வலைப்பதிவு வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம்பயணித்துள்ளனர்/பயணித்துள்ளது என்பதை பற்றி போனபதிவில் எனக்கு தெரிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு விருப்பம் மற்றும் பாராட்டு தெறிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் படித்து, கேட்டு, தெரிந்து கொண்ட நம் தமிழ் மொழியின் சுவாரசியமான விஷயங்களின் இரண்டாம் பகுதி இதோ உங்களுக்காக.
உலகில் மிக பழமையான மொழிகளில் ஒன்று நமது தமிழ். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடிச்சநல்லூர் தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் படி பார்த்தால் நம் மொழி சுமார் கி.மு 500 வருடங்களுக்கு முன் தோன்றியது என்றால் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளாதா என்ன!!!! கி.மு காலத்தில் வழக்கத்தில் இருந்திருந்தாலும் இன்றும் ஜீவித்திருக்கும் பழமையான மொழி நமது தமிழ் மொழியே. ஆதியில் தோன்றினாலும் மாய்ந்து போகாமல் இன்றும் உலகளவில் பேசப்படும் மொழியாக தமிழ் திகழ்வதில் ஒவ்வொரு தமிழரும் தோள் தட்டி கொள்வோம்.
அறிஞர்கள் தமிழ் மொழியை மூன்று காலக்கட்டங்களாக பிரித்துள்ளனர். பழைய தமிழ் (கிமு 300 – கிபி 700), இடைக்கால தமிழ் (700 – 1600) மற்றும் நவீன தமிழ் (1600 – இன்றுவரை)
ஒரு கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட ஒரே மொழி நமது தமிழ் மொழி. அக்கடவுளை தமிழ் தாய் என்று அழைப்பர். தமிழ் தாய் கோயில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ளது. தமிழ்த்தாய்க் கோயிலின் பரிவார தெய்வங்களாக, வள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய்க் கோயிலின் நுழைவாயிலின் முன் துவார பாலகிகளாக ஒலித்தாய், வரித்தாய் நிறுவப் பெற்றிருக்கின்றனர். ஒரு மொழிக்கு முக்கியமான ஒலி மற்றும் வரி துவார பாலகிகளாக …ஆகா விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் நின்றேன்….என்ன அருமையான அமைப்பு. கருவறையில் தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில் விளங்குகின்றனர். தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் தமிழ்ப்பற்றை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ் தாய் வாழ்த்து தமிழ் தாயான நமது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமைந்திருக்கும். இப்பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வேறு எந்த மொழிக்காவது இந்த சிறப்புகள் இருக்கிறதா?
நம் மொழியின் சிறப்புகள் என்னை முற்றுப்புள்ளி வைக்க தடை செய்வதனால் மீண்டும் அடுத்த பதிவில் நம் மொழியின் இன்னும் பல சுவாரசியமான தகவல்களுடன் சந்திப்போம். வாழ்க தமிழ்!!
