரே ஒரு சப்பாத்தியோட எழுந்துட்டயா!!!! விடு விடு நீ கையை எடு நான் ஊட்டி விடறேன் நீ சாப்பிடு….” என்று ஊட்ட
“எனக்கு ரொட்டி போதும் ஹார்டாஆ இருக்கு“
“அப்போ இந்த தால் ரைஸ் சாப்பிடு” என்று சாதத்தை ஊட்டிவிட்டான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது…
“ஏய் மிருது ஏன் கண் ல இருந்து கண்ணீர் வருது …ரொம்ப காரமா என்ன!!! இல்ல அழுவறையா? என்ன ஆச்சு“
“எனக்கு உடம்பு முடியாமல் போனபோதெல்லாம் என் அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டிருக்கா அதுக்கப்புறம் நீங்க தான் ஊட்டி விடுறேங்கள்… அதனால ஏதோ உள்ள பண்ணித்து கண்ணுல இருந்து கண்ணீர் தானா வருது.“
“சாப்பாடு தான் காரமோன்னு நினைச்சுட்டேன்…இதுக்கெல்லாமா கண்ணுலேருந்து தண்ணீ வரும்“
“சரி எனக்கு ஊட்டின்டே இருக்கேங்களே உங்களுக்கு பசிக்கலையா!!! நீங்களும் சாப்பிடுங்கோ. இந்த காயமெல்லாம் எப்போதான் ஆறுமோன்னு இருக்கு. சரி உங்களுக்கு லீவு கிடைச்சுதா? எனக்கு போதும் பா நீங்க சாப்பிட ஆரமிங்கோ“
“போதுமா !!! ஓகே இதோ நானும் சாப்பிடறேன். எஸ்… எஸ் ….ஒரு வாரம் லீவு கிடைச்சிடுத்து.“
“வாவ் சூப்பர்..ஆனா நான் இப்படி காயங்களோட இருக்கேனே!!!“
“ஹலோ மேடம்!!! அதனால தான் லீவே குடுத்திருக்கா…சரி நீ மத்தியானம் சாப்பிட வேண்டிய மாத்திரை மருந்தெல்லாம் அங்க இருக்கு எடுத்து சாப்பிடு நான் இதை எல்லாம் குப்பை ல போட்டுட்டு இந்த இடத்தையும் தொடச்சுட்டு வரேன்“
என்று கூறி வேலையில் மும்மரமானான் நவீன். மிருதுளா அவன் வேலை செய்வதைப்பார்த்து ….
“சாரி என்னால உங்களுக்கு ஹெல்ப் எதுவும் பண்ண முடியலை“
“மேடம் அன்னைக்கே சொன்னேன் நமக்குள் நோ சாரி அன்ட் நோ தாங்க்ஸ் ன்னுட்டு….என்ன மறந்துப்போச்சா?”
“ஓகே சார் ஓகே டன்“
நவீனைப் பார்த்துக்கொண்டே மிருதுளா மனதில் …
“பேச்சில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பர்வதத்தின் மகனா இவன்!!!!” என்று எண்ணியதில்… ஆச்சர்யம் அவளைத் தொற்றிக்கொண்டது.
மாலை காபி வைத்துக்கொடுத்து பரீட்சை எழுதி மதிபெண்களுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல மிருதுளாவையேப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். அதை உணர்ந்த மிருதுளா….
“என்ன ரிசல்ட்டுக்கு வேயிட்டிங்கா?”
“எஸ்…ஏன் அப்படி கேட்கிற?”
“ஏன்னா எனக்கு அதோட அருமைப் புரியுமே, தெரியுமே அதனால தான் அப்படிக்கேட்டேன்“
“சரி எல்லாம் புரிஞ்சும் தெரிஞ்சும் என்ன பிரயோஜனம் ரிசல்ட் இன்னும் ரிலீஸ் ஆகலையே!!!“
“இந்தாங்கோ என் கப்“
“என்ன ஒன்னுமே சொல்லாம கப்பை கொடுத்துட்ட!!!“
“அச்சோ!!! அச்சோ!!! கப்பை பாருங்கோ அதுல காபி துளிக்கூட மீதி இல்லை. இதிலிருந்தே உங்களுக்கு தெரியலையா!!”
“என்ன தெரியணும் !!!! எதுவாக இருந்தாலும் நேரா சொல்லு எனக்கு ஒன்னும் புரியலை“
“கப்பில் ஒரு துளிக்கூட காபி மீதமில்லைன்னா அது சூப்பர்ன்னு அர்த்தம். நீங்க சூப்பரா காபி வைக்கிறேங்கள் ன்னு அர்த்தம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.“
“இப்படி சொல்லனுமே அப்போ தானே எனக்கு புரியும். காலி கப்பை கையில் கொடுத்துட்டு புரியலையான்னு கேட்டா எப்படி?? நான் எப்படி சன்டே நீ செய்த பொங்கலை சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொன்னேன் !!! நானும் ஒன்னும் சொல்லாம காலி தட்டை நீட்டிட்டு பேசாம போயிருக்கனும் அப்போ தெரிஞ்சிண்டிருப்பயாக்கும்“
“ஓகே சார் இனி ரெண்டு பேருமே ஓப்பனா இருவருக்குமே புரியுறமாதிரி பாராட்டிக்குவோம் சரியா. என் நவீ போட்ட காபி சூப்பரோ சூப்பர்“
“ஆங் அது!!” என்று நவீன் சொன்னதும் இருவருமாக சிரித்துக்கொண்டனர்.
“நைட்டுக்கும் டாபாலேர்ந்தா வாங்கப் போறேங்கள்?”
“ஆமாம். வேற என்னப் பண்ணுவேன். இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ நாளை முதல் என் சமையல்“
“உங்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னேங்கள்!”
“தெரியாது தான். நீ சொல்லித்தா செய்யறேன்.”
“ஓகே டன் நாளைமுதல் இருவருமாக சமையல் பாடம் கத்துக்குவோம்“
“ஏன் !!!!நீ தான் நல்லா சமைக்கிறயே“
“உண்மைச் சொல்லனும்ன்னா நான் கல்யாணத்துக்கு முன்னாடி சமைச்சதே கிடையாது. தோசை, இட்டிலி சுடுவேன் அன்ட் தேங்கா சட்னி பண்ணிருக்கேன் அவ்வளவு தான்“
“அப்போ எப்படி கிச்சடி, பொங்கல், கேசரி எல்லாம் செஞ்ச? அதுவும் அவ்வளவு ருசியா“
“என் அம்மா செய்யறத பார்த்திருக்கேன் என்னவெல்லாம் போடணும்ன்னு தெரியும் அதனால செய்தேன். செய்ய தொடங்கறத்துக்கு முன்னாடி கடவுளிடம் வேண்டிப்பேன் …நான் செய்யறது நல்லப்படியா வரணுமே!!! என் சாப்பாட்டை சாப்பிடறவாளுக்கு அது பிடிக்கணுமே!! ன்னு ஒரு ரிக்குவெஸ்ட் போட்டுட்டு செய்தேன் நல்லாவும் வந்தது.“
“ஓகே !!!!ஓகே!!! நாளைக்கு நானும் கடவுளிடம் ….நான் செய்யறது சாப்பிடறமாதிரி இருக்கனுமே…என் மிருதுவுக்குப் பிடிக்கணுமே ன்னு ஒரு ரிக்வெஸ்ட் அன்ட் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சுட்டா போச்சு“
அன்றிரவு உணவையும் டாபாவிலிருந்து வாங்கி வந்து இருவரும் அருந்தியப்பின் மிருதுளாவின் காயங்களுக்கு மருந்து தடவி விட்டு அவள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக்கொடுத்துவிட்டு படுக்கையின் நடுவில் ஒரு தலையணையை வைத்து மிருதுளாவைப் படுக்கச் சொன்னான் நவீன் …அதைப்பார்த்த மிருதுளா…
“ஏன் நடுவில் புதிதாக தலையணை” என அரை மயக்கத்தில் கேட்டாள்.
“தூங்கும் போது தெரியாமல் உன் மீது கால் ஆர் கையைப் போட்டுட்டேன்னா…உன் காயங்களில் பட்டு உனக்கு வலிக்குமே அதனால் தான் நடுவில் தலையணையை வைத்தேன்“
“ஸோ நைஸ் ஆஃப் யூர் மை புருஷா. குட் நைட்“
“குட் நைட் மிருது. ஐ லவ் யூ. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என்று கூறிக்கொண்டே பார்த்தான் அவள் உறங்கியிருந்தாள்.
ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துக்கொள்வதற்கு சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. அவை சரியாக அமைவதிலும், அவற்றை சரியாக உபயோகித்து புரிய வைப்பதிலும், புரிந்துக்கொள்வதிலும் தான் தம்பதிகளின் வாழ்க்கை அழகானதாகவும், ஆழமானதாகவும் உருவெடுத்து அவர்களின் உறவை பல ஆண்டுகளுக்கு அர்த்தமுள்ளதாக உயிர்ப்பித்திருக்க செய்கிறது.
இந்த பைக் விபத்தும் நவீன் மிருதுளா ஆகிய இருவரின் புரிதலுக்கான வித்தாக தான் கடவுள் அமைத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலை அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து அவர்களுக்குள் இருக்கும் அக்கறை, அன்பு, பாசம், அனுசரணை போன்ற குணாதிசயங்களை இருவருக்கும் புரியவைக்கப் போகிறதா? அவர்கள் அதை புரிந்துக் கொள்வார்களா?
திருமண வாழ்க்கை என்ற செடியை,
அக்கறை, அன்பு, பாசம் எனும் வளமான மண்ணும், சூரிய ஒளியும், நீரும்,
கொண்டு பேணிக்காத்தால்,
காதல் எனும் அழகிய மலர் மலர்ந்திடாதா என்ன?
அதில் புரிதல் எனும் மதுரசம் தான் வழிந்திடாதா!
அந்த மதுரசத்தைப் பருகி இன்பம் எனும் வண்டுகள் தான் ஆடி களித்திடாதா!!!
தொடரும்…..