ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதங்களில் கொடுக்கும் சப்தம் அ என்றே இருக்கும். குழந்தையின் தாய் சாதம் ஊட்டும் போதும் அ…அ…..அம் என்று சொல்லி தான் ஊட்டுவாள். நாம் முதலில் குழந்தையை அ…அ…அ…ம்மா என்றும் அ…அ…அ…அப்பா என்றும் தான் சொல்ல கேட்டு மகிழ்கிறோம். சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளை முதல் மதலில் நெல்லை பரப்பி அதில் “அ” என்றே எழுதச்செய்வோம். நாமே எங்காவது இடித்துக்கொண்டாலோ அல்லது கீழே விழுந்தாலோ அம்மா என்று தான் முதலில் கூறுவோம். இப்படி நம் முதல் சப்த்தமும் சரி, எழுத்தும் சரி அகரத்திலேயே தொடங்குகின்றன.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டே தொடங்குகின்றன. சிறந்த இந்த தமிழ் மொழியானது எங்கெங்கெல்லாம் பயணித்துள்ளது எவ்வாறெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம் வாரீர்….
நமது தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் 20ஆது இடத்தையும், நம் மொழி பேசுபவர்கள் 1.06% விகிதம் உள்ளார்கள் என்று விக்கிப்பீடியாவில் பதிவாகியுள்ளது. ஆனால் நம்முன்னோர்கள் கூற்றுப்படி கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழியாகும்.
கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் வைத்து நம்மவர் எங்கெல்லாம் பயணித்து நம் மொழியையும் பயணிக்க செய்தனர் என்பதை நாம் தெறிந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழானது ஆசியா, ஆப்பிரிக்கா, சீனா, கம்போடியா, எகிப்து மற்றும் இந்தோனேசியா வரை எட்டியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர் நம் தமிழ் மக்களை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் நம் மொழி மற்றும் கலாச்சாரம் இன்றளவும் பல நாடுகளில் காணமுடிகிறது. உதாரணத்திற்கு மலேசியாவில் இருபது லட்சத்திற்கும் மேலானவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பதிவாகியுள்ளது என்றால் பாருங்களேன்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நமது தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகும். ஃப்ரெஞ்ச் காரர்களால் மொரீசியஸில் முதல் முதலில் குடியேறியவர்கள் நம் தமிழ் மக்களே. பின்பு ஆங்கிலேயர்கள் ஃப்ரெஞ்ச் காரர்களை வீழ்த்துவதற்கு மேலும் பல தமிழர்களை மொரீசியஸில் குடியேர செய்தனர். மொரீசியஸ் நாணயங்கள் தமிழ் மொழியில் இருக்கும்.
இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் வளர்ந்துள்ளது. நமது ஹரியானா மாநிலத்தில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ அங்கிகாரம் பெற்று திகழ்ந்தது 2010 ஆண்டு வரை. அதற்கு பின் பஞ்சாபியாக மாற்றப்பட்டது.
மேலும் தமிழ் மொழி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பதிவில் காண்போம்.
