ராஜா சொன்னதும் ராஜேஷ் மறுபடியும் புத்தகத்தைத் திறந்தான். ஐந்தாறுபேர் ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு போகும் பக்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்தப் பக்கத்துக்காக காத்திருந்த ராமு ராஜேஷை பிடித்து உலுக்கி
“என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா அப்படியே சிலை மாதிரி அதே பக்கத்தை இப்படி பார்த்துட்டிருக்க?”
“ஏய் ராமு பாவம் டா அந்த பொண்ணு. என்ன பாடு படறாளோ இல்ல பட்டாளோ”
“சரி சரி இதெல்லாம் உண்மையான்னு கூட நமக்குத் தெரியாது அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு ஃபீலிங்ஸ்…சரி அடுத்தப் பக்கத்துக்குப் போடா ராஜேஷ்.”
“இல்லடா ராஜா….”
“அச்சச்சோ இவானால மட்டும் தான் இதைத் திறந்து பக்கங்களைப் புரட்ட முடியும்ங்கறது இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் தான் டென்ஷனைக் குடுக்குது ராஜா.”
“ராஜேஷ் ப்ளீஸ் டா எங்களை ரொம்ப படுத்திட்டடா. அடுத்த பக்கத்துக்குப் போயேன்டா”
ட்ரிங்….ட்ரிங்….ட்ரிங்….
என்று ராமுவின் மொபைல் அடித்தது அதை அட்டென்ட் செய்வதற்கு முன் தன் நண்பர்களிடம்
“எங்க அம்மா தான் கால் பண்ணறாங்க. உஷ்….பேசாம இருங்கப்பா. டேய் அடுத்த பேஜ்க்கு போயிடாதீங்கடா….ஹலோ அம்மா சொல்லுமா”
“டேய் ராமு எங்கே இருக்க? இன்னும் சாப்பிட வரலையே டா!! மணி ஒன்னாச்சு தெரியுமா?”
“அம்மா அம்மா ப்ளீஸ் மா…நான் இங்கே ராஜா வீட்டுல தான் இருக்கேன். இங்கேயே அவன் கூட சாப்பிட்டுக்கறேன். நீ எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடுமா. இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் மா ப்ளீஸ் ப்ளீஸ்…”
“ம்…ம்…சரி சரி. ஆனா சாயந்தரம் அப்பா வர்றதுக்கு முன்னாடி வீடு வந்து சேர்ந்திடு சொல்லிப்புட்டேன். அவர் நீ எங்கேன்னு கேட்டா என்னால எல்லாம் அவரை சமாளிக்க முடியாதுப்பா”
“ம்…சரி மா. வந்திடறேன். ஃபோனை வை மா. பை”
“டேய் ராஜா சாப்பாடு தருவே ல!!! நான் என் அம்மா கிட்ட வேற சொல்லிட்டேன்டா…”
“ஓ!! ஷுவர் ராமு. இப்பவே மங்களம் அக்காகிட்ட சொன்னா பத்தே நிமிஷத்துல உங்களுக்கும் ஏதாவது செஞ்சுத் தந்திடுவாங்க. இரு இன்டர்காம்ல சொல்லிட்டு வந்திடறேன்….ஹலோ அக்கா…நம்ம ராமுவும் ராஜேஷும் இன்னைக்கு இங்க தான் லஞ்ச் சாப்பிடுவாங்க ஸோ அவங்களுக்கும் சேர்த்தே செய்திடுங்கக்கா”
“சரி தம்பி எல்லாம் இருக்கு. சாதம் மட்டும் கொஞ்சம் வச்சிடறேன். நீங்க மூணு பேரும் இன்னும் ஒரு அரை மணி நேரத்துல டைனிங் டேபிளுக்கு வந்திடுங்க தம்பி. சாப்பாடு ரெடியா இருக்கும்.”
“தாங்ஸ் அக்கா. வந்திடறோம். வச்சுடவா. டேய் நமக்கு இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு சாப்பிடப் போக…நாம போகலைன்னா அப்புறம் மங்களம் அக்கா நம்மைத் தேடி இங்கே வந்திடுவாங்க ஸோ ராஜேஷ் அடுத்தப் பக்கத்தைத் திருப்பு”
ராஜேஷ் திருப்பினான். அதில் ஒரு கர்ப்பிணி பெண் மண் தரையில் படுத்துக் கொண்டு துடிப்பது போல வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம் உயிர்ப்பித்ததும் அவளின் அழுகை ராஜாவின் அறையையே உலுக்கியது. அந்த அழுகையின் சப்தத்தைக் கேட்டதும் உடனே அந்த புத்தகத்தை மீண்டும் மெத்தை மீது கமுத்தி வைத்தான் ராஜேஷ்….கீழேயிருந்து மங்களம் இன்டர்காமில் ராஜாவைக் கூப்பிட்டு விசாரித்ததில் ராஜா ஏதேதோ சொல்லி சாமாளித்தான். இதைப் பார்த்த நண்பர்கள்
“டேய் ராமு ராஜா! அப்போ அந்த அஞ்சு பேரு இந்த கர்ப்பிணி பொண்ணவா சீரழிச்சிருக்காங்க? எனக்கென்னவோ விஷயம் ரொம்ப சீரியஸாகுதோன்னு தோணுது!!”
“ம்….ஒண்ணும் புரியலையே டா. சரி வேகமா புக்கோட அடுத்தப் பக்கத்தைத் திருப்பு ராஜேஷ்”
ராஜேஷ் புத்தகத்தை நிமித்தியதும் மீண்டும் அழுகைச் சப்தம் ஒலிக்க உடனே அந்தப் பக்கத்தை திருப்பினான். அடுத்தப் பக்கத்தில் ஒரு சிவப்பு நிற சான்ட்ரோ கார் காட்டுப் பகுதியில் செல்வதுப் போல வரைப்பட்டிருந்தது. அதை மூவரும் பார்த்ததும் அதுவும் உயிர்ப்பித்து அவர்கள் முன் காட்டுப் பகுதியிலிருந்த ரோட்டில் வேகமாக ஓடியது. அதை ஓட்டிக் கொண்டிருந்தது ஒரு பெண் என்பதும் மூவருக்கும் தெரிந்தது. அந்த வண்டி ஓடிக்கொண்டே இருந்த போது ராஜேஷ்
“டேய் ராமு என்ன இந்த வண்டி இப்படியே ஓடிகிட்டே தானே இருக்கும்…அடுத்தப் பக்கத்துக்கு போகலாமா?”
என்றதும் மங்களம் அனைவரையும் சாப்பிட இன்ட்டர்காமில் அழைத்தாள். உடனே ராஜா தன் நண்பர்களிடம்
“ராமு ராஜேஷ் வாங்க நாம மூணு பேரும் போய் சாப்பிட்டு வருவோம். இல்லாட்டி மங்களம் அக்கா நம்மளை கூப்பிட்டுகிட்டு இங்கேயே வந்திடுவாங்க”
“அப்போ இந்த புக்கு?”
“அதை எப்பவும் போல பெட்டுல கமுத்தி வச்சிட்டு வா ராஜேஷ்”
என்று ராமு சொன்னதும்…ராஜேஷ் புக்கை கமுத்தி வைத்து விட்டு மூவருமாக சாப்பிடச் சென்றனர். டைனிங் டேபிளில் அமர்ந்து மங்களம் பரிமாற சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது ராஜேஷ்
“டேய் !!! அந்த காரை ஓட்டிட்டு போனது நாம முன்னாடிப் பக்கத்துலப் பார்த்த அந்த கர்ப்பிணி பொண்ணா இருக்குமோடா?”
“உஷ்…அக்கா இருக்காங்க…அது ஒண்ணுமில்லைக்கா கதை டிஸ்கஷன் நடக்குது அது தான்”
“ஓ!!! சரி சரி சரி தம்பி”
“ம்…அக்கா உங்களுக்கு இந்த பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை இருக்கா?”
“ஏன் கேட்குறீங்க தம்பி?”
“இல்ல எங்க கதைக்காக ஒரு சர்வே எடுக்கறோம் அதுதான் கேட்டேன்”
“ஓ!! அப்படியா…எனக்கு நம்பிக்கை இருக்கு தம்பி. அதாவது மனசுல ஏதாவது நிறைவேறாத ஆசையோ, இல்ல ஏதாவது செஞ்சு முடிக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தப்போ திடீர்னு சாவு வந்துட்டாளோ!!! அவங்க எல்லாருமே பேயா வருவாங்க தம்பி. வந்து அவங்கவங்க விஷங்களைப் பூர்த்திப் பண்ணிகிட்டு போயிடுவாங்க. “
“ஓ!! ஓகே!! அப்படின்னா இந்த மாதிரி பேயா வர்றவங்க எப்படி வருவாங்க. சினிமாவுல வர்றா மாதிரி அகோரமா!! தலைமுடியெல்லாம் விரிச்சுப் போட்டுகிட்டு …ஆ…ன்னு கத்திக்கிட்டு தான் வருவாங்களா?”
“அப்படின்னு இல்லை தம்பி….எப்படி வேணும்னாலும் வருவாங்க.”
“சரிக்கா எனக்கு போதும்.”
“எங்களுக்கும் போதும் அக்கா. ரொம்ப டேஸ்டியா இருந்துச்சுக்கா. நன்றி”
“அய்யோ எதுக்கு தம்பிங்களா நன்றி எல்லாம் சொல்லுறீங்க. உங்க கதைக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளுங்க தம்பி. எங்க ஏரியாவுக்குப் பக்கத்துல இருக்குற ஒரு டீச்சரம்மா வீட்டுல சாயந்தரமா நான் வேலைப்பார்த்துட்டிருந்தேன். பெரிய சமூக சேவகி. அவங்களை ஒரு வருஷமா காணலையாம். ஆனா அவங்க ஆவி அவங்க வீட்டையே சுத்தி கிட்டிருக்குனு சொல்லிக்கறாங்க தெரியுமா!!!”
“என்னது? ஒரு வருஷமா காணமா? என்ன ஆச்சுனு சொல்லுறேங்களா அக்கா”
“அந்தப் பொண்ணு ரொம்ப நல்லப் பொண்ணுப்பா. பெரிய ஸ்கூல்ல டீச்சரா இருந்தது. ரொம்ப அழகா லட்சணமா இருக்கும். அவங்க வீட்டுக்காரரும் நல்ல மனுஷன். அவரு டாக்டரா இருக்காரு. அந்தப் பொண்ணு தான் போன வருஷம் மே மாசம் காணாம போயிருக்கு. அன்னைக்கு வெளியில போன புள்ள இன்னும் வீடு வந்து சேரலைன்னு அந்த அய்யா வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குமா படுறப் பாடிருக்கே…பார்க்க முடியலைப் பா”
“அவங்க தான் ஆவியா சுத்துறாங்கனு யாரு சொன்னா?”
“அந்த அய்யா தான் சொன்னாரு. போலீஸ்ல கூட சொல்லிருக்காரு.”
“அது எப்படி அவருக்கு தெரிஞ்சுதாம் அது அவர் மனைவி ஆவினு? மொதல்ல அவரு எப்படி தன் மனைவி இறந்துட்டான்னு நினைச்சாராம்?”
“அதுதான் நானும் அவர்ட்ட சொன்னேன் தம்பி. அப்படி அம்மா இறந்துட்டாங்கன்னு எல்லாம் நினைக்காதீங்க அய்யா. அம்மா நிச்சயமா வந்துடுவாங்கன்னு சொன்னேனே!! அவரோட தம்பியும் அவங்க பொண்டாட்டியும் ஊர்லேந்து அவருக்கு துணையா இருக்க அடுத்த நாள் வந்ததிலேந்து அப்படித்தான் அவர் புலம்பிக்கிட்டே இருக்காரு. . அவங்க வீட்டுத் தோட்டக்காரர் சொன்னது தான் இது. ஒரு நாள் சாயந்தரம் நான் அவங்க வீட்டுக்கு வேலைக்குப் போணப்போ அவர் தம்பி பொண்டாட்டி என்னை வீட்டுக்குள்ளயே விடாம வெளிய துரத்தி இனி வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிடுச்சு தம்பி. தோட்டக்காரரையும் நிறுத்திட்டு புதுசு புதுசா வேற வேலைக்காரர்களை வச்சுருக்கு அந்த பொம்பள. அந்த பொண்ணு காணாம போய் ஒரு வருஷமானதால அந்த டாக்டர் சொல்லுறா மாதிரி அது இறந்துப் போயிருக்க நிறைய வாய்ப்பிருக்கு தம்பி…உசுரோட இருந்தா இன்னேரம் வீட்டுக்கு வந்திருக்கும்…இல்லாட்டி யாராவது தகவலாவது சொல்லிருக்க மாட்டாங்களா! நீங்களே சொல்லுங்க தம்பிகளா”
“சரி அக்கா அந்த பொண்ணு காணாம போணபோது கன்சீவ்வா இருந்தாங்களா?”
“அப்படீன்னா என்ன தம்பி?”
” அக்கா….ராஜா….அவங்க மாசமா இருந்தாங்களான்னு கேட்கறான் “
தொடரும்…….