ஓட்டுனர் உரிமம் – பாகம் 5

பாகம் 4 முடிந்து ஐந்தாவது பாகம் பதிப்பிக்க காலதாமதமானதற்கு முதல் முயற்சியின் தோல்வியில் இருந்து வெளிவர இவ்வளவு நாட்கள் எடுத்தது என்று நினைத்துக் கொண்டு மன்னிக்கவும்.😅

முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் இரண்டு மணிநேர வகுப்புக்கு சென்றேன். அன்று எனக்கு வந்த பயிற்றுவிப்பாளர் நான் காரை பார்க் செய்வதைப் பார்த்து ,

“நீங்கள் நன்றாக தானே பார்க் செய்கிறீர்கள் பின்பு ஏன் பாஸ் ஆகவில்லை?”

என்று கேட்க. நான் அவரிடம்

“அது என்ன மாயமோ தெரியல! என்ன மந்திரமோ புரியல! அந்த டெஸ்ட் யார்டுக்குள்ள போனாலே தப்பு தப்பா தான் வருது”

என்று சொல்ல அவரும் எனது முந்தைய பயிற்சியாளர் சொன்னது போலவே பயத்தை தவிர்க்க சொன்னார். நானும் சரி என்று தலையை ஆட்டினேன். வீட்டில் கணவர் அல்லது மகன் /மகள் கார் இருந்தால் அதில் பார்க்கிங் பயிற்சி எடுத்துப் பார்க்க சொன்னார். ஓகே என்று கூறி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றேன்.

முதலில் எனது கணவரிடம் அவரின் காரை சிறிது நேரம் பயிற்சி செய்ய கேட்டேன். அவரது கார் பெரியது என்றும் எங்கள் மகனின் கார் செடான் என்பதால் அதில் பயிற்சி எடுக்குமாறு கூறி விட்டார். நானும் அது சரி தானே என்று எண்ணி மகன் பக்கம் திரும்பினேன். உடனே அவர்

“அம்மா என்னை பார்க்காதே எனக்கு நாளைக்கு காலேஜ் இருக்கு.”

என்று வேகவேகமாக கூற,

“அட போங்கப்பா நான் வகுப்பு போனதை வச்சே பாஸ் ஆனா ஆகிறேன் இல்லைன்னா வேண்டாம்.”

என்று சொல்லி இரண்டாவது இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட் பகல் நேரத்தில் எடுக்க முடியுமா என்று கேட்டதற்கு பகல் முழுவதும் RTA பரீட்சை நடக்கும் என்றும் மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்க்கிங் யார்டு இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு கிடைக்கும் என்றும் கூற வேறு வழியின்றி முதல் ஸ்லாட் ஆன ஆறு மணி ஸ்லாட்டை பதிவு செய்தேன். ஏன்னா பக்கபலமாக கொஞ்சம் சூரியன் இருப்பார் என்று நினைத்தேன். மூன்று நாள் கழித்து மீண்டும் நம்பிக்கையுடன் சென்றேன்.

வெளிச்சத்தோட டெஸ்ட் எடுத்தா பாஸ் ஆகிடலாம்ன்னு நெனச்சு போன எனக்கு வருணபகவான் ரூபத்துல ஆப்பு ஆப்போஸிட்டுல ஆட்டம் போட்டுச்சு பாருங்க. ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம் போட்டுச்சு. அதோட அந்த ஆட்டத்துல ஆறு மணிக்கு இருந்த பரீட்சையை எல்லாம் எட்டு மணிக்கு தள்ளி வச்சுட்டாங்க. அப்படி காத்திருக்க விருப்பமில்லைனா வேற ஒரு நாளுக்கு டெஸ்ட்டை மாத்தி வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அவ்வளவு தூரம் போயாச்சேன்னும், அன்று அந்த பரீட்சையை முடிச்சிடணும்னும் காத்துகிட்டு இருந்தேன். மணி எட்டாச்சு மழையும் விட்டாச்சு. ஆறு மணி பரீட்சைக்கு புக் செய்தவர்களை அழைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் இருந்தனர்.

ஏற்கனவே இரண்டு மணிநேரம் காத்துக் கொண்டிருந்ததில் பதற்றத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தது. இதில் எனது ஆய்வாளர் என்னிடம் டென்ஷன் இல்லாம ஓட்டுங்கன்னு சொன்னதைக் கேட்டதும் முழிச்சேன் பாருங்க ஒரு முழி. அதை பார்த்து அவரு என்ன நெனச்சாரோ தெரியல உடனே

“ம்…வண்டியை எடுங்க. நேரா ஹில், அடுத்தது ஆங்கிள் நெக்ஸ்ட் கராஜ் ஓகே. ஆல் தி பெஸ்ட்”

என்றவரிடம் சும்மா இல்லாம

“அப்போ பாரலல் அன்ட் எமர்ஜென்சி”

என்று கேட்க போய்

“ஓ!!! உங்களுக்கு மறுபடியும் அந்த ரெண்டு டெஸ்ட்டும் எடுக்கணும்னா எடுங்க எனக்கு நோ ப்ராப்ளம். டூ யூ வான்ட் டு டூ அகெய்ன்?”

என்று கேட்டவரிடம் வேகவேகமாக

“நோ நோ. ஐ வாஸ் ஜஸ்ட் ஆஸ்க்கிங்‌.”

என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு புறம் அப்பாடா என்றும் மறுபுறம் ஏன் அந்த ரெண்டு டெஸ்ட் எடுக்க வேண்டாம்? என்ற குழப்பத்தோடு கிளம்பினேன்.

அவர் கூறிய மூன்றில் இரண்டு முடிந்தது. மூன்றாவதாக கராஜ் பார்க்கிங் செய்ய முற்பட்ட போது சற்று முன்னதாக காரை வலது புறம் திருப்பியதால் ஒரு சிறு தடு மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதை அவர்கள் அளித்துள்ள ஒரு முறை அட்ஜெஸ்ட்மென்ட் செய்யலாம் என்ற சலுகையை உபயோகிக்க முயற்சித்தேன். பார்க் செய்தேன். வெளியே நின்றிருந்த ஆய்வாளர் காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு நிப்பாட்ட சொன்னார். நானும் ஓட்டி சென்று நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு, கியரை பார்க்கிங்கில் போட்டு, சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு, எனது கைபையை எடுத்துக் கொண்டு ஒரு வழியா முடிச்சிட்டேன்டாப்பா என்று எண்ணிக்கொண்டு ஆய்வாளரிடம் சென்றால் அவர் என்னிடம்

“நீங்கள் ஹில் அன்ட் ஆங்கிள் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் கராஜ் ஃபெயில். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”

என்று கூறிவிட்டு அடுத்த ஆட்டின் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவர் அடுத்த ஆட்டுடன் யார்டுக்குள் நுழைந்தார். அந்த ஆடும் ஆய்வாளர் கூறிக்கொண்டே வந்த விதிமுறைகளுக்கு என்னை போலவே நன்றாக தலையை ஆட்டியது. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றிருந்த என்னை பார்த்து…

“உங்க பரீட்சை முடிஞ்சிடிச்சு. நீங்க போகலாம்‌. யூ கெட் இன்சைட் தி கார்”

என்று அடுத்த ஆடிடம் சொன்னதும் அதுவரை பிரமயில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு முன்பு ஆட்டியது போலவே மீண்டும் தலையை சரி என்று ஆட்டிவிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டு வெளியே வந்து எனக்காக காத்திருந்த கணவரிடம்

“மீண்டும் நான் ஃபெயில்”

என்று கூறி எனது வருத்தத்தை தெரிவித்தேன். அப்போது வாடி போயிருந்த என்னிடம்

“உன்னால முடியலனா விடு நோ ப்ராப்ளம்”

என்றார். அதை கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியாத உத்வேகம் தோன்ற உடனே அவரிடம்

“ஏன் முடியாது? என்னால் முடியும். முடியும் வரை முயற்சிக்க போகிறேன்.”

என்று கூறி மூன்றாவது முறை இன்டர்ணல் அஸஸ்மெண்ட் பரீட்சைக்கு அடுத்த நாளே ஸ்லாட் கிடைத்ததும் சற்றும் யோசிக்காமல் பதிவு செய்தேன்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்று பலிக்குமா!!!
அடுத்த பதிவில்…

🚗பயணம் தொடரும்…🚗

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s