
குடும்பங்களும், நண்பர்களும், இப்பொழுது வாட்ஸ்அப் குழுக்களாக அமைந்து செவ்வனே செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அம்மா வழி சொந்தங்கள், அப்பா வழி சொந்தங்கள் என்று பிள்ளைகளும், அவர் வழி உறவினர்கள், அவள் வழி உறவினர்கள் என்று தம்பதிகளும் மற்றும் அம்மா, அப்பா, மகன், மகள் தனித்தன்மையான ஒரு குடும்ப பெயருடன் ஒன்றும், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்றும் பலவகை குழுக்கள் உள்ளன எல்லாருடைய அலைபேசியிலும்.
அனைவரது வாட்ஸ்அபிலும் தனி நபரின் எண்(எந்த குழுவிலும் இல்லாதவர்) கடைசியில் தான் வரும் அதுவும் ஏறிப்போனா ஒரு பத்து இருக்கும் அவ்வளவுதான் மிதமுள்ள அனைத்து எண்களும் பல தரப்பட்ட குடும்ப பெயர்கள் கொண்ட குழுக்களில் அல்லது நண்பர்களின் குழுக்களில் ஏதேனும் ஒன்றில் அடங்கும். சில சமயம் ஒரே நபர் பல குழுக்களிலும் இருப்பர். எல்லாருடைய விஷயங்களும் தெறிஞ்சுக்க வேண்டாமா அதுக்கு தான். அப்படிப்பட்ட ஆசாமிகள் ஒரு குழுவில் நடப்பதை அடுத்த குழுவினர்களுக்கு கொண்டு சேர்க்கும் இறக்கை இல்லா பறவை போல அங்கும் இங்குமாக மெஸேஜ்களை தட்டிவிடும் நவீன நாரதராவார்கள்.
இந்த குழுக்களில் பல சுவாரசியமான உரையாடல்கள் நடைப்பெறுவதும் உண்டு. வம்புகள் உருவாவதும் உண்டு.ஒரு குடும்ப வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறினால் ஏதோ குடும்பத்தை விட்டே வெளியேறியது போல ஒரு தாக்கத்தை கொடுத்து விடுவார் அந்த குழுவின் நிர்வாகி.
எவரேனும் ஒருவருக்கு மற்றொரு குழு உறுப்பினர் மீது மனஸ்தாபமோ, கோவமோ, வருத்தமோ, ஏன் வயித்தெரிச்சலாக கூட இருக்கலாம்..அப்படி இருக்கும் பட்சத்தில் பல தத்துவங்கள் ..யாரோ ஒரு புண்ணியவான் எழுதியதோ / படமாக்கப்பட்டதோ இணையதளத்தில் சுதந்திரமாக பறந்துக்கொண்டிருபதில் ஒன்றை அவர்கள் மனநிலைக்கேற்ப பகிர்ந்து எவருக்காக போடப்பட்டதோ அவரின் ரியாக்ஷனுக்காக… தூண்டில் போட்டு மீன் எப்போ வந்து மாட்டும் என்று மீன்பிடிப்பவர் தூண்டிலை அடிக்கடி தூக்கிப்பார்ப்பது போல் அலைபேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே காத்திருப்பதில் அவர்களுக்கு தனி சுகம் போலும். முன்பெல்லாம் ஏதாவது விஷேஷங்களில் ஒன்று கூடும்போது நடைபெறும் அரட்டை அதனால் விளையும் வம்புகள் இப்பொழுது அலைபேசியில் நடைபெற்றுவருகிறது.
எந்த நபருக்காக போடப்பட்டதோ அவர் அந்த தூண்டிலில் மாட்டினால் அன்று முழுவதும் குழுவில் தீபாவளி தான். அப்படியே அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் இருந்தாலும்….சில நமத்து போச்சுன்னு எண்ணிக்கொண்டிருக்கும் ஊசி பட்டாசுகள் கூட மெதுவா பட் பட் என்று வெடிக்க ஆரம்பிக்கும் அதனுடன் ஓல வெடி மெல்ல சேர பின் லக்ஷ்மி வெடிகள் சரங்களாக மெஸேஜுகளைக் கோர்க்க… கடைசியில் இந்த சப்தத்தை எல்லாம் அடங்க செய்ய …நம்ம மீன்… ஆட்டம் பாம் போல ஒரு பெரிய மெஸேஜை தட்டிவிட…அதில் ஊசி வெடிகளும், ஓல வெடிகளும் தெறித்து ஓட, சமந்தமே இல்லாத சங்கு சக்கரங்களும், புஸ்வானங்களும் சரசரக்க, சில ராக்கெட்டுகள் குழுவிலிருந்து வெளியேற. தொட்டால் சுட்டு பொசுக்கிவிடும் அளவிற்கு சுட சுட குழு இருக்கும் போது மெதுவாக ஒரு ரோல் கேப் உள்ளேன் ஐயா என்று ரோலாகி வந்து முதலாவது மெஸேஜிலிருந்து பதிலளிக்க.. மீண்டும் அடுத்த ரவுண்டு தொடங்கும். அதில் சம்மந்தமே இல்லாத சில வெளிநாட்டு வெடிகள் உள்நுழைய அனைத்து சூடான உள்நாட்டு வெடிகளும் அவைகள் பக்கம் திரும்ப திரியைக்காணோம் காகிதத்தைக்காணோமென்று வெளிநாட்டு வெடிகளும் குழுவை விட்டு வெளியேற, குழுவின் சமாதானப் புறாக்களான பென்ஸில், மத்தாப்பு தனி தனியாக மெஸேஜ் செய்து தூது போக வெளியேரியவர்கள் அத்துனைபேரும் மீண்டும் குழுவில் சேர்க்கப்படுவர். காரணங்கள் வேறுப்பட்டாலும் இது பெரும்பாலும் எல்லா குழுக்களிலும் நடக்கும் ஒரு அத்தியாயம் ஆகும்.
இதில் உன்னித்து பார்த்தோமேயானால் மீனவன் ஒரே ஒரு தத்துவத்தை கவிதையாகவோ/ மெஸேஜாகவோ/ வீடியோவாகவோ தட்டிவிட்டுட்டு கம்முன்னு தீபாவளி வாணவேடிக்கையை ரசித்துக்கொண்டு இருப்பார். மீனும் தவிர்க்க முயன்று பின் சலசலப்பை அடக்க ஒரே ஒரு மெஸேஜை தட்டிவிட்டுட்டு மீதி எல்லாருடை மெஸேஜையும் படித்தவண்ணமே இருக்கும். இதை குழு உறுப்பினர்களில் சிலர் உணர்ந்து எல்லா நேரங்களிலும் புஸ்ஸான புஸ்வானம் போல பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இன்னும் சிலர் சரவெடியில் முதலிலும் இறுதியிலும் மட்டும் வெடிக்ககூடிய ஊசிவெடிப்போல் காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் மட்டும் சொல்லிக் கொண்டே யார் யார் எப்படி வெடிப்பார்கள், ஏன் வெடிப்பார்கள், எதற்கு வெடிப்பார்கள் என்பதை எல்லாம் உலகநாயகனின் மகளிர்மட்டும் திரைப்படத்தில் வரும் தாத்தாப்போல அனைத்தையும் கிரகித்துக்கொண்டு ஊதுவத்தியாக சரியான நேரத்தில் சரியான பட்டாசை பத்தவைத்துவிடுவார்கள்.
ஆக இந்த தீபாவளி இவ்வளவு சிறப்பாக வாணவேடிக்கைகளுடன் நடந்து முடிந்ததற்கு காரணகர்த்தா யார்?
தூண்டிலிட்டுக்காத்திருந்த மீனவனா? தூண்டிலில் இருந்து நழுவப்பார்த்து பின் தானே போய் சிக்கிக்கொண்ட மீனா? இல்லை தேவையில்லாமல் வெடித்த இதர பட்டாசுகளா?
இதுபோன்ற மீனவர்கள் வாட்ஸ்அபிலும், வாழ்க்கையிலும், இணையதளத்திலும் அவரவர் மனநிலைக்கேற்ப பலவித மெஸேஜை தூண்டிலாக இட்டு மீன்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் மீனாக தூண்டிலில் மாட்டாமலும் அனாவசியமாக இதர பட்டாசுகளை போல தேவையில்லாத இடங்களிலும் நேரங்களிலும் வெடிக்காமலும் இருந்தால் பல பிரச்சனைகளை மிக சுலபமாக கடந்து மன அமைதியுடன் வாழலாம்.
